Friday, October 30, 2009

விருது - அமித்துவின் அம்மாவிடமிருந்து...

கி.ரா பங்குபெற்ற கேணி நிகழ்ச்சியில் தான் அமித்துவின் அம்மா சாரதாவை நேரில் பார்க்க நேர்ந்தது. எங்களுக்கிடையிலான இடைவெளி அதிகமாக இருந்ததினால் ஒருவருடன் ஒருவர் பேச இயலவில்லை. துளசி டீச்சரையும் என்னையும் பார்த்தவுடன் முகமெல்லாம் சிரிப்பு. சக மனிதர்கள் என்ற முறையில் அந்த அன்பு கலந்த சிரிப்பைத் தவிர வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்.

அந்த அன்பின் முறையில் 'நான் வாசித்த தமிழ் புத்தகங்கள்' பதிவிற்கு Scrumptious blog award கொடுத்திருக்கிறார்கள். அதே அன்பை வேறுயாருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது கொஞ்சமும் யோசனையின்றி சில நண்பர்கள் ஞாபகம் வந்தார்கள். அவர்கள்...

புத்தகம்
சேரலாதன் - கருப்பு வெள்ளை
J ஞானசேகர் - நிர்வாணம்
பீ'மோர்கன் - வழிப்போக்கன்
ரெஜோவாசன் - பட்டாம்பூச்சி விற்பவன்

நான் தொடர்ந்து விருப்பமுடன் வாசிக்கும் பதிவு சேரலின் 'புத்தகம்'. இந்த வலைப்பூவில் கவிதை, சிறுகதை, நாவல் என்று அவன் தேடிப்படிக்கும் புத்தகங்கள் பற்றிய தேவையான குறிப்புகளை நிறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்ந்து J ஞானசேகர், பீ'மோர்கன் மற்றும் ரெஜோவாசன் ஆகியோரும் தாங்கள் வாசிக்கும் புத்தகங்களை அறிமுகப் படுத்துகிறார்கள்.

இவர்களில் பீ'மோர்கன் புத்தகங்களைப் பற்றி எழுதும் பதிவுகள் அலாதியாக இருக்கும். புத்தகங்கள் பற்றிய குறிப்பு எங்கிருந்தாலும் தேடிப்படிக்கும் பழக்கமுடையவன் என்பதால் சேரல் மற்றும் நண்பர்களின் பதிவுகள் வாசிக்கக் கிடைத்தது மகிழ்ச்சியே. புத்தகம் தவிர்த்து இவர்கள் எழுதும் தனிப் பதிவுகளையும் விருப்பி வாசிப்பதுண்டு. என்னுடைய நேசத்தை இந்த நால்வருடனுமே பகிர்கிறேன்.

அன்பே சிவம் (முரளி பத்மநாபன்)

இவருடைய நட்பு புத்தகங்களின் மூலம் கிடைத்தது. சிறுகதைப் பட்டறையில் தான் முதன் முதலில் நேரில் சந்திக்க நேர்ந்தது. பயணம், சினிமா, புத்தகம் என தான் ரசித்த விஷயங்களைப் பதிவிடுகிறான். சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன். இனிய நண்பன்.

முதல் சுவடு (விஷ்ணு குமார்)

சுந்தர ராமசாமி பற்றிய 'நீ யார்' ஆவணப்படம் பார்க்கச் சென்றிருந்த இடத்தில் தான் முதன் முறையாக விஷ்ணு எனக்கு அறிமுகமானான். பாரதியின் மீது தீராத காதல் கொண்டவன். 'தமிழ் கவிதை' புனைவதில் மிக்க ஆர்வம் உடையவன். இவனுடைய தாய் மொழி சவுராஷ்டா என்பது அவனாக சொன்னாலன்றி அடுத்தவருக்குத் தெரியவராது. ஜப்பான் மொழியை வேறு பயின்று கொண்டிருக்கிறான். பழகுவதற்கு இனிமையானவன். எதிர்காலத்தில் நல்ல படைப்பாளியாக, மொழிபெயர்ப்பாளனாக வருவான் என்று எதிர்பார்க்கிறேன். அவனுடைய சில வரிகள்...

நான்

என் தகப்பன்
அளித்திட்ட
பல துளிகளில்
என் தாய்
தேர்ந்தெடுத்த
ஒற்றைத் துளி
'நான்'.

பப்பு - (பிரபு)

தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை எளிய தமிழில் அழகாக பகிர்ந்து கொள்கிறார். இவருடைய ஒவ்வொரு பதிவிலும் ஹாஷ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

உணர்தலும் உணர்தல் நிமித்தமும் (முத்துசாமி பழனியப்பன்)

விஷ்ணுவுடன் கன்னிமரா நூலகத்தில் புத்தகம் வாங்கச் செல்லும் போது இவருடன் பழக்கம் ஆரம்பித்தது. கவிதை எழுதுவதில் தீவிர ஆர்வம் உடையவர். வார்ப்பு, உயிரோசை, தடாகம், கீற்று, அகநாழிகை, திண்ணை, தமிழ் ஆதர்ஸ் என பல இணைய இதழ்களில் இவருடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முடிவாக சுந்தர ராமசாமியின் கிருஷ்ணன் நம்பி பற்றிய நினைவோடை தான் இங்கு ஞாபகம் வருகிறது. "நான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன். அப்போது எனக்கு ஒரு ஆள்கூடத் தேவையில்லை. ஒரு முகம் அது மட்டும்தான் தேவையாயிருந்தது. அவன் என்ன கேட்கிறான், என்ன புரிந்துகொள்கிறான், என்ன எதிர்க்கேள்வி கேட்கிறான் என்பது போன்ற விஷயங்களைப் பொருட்படுத்திப் பேசும் நிதானமோ, பக்குவமோ எனக்கு அப்போது இருந்திருக்கவில்லை. நான்தான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன்." (நினைவோடை -கிருஷ்ணன் நம்பி)

எனக்கு முகம் கூட தேவையில்லை அவர்களின் கண்கள் மட்டும் இருந்தால் போதும் என்று எழுதித் தள்ளுகிறேன். நண்பர்களும் சிரமம் பார்க்காமல் தொடர்ந்து வாசிக்கிறார்கள். என்ன எழுதுகிறேன்?, எப்படி எழுதுகிறேன்?, எதற்காக எழுதுகிறேன்? என்ற முன்யோசனை எதுவும் இல்லாமல், அந்த நேரத்தில் எண்ணங்களில் தோன்றுவதை எழுதி வலைப்பூவில் சேர்ப்பிக்கிறேன். அதை நண்பர்கள் படித்துப் பாராட்டும் போதுதான் எங்கோ உறுத்துவது போல் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் அனைவருமே பதிவுலகில் நான் சேர்ந்த முக்கியமான உறவுகள். இதனை விருதுக்கான பரிந்துரை என்பதைவிட அன்பைப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்றே நினைக்கிறேன்.

சாரதா சொல்வதுபோல் "மேற்கூறியவர்கள் மூலம் இந்த அன்பு நிறைய பேருக்கு விருதின் வாயிலாக பல்கிப் பெருகும் என்று" நம்புகிறேன்

இந்த விருதினை எனக்கு அளித்த சாரதாவிற்கு மிக்க நன்றி.

:)

அன்புடன்,
கிருஷ்ண பிரபு.

3 comments:

  1. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. :)

    வாழ்த்துக்கள் உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும்.

    பப்பு மட்டும் தெரியும். அனேகமாக ட்ரீட் கொடுக்கிறேன் என்று என்னை மதுரைக்கு அழைக்கலாம். :))

    ReplyDelete
  2. தேங்க்ஸ் கிருஷ்ணா, சேரலை படிக்கனும்

    ReplyDelete
  3. இலக்கியம்/கவிதை என்னும் சமுத்திரத்தில் கலந்திட எத்தனிக்கும் சிறு நீர்த்துளி மட்டுமே நான். என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete