Thursday, June 7, 2012

லஞ்ச காக்கிகள் – நக்கீரன்

நடவடிக்கை எடுக்காத உள்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி ரெய்டுகளில் கையும் களவுமாக சிக்கிய... காவல்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையும்... உள்துறை அமைச்சகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது. எந்தெந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும்போது எந்தெந்த போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டிருக்கிறார்கள்? எவ்வளவு தொகை லஞ்சம் வாங்கும்போது கைப்பற்றப்பட்டது? என்று ஆராய்ந்தபோது.

அந்த லிஸ்டில் உள்ள பலரும் தற்போது உயர் போலீஸ் அதிகாரிகளாக வலம் வருகிறார்கள் என்ற ஷாக்கை உண்டாக்கியது. இப்படி லஞ்சப் பேய்களாக உலா வந்த காக்கிகளின் விபரங்களை தகவல் பெரும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) மூலம் பெறுவதற்குள் பட்ட பாடுகளை வேதனையுடன் விவரிக்கிறார் சமூக ஆர்வலரும் பொதுநல வழக்குகளை தொடுப்பவருமான பிரபல வழக்கறிஞர் கார்த்திகேயன்.

எந்தப் பிரச்சனையானாலும் ஏழை எளிய மக்கள் புகார் கொடுக்கப் போவது போலீஸ் ஸ்டேஷன்தான். ஆனா, குற்றம் செஞ்சவனை தண்டிக்காமல் காப்பாற்றுவது... அப்பாவிகள் மேலே பொய்க்கேஸ் போட்டு தண்டிக்கிறது இதுக்கெல்லாம் மிக முக்கிய காரணமா இருக்கிறது லஞ்சம்தான். இப்படி அப்பாவிகளுக்கு துரோகம் செய்யும் காக்கிகள்... லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் கையும் களவுமாக பிடிபட்டு என்ன தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை தெரிஞ்சிக்கிறதுக்காக மூன்று வருஷத்துக்கு முன்னால 2008 டிசம்பர் 30-ந்தேதி தமிழக உள்துறைக்கு ஆர் டி ஐ மூலம் தகவல் கேட்டு அனுப்பியிருந்தேன்.

அதாவது... தமிழக காவல்துறைக்குட் பட்ட சென்னை மாநகரத்தில் 2003-ல் இருந்து எத்தனை காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது? எத்தனை காவல்துறை அதிகாரிகள் ரெய்டில் பிடிபட்டார்கள்? அவர்களின் பெயர், பதவி மற்றும் முகவரி என்ன? எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது? அவர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? அதன் விசாரணை அறிக்கை நகல்? எத்தனை போலீஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளைத்தான் அனுப்பியிருந்தேன். ரெண்டு மாசத்துக்கப்புறம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர்கிட்டயிருந்து 2009 பிப்ரவரி 3-ந் தேதி எனக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில், தகவல் பெரும் உரிமை சட்டத்தை அமல்படுத்தும் துறையான தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறையின் 2008 ஆகஸ்டு 26-ந் தேதி வெளியிடப்பட்ட (G.O-158) அரசாணைப்படி... லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெரும் உரிமை சட்டத்திலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதால்... நீங்கள் கேட்டனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது என்றிருந்தது.

தகவல் பெரும் உரிமை சட்டப்படி... மனித உரிமை மீறல்கள் அல்லது ஊழல் சம்பந்தமாக எந்தத் துறையில் தகவல் கேட்டாலும் தகவல் அளிக்க வேண்டும்னு இருக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெரும் உரிமைச் சட்டம் பொருந்தாதுன்னு அரசாணை வெளியிட்டது தவறாச்சேன்னு மறுநாளே... திரும்பவும் அதே கேள்விகளை முன்வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை தலைவருக்கு ஆர.டி.ஐ மூலம் முதல் மேல்முறையீடு செய்தேன்.

ஒரு மாசத்துக்கப்புறம் அதாவது 2009 மார்ச் 3-ந் தேதி ஏற்கனவே அனுப்பின பதிலையே திருப்பி அனுப்பியிருந்தாங்க. நானும் விடாம... 2009 ஜூன் 4-ந் தேதி மாநில தகவல் ஆணையத்துக்கு இரண்டாவது மேல்முறையீடு செய்தேன். லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது மாநில தகவல் ஆணையம். 2009 அக்டோபர் 14-ந் தேதி தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத் துரையின் அரசாணை தகவல்பெரும் உரிமை சட்டத்திற்கு முரணானது. அதனால், இந்த உத்தரவு கொடுக்கப்பட்ட இரண்டு வாரத்துக்குள் மனுதாரர் கார்த்திகேயன் கேட்ட கேள்விகளுக்கு முழுமையான தகவல்களை இலவசமாக தரவேண்டும்னு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அப்படியும் அந்தத் தகவல்களை தராமல், என்மீதும் தகவல் ஆணையம் மீதும் வழக்கு தொடுத்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

ஆனால் 12-01-2010 அன்று நீதியரசர் சந்துரு அவர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்துட்டாரு. இந்த உத்தரவுக்கு எதிராக மறுபடியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்ய... அந்த மனுவையும் நீதியரசர் முருகேசன் மற்றும் சசீதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனா, அதுக்கப்புறமும் கூட தகவல்களை தராம சைலண்டாக இருக்குதே லஞ்ச ஒழிப்புத்துறை... அப்படியென்ன ரகசியம் இருக்கிறது என்று யோசித்துவிட்டு ‘நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் தகவல் தராமல் காலதாமதம் செய்வதால் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்’னு நோட்டீஸ் அனுப்பினேன். பிறகு உச்சநீதிமன்றமும் போன லஞ்ச ஒழிப்புத்துறையின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால் 2012 மே 25-ந் தேதிதான் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் வந்துதுங்க” என்று பெருமூச்சுவிடும் வழக்கறிஞர் கார்த்திகேயன், “இப்போதான் தெரியுது... ஏன் நான் கேட்ட கேள்விகளுக்கு மூணு வருஷம் கழிச்சு பதில் அனுப்பியிருக்கு லஞ்ச ஒழிப்புத்துறைன்னு. சென்னையில் லஞ்சம வாங்கும்போது பிடிபட்ட காவல்துறை அதிகாரிகள் யார் மேலையுமே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழோ, துறை ரீதியான நடவடிக்கையோ எடுக்கப்படவே இல்லைன்னு. மேலும், குறைந்த பட்சம் தற்காலிக பணியிடை நீக்கம் கூட செய்யப்படவில்லை என்பதுதான் வேதனை. மேலும், சட்டம் ஒழுங்கு, க்ரைம் போலீஸ் அதிகாரிகள் யார், யார் லஞ்சம வாங்கிச் சிக்கினார்கள், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல் தராமல் ரகசியமாகவே வைத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

இப்படி இருந்தா... லஞ்சம வாங்குற அதிகாரிகளுக்கு எப்படி பயம் வரும்? லஞ்ச ஊழல் எப்படி ஒழியும்? லஞ்சம வாங்குற அதிகாரிகளை ஒரு அரசாங்கமே காப்பாற்றுவதற்கு என்ன காரணம்? சென்னையில் மட்டுமே இப்படின்னா தமிழ்நாடு முழுக்க பிடிபட்ட காவல்துறை அதிகாரிகள் யார் யார்? அவங்க மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு? என்பது பெரிய கேள்விக்குறியை உருவாக்குது? என்கிறார் வேதனையுடன்.

நிருபர்: ம. மனோ-
நன்றி: நக்கீரன் இதழ் (2012 ஜுன் 06-08)

No comments:

Post a Comment