Tuesday, October 12, 2010

கேணி இசை சந்திப்பு - அனில் ஸ்ரீநிவாஸ்

இசையை ரசிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? குழந்தையின் அழுகையைக் கூட தாயின் இதமான பேச்சைக் காட்டிலும், தாலாட்டுதானே சமாதானம் செய்கிறது. நண்பர்களுக்கு ஒரு கேள்வி... "உங்களுக்கு எந்த மாதிரி இசை பிடிக்கும்?"

ரகுமானின் இசை, யுவனின் இசை, இளையராஜாவின் இசை, MSV-யின் இசை, வித்யாசாகர், GV பிரகாஷ், MSS அம்மா இசை, நித்யஸ்ரீ, சௌம்யா, SPB, ஜானகி, சுசீலா, TMS, ஜேசுதாஸ் என்று பட்டியல் நீண்டு யாராவது ஒருவரை உங்கள் மனம் இந்த நேரத்தில் தேர்வு செய்திருக்கும். அதற்கான காரணமும் இருக்கும்.அந்த நபரை மறந்துவிடாதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கேணி இசைச் சந்திப்பைப் பற்றி பேசிவிட்டு இவர்களிடம் வரலாம்.

அனில் ஸ்ரீநிவாசன் - அமெரிக்காவில் MBA [மேனஜ்மென்ட் & எகனாமிக்ஸ்] முடித்துவிட்டு, அங்கேயே இரண்டு வருடம் வேலையும் பார்த்துவிட்டு, இசைதான் இனி வாழ்க்கையென வேலையை உதறிவிட்டு முழுநேர இசைக்கலைஞராக தன்னை மாற்றிக் கொண்டவர். தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நாட்டிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவர். மேற்கத்திய இசையை முறைப்படி பயின்றவர். இளையராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிபவர். குருசரனுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ள பாரதியார் பாடல்கள் ஆல்பம் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. உன்னி கிருஷ்ணன் போன்றவர்களுடன் இணைந்து மேடை கச்சேரி செய்யக் கூடியவர். இவரைப் பற்றி பூரணமாகவும் இசை வாசிப்புகளைக் கேட்கவும் அவருடைய இணைய தளத்திற்குச் செல்லவும்: http://www.thisandtheother.com

அனில் பேச ஆரம்பிக்கும் பொழுது புழுக்கமாக இருந்தது. திருவாரூரிலுள்ள பள்ளியில் இசை விழிப்புணர்வு நேரத்தின் போது கிடைத்த அனுபவத்துடன் பேச ஆரம்பித்தார். இசை மும்மூர்த்திகளை மனதில் வைத்துக் கொண்டு 'ட்ரினிட்டி என்றால் என்ன?' - என்று மாணவர்களைப் பார்த்து கேட்டிருக்கிறார்.

யாருமே பதில் சொல்லவில்லையாம். ஒரே ஒரு மாணவர் மட்டும் எழுந்து மூன்று நடிகைகளின் பெயரைக் கூறினானாம் [திரிஷா, நயன்தாரா, ****]. விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று நினைத்து மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டாராம். மாணவன் அதே பதிலைத் திரும்பவும் கூறினானாம். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து சிரித்தார்களாம். சிறுவர்களுக்குத் தெரியவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. ஆசிரியர்களே இப்படி இருந்தால் எப்படி என்று அனிலுக்கு பயங்கரக் கோவம் வந்துவிட்டதாம். காரணம், அந்த பள்ளியின் இரண்டு தெருக்கள் தள்ளி இசை மும்மூர்த்திகள் [தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சதர்] பிறந்த தெரு இருக்கிறதாம்.

இன்றைய நிலையில் ஏதாவது ஒன்றை அடையும் வழியாகத் தான் இசையை பயன்படுத்துகிறார்கள். புகழ், பணம், சூப்பர் சிங்கர் ஷோ, 35 லட்ச ரூபாய் வீடு என்று இவற்றைக் கருத்தில் கொண்டுதான் இசையை பார்க்கிறார்கள். ஒரு நண்பர், ஒருநாள் காலையில் ஃபோன் செய்திருந்தார். அவருடைய மகன் எங்களுடைய இசைப்பள்ளியில் தான் படிக்கிறார். "என் மகன் டிவி போட்டியில கலந்துக்கப் போறான், அனுப்புறேன்... ஏதாவது டிப்ஸ் கொடுங்க" என்று சொன்னார்.

"சரிங்க இன்னைக்கு சாயந்திரம் அனுப்பி வைங்க" என்று சொன்னேன். "இல்லைங்க, அதுக்கெல்லாம் நேரம் இல்ல. இன்னைக்கு மதியம் அவன் போட்டியில கலந்துக்கனும்" என்று சொல்கிறார். பெற்றவர்கள் தான் நேரடியாக இம்சிக்கிறார்கள் என்றால் போட்டிக்கு வரும் நடுவர்கள் வேறு மாதிரி படுத்துகிறார்கள். பாடுபவர்கள் குழந்தைகள். பாடல்களோ Adult Expression Songs. அதில் இந்த உச்சரிப்பு சரியில்லை. பாவம் சரியில்லை என்று பார்க்கவே... கேட்கவே... சகிக்கவில்லை. போட்டி நடத்துவதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகளும், அதில் வெற்றி பெறுவதும் தான் மேலானவை என்ற மாயையை ஊடகங்கள் ஏற்படுத்துவது சரியில்லை என்று அழுத்தமாகக் கூறினார்.

Mozart -ன் 12-வது வயதில் குழந்தைகளுக்கான ஓர் இசைப் போட்டி நடத்தியிருக்கிறார்கள். ஏழ்மையான குடும்பம் என்பதால் பரிசுக்காக வேண்டி மொசார்ட் கலந்துகொண்டாராம். போட்டியில் கலந்து கொண்டவர்களை தனியறையில் ஒரு பென்சிலும் காகிதமும் கொடுத்து உட்காரவைத்துவிட்டு Tune அமைக்கச் சொன்னார்களாம். இசைக் கருவியைப் பயன்படுத்தாமல் இரண்டு மணி நேரத்தில் "Twinkle Twinkle Little Star" என்ற பாடலின் 32 வகையான (Variations) இசைக் கோர்ப்புகளை தயார் செய்து வைத்திருந்தாராம். அவருக்குதான் முதல் பரிசும் கிடைத்ததாம். இவர் 35 வயதுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். அதற்குள் 6000 இசைக் கோர்ப்புகளை நமக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். Mozart Effect என்ற தனி மியூசிக் தெரஃபியே இருக்கிறதாம்.

பியானோ, வயலின் எல்லாம் மேற்கத்திய இசைக்கருவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பியானோ இரண்டு இந்திய இசைக் கருவிகளின் சேர்மானம் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. காஷ்மீரின் சந்தூர் என்ற இசைக்கருவியும், பண்டைய இந்தியாவின் யாழ் என்ற இசைக்கருவியும் சேர்ந்தது தான் பியானோ. அடுத்த நாட்டினர் முழுமை பெறாமல் செய்ததை எடுத்துக் கொண்டுபோய், மெருகேற்றி அதை தங்களுடையது என்று காப்புரிமை வாங்கிக் கொண்டு வியாபாரப் படுத்துவதில் மேற்கத்தியர்களை மிஞ்ச முடியாது. பியானோவும் அப்படித்தான் மேற்கத்தியர்கள் இசைக்கருவியானது என்றபொழுது, அனில் சொல்லியதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

இடையில் காற்று குளிர்ச்சியைப் பரப்பியது. மழை வந்து பியானோ நனைந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே இருந்தார். மழையால் நனைத்துவிட முடியாத உறையைக் கொண்டு வந்ததும் தான் சமநிலைக்கு வந்தார். Music therophy மற்றும் மேல்நாட்டில் Btech architecture படிப்பில் இசையும் ஒரு பாடமாம். அதன் காரணங்களையும் சிறப்பையும் பற்றி விரிவாகப் பேசினார். இசை மற்றும் கலையைக் கற்பதால் aesthetic intelligence அதிகமாவதையும் சுவாரஸ்யமாக எடுத்துக் கூறினார்.

அதே மாதிரி தான் 'மேற்கத்திய இசை மேல்நாட்டு இசையாக மாறி, அதுவே மேலான இசையாகவும் மெல்லிசையாகவும் அர்த்தம் கொல்லப்பட்டுவிட்டது'. எல்லா இசையும் ஒன்றுதான். யார் இசையமைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அது கேட்பதற்கு இனிமையாக இருக்கவேண்டும். இசையை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இசை பொதுவானது. ஓர் இசைவடிவம், அடுத்த இசை வடிவத்தை ஏற்றுக்கொண்டு புதிதாகத் தோற்றமளிக்கும். அதனைக் குறை என்றும் சொல்ல முடியாது. கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசைகூட ஈரான், பெர்சியா போன்ற நாடுகளின் ராகங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இந்திய திரையிசையைச் சொல்லலாம். 1950-களிலேயே எல்லாவற்றையும் செய்துவிட்டார்கள் என்று MSV, மதன் மோகன் போன்றவர்களுடைய பாடல்களை வாசித்துக் காண்பித்தார். அதிலும் 198 0-களின் தொடக்கத்தில் இளையராஜா செய்த இசை உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

உதாரணமாக... (http://www.youtube.com/watch?v=A5-W9rYg0nw பாடல் ஆரம்பிக்கும் முன்பான காட்சிகளுடன் YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது. re-recording வுடன் சேர்த்து இந்தப் பாடலைக் கேளுங்கள்.)

பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம் (2)
இருமனம் சுகம்பெரும்
வாழ்நாளே...(2)

பாடலை Jazz-ல் ஆரம்பித்து வெஸ்டேர்ன் சென்று, ஹிந்துஸ்தானி ராகம் தொட்டு பிறகு கர்னாடக ராகம், மீண்டும் வெஸ்டேர்ன் என்று எல்லாவற்றையும் இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். இதனை நமக்கேற்ற வடிவத்தில் தந்திருப்பார். இந்த விளக்கம் முதல் நான்கு வரிகளுக்கு மட்டுமே என்றார்.... இதுபோல இளையராஜாவின் ஏராளமான பாடல்களைச் சொல்லலாம். எந்த தொழில் நிட்பமும் இல்லாமல் இவற்றையெல்லாம் இளையராஜா செய்திருக்கிறார். பழைய சவுண்ட் ரெக்கார்டிங் தியேட்டர்கள் எல்லாம் கால்பந்தாட்ட மைதானம் மாதிரி இருக்கும். ஒரு பாடல் பதிவாக்கப்பட்டால் எல்லா இசைக்கலைஞர்களும் அங்கு இருப்பார்கள். அவரிடம் சில முறை பணியாற்றியிருக்கிறேன். உன்னதமான இசையமைப்பாளர். வியாபர ரீதியாக தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளத் தெரியாதவர்.

ரகுமான் கூட தென்னாப்பரிக்க இசை, சூபி இசை, பாப், ஜாஸ் என்று ஏராளமான இசையைத் தனது படங்களில் பயன்படுத்துகிறார். அதனால்தான் நாடு கடந்தும் கூட அவருடைய இசை ரசிக்கப் படுகிறது என்றார். அதன் பிறகு பியானோ வாசித்துக் காண்பித்தார். அதைத் தொடர்ந்து வாசகர்கள் கேள்வி எழுப்பினார்கள். சந்திப்பின் முடிவாக ஹேராம் படத்தின் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...' பாடலை வாசித்து நிறைவு செய்தார்.

இனி ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுக்கு வருவோம். அதற்கு முன் என்னுடைய மருமகனுக்கு சொல்லிய சூஃபி கதையை உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன்...

RA புரம், பெலிசியா கட்டிடத்தின் எட்டாவது மாடியில் என்னுடைய மருமகனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். உடைந்த கையினை அசைத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இருப்பதை அவனுடைய நடையே உணர்த்தியது. அவனிடம் விபத்து நடந்ததைப் பற்றியும், அறுவை சிகிச்சை செய்ததது பற்றியும் கேள்விகள் கேட்டேன். ஒரு கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் அந்தக் கதையை சொல்லத் தொடங்கினேன். கதை என்றதும் மருமகன் சந்தோஷமானான்.

கதை கூட கேள்வியில் தான் ஆரம்பிக்கும். "மழை ஏன் பொழிகிறது?" என்பதுதான் அந்தக் கேள்வி.

முகம் சுளித்துக் கொண்டே "என்ன மாமா, சின்ன பசங்ககிட்ட கேக்குற மாதிரி கேக்குறீங்க? கதை தானே சொல்றேன்னு சொன்னீங்க?" என்றான்.

"பதில் சொன்னால் தான் கதையை ஆரம்பிக்க முடியும். சொல்லுடா" என்று அதட்டினேன்.

"மேகத்துல தண்ணி சேந்து கனமா ஆயிடும். மழையா வந்துடும். கடல் தண்ணியை காற்று உறிஞ்சி மேகத்துக்குக் கொடுக்கும். மேகம் கனமாக, கனமாக நெறைய மழையா வரும்" என்று ஆறாம் வகுப்பு மாணவன் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு பயந்துகொண்டே சொன்னான்.

எனக்கு என்னவோ அள்ளி எடுத்து அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. Corporate Office என்பதால் என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். நீ சொல்லியது சரியான பதிலாக இருக்கலாம் மருமகனே. என்றாலும் "எப்படி மழை பொழிகிறது? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வாய்" என்று தொடர்ச்சியாக இன்னொரு கேள்வியையும் கேட்டேன்.

"ஆமாம் இல்ல... மாமா..." என்று அசடு வழிந்தான். ஒரு கேள்வி கேட்கப்படும் பொழுது, அலசி ஆராயாமல் நமக்குத் தெரிந்த பதிலை பொருத்திவிடுகிறோம். அதுதான் பிரச்சனையே. "எந்த மாதிரி..? என்ற வினா எழும் பொழுது "கிராமிய இசை, தாலாட்டு இசை, கர்நாடிக் இசை, ஹிந்துஸ்தானி இசை, திரை இசை, கருவி இசை" என்ற பட்டியலாக இல்லாமல் "யாருடைய...?" என்ற கேள்விக்கான பதிலைத் தான் பெரும்பாலும் பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் யாரோ ஒருவருடன் நம்மை இழந்துவிடுகிறோம். "இசை யார் வழியாகவும் நமக்குக் கிடைப்பதில்லை. இசைதான் சிலரின் வழியாக நமக்குக் கிடைக்கிறது" என்று அனில் சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன்.



"உங்களுக்கு எந்த மாதிரி இசை பிடிக்கும்?" என்ற கேள்விக்கு இனி பதில் சொல்லும் பொழுது யோசித்துவிட்டுத் தான் சொல்ல வேண்டும் என்றிருக்கிறேன். உங்களிடம் கூட இந்தக் கேள்வியை ஆரம்பத்தில் கேட்டிருந்தேன் இல்லையா? நீங்கள் யோசித்த பதிலை பின்னூட்டத்தில் அளித்தால் நிச்சயம் மகிழ்வேன். ஆமாம், உங்களின் பதில் தான் என்ன?

1 comment:

  1. Enakku music pidikkum, avlothaan
    a love music, i just love music.....

    after reading this article i love you too....
    :-)

    sunday freeyaa krishnaa? i will be there on this sunday.

    ReplyDelete