Tuesday, February 2, 2010

வம்சி - புத்தக வெளியீடு

ஞானியுடன் சேர்ந்து கேணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இலக்கிய ஆளுமைகளுடன் உரையாட வழி வகுத்தவர் என்ற முறையில் பாஸ்கர் சக்தியின் மேல் எனக்கு தனி ஈடுபாடு உண்டு. அவருடைய புத்தக வெளியீடு 'Book Point, Chennai'-ல் நடக்கவிருக்கும் தகவல் அறிந்து சந்தோஷப்பட்டேன். புத்தக வெளியீட்டிற்கு முந்தின தினம் இடம் மாற்றப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தீபிகா சென்டரில் இனிதே நடந்து முடிந்தது.

கேணி சந்திப்புக்கு முதன் முறையாக செல்லும் வரை பாஸ்கர் சக்தி எழுத்தாளர் என்பதே எனக்குத் தெரியாது. அதன் பிறகுதான் அவருடைய தொகுப்புகளை தேடித்தேடி வாங்கினேன்.

பழுப்பு நிற புகைப்படம் புத்தகத்தின் முன்னுரையில் வரும் சக்தியின் வார்த்தைகள்:

"...எல்லாவற்றையும் வடிகட்டி நகர்கிறது காலம். உரித்துப் போட்ட பாம்புச் சாட்டைகளாய் முன்னே எனது கதைகள்..." - எதோ ஒரு விஷயத்தை உணர்த்திவிட்டு காலம் சுவடில்லாமல் நகரும் பொழுது, சம்பவங்களைக் கோர்வையாக்கி சுவாரஸ்யமான கதைகளாக பாஸ்கர் நமக்குத் தருகிறார்.

'அழகர்சாமியின் குதிரை (வம்சி பதிப்பகம்), பழுப்பு நிற புகைப்படம் (தமிழினி பதிப்பகம்)' ஆகிய இரண்டு தொகுதிகளும் என்வசம் இருக்கின்றன. ஒன்றையும் முழுமையாகப் படித்ததில்லை. இந்தத் தொகுதிகள் தற்பொழுது கிடைக்கிறதா என்றும் தெரியவில்லை. இரண்டு விடுபட்ட சமீபத்திய படைப்புகளையும் கனக துர்காவில் சேர்த்து

விழா துவங்குவதற்கு முன்பே தீபிகா சென்டருக்கு சென்றுவிட்டேன். போகும் வழியில் கேணி நண்பர்கள் பிரபுவும், லிவிங் சன்னும் இணைந்து கொண்டார்கள். செல்லத்துரை, பாஸ்கர் ஷக்தி, க சீ சிவக்குமார்... இன்னும் பலரும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருந்தார்கள்.

கே.வி.ஷைலஜாவின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. திருவண்ணாமலைக்கு வெளியே நடக்கும் வம்சியின் முதல் நிகழ்ச்சி என்பதாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டதையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

பத்திரிகையாளர் ஞாநி, கவிஞர் யுகபாரதி, இயக்குனர் மகேந்திரன் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் முதல் அமர்வில் பாஸ்கர் சக்தியின் கனகதுர்காவை வெளியிட்டு பேசினார்கள்.

இயக்குனர் சிம்பு தேவன்:

பத்திரிகைத் துறையில் வேலை செய்த நாட்களிலிருந்தே பாஸ்கர் சக்தியை எனக்குத் தெரியும். அவருடைய கதைகள் பலவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். பழுப்பு நிறப் புகைப்படம், தக்ளி, கனக துர்கா இன்னும் சில கதைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். அவருடைய எழுத்தில் இருக்கும் நகைச்சுவை பிரதானமான ஒன்று. அவருடைய பாத்திரப் படைப்புகள் எல்லாம் சுவாரஸ்யம் நிறைந்தவை. ஒரு கார்டூனிஸ்டாக பார்க்கும் பொழுது அதில் நிறைய விஷயங்கள் இருக்கும். கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கவனித்து செய்திருப்பார். என்னைப் பொறுத்தவரை பாஸ்கர் சக்தி கார்டூனிஸ்டாக வந்திருந்தால், அவருடைய நுட்பமான கவனிப்புக்கு மிகப் பெரிய உட்சத்தைத் தொட்டிருப்பார். அவருடைய கதை ஒன்றை திரைப்படமாக எடுக்கும் ஆசை இருக்கிறது என்று பேசிமுடித்தார்.

கவிஞர் யுகபாரதி:

எனக்கு நடை போகும் பழக்கம் இருக்கிறது. அப்படி ஒருநாள் சென்றுகொண்டிருந்த பொழுது ஒருவர் என்னைப் பார்த்து சிரித்தார். "என்னைப் பார்த்து யார் சிரிக்கப் போகிறார்கள்?" என்று பின்னால் திரும்பிப் பார்த்தேன். எனக்கு பின்னால் யாரும் இல்லை. அவர் என்னைப் பார்த்து தினமும் சிரித்துக் கொண்டே இருந்தார். இப்படியே நடந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அவரைப் பார்க்க முடியாமல் போனது. ஒருநாள் ஆனந்த விகடனில் ஒரு கதை பிரசுரமாகியிருந்தது. அடடே... நல்ல கதையாக இருக்கிறதே என்று விகடனில் பணிபுரியும் நண்பருக்கு தொலை பேசியிருந்தேன்.

நமக்குத் தெரிஞ்சவருதான். நல்லா எழுதுவாரு அவரோட நம்பர் கொடுக்கட்டுமான்னு கேட்டாரு.
சரின்னு வாங்கி உங்களுடைய கதை நன்றாக இருக்கிறதென்று....பேசிக்கொண்டிருந்தேன். பிறகு அவரைப் பற்றி விசாரித்தேன்.

"உங்களை எனக்குத் தெரியும், தினந்தோறும் பார்த்து சிரிப்பேனே" என்றார்.

அது வேறு யாருமில்லை பாஸ்கர் சக்திதான்.
இப்படி ஆரம்பித்ததுதான் எங்களுடைய நட்பு என்று அவருடைய சிறுகதைகளைப் பற்றி பேசினார்.

பவா புத்தக வெளியீடு என்று அழைத்ததும் நான் ஒரு கேள்வி கேட்டேன். பவா நீங்கள் மாத இதழைத் தொடங்க வேண்டி இருக்குமே என்று. இப்பொழுதெல்லாம் ஒரு பதிப்பகத்தின் மாத இதழில் அடுத்த பதிப்பகத்தின் புத்தகத்தை, நல்ல புத்தகமாகவே இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்வது தானே கலாச்சாரம் என்று நகைச்சுவைகாச் சொன்னார்.

சுப்ரமணிய ராஜு சிறுகதைகள் மீது
எனக்கு விருப்பம் அதிகம். அதன் பிறகு என்னைக் கவர்ந்தது பாஸ்கர் சக்தி தான்... இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு அவரது உரையை முடித்தார்.

பத்திரிகையாளர் ஞாநி:

ஞாநி பேச வந்ததும் நீண்ட மைக்கை சிலம்பம் போல கையில் எடுத்துக் கொண்டார். பாஸ்கர் சக்தியின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போடப் போறாருன்னு நெனைச்சேன். மக்கள் இந்தப் பக்கம் இருக்கும் போது, மைக் பொசிஷன் அதற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என்று சரி செய்தார்.

எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் இது என்னுடைய வேலை இல்லை என்று புறக்கணிக்கிறோம். எல்லாவற்றையும் தனித் தனியாகப் பிரித்து Specialist Specialist என்கிறோம். holistic View - யாருக்குமே இல்லை. இந்த இடத்தில் மட்டுமில்லை இந்தக் குறை. எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. இந்த அபாயகரமான சூழ்நிலை மாற வேண்டும் என்று எல்லா மேடைகளிலும் நான் வற்புறுத்துகிறேன்.

இளைஞர்கள்
சமுதாயத்தின் மீதும் பார்வையை செலுத்த வேண்டும். பாஸ்கர் சக்தியின் எழுத்து எதோ ஒரு வகையில் சமூகத்தின் குரலை அங்கதமாகக் கொண்டுள்ளன என்பதில் எனக்கு சந்தோஷமே. பத்து வருடங்களாக பாஸ்கர் சக்தி எனக்கு பழக்கம். இன்று குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத் தான் என்னால் கருத முடிகிறது. "உன்னைப் பார்க்கும் பொழுது சிறுவயதில் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது" என்று பாஸ்கரிடம் சொல்லி இருக்கிறேன்.

பாஸ்கர் நுழையும் துறைகளிலெல்லாம் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் நாடு முழுவதும் ரூட் பஸ்களில் பயணம் செய்த அனுபவத்தை எழுதி வைத்துள்ளார். அவற்றையும் புத்தகமாக வெளியிடலாம். எழுத்தாகட்டும், தொலைக் கட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதுவதிலாகட்டும், திரைப்படமாகட்டும் அவருக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துக் கொண்டதுமகிழ்ச்சியளிக்கிறது. பாஸ்கரின் நீண்ட நாள் ஆசை ஒன்று இருக்கிறது. அதை இங்கு போட்டு உடைக்கலாம் என்றிருக்கிறேன். திரைப்படம் இயக்க வேண்டும் என்பது அவரது நீண்ட கால விருப்பம். அதற்கான முயற்சிகளையும் அவர் செய்துகொண்டிருக்கிறார். அதிலும் அவர் வெற்றி பெறுவார் என்று உரையை நிறைவு செய்தார்.

இயக்குனர் மகேந்திரன்:

பத்து வருடங்களுக்கு முன்பு விகடனில் என்னுடைய பேட்டியைக் கேட்டிருந்தார்கள். சூட்டிங் வேலைகளுக்கு இடையில் ஒருநாள் காலையில் வரச்சொல்லி இருந்தேன். பாஸ்கர் சக்தி தான் நிருபராக வந்திருந்தார். அதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு. என்னால் முடிந்த அளவு அவருக்கு பதில் சொன்னேன். எனக்குத் திருப்தி இல்லாததால் மாலை ஒருமணி நேரம் கொடுக்கறேன்... வந்து முடிச்சிடுங்கன்னு சொல்லி இருந்தேன். அதே போல வந்து தொந்தரவு இல்லாம முடிச்சிட்டாரு. அந்தப் பேட்டி விகடனில் வந்ததும் எனக்கு நிறைய பாராட்டுக் கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்தன. உடனே மகிழ்ச்சியோட விகடனுக்கு பாஸ்கரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன்.

சமீபத்தில் அவருடைய சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அற்புதமான கதைகள். அவருக்கு ஃபோன் செய்து பேசினேன். திருவண்ணாமலையில் புத்தகப் பணியில் இருப்பதாகக் கூறினார். எல்லாக் கதைகளுமே அவ்வளவு நகைச்சுவை. நான் எல்லா முக்கியமான எழுத்தாளர்களையும் படிப்பேன். ஆனால் சிலருக்கு மட்டுமே ஆஸ்தான இடம் கொடுப்பேன். பாஸ்கர் சக்தியும் அவர்களில் ஒருவர் என்று உரையை நிறைவு செய்தார்.

நன்றியுரை - பாஸ்கர் சக்தி:

என்ன பேசறதுன்னே தெரியல... புத்தக வெளியீட்டிற்கு இவர்கள் நால்வரையும் கூப்பிட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஆரம்பத்தில் பத்திரிகையில் வேலை செய்தவர்கள்.

"மகேந்திரன் சார் என்னுடைய கதைகளைப் பாராட்டிப் பேசறாருன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. விகடனில் இருக்கும் போது அவர் அனுப்பிய கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. நான் ஒன்னும் பெருசா எழுதிடலை. அவர் சொன்னதைத் தான் எழுதினேன். அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் சாதாரண நிருபரை மதித்து கடிதம் எழுதியதை நினைக்கும் போது நெகிழ்வாக இருக்கிறது. சிம்பு தேவன் டென்ஷனோட இருக்காரு. அவருக்கு வேறொரு விருது நிகழ்ச்சி இருக்கு. நண்பர்கள் என்னோட சிறுகதைகளைப் பாராட்டி பேசியது மகிழ்ச்சியா இருக்கு" என்று வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி உரையை நிறைவு செய்தார்.

அதன் பிறகு மேலும் இரண்டு புத்தகத்தின் வெளியீடுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. திரும்புவதற்கு மனமில்லாமல் நண்பர்களிடம் விடைபெற்று வெளியில் வந்தேன். எழுத்தாளர் பிரபஞ்சனும், திலீப் குமாரும் பேசிக்கொண்டே என்னைக் கடந்து சென்றனர்.

4 comments:

  1. கிருஷ்ணா.. கிருஷ்ணா..
    சென்னையில் இல்லாததற்கு மறுபடி மறுபடி வருத்தப்பட வேணியிருக்கிறது. இங்கே புத்தக கண்காட்சியில் ஞாநி ஆவர்களை சந்தித்தேன். கேணி பற்றி பேசிகொண்டிருந்தோம், அனேகமாக ஜெ.மோ. கேணிக்கு நானும் வருவேன் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. நான் நினைத்ததையே முரளியும் சொல்லியிருக்கிறார்.
    மனம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் பிரபு!

    வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  3. பின்னூட்டத்திற்கு நன்றி முரளி...

    @ வெயிலான்

    எப்படி இருக்கீங்க நண்பரே? பின்னூட்டத்திற்கு நன்றி... இந்த ஞாயிறு பரிசலின் புத்தக வெளியீட்டிற்கு சென்னை வரீங்க போல...!

    ReplyDelete
  4. நலமாயிருக்கிறேன் நண்பா! நன்றி!

    ஆம். ஞாயிறு சென்னையில் இருப்பேன்.

    ReplyDelete