Tuesday, July 17, 2012

தமிழ் ஸ்டுடியோ – அறச்சீற்றம்

கொதிக்கும் உலையை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?

தமிழ் ஸ்டுடியோ அருண் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர். அருமையானவரும் கூட. அவரின் உற்ற நண்பர்களான குணா மற்றும் தயாளனையும் நன்கறிவேன். ஆழமான நட்பு இல்லையென்றாலும், எங்காவது சந்தித்தால் நலம் விசாரித்துக் கொள்ளும் அளவிற்கு பழக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அருணும் குணாவும் தனியாளாக போராடிக் கொண்டிருந்த நாட்களிலிருந்தே தெரியும். ஆரம்பத்தில் அவர்களுடைய கவனம் முழுவதும் குறும்படங்களின் மீதுதான் இருந்தது. பின் ‘படிமை’ என்ற குறும்பட பயிற்சிப் பட்டறையைத் துவங்கினார்கள். அதில் சேர்ந்து பயின்ற சில தம்பிகள் கூட எனக்குப் பரிட்சயம் உண்டு. இன்னும் சொல்லப் போனால், தமிழீழம் சார்ந்த குறும்படமான “18 தீக்குச்சியை” மருமகன் முத்து தயாரிக்க முன்வந்த போது படிமையின் பயிற்சி மாணவரான ‘செந்தூரனை’த் தான் ஈழத் தமிழ் உட்சரிப்பு சரிபார்பிற்காக நாடினேன்.

பிறகு “கதை சொல்லி, கொஞ்சம் தேநீர் கொஞ்சம் அரட்டை, ஊர் சுற்றலாம் வாங்க” என அவர்களுடைய முயற்சி பல துறைகள் சார்ந்தும் விரிந்து சென்றது. கேணி சந்திப்பின் ஒலி நாடாக்களை அவர்களுக்குக் கொடுத்து தமிழ் ஸ்டுடியோ இணையப் பக்கத்தில் கூட போடச் சொல்லி இருக்கிறேன். அவருடைய சீரிய பங்களிப்பு ஒருபுறம் இருக்கட்டும். நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறதுதானே? பூவும் தலையும் சுண்டிவிட்டால் தானே தெரியும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அருண் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார். அணு உலைக்கு எதிராக எழுத்தாளர்கள் முழு மூச்சில் செயல்படவில்லை என்று. அவர்கள் தெருவில் இறங்கி போராட முன்வர வேண்டும் என்றும் சொல்லாமல் சொல்லியிருந்தார். அவர்களுக்கு பொறுப்பில்லை என்ற தொனியிலும் சொல்லியிருந்தார். அதற்கு பின்வருமாறு நான் மறுமொழி கூறியிருந்தேன்.

“இதோ பாருங்கள் அருண். தெரியாமல் பேசக் கூடாது. சாகித்யமி அகாடமி விருது வாங்கியவர்கள் உட்பட முக்கியமான எழுத்தாளர்கள் உட்பட 25 எழுத்தாளர்கள் முதலமைச்சரை காண வேண்டி நேரம் கேட்டிருக்கிறார்கள். இன்று வரை அவர்களைக் காண முதல்வர் நேரம் கொடுக்கவில்லை. எல்லோரும் கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்” என்றும் சொல்லியிருந்தேன். (ஞாநியும் பாஸ்கர் சக்தியும் அவர்களில் அடங்குவர்.) அதுவுமில்லாமல் அணு உலை அபாயம் பற்றி கவிஞர்களும் எழுத்தாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே என்றும் சொல்லியிருந்தேன்.

இதுபோன்ற அடுத்தடுத்த பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் ஸ்டேடசையே டெலிட் செய்துவிட்டார். சரி போகட்டும் அவருடைய அணுகல் முறை அப்படி என்று விட்டுவிட்டேன்.

அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சி பற்றி எதோ பகிர்ந்திருந்தார். அதற்கு அவருடைய பின்தொடர்தலில் இருக்கும் வளர்ந்துவரும் சினிமாக் கலைஞர்கள் வறுத்தெடுத்து விட்டார்கள். எதோ நானும் என்னுடைய குறை அறிவிற்கு எட்டிய சில கேள்விகளை எழுப்பி இருந்தேன். அதற்கு அவருடைய பதில் “உங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை” என்பதாகத் தான் இருந்தது.

அடுத்து அ. முத்துலிங்கத்தின் பவித்ரா சிறுகதையை மருமகன் முத்து தயாரித்து, விக்னேஷ்வரன் விஜயன் ‘சித்ரா’ என்ற குறும்படமாக எடுத்திருந்தான். அதற்கு தமிழக அளவில் இரண்டு விருதுகள் கிடைத்தது. அதில் தமுஎகச அளித்த முதல் பரிசு குறிப்பிடத்தக்கது. இந்த குரும்படத்தைப் பற்றி திரு. அருண் அவர்கள் ஒரு ஸ்டேடஸ் பகிர்ந்திருந்தார்.

/-- நிறைய நல்ல குறும்படங்களை இந்த ஆண்டு பார்த்தேன். ஆனால் நெய்வேலி புத்தக காட்சியில் பரிசு பெற்ற படங்களை விட அவை நல்ல படங்கள். தவிர சித்ரா அ. முத்துலிங்கம் அவர்களின் கதை என்பதை விட படம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல என்னால் முடியவில்லை. இப்படி ஒரு படம் எடுக்கிறோம் என்று முத்துலிங்கம் அவர்களிடம் அனுமதியோ, அல்லது எடுத்த பிறகோ அவருக்கு தெரிவிக்கவோ இல்லை என்று வேறு கேள்விப் பட்டேன்.

திருடி எடுக்கப்படும் படங்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம். --/

அதற்கு பின்வருமாறு நான் பதில் சொல்லியிருந்தேன்.
/-- இப்படி ஒரு படம் எடுக்கிறோம் என்று முத்துலிங்கம் அவர்களிடம் அனுமதியோ, அல்லது எடுத்த பிறகோ அவருக்கு தெரிவிக்கவோ இல்லை என்று வேறு கேள்விப் பட்டேன்.--/

அ முத்துலிங்கமே கனடா திரைப்பட விழாவிற்கு இதன் ஒரு பிரதியை அனுப்பி வைக்குமாறு கேட்டிருப்பதாக அதன் இயக்குனர் நீண்ட நாட்களுக்கு முன்பு தெரியப்படுத்தி இருந்தார்.

/-- திருடி எடுக்கப்படும் படங்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்.--/

முழு விஷயம் தெரியாமல் பேசக்கூடாது தோழர்களே. அந்தக் கதையை பாலு மகேந்திரா எடுப்பதற்காக உரிமம் பெற்றிருந்தார். அது சார்ந்து பாலு மகேந்திராவுடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை,

இலக்கியத்தை நாடி காட்சிப் படுத்துபவர்கள் மிகக் குறைவு. அவர்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள். என்றும் சொல்லியிருந்தேன். அதனுடன் அ முத்துலிங்கம் விக்னேஸ்வரனை பாராட்டி எழுதியிருந்த சுட்டியையும் கொடுத்திருந்தேன்: http://amuttu.net/viewArticle/getArticle/276

அதோடு அருண் வேறொரு ஸ்டேடஸ்-க்கு பார்த்து பறந்துவிட்டார். சமீபத்தில் ‘பருத்திவீரன்’ படம் பற்றி அடூர் கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பதாக ஏதோ ஒன்றை பகிர்ந்திருந்தார். பகிர்வின் முடிவில் “ஏதும் தெரியாமலே தையா தக்கா” என்று குதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருந்தார். கவிஞர் மகுடேஸ்வரன் உட்பட இன்னும் சிலர் அதைப் பற்றிய மாற்றுக் கருத்தை முன் வைத்திருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். மற்றவர்களைவிட என்னுடைய கருத்து அருணை கலக்கப்படுத்தி இருக்க வேண்டும். மேற்கூறிய விஷயங்களைத் தான் பகிர்ந்திருந்தேன் வேறொன்றும் இல்லை.

முடிவில் இப்படிச் சொல்லியிருந்தேன், “நீங்கள் ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை அருண். கூட்டம் சேர்ந்துவிட்டது. அகவே உங்களை விளம்பரப் படுத்திக் கொள்கிறீர்களோ என்ற சந்தேகப் பார்வை வலுக்கிறது. மேலும் உங்களுடைய அரைவேக்காட்டுத் தனமான பகிர்தல்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்ற பொருள் வரும்படி எதோ சொல்லியிருந்தேன். ரிஷி மூலத்திலிருந்து சில விஷயங்களை சொல்லி இருந்ததால் என்னுடைய பின்னூட்டங்களை அழித்ததுடன், என்னையும் நட்பு வட்டத்திலிருந்து பிளாக் செய்துவிட்டார். அதுகூட என்னுடைய தம்பி மணி பார்த்து சொல்லியதும் தான் தெரிய வந்தது.

மேலும் அருண் அவருடைய ஸ்டேடசில் இப்படிப் பகிர்ந்திருக்கிறாம், “அருண் மற்றும் தமிழ் ஸ்டுடியோ பற்றி எதுவும் தெரியாமல், காழ்ப்புடன் கருத்து தெரிவித்திருந்தமையால் என்னை நண்பர் வட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாக கவிஞர் மகுடேஸ்வரனுக்கு” பதில் சொல்லி இருக்கிறார் போல. நான் என்னத்தைக் கண்டேன். திருநள்ளாறில் தொலைத்ததை மீண்டும் சென்று யாரும் சீண்டுவார்களா என்ன? விட்டது எல்லாம்....

நேர்மையாக விமர்சனத்தை அணுகவேண்டும் என்று ஸ்டேடசுக்கு ஸ்டேடஸ் புரட்சி பேசும் அருண், என்னை நட்பு வட்டத்தில் வைத்துக் கொண்டே பேசி இருக்கலாமே. எது எப்படியோ?! எனக்கு நிம்மதிதான்.

என்றாலும் “புரியவில்லை என்ற ஃபேஸ் நண்பர்களுக்காக” மேலும் ஒரு விஷயத்தை பகிர விழைகிறேன். ‘வழக்கு எண் 18/9’ – பற்றி கறாரான விமர்சனத்தை அருண் முன் வைத்திருக்கிறார். அருண் ‘என்ன பேசினார்? ஏது பேசினார்?’ என்று எனக்குத் தெரியாது. எரிச்சலுற்ற இயக்குனர் வசந்தபாலன் அருணை நட்பு வட்டத்திலிருந்து நீக்கி இருக்கிறார். உடனே அருண் கொண்ட அறத்சீற்றம் இருக்கிறதே. அது சிங்கத்தின் கர்ஜனை!

வசந்தபாலன் நேர்மையாக விமர்சனத்தை அணுகாமல் தன்னை ஒதுக்கிவிட்டார். என்று புலம்பித் தள்ளியிருந்தார். நான் கூட அதனை ஷேர் செய்திருந்தேன். அதுவும் பின்வருமாறு எழுதி...

“மனிதன் ஓரமாகச் சென்று ஒதுக்கி வைப்பவை மட்டுமல்ல மலம். மனிதனை ஒதுக்கி வைத்தால் அவனும் மலமே” – என்று சொல்லியது ,மட்டுமல்லாமல், வசந்தபாலனுக்கு என்னுடைய கண்டனங்களையும் தெரியப் படுத்தி இருந்தேன். இன்று ‘என்னை’ - அருண் ஒதுக்கி வைத்திருக்கிறார். இதைப் பற்றிதான் “வசந்தபாலன் உடைத்தால் பொன் சட்டி!”, “அருண் உடைத்தால் மண் சட்டியா?” என்று கேட்டிருந்தேன். வேறொன்றும் இல்லை தோழர்களே. இப்பொழுது புரிந்ததா?

குறிப்பு: ஃபேஸ் குடுமிப்பிடி விமர்சன கலாட்டாவில் குழப்பம் அடைந்த நண்பர்களுகு சமர்ப்பணம்.

1 comment: