Monday, August 10, 2009

இலக்கியமும் சினிமாவும் - கேணி இலக்கிய சந்திப்பு

இயக்குநர் பாலு மகேந்திரா - கேணி இலக்கிய சந்திப்பு

அழகிரிசாமி சாலையில் அரைமணி நேரம் அலைந்து திரு:ஞானியின் வீட்டைக் கண்டுபிடித்தேன். 4.10 மணிக்கு சந்திப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றேன். சரியாக மாலை 4.30 மணிக்கு திரு: பாலு மகேந்திரா ஞானியின் வீட்டிற்கு வந்தார். 10 நிமிட உரையாடலுக்குப் பிறகு 4.40- ற்கு கூட்டம் நடக்க இருக்கும் இடத்திற்கு ஞானி அவர்கள் திரு:பாலுமகேந்திராவை அழைத்துக் கொண்டு வந்து வாழ்த்துரையோடு 'இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு' என்ற தலைப்பில் உரையாட இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தினார். மேலும் கேள்வி நேரத்தின் போது தேவையில்லாத கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

திரு: பாலுமகேந்திரா வந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதைச் செலுத்தினோம். Please sit, Please sit என்று அனைவரையும் பார்த்து புன்னகையுடன் "இந்த சந்திப்பு கிணற்றடியில் நடப்பதால் மகிழ்ச்சியுடன் வருவதற்குச் சம்மதித்தேன்" என்று கூறினார்.

மேலும் இந்த கம்பீரமான சூழலில் கலந்துரையாட வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடிப்படையில் நான் இலக்கிய உபாசகன். கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் நாவல்கள் ஆகிய இலக்கியம் சார்ந்த படைப்புகள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே என்னை ஆக்ரமித்த விஷயங்கள். அந்த வகையில் சினிமா என்னுடைய இரண்டாவது காதலி. தீவிர வாசகனாக இருந்ததால், இருப்பதால் 'இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு' எனற கலந்துரையாடல் எனக்கு உடன்பாடான தலைப்பே. மேலும் நான் அதிகம் பேச விரும்புவதும் கூட.

என்னிடம் உதவியாளராக சேர ஒரு சிலர் விரும்புகிறார்கள். அப்படி வருபவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி "நீங்கள் கடைசியாக வாசித்த புத்தகம் என்ன?" என்பதுதான். அது சிறுகதையோ! நாவலோ! எதுவாக இருப்பினும் அதில் "உங்களை பாதித்த விஷயம் என்ன?" என்று கேட்பேன்.வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் அவர்களை உடனே அனுப்பி விடுவேன்.

ஆனால், சிலரிடம் ஒரு பொறி இருக்கும் அவர்களிடம் சில புத்தகங்களைக் கொடுத்து படித்துவிட்டு வருமாறு கூறுவேன். அதன் பின் அவரைப் பற்றி முடிவு செய்வேன்.அப்படிப்பட்ட சிலர், நான் வாசிக்கப் பழக்கப் படுத்திய நபர்கள் என்னையே மிஞ்சும் அளவிற்குப் படித்துவிட்டு, "இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துவிட்டீர்களா?" என்று எனக்குப் பரிந்துரை செய்வார்கள். அந்தத் தருணங்களில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

நான்கு வருடங்களுக்கு முன்பு இருதய வலியால் நான் சாக வேண்டியது. உறவுகளால் பிழைத்தேன். பிழைத்ததால் இங்கு இருக்கிறேன். இல்லையேல் பாலு மகேந்திராவுடனான இந்தச் சந்திப்பு சாத்யமில்லை. ஆகவே இருக்கும் காலத்தில் நான் கற்றுக் கொண்டதை என்னுடைய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு வழங்கிவிட்டுப் போக ஆசைப்படுகிறேன்.

1999 -ல் (Nearly 10 years back), சன் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து 52 வாரங்களுக்கான நெடுந்தொடர் (TV Episode) எடுக்க வேண்டி அழைப்பு வந்திருந்தது. "என்ன செய்யலாம்?" என்று யோசிக்கும் போது, மூத்த படைப்பாளிகளின் சிறந்த சிறுகதைகளை Short Pictures மாதிரி தரலாம் என்று முடிவு செய்தேன். அதற்காக பதின் பருவத்திலிருந்து நான் வாசித்த சிறந்த கதைகளை மீள் வாசிப்பு செய்தேன்.

மீள் வாசிப்பு ஒரு அலாதியான அனுபவம். ஆரம்ப காலங்களில் நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய படைப்புகள்... மீள் வாசிப்பில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. சுமார்ரகம் என்று நான் நினைத்தப் பல படைப்புகள் சிறந்த படைப்புகளாகத் தெரிந்தன.

பொதுவாக ஒரு தப்பான அபிப்ராயம் இருக்கிறது, எழுத்தாளர்களுக்குக் கூட அது இருக்கிறது. அது என்னவெனில் எழுதும் அனைத்தையுமே சினிமாவாக எடுத்துவிடலாம் என்பது. இது மிகவும் தப்பான ஒரு அபிப்ராயம்.

"நீங்கள் சுமாரான கதையை எடுத்துக் கொண்டு அதை நன்றாக எடுத்துவிடுகிறீர்கள். ஆனால் சிறந்த கதைகளை நீங்கள் ஏன் படமாக்குவதில்லை" என்று என்னிடம் சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள் அல்லது நட்புடன் கேட்கிறார்கள். அதற்கு நான் பல இடங்களில் பதில் சொல்லி இருக்கிறேன்.

உதாரணமாக, சுஜாதா ஒரு கதை இப்படி ஆரம்பிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்,

"ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி இருந்தாள். ஊரில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து அவளுடைய வீடு ஊரைவிட்டு சற்றுத் தள்ளி இருந்தது. அவள் அம்மா அவளைத் திட்டியதால் வீட்டிற்குப் பின்னால் சென்று தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள்..." - இதில் எதை நான் படமாக்குவது...

சுஜாதா மட்டுமல்ல லா. சா. ரா, சு. ரா, கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன்... இன்னும்... இன்னும் நிறைய எழுத்தாளர்களுடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன், பெரிய வணக்கத்துடன் கூடிய மரியாதை செய்து அந்த சிறந்த கதைகளை ஒதுக்கி வைத்திருக்கிறேன். அவற்றை சினிமா எடுக்க இயலாது.

இங்கு எழுத்து என்பது ஒரு ஊடகம்(Media), சினிமா என்பது ஒரு ஊடகம்(Media), இரண்டுமே தொடர்பு சாதனங்கள். ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குப் போகும்போது சில விஷங்களை கவனிக்க வேண்டும். அவற்றில் சாதகமான விஷயங்கள், சாதகமில்லாத விஷயங்கள் இரண்டையும் அலச வேண்டும். அப்படி சாத்திய அசாத்தியங்களைப் புரிந்து கொண்டாள் தான் நல்ல படைப்பு கிடைக்கும்.

இந்த இடத்தில், "படைப்பிற்கு முக்கியமான இரண்டு விஷயங்கள் என்ன?" என்று அனைவரையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

Culture, Feeling, Subject, Concept - என்று பலவாறு பதில் சொன்னோம். சரியான பதில் வரும் வரை எங்களை விடவில்லை. வந்திருந்த ஒருவர் Form & Content(Subject) என்ற சரியான பதிலைச் சொன்னார்.

Exactly...அந்த இரண்டும் தான் முக்கியம் என்று அவரைப் பாராட்டினார். உருவம் (Form) மற்றும் உள்ளீடு (Content) இந்த இரண்டும் தான் படைப்பிற்கு முக்கியம்.

ஏசுநாதரின் ஓவியத்தை எடுத்துக் கொள்வோம். இதற்கு முன் எத்தனையோ ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். மறுபடியும் வரைய என்ன இருக்கிறது என்று ஒரு படைப்பாளி நினைக்க முடியுமா?. இந்த இடத்தில் உள்ளீடு என்பது ஏசுநாதர். ஆனால் இங்கு ஓவியரின் திறமை அவர் உபயோகிக்கும் வண்ணத்தில் மற்ற படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும். Brush Strokes வித்யாசமாக இருக்க வேண்டும். இங்கு Subject-ஐ விட Form தான் படைப்பினை முன்னிறுத்துகிறது.உன்னதமாக்குகிறது.

இந்த Subject & Form இரண்டும் பின்னிப்பிணைந்து அட்டகாசமான ஒரு வெளிப்பாடு இருக்கும் போது உன்னதமான படைப்பாக வெளிப்படுகிறது.

உதாரணமாக, பாட்டி கக்கா கதையை எடுத்துக் கொள்வோம்.

எத்தனை ஆயிரம் முறை கேட்டக் கதை. எத்தனை பாட்டிகள் எத்தனை குழந்தைகளுக்கு சொன்னது. இன்னும் எத்தனைக் கோடி பாட்டிகள், எத்தனைக் கோடி குழந்தைகளுக்கு சொல்லப் போவது... What a marvelous and beautiful story. இந்தக் கதையை சினிமாவாக எடுத்தால், முக்கியப் பாத்திரம் என்ன? (பாட்டி)... எங்கு நடக்கிறது? (கிராமத்திலா வேறு எங்காவதா?)... இதனுடைய உள்ளர்த்தம் என்ன? இப்படி அலச வேண்டி இருக்கிறது. அதற்கான Sequence தேர்ந்தெடுக்க வேண்டும்.

இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு படைப்பாளியை மதிப்பிட அவனுடைய மிகச்சிறந்த படைப்பை எடுத்துக் கொண்டு மதிப்பிட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு படைப்பும் உன்னதமான படைப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் நிறைய இருக்கிறது. அவற்றிக்கு சில நேரங்களில் படைப்பாளி பலியாக நேரிடும். அந்தக் காரணிகளைப் பேச நான் விரும்பவில்லை.

ஆனால் சிறுகதையை படமாக்கும் போது... இங்குதான் ஒரு சிக்கல் வருகிறது.

ஒரு பெண் அவரைப் Photo எடுக்கும் போது Flash அவரை நனைத்தது. உடனே, தயவு செய்து Photo எடுக்காதீங்க. As a Camera Man... It will disturb me... எங்க விட்டேன்...சில நேரங்களில் நூலறுந்த பட்டம் போல எங்கோ சென்று விடுவேன்...என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது திரு: ஞானி அவர்கள் எடுத்துக் கொடுக்க மீண்டும் தொடர்ந்தார்.(சிறுகதையைப் படமாக்கும் போது ஏற்படும் சிக்கல்...)

பாருங்க, ஒரு சிறுபெண் வெட்கம் வரும் போது பாவாடையை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்கிறாள். அவளுக்கு தெரிந்து முகத்தில் தான் உள்ளது வெட்கம். இப்பொழுது அவளே பெரியவள் ஆகிறாள்...இப்பொழுது அவளுக்கு வெட்கம் வருகிறது, முகத்தை அதேபோல் மறைக்க முடியுமா? இப்பொழுது அவளுக்கு வெட்கம் வேறு இடத்தில் இருக்கிறது. (எல்லோரும் சிரிக்கிறார்கள்). இதுதான் ஊடக மாற்றத்தில் உள்ள சிரமம்.

நீங்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள். நான் என்னுடைய மொழியில் பேசுகிறேன். என்னுடைய மொழி சினிமா.ஒரு மொழியிலுள்ள கதையை என்னுடைய மொழிக்கு கொண்டுவரும் போது சிரமங்கள் தவிர்க்க முடியாதது.அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒரு பெண் ஒரு ஆணிடம் காதலைதத் தெரியப்படுத்துகிறாள். அவனுக்கும் விருப்பம். ஆனால் அந்தப் பெண் ஒரு முறையிடுகிறாள். உன்னை மணந்து கொள்ள வேண்டுமெனில் "உன்னுடைய குஞ்சை அறுத்துப் போடு" என்கிறாள் (எல்லோரும் சிரிக்கிறார்கள்). எது ஆண்மையின் அடையாளமோ அதையே அறுத்துவிட்டு பெண்ணிடம் என்ன செய்ய... இந்தச் சிரமம் தான் சிறுகதையை சினிமாவாக எடுக்கும் போது ஏற்படுகிறது..

Here language is extremely limited.Some times we are searching for a right words. But we can't. For Ex:

நண்பருடைய தாயார் இறந்து விடுகிறார்கள். உங்களுக்கு நிறைய முறை உணவைப் பரிமாறியவர். பெற்ற பிள்ளைக்கு சமமாக உங்களையும் நடத்தியவர். இழவு வீட்டிற்குச் செல்கிறீர்கள். அந்த சோகத்தில் இருக்கும் நண்பரிடம் நீங்கள் என்ன மொழியை பேசுவீர்கள். அவரை ஆற்றுதல் படுத்த உங்களிடம் மொழியோ அல்லது வார்த்தையோ இருக்கிறதா? ஒரு தழுவலைத் தவிர.அந்தத் தழுவல் ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்குச் சமம் மொழி உதிரும் இடம் இங்கு தான்.

இது போல் பல விஷயங்களைச் சொல்லலாம். நான் சின்னத் திரைக்காக எடுத்த கதைகளில் மாலனின் கதையும் ஒன்று. 'தப்புக் கணக்கு' என்ற சிறுகதை. மாலனின் மிகப் பெரிய விசிறி என்று சொல்லி அவருடைய எளிமை, நேர்மை, அறிவு என பல விஷயங்களைப் புகழ்ந்தார்.

மாலனின் சிறுகதை புத்தகத்தைக் கையேடு கொண்டுவந்திருந்தார். திரு ஞானி அவர்களை அந்தக் கதையைப் படிக்கச் சொன்னார். அவர் படிக்கும் போது அனைவரையும் கண்களை மூடிக் கொண்டு கதையை கேட்கச் சொன்னார். அந்த 7 பக்க கதையை படித்து முடித்ததும் அதை Script-டாக மாற்றுவதில் உள்ள சிரமத்தையும் சிரத்தையையும் எடுத்துச் சொன்னார். 7 பக்கக் கதையை 1 பக்க Script-டாக மாற்றி இருந்தார்.இங்கு திரைத் துறையில் இருந்து வந்திருந்தவர்களுக்கு முக்கியமான பல ஆலோசனைகள் வழங்கினார். அவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.

சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே போகிறார். நேரம் 7 மணியைத் தாண்டிச்செல்கிறது. அதை ஞாபகப் படுத்தவும். மாலனுடைய சிறுகதையை டிவி- ல் ஒளிபரப்பினார்கள்.T.V Color & Contrast setting -ல் பிடிவாதமாக இருந்தார். Settings சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டப் பின்னர் தான் படத்தை திரையிட அனுமதித்தார்.நீங்கள் கடையில் வாங்கும் போது இருக்கும் அதே Setting-ஐ Use பண்றீங்க. அது தப்பு. Setting சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு டிவி பாருங்கள் என்று பரிந்துரை செய்தார்.

படம் ஓடி முடிந்தது அனைவரும் கைதட்டினார்கள். இறுதியாக ஒன்று சொல்கிறேன். தமிழ் சினிமாவில் இறந்துகொண்டு வரும் ஒரு துறை Script Writing. எனவே நான் பேசிய இவ்வளவு மணி நேரத்தில் என்னுடைய உரையைக் கேட்டு யாரேனும் ஒரு நல்ல Script Writer பின்னாளில் வந்தால் மிகவும் மகிழ்வேன். சென்னையில் சினிமாவைப் பற்றி திறந்த மனதுடன் பேச முடியவில்லை. கேணி சந்திப்பு அந்தக் குறையை போக்கியது. நன்றி...என்று கூறி உரையை முடித்தார்.

இறுதியாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி நன்றியுரை கூறி கேணி சந்திப்பை நிறைவு செய்தார்.

இதே சந்திப்பைப் பற்றிய இதர பதிவுகள்:

மூன்றாவது கிணறு! - ரவிபிரகாஷ்
கேணி - இலக்கியமும் சினிமாவும்...
இலக்கியமும் சினிமாவும் - பாலு மகேந்திரா உரை

குறிப்பு: அங்கு நடந்த 3 மணிநேர உரையாடலின் சிறு குறிப்பு தான் இது. என்னோட மருமகங்களுக்கு சினிமா Interest அதிகம். அவங்க சிதம்பரம் சென்றுள்ளதால் அவர்களுக்காக நான் சென்றேன். நான் அதிர்ஷ்டசாலி ஏனெனில் பாலு மகேந்திராவின் நீண்ட உரையைக் கேட்க முடிந்தது.

7 comments:

  1. கிருஷ்ணபிரபு,

    //அழகிரிசாமி சாலையில் அரைமணி நேரம் அலைந்து//

    எனக்கும் இதே நிலைதான். ஆட்டோவில் வந்தும் இறங்கி அரை மணி நேரம் தேட வேண்டியிருந்தது. நல்லி-திசைஎட்டும் விருதுகள் விழாவிற்கு சென்று, ஞாநி வீட்டை அடையும்போது பாலுமகேந்திராவின் பேச்சை கேட்க முடியாமல் போய்விட்டது. உங்கள் பதிவின் வழியே அந்தக்குறையும் தீர்ந்தது.

    உங்களை சந்திக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  2. @ அகநாழிகை

    நன்றி அகநாழிகை அடுத்த முறை நிச்சயம் சந்திக்கலாம்.

    ***************

    அமித்துவின் அம்மா said

    கோர்வையா எல்லாத்தையும் கவனிச்சு எழுதியிருக்கீங்க க்ருஷ்ணா,

    வரமுடியலையே அப்படிங்கற ஆதங்கத்தை இந்தப் பதிவை ரெண்டு முறை படிச்சு தீர்த்துக்கிட்டேன்.
    நன்றி.
    ***********
    @ சாரதா
    நன்றி... யாரும் இதை விரிவாக எழுதுவதில்லை. பல நண்பர்களுக்கும் சென்று சேர வேண்டுமென்றே எழுதினேன்.

    ReplyDelete
  3. கிருஷ்ணா! கிருஷ்ணா!

    ReplyDelete
  4. கிருஷ்ணபிரபு,

    நானும் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தேன். சில தவிர்க்க முடியாத என்று பொய் சொல்ல முடியாத சில காரணங்களால் வர இயலாமல் போனது. பாலு மகேந்திராவின் பேச்சின் சாரத்தை வழங்கி என் மனத்துக்குக் கொஞ்சம் சாந்தி கொடுத்தீர்கள். நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. சேரல் அடுத்த மாதம் 'அசோகமித்திரன்' கேணிக்கு வருகிறார் என்று நினைக்கிறேன். அவசியம் வாருங்கள். உங்களுக்கு பல விதத்திலும் உபயோகமாக இருக்கும். நான் கூட வரலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி நண்பரே. படித்தேன் மகிழ்ச்சி.தொடர்பில் இருங்கள் மேலும் பகிர்வுகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இந்தச் சந்திப்பைப் பற்றி எழுதும்படி நிறைய நண்பர்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நீங்கள் தெளிவாகவும், விரிவாகவும் எழுதிவிட்டீர்கள்.
    நல்ல பதிவு. நன்றி நண்பரே !

    ReplyDelete