Monday, November 16, 2009

கேணி சந்திப்பு - அசோகமித்திரன்

இரண்டு நாட்களாக அடை மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் ஜன்னலருகில் அமர்ந்து தூறிக் கொண்டிருக்கும் வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றிருந்தது. இரண்டாம் ஞாயிறு என்பதால் இருப்புக் கொள்ளவில்லை. அசோகமித்திரன் பங்கு பெற்று கேணியில் உரையாற்ற இருக்கிறார். மழை என்னவோ நின்றபாடில்லை.

"கேணி சந்திப்பு நிச்சயமாக நடைபெறும் கண்டிப்பாக வரவும்" என்று பி
பு குறுஞ்செய்திஅனுப்பியிருந்தார். உடனே அவருக்கு ஃபோன் செய்து "என்னங்க நிஜமாவா சொல்றீங்க? இவ்வளோ மழை பொழியுதே... ரொம்ப வயசானவரு... எதுக்கு அவர தொந்தரவு செய்யணும். அடுத்த மாதம் சந்திப்பை வச்சிக்கலாமே... அவருக்கு வேறு சமீப காலமா உடம்பு சரியில்லையே" என்று கூறினேன்.

"இல்லைங்க கிருஷ்ணா. ஞாநிகிட்ட கேட்டேன்... கண்டிப்பா கேணி சந்திப்பு நடக்கும்னு சொல்லிட்டாரு" என்று பதில் கூறினார்.

இனி விதி விட்ட வழி என்று ஞானியின் இல்லம் நோக்கிப் புறப்பட்டேன். நன்றாக பெய்து கொண்டிருந்த மழை உதயம் திரையரங்கில் இறங்கியதும் நின்ற மாதிரி தெரிந்தது. 'அந்த பயம் இருந்தால் சரி' என்று வானத்தைப் பார்த்து வருண பகவானை எச்சரித்தேன். ஞானி வீட்டின் நுழைவாயிலில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்திருந்தார்கள். கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே சென்றேன். இந்த மாதக் கூட்டம் வீட்டிற்குள்தான் நடைபெறும் என்றார்கள். சாய்ந்துகொள்ள வசதியாக சுவரோரமாக அமர்ந்துகொண்டேன்.

எனக்கு வலப்பக்கத்தில்
இருந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சனின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். சிரித்துக் கொண்டோம்.

"இன்று வரவிருப்பது அசோகமித்திரன்" என்றேன்.

"அப்படியா?
இருக்கட்டுமே... புத்தகம் நன்றாக இருக்கிறது. அதனால் படித்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்றார்.
"நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
"ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறேன்"
என்றார்.
அப்படியெனில் தமிழ் இலக்கிய சந்திப்பில் எப்படி ஆர்வம் வந்தது?
"எனக்கு கவிதை எழுதுவதில் விருப்பம் அதிகம். புத்தகம் கூட வெளியிட்டிருக்கிறேன்.
இன்று பார்த்து என்னுடைய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை."
"அதனால என்ன...எழுதிய கவிதையில் ஒன்றை சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். ..."

அவரும் ஹைக்கூ மாதிரி ஒரு கவிதையை எனக்குக் கூறினார். புரியவில்லை என்றதும் ஆர்வத்துடன் விளக்கிக் கூறினார். கவிதை கேட்ட மயக்கத்தில் இடப்பக்கமாகத் திரும்பினேன்.

மழையில் நனைந்த ஒருவர் அருகில் உட்கார்ந்தார். சிரித்ததும் பதிலுக்கு சிரித்தார்.
என்னைப்பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். பதிலுக்கு நானும் விசாரித்தேன்.

"நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
"நடித்துக்கொண்டிருக்கிறேன்..."
என்றார்.
"ஓ... நீங்கள் ஷேக்ஸ்பியரின் ரசிகரா?"
"நீங்க என்ன சார் சொல்றீங்க?" என்றார்.
"All the world's a stage, And all the men and women merely players - அப்படின்னு அவரு தானே சொல்லி இருக்காரு..."
"இல்லைங்க சார்... நான் வில்லனா நடிக்க சினிமாவில் முயற்சி செய்றேன். சில டிவி சீரியலிலும், டாகுமெண்டரி படங்களிலும் நடிச்சிக்கினு இருக்கறேன். ஆமா... இங்க என்ன சார் நடக்குது?" என்றார்.

"என்னை 'கிருஷ்ண பிரபு' என்றே கூப்பிடலாம். 'சார்' போடுற அளவிற்கு நான் இன்னும் பெரிய ஆள் ஆகலை. இது இலக்கிய கூட்டம். படைப்பிலக்கியம் பற்றி மூத்த எழுத்தாளர்கள்
வந்து பேசுவாங்க. சில நேரங்களில் சினிமாக்காரங்களும் வருவாங்க. ஆமா... இங்க எப்படி வந்தீங்க?" என்றேன்.

"
வண்டிய இந்த பக்கத்துல சர்வீசுக்கு விட்டிருக்கேன். அதை வாங்கலாம்னு போகும்போது இங்க ஒரே கூட்டம், மழை வேற ஓயாம கொட்டிக்குனு இருந்தது. அங்க இருக்காரே (பதிவர் அகத்தியன்) அவருதான் இங்க வாங்கன்னு கூப்பிட்டாரு. வந்துட்டேன்."

அடடா இது இலக்கிய கூட்டமாச்சே... அசோகமித்ரன்னு பேர்போன எழுத்தாளர் இங்க வரப் போறாரு. அவரோட நாங்க பேசப்போறோம். அவர் சிநிமாகாரன்களைப் பத்தி 'கரைந்த நிழல்கள்-னு ஒரு நாவல் எழுதி இருக்காரு. அவருடைய புலிக் கலைஞன் என்ற சிறுகதை மிகவும் பிரபலம். அதுவும் வேஷம் போடுறவன் பற்றியதுதான் என்று மூச்சுவிடாமல் பேசினேன்.

சுவாரஸ்யமே இல்லாமல்
"அப்படியா" என்றார்.

"தப்பா நெனைக்காதீங்க நடுவுல உட்கார்ந்தா பாதியில எழுந்து போக முடியாது. அதனால வாசல் ஓரமா உட்கார்ந்துக்கோங்க பிடிக்கலன்னா பாதியில போயிடலாம்" என்றேன்.

"இலிங்க, இவளோ தொலைவு வந்துட்டேன். முழுசுமா பார்த்துட்டு போயிடறேனே..." என்றார்.

வெளியில் பார்த்தேன் மழை தூறிக்கொண்டிருந்தது. அசோகமித்திரன் அவருக்கான இடத்தில் வந்தமர்ந்து பேச ஆரம்பித்தார். இடையில் ஞானி குறுக்கிட்டு "நான் வரவேற்புரை கொடுத்துவிடுகிறேனே" என்றார். "Sorry sorry. very sorry" என்று ஞானியைப் பேச அனுமதித்தார்.

தொடக்க உரையாக ஞானி பேசியதையும் அதைத் தொடர்ந்து அசோகமித்திரன் பேசியதையும் எழுத்தாளர் ரவி பிரகாஷ் அழகாக பதிவிட்டுள்ளார்: அசோகமித்திரனும் எனது மித்திரனும்!

அசோகமித்திரன் எந்த தலைப்பில் பேசவிருக்கிறார் என்று ஞானி அவருடைய முகப்புரையில் குறிப்பிடவில்லை. அசோகமித்ரனும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தனது உடல் உபாதைகளைப் பற்றி சக மனிதர்களிடம் பேசுவது போல பேச ஆரம்பித்தார். எழுத்தாளரா தான் வாழ்ந்த ஏழ்மையான நாட்களையும், சக எழுத்தாளர்களான ஜி நாகராஜன், கண்ணன் போன்றோரின் குடிப்பழக்கமும், அதனால் தான் பட்ட கஷ்டங்களையும் கூறிய பொழுது நெருடலாக இருந்தது.

ஒரு முறை எழுத்தாளர் கண்ணனுடைய குடும்பம் மிகுந்த வறுமையில் இருக்கவும், அவர்களுடைய குடும்பத்திற்கு தையல் இயந்திரம் வாங்கிக்கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். உடனே வங்கியில் கடன் வாங்க மேனேஜரை அணுகியிருக்கிறார்.

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு நிரந்தர வருமானம் இருக்கிறதா? என்று இவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
எழுத்தாளருக்கு எங்கிருந்து நிரந்தர வருமானம் இருக்கப் போகிறது. இருந்தாலும் மிகுந்த சிரமத்திற்கிடையில் அந்த குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். சில நாட்களிலெல்லாம் அந்த மெஷினை அடகு வைத்து கண்ணன் குடித்திருக்கிறார். பிறகு வங்கிக் கடனை இவர்தான் தீர்த்தாராம்.

மகா குடிகாரனாக இருந்தாலும் கண்ணனுடைய மனைவி மக்கள் அவரிடம் அன்பாக இருந்தார்கள் என்று சொல்லி சந்தோஷப்பட்டார். "எங்கிருந்தாலும் அந்த பெண்கள் சந்தோஷமா இருக்கணும்" என்று ஆசீர்வதித்தார்.
சில நேரங்களில் மளிகை பொருட்கள் வாங்க வைத்திருக்கும் பணத்தை ஜி நாகராஜன் உரிமையுடன் எடுத்துக் கொள்வாராம். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாராம்.

இவையனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கும் போது
துக்கம் அடைத்துக்கொண்டு வந்தது. ஏனோ தெரியவில்லை என்னுடைய உடல் பாரமாவதை உணர்ந்தேன். என்னடா என்று பார்த்தால் சினிமாக்கார சகா என்னுடைய தோல் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். 'தூங்குறவங்களை பாதியில எழுப்பினா ஆயுசு கம்மின்னு' எனக்கு சொல்லி இருக்காங்க. அதனால் பாரத்தை தாங்கிக் கொண்டேன்.

தூக்கம் களைந்து எழுந்த சகா "எனக்கு 6 மணிக்கு ஒருவரைப் பார்க்க வேண்டும். வெளிய போனா தப்பா நெனைப்பாங்களா? என்று கேட்டார்.

"ச்சீ... ச்சீ... அப்படி கூட யாராவது நெனைப்பாங்களா?" என்று சொன்ன போது என்னுடைய பாரம் குறைவதை உணர முடிந்தது.

வெளியே பார்த்தேன் மழை நின்றிருந்தது. காற்றில் குளிர்ச்சியுடன் அசோகமித்ரனின் பேச்சு கேட்டது.அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

முன்பெல்லாம் இலக்கிய சந்திப்பாக இருக்கட்டும், கலந்துரையாடலாக இருக்கட்டும் முன்யோசனையுடன் செய்வார்கள். என்ன பேச வேண்டும் என்று யோசித்து செய்வார்கள். இப்பொழுதெல்லாம் அப்படியில்லாதது வருத்தமாக இருக்கிறது.

வரும்போது ஒரு மூட்டையில் குப்பையைக் கட்டி (ஞாநிக்காக அவர் கொண்டு வந்த புத்தகங்கள்) இங்க எடுத்து வந்து கொட்டியிருக்கிறேன். வீட்டில் இது போல இன்னும் நிறைய குப்பை இருக்கிறது அதைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கிறேன்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் குப்பைத் தொட்டி எப்பொழுதுமே நிறைந்து வழிகிறது. என்னுடைய குப்பைகளையும் கொட்டினால் தொட்டியை மீறி வெளியில் வந்து பறக்கும். யாருடைய கையிலாவது அந்த குப்பைகள் மீண்டும் கிடைத்துவிடும் என்று பயமாக இருக்கிறது. ஆகவே காலியாகும் சமயத்தை எதிர் பார்க்கிறேன்.

'எழுத்தாளன்' என்பது நான் எப்போதோ பார்த்த வேலை. அதைப் பற்றி இப்போது பேச பயமாக இருக்கிறது.
இப்பொழுதெல்லாம் ஞாபக மறதி அதிகமாகியிருக்கிறது. எதைப் பற்றியும் பேச இயலவில்லை. சில நேரங்களில் கதைகளைப் படிக்கிறேன். யார் எழுதினார்கள் என்று மறந்துவிடுகிறேன். ஆகவே என்னுடைய உரையை இதனுடன் முடித்துக் கொள்கிறேன். ஏதாவது கேள்வி வேண்டுமானால் கேளுங்கள் என்றார்.

தண்ணீர், மானசரோவர், புலிக் கலைஞன் மற்றும் இதர சிறுகதைகளைப் பற்றி கேள்வி கேட்டார்கள்.
அவற்றில் சில...

1.
உங்களுக்கு ஆண்பிள்ளைகள் தானே இருக்கிறார்கள்... ஆனால் பெண்களைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்களே?
எனக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றார்.

2.
உங்களுடைய நாவல் தண்ணீரைப் பற்றி?
எவ்வளோ பேரு பேசிட்டாங்க. கூட்டம் கூட்டமா பேசிட்டாங்க. நாங்க அந்த காலத்துல தண்ணிக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். You know, my 4 years old son was sitting in the que for one bucket water. very sad.

3. இப்பொழுதெல்லாம் எழுத்தாளர்களுக்கு உடனுக்குடன் பாராட்டுகள் வருகிறது. உங்களுக்கு பாராட்டுகள் எப்படி வந்தது?
தபாலில் தான். உங்களுடைய படைப்பில் தகவல் பிழை இருக்கிறதே என்று ஒரே வரியில் இருக்கும்

4.
உங்களுடைய படைப்பு சினிமாவாக ஊடக மாற்றம் பெறாதது வருத்தம் இருக்கிறதா?
இல்லை. நான் எழுதுவது படிக்க தான். ஆனால் என்னுடைய புத்தகத்தில் உள்ள காட்சிகள் சில படங்களில் பார்க்க நேர்வதுண்டு. Dozen கணக்குல பார்த்திருக்கிறேன். புத்தகத்தை படித்துவிட்டு அதுபோல வைக்கிறார்களா! இயல்பாகவே அமைகிறதா என்று தெரியவில்லை.

5.
உங்களுடைய 'ஒற்றன்' நாவலில் ஒருவர் Chart போட்டு நாவல் எழுதினர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்? (அடியேன் கேட்டது)
உண்மைதான். பேரு நாட்டு எழுத்தாளர். எழுத்தாளரின் பெயரையும் புத்தகத்தின் பெயரையும் குறிப்பிட்டார். புத்தகம் சரியாக விற்கவில்லை என்பதையும்கூறினார்.

6. உங்களுடைய காலங்களில் இந்த மாதிரி கூட்டங்கள் நடைபெற்றதா?
அப்படியெல்லாம் இல்லை. அவ்வளவு சுலபமா எந்த கூட்டமும் இருக்காது. அப்படியே கூடினாலும் அதற்கான முன்யோசனையுடன் கூடுவார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் இந்த மாதிரி
க் கூட்டத்தில் பங்கு பெறுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய படைப்பாற்றல் சிதைவுறாமல் இருக்கும்.

7. உங்க
ளை இந்தியாவின் ஹெமிங்க்வே என்று கூறுவதைக் கேட்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
அந்தாளு அவருடைய வேலையை செஞ்சாரு... அவரு எங்கயோ இருக்காரு. நம்ம எங்கயோ இருக்கோம்.

8. சிறுகதைக்கு வடிவம் இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. அது ஒரு அனுபவத்தைத் தரவேண்டும். சிறுகதைக்கோ நாவலுக்கோ வடிவம் கிடையாது.

9. அப்படியெனில் சிறுகதைக்கு வடிவம் இல்லை என்று சொல்லிவிடலாமா?
இல்லை இல்லை. நான் கூறியது என்னுடைய கருத்து. அவரு எனக்கு ஹெல்ப் செய்திருக்கிறார். வடிவம் இருக்குன்னா அந்த சார்ட் மாதிரி ஆயிடும் இல்ல? படைப்பு ஒரு அனுபவத்தைத் தரனும் என்று அவருடைய கைகள் என்னை சுட்டியது. கண்கள் ஒரு நிமிடம் என்னைப் பார்த்து கேள்வி கேட்டவரை ஊடுருவியது.

"எவ்வளோ பேரு உட்கார இடமில்லாமல் நிக்கறாங்க. மழை வேற பெய்யுது. எங்க இருந்தெல்லாம் வந்திருக்கான்களோ!. ரொம்ப கஷ்டமா இருக்குது" என்று கூடம் நிறைவுறும் போது கூறினார்.

அடலேறு, நிலா ரசிகன் மற்றும் மகரந்தன் ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அசோகமித்ரனைப் பற்றி பல நாட்களுக்கு முன்பு படித்தனை நினைத்துக் கொண்டே சாலைகளில் நடந்துகொண்டிருந்தேன்.

ஆட்டோவில் போன அசோகமித்திரன்

வீட்டுக்கு வீடு கலர் டிவி கொடுத்து தமிழை வளர்க்கிறேன் என்று முழக்கமிடுபவர்கள் இது போன்ற மூத்த படைப்பாளிகளுக்கு என்ன செய்தார்கள் என்று பார்த்தால் விரக்திதான் மிஞ்சும். சரி... நாமாவது தமிழ் புத்தகம் வாங்குகிறோமா என்றால் அதுவும் இல்லை.

"வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை." - உலகம் அறிந்த எழுத்தாளருக்கே இதுதான் நிலைமை என்றால். மற்றவர்களை நினைக்கும் போது நடுக்கமாக இருக்கிறது.

**************************************************

புலிக் கலைஞன்
சிறுகதையை வாசிக்க 'ச.ந.கண்ணன்' அவர்களின் இணையப் பக்கத்திற்கு செல்லவும்:[1] [2] [3]

ஜெய மோகனின் : அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்

4 comments:

  1. அருமையான பதிவு! ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் பரந்த நோக்கத்தில் உருப்படியான லின்க்குகளையும் கொடுத்து, அவற்றைப் படித்து ரசிக்கச் செய்த விதத்தில் உயர்ந்து நிற்கிறீர்கள்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா....கொஞ்சம் கதை வாசிப்பது போன்றிருந்தது ;)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. கிருஷ்ணா மிக அருமை. அவருடைய கரைந்த நிழல்கள் மட்டுமே படித்திருக்கிறேன். கேணி சந்திப்பு பற்றி தொடர்ந்து எழுதுங்கள், என்னைபோன்ற பாவம் பண்ணியவர்களுக்கு புண்ணியமாப் போகும். :-)

    //வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை." - உலகம் அறிந்த எழுத்தாளருக்கே இதுதான் நிலைமை என்றால். மற்றவர்களை நினைக்கும் போது நடுக்கமாக இருக்கிறது.//

    இந்தியாவில் மட்டுமே இந்த நிலையா? எழுத்து வருமையைத்தரும்.

    ReplyDelete