Monday, April 21, 2014

மூன்று பேர் மூன்று காதல்

ராயப்பேட்டை YMCA புத்தகக் கண்காட்சிக்குச் செல்லப் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். “அண்ணா... உங்கள பார்க்கணுமே...” என்ற குரலில் கொஞ்சம் தடுமாற்றம் புலப்பட்டது.

“சரி... இங்க வந்துடு...” என்று சொல்லி இருந்தேன்.

கண்கள் அழுது வீங்கியிருந்தது. “எவ்வளோ சின்சியரா லவ் பண்ணேன். எங்கெல்லாம் சுத்தி இருக்கேன்... நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றது பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும்... இப்போ வேணாம்னு சொல்றா... எவ்வளோ அசிங்கமா இருக்குது...” என்றான்.

“நீ என்ன பண்ண...? எதாச்சும் மிஸ் பிஹேவ் பண்ணியா?” என்றேன்.

“இல்லிங்க அண்ணா... எனக்குத் தெரியாம இன்னொருத்தன் கூடவும் சுத்திட்டு இருக்கா... நான் கண்டு புடிச்சிட்டேன்...” என்றான்.

“நீ சந்தேகப் பட்றதா நெனைக்கிறாலோ?” என்றேன்.

“இல்லைங்க அண்ணா... அவ கேரக்டர் சரியில்லைங்க அண்ணா... இப்போ தான் ரியலைஸ் பண்றேன். அவ வேனாண்டாம் மச்சின்னு ஃப்ரென்ண்ட்ஸ் எல்லாரும் முன்னாடியே சொன்னாங்க... பொறாமையில சொல்றாங்கன்னு நெனச்சிக்கிட்டேன். இப்போ ஏமாந்துட்டேன்...” என்றேன்.

“அய்யய்யய்ய... அதான் உனக்கு சரி வரலன்னு ரியலைஸ் பண்ணிட்ட இல்ல... விட்டுத் தொலையேன்டா” என்றேன்.

“முடியலையே...” என்றான்.

“இதெல்லாம் சும்மா கத... ஆக்டிங் குடுக்காத...” என்றேன்.

“என்னால தாங்க முடியல...” என்றான்.

“இந்த டூமாகோலியை சமாதானம் செய்ய இயலாது” என என்னை நானே தேற்றிக்கொண்டு கிளம்பினேன். கிளம்பும்போது “Book Fair-க்கு வரியா?” என்றேன்.

“I am sorry. I am not” என்று வார்த்தைகளை முழுங்கினான்.

புறப்படும்போது மட்டும் ஒருவார்த்தை கேட்டேன்: “டேய் பையா... லவ்வு புட்டுக்கிச்சின்னு சூசைட் பண்ணிக்க மாட்டியே...?”

“ச்சே... ச்சே...” என்று தலையை ஆட்டினான்.

“அதானே பார்த்தேன். இவன் சாவறதா இருந்தா...! என்பாட்டுக்குப் போற என்ன கூப்பிட்டு வச்சி ஏன் கழுத்தறுக்கப் போறான்?” என்று நினைத்துக்கொண்டு மந்தவெளி பேருந்தில் ஏறினேன்.

ஒட்டுனருக்குப் பீச்சாங்கை பக்கத்துக்கு இருக்கை காலியாக இருந்தது. ஓடிச்சென்று அமர்ந்து கொண்டேன். பின் இருக்கையில் ஒரு காதல் ஜோடி குசுகுசு என பேசிக்கொண்டு வந்தனர். அரசல் புரசலாக காதில் விழுந்தது. அண்ணா சாலையின் ஒரு பழரசக் கடையைப் பார்த்திருப்பாள் போல, கொஞ்சம் பெரிய குரலில் “நீயும் இந்த ஜூஸ் கடைக்கு என்ன கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிச் சொல்லியே ரெண்டு வருஷம் ஓடிப் போயிடுச்சி...” என்று ஆதங்கப்பட்டாள்.

“இந்த வருஷம் தான் டிகிரி முடியுதுல்ல... வேலைக்குப் போயிடறேன். ஜூஸ் கடைக்குப் போகலாம். சினிமா போகலாம். கல்யாணமும் பண்ணிக்கலாம். அது வரைக்கும் காலேஜ், கம்ப்யூட்டர் கிளாஸ் மட்டும் தான்.” என்றான்.

“ஹே... வேணாம் வேணாம்... நான் வெயிட் பண்றேன்டா... நீ மேல படி...” என்றாள். எனக்கு ராயப்பேட்டை வந்துவிட்டது. இறங்குவதற்கு எழுந்துகொண்டேன்.

“வேணான்டி... அதெல்லாம் சரி வராது...” என்று சொல்லியது காதில் விழுந்தது. காதலனின் கையினை அந்தக் காதலி உள்ளங்கையில் ஏந்திக்கொண்டிருந்தாள். “கடவுளே...! இந்தக் காதல் கைகூட வேண்டும்” என்று நினைத்துக் கொண்டேன்.

புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில் இருந்துவிட்டு சென்ட்ரலுக்குக் கிளம்பினேன். ரயில் புறப்பட ஒரு நிமிடம் மட்டுமே இருந்தது. வேகமாக ஓடி ரயிலில் ஏறினேன். மூச்சு வாங்கியவாறு ஜன்னல் ஓர இருக்கை ஏதேனும் இருக்கிறதா? என்று பார்வையைத் திருப்பினேன்.

ஒரு ஜன்னலோர இருக்கையில் – ஜரிகை வேட்டியில் மாப்பிள்ளை வேட்டியில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மாநிறம் தான் எனினும் கொஞ்சம் போல குண்டாக இருந்தார். ஜன்னலுக்கு வெளியில் அவரது பார்வை இருந்தது. எதையோ சாதித்த சந்தோசம். பக்கத்தில் கூரைப் புடவையில் மணப்பெண். அவளது பார்வை ரயில் பெட்டியின் மேற்கூரையில் நிலைகுத்தி இருந்தது. கொஞ்சம் போல சோர்வும், கணிக்கமுடியாத குழப்பமும் முகத்தில் தென்பட்டது. சுற்றியிருந்தவர்கள் அவளிடம் சிரித்துப் பேச முயன்று கொண்டிருந்தனர். புதுமணத் தம்பதிகளை நோட்டம்விட்டதில் என் பக்கத்தில் நின்றிருந்தவர்களை கவனிக்கவில்லை. ஒரு கல்லூரி காதல் ஜோடி.

ரயில் பெட்டியின் நுழைவாயில் வழியே காற்று வீச காதலியின் கூந்தல் காற்றிலாடுகிறது. இருவரும் புதுமணத் தம்பதிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பார்த்தும் பார்க்காதது போல கொஞ்சம் விலகி நின்றுகொண்டேன். சற்று நேரத்தில் ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டனர். நாகரீகமாக அந்தக் காதலி, காதலனின் பக்கவாட்டுத் தோள்களில் சாய்ந்துகொண்டாள். அவனும் நாகரீகமாக அவளைத் தழுவிக்கொண்டான். இருவரும் அநேகமாக கல்யாண கோலத்தில் கற்பனை உலகில் பறந்துகொண்டிருக்க வேண்டும்.

தெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது
காதல் உறவே...
என்ன தான் சுகமோ நெஞ்சிலே...!

நான் வேண்டிக்கொண்டேன்: “கடவுளே...! இந்தக் காதல் கைகூட வேண்டும்.”

திஸ் சாங் இஸ் டெடிகேஷன் டூ ஆல் லவ்வர்ஸ் இன்குலூடிங் லவ் புட்டுக்குன பசங்க: என்ன தான் சுகமோ நெஞ்சிலே...

தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாறு நீ வந்து சீராட்டத்தான்
காணாத வாழ்வு நான் கண்ட நேரம்
பூமாலை நீ சூடிப் பாராட்டத்தான்
நீயென் ராணி நாந்தான் தேனி
நீயென் ராஜா நானுன் ரோஜா
தெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது
காதல் உறவே

1 comment:

  1. //அதானே பார்த்தேன். இவன் சாவறதா இருந்தா...! என்பாட்டுக்குப் போற என்ன கூப்பிட்டு வச்சி ஏன் கழுத்தறுக்கப் போறான்?” என்று நினைத்துக்கொண்டு மந்தவெளி பேருந்தில் ஏறினேன்.//

    ReplyDelete