Wednesday, July 11, 2012

பொய்யாய் செதுக்கிய நாட்குறிப்பு - 01

அன்றொருநாள் பெருஞ்சாரலுடன் நல்ல காற்று. கொடுத்து வைத்தவன் போல், வீட்டின் முற்றத்தில் இருந்த பிரம்புக் கூடையில் ஆடிக் கொண்டிருந்தேன். மேகத்தின் உரசல் மின்னலென வெட்ட, இடியானது மழையுடன் சல்லாபிக்கிறது. அறிமுகமான நண்பர் செல்பேசியில் அழைத்தார். அந்த துக்கச் செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பேசியவர்...

"கிருஷ்ணா, நம்ம ஃஷார்ட் பில்முல ஒரு சாங்கு இருக்கு. டியூன் கூட ரெடி. பாடல் வரிகளை நீங்க தான் எழுதுறீங்க" என்றார்.

எனக்கு ஷாக் அடித்தது போல இருந்தது. வம்சத்தின் நலம் கருதி, தேவவிரதன் பிரம்மச்சரிய விரதம் பூண்டு பீஷ்மர் ஆனது போல, உலகை உய்விக்க வாழ்நாளில் ஒருக்காலும் கவிஞன் ஆவதில்லை என நானும் சபதம் எடுத்திருப்பதை நண்பருக்கு விளக்கமாகக் கூறினேன். அவரோ புரிந்து கொண்டபாடில்லை. கொட்டித் தீர்க்கும் மழையை ரசிக்க விடாமல் அவரும் ஒற்றைக் கால் கொக்குபோல தன்னுடைய நிலையில் உறுதியாக நிற்கிறார். தூக்கம் வருவதாக பொய்சொல்லி, தொடர்பை துண்டித்துக்கொண்டு மழையை ரசிக்கத் தொடங்கினேன்.

நீண்ட நாள் கழித்து அதே நண்பர், "குறும்படம் முடிந்து விட்டதாகவும், அவசியம் திரையிடலுக்கு வரவேண்டும்" எனவும் செல்பேசியில் அழைப்பு விடுத்தார். ஏ. வி. எம் ஸ்டுடியோவில் நடந்த திரையிடலுக்கு திரளான இளசுகள் வந்திருந்தனர். "இவன நம்பி இவ்ளோ பேர் எந்த தைரியத்தில் வந்திருக்காங்க" என்று நினைத்துக் கொண்டேன். அருகில் சென்று "சீப் கஸ்ட்" யாரென்று கேட்டேன். கொலையான வெறியுடன் மெட்டமைத்த இசை வல்லுநர் என்றார்கள். ஆமாம்... இங்ஙனக்குல்லையே கேட்டுக்குறா மாதிரி மியூசிக் நோட்ஸ் எழுதுபவர்கள் வெறும் இசை அமைப்பாளர்கள். அங்கிங்கெனாதபடி அகிலமெல்லாம் கேக்குறா மாதிரி மியூசிக் அடிச்சா ((காப்பி)) அவங்க பரிசுத்தமான இசை வல்லுநர்கள் என்பது நம்மோர் கணக்கு.

"வல்லுனரும்...இதோ வருவார், அதோ வருவார்" என்று காத்துக் கிடந்தார்கள். பூப்பெய்தியவள் பிள்ளைபெற்று, பேரப் பிள்ளையும் கண்டு, பிடிச்சாம்பலாய் மாறவேண்டி காடுகூட செல்லும் நிலை வரலாம், அந்த செலப்ரிட்டி தான் வந்தபாடில்லை. நண்பருக்கு முதல் அனுபவம் என்பதால் பதட்டத்துடன் இருந்தார். மெல்ல நெருங்கி யோசனை சொன்னேன். "நீங்கள் ஏன் திரையிடலை ஆரம்பிக்கக் கூடாது?. இவ்வளவுபேர் எதற்காக காத்திருக்க வேண்டும்? இது அநியாயம் இல்லையா?"

"செலேப்ரிட்டி கோச்சிப்பாரே கிருஷ்ணா" என்றார்.

"கோவம் வந்தா கோழிப் பீயில கொண்டு கையை வைக்கச் சொல். மேலதிகமாக உன்னுடைய நடுவிரலை மட்டும் அவருடைய முகத்திற்கு நேராகக் காண்பி" என்றேன்.

"பாட்டெழுத மாட்டேன்னு சொன்னிங்களே, அன்னைக்கே காட்டியிருக்க வேண்டும். இதோ இப்போ காட்டறேன் பாத்துக்கோங்க" என்று முகத்திற்கு நேராக விரலைக் காண்பித்தார். பதிலேதும் சொல்லாமல் இருட்டறையில் சென்று அமர்ந்துகொண்டேன். அழுதிருந்தால் கூட யாருக்குத் தெரியப்போகிறது. ஆறுதல் சொல்ல விஸ்காம் மாணவர் தினேஷ் ஆதி மட்டுமே அருகில் இருந்தார். ஆரம்பத்தில் பாடல் ஒளிபரப்பானது. வரிகள் கூட கேட்கும் படியாகத் தான் இருந்தது. அதைத் தொடர்ந்து திரையிடல் முடிந்து வெளியில் வந்ததும் தான் விசாரிக்கத் தோன்றியது. அந்தப் பாடலை எழுதியது யாரென்று?. படத்தின் இயக்குனரே பாடல் வரிகளை எழுதியதாகச் சொன்னார்கள். மிக மோசமான படமாக்களுக்கும், சுமாரான வரிகளுக்கும், கேட்கும்படியான இசைக்கும் மௌனத்தால் வாழ்த்து சொல்லி விடைபெற்று வீடு திரும்பினேன்.

சமீபத்தில் அந்த நண்பர் மீண்டும் அழைத்தார். "கிருஷ்ணா, ஒரு டெலிபிலிம் எடுக்கப்போறேன். ஒரு டீம் ஃபார்ம் பண்ணி தீயா ஒழட்சிட்டு இருக்கோம். நீங்க ப்ரொடக்ஷன் மேனேஜரா ரோல் எடுத்துக்க முடியுமா? இட்ஸ் எ மேட்டர் ஆஃப் மணி. தட்ஸ் வொய்?" என்றார்.

இங்குதான் தோழரின் புத்திக் கூர்மையை ஆலிங்கனம் செய்ய வேண்டும். திருடன் என ஊருக்குத் தெரிந்தவன் தானே காவலுக்கு உகந்தவன். என்றாலும் சுதாரித்துக் கொண்டு அறிவுரை வழங்கினேன். "வெக்கிறதுக்கு எடமில்லன்னு மசால் வடைய கொண்டுட்டு போயி எலிப் பொந்துல வக்கலாமா? நானோ ஐ.டியில் வேலை செய்தவன். அதுவுமில்லாம கற்பூரம் கணக்கா கையில இருக்குற காசயெல்லாம் காத்துல கரக்கிறவன் நானு. இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்க வேற ஆளப் பாருங்க" என்றேன். நம்ம சர்க்கிள்ல இருக்க பூரா பயலுங்களும் திருடந்தான்னு இந்தாளு மோப்பம் புடிச்சிருப்பான் போல."உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரையாவது ரெகமன்ட் பண்ணுங்க" என்றார்.

மண்டையில அடப்பெடுத்து யோசிச்சி பாத்ததுல உதவி இயக்குனர் யோகிதான் நினைவிற்கு வந்தான். தம்பியான தம்பியை அழைத்துக் கொண்டு தோழரிடம் சென்றேன். "இவ்வளோதான் பட்ஜெட், இதுதான் ஸ்டோரி" என ஒன்லைன் சொல்லியவரைப் பார்த்து யோகி சிரித்தான். தோழருக்குத் தெரியாதவாறு அவனைச் சீண்டி, "சிரிக்காதே... தப்பா நெனட்சிக்கப் போறாரு" என்று சமிஞ்ஞை செய்தேன். யுத்தக் களத்தில் நிற்பதுபோல் எதிரில் இருப்பதால் அவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?. சுதாரித்துக் கொண்டு யோகியைப் பார்த்து "ஏன்டா சிரிக்கிற? அவரென்ன பைத்தியக்காரனா? இல்ல அம்மணமா நிக்கிறானா? ஜாக்கரத ஆமான்னு..." நொங்கு நொங்கென பனை போல் வளர்ந்தவனின் தலையை எட்டி எட்டிக் கொட்டினேன்.

"நோவ்... சும்மா இருங்கண்ணா? இதே கதையதான் எங்க சாரு படமா எடுக்கப் போறாரு. ஸ்கிரிப்ட் வொர்க் போயிட்டு இருக்கு. பின்னே இவரு கூட எப்படி-ணா இருக்கது. அதெல்லாம் தப்பா போயிடும். நீங்க வேற ஆளப் பார்த்துக்கோங்க" என தேனீர் பருகிக் கொண்டிருந்த கண்ணாடித் தம்ளரை டங்கென வைத்துவிட்டு புறமுதுகைக் காட்டியவாறு நடந்து சென்றான். தோழரைக் கூப்பிட்டுக் காண்பித்தேன். "அவன் எதக் காமிட்சிக்குனு நடந்து போறான் பாத்தியா?".

"உலகத்துல எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் நமக்கு முன்னாடி நடந்து போனால், அவனோட முதுகுதான் தெரியும் கிருஷ்ணா" என்றார்.

"முதுகுக்குக் கீழதான் புட்டம் இருக்கு. அவன் நமக்கு சூத்த காம்சிட்டு போறான்டா நேந்து வுட்டப் பாவி. இந்த மானபங்கம் எனக்குத் தேவையா?" என்றேன்.

"இதெல்லாம் ஒண்ணுமே இல்ல கிருஷ்ணா. இன்னும் நம்ம எவ்வளவோ பாக்க வேண்டியிருக்கு" என்றார் உருக்கமாக.

"எனக்கெதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு. இந்த நம்ம நம்ம-ன்ற சமாச்சாரத்த எல்லாம் இன்னியோட நிறுத்திக்கோ" என கோவத்தில் முஷ்டியை மடக்கி தோழருக்கு நடுவிரலைக் காண்பித்து நடக்கத் துவங்கினேன், நீட்டிய விரலால் செல்பேசியை எடுத்து சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு.

2 comments:

  1. ஆமாம்... இதுகூடத் தெரியாதா?

    இல்லாததையும் பொல்லாததையும் எழுதினால் அப்படித்தான் பெயர் வைக்க வேண்டும்.

    எனக்கு எந்த சினிமா நண்பரையும் தெரியாதே? அதனால் தான்... :-D

    :-)))

    ReplyDelete