Monday, December 20, 2010

மர்மஸ்தான கீறல் - ஆஸ்மேன் செம்பேன்

மூலாடே(genital mutilation) என்பது பெண்களின் பிறப்புறுப்பை கூர்மையான ஆயுதத்தால் சேதப்படுத்தும் ஆப்ரிக்க பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கவழக்கம். பெண்களை பரிசுத்தப்படுத்தும் கொடூரமான சடங்கு முறை. ஆண்களுக்கு செய்யப்படும் சுன்னத்(circumcise) போல ஒரு சடங்கு.திருமணத்திற்கு முன் பெண்குழந்தை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்யும் சடங்காகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்த சடங்கிற்கு உட்படுத்தப்படும் குழந்தைகளின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டதுதான் இந்தத் திரைப்படம்.

மேலும் திரைப்படத்தைப் பற்றி படிப்பதற்கு முன் உயிர்மையில் வெளியான இந்தக் கட்டுரையை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படித்துவிடுங்கள்: மறுக்கப்பட்ட பெண்மை>>

ஆப்ரிக்க தேசத்தின் எங்கோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தின் காலைப் பொழுது ரம்யமாகத் துவங்குகிறது. காலை சூரியன் கிராமத்தில் நுழையும் பொழுது வியாபாரப் பொருட்களை வண்டியில் சுமந்தவாறு ஒருவன் கிராமத்திற்கு வருகிறான். சிறுவர்கள் அவனுடைய ஒட்டைவண்டியை தள்ளி முன்னேற்றுகிறார்கள். மரநிழலில் அவன் வண்டியை நிறுத்துகிறான். அதற்கு எதிரே கிராமத்தின் மசூதி இருக்கிறது. கிராமவாசிகள் அங்குமிங்கும் ஓடி ஏதாவதொரு வேலை செய்தபடி இருக்கின்றனர். கோலே அவளுடைய வீட்டை பெருக்கிக் கொண்டிருக்கிறாள். மூலாடே சடங்கிலிருந்து தப்பித்த நான்கு சிறுமிகள் ஓடி வந்து அவளுடைய காலில் விழுகின்றனர். தன்னுடைய கணவனின் மூத்த மனைவியை கேட்டுக்கொண்டு சிறுமிகளுக்கு கோலே அடைக்கலம் கொடுக்கிறாள். சிறுமிகள் சடங்கிலிருந்து தப்பியதற்கு அடையாளமாக கொட்டுசத்தம் பின்னணியில் கேட்கிறது.

கோலேயின் கணவன் கஸீத்திற்கு மூன்று மனைவிகள். கோலே இரண்டாவது மனைவி. அன்று கஸீத் வியாபாரத்திற்காக வெளியூர் செல்கிறான். வீட்டின் வாசலில் காப்புக் கயிறு கட்டி சிறுமிகளைத் தன்னுடனே தங்கச் செய்கிறாள். தன்னைக் கேட்காமல் யாரும் சடங்கு முடியும் நாள் வரை வெளியில் செல்லக்கூடாது என்று ஆணையிடுகிறாள். இது தெரிந்து சடங்கை நிறைவேற்றும் பெண்கள் சிலர் கோலேவின் வீட்டின் முன்பு கூடி விவாதம் செய்கின்றனர். கோலே குழந்தைகளை அனுப்ப பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள்.

மதத்தின் நம்பிக்கைகளை அழிக்க சதி செய்வதாகக் கூறி கோலேவினை பஞ்சாயத்திற்கு அழைக்கிறார்கள். ஊர்த்தலைவரின் மகன் இப்ராஹிமுக்கு கோலேவின் மகள் அம்சாத்தொவை நிச்சயத்திருப்பதால் அவர் அதிர்ச்சியடைகிறார். மேலும் மூலாடே செய்துகொள்ளாத அம்சாத்தொவிற்கு தனது மகனை கல்யாணம் செய்து கொடுக்கமாட்டேன் என்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இப்ராஹீம் பாரிசிலிருந்து ஊருக்குத் திரும்புகிறான். அவனுக்கு சிறப்பான முறையில் வரவேற்ப்பு அளிக்கிறார்கள். சுத்தப்படுத்தும் சடங்கை முடிக்காததால் அவனை வரவேற்க அம்சாதோ செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாள்.

சில நாட்களில் கஸீத் ஊருக்குத் திரும்புகிறார். வரும் வழியிலேயே அவனிடம் கோலேவின் செயல்களை ஊரார் சொல்கிறார்கள். கோவமுடன் வீட்டிற்கு வந்து மனைவிகளிடம் அவன் வாக்குவாதம் செய்கிறான். சிறுமிகளுடன் அம்சதொவிற்கும் மூலடே செய்யவேண்டும் என்று கோலேவினை வற்புறுத்துகிறான். அதற்கு அவள் மறுத்துவிடுகிறாள். இப்ராஹிமுக்கு 11 வயதான வேறொரு பெண்ணை கல்யாணம் முடிக்கப் பார்த்துவிடுகிறார்கள்.

ரேடியோ கேட்பதால் தான் பெண்கள் இப்படி நடக்கிறார்கள் என்று அவற்றைப் பறிக்கிறார்கள். பெண்கள் ரேடியோ கேட்பதற்கும் தடை விதிக்கிறார்கள். இதற்கு பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. இரவில் கூடி பெண்கள் அனைவரும் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில் காஸீத்-ன் அண்ணன் கோலேயின் வீட்டிற்கு வருகிறான். பிரச்சனை மேலும் வலுக்கிறது. மீண்டும் அவள் பஞ்சாயத்தின் முன் நிறுத்தப்படுகிறாள். மூலாடே செய்ய குழந்தைகளை விடுவிக்குமாறு சாட்டையால் காஸீத் மூர்க்கமாக அடிக்கிறான். பெண்கள் எல்லோரும் செய்வதறியாது தவிக்கிறார்கள். "இன்னும் வேகமாக அடி..." என்று ஆண்கள் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். அவர்களுடன் சடங்கு செய்யும் பெண்களும் சேர்ந்து கொள்கிறார்கள். "எதுவும் பேசாமல் நில்... பொறுத்துக்கொண்டு நில்" என்று பெண்கள் அனைவரும் கோலேவிற்கு குரல் எழுப்புகின்றனர். கோலே வலியைப் பொறுத்துக்கொண்டு பிடிவாதமாக நிற்கிறாள். மரத்தடியில் வியாபாரம் செய்யும் கடைக்காரன் வந்து பிரம்பை வாங்கிக் கீழே போடுகிறான். காஸீத்ன் மற்ற இரண்டு மனைவிகள் கோலேவை கைத்தாங்களாக வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்குள் 4 சிறுமிகளில் ஒரு சிறுமியை அவளிடைய தாய் வந்து பொய் சொல்லி அழைத்துச் செல்கிறாள். அவளுக்கு மூலாடே செய்யும் பொழுது ரத்தப் போக்கு அதிகமாகி இறந்துவிடுகிறாள். அன்று இரவே கோலேவை சித்ரவதையிலிருந்து காப்பாற்றிய கடைக்காரனும் கொலை செய்யப்படுகிறான். சடங்கு நாள் முடிந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல அவர்களுடைய அம்மக்கள் சந்தோஷத்துடன் வருகிறார்கள். குழந்தையைப் பறிகொடுத்தவள் மட்டும் அழுது புலம்புகிறாள். எல்லோரும் மசூதியை நோக்கிச் செல்கிறார்கள். இனி நாங்கள் யாருக்கும் மூலாடே செய்யப்போவதில்லை என்று கத்துகிறாள். ஆவலுடன் மற்ற பெண்களும் சேர்ந்துகொள்கிறார்கள். அந்த நேரம் பார்த்து சிவப்பு உடை அணிந்த சடங்கை நிறைவேற்றும் பெண்கள் வருகிறார்கள். பெண்களில் சிலர் கோலேவுடன் சேர்ந்துகொண்டு அவர்களிடமிருக்கும் துருப்பிடித்த கத்திகளையும், சடங்கு உடைகளையும் எரிந்து கொண்டிருக்கும் ரேடியோக் குவியலில் போடுகிறார்கள்.

"இது இஸ்லாத்தோட மத விரோதச் செயல்" என்று ஊர்த் தலைவர்கள் முறையிடுகிறார்கள்.

"சடங்கு செய்யாத லட்சக்கணக்கான பெண்கள் மெக்காவுக்கே போறதா மதத் தலைவர் ரேடியோவில் பேசனாரே" என்று அவர்களுக்கு கோலே பதில் சொல்கிறாள். பஞ்சாயத்துத் தலைவர்கள் வாயடைத்துப் போகிறார்கள். பெண்கள் அனைவரும் வெற்றி கோஷம் போடுகின்றனர். அம்சதோ கூட்டத்திலிருந்து விலகி தனியாகச் செல்கிறாள். தந்தையின் ஆணையை மீறி அவளையே மணக்கப் போவதாக இப்ராஹீம் அவளை நோக்கிச் செல்கிறான். குவிக்கப்பட்ட ரேடியோக்கள் எரிந்துகொண்டிருக்கிறது. அதிலிருந்து எழும் கரும்புகை மசூதியின் உட்சியிலுள்ள வெள்ளை முட்டையையும் தாண்டி உயரே செல்கிறது. அடுத்த காட்சியில் ரேடியோவிற்கு பதில் டிவி ஆண்டனா முளைக்கிறது.

பெண்களின் மீதான அடக்கு முறையை எதிர்த்து குரல் கொடுக்கும் இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 2004-ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான சிறப்பு விருது பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஆரம்ப சில காட்சிகள் YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது: Moolaadé

இந்த படத்தை இயக்கிய "ஆஸ்மேன் செம்பேன்" ஆப்பிரிக்க சினிமாவின் தந்தையாகப் போற்றப்படுகிறார். அவரைப் பற்றிய கட்டுரை கீற்று தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. அந்த இணைப்பு கீழே உள்ளது.

ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை - ஆஸ்மேன் செம்பேன்

பின்குறிப்பு: இதே போன்ற கதையை Alice Walker என்பவர் ஆங்கிலத்தில் நாவலாக 90 களில் எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் பெயர் எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

2 comments: