Sunday, October 20, 2013

ஒன்டிக்கட்டைகளின் ஓலங்கள்


சென்னையைப் பொருத்தவரை பேட்சுளர்களுக்கு வாடகைக்கு விடவே வீட்டின் உரிமையாளர்கள் பலரும் விரும்புவார்கள். ஏனெனில் வீட்டு வாடகையை எல்லோருமாகப் பங்கிட்டுக்கொண்டு உரிய தேதியில் வாடகைப் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். சம்சாரிகளுக்கு விடுவதால் வாடகைப் பணம் பெறுவதில் பிரச்சனை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வாடகையை உயர்த்தினாலும் பேச்சுலர்ஸ் ஏனென்று கேட்காமல் கேட்கும் தொகையை சப்தமில்லாமல் கொடுத்து விடுவார்கள். இதே கிராமமென்று வரும் பொழுது சிக்கல் எழும். ஒன்டிக்கட்டைகளுக்கு வாடகைக்கு விடவே தயங்குவார்கள். என்னுடைய கிராம வீட்டை வாடகைக்கு விடும் பொழுதும் இதே குழப்பம் நிலவியது. 

ஒரு பிரபல கல்வி நிறுவனத்தின் – சமையல் கூட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தங்க எனது கிராம வீட்டினைக் கேட்டிருந்தார்கள். பெரிய கல்வி நிறுவனம், வாடகைப் பிரச்னை இருக்காது என்பதால் அம்மாவும் ஒத்துக்கொண்டாள். ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் எழுந்தது.

நாங்கள் இருக்கும் பொழுதே பக்கத்து வீட்டு உரிமையாளர்கள் – எங்கள் பகுதியில் நுழைவதும் கிளைகளை வெட்டுவதும், குப்பைகளைக் கொட்டுவதும் என அராஜகம் செய்வார்கள். ஊர்பேர் தெரியாத பேச்சுலர்களை நடத்தும் விதத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பேச்சுலர்களை “நீங்கள் மொட்டை மாடியில் நிற்கக் கூடாது, வீட்டிற்கு உள்ளே மட்டும் தான் இருக்க வேண்டும், வந்தமா போனமான்னு இருக்கணும்” என்று ஊரிலுள்ள ஒருவர் வந்து மிரட்டிவிட்டுச் சென்றாராம். பக்கத்து வீட்டு ஆசாமி குடித்துவிட்டு வந்து ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி இருக்கிறார். அவர்களுடைய வாரிசுகளில் ஒருவன் குடியிருப்பவர்களை அடிப்பதற்காக ஓடியிருக்கிறேன். ஊரிலிருக்கும் பெண்கள் “மொட்டைமாடி இருட்டுல நின்னுக்குனு... நீங்க எங்களையே தான் பாக்குறீங்க?” என மிரட்டி இருக்கிறார்கள்.

“அண்ணா... எங்களுக்கு பயமா இருக்குன்னா...!? எங்க வீட்டுல கூட இப்படியெல்லாம் திட்டினது இல்ல... செல்போன் சிக்னல் வரலன்னு மாடிக்கு போயி நின்னு பேச முடியல. தெருவுல நின்னும் ஊருல இருக்கும் யாருகிட்டயும் பேச முடியல” என குடியிருக்கும் பையன்களில் ஒருவன் அழைத்துப் பேசினான்.

மொத்தம் 12 பேர் அந்த வீட்டில் இருகிறார்கள். அதில் 7 பேர் வட இந்தியர்கள். மீதியுள்ள 5 பேர் தமிழர்கள். ஆறு நபர்கள் வீட்டிலிருந்தால், ஆறு பேர் வேலைக்குச் சுழற்சி முறையில் செல்பவர்கள். சரி அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். குடித்துவிட்டு தகராறு செய்வதாக ஒன்டிக்கட்டைகள் குறிப்பிட்டவர் எதிரில் வந்தார். அவரை மடக்கிக்கொண்டு “பக்கத்துல இருக்கவங்கள நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா? எதுக்கு குடிச்சிட்டு கலாட்டா பண்றிங்க?” என்றேன்.

“இல்லியே... நான் அப்படியெல்லாம் பண்ணலையே...” என்றார்.

இதென்னடா வம்பா போச்சிதுன்னு, குடியிருப்பவர்களை அடிப்பதற்கு ஓடியதாகக் குறிப்பிட்ட டிப்ளமோ படிக்கும் இளைஞரை “இன்னாடா... அடிப்பன்னு சொன்னியாமே...! அடிச்சிடுவையா...!?” என்றேன்.

“ஐயையோ... நான் ஏன்னா அப்படியெல்லாம் பண்ணப் போறேன்...!?” என்றான்.

அந்த நேரம் பார்த்து குடிகாரரின் நண்பர் வந்தார். “அவங்க அப்படி பண்றதுல என்ன தப்பு இருக்குது...!?” என்றார். இவர் உறவு முறையில் அம்மாவிற்குத் தம்பி.

“என்ன சொல்றிங்க...!?” என்றேன்.

“ஊருக்கு நடுவுல ஒரு 18 ஆம்பள பசங்கள கொண்டுவந்து உட்டுட்டு... எதுக்கு அசிங்கம் பண்றிங்க?” என்றார்.

“இன்னாது அசிங்கமா? குடிச்சிட்டு ங்கோத்தா ங்கொம்மான்னு பேசுறது அசிங்கமா? அவனவன் வேலைய பாக்குறது அசிங்கமா?” என்றேன். “நீங்க செஞ்சது தப்பு?” என்றார்.

அதாவது குடும்பத்திற்கு விடும்பொழுது, அவர்களுடைய “குலம், கோத்திரம், ஜாதி, மதம், மயிறு, மட்டு, லொட்டு, லொசுக்கு” என எல்லாவற்றையும் விசாரித்து வாடகைக்கு விடலாம். பேச்சுலர்ஸ் எனில் அதில் சாதியக் கலப்பு இருக்கும் இல்லையா? அதுதான் அவர்கள் கேட்க விழையும் முக்கியமான விஷயம். சென்ற வாரத்தில் பக்கத்து ஊரைச் சேர்ந்த மேல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தலித் இளைஞருடன் ஓடிவிட்டார் என்பதால் அவளது தந்தை தற்கொலை செய்துகொண்டார். நான்கு நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்து தலித் இளைஞனரை, பக்கத்து ஊரிலுள்ள தலித் இளைஞர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றிருகிறார்கள். இந்த சம்பவங்கள் ஊரிலுள்ளவர்களின் உளவியலில் புகுந்து வேலை செய்கின்றதா என்று தெரியவில்லை.

“நீங்க 12 பேச்சுலற்கு வீட்டை வாடகைக்கு விட்டது தப்பு?” என பலரும் திரும்பத் திரும்பக் கூறினார்கள். இவர்கள் எல்லோருமே ஒருவகையில் எனக்கு தூரத்து உறவினர்கள் தான்.

“தோ... பாருங்க... அந்த பசங்க ஏதாச்சும் தப்பு சென்ஜாங்கண்ணா... என்கிட்டே சொல்லுங்க... சும்மா சத்தம் போட்டா நான் அடங்கிப் போவேன்னு நெனைக்காதிங்க...” என்றேன். என்னுடைய பதிலில் யாருக்கும் திருப்தியே இல்லை. உலகில் சில ருசிகரச் சம்பவங்கள் நடக்கின்றன. நண்பர்கள் அதனை கவனமாகக் கேட்க வேண்டும்.

“ஒருவருடைய மாமாவின் மகன், அதே நபருடைய அத்தையின் மகளைத் திருமணம் செய்ய இயலுமா?”, “ஒருவரது (ரெண்டு கை தள்ளிய) சித்தியின் மகன், அதே நபருடைய (ஒருகை தள்ளிய) சித்தியின் மகளைத் திருமணம் செய்ய இயலுமா?” – இதெல்லாம் பறந்து விரிந்த “அறம் சார்ந்த, மத ஒழுக்கம் சார்ந்த, இத்தியாதி எல்லா ஒழுக்க நியதிகளையும்” பின்பற்றும் நம் இந்திய மரபுச் சூழலில் ஆங்காங்கு நடக்கிறது. இனம் இனத்தோடு சேரும்பொழுது நியதிகள் நழுவி இதற்கெல்லாம் வழிவிடுகின்றன. இதுபோன்ற சூழல்களில் இருந்துகொண்டு ஒழுக்கங்களைப் பற்றிப் பேசும் நம்மவர்களுக்கு ரெண்டு பொன்னாட்டிகள், ஒன்பது சக்காளித்திகள் இருகிறார்கள். சுய ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்று எதுவுமே இல்லாதவர்கள் – சாதியம் சார்ந்த ஒழுக்கத்தை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதின் மர்மம தான் எனக்கு விளங்கவே இல்லை. இவர்களின் பிரச்சனை தான் என்னவென்றும் புரியவில்லை? எதற்காக அடுத்தவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை?

முத்தாய்ப்பாக ஒரு விஷயத்தைக் கூறினார்கள். “இங்க பாரு அவனுங்க ஹிந்தி காரனுங்க. பாம் வப்பானுங்க... ஏதாச்சும் கடத்தல் செய்வானுங்க... கள்ள நோட்டு மாத்துவானுங்க...” என்று குடித்துவிட்டு கலாட்டா செய்தவர் கூறினார். என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. தொடர்ந்து அவர் பேசினார்: “கவரப்பேட்டை இன்ஸ்பெக்டர் தெரிஞ்சவர் தான்... அவரு எப்பன்னாலும் ரவுண்ட்ஸ் வருவாங்க... மாட்டினால் ஜெயிலுக்குத் தான் போவ...” என்றார். இவருக்குப் பின்னால் பெரிய அரசியல் வாதியின் குடும்பமே இருக்கிறது.

“என்ன மெரட்டுறீங்களா...?” என்றேன்.

“இல்ல உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்...!” என்றார்.

“அவங்க மாட்டினா ங்கோத்தா நான் தானே ஜெயிலுக்குப் போகப் போறேன்... உங்களுக்கு என்ன அதப் பத்திக் கவலை...!? உங்க வேலையைப் பாருங்க...” என்று நடு ரோட்டில் நின்றுகொண்டு தரமான வார்த்தைகளால் ஞாயம் கேட்டுவிட்டு, ஒன்டிக்கட்டைகளுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினேன்.

“யார் கண்டது ஊரிலுள்ளவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று...!?”

இப்படித் தான் போல, தனக்கு ஒத்துவராதவர்களைக் குற்றவாளியாக நிறுத்த ஒரு தந்திரமான சமூகம் பின்னணியில் வேலை செய்துகொண்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருப்பவர்கள் பொம்மலாட்ட மனிதர்களைப் போல சாதாரண மக்களை ஆட்டி வைக்க நினைப்பார்கள். படித்த, ஓரளவிற்கு சிந்திக்கத் தெரிந்த எனக்கே இதுபோன்ற எச்சரிக்கைகள் வருகிறது எனில், ஒடுக்கப்படும் ஒன்டிக்கட்டைகளின் நிலை பாவத்திலும் பாவம். பரிதாபத்திலும் பரிதாபம். நாம் பார்த்து வளர்ந்த மனிதர்கள், காலம்காலமாக சுற்றித் திரிந்த இடத்திலிருந்தே இதுபோன்ற எச்சரிக்கை எதிர்பொலிகள் வருகிறது எனில் தேசம் கடந்து, புலம்பெயர்ந்து வாழும் மனிதர்களை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்கிறேன்.

“அடக் கடவுளே... அவர்களது நிலைமை ரொம்பவும் கஷ்டம் தான்.”

யார் கண்டது? சிறைக்குச் சென்று திரும்பிய அனுபவத்தையும் இதேபோல ஒருநாளில்லை ஒருநாள் உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதோ என்னமோ? எல்லாம் ஒரு அனுபவம் தானே...!

(“நிறைய பேரு சொல்லி இருக்காங்க. டேய்... நீ லாயர்க்கு படி... நல்லா வருவ...” என்று. நலவிரும்பிகள் சொல்லியதை கேட்டிருக்க வேண்டும் என்று இப்பொழுது தோன்றுகிறது.)

1 comment:

  1. ஒரு காலத்தில் கிராமத்தினர் மிகவும் வெள்ளந்தியாக இருந்தனர், இப்போது ஜாதிப்பேய் தலைக்கேறி சுயநலத்தின் உச்சமாய் மாறிவிட்டார்கள்.

    ReplyDelete