Saturday, December 26, 2009

உயிர்மை புத்தக வெளியீடு

25-12-2009 அன்று 'உயிர்மை' பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த 11 எழுத்தாளர்களின் 12 நூல்களின் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். நான் சென்றிருந்த பொழுது விழாவிற்கான சுவடே இல்லாமல் தேவநேயப் பாவாணர் அரங்கம் பூட்டப்பட்டு இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் நடமாடிக் கொண்டிருந்தேன். ஒருவர் தொல். திருமாவளவனின் ஆளுயர விளம்பரப் பலகையை தயார் செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து பிரிட்டிஷ் கௌன்சில் லைப்ரரிக்குச் சென்றேன். செல்லும் வழி முழுவதும் புத்தகம் பற்றியும், நூலகம் பற்றியும் ஏராளமான வாசகங்கள் சுவரில் எழுதியிருந்தார்கள். அதில் எனக்குப் பிடித்த ஜப்பானியப் பழமொழி...

"நண்பர்களும், புத்தகங்களும் குறைவாக இருந்தாலும் நல்லவைகளாக இருக்கட்டும்."

புத்தம் புதிய எழுத்தாளர்களின் வருகையும், அளவுக்கதிகமான புத்தக வெளியீடுகளும் நடப்பதால் இந்த வாசகம் என்னை யோசிக்க வைத்தது. யோசனையுடனே திரும்பிய பொழுது உயிர்மையிலிருந்து வெளியிட இருக்கும் புத்தகங்களுடன் காரில் வந்து சகாக்கள் இறங்கினார்கள். அவர்கள் வந்த அரை மணி நேரம் கழித்துதான் தேவநேயப் பாவாணர் அரங்கம் திறக்கப்பட்டது. உள் சென்று அமர்ந்து கொண்டேன். சிவசங்கர் என்றொரு நண்பர் அறிமுகமானார். எழுத்தாளர் தமிழ்மகன் வந்தவுடன் இருவரும் சென்று அறிமுகம் செய்து கொண்டோம். தனிப்பட்ட முறையில் புத்தக வெளியீட்டிற்கு வரும்படி அனுப்பியிருந்த மின்னஞ்சலுக்கு நன்றி கூறினேன்.

நலம் விசாரித்துவிட்டு "உங்களோட ஊர் எது?" என்று என்னிடம் கேட்டார்.

அவருக்குப் புரியுமோ! புரியாதோ! என்று கும்மிடிப்பூண்டி போகும் வழி என்றேன்.

"அடடே.. பொன்னேரி பக்கத்துல தான் என்னோட சொந்த ஊர் இருக்குது. உங்களுக்கு 'ஜெகநாதபுரம்' தெரியுமா?" என்றார்.

எங்க ஊரிலிருந்து 5 கி.மீ
தூரத்துல தான் 'ஜெகநாதபுரம்' இருக்குங்க தமிழ்.

"ரொம்ப நெருங்கிட்டோம். அதனால நிறைய பேச வேண்டியது இருக்கு. வெளிவர இருக்கும் நாவல் வெட்டுப்புலி கூட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நடப்பதுதான்" என்றவாறு நண்பர்களை நோக்கி நகர்ந்தார்.

முத்துசாமி, உழவன் (நவநீத கிருஷ்ணன்), நிலாரசிகன் என்று ஒருவர் பின் ஒருவராக நண்பர்கள் வர ஆரம்பித்தனர். சுகுமாரன், ஞானக்கூத்தன், மனுஷ்ய புத்திரன், தமிழ்செல்வன், சாரு, பாஸ்கர் சக்தி, எஸ் ரா - என்று பல எழுத்தாளர்களையும் காண முடிந்தது. சில சினிமா பிரமுகர்களையும் காண முடிந்தது.

'தேநீர்' அருந்த நண்பர்களுடன் (பதிவர்கள்) வெளியில் வந்தேன். பாரதி மணி எதிரில் வந்து கொண்டிருந்தார். அருகில் சென்றதும் நட்புடன் கைகுலுக்கினார். நிலாரசிகனின் சிறுகதைத் தொகுப்பில் எனக்கான சில சந்தேகங்கள் இருந்தது. அவற்றை பென்சிலில் குறித்து வைத்திருந்தேன். அவற்றைப் பற்றி அவருடன் விவாதம் செய்து கொண்டிருந்தபோது தமிழ்செல்வன் எதிரில் வந்தார். நிலாவிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு தமிழ்செல்வனுக்கு வணக்கம் கூறினேன். சிரித்தார்.

உங்களுடைய 'வெயிலோடு போய்...' சிறுகதையை வாசித்தேன். நன்றாக இருந்தது. அந்தக் கதை 'பூ' என்ற சினிமாவாக ஊடக மாற்றம் அடைந்ததில் உங்களுக்கு மன நிறைவு இருக்கிறதா?

அது எப்படி இருக்கும். சினிமா என்பது வேறு ஊடகம் இல்லையா!... ஆனா படம் ஓரளவிற்கு பேர் வாக்கிடுச்சி இல்ல... அவங்க உழைப்பு பாராட்டப்பட வேண்டியதுதான்.

உங்களுடைய கதைக்கான கரு எப்படி கிடைக்கிறது? சொந்த அனுபவமா அல்லது உங்களை பாதிக்கும் விஷயங்களின் தாக்கமா?

ரெண்டுமே தான்... என்னை பாதிக்கிற அடுத்தவர்களின் சம்பவங்களைக் கூட சொந்த அனுபவமாக உணரும் போதுதானே எழுத்தின் மூலமாக வாசகர்களை உணரச் செய்ய முடியும்.

கோணங்கி எப்படி இருக்காரு?

நல்லா இருக்கான். இங்கதான் சென்னையில இருக்கான்...ஒரு நாவல் எழுத வந்திருக்கான்.

ஓ அப்படியா...! அவரை விசாரிச்சதா சொல்லுங்க...

இவ்வளவு நேரம் பேசியதற்கு நன்றி தெரிவித்துவிட்டு நிலாவை நோக்கித் திரும்பினேன். அவர்கள் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் எழுத்தாளர் சுகுமாரனுடனும், நர்சிம்மிடமும் சிவராமன் (பைத்தியக்காரன்) பேசிக் கொண்டிருந்தார். என்னை அருகில் அழைத்து சுகுமாரனிடம் அறிமுகப் படுத்தினார். பயந்துகொண்டே அருகில் சென்று அவருடைய மதிலுகள் மொழிபெயர்ப்பை பாராட்டிப் பேசினேன்.

புதிதாக நிறைய பேர் தமிழில் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கிறது?

நன்றாக செய்கிறார்கள்... ஆனால், மொழிக்கு என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களுக்கான மொழியில் சிறந்து விளங்கி, ஒரு எல்லையைத் தாண்டினால் தான் படைப்பிலக்கியத்தில் அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும்.

"ஒரு கவிஞனுக்கு தேவையான மொழி என்று எதைக் கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன்.

மொழி என்று நான் சொல்ல வருவது "sense of language". அதனைக் கண்டடைவதுதான் கவிஞனுக்கு மிகப் பெரிய சவால்.

தமிழ்ச் சிறுகதைகள் பற்றி...?

முன்பு இருந்த மாதிரி இப்பொழுது இல்லை...

என்ன சொல்றீங்க சுகுமாரன்?

சரி... நீங்களே சமீபத்துல சிறுகதை எழுதுபவர்கள் பத்து பேரை சொல்லுங்களேன்? - என்று கூறினார்.

"எஸ். ரா, சாரு, யுவன் சந்திர சேகர்..."

"இவங்க எல்லோரும் பத்து வருஷம் முன்னாடியே எழுத ஆரம்பிச்சிட்டாங்க. நான் கேட்டது சமீபத்தில்..." என்று சொல்லவும் திணறிப்போனேன்.

ஜே. பி சாணக்யா இன்னும் சிலரைத் தவிர வேறு யாரும் சொல்லிக்கிறா மாதிரி செய்யலை. தமிழ் சிறுகதை எப்படி இருந்தது...! இப்போ அந்த வீரியம் இல்லன்னுதான் சொல்லணும்.

உயிர்மை வெளியிட்ட மலையாள மொழி பெயர்ப்பான 'காளி நாடகம்' நல்ல சிறுகதைத் தொகுப்பு என்றேன்.

"அதுவும் என்னோட மொழி பெயர்ப்புதானே..." என்ற போது இயக்குனர் தங்கர் பச்சான் நெருங்கி வந்து அவருடன் கைகுலுக்கினார். கிளி பச்சை கலரில் டி-ஷர்ட் அணிந்த அழகான வாலிபர் பவ்யமுடன் தங்கருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். இதற்கு மேல் அங்கு நிற்பது சரியல்ல என்று சிவராமனிடம் விடைபெற்று நர்சிம்மின் அருகில் சென்றேன். அவருடன் யுவ கிருஷ்ணாவும், ஆதிஷாவும் நின்றுகொண்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு நர்சிம்மின் "புளிக்காரக்கா" படிக்கக் கிடைத்தது. மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். கதை பிடித்திருந்ததால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு உள்ளே சென்றேன்.

உமா சக்தியின் புத்தக வெளியீடு இருப்பதால் உமா சக்தி, அமித்துவின் அம்மா (சாரதா), அகநாழிகை, பாஸ்கர் சக்தி இன்னும் பலரைக் காண முடிந்தது.

நிகழ்ச்சியை ஆரம்பித்து கே.வைத்தியநாதன் (தினமணி, ஆசிரியர்), ஞானக்கூத்தன், பிரபஞ்சன் ஆகிய மூவரையும் மேடைக்கு அழைத்தார்கள். பிரபஞ்சன் கொஞ்சம் தாமதமாக வந்து மேடையில் கம்பீரமாக அமர்ந்தார்.

நூல் வெளியீட்டு விழாவில் "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன் பேசியது தமிழ் மகனின் இணையத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. (http://www.tamilmagan.in/2009/12/blog-post_25.html)

சினிமா இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், வெற்றி மாறன், அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இலக்கிய கூட்டங்களில் சினிமாக்காரர்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவில் மற்றம் வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

1 comment:

  1. மீண்டும் பொறாமையாக இருக்கிறது....

    ReplyDelete