Monday, May 2, 2011

கோடை திரைப்பட விழா - சென்னை

மேற்கத்திய மோகமும், இயந்திரத்தனமான நவீன வாழ்க்கையும் நிகழ்த்துக் கலைகளை நம்மிடமிருந்து விளிம்பின் நுனிக்கு நகர்த்திவிட்டன. அரிதாரம் பூசிய செயற்கை முகங்களின் வரவால், இரத்தமும் சதையுமான வட்டாரக் கலைஞர்களின் இருப்பும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அழிந்து வரும் பழங்காலக் கலைகளை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்யவும், அதைச் சார்ந்த கலைஞர்களின் சமூகச் சிக்கலை ஆவணப்படுத்தவும் காப்பகம் ஒன்றை உருவாக்கி ஒளிப்படங்கள் மற்றும் நூலகம் அமைத்து 1997 முதல் தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையம் (NFSC) செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற இடங்களிலும், கேரளா, மத்தியபிரதேசம், ஓடிஸா, கர்நாடகா, ஜார்கண்ட் போன்ற இந்திய மாநிலங்களிலும் இவர்கள் கிளைகள் அமைத்துச் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகம் மட்டுமன்றி அயல்நாட்டினர் பலரும் தமிழகத்தில் நாட்டுப்புற ஆய்வுகளை மேற்கொள்ள இவர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கத்திலுள்ள NFSC அலுவலகத்தில் திரையிடலுடன் கலந்துரையாடலும் நடைபெறுகிறது. ஆர்வமுள்ள எல்லோருக்கும் அனுமதி இலவசம்.

தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையமும் (NFSC), இயக்குனர் அமுதனின் தலைமையில் மதுரையை களமாகக் கொண்டு செயல்படும் 'மறுபக்கம்' அமைப்பும் சேர்ந்து ஏப்ரல் 4 முதல் 8 வரை கோடை திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்காக National Institute Of Design (அகமதாபாத்), மறுபக்கம் (மதுரை), Burundi Film Centre (கனடா), Magic Lantern Foundation (புது தில்லி) ஆகிய நான்கு குழுக்கள் தயாரித்து இயக்கிய 25 குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களை திரையிடலுக்காக தேர்வு செய்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை திரையிடலுடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது.


1. தட்டும் பொறத்தப்பன் (மலையாளம் - P. சுதேவன்)

சுதேவன் வளர்ந்து வரும் மலையாளக் குறும்பட இயக்குனர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இந்தப் படைப்பில் கேரள அரசியலின் போக்கையும், அரசியல் பிரஞையின்றி வாழும் மக்களின் போக்கையும் தொடர்புபடுத்தி குறும்படமாக எடுத்துள்ளார். மன வளர்ச்சி குன்றிய பிரம்மச்சாரி ஒருவன் உடல்நலம் குன்றி படுக்கையை விட்டு நகர முடியாத தாயுடன் ஒரு பழைய வீட்டில் வசிக்கிறான். அண்டை வீட்டாரின் சிறுசிறு உதவியின் மூலம் இருவரும் நாட்களைக் கடத்துகிறார்கள். அரசியல் காரணங்களால் போலீசாரால் துரத்தப்படும் குற்றவாளி அந்த வீட்டின் பாழடைந்த பரணில் ஒளிந்து கொள்கிறான். தொடர்ந்த மூன்று நாட்களுக்கு அங்கேயே இருக்க வேண்டிய சூழல் குற்றவாளிக்கு ஏற்படுகிறது. பசியையும், தாகத்தையும் போக்கிக்கொள்ள 'தட்டும்பொறத்தப்பன்' என்ற குறுஞ்சாமியாக பிரமச்சாரியுடன் பேசுகிறான். குறுஞ்சாமியின் குரலாக ஒலிக்கும் குற்றவாளியை பிரமச்சாரி முழுமையாக நம்புகிறான். தனது தாயின் உடல்நிலை சரியாகவேண்டி, குற்றவாளி கேட்கும் எல்லா வசதிகளையும் செய்து தருகிறான். பரணில் மலஜலம் கழிக்கும் சப்தத்தை படுத்த படுக்கையிலிருக்கும் தாய் லேசாக உணர்கிறாள். அதைப் பற்றிய சந்தேகத்தை அவள் எழுப்புகிறாள். குலதெய்வத்தை சந்தேக்கிக்கக் கூடாது என்று சீறுகிறான் பிரமச்சாரி. யாரும் பரணுக்கு செல்லக் கூடாது என்று கட்டளைப் பிறப்பித்து காவலுக்கு இருக்கிறான்.

விஷயம் போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வருகிறார்கள். வீட்டைச் சோதனை செய்யும் போது யாரும் அங்கு இல்லை என்பதால் போலீஸ் திரும்பிச் செல்கிறார்கள். பிரமச்சாரியுடன் சேர்ந்து ஊர் மக்களும் தட்டும்பொறத்தப்பனை நம்புவது போல படம் முடிகிறது.

Links:

Promo: http://www.youtube.com/watch?v=JeTm9I9wzWw

2. மை வில்லேஜ் இஸ் பம்பாய் (ஹிந்தி & தமிழ் - RV ரமணி)

வித்யாசமான முயற்சிகளின் மூலம் தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டவர் RV ரமணி. இந்த ஆவணப்படம் பல்வேறு காரணங்களால் அரசு நடத்தும் "சிறுவர் பாதுகாப்பு இல்லத்திற்கு" கொண்டுசெல்லப்படும் குழந்தைகள் பற்றியது. பயணச் சீட்டில்லாமல் வெளியூர் ரயில்களின் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிடிபடும் சிறுவர்கள், பேருந்து நிறுத்தங்களில் அலையும் சிறுவர்கள், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரியும் குழந்தைகள் அனைவரையும் இந்தக் காப்பகத்தில் (Juvenile Homes) தங்க வைத்துப் பராமரிக்கிறார்கள். ராஜஸ்தான், அசாம், ஓடிஸா, கல்கத்தா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல இடங்களிலிருந்து வரும் சிறுவர்களும் இங்கு வைத்து கண்காணிக்கப் படுகிறார்கள். சில குழந்தைகளின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து அழைத்துச் செல்கிறார்கள். குழந்தைகள் விரும்பினால் அங்கேயே தங்கியும் படிக்கலாம்.

பிடிபட்ட சிறுவர்கள், அவர்களை பராமரிக்கும் ஊழியர்கள், மீட்கவரும் உறவினர்கள் என்று நேர்முகத்திலேயே முழு ஆவணப்படமும் செல்கிறது. ஆங்காங்கு நகைச் சுவையுடன் எடுக்கப் பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் வீட்டைவிட்டு வெளியேறி திக்குத் தெரியாமல் அலையும் குழந்தைகளைப் பற்றிய புரிதலை இந்த ஆவணப்படம் ஏற்படுத்துகிறது. கூடவே இனம்புரியாத மன அழுத்தத்தையும் இந்த ஆவணப்படம் படிமமாக விட்டுச் செல்கிறது.

Links:

Website: http://www.ramanifilms.com

3. அதா அஸ்மான் (ஹிந்தி & ஆங்கிலம் -சமினா மிஸ்ரா)

சமினா மிஸ்ரா புதுதில்லியை வாழ்விடமாகக் கொண்ட எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர். இந்திய முஸ்லிம்களின் நிலை, பெண்குழந்தைகள் மற்றும் பெண்களின் நலவாழ்வு குறித்த படைப்புகளில் விருப்பத்துடன் செயல்படுபவர்.

'அதா அஸ்மான்' - உத்திரப் பிரதேசத்திலுள்ள அல்மோரா மற்றும் சீத்தாப்பூர் மாவட்டத்தின் பின்தங்கிய மலை கிராமத்தில் வாழும் பெண்களின் நலவாழ்வை மையமாகக் கொண்ட ஆவணப்படம்.

பெண்கள் எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகரான உழவு, கால்நடை பராமரிப்பு போன்ற கடுமையான வேலைகளைச் செய்கிறார்கள். அது முடிந்ததும் வீட்டு வேலைகளையும் அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் அதற்குத் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வதில்லை. உடல் சுகவீனம் ஏற்பட்டாலும் வேலை செய்வதிலிருந்து அவர்கள் பின்வாங்குவதில்லை. நிலைமை மோசமானால் ஒழிய மருத்துவமனையை நாடுவதில்லை. ஆரம்ப சுகாதார மையம் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதால், உள்ளூரில் இருக்கும் ஒருவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அனுபவத்தின் அடிப்படையில் அவரும் ஊசி போட்டு, ஆங்கில மருந்துகளை பரிந்துரைக்கிறார். முறையாக மருத்துவம் பயின்றவர் இல்லையென்றாலும் நோயாளிகள் அவரை வீட்டிற்கே அழைத்து உதவி செய்யுமாறு கேட்கிறார்கள்.

பலவீனமாக உள்ளவர்கள் கருத்தரிக்கும் காலங்களின் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய முறையையும், கருத்தரிக்காமல் இருக்க காப்பர்டீ, ஆணுறை போன்றவற்றை பயன்படுத்துமாறு ஊரக மருத்துவ அலுவலர்கள் வீடுகளுக்கே சென்று ஆலோசனை கூறினாலும் வெட்கப்பட்டு மறுத்துவிடுகிறார்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்காக அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டுவந்தாலும், அவையனைத்தும் அவர்களுக்குச் சென்று சேர்கிறதா? கிராம மக்களும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? என்பதும் ஆராயப்படவேண்டியது. ஒரு நாட்டின் வளர்ச்சியே மக்களின் கல்வி அறிவு மற்றும் அடிப்படை மருத்துவ வசதி பெறுவதிலும் தான் இருக்கிறது. நகரம் சார்ந்த வாழ்க்கை பெண்களுக்கான எவ்வளவோ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், கிராமப்புறப் பெண்களின் நிலைமை மோசமான ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை ஆவணப்படுத்திய முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று.

Links:
http://www.youtube.com/watch?v=JNiigBYLtvc

4. ரேடியேஷன் ஸ்டோரிஸ் (தமிழ் - RP அமுதன்)

'பீ', 'செருப்பு' போன்ற குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் இயக்குனர் அமுதன். 2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் 'பீ' படத்திற்கு தேசிய ஜூரி விருது பெற்றிருக்கிறார். "இத்தாலி, சீனா, ஜெர்மனி" போன்ற நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் திரையிடப்பட்டு இருக்கின்றன. மதுரை குறும்பட மற்றும் ஆவணப்பட விழாவை 1998 முதல் நடத்திக் கொண்டு வருகிறார். சென்னை கோடைகால திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டவர்.

கதிரியக்கத் தனிமங்களின் இயல்புத் தன்மை பாதிக்கப்படாத வரையில், அபாயகரமான கதிரியக்கத்தை அவை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது வீரியம் மிக்க கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. சரியான முறையில் கழிவு நீக்கம் செய்யாமல் விடுவதன் காரணமாகத் தொழிலாளர்களும் சுற்றியுள்ள மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு உள்ளாகித் தவிக்கிறார்கள்.

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் டைட்டானியம் ஆக்சைடு - இரும்பு, யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக் குறிச்சி என்ற இடத்தில் மிடாலம், பெரியவில்லை, சின்னவேலி ஆகிய கடற்கரை கிராமங்கள் இருக்கின்றன. மீன்பிடித் தொழில்தான் இங்கு பிரதானம். மோனோசைட், தோரியம் போன்ற கதிரியக்கத் தாதுக்கள் கடற்கரை மணலில் கணிசமாகக் கிடைப்பதால், அரசின் அனுமதி பெற்று IREL என்ற தனியார் நிறுவனத்தை அங்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். பாதுகாப்பற்ற முறையிலான மணல் சேகரிக்கும் பணியில் கிராம மக்கள் கூலித் தொழிலாளியாக ஈடுபடுத்தப்பட்டதால் கதிரியக்கத்தின் வீரியம் அவர்களை பாதித்திருக்கிறது. இதனால் புற்றுநூய், உடல் ஊனம், குறையுள்ள குழந்தைகள் என கிராம மக்களே அவதிப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் ஆவணப்படத்தில் எச்சரிக்கை மணி அடிப்பதுபோல இருக்கிறது.

டாக்டர் லால்மோகன் இதைப்பற்றிய ஆழமான, வலிமைமிக்க ஆதாரங்களை தனது ஆய்வறிக்கையில் முன்வைத்தும் அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. போராடிப்பார்த்து பொருமையிழந்தவர், ஒருநிலைக்கு மேல் இங்கிருக்கப் பிடிக்காமல் அமெரிக்க சென்றுவிட்டதாக அமுதன் தனது கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் சுனாமி போல எழுந்தாலும், அவற்றையும் மீறி பல வேதனைச் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றிக்கு கடிவாளம் போட அரசு முன்வர வேண்டும் என்பதை இதுபோன்ற ஆவணப்படங்கள் தான் உணர்த்துகின்றன.

Links:

http://magiclanternfoundation.org/blog/2010/08/radiation-stories-at-bangalore
http://www.thehindu.com/arts/cinema/article19223.ece

தொடர்புக்கு:

http://www.indianfolklore.org - 044 2822 9192, 044 4213 8410
மறுபக்கம் - 93444 79353

1 comment:

  1. NFSC CHENNAI
    Shop no 29, Basement, Nungambakkam High Rd, Nungambakkam
    Famco Enterprises, Chennai, Tamil Nadu 600034, India

    ReplyDelete