Thursday, October 17, 2013

தாய்மொழி வழிக் கல்வி -மாநில சிறப்பு மாநாடு - தமுஎகச


படத்தின் நூறாவது நாள் விழா – “இயக்குனர் (அவருடைய பெயரெழுதி) “*********” வருக வருக... நடிகை (அவருடைய பெயரெழுதி) “*******” வருக வருக...” இத்தியாதி அடிபொடிகள் (அவர்களுடைய பெயரெழுதி) வருக வருக...” என எங்கு திரும்பினாலும் ஒரே பேனர் மயம். அவுட் டேட்டெட் காமெடி நடிகர்களின் புகைப்படமும் பேனர்களில் இருந்தது. என்றாலும் “ஏதோ உண்மையிலேயே படவிழாதான் நடக்கிறது போல” என்று குழம்பியவாறு நின்றுகொண்டிருந்தேன். பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் “தமுஎகச” ஏற்பாடு செய்திருந்த “தமிழ்வழிக் கல்வி மாநில அளவிலான சிறப்பு மாநாட்டிற்காக” அரைமணி நேரம் முன்னதாகவே சென்றிருந்ததால் வந்தவினை இது. ஏற்கனவே குழப்பத்தில் இருந்த என்னை, பக்கவாட்டில் நடந்து சென்ற ஒருவர் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். (மாநாடு துவங்குவதற்கு முன்பு ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் எடுத்து இருக்கிறார்கள்.)

என்னிடம் பேச்சுக் கொடுத்தவர் “வணக்கம்... நானொரு புரட்சிக்கவிஞர். பேங்க்ல வேலை செய்றேன். ஆனா, எழுத்துதான் எனக்கு ஆத்மா – உயிர், எல்லாம். நான் மிமிக்ரியும் செய்வேன். பல குரலில் பாடுவேன். நித்யஸ்ரீ மகாதேவன், ஜேசுதாஸ், டிஎம்எஸ், சுசீலா எல்லார் வாய்ஸ்லையும் பாடுவேன்.” என அடுக்கிக்கொண்டே போனார். நானோ அவரைப் பார்த்து மிரண்டவாறு நின்றுகொண்டிருந்தேன்.

என்னுடைய மிரட்சியைப் பார்த்து “நான் பொய் சொல்றேன்னு தானே நெனைகிக்கிறீங்க? இப்பப் பாருங்க...” என விரல்களை எடுத்து வாயின் முன் அரண் போல வைத்துக் கொண்டார். “பூனை புள்ள பெத்த மாதிரி ஒரு சவுண்ட். அந்த ஒலியை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு ஆலாபனையை எடுத்துவிட்டார். “இது நித்யஸ்றீ வாய்ஸ்...” என ஹிண்ட்ஸ் கொடுத்துவிட்டு - ஏதோ கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்த பாடலை இழுத்து இழுத்து, கமகத்துடன் பெண்குரலில் பாடினார். எனக்கு மூச்சு முட்டியது. “இப்பப் பாருங்க ஜேசுதாஸ் வாய்ஸ்ல படறேன்...” என மீண்டும் ஒரு கர்நாடக ராகத்தில் அமைந்த பாடலை இழுத்து இழுத்து, கமகத்துடன் ஆண் குரலில் பாடினார். உண்மையிலேயே திறமையான மனிதர் தான் என்று நினைத்துக்கொண்டு - பேந்தப் பேந்த அவரைப் பார்த்து முழித்தேன்.

“இதையெல்லாம் ஒரு தற்பெருமைக்காக செஞ்சி காமிக்கிறேன்னு நெனச்சிக்காதிங்க. ஒரு அறிமுகத்துக்காகத் தான்...” என்றார்.

“இம்மாம் பெரிய விஷயத்தை, அற்பத்திலும் அற்பமான என்னிடம் எதற்குச் செய்து காண்பிக்கிறார்” என்ற குயுக்தியுடனும், அதிர்ச்சியுடனும், குழப்பத்துடனும் அந்த நரை தட்டிய வயோதிக மனிதரைப் பார்த்தவாறு பேந்தப் பேந்த விழித்தேன்.

“ஷார்ட் ஃபிலிமுக்கான நிறைய கருக்கள் உள்ளுக்குள்ள இருக்குது. யாருகிட்ட அதையெல்லாம் கொடுக்கறதுன்னு தான் தெரியல...” என்று சம்பாஷனையின் மணிமகுடமாக ஒரு பிட்டைத் தூக்கிப் போட்டார்.

“எம்மோவ்... இன்னைய தேதிக்கு சித்திரகுப்தன் நம்ம ஓலையில என்னமோ சிறப்பா எழுதி இருக்கறாண்டோவ்...” என நினைத்துக்கொண்டு சுதாரிப்பதற்குள் “ஆமா.... இங்கதான தமுஎகச-வின் தமிழ்வழிக் கல்வி மாநில அளவிலான சிறப்பு மாநாடு நடக்கிறதா சொல்லி இருந்தாங்க? இது என்ன சினிமா பங்ஷன் பேனருங்களா வச்சி இருக்காங்க?” என்றார்.

“அடக் கூறுகெட்டக் கவியே... அதத் தானைய்யா நானும் மண்டைய போட்டு கொடஞ்சிக்குனு இருக்குறேன். ஊடால நீ வேற என்னைய திகிலடைய வக்கிறயே...!” என்றவாறு மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அவரையும் அழைத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்றேன். நண்பர் “இரா. தெ. முத்து” எதிரில் வந்தார். அவரைக் கண்டதும் தான் எனக்கு உயிரே வந்தது. நெருங்கிச் சென்று அவருக்குக் குரல் கொடுத்தேன். பக்கத்தில் இருந்த “புரட்சிக் கவிஞர்” இரா. தெ. முத்துவைப் நிறுத்திக் கொண்டு, சுயபுரானத்தை மீண்டும் முதலிலிருந்து துவங்கினர். இரா. தெ புருவத்தை வில்லென வளைத்து - அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு நின்றார்.

“இதையெல்லாம் தற்பெருமைக்காக சொல்லிட்டு இருக்குறேன்னு நெனச்சிக்காதிங்க. ஒரு அறிமுகத்துக்காகத் தான்...” என்று இரா. தெ-விடமும் கூறினார்.

“எனக்கு ப்ளாடர் வெடிக்கிறா மாதிரி இருக்குது. பிஸ் அடிச்சிட்டு வந்துட்றேனே” என்பதை உணர்த்தும் படியாக ஆள்காட்டி விரலை சைக்கிள் கேப்பில் நைசாகக் காண்பித்துவிட்டு அவசர அவசரமாக நழுவினேன். அந்தக் கவிக்கு நடுவிரலைக் காண்பித்து விட்டுச் சென்றிருந்தாலும் சிறப்பாகத் தான் இருந்திருக்கும்.

புரட்சிக்கவி நின்றுகொண்டிருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அரங்கினுள் நுழைந்தால் தோழர் ச. தமிழ்ச்செல்வன் மேடையில் நின்றுகொண்டு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அதே மேடையின் ஒரோரத்தில் இரா. தெ. முத்துவும் நின்றுகொண்டிருந்தார். “துள்ளத் துடிக்கக் கழுத்தறுக்குறவங்களுக்கு டிமிக்கி குடுக்கறதும் ஒரு கலை தான்” என்று நினைத்துக் கொண்டேன். நீண்ட நாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனைப் பார்த்ததும், அவருடன் சில நிமிடங்கள் பேசியதும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“எதாச்சும் எழுதுறீங்களா?” என்று தமிழ் கேட்டார்.

“இல்லிங்க தமிழ்... இப்பத் தானே சுத்தவே ஆரம்பிச்சி இருக்கோம்... அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்குது...” என்றேன்.

“பிரச்சனை அது இல்ல. சிறந்த படைப்புகள படிச்சிட்டதால... இதுதான் சிறந்ததுன்னு நெனசிக்கிறோம். அதனால, சிறந்ததத் தான் எழுதனும்னு ஒரு எண்ணத்த வேற வச்சிக்கறம். எழுதறது ஒரு டைம்ல நடந்துடனும். இப்பல்லாம் நான் எழுதிட்டு – அது புடிக்காம கிழிச்சி போட்டுக்குனு இருக்கேன்...” என்றார்.

“தோழர் சொல்றது ரொம்ப ரொம்ப ஞாயமா இருக்குதே...!” என்ற எண்ணங்களுடன் குளிரூட்டப்பட்ட அரங்கின் ஓரத்தில் சென்று அமர்ந்துகொண்டேன். விழா துவங்கி சிறப்பாகத் தான் சென்றுகொண்டிருந்தது. நீதிநாயகம் சந்துரு பேசும்வரை அரங்கில் இருக்கவேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவருக்கு முன்பு கல்வியாளர் வாஸந்திதேவி பேசினார். இந்தியக் கல்விமுறையின் நடைமுறைச் சிக்கல்கள், அதன் பின்னணி, அரசு பள்ளிகளின் தற்கால சூழல், தாய்மொழிக் கல்வியின் அத்யாவசியம், ஆங்கில மொழியை இரண்டாம் மொழிப் பாடமாகச் சிறப்பாகக் கற்றுக் கொடுக்க வேண்டியதின் அவசியம் என யதார்த்தத்துடன் சில ஆதங்கக் கேள்விகளை எழுப்பிப் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த யாரோ ஒரு அள்ளக்கைக்கு அவருடைய பேச்சு பிடிக்கவில்லை போல. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை - பேச்சை நிறுத்தும்படி சூசகமாகக் கைகளைத் தட்டி, ஓசை எழுப்பித் தெரிவித்துக் கொண்டிருந்தார். அவருடைய இந்தச் செய்கை எனக்கு அருவருப்பாக இருந்தது. வாஸந்திக்கு முன்னால் பேசியவர்கள் “குழந்தைகளுக்குத் தேங்காய் என்ற வார்த்தையைச் சொன்னால் தெரியவில்லை. கோக்கனட் என்றால் தான் தெரிகிறது. தூய தமிழிலுள்ள பொருள், அர்த்தம் போன்ற வார்த்தைகள் தெரியவில்லை. மீனிங் என்றால் தான் தெரிகிறது” என மேடைப் பேச்சுக்குத் தேவையான மாடுலேஷனுடன் அரங்கின் ஒட்டுமொத்தக் கைதட்டல்களை அள்ளினார்கள். அவர்களுக்கு மத்தியில் சா. தமிழ்ச்செல்வன், வாஸந்திதேவி போன்றோரது யதார்த்த மேடைப் பகிர்தல்கள் முக்கியமான ஒன்று. அதிலும் கல்வியாளர் வாஸந்திதேவியின் இந்தியக் கல்வி சார்ந்த யதார்த்த இடியாப்பச் சிக்கல்கல்களைத் தொட்டுப் பேசிய பேச்சு முக்கியம் வாய்ந்தது. அறிவுஜீவிகள் வீற்றிருக்கும் அரங்கில் இதுபோன்ற பேச்சுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது எனில் வேறென்ன சொல்ல. ஓர் அளவிற்கு மேல் என்னால் பொருக்க இயலவில்லை. ஆகவே அரங்கை விட்டு வெளியில் வந்துவிட்டேன். வீட்டிற்குச் செல்ல எப்படியும் இரவு பத்துமணி ஆகிவிடும். ஆகவே குறளகத்தை ஒட்டினாற்போல இருக்கும் ஆவின் பால் கடைக்கு நண்பர்களுடன் சென்றேன்.

ஒரு சிறுவன் தான் எங்களுக்கு காகிதக் கோப்பையில் பாலைக் கொடுத்தான்.

“சின்ன பையனா இருக்கியே... ஸ்கூலுக்கு போகல...” என்றேன். “இல்லை...” என்பது போலத் தலையை ஆட்டினான்.

“நல்லா படிப்பியா?” என்றேன்.

“ஆ(ங்)... ஃபஸ்ட் ரேங்க்குதான்...” என்று இழுத்தான்.

“படிப்பு வந்தா... இவன் ஏன்பா இங்க வேலைக்கு வரான்...” என்றார்கள் ஆவினில் இருந்த ஓர் அக்கா. நான் சிறுவனைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகை வீசினேன். அவன் பார்வை வேறெங்கோ நிலைகுத்தி இருந்தது.

“டேய்... அங்க என்ன பார்வை...!? அவனுக்கு தீஞ்ச ஏடா எடுத்துட்டு போயி போட்டுடாத. கொஞ்சம் வாசன வந்தாக் கூட அவ(ன்) சாப்புட மாட்டான்.” என்று அந்த அக்கா இன்ஸ்ட்டறக்ட் செய்து கொண்டிருந்தார்கள்.

“என்னங்க அக்கா...!? ஆவின் பூத் சார்பா ஏதாச்சும் வளக்கறீங்களா?” என்றேன்.

“வளக்கறது என்னப்பா... இருக்கற பாலேட கொண்டுட்டு போயி வைக்கிறோம்.” என்றார்கள்.

“பரவாயில்லையே...” என்றேன்.

“மூணு நாலு கழிச்சி இன்னிக்கிதான்பா கடைய தொறக்க வந்தோம். தூரத்துல எங்களப் பார்த்துட்டு ஆலொசறத்துக்கு எம்பிக் குதிக்கிது அந்த நாயி. ஆளுங்கள பார்த்தா அவ்வளோ சந்தோசம் அதுங்களுக்கு...” என்றாள் அந்த அக்கா.

“கடையத் தொறக்கும் போது அதுவும் கூட சேர்ந்து கதவத் தொறக்கும்பா” என்றார் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த – அதுவரைப் பேசாதிருந்த ஓர் நடுத்தர வயது அண்ணன்.

“ரொம்ப சுவாரஸ்யமா இருக்குதே...” என்றேன்.

“இது என்னாப்பா... யாரோ ஒரு ஆளு, டெய்லியும் ரெண்டு பாக்கட் பிஸ்கட் பாக்கட் வாங்கிட்டு வந்து – இங்க இருக்கற நாய்களுக்கு போட்டுட்டுப் போறாரு...” என்றார் அந்த அண்ணன்.

“பரவாயில்லையே... பணம் இருந்தாக் கூட மனசு வேணும் இல்ல...” என்றேன்.

“அவரப் பார்த்தா... அப்படி ஒன்னும் சம்பாதிக்கிற மாதிரிக் கூட இலிங்க தம்பி... இருந்தாலும் ஏதோ வாங்கிட்டு வந்துப் போடுறாரு...” என்றாள் அந்த அக்கா.

“வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பிடக் கொடுத்தால், ரொம்ப நன்றியோட நடந்துக்குங்க அக்கா... அதெல்லாம் நமக்கு சந்தோசம் தானே...” என்றவாறு, சைகையால் தலையை ஆட்டி “வரேங்கா” என ஆவினை விட்டுக் கிளம்பினோம்.

ஒரு நாய்க்குக் கூட கருகிய வாசனை இல்லாத தூய பாலேட்டினைப் போட வேண்டும் என்ற அக்கறை சாதாரணப் பெண்மணிக்கு இருக்கிறது, தெருநாய்கள் கூட பசியோடு இருக்கக் கூடாது என்ற அக்கறை கீழ் நடுத்தர வர்க்கத்தில் வாழும் ஒரு மனிதருக்கு இருக்கிறது – ஆனால், நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைப் புகட்ட வேண்டும், அறிவுப் பசியில் வாடக் கூடாது என்ற அக்கறை – அரசு இயந்திரங்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இருக்கிறதா? என்ற சமூகம் சார்ந்த சுயபரிசோதனையை – அவரவரது தளத்தில் நாம் எல்லோருமே செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு – வேலைக்குச் செல்கிறார்கள். அப்படியே தொடர்ந்து படித்தாலும் – இளநிலை படிப்புக்குமேல் பலரும் படிப்பைத் தொடர்வதில்லை. அண்ணா பல்கலையில் கூட மெக்கானிக்கல் & சிவில் என்ஜினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் படிக்க முடியும் என்கிறார்கள். அப்படிப் படிப்பவர்களில் எத்தனை பேர் முதுநிலை செல்கிறார்கள். முதுநிலையிலும் அவர்கள் தமிழ் வழியில் படிக்க வசதி இருக்கிறதா? என்ற கேள்வியைக் குடைந்துகொண்டு போனால் ஆதங்கம் தான் மிஞ்சும்.

அண்ணா பல்கலையில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் “ME, M.Phil, Phd போன்ற என்ஜினியரிங் சார்ந்த மேற்படிப்புகளை தமிழ் வழியில் படிக்கமுடியுமா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“முடியாது... இது தொழின்முறை சார்ந்த படிப்பு...” என்ற பதில் வந்தது.

“BE எஞ்சினியரிங்கும் தொழின்முறை படிப்புதானே? அதனை தமிழ் வழியில் படிக்கும் பொழுது... மேற்படிப்புகளை ஏன் தமிழ் வழியில் தொடர முடியாது? ஒரே காரணம் ஆங்கில வழியில் படிப்பதால் கிடைக்கும் வேலை வாய்ப்பாகத் தான் இருக்கும். அப்படித்தானே...!?” என்றேன்.

“அதெல்லாம் எனக்குத் தெரியல. இதெல்லாம் அரசாங்க உத்தரவுகள். அதன்படித்தானே பல்கலைக் கழகங்கள் செயல்பட முடியும். என்றாலும் தமிழ் வழியில் என்ஜினியரிங் படித்த பலரும் ME – படிக்க இருக்கிறார்கள்” என்பதையும் அந்த நண்பர் தெரிவித்தார்.

மேற்கூறிய சம்பாஷணையை என்ஜினியரிங் மாணவர் மட்டுமல்ல, கலை, அறிவியியல், கணக்குப்பதிவு, அக்கவுண்ட்ஸ் என எந்தத் துறை மாணவருடன் உரையாடினாலும் உங்களுக்குக் கிடைக்கும். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருக்கலாம். கிளாசிக் மொழி என உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்ளலாம். என்றாலும் தற்போது வழக்கில் இருக்கும் மனிப்பிரவாக மொழி – ரீஜினல் லாங்குவேஜ். தமிழ் மட்டுமல்ல, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி போன்ற பல மொழிகளும் ரீஜினல் லாங்குவேஜ் தான். ஹிந்தி போன்று தேசிய மொழி அல்ல. என்றாலும் அவரவர் தாய்மொழியில் பயில்வது கற்பனைத் திறனையும், துறை சார்ந்த தெளிவாக சிந்திக்கும் கண்டுபிடிப்பாளர்களையும், அறிஞர்களையும் நமக்குக் கொடுக்கும்.

தாய்மொழி வழியில் பயிலும் மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் மொழியை பயிற்றுமொழியாகக் கொண்ட மாணவர்கள் - கல்லூரி இளநிலையை வரை பிரச்சனை இல்லாமல் படிப்பைத் தொடரலாம். முதுநிலை என்று வரும் பொழுது ஆங்கில வழியில் தான் படிக்கவேண்டி இருக்கிறது. ஆங்கிலத்தில் தான் தேர்வெழுதவேண்டி இருக்கிறது. இதன் காரணமாகவே பலரும் முதுநிளைக்குச் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் படிப்பில் சோபிக்க முடிவதில்லை. குறிப்பாக வாஸந்திதேவி சொல்வதுபோல அரசுப் பள்ளியில், தாய்மொழி வழியில் யாரெல்லாம் படிக்கிறார்கள் என்று பார்த்தால் தலித்துக்களும், விளிம்புநிலை மனிதர்களின் வாரிசுகளும் தான். ஆகவே இந்த சிக்கல் வர்க்கம சார்ந்த பிரிவினையை ஏற்படுத்துகிறது. அடித்தட்டு மக்கள் ஓரளவிற்கு மேல் கல்வியை மேற்க்கொண்டு தொடர முடியாத சிக்கல் எழுகிறது. கர்நாடகப் பல்கலைகளில் முதுநிலைப் படிப்பை அவர்களது தாய்மொழியில் எழுத முடியும். ஆகவே தான் முதுநிலைக்குச் செல்லும் அவர்களது மாணவ விழுக்காடு அதிகம் இருக்கிறது. (கன்னடக்காரர்களின் தாய்மொழி வழிக் கல்வித்தரம் குறித்த ஆய்வு அவசியம் தேவை. கல்வித் தரம் சரியில்லை எனில் அது சார்ந்த விழிப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது.)

தாய்மொழியில் பாடங்களைக் கறப்பது பலவகையிலும் நன்மை பயக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதே நேரத்தில் உலக வர்த்தகத்தில் வளரும் நாடாகிய இந்தியாவைப் போன்ற நாடுகள் வலிமையுடன் காலூன்ற உலகமொழிப் பரிட்சயம் மிக மிக அவசியம். ஆகவே உலகமொழியை இரண்டாம் பாடமாக சரியாகப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது. மாறாக வேலைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் ஆங்கில வழிக் கல்வி மேலும் மேலும் சிக்கலைத் தான் உண்டாக்கும். இந்தப் புரிதலுக்கான விவாதத்தை முன்னெடுக்கும் விதமாகத் தான் தமுஎகச-வின் இந்த மாநில அளவிலான சிறப்பு மாநாட்டை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து மதுரை, கோவை போன்ற இடங்களிலும் தொடர் மாநாடுகளை இவர்கள் நடத்த இருக்கிறார்கள். அந்தந்த நகரத்தில் வசிக்கும் கல்வி ஆர்வலர்கள் ஆதரவு கொடுத்தால் – இந்த மாநாடு மேலும் சிறப்படையும்.

3 comments:


  1. தாய்மொழியில் பாடங்களைக் கறப்பது பலவகையிலும் நன்மை பயக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதே நேரத்தில் உலக வர்த்தகத்தில் வளரும் நாடாகிய இந்தியாவைப் போன்ற நாடுகள் வலிமையுடன் காலூன்ற உலகமொழிப் பரிட்சயம் மிக மிக அவசியம். ஆகவே உலகமொழியை இரண்டாம் பாடமாக சரியாகப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி கிருஷ்.நல்ல பதிவு;நல்ல புரிதல்.வாழ்த்துகள்

    ReplyDelete
  3. மகிழ்ச்சி கிருஷ்;நல்ல பதிவு;நல்ல புரிதல்

    ReplyDelete