Tuesday, September 8, 2009

இலக்கியபீடம் கலைமாமணி விக்கிரமனுடன்

(07-09-2009) சொந்த வேலை காரணமாக அலுவலகம் செல்லாததால் சித்தப்பாவையும், அக்காவின் மகன் அகிலையும் பார்பதற்காக கொட்டிவாக்கத்திற்குச் சென்றிருந்தேன்.

எதிர்பாராத விதமாக அங்கு கெளதம் மேனனின் தெலுங்கு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நாகார்ஜூனின் மகனும், நடிகை ராதாவின் மகளும் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே காட்சியை எத்தனை முறை படம் எடுக்கிறார்கள். சிறிது நேரம் பார்ப்பதற்குள் வெறுத்துவிட்டது. வினோத்தும், முத்துவும் தான் ஞாபகம் வந்தார்கள். "இதையாடா நாய்களே விரும்புகிறீர்கள்" -என்று முத்துவிற்கு ஃபோன் செய்துத் திட்டினேன்.

"அப்படி இல்லைங்க மாமா, அதெல்லாம் ஒரு Perfection-னுக்காகத் தான். ஒரு கதை எழுதும் போது, 4 பேப்பர் கசக்கிப் போட்டுவிட்டு 5-வது பேப்பரில் எழுதுவது இல்லையா? அந்த மாதிரி தான்... சுவாரஸ்யமா இருக்கும் மாமா" என்று சமாதானம் கூறினான்.

பிறகு, அக்காவின் வீட்டிலிருந்து புறப்பட்டு காலச்சுவடு மற்றும் எனி இந்தியனுக்குச் சென்று சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.

அப்படியே நண்பர் முரளிக்கும், சேரலுக்கும் - பா.ராகவன் எழுதிய "அலகிலா விளையாட்டு" நாவலை வாங்குவதற்காக மேற்கு மாம்பலத்திலுள்ள "இலக்கிய பீடம்" செல்ல ஆயத்தமானேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே புத்தகத்தை பொன்னேரி நூலகத்திற்காக வாங்கச் சென்றிருந்ததால் சிரமமின்றி செல்ல முடிந்தது.

முன்பு மதிய நேரத்தில் சென்றிருந்ததால் கலைமாமணி விக்ரமன் உறங்கிக் கொண்டிருந்தார். ஆகவே புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க அவருடைய பேத்திதான் உதவி செய்தார்கள். இந்த முறை மாலை 6 மணிக்குச் சென்றிருந்ததால் அவரே எனக்கு உதவி செய்ய முன்வந்தார்.

வி: இந்த மாதிரி புத்தகங்களை யாரும் விரும்பி வாங்குவது இல்லையே?
கி-பி: இந்த நாவல் தொடராக வந்த போது பொன்னேரி நூலகத்தில் படித்திருக்கிறேன். நூலகருக்குத் தெரியாமல் திருடி, பைண்டிங் செய்து என்னுடைய சொந்த நூலகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

நீண்ட நாட்களாக இந்த நாவலை கடைகளில் தேடி, எங்குமே கிடைக்காததால் பா. ராகவனிடம் இ-மெயில் விசாரித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களிடம் வாங்கியிருக்கிறேன்.

இப்பொழுது என்னுடைய நண்பர்களுக்காக அதே புத்தகத்தை வாங்க வந்திருக்கிறேன் ஐயா.

வி: ஓ... அப்படியா. இங்க பாருங்கோ புத்தகத்தை மட்டும் திருடலாம், படிப்பதற்காக கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காம இருக்கலாம் தப்பே இல்லை. [இதற்கும் மேல் புரிய வேண்டுமெனில் இங்கு படியுங்கள்:
எங்க வீட்டு நூலகம் - கலைமாமணி விக்கிரமன்]
கி-பி: இல்லங்க ஐயா, பொன்னேரி நூலகத்திற்கு அந்த நாவலை வாங்கிக் கொடுத்துவிட்டேன். அப்படியே, நான் திருடியதால் தான் வாங்கிக் கொடுக்கிறேன் என்ற விஷயத்தையும் சொல்லிவிட்டேன்.

வி: நல்லது நல்லது... (சிரித்துக் கொண்டே சொல்கிறார்), உங்களுடைய ஊர் எது?
கி-பி: கும்மிடிப்பூண்டி போகும் வழியில், பொன்னேரி அருகிலுள்ள சிறிய கிராமம்.

வி: அப்படியா... முந்தியெல்லாம் அங்க தான் கேம்ப் போடுவாங்கோ. சென்னைக்கு அங்க இருந்துதான் குடிதண்ணீர் கூட வருது இல்லையா?
கி-பி: இப்போ எங்களுக்கே குடிக்கத் தண்ணி இல்ல, அதனால சென்னைக்கு அனுப்புறது ரொம்பவும் குறைவுதான் ஐயா.

வி: சரி, நீங்க எங்க வேலை செய்யுரிங்க?
கி-பி: சென்னைல தான் ஐயா. ஒரு சின்ன கம்பெனியில வேலை செய்யுறேன்.

வி: வெளிநாட்டு கம்பெனியில வேலை செஞ்சா நிறைய சம்பளம் கொடுக்கறதா சொல்றாங்க. என்னுடைய பேத்தி கூட பெங்களூர்ல இருக்குற IBM-ல வேலை செய்யறா. நெறைய சம்பளம் வாங்குறதா சொல்றா.
கி-பி: ஆமாங்க ஐயா. அவங்க சொல்றது உண்மைதான். அந்த மாதிரி கம்பெனிகளில் வேலை செய்தால் சில நேரங்களில் வெளி ஊருக்கு அனுப்புவாங்க. நைட் ஷிபிட் வேலை வரும். அதெல்லாம் எனக்கு சரிவராது. அதனால்தான் எனக்கு சரிவரும் கம்பெனிகளில் வேலை செய்கிறேன். ...

வி: "சரி இருங்க... புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று குனிந்து நிமிர்ந்து அலமாரியிலுள்ள புத்தகத்தைத் தேடுகிறார்.
கி-பி: ஐயா நீங்க உட்காருங்கள். நான் தேடி எடுத்துக் கொள்கிறேன்.

வி: "இருப்பா, இங்க தான் இருக்கும்..." என்று இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். (மேலும் சில புத்தகங்களையும், இரண்டு இதழையும் கையில் கொடுத்தார்.) இதெல்லாம் கூட நல்லா இருக்கும் படிச்சிப் பாருங்க.
கி-பி: உங்க கையில இருக்குற எல்லா புத்தகத்தையும் எடுத்துக்குறேன். பில் போட்டுடுங்க.

**********

கி-பி: சரிங்க ஐயா, நீங்க இதழ் நடந்துறீங்க இல்ல. யாரு Proof Read பாக்குறது?
வி: நான் தான் பார்க்கிறேன். ஒரு Assistant இருக்காங்க.

கி-பி: இந்த வயசுல உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?
வி: பிடிச்ச வேலைதான அதுல என்ன கஷ்டம். ஆனால் Proof Read பண்ணுறத ஆங்கிலத்தில் "Devil"-னு சொல்லுவாங்க. அதுக்கு "Ghost"-ன்னு அர்த்தம் இல்ல. எழுத்துப் பிழை மோகினி மாதிரி மயக்கிடும். ஒருத்தர் கண்ணுக்கு மட்டுமே தெரியாது. சின்ன தப்பு வந்தாலும் போச்சு. அமுத சுரபியில 52 வருஷம் வேலை செய்திருக்கிறேன். 'மு'-னாவுக்கு பதில் 'லு'-னா தெரியாம வந்தாலும் போச்சு. "அலுத சுரபின்னு" ஆயிடும். அந்த அனுபவம் கைகொடுக்கிறது. அப்போ எல்லாம் அச்சுல கோர்த்து பிரிண்ட் பண்ணனும். ரொம்ப கவனம் தேவைப்படும். இப்போதான் பிரிண்டிங் துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதே. கடந்த பல வருஷங்களா "இலக்கிய பீடம்" நடத்திட்டு இருக்கேன். ஒரு சில படைப்பாளிகள் அறிமுகம் ஆகி இருக்காங்க. அதில் பா. ராகவனும் ஒருவர்.

கி-பி: இலக்கிய பீடத்தில் அவர் பரிசு பெற்ற நாவல் ஏன் சந்தையில் பரவலாக கிடைக்கவில்லை? அவருக்கு தான் சந்தையில் நல்ல பெயர் இருக்கிறதே?
வி: பரிசு கொடுக்கும் போதே நாவலின் முதல் பதிப்பு இலக்கிய பீடத்தில் தான் வெளிவர வேண்டும் என்று கையொப்பம் வாங்கி விடுவோம். அவர் பரிசு பெற்ற இரண்டு வருடம் கழித்துத்தான் அந்த நாவலை புத்தகமாகப் போட முடிந்தது. நாவல்கள் விற்றுத் தீர்ந்ததும் அவர் விரும்பும் பதிப்பகத்தின் மூலம் நாவல் சந்தையில் கிடைக்கலாம்.

இன்னுமா புத்தகம் விற்றுத் தீரவில்லை. நான் புத்தகமாகப் போட்டுக் கொள்ளட்டுமா என்று ராகவன் கடிதம் எழுதியிருந்தார். நான் கூடாது என்று சொல்லிவிட்டேன். என்னிடம் இன்னும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அது தீர்ந்ததும் அவரிடம் சொல்லிவிடுவேன். பிறகு அவரின் மூலம் சந்தையில் கிடைக்கும்.

கி-பி: உங்களுடைய இலக்கிய இதழ் நிறைய பேருக்குத் தெரியாது. நீங்கள் ஏன் மார்க்கெட்டிங் செய்யவில்லை?
வி: நாங்கள் நூலகங்களுக்கு கொடுக்கிறோம் மற்றபடி வெளியில் யாருக்கும் கொடுப்பதில்லை. ஆகவே மார்க்கெட்டிங் தேவையில்லை.

கி-பி: ஏன் ஐயா இப்படி சொல்கிறீர்கள். காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய பத்திரிகைகளுக்கு ஆர்வலர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறதே. நீங்களும் அவர்களைப் போல் ஓரளவிற்கு வெகுஜனப்படுத்தி இருக்கலாமே? நிறைய படைப்பாளிகள் வெளியில் வருவார்கள் இல்லையா?
வி: நீங்கள் சுட்டிய இதழ்களை இலக்கிய இதழ்கள் என்று சொல்லாதீர்கள். அவற்றில் படைப்பாளிகளின் பேட்டி வருகிறது. வேறு என்ன இருக்கிறது? ஏன் தொடர் கதைகள் வருவதில்லை? நல்ல தரமான சிறுகதைகள் வருவதில்லை? இப்போ இருக்கறவங்க Internet-ல என்ன கிடைக்குதோ அதை மொழி பெயர்ப்பு என்ற பெயரில் தமிழில் எழுதறாங்க. யாராவது நாவல் அல்லது தொடர் கதை எழுதறாங்களா?

கி-பி: நீங்கள் கூட நாவல்கள் எழுதி இருக்கிறீர்களே...
வி: ஆமாம்...ஆமாம்... கிட்டத்தட்ட 60 நாவல்கள். அதில் நான்கு சமூக நாவல்கள் மற்றவை அனைத்தும் வரலாற்று நாவல்கள்.

கி-பி: வரலாற்று நாவல் எழுதுவதற்கு எப்படி தயார்படுத்திக் கொள்கிறீர்கள்?
வி: அதற்கு முதலில் வரலாற்று பரிச்சயம் வேண்டும். கூடவே அதிகமான கற்பனை இருக்க வேண்டும். நாவலுக்கு வடிவம் இருக்கிறது அதனையும் கவத்தில் கொள்ளவேண்டும். இல்லையெனில் நாவல் வெற்றி பெறாது.

கி-பி: நீங்கள் தான் வருட வருடம் ஒரு நாவலைத் தேர்வு செய்து பரிசு வழங்குகிறீர்களே.
வி: கடந்த ரெண்டு வருஷமா கொடுக்கறது இல்லை. எனென்றால் நல்ல படைப்புகள் எங்களுக்கு வரவில்லை. கொடுக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த வருடம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நீண்ட காலம் கழித்து இரண்டு நாவல்கள் தேர்வாகி இருக்கின்றன. நவம்பரில் வெளிவரும்.

நான் கண்டிப்பாக நவம்பரில் வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருத்து கிளம்பினேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "இந்தாங்க இந்த புத்தகம் உங்களுக்குத் தான் வச்சுக்கோங்க" என்று அவருடைய சிறுகதைப் புத்தகம் ஒன்றைக் கையில் கொடுத்தார்.

"ஐயா நான் இதுக்கும் காசு கொடுத்துடரேனே...."என்று கூறினேன். "இல்ல நீங்க வச்சுக்கோங்க" என்று அன்புடன் கொடுத்தார்.

என்னுடைய வயது போல் இரண்டு மடங்கு பத்திரிகைத் துறை அனுபவம் இருக்கிறது. கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். 60-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஆனால் கவனிக்க வேண்டியது என்னவெனில் அவருடனிருந்த அத்தனை நேரமும் பழகிய நண்பரைப்போல பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

யாருக்கேனும் நாவல் எழுதும் திறமை இருந்து அதனைப் பதிப்பகங்களுக்கு அனுப்ப விரும்பினால் தவறாமல் இலக்கிய பீடத்திற்கு அனுப்பலாம். அவர்களுடைய முகவரி...

இலக்கியபீடம் - மாத இதழ்
கலைமாமணி விக்ரமன்
3,3, ஜயசங்கர் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை - 600033

தொலைபேசி : 9144-23712485

4 comments:

  1. நன்றி கிருஷ்ண பிரபு அவர்களே. வாசிப்பதற்கென்று வாங்கிய பல புத்தகங்கள் தேங்கிக்கிடக்கின்றன. வரும் திங்கள்கிழமை ஊருக்கு செல்லவிருக்கிறேன். மொத்தமாக பத்து நாள் தொடர்ந்து அனைத்தையும் வாசித்து வெறியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. உங்கள் பரிந்துரை என்பதால் நிச்சயம் இதையும் வாங்கிவிட்டு தான் செல்வேன்.

    ReplyDelete
  2. கிருஷ்ணா, தேங்க்ஸ். அப்புறம் நல்ல பல விசயங்கள் செய்துவருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    சினிமா பார்க்காதது உங்களுக்கு இவ்வளவு நேரம் கொடுக்கிறது என்றால் பொறாமையாக இருக்கிறது
    :-)

    ReplyDelete
  3. இந்த வலைப்பூவை முழுவதும் படித்தேன்
    மிக சிறப்பு நண்பரே...
    என் போன்றவர்கள் பயனடைய தொடருங்கள் ....

    ReplyDelete
  4. வந்து வாசித்து ஊக்கம் அளித்த நண்பர்களுக்கு நன்றி...

    ReplyDelete