Monday, May 21, 2012

கவனிக்கிறோம் - Media Watch


ஜனநாயகத்தின் தூண்களென “நாடாளுமன்றம், நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிக்கை” ஆகிய நான்கும் வர்ணிக்கப்படுகின்றன. இதில் முதல் மூன்று தூண்களும் தனது மாண்பில் இருந்து வழுவும் போது, நான்காவது தூணாகிய பத்திரிகை மிகமிக முக்கியமாக நேர்மையுடன் செயலாற்ற வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் பத்திரிகை தர்மம் காப்பாற்றப்படுகிறதா? என்ற அச்சம் நிலவுகிறது. “காட்சி ஊடகமோ! அல்லது அச்சு ஊடகமோ! அல்லது இணைய ஊடகமோ!” - எதுவாக இருப்பினும் செய்தியானது நடுநிலை அம்சத்தை இழந்துதான் பெரும்பாலும் மக்களைச் சென்று சேர்க்கிறது.

ஆகவே ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை அலசி ஆராய்ந்து, நடுநிலையைக் காக்கவும நம்பகத் தன்மையைக் கூட்டவும் ஒரு குழு அமைத்தல் தற்போதைய சூழலில் அவசியமாகிறது. எனவே அதிகமாக புழக்கத்தில் இருக்கும் தமிழக ஊடகங்களை தன்னார்வக் குழுவின் மூலம் ஆய்விற்கு உட்படுத்தி அதில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்வதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கம். அதற்கான கலந்துரையாடல் 20.5.2012 அன்று காலை 10 மணி அளவில் எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஞாநி வசிக்கும் கேணி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஞாநி மற்றும் அ. மார்க்ஸ் உட்பட பத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டோம். MediaWatch என்ற ஊடக ஒருங்கிணைப்புக் குழுவிற்கு பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் அனைவரின் சம்மதத்துடன் “கவனிக்கிறோம்” என்ற பெயர் சூட்டப்பத்தது.

“இதனை எங்கிருந்து தொடங்கலாம்? எப்படித் தொடங்கலாம்? என்னென்ன வகையில் செயலாற்றலாம்?” போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்கள் கலந்துரையாடலில் அலசப்பட்டு பின்வரும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவைகளாவன:

1.தமிழ்நாட்டில் அதிக புழக்கத்தில் இருக்கும், மக்களை வெகுவாகச் சென்றடையும் தமிழ் மற்றும் ஆங்கில - தின இதழ்கள், வார இதழ்கள், முக்கிய தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் ஆகியவற்றைக் கவனித்து விமர்சிக்க வேண்டிய அம்சங்களை முன்னெடுத்தல்.

2. முதலில் "கவனிக்கிறோம்" என்ற வலைப்பக்கமாக மாதம் இருமுறை வலையேற்றத் துவங்கி, பின்னர் கால இடைவெளியில் அதன் வளர்ச்சியை அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டு செல்லுதல். (ஒவ்வொரு மாதமும் 1,16 ஆம் தேதிகளில் பதிவுகளைப் புதுப்பித்தல்).

3.ஊடகங்கள் தொடர்பான முக்கிய விவாதங்கள் நடைபெறும் பிற தளங்கள் [other blogs/website/articles] மீதும் கவனம் ஈர்த்தல்.

4.ஊடக மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் கட்டுரைகளை அளித்தல்.

5 .இத்துறையில் ஆர்வம் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்கள் இதுதொடர்பாக அளிக்கும் பதிவுகளை பரிசீலித்து வெளியிடுதல்.

6.ஊடக ஆய்வு செயல்பாடுகள் எந்தவகையிலும் ஊடகங்களின் கருத்து சுதந்திரங்களை பறிப்பதாக/ தாக்குவதாக அமைந்துவிடாமல் ஆக்கப்பூர்வமான விமர்சன அணுகல்முறையின் அடிப்படையில் இவற்றை செயல்படுத்துதல்.

7.உள்நோக்கத்துடன் தனிநபர்களையும் இயக்கங்களையும் மக்கள் போராளிகளையும் அவதூறு செய்து வன்முறையைத் தூண்டும் ஊடக செயல்பாடுகளைக் கண்டித்துக குரலுயர்த்துதல்.

8.தலித்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோர் குறித்த ஊடகப் பார்வைகளைக் கவனித்தல். அவர்களைப் பாதிக்கும் செயல்பாடுகளுக்கு எதிராக குரலுயர்த்துதல்.

9. "கவனிக்கிறோம்" ஊடக ஆய்வு வலைப்பக்கத்தை 1.6.2012 முதல் செயல்படுத்துதல்.

"கவனிக்கிறோம்" முதற்கட்ட கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள்:

1.ஞாநி
2.அ.மார்க்ஸ்
3.கி.நடராஜன்
4.கே.ஆர். அதியமான்
5.மோகன்
6.பாஸ்கர்
7.தினேஷ் குமார்
8.கிருஷ்ண பிரபு
9.சா.ரூ.மணிவில்லன்
10.சே.அன்பரசன்
11.ரமேஷ் வைத்யா
12.மீனா

கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத "கவனிக்கிறோம்" குழுவினர் :

1.கோ.சுகுமாறன்
2.ராஜன் குறை
3.மேகவண்ணன்
4.யாழன் ஆதி
5.பரமேஸ்வரி

பிரபஞ்சன், கவிஞர் சுகுமாரன், பாலபாரதி போன்றோரும் வருவதாக இருந்தது. சில காரணங்களால் அவர்களாலும் வர இயலவில்லை.

வலைப்பக்கம்: http://gavanikkirom.blogspot.in
ஞாநியின் பரிந்துரை: www.youtube.com/watch?v=YICegCjVF4w

இச்செயல்பாடுகளில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பல்துறையைச் சார்ந்த நண்பர்கள் தத்தமது துறைகளைப் பற்றி ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்க வரவேண்டும். இந்தக் குழு சார்ந்த விவரங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புகளுக்கு : 9841598733, 9884800976, 9500259824.

1 comment:

  1. இன்றய காலகட்டத்தில் இதுபோன்ற அமைப்பு மிகவும் அத்தியாவசித் தேவை என்பதுதான் எனது கருத்து. கவனிக்கிறோம் - சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.

    ReplyDelete