Monday, February 18, 2013

லிட் ஃபார் லைப் 2013 - சென்னை

தமிழ் புத்தக வெளியீடுகளும், தமிழ் படைப்பிலக்கியம் சார்ந்து விருது வழங்கும் விழாக்களும் பெரும்பாலும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. விருது பெற்றதிற்கான சால்வை பரிமாறிக்கொள்ளும் பாராட்டு விழாக்கள் அதனினும் மோசமானவை. எனவே, ஒரு மாற்றம் வேண்டியும் – இதர மொழிகளில் இலக்கியத்தின் பொருட்டு ஏற்பாடாகும் விழாக்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும், ஹிந்து நாளிதழ் விளம்பரப் படுத்தியிருந்த லிட் ஃபார் லைப் 2013 (The Hindu – Lit For Life) விருது வழங்கும் நிகழ்வுடன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்துப் பரிமாற்ற அமர்விற்குச் சென்றிருந்தேன். 

முதல் நாள் மதியம் “Rhyme and Reason: The Power Of Poetry” தலைப்பில் ‘ஜீத் தாயில், அர்விந்த் கிருஷ்ணா மேஹ்ரோத்ரா மற்றும் மீனா கந்தசாமி’ ஆகியோர் தேர்ந்தெடுத்த சில கவிதைகளை வாசித்து, பின்னர் ஆங்கிலக் கவிதை சார்ந்து உரையாடினார்கள். அதன் பின்னர் வாசகர்கள் கேள்வி கேட்டு, அதற்கு மேடையில் வீற்றிருந்த ஆளுமைகள் பதில் சொல்லும் தருணம் வந்தது. பிராந்திய மொழி வாசகர்களுக்கு சற்றேனும் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்பது போன்ற சலிப்பான கேள்விகள் தான் அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு சில கேள்விகள் மட்டுமே விதிவிலக்கு. ஆறேழு கேள்விகளுக்கு மேல் நேரம் இல்லை.

அதிலும் “ஆண்களிடம் உங்களுக்குப் பிடித்த இரண்டு நல்ல விஷயங்கள் இருந்தால் சொல்லுங்கள்!”, “ஏன் எழுதறோம்னு என்னைக்காவது நெனச்சதுண்டா?”, போன்ற மூன்றாம் தர கேள்விகள் தான் பெரும்பாலும் எழுந்தன. அதில் ஒருவர் “உங்களுடைய மொழிபெயர்ப்பு நூல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், மூலப் படைப்பை கொஞ்சம் கூட பிசகாமல் அப்படியே மொழிபெயர்தோம் என்ற திருப்தி இருக்கிறதா?” என மொழிபெயர்ப்பாளர் அரவிந்திடம் கேட்டார். 

“சாத்தியமே இல்ல. அதெப்படி முடியும். மொழிபெயர்ப்பை விடுங்கள். சொந்தமாக எழுதும் விஷயங்களிலேயே அந்த திருப்தி இருக்காது.” என்றார். அதற்குள் நேரம் ஓடி மணியடித்ததால் நிகழ்வு முடிவுக்கு வந்தது. நமக்குத் தெரிந்த தமிழ் பிளாகர், பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர் யாரேனும் கண்களில் தென்படுகிறார்களா என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். ஒருவரையும் காணவில்லை. ஆகவே நாளைய தினத்தில் மீதியைப் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டேன்.

இரண்டாம் நாளில் இரண்டு விஷயங்கள் சுவாரஸ்யமான அமர்வாக எனக்குப் பட்டது. “The Art Of The Tale: Story Tellers at Work” – இந்தத் தலைப்பில் “டிமேரி N. முராரி, மிருதுளா கௌஷி & அனோஷ் ஈரானி” ஆகியோர் உரையாடினார்கள். கதை சொல்லல், கதை கேட்டல் சார்ந்து படைப்பாளிகள் தத்தமது வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதன் சாயல் தன்மை படைப்பில் ஊடுருவுவது பற்றியும் பேசினார்கள்.

அடுத்ததாக “In Brief: The Power Of Short Fiction” இதில் “அசோக் பெர்ரி(ஸ்ரீலங்கா) & பென்யமின் (மலையாளம்)” ஆகியோர் மிருதுளா கௌஷியுடன் உரையாடினார்கள். பென்யமின் “ஆடு ஜீவிதம்” என்ற நாவலுக்காக ‘அபு துபாய் சக்தி விருது, கேரள சாகித்ய அகாடமி விருது’ போன்ற குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்திய பல்கலைக் கழகங்களில் இவருடைய படைப்புகள் பாடப் பகுதிகளாக வைக்கப் பட்டுள்ளன. பத்து இளம் படைப்பாளிகளில் ஒருவராக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இவரை 2011-ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. இந்த அமரவும், உரையாடலும் நன்றாகவே இருந்தது. அமர்வின் முடிவில் பென்யமினின் “ஆடு ஜீவிதம்” புத்தகம் வித்யாசமான வாசக அனுபவத்தைக் கொடுக்கிறது என மிருதுளா கௌஷி பரிந்துரை செய்தார். உயிர்மை பதிப்பகத்தால் இந்தப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 

தி ஹிந்து லிட் ஃபார் லைப் 2012-ஆம் ஆண்டிற்கான விருது “Em and the Big Hoom” என்ற நாவலுக்காக எழுத்தாளர் ஜெர்ரி பிண்டோ என்பவருக்கு அறிவித்திருக்கிறார்கள். அவருக்கு வாழ்த்துக்கள். 

முக்கால் மணி நேரத்தில் பொடலங்காயைப் பற்றிக் கூட பெருசாக எதையும் பேசிவிட முடியாது. அப்படியிருக்கையில் கவிதை, சிறுகதை, நாவல் போன்ற விஷயங்கள் எம்மாத்திரம். இலக்கியத்திற்காக ஆண்டுதோறும் தி ஹிந்து விழா எடுக்கிறார்கள். ஆகவே ஒவ்வொரு அமர்வையும் சம்ராதாயமாக, சடங்காக முடக்கி விடாமல், மேலதிகமான நேரத்தை ஒதுக்கி நிகழ்வினை இன்னும் சிறப்பிக்கலாம் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment