Monday, September 14, 2009

சென்னை சிறுகதைப் பட்டறை

நினைத்துப் பார்த்தால் எல்லாமே கனவு போல் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பன் கிறிஸ்டோஃபருடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பசியுடன் அலைந்து திரிந்த நாட்கள் ஞாபகம் வருகின்றன. அப்பொழுதெல்லாம் "அல்ஜீப்ரா, ரியல் அனாலிசிஸ், டிரிக்நோமேத்ரி" என தொல்லைகளின் மொத்த உருவங்கள் அவனுடைய கைகளில் இருக்கும். என்னிடமோ "காலச்சுவடு, தீராநதி, உயிர்மை" போன்ற இலக்கிய இதழ்கள் இருக்கும். இதென்ன விந்தை! இந்த இதழ்களில் எழுதுபவர்கள் எல்லோரும் புது உலகின் வாசல்களைத் திறக்கிறார்களே என்று வியப்பாகவும் பரவசமாகவும் இருக்கும். சிற்றிதழ்களுக்கு எழுதுபவர்கள் எங்கு சென்று கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற கேள்வியும் உடன் எழும். அதைப்பற்றி பச்சையப்பன் கல்லூரியின் மாணவர் விடுதியில் நண்பர்களுடன் பேசி இருக்கிறேன்.

"டேய் எக்ஸாம் வருதுடா... உருப்புடற வழியைப் பாருடா...இப்படியே பேசிட்டு இருந்த நாசமா போயிடுவ" என்று கிறிஸ்டி தலையில் கொட்டுவான். அவனுடைய அக்கறையினால் சில பாடங்களில் தேறினேன் என்பது உண்மை.

கல்லூரி முடித்து (வருடங்கள் மட்டுமே கடந்தது) வேலையைத் தேடவேண்டிய நிர்பந்தம். அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு சொந்தக் காலில் நிற்கப் பிரயத்தனப்பட்டேன். என்னுடைய அக்காவின் மூலம் நல்ல வேலையும் கிடைத்து, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கையில் சிவராமனின் "உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு - சிறுகதைப் பட்டறை" பதிவு கண்ணில் படுமா...!?.

அதுமட்டுமில்லாமல் பதிவெழுதும் நண்பர்கள் முரளி, சேரல், விஷ்ணு மற்றும் அமித்துவின் அம்மா (சாரதா) ஆகியோரும் கலந்து கொள்ளப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். "ஈஸ்வரா... தமிழ் கூறும் நல்லுலகை என்னிடமிருந்து காப்பாற்று" என்று நானும் மனுச்செய்திருந்தேன்.

Sep 13, 2009 - 9 மணிக்கு முன்பே கதைப் பட்டறை நடக்கும் அரங்கிற்குச் சென்றுவிட்டேன். யுவன் சந்திரசேகரும், பாஸ்கர் சக்தியும் சீக்கிரம் வந்திருந்தார்கள்.

யுவனுடன் இதற்குமுன் பரிச்சயம் இல்லை. பாஸ்கர் சக்தியை யாரென்றே தெரியாமல் அவருடன் பேசியிருக்கிறேன். அது ஒரு வித்யாசமான அனுபவம். பாலு மகேந்திரா பங்கு பெற்ற கேணி சந்திப்பிற்கு அரை மணி நேரம் முன்னதாகச் சென்றிருந்தேன். ஒருவர் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார். அவரைக் கூப்பிட்டு நீங்கள் யார்? ஞானியுடைய நண்பரா? இங்கிருப்பவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களா? என்பது போன்ற தொடர் கேள்விகளைக் கேட்டேன்.

"நான் ஞானியின் நண்பன் தான். ஏதோ கொஞ்சம் எழுதுகிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு, செய்து கொண்டிருந்த வேலையில் கவனம் செலுத்தினார். இந்த சிங்காரச் சென்னையில் முகம் கொடுத்து பேசுவதற்கு ஆளில்லாத போது, வலிய வந்து பேசுபவனை நிராகரித்து வேலை செய்கிறாரே...என்ன ஜென்மமோ என்று மனதிற்குள் குறைபட்டுக் கொண்டேன். நான் கேள்வி கேட்டுத் துளைத்தவர் தான் பாஸ்கர் சக்தி என்பது நிகழ்ச்சி முடியும் தருணத்தில் தான் தெரியவந்தது.

சிறுகதைப் பட்டறைக்கு வந்திருந்த அவரின் அருகில் சென்று அனைத்தையும் ஞாபகப்படுத்தினேன். "ஓ... அது நீங்கள் தானா" என்று சிரித்தார்.

பிறகு அவரிடமிருந்து பா. ராகவனிடம் சென்றேன். அலகிலா விளையாட்டு நாவலைப் பற்றி எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன். அவருக்கு நீண்ட நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்த மின்னஞ்சலை ஞாபகப்படுத்தினேன். "படிச்சேன்...படிச்சேன்... புத்தகம் கெடச்சுதா" என்று சிரித்தார். இதுவரை அந்த நாவலை ஏழு பேர் வாங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறேன் என்றதும் சிரித்தார். வேதங்கள் பற்றி நிறைய இடங்களில் வருகிறதே...பாட சாலையில் படித்தவரா என்றதற்கு "ஆம்" என்றார். அப்பொழுது பார்த்து செல்பேசியில் அழைப்பு வர அவரிடமிருந்து விலகிச் செல்லும் படி நேர்ந்தது.

அடுத்தது யுவனிடம் பேசினேன். பழகிய நண்பரைப் போல் விருப்பத்துடன் பேசினார். ஒளிவிலகல் புத்தக முன்னுரையில் "இரண்டு கவிதைத் தொகுப்பு வெளிவந்தும் கவிதைகள் மீதான தெளிவிற்குப் பதிலாக குழப்பமே அதிகமாகி இருக்கிறது. இப்பொழுது சிறுகதைத் தொகுப்பு வெளிவரும் சமயத்திலும் சிறுகதைகள் மீதான சிடுக்குகள் அதிகமாகிறது. ஆனால் அதைக் கண்டு தீர்ப்பது வாசகர்களின் வேலை" என்று சொல்லியிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்தேன். ஏற்புடைய சில மறுமொழிகளைக் கூறினார்.

அவரிடம் பேசிவிட்டுத் திரும்பும் சமயத்தில் பத்ரி எதிரில் வந்தார். அவருடைய கணக்கு பதிவின் சில பகுதிகள் படிக்கக் கிடைக்கவில்லை அதுபற்றி அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன்.

கி பி: Good Morning பத்ரி. உங்களுடைய கணக்குப் பதிவு...
பத்ரி: மெயில் பார்த்தேன். அதில் சில பிரச்சனை இருக்கு. சீக்கிரமே சரி செய்துவிடுகிறேன்.
கி பி: என்னுடைய பல நண்பர்களுக்கு அந்தப் பதிவினை பரிந்துரை செய்திருக்கிறேன்.
பத்ரி: இல்ல... இல்ல... இப்போ வேணாம். Word Press-ல மாத்திட்டு சொல்றேன். பிறகு Recommend பண்ணுங்கோ.
கி பி: நீங்கள் ஏன் அதை புத்தகமாகக் கொண்டு வரக்கூடாது?
பத்ரி: அப்படி செய்ய முடியாது. யோசிக்கலாம்...
நான்: தயவு செய்து புத்தகமாகக் கொண்டு வாருங்கள். கிழக்கின் நிறுவனர்... நீங்களே இப்படிச் சொல்லலாமா?"
பத்ரி:"Publisher என்பதால் தான் அப்படிச் சொல்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

வெளியூரிலிருந்து வரும் நண்பர்களுக்காக சிறிது நேரம் காத்திருந்துவிட்டு சிவராமனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதலில் பேசினார். தனது வாழ்வியல் அனுபவங்களை எப்படி கதைகளுக்கான கருவாக பாவிக்கிறார் என்று நீண்ட உரையாற்றினார். இவர் பேசிக்கொண்டே இருந்தபோது மின்சாரத் தடை ஏற்பட்டது. குறைந்த வெளிச்சத்தின் கருமையான இருளில் ஒரு நிமிடம் ஆழ்ந்திருந்தோம். எங்கும் அமைதி பரவிக்கிடந்தது. பிறகு தடையில்லா மின்சாரம் பாயவும் நிகழ்ச்சி தொடர்ந்தது. அவருடைய கிராமம் சார்ந்த அனுபவங்களையும், அதன் தாக்கத்தில் எழுதிய கதைகளையும் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார்.

கதையில் சுவாரஸ்யம் இருக்க வேண்டும் ஆனால் படிப்பினை (Message) இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று உரையை முடித்தார். அதன் பிறகு கேள்வி நேரம் ஆரம்பமானது. அனைவருடைய கேள்விகளுக்கும் நிதானமாக பதில்கள் கூறி அவருடைய பகுதியை நிறைவு செய்தார்.

இரண்டாம் பகுதியாக "Magical Realism" பற்றி யுவன் சந்திரசேகர் அருமையாக உரையாற்றினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சாலமன் பாப்பையாவிடம் பேச்சு மற்றும் இலக்கியம் கற்றது, புனைவுக் கதைகளின் களம், அதைக் கண்டடையும் விதம், கவிதை, சாருவினுடனான மோதல் என பல விஷயங்களைத் தொட்டுச் சென்றார்.

ஒருவனுடைய கவிதை இன்னொருவனுக்குப் புரியாது எழுதியவர்களுக்கு மட்டுமே புரியும் என்று சொல்லியது என்னை வெகுவாக தேற்றியது போல் இருந்தது. ஏனெனில் கவிதைகளின் மீதான வாசிப்பில் ஆகச்சிறந்த வெகுளி நான்.

யுவனிடம் எனக்குப் பிடித்தது மற்ற படைப்பாளிகள்(பாஸ்கர், தேவதாஸ், பா ரா) பேசும் பொழுது தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து செல்வது போல் அனைவரையும் நோட்டம் விட்டார். கேள்வி கேட்பவர்களின் கண்களைக் கூர்ந்து கவனித்தார். அனைவரிடமும் இயல்பாகப் பழகினார்.

மதிய உணவிற்குப் பிறகு மொழிபெயர்ப்புக் கதைகள் பற்றி உரையாட திரு: தேவதாஸ் முன்வந்தார். பல ரஷ்ய, ஜப்பானிய, ஜெர்மானிய படைப்பாளிகளையும் அறிமுகம் செய்தார். மொழிபெயர்ப்பிலுள்ள கடினங்களும், மெத்தனங்களும் இந்தப் பகுதியில் தெரியவந்தது.

கேள்வி நேரத்தின்போது பல மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வரும் படைப்புகளின் தரம் பற்றி அனைவரும் விவாதம் செய்தார்கள். தேவையில்லாத பல கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்களோ என்று சலிப்பு ஏற்படும்படி இருந்தது. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு யுவன் அளித்த மறுமொழி விவாதத்தை சுவாரஸ்யமாக்கியது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, இறுதி பகுதியாக "பத்திரிக்கைகளுக்கு சிறுகதை எழுதுவது எப்படி?" என்பதை விளக்க கிழக்கின் முதன்மை ஆசிரியர் பா. ராகவன் முன்வந்தார். உதவி ஆசிரியராக தனக்கு நேர்ந்த படிப்பினைகள், அனுபவங்கள் என அனைத்தையும் நகைச்சுவை இழையோட அனைவரிடமும் பகிர்ந்து கொண்டது ரசிக்கும் படியாக இருந்தது. பலருக்கும் அறிமுகமான பிரபல எழுத்தாளர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகினார். அவரை நெருங்கி கேட்டக் கேள்விகளுக்குப் பணிவுடன் பதில் கூறினார்.

பைத்தியக்காரன் (சிவராமன்) தனது நன்றியுரையில் பாஸ்கர், யுவன், தேவதாஸ், பா ராகவன், பத்ரி, நர்சிம் ஆகியோருக்கு நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தமிழகத்தின் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருந்த பல பதிவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரிந்து சென்ற கல்லூரித் தோழர்கள் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொள்வதைப் போல் அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். எவ்வளவு வாஞ்சையுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அனைவருடைய கண்களிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. படைப்பில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்தப் பட்டறை தீனி போட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் சிறக்க வாழ்த்துக்கள்.

"முரளி" மற்றும் "சேரல்" எனக்காக வாங்கிவந்திருந்த பல புத்தகங்களை அன்புடன் தந்தார்கள். நானும் சில புத்தகங்களை அவர்களுக்குக் கொடுத்தேன். அன்புடன் பெற்றுக் கொண்டார்கள்.

கூட்டம் தொடங்குவதற்கு கால்மணி நேரம் முன்னதாக வருகிறேன் என்றால், கூட்டம் முடிந்த ஒருநிமிட நேரத்தில் கிளம்ப்பும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். அதன்படி புறப்படத் தயாரானேன். எனக்குத் தெரிந்த சிலரிடம் கைகுலுக்கி விடைபெற்று சிவராமனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாலையில் இறங்கி நடந்தேன். கல்லூரி நாட்களில் படித்த ஆங்கில வரிகள் ஞாபகம் வந்தன.

எல்லா சாலைகளுக்கும் முடிவுண்டு
பயணங்கள் எல்லாம் சாலையில் தான்
பயணங்கள் முடிவுக்கு வரலாம். சில நாட்களில்
மீண்டும் தொடரலாம் - அப்பொழுது நீ
பிரபஞ்சத்தையே கண்டடையலாம், ஒரு நாள்
பிரமஞ்சம் உனக்குள் இருக்கும் - யாரோ மகராஜ்

6 comments:

  1. நல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க..
    நான் அதற்கு முந்தைய வாரமே இங்கே கிளம்பி வந்து விட்டேன்..
    அதனால் கலந்துக்கொள்ள இயலவில்லை..

    ReplyDelete
  2. கிருஷ்ண பிரபு,
    அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ரொம்ப சுவைபட எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  4. கிருஷ்ணா, வழக்கம்போல வெகு இயல்பாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். கிட்டதட்ட படித்துமுடிகின்ற நிலையில் இருக்குறது புத்தகம்.அலகிலாவிளையாட்டு, நன்று. :-)

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு.

    பிரிந்து சென்ற கல்லூரித் தோழர்கள் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொள்வதைப் போல் அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். எவ்வளவு வாஞ்சையுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அனைவருடைய கண்களிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. //////

    உண்மைதான்.

    ReplyDelete
  6. @வினோத்கெளதம்
    நன்றி...உங்களை வலைப்பூவில் பார்த்து நிறைய நாட்கள் ஆகிறதே?

    @ "அகநாழிகை" பொன்.வாசுதேவன்
    நன்றி அகநாழிகை.

    @ பப்பு
    நன்றி. உங்களுடைய சமீபத்திய கதை ரொம்ப நீளம். ஆபீஸ்ல டேக்கா கொடுத்துட்டு படிக்க முடியலை.

    @ முரளிகுமார் பத்மநாபன்
    நன்றி முரளி.

    @ butterfly Surya
    நன்றி சூர்யா. நீங்கள் பட்டறையில் சொன்னீர்களே அந்த வேலை எந்த அளவில் உள்ளது.

    ReplyDelete