Saturday, September 14, 2013

நாங்களும் படிக்கணும் – ஆவணப்படம்

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” – இது வள்ளுவப் பெருந்தகையின் அட்டகாசமான குறள்களில் ஒன்று.

ஜேகே ஃபவுண்டேஷனின் “நாங்களும் படிக்கணும்” ஆவணப்பட அறிமுக விழாவிற்கு சகோதரி காமாட்சி அழைப்பு விடுத்திருந்தார். ஆவணப் படத்தில் பாட்டி வளர்க்கும் பிள்ளையாகத் தான் ரெனால்ட் ஒருசில நிமிடங்கள் திரையில் தோன்றினான். ஏதேனும் சுவாரஸ்யம் அவனிடம் இருக்க வேண்டுமென்று தோன்றியது. அதுவுமில்லாமல் ரெனால்டின் பக்கத்திலிருந்த இருக்கை காலியாக வேறு இருந்தது. ஆகவே பேச்சுக் கொடுக்கலாமென அங்கு சென்று அமர்ந்து கொண்டேன்.

அரசு பள்ளியில் படித்து, பத்தாவது பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக ரெனால்டை மேடைக்கு அழைத்தார்கள். அவன் சென்று பரிசைப் பெற்றுக்கொண்டான். சற்று நேரம் கழித்து மீண்டும் ரெனால்டை அழைத்தார்கள். கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றதற்காகப் பரிசு கொடுத்தார்கள். அதையும் பெற்றுக்கொண்டு இருக்கைக்குத் திரும்பினான். மென்மையாக பேச்சுக் கொடுத்தேன்.

“ஓ... மேத்ஸ் உனக்கு நல்லா வருமோ?”

“ஆமா... புடிச்ச சப்ஜெக்ட்...” என்றான் கூச்சத்துடன். சற்று நேரத்திற்கெல்லாம் மீடியா தோழர்கள் புகைப்படம் எடுப்பதற்காக ரெனால்ட்டை அழைத்தார்கள். கூச்சத்துடனே அவர்கள் பின்னால் சென்றான். திரும்பியதும் மீண்டும் சில கேள்விகளைக் கேட்டேன்.

“அந்த படத்துல... பாட்டிதான் உங்கள வளக்கறதா காமிக்கிறாங்க?” என்றேன்.

“ஆமா... பாட்டிக் கூடத்தான் இருக்கேன்.” என்றான்.

“அப்பா...?” என்றேன்.

“அப்பா இல்ல...” என்றான்.

“அம்மா...” என்றேன்.

“இங்க தான் (சென்னையில) வீட்டு வேலை செய்யறாங்க...” என்றான்.

“ஜேகே பவுண்டேஷன் வறதுக்கு முன்னாடி உங்க ஸ்கூல் எப்படி இருந்துச்சி? இப்போ எப்படி இருக்குது?”

“முன்னெல்லாம் டீச்சர்ஸ் ரொம்ப ஆர்வமா இருக்கமாட்டாங்க. இப்பல்லாம் கொஞ்சம் ரிவிஷன் டெஸ்ட் எல்லாம் வெக்கிறாங்க. அக்கறையா அன்பா சொல்லிக் கொடுக்கறாங்க. அதுனால நல்லா இருக்குது.” என்றான்.

“நீ படிச்சி என்னவா ஆகலாம்னு மனசுல வச்சிருக்க?” என்றேன்.

“M.B.B.S படிக்கலாம்னு...” என்றான்.

இந்தக் குறைவான கேள்விகளைக் கேட்டு, சுருக்கமான பதில்களை வாங்க ஏறக்குறைய அரை மணிநேரம் பிடித்தது. இதற்குள் நிகழ்ச்சியும் முடிந்து மதிய உணவிற்காக எல்லோரையும் அழைத்தார்கள். அக்காவின் மகன் அகிலும், நானும் முதல் ஆளாக தட்டுக்களை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்றோம். சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீமை கூட ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் ரெனால்ட் சாப்பிடுவதற்காக உள்ளே நுழைந்தான். தட்டினை எடுத்துக் கொண்ட அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கைகளைக் கழுவிக்கொண்டு, ஓரமாக இருந்த பிளாஸ்டிக் இருக்கையொன்றில் அமர்ந்திருந்தான். அவன் “சாப்பிட்டானோ? இல்லையோ?” என்ற சந்தேகம் எனக்கு. அருகில் சென்று அவனைப் பார்த்துச் சிரித்தேன். மேலும் “சாப்பிட்டியா?” என்றேன்.

“ஆ(ங்)... சாப்பிட்டேன்” என்றான் தலையை ஆட்டியவாறே சங்கோஜத்துடன்.

“உண்மையச் சொல்லு... பிளேட்ட எடுத்த அஞ்சி நிமிஷத்துல வயிறு நெறைய சாப்பிட முடியாதே ரெனால்ட்...!” என்று கண்களை உருட்டினேன்.

“இல்லைங்க’ண்ணா... இந்த மாதிரி சாப்புட்டு பழக்கமில்ல... இப்பிடி சாப்புட்றது என்னமோ மாதிரி இருக்குது...” என்றான்.

“சரி... நான் வேணும்னா கூட வரேன்... மூனுமணி நேரம் டிராவல் பண்ணி ஊருக்குப் போகணும் இல்லியா? வா... நீ வந்து சாப்புடு. நான் ஹெல்ப் பண்றேன்.” என்றேன்.

“இல்லன்னா... எனக்கு வேண்டாம்.” என்றான் தயக்கமாக. இதோட விழுப்புரம் போனால் தான் அவன் சாப்பிட முடியும். சொல்ற பேச்சையும் கேட்க மாட்டேன் என்கிறான். இவனை என்ன செய்ய? நேராக ஸ்வீட் கொடுப்பவரிடம் சென்றேன்.

“இங்க பாருங்க ரெண்டு ஸ்வீட் மட்டும்” எடுத்துக்கறேன் என்றேன்.

“ஓ... தாராளமா எடுத்துக்கோங்க சார்...” என்றார். அதனை எடுத்துக்கொண்டு வந்து ரெனால்டிடம் நீட்டினேன். தயக்கத்துடன் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்து முழுங்கினான். விழா முடிந்து தமயந்தி சித்தி, அகில், அனைன்யா – ஆகியோருக்குப் பிரியா விடைகொடுத்து அனுப்பிவிட்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். மியூசிக் அகாடமியின் அருகில் செல்லும் பாலத்தின் கீழ் அவன் நின்றுகொண்டிருப்பது போலப்பட்டது. அவனே தான்...! வாகனங்கள் விரைந்துசெல்லும் சாலையின் ஓரத்தில், வேகாத வெயிலில் நின்றுகொண்டு, செல்பேசியைக் காதில் வைத்திருந்தான் ரெனால்ட். முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

“மொதல்ல ப்ளாட் ஃபாரமுக்கு வா...” என்றதும் நடைபாதைக்கு நகர்ந்தான் காதோரம் வைத்திருந்த செல்பேசியை எடுக்காமல். “நீ என்ன தம்பி இங்க நிக்கிற? உன்னோட Team-அ மிஸ் பண்ணிட்டியா?” என்றேன் அக்கறையுடன்.

“இல்லன்னா... அம்மா இங்கதான வீட்டு வேலை செய்யறாங்க... இந்த எடத்துக்கு வரச் சொன்னாங்க. அதான் ஒரு அஞ்சி நிமிஷம் பார்த்துட்டு போலாம்னு நிக்கிறேன்.” என்றான். அதற்கு மேல் அங்கிருந்து தாயையும் மகனையும் சங்கடப்படுத்த வேண்டாமென்று “”Okie… Bye bye” என சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அந்தத் தாய் “வந்தாளா? இல்லையா?” என்பது கடவுளுக்கே வெளிச்சம். தாயைச் சந்தித்த மகிழ்ச்சியுடன் ரெனால்ட் ஊருக்குத் திரும்பினானா என்பதும் கடவுளுக்கு வெளிச்சம்.

ஓ... மை காட்...! ஒருத்தி இங்க ஓடா ஒழைச்சி காச சம்பாதிச்சி தன்னோட புள்ளைய படிக்க வெக்கிறா. பையனும் நல்லா படிக்கிறான். தோ... இன்னிக்கிக் கூட ரெண்டு பரிசை தட்டிட்டு வந்திருக்கான். அந்தப் பையனோட – லைம்லைட், மீடியாவின் பிளாஷ் வெளிச்சம், பாராட்டு, மரியாதை – இத்தியாதி இத்தியாதி எல்லாவற்றையும் பார்க்க வேண்டியவள் - ஓடாய் உழைக்கும் பெற்றவள் தானே. இதை எல்லாத்தையும் பார்த்திருந்தால் அந்தப் பெண் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பாள். தனது ரத்தமும் சதையுமான மகனை நினைத்து எவ்வளவு பெருமை பட்டிருப்பாள்.

தோ... பக்கத்தில் தான் அந்தத் தாய் இருந்திருக்கிறாள். அவளது மனம் குளிர ஒரு வாய்ப்பைக் கொடுக்கமால் போய்விட்டோமே...!

காமாட்சி சிஸ்டர் கிட்டயும், ஜெயகிருஷ்ணன் கிட்டயும் பர்சனலா ஓர் வேண்டுகோள்... இல்லை இல்லை அன்புக் கட்டளையே இட வேண்டும். அடுத்த வருடம் மாணவர்கள் பரிசளிப்பு விழா சென்னையில் நடப்பதாக இருந்தால், பரிசு பெரும் மாணவர்களின் பெற்றோர்கள் யாரெல்லாம் சென்னையில் வேலை செய்கிறார்களோ, அவர்களையெல்லாம் விழாவிற்கு வருகை தருமாறு JK Foundation சார்பில் அழைப்பு விடுக்க வேண்டும். பார்வையாளர்களின் கரவொலி, சிறப்பு விருந்தினர்களின் முகஸ்துதி பாராட்டுகளைவிட – பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனக்குளிர்ச்சியும், ஆசிர்வாதமும் JK Foundation குடும்பத்தாருக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும்.

வேறென்ன சொல்ல...

குறிப்பு:
பின்தங்கிய கிராமப்புறத்தைச் சேர்ந்த 10 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 10 நடுநிலைப் பள்ளிகளை ஜேகே அறக்கட்டளை தத்தெத்டுதிருகிறார்கள். மாதம் ஒன்றிற்கு சுமார் 10 லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளிகளின் அடிப்படை நிர்வாகப் பணிகள், மாணவர்களின் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தேவையான பட்டதாரி ஆசிரியர்கள், மாலை நேர உணவு போன்றவற்றை 20 பள்ளிகளுக்கும் ஏற்பாடு செய்துத் தருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இதனைச் செய்து வருகிறார்கள். இதர பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகள் சார்ந்த மேலும் சிலபல திட்டங்களையும் இவர்கள் வைத்திருகிறார்கள். கிராமப்புற அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த இவர்கள் செலவிடும் தொகையைக் கணக்கிட்டால் தரமானதொரு தனியார் பள்ளியையே துவங்கிவிடலாம். தொடர்ந்து கவனிப்போம் ஜேகே பவுண்டேஷனின் சிறப்பான சேவையை. 

No comments:

Post a Comment