Monday, August 27, 2012

அடக் கடவுளே...!

சமீபத்தில், அண்ணன் பாலபாரதியை சந்திக்க புதிய தலைமுறை அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அலுவலகத்தின் இளம் (ஆண்) ஊழியர்கள் முதலாமாண்டு நிறைவு விழா கொண்டாட்டத் தோரணங்களைக் கட்டிக் கொண்டிருந்தனர். தொலைகாட்சி சேனல் ஆரம்பித்து இதற்குள் ஒரு வருடம் உருண்டோடி இருக்கிறது. சேனலின் வீச்சும் தான் அதற்கேற்ப வேகமாக வளர்ந்திருக்கிறது. அல்லோல கல்லோலப்பட்ட இடத்தின் கண்ணாடிச் சுவரின் ஓரத்தில் அமர்வதற்கு இருக்கை போட்டிருந்தார்கள். அதில் ஒரு வாடிய முகம் தென்பட்டது. கிராமிய முகம் என்பது கூடுதல் சிறப்பு. அவர் மட்டுமே அமர்ந்திருந்தார் என்பதை ஒரு தகவலுக்காக பதிய விரும்புகிறேன்.

அந்த நபரைப் பார்த்து "ஹாய்" என்றேன் குதூகலத்துடன். இதைச் சற்றும் எதிர்பார்க்காதவர் மலங்க மலங்க விழித்தார். "இங்க வேலை செய்யிறிங்களா?" என்றேன்.

"இல்லைங்க சார்... ஒருத்தர பார்க்க வந்தேன்." என்றார்.

"Oh yes.... சார் போட்டுக் கூப்பிடும் அளவிற்கு நான் பெரிய ஆல் இல்லை. என்னோட பேரு கிருஷ்ண பிரபு" என்றேன்.

"என் பேரு பிரபு" என்றார்.

போகட்டும் "யாரைப் பார்க்க வந்திங்க?" என்றேன் மேலும் பேச்சுக் கொடுக்க.

"எதோ ஒரு கட்டுரையைச் சுட்டிக் காட்டி..." அதை எழுதியவரைப் பார்க்க வந்தேன். "அதைப் பற்றிய தகவல்களைத் திரட்ட" என்றார்.

"கூகுளில் தேடி இருக்கலாமே. இவ்வளவு மெனக்கெட்டு வர வேண்டுமா" என்றேன்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாதே!" என்றார்.

என்னுடைய விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு, "மெயில் அனுப்புங்கள். இது தொடர்பாக ஏதேனும் என் கண்ணில் பட்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் பாலபாரதி வந்து சேர்ந்தார்.

பாலபாரதி குழந்தைகளைப் பற்றி ஆராயக் கூடியவர். ஆர்வமுடன் தகவல்களை சேகரிக்கக் கூடியவர். தன்முனைப்பு குறைபாடுடைய (ஆட்டிசம்) குழந்தைகள் சார்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். என்னுடைய சகோதரி கீர்த்தனா கிருஷ்ணமூர்த்தியும் கடந்த பல வருடங்களாக குழந்தைகள் மன நலம் சார்ந்து இயங்கி வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரியிலும் - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மைன்ட் ட்ரைனர்-ஆக இருக்கிறார். பொதிகையில் அது சார்ந்த நிகழ்ச்சியையும் தொடர்ந்து செய்து வருகிறார். கனியமுதனைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால் பேச்சு சுழன்று சுழன்று குழந்தைகளைப் பற்றியே சென்று கொண்டிருந்தது. மேலும் விரிவாகப் பேச கீர்த்தனாவுடன் அவரை ஒருநாள் வந்து சந்திப்பதாகக் கூறினேன்.

அண்ணனுடன் குஸ்தி விளையாடிக் கலைத்து, அங்கிருந்து புறப்பட எத்தனித்தேன். ஓவியர் மருது வந்துகொண்டிருந்தார். அவருக்கு எதிரில் சென்று சடுகுடுவில் ஆட்களை மடக்குவதுபோல அரண் அமைத்தேன்.

"வணக்கம் Mr. மருது, ஒரு நிமிடம் உங்களிடம் பேச வேண்டும்" என்றேன்.

"சொல்லுங்க" என்றார்.

"என்னுடைய நண்பர் இந்திய ஓவியங்களைப் பற்றிய, முக்கியமாக தமிழ் ஓவியங்களைப் பற்றிய புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். உங்களிடம் ஏதாவது பரிந்துரை செய்ய இருக்கிறதா?" என்றேன்.

"அப்படி எதுவும் இருக்க மாதிரி தெரியலை... விட்டல்ராவ் எழுதனது இப்போ கெடைக்கறது இல்ல" என்றார் வருத்தத்துடன்.

இனி பேச எதுவுமில்லை என்பதால், அவரிடமிருந்து விடைபெற்றேன். அங்கிருந்து புறப்படும் நேரத்தில் அந்த நபர் என்னைச் சீண்டினார். பாவப்பட்ட முகத்தை வைத்துக் கொண்டு "உங்களிடம் பேச வேண்டும்" என்றார்.

"சரியாப்போச்சு... உங்களைப் பார்த்தால் ரொம்ப கொழப்பத்துலயும், டெண்ஷன்லயும் இருக்க மாதிரி தெரிஞ்சுது. ஒருவேலை இன்டெர்வியூ-விற்கு வந்திருப்பிங்கலோ-ன்னு நெனச்சி தான் ரிலாக்ஸ் செய்ய பேச்சுக் கொடுத்தேன்... ஆனால், நீங்க கட்டுரையாளரத் தானே பார்க்க வந்திருக்கீங்க. என்கிட்டே பேச என்ன இருக்கு?" என்றேன்.

"நீங்களா தான எங்கிட்ட பேசினிங்க?" என்றார்.

"அட... நான் எந்த ஆபீசுக்கு போனாலும் ரிஷப்ஷனிஸ்ட் கிட்டக்கூட பேச மாட்டேன். இன்டர்வியூ-க்கு வந்திருக்க மாதிரி யாராச்சும் தெரிஞ்சாங்கனா... சும்மா பேச்சு கொடுத்து கொஞ்சம் டென்ஷனை கம்மி செய்வேன். அப்படி நெனட்சிதான் உங்ககிட்ட பேசினேன் " என்றேன்.

"நீங்க மொதல்ல சொன்னது ரொம்ப கரெக்ட்" என்றார்.

"நான் என்னங்க சொன்னேன்...?" என்றேன்.

"நான் ரொம்ப கொழப்பத்துல இருக்கேன்...என்ன பண்றதுன்னே தெரியல?" என்றார்.

இந்தச் சின்னப் பையனிடம் அப்படி என்ன பெருசாக பிரச்சனை இருக்கப்போகிறது என்று "சரி... உட்காருங்கள் இப்பொழுதே பேசி சரி செய்துவிடலாம்" என்றேன்.

"எங்கக் குடும்பம் ரொம்ப வருமையில இருக்காங்க. அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. தம்பி வேலை செய்யுறான். அம்மா தான் எங்களை எல்லாம் காப்பாத்துனாங்க. பாருங்க நான் பண்ணண்டாவது (12th) வரைக்கும் ஃப்ரீ ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன். பாஸ் பண்ணிட்டு வேலைக்குப் போகலாம்னு தான் நெனச்சேன். படிச்ச ஸ்கூல்ல இருந்த டீச்சேர்ஸ் தான், நீ எஞ்சினியரிங் படின்னு சொன்னாங்க. எனக்கு என்னவோ வேலைக்குப் போகணும்னு தான் தோனுச்சி. ஒருத்தர் நான் படிக்க வக்கிறேன்னு சொன்னாரு. சரின்னு நானும் ஒரு பிரைவேட் காலேஜில சேர்ந்துட்டேன். ஒரு வருஷத்துக்கு மேல அவரால காசு கொடுக்க முடியலை. எதோ கஷ்டம்ம்னு பணம் கொடுக்கறத நிறுத்திட்டாரு.

இப்போ படிப்புக்காக காசு கொடுங்கன்னு யார்கிட்டயாவது கேக்க வேண்டி இருக்கு. எல்லாத்துக்கும் அடுத்தவங்ககிட்ட போய் நிக்க வேண்டி இருக்கேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவே மைன்ட் பிரஷரா இருக்கு... " என்றார்.

"ஓ மை காட்... நான் எச்சைக் கையால் ஈ ஓட்டத் தயங்குபவன். என்னிடம் ஏன் இந்த பச்சிளம் பாலகன் மடை திறந்த வெள்ளம் போல பேசுகிறான் என்று சுதாரித்தேன். மைன்ட் பிரஷ் - பற்றி பாலபாரதியிடம் பேசியதை பையன் கவனித்திருக்க வேண்டும். அதுதான் விஷயம். "சரிங்க பிரபு... என்னுடைய இ-மெயிலுக்கு உங்களுடைய பையோ டேட்டா அனுப்புங்க. நிச்சயமா உங்கள கூப்பிடுறேன். பாருங்க, நான் பணம் கொடுத்து உதவி செய்ய முடியாது. ஏன்னா, ஐ ஆம் ஜாப்லெஸ்... ஆனால் வேறு ஒரு வகையில் உங்களுக்கு உதவ முடியும்" என்றேன்.

"எனக்கு மட்டும் தான் Emotional Training கெடைக்கனுமா? என்ன மாதிரி ஹாஸ்டல்ல நெறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கும் கெடச்சா நல்லா இருக்கும்" என்றார்.

Btec இரண்டாம் வருடம் படிக்கும் அந்தச் சின்னப் பையனுக்கு எவ்வளோ நல்ல மனசு. ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதி கூறுகிறேன், அந்த வசதியை தனக்காக மட்டும் பயன்படுத்தாமல், தன்னைப் போன்ற இயலாமையில் இருக்கும் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறான். இந்த சந்திப்பைப் பற்றி என்னுடைய அக்காவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள். இங்கு அப்படியா நடக்கிறது. அகரம் ஃபவுண்டேஷன் முதல் விஜய் டிவி வரை.... இவர்கள் எங்கள் தயாரிப்பு என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதிலேயே இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சு நெஞ்சங்களுக்கு எவ்வளவு வலிக்கும். இதை நாம் ரசித்து ரசித்து நெக்குருகி வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு பார்க்கிறோம். குழந்தைகளை அழவைக்கும், காயப்படுத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

நான் பகிர நினைப்பது, இதிலிருந்து முற்றிலும் முரணான ஒன்று. பிளஸ் 2 ரிசல்ட் வரும் சமயத்தில் கர்ண பரம்பரையில் பிறந்ததுபோல உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட வேண்டியது. பிறகு தன்னால் முடியவில்லை என்று விலக வேண்டியது. இதனால் குழந்தைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பள்ளியோ, கல்லூரியோ - மாணவர்களுக்கு பண உதவியை விட, அன்பும், அரவணைப்பும் ஆறுதலும் தான் முக்கியம். அதை முதலில் கொடுக்க முடியுமா என்று பார்ப்பது நல்லது.

உதவி பெரும் மாணவர்களையும் குறை சொல்லித்தான் ஆகவேண்டும். முற்றிலும் ஒருவரை நம்பி வாழ்வது தவறுதானே. பகுதி நேரமாக ஏதேனும் வேலை செய்யலாம். என்னுடைய உறவினர்களில் பலரும் வெளிநாடு சென்று படிக்கும் பொழுது, அங்குள்ள சூப்பர் மார்கெட், பெட்ரோல் பங்க் போன்ற பகுதி நேர வேலையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் பொழுது தண்ணீர் குடித்த டம்ப்லரைக் கூட அருகிலுள்ள சிங்க்கில் கொண்டு வைக்கத் தயங்குவார்கள். இவர்களைத் தடுப்பதுதான் என்னவென்பது புரியவில்லை?

ஒருமுறை பயண கதியில், டாம்பீகமான வழிப்போக்கன் ஒருவனை சந்தித்தேன். என்னுடைய இருப்பு அவனை தொந்தரவு செய்திருக்க வேண்டும். அழுக்கடைந்த என்னுடைய உருவத்தைப் பார்த்து முகத்தைச் சுளித்துக்கொண்டே"வாட் ஆர் யு டூஇங்?" என தெனாவட்டாகக் கேட்டான்.

"இட்ஸ் நன் ஓஃப் யூவர் பிசினஸ்" - என்ற அதரப் பழசான சொலவடையில் கடந்து சென்றேன். நாட்டை ஆண்டால் என்ன? டேபிள் துடைத்தால் என்ன? வேலை செய்யும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் சாதாரண மனிதனாக வாழப் பழகினால் எல்லாமே கைகூடும். இதைத் தான் பள்ளிகள் கற்றுக் கொடுக்க வேண்டும். மாறாக போட்டி மனப்பான்மையையும், அமைதியின்மைக்கான சூழலையுமே தற்போதைய கல்விமுறை விதைத்துக் கொண்டு வருகிறது.

எத்தனை மாணவர்கள் தினம்தினம் குமுருகிறார்களோ!... அடக் கடவுளே...!

Tuesday, August 21, 2012

அகில இந்திய வானொலி

செல்ஃபோனுக்கு சிக்னல் கிடைக்காமல் முக்கியமான நேரங்களில் தவிக்க வேண்டி இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் பாதியில் சிக்னல் ஜேம்-ஆகி பேச்சு தடைபடுகிறது. செல்பேசியில் வந்த நண்பர்களை மீண்டும் அழைக்கும்போது "எங்கு விட்டோம்? எதில் விட்டோம்?" -என்று யோசிப்பதற்குள் பேச வந்த விஷயம் மறந்து பிரக்ஞையானது அந்தரத்தில் தொங்குகிறது. இதுபோன்ற சமயங்களில் என்ன செய்வதென்றும் புரிவதில்லை!. மெசேஜ் அனுப்பலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஐந்து குறுந்தகவலுக்கு மேல் (குறிப்பிட்ட காலம் வரை) அனுப்ப இயலாது என அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று, All India Radio வழங்கும் "மாத்தியோசி" நிகழ்ச்சியில் "நவீன தொழில் நுட்பம் நம்மை அடிமைப்படுத்துகிறதா?" என்பது பற்றி ஐந்து நிமிடங்கள் வருமாறு, உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அதற்கு முந்தைய நாளே கவிஞர் ஆசைத்தம்பி சொல்லியிருந்தார்.

என்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி, "நேராக ஸ்டுடியோ வந்துட்றேன் ஆசை. ஐந்து நிமிடம் என்ன? அரைமணி நேரம் வேண்டுமானாலும் பேசத் தயார். அதுதான் நல்லதும் கூட. பாருங்கள்... இந்த ஐந்து நிமிட சம்பாஷணைக்குள் இரண்டுமுறை பேச்சு அறுபட்டுவிட்டது" என்றேன்.

"இல்லைங்க கிருஷ்ணா. சுதந்திர தினத்துக்கு லீவ் என்பதால் நாளைக்கு யாரும் ஆபீஸ் வரமாட்டாங்க. ஃபோன்லயே மேனேஜ் பண்ணிக்க முடியுமா?" என்றார். அதன் பிறகு நம் கையில் என்ன இருக்கிறது. எல்லாம் அவன் செயல் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை, தனது நண்பர் குழாமுடன் ஜெயா கிராமத்திற்கு வந்திருந்தாள். விடுமுறை தினம் என்பதால் ஆந்திர எல்லைக்குச் சென்றுவர கிளம்பியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். மழை பெய்ய வேண்டிய காலத்தில் தகிக்கும் வெயிலை இதற்கு முன் கண்டதில்லை. வந்தவர்களை வழியனுப்பிவிட்டு, பத்தரை மணிவாக்கில் தகிப்பின் அசதியைப் போக்க குட்டித் தூக்கம் போடச் சென்றேன். சரியாக ஒரு மணிக்கு செல்பேசி அதிர்ந்தது. அவர்களே தான்....

"வணக்கம். நான் கிருஷ்ணபிரபு. மைன்ட் ஃபிரஷ் - என்ற கம்பெனியின் relationship Manager ஆக பதவி வகிக்கிறேன்." என்று ஆரம்பிப்பதற்குள் "உங்களின் பேச்சு உடைகிறது" என்றார் எதிர் முனையில் தொடர்பு கொண்ட நண்பர். முத்திரை மோதிரத்தை வைத்துக்கொண்டு சீதையைத் தேடியலைந்த அனுமன் போல - மொபைல் ஃபோனைக் கையில் வைத்துக்கொண்டு சிக்னல் சரியுமிடம் தேடி அலைய நேர்ந்தது. மூன்று அடுக்குகள் கொண்ட கான்கிரீட் கட்டிடத்தின் மேல் தளத்திற்குச் சென்று ஓர் ஓரத்தில் ஒதுங்கினேன். வெயில் மண்டையைப் பிளந்தது.
"நவீன தொழில் நுட்பம் நம்மை அடிமைப்படுத்துகிறதா?" - என்றவுடன் கல்யாண்ஜியின் கவிதையொன்று தான் நினைவிற்கு வருகிறது...

கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு
எப்படி முளைத்தன?
எதற்கு முளைத்தன?
"சிறகுகள்"

- என்று ஆரம்பித்துப் பேசினேன். காய், கனிகளை கல்லில் உடைத்து, தரையில் அடித்து சாப்பிட்ட காலம் மறைந்து, கத்தியால் அறுத்து சாப்பிட ஆரம்பித்ததே தொழில் நுட்பத்தின் வளர்ச்சி தான். ஒரு முனையில் இணையத்தின் மூலம் புரட்சி வெடிக்கிறது, அடுத்த முனையில் வெகுளிப் பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது. ஆகவே அறிவியல், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித வாழ்வின் இன்றியமையாத அம்சம் என்ற சாதக, பாதக புரிதலுடனே அது சார்ந்த மாற்றுக் கருத்தையும் அணுக வேண்டியிருக்கிறது.

ரயில் பயணமா? பேருந்துப் பயணமா? விமானப் பயணமா? - எதுவாக இருப்பினும் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே முன்பதிவு செய்துவிடலாம். வார விடுமுறையில் சினிமா பார்க்க விரும்புகிறீர்களா அதையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்துவிடலாம். பணப் பரிமாற்றங்கள் கூட இணையத்தின் மூலமே நடந்துவிடுகிறது. எதற்கும் சக மனிதர்களின் பிரயாசை தேவையில்லை. கடந்த இருபது ஆண்டுகளின் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களை ஓர் இயந்திர கதியில் தான் நகர்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இதன் சதவிகிதம் அதிகமோ அதிகம்.

ஏதேனும் ஓர் அலுவலகத்தில் நுழைய நேர்ந்தால், சுற்றிலும் கணினிகள். திரும்பும் இடமெல்லாம் மானிட்டர்கள். வேலை முடிந்து வெளியில் வந்தால் செல்ஃபோன். அதில் 'Texting, Radio Tuning, Listening songs, watching videos (Porn - என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை)' என செயல்படத் துவங்குகிறோம். பணத்தேவை எனில் ATM செல்கிறோம். திரையைத் தொட்டுத்தடவி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். வீட்டிற்கு வந்தால் தொலைகாட்சி என சட்டகத்தின் ஒளிரும் திரையில் (Monitor Screen) தான் நம்முடைய காலம் கழிகிறது. யாரும் பார்க்கவில்லை என்றாலும் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் நம்மவர்களின் விசேஷம் குணம். பெரியவர்கள் போலவே குழந்தைகளும் 'கம்பியூட்டர் கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன்ஸ்' என டிஜிட்டல் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சக மனிதர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவது இன்றுள்ள நிலையில் எல்லோர்க்கும் இரண்டாம் பட்சம் என்றாகிவிட்டது.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தரும் சிறப்பு வசதிகளை (Comfortable) பயன்படுத்திக் கொள்வதில் தவறே இல்லை. பணத்தையும் நேரத்தையும் அதன் மூலம் சேமிக்க முடியும் என்பதும் உண்மையே. ஆனால் மேலதிக சாதகமாகப் (advantage) பயன்படுத்தும் போதுதான் பிரச்சனை எழுகிறது. அந்தப் புள்ளியில் தான் அடிமைத்தனம் தொடங்குகிறது. "Internet, Mobile Phone, Digital video" போன்றவை நம்மைச் சிறைபடுத்தி வைத்திருக்கின்றது என்பது தான் உண்மை. சக மனிதர்களைக் காட்டிலும் சாதனங்களுடன் அதிகம் உறவாடுகிறோம். புன்சிரிப்பைக் காட்டிலும், ஸ்மைலியைத் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

கட்டற சுதந்திரத்தில் வாழ்வதாக நினைத்துக் கொண்டாலும், நவீன தொழில்நுட்ப சாதனங்களால் நாம் சிறைபட்டுத்தான் கிடக்கிறோம். கூண்டுக் கிளிகளுக்குப் பிறந்த பட்சியைப் போல. ஆகவே தான் கல்யாண்ஜியின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது என்று பேசி இருக்க வேண்டும். என முடிப்பதாக எண்ணம். உறக்கத்தில் இருந்து எழுந்ததால் யோசித்ததில் பாதியைத்தான் பேச முடிந்தது. மறுநாள் நிகழ்ச்சியைக் கேட்டபோது, சவுன்ட் எஞ்சினியர் நான் உளறியிருந்ததை - கத்தரித்து, வெட்டி, ஒட்டி ஒருவாறு சரி செய்திருந்தார். வெட்டுப்பட்டதில் தவறாக வாசித்த கல்யாண்ஜியின் கவிதையும் அடக்கம்.

டிஸ்கி: கவிதையை தப்பாக வாசித்தது, நண்பருடன் உரையாடி இணைப்பைத் துண்டித்த பிறகுதான் நினைவிற்கு வந்தது. அதற்குள் இரண்டுமுறை இணைப்பு துண்டித்தும், தடங்கல் ஏற்பட்டும் பேச நினைத்த விஷயத்தில் பாதிகூட பகிரவில்லை என்பது என்னளவில் வருத்தமே.

கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு
எப்படி வந்தன?
எதற்கு வந்தன?
"சிறகுகள்"

Wednesday, August 1, 2012

பொய்யாய் செதுக்கிய நாட்குறிப்பு - 02

சங்கிலியால் தொங்கிய மார ஊஞ்சலில் அந்த பெரிய மனிஷி வந்தமர்ந்தாள். உட்கார்ந்த வேகத்தில் ஊஞ்சலானது முன்னும் பின்னும் ஆடியது. அம்மாவிற்கு நெருங்கிய உறவு முறை என்பதால் பேச்சுக் கொடுத்தேன். உண்மையில் அந்தப் பெரிய மனுஷி ரெண்டு கை சொந்தம். அப்பாவிற்கு ரெண்டு மடங்கு தூரம் எனில், அம்மாவிற்கு அதில் பாதி தூர பந்தம் உண்டு. இனி நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

"பிளட் ஷுகர் எல்லாம் கண்ட்ரோல்ல இருக்குதா"

"எங்கப்பா... ஒண்ணுமே சாப்புடறது இல்ல... ஆனா ஷுகர் மட்டும் ஏரிக்குனே இருக்குது." என்றாள். எனக்குப் பாவமாக இருந்தது. "சரி சரி... கவலைப் படாதிங்க... எல்லாம் சரியா போயிடும்" என்றேன்.

"க்கும்... உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் போல..." என்றாள். மேலும் அவளை காயப்படுத்தாமல் பேச்சை மடை மாற்றுவதாக எண்ணிக் கொண்டு, எனக்கே தெரியாமல் உளறிவிட்டேன்.

"ஆமா... உங்க பேத்திக்கு கல்யாணமாமே! அவங்க லவ் பன்றவருக்கே பேசி முடிட்சிட்டிங்கலாமே... ரொம்ப சந்தோசம்..." என்றேன் யதார்த்தப் புன்னகையுடன்.

"எந்த நாயி சொன்னா அந்த மாதிரி... இது நாங்க பெரியவங்களா பார்த்து பேசி முடிச்சி வச்ச கல்யாணம். ஊருல இருக்கவங்களுக்கு வேற வேலை இருந்தா தான?" என்று காய வைத்த எண்ணையில் கடுகைத் தூக்கிப் போட்டது போல பொறிந்து அடங்கினாள்.

"ஊருல எல்லோரும் அப்படிதான் சொல்றாங்க" என்றவாறு நிலைமையைப் புரிந்தும் புரியாமல் பக்கத்தில் நின்றிருந்த அம்மாவைப் பார்த்தேன். ஆவி பறக்கும் காஃபியை ஆற்றியவாறு கண்களை உருட்டி சைகை செய்தாள்.

"அதெல்லாம் இல்லப்பா... ரெண்டு பேரும் காலேஜுல ஒண்ணா படிச்சாங்க. அந்தப் பையன் ஞாயித்துக் கெழமன்னா எங்க வீட்டுக்கு வருவான். மத்த படி 'லவ்'வெல்லாம் இல்ல..." என்றவாறு நீட்டிய காஃபியை வாங்கிக் கொண்டாள் பெரிய மனுஷி. அவள் சென்ற பிறகு என்ன சொல்லி திட்டலாம் என்பது போல இருந்தது அம்மாவின் உடல் மொழி. இதே அப்பாவின் சொந்தமாக இருந்திருந்தால் அவளும் சேர்ந்து கேள்விகளை அடுக்கி இருப்பாள். தனக்கும் நெருங்கிய சொந்தம் என்பதால் கொஞ்சம் திணறித்தான் போனாள். நானும் எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன்.

நாட்களும் சென்றது. மேற்படி சம்பவத்தையும் முற்றிலும் மறந்துவிட்டேன். அவசியம் இருந்ததால் சின்ன அண்ணனை செல்பேசியில் அழைத்தேன். "ங்கோத்தா... அவங்கள ரெண்டுல ஒன்னு பாத்துடறேன். பஜ்ஜேரிங்க நம்மள பத்தி இன்னாடா நெனட்சிக்குனு இருக்காளுங்க? முண்டைங்க..." என்று அடுக்கிக் கொண்டு சென்றான்.

"அடேய்... அடேய்... சும்மா இருடா! எதுக்கு இப்போ குதிக்கிற? அப்புடி இன்னாடா பண்ணிட்டாங்க உன்ன?" என்றேன்.

"அதெல்லாம் உனக்கு எதுக்கு? நான் சொல்ல மாட்டேன்" என்றான்.

"டேய்... சொல்றான்னா" என்றேன்.

"செருப்பால அடிக்கனமும்னு மத்தி (பெரிய மனுஷி)சொல்றா... பொட்டப் பயன்னு பேத்தி சொல்றா... போலீஸ்ல புடுட்சிக் கொடுக்கணும்னு சொல்றா அவளோட சித்திகாரி..." என கோவத்தில் கொக்கரித்தான்.

"ஆமா... யாரடா சொல்றாங்க?" என்றேன் ஒன்றும் புரியாமல்.

"ஆங்... ஊரையா சொல்லுவாங்க? உன்னதாண்டா" என்றான்.

"அவங்க அப்படியெல்லாம் திட்ட மாட்டாங்க. சும்மா யாராச்சும் சொல்லி இருப்பாங்க. என்னமோ நேருல கேட்ட மாதிரி கோவப் பட்ரையே..." என்றேன்.

"செல்போன ஆன் பண்ணி வச்சிட்டு, கேக்கட்டும்ன்ற திமுருல தான திட்டுறாங்க " என்றான் அடக்க முடியாத கோவத்தில்.

"டேய்... அவங்க என்ன தான திட்டுறாங்க. எனக்கே கோவம் வரல. நீ ஏன் குதிக்கிற" என்றேன்.

"ம்...மயிறு நீ அங்க இங்கன்னு போயிடுற. நாலு பேரு பேசறத நாங்க தான கேக்க வேண்டியிருக்கு. சும்மா இருக்க நம்ம என்ன அவளுங்க சொன்ன மாதிரி பொட்டைங்களா?" என்றான்.

பெரிய மனுஷியின் பேத்தியை பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வந்து கொண்டிருக்கின்றனர். அம்மாவின் நெருங்கிய உறவு என்பதால் எங்கள் வீட்டையும் அழைத்திருந்தார்கள். அங்கு செல்வதற்கு முன்பு எதையோ கேட்பதற்காக, செல்பேசியில் கூப்பிட்டு பேச நினைத்து, அவர்கள் திட்டுவது காதில் விழுந்து - அண்ணன் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பதாக அம்மாதான் தெரியப் படுத்தினாள்.நானும் ஒரு வழியாக அவனை சமாதானம் செய்தேன். ஆனால், இரண்டு கண்டிஷன்களை என்னிடம் சொன்னான். அதாவது...

"1. அந்த நாய பொண்ணு பார்க்க வராங்க இல்ல. நம்ம வீட்டுல இருந்து யாரும் போகக் கூடாது
2. அந்த பன்னியோட கல்யாணத்துக்கும் போகக் கூடாது"

என்றான் தீர்மானமாக. இதென்ன பிரமாதம் என்று நிலைமையை சமாளிக்க நானும் ஒத்துக் கொண்டேன். அம்மாவிற்கு இதில் ஏக வருத்தம். "அடப் பாவிங்களா! ஒண்ணுமில்லாத விஷயத்த இப்புடிப் பெருசாக்கி சொந்த பந்தத்தைப் பிரிக்கிறிங்களே?" என்றாள் அழுவாத குறையாக.

இரண்டு நாட்களில் கோவம் தணியும் என்று நினைத்தேன். ம்ஹூம்... அண்ணனின் கோவம் தணிவது போலத் தெரியவில்லை. உறவு முறையில் சித்தப்பா மகன் என்னிடம் வந்தான்.

"அந்த பொட்ட நாயிங்கள ரெண்டுல ஒன்னு பாத்துடனும்" என்றான்.

அதெப்படி சில ஆண்களுக்கு பெண்கள் பொட்டைகளாகவும், சில பெண்களுக்கு ஆண்கள் பொட்டைகளாகவும் தெரிகிறார்கள் என்பது விளங்குவதே இல்லை. பள்ளி மற்றும் கல்லூரி விடலைகள் கோவத்தில் சக நண்பனையோ அல்லது எதிர் கூட்டணியில் உள்ளவனையோ "போடா பொட்ட" என்று திட்டுவதை அதிகமாகக் கேட்க முடிகிறது.

"எதோ கோவத்துல பேசிட்டாங்க வுடுடா!" என்றேன்.

"ஊருல எல்லாரும் இதப் பத்திதான் பேசிக்குறாங்க. உனக்கு கொஞ்சம் கூட ரோஷமே வரலையா? உனக்கு ஒடம்புல ரத்தம் ஓடுதா இல்ல சீழ் ஓடுதா?" என்றான்.

"ஹ ஹ ஹ ஹா ஹ" என சத்தம் போட்டு சிரித்தேன்.

"போடா போடா... உன் மூஞ்சில மொட்ட நாயி பீ பேல" என்றான். நான் அடக்க மாட்டாமல் வானத்தை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தேன். வெண்மேகத் திட்டுக்கள் சமாதானப் புறாவைப் போல கடந்து சென்றன.

Sunday, July 22, 2012

வெறுமனே சும்மா இருக்கிறேன்

“இப்போ என்னதான் செய்யுறீங்க?” என்ற கேள்வியை கடந்த இரண்டாண்டு காலமாகவே என்னைப் பார்க்கும் நண்பர்களும், உறவினர்களும், நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். “வெறுமனே சும்மா தான் இருக்கிறேன்” என்ற பதிலில் அவர்கள் உறைந்து போகிறார்கள். “இது பெரிய தப்பு இல்லைங்களா? பொறுப்பில்லாம இப்படி ஒன்னும் செய்யாம இருக்கலாமா?” என்ற கேள்வி அவர்களிடமிருந்து எழும் சமயம், “ஒன்றும் செய்யாமல் இருப்பது வேறு. சுற்றி நடப்பவற்றின் சாட்சியாக, வெற்றுக் கோப்பைபோல வெறுமனே சும்மா இருப்பது முற்றிலும் வேறு” என உதட்டிலிருந்து புன்னகை வழிய பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

“என்னமோ சாமியார் மாதிரி பேசுற...! இதெல்லாம் நல்லதுக்கில்ல... வயசு இருக்கும்போதே ஓடியாடி சம்பாதிச்சிடனும்” என்கிறார்கள்.

முற்றிலும் பயம் தான் இவர்களிடம் ஒளிந்திருக்கிறது. இறந்த காலத்தின் வேர்கள் பற்றி, நிகழ்காலத்தில் முளைவிடும், எதிர்காலம் பற்றிய நிச்சயமில்லா தன்மை பற்றிய பயம். “காலத்தை உணராமல் பயத்தை உண்மையில் போக்க முடியாது” – என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதனை பெரிதுபடுத்தி விவாதிப்பதற்கில்லை என்றாலும், ‘ஒன்றும் செய்யாமல்’ என்பது ‘வெறுமனே’-விலிருந்து துருவம் போல் விலகி நிற்கிறது என்பதை நம் மக்களுக்கு எதைக் கொண்டு புரிய வைக்க.

“Being Still is not the same thing as doing nothing” என ‘கராடே கிட்’ படத்தில் ஜேடன் ஸ்மித்திடம் (jaden smith) ஜாக்கிசான் சொல்வதுபோல ஓர் இடம் வரும். இந்த உன்னத தத்துவத்தை எத்தனைபேர் கவனித்திருப்போம். வாழ்வின் சாரமே இந்த ஒற்றை வரியில் தான் அடங்கியிருக்கிறது என்பது என்னுடைய எண்ணம். சில நொடிகளில் காற்றில் கரைந்து தேய்ந்துபோகும் இந்த ஒற்றை வரி தரிசனத்தை, பாறையானது அடைகாக்கும் உயிர்ப்புள்ள தேரையைப்போல வாழ்வெல்லாம் அடைகாக்க ஆசைப்படுகிறேன்.

புத்த நிலையின் நான்கில் ஒன்றை உரசத் துடிக்கும் பிக்குகளும், ஜென் துறவிகளும், சூபிகளும், சித்தர்களும், பக்கிர்களும் – இந்த ‘Being still’ என்ற சூட்சமத்தில் தானே சூல்கொள்ளப் போராடுகிறார்கள். அதில் தானே இன்பமும் இருக்கிறது.

“அதெப்படி வெறுமனே இருக்க முடியும்? போர் அடிக்காதா?” – என்ற கேள்வி இன்னும் சுவாரஸ்யம் நிறைந்தது.

இதற்கும் என்னிடம் பதிலில்லை. என்றாலும் ஆயிரமாயிரம் புதிர்களும், ஆயிரமாயிரம் திருப்பங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை. சிலசமயம் பேருந்துகளில் பார்த்ததுண்டு. விடுபட்ட கட்டங்களில் வார்த்தைகளையும், எண்களையும் இட்டு நிரப்பும் விளையாட்டை, நாற்பது வயதைக் கடந்தவர்கள் கவனம் பிசகாமல் விளையாடுவதைக் கண்டதுண்டு. ‘குறுக்கெழுத்து, சொதோகு’ – என ஏதேதோ பெயர் சொல்லி விளையாடுகிறார்கள். அவற்றையெல்லாம் விட வாழ்வின் யதார்த்தப் புதிரை எதிர்நோக்குவதும், ஆர்வத்துடன் சிக்கவிழ்ப்பதும் எவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது.

இங்கு சலிப்பானது எங்குதான் முளைவிடுகிறதோ தெரியவில்லை. “படிப்போ, பணமோ, புகழோ, வேலையோ, பெண்ணோ, சிற்றின்பமோ” – ஏதோ ஒன்றை அடைய விரும்புவது தவறில்லை. அதற்காக முக்காலத்தையும் அடகு வைக்க வேண்டுமா என்ன? சலிக்காத பயணமாகத் தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அதில் அறியப்படாத பல முகங்கள் தலை காட்டிவிட்டுச் செல்கிறார்கள். குளத்தில் எறிந்த கல்போல அவர்களின் நினைவுகள் சலனத்தை ஏற்படுத்த, சலிப்பானது ஆழம்கானா களிம்புச் சேற்றில் புதைந்து கிடக்கிறது என்று நினைக்கிறேன். இதுவரை சலிப்பின் சுவடைக் கூட என்னால் காண முடியவில்லை.

“உங்களுடைய டெய்லி ரொட்டின்ஸ் தான் என்ன?”

போதுமான அளவு சாப்பிடுவதும், தூங்குவதும் தான் பிரதானம். மீதி நேரத்தில் பயணம் செய்வேன். குறைவாக தமிழ் புத்தகங்கள் படிக்கிறேன். யாரேனும் சந்திக்க அழைத்தால் நேரில் சென்று உரையாடுகிறேன். தட்ஸ் இட்.

“தமிழ் புக்ஸ் படிச்சா என்ன பிரயோஜனம்? இங்கிலீஷ் புக்ஸ் படிச்சா நாலேஜ்-ஆவுது வளரும் இல்ல?”

உஹ்... வேதாளம் போல் தொடரும் கேள்வி இது. "அறிவானது நிம்மதியைக் கெடுத்து விடும். இயந்தர கதியில் ஓட நம்மைத் தயாற்படுத்திவிடும். ஆகவே அதனைப் பெருக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை" என சுருக்கமாக முடித்துக் கொள்ள பழகிவிட்டேன்.

"அப்போ... வாழ்க்கையில் என்ன தான் செய்வதாக உத்தேசம்?"

என்னைப் பார்த்து புன்னகை செய்பவர்களுக்கு புன்னகைக்கப் போகிறேன். என்னிடம் கைகொடுத்து பேசுபவர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசப் போகிறேன். அவ்வளவே...

"இதெல்லாம் உருப்படுறதுக்கான வழியில்லை...! நாசமா போகப்போற?" என்று சபிப்பதுபோல் அக்கறையாகப் பேசுகிறார்கள்.

நான் பள்ளி வாழ்க்கையில் சுமார். கல்லூரி வாழ்க்கையில் மிக மட்டம். இதையெல்லாம் மீறி ஏதோ நாலுபேர் நின்று அக்கறையுடன் பேசும்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் படிப்பில் தோல்வி கண்டபோதெல்லாம் "நீ ரொம்ப கஷ்டப் படப் போற... நாசமாப் போகப்போற" என்று பயத்தை விதைத்தார்கள். உணவகத்தின் எச்சில் டேபிளை தொடைக்கும் வேலைக்குத் தான் லாயக்கி என்று பரிகசித்தார்கள். அந்த நாட்களில் மன அழுத்தத்தின், உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்தில் இருந்தேன். காலம் என்னைக் கறை தேற்றியது.

செய்யும் இடத்தின் பாப்புலாரிட்டியோ (Brand Name), செய்யும் வேலையோ நம்மை அடையாள படுத்திவிடாது. செய் நேர்த்திதான் காலம் கடந்தும் நிற்கும். அதிலுள்ள புதுமைதான் நிகழ் காலத்திலும் மெச்சப்படும் என்பது என் எண்ணம். ஆகவே, ஒரு பொதுக் கழிப்பிடத்தைக் காண்பித்து சுத்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டால், என்னுடைய தன்மை மாறாமல், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல், கொடுத்த வேலையை எப்படிச் செய்யலாம் என்று யோசிப்பேன்.

மேலும், "மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாம் நல்லா வரும்போது... நமக்கு என்னங்க கொறை"... நமக்கும் நாலு நல்ல உள்ளங்கள் இருக்கத் தானே செய்யுறாங்க.

"ம்ஹூம்... ஒரு கால்கட்டு போட்டால் தான் திருந்துவன்னு நெனைக்கிறேன்?" என்கிறார்கள்.

இதென்ன கதை. கல்யாணம் என்பது மன நிறைவுடன் வாழ்வதற்குத் தானே. அதை ஏன் சிறைபடுத்தும் வைபவமாகப் பார்க்க வேண்டும்? இந்தப் பொதுப்புத்தி மிகத் தவறான வாதம். யூ பிளடி ஃபூல்ஸ்.... யூ ஹவ் டு சேஞ்ச்ஜ் யுவர் மென்டாலிட்டி...

"ஆகட்டும் பிறகு பார்ப்போம்!" என்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை? ஏன் இவர்கள் வாழ்க்கையை பணம் ஈட்டும் ஒரு வியாபாரமாகவே பார்க்கிறார்கள் என்று!

"சரி... கல்யாணமாகி ஒரு கொழந்த பொறக்கட்டும்!" என்கிறார்கள்.

அதைத் தான் நானும் சொல்கிறேன். அதது நடக்கும்போது நடக்கட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்வோம். அதுவரை நிகழ்காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியது தானே. ஒவ்வொரு நாள் கண்விழிக்கும் போதும் நினைப்பதுண்டு, "இன்றைய தினமே பூமியில் எனக்கு கடைசி தினமாகவும் இருக்கலாம்" என்று.

ஆகவே காட்டாற்று வெள்ளம் போல, சுழன்றோடும் காற்றைப் போல, வழிந்து செல்லும் மேகம் போல, சிறகடித்துப் பறக்கும் பறவைபோல... இன்னும் இன்னும் கட்டற எல்லாவற்றையும் போல இருந்துவிட்டுப் போகவே ஆசைப்படுகிறேன்... எனக்கான எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொண்டு... பாரதி சொல்வானே "விசைகொண்டு எறிந்த பந்தைப் போல" என்று அதைப் போல...

வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்ப்பது. எனவே அதன் போக்கில் வாழ்ந்துதான் பார்ப்போமே. எதிர்காலம் குறித்த தேவையில்லாத சஞ்சலங்கள் எதற்கு.

சுபம்... மங்களம்...

Tuesday, July 17, 2012

தமிழ் ஸ்டுடியோ – அறச்சீற்றம்

கொதிக்கும் உலையை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?

தமிழ் ஸ்டுடியோ அருண் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர். அருமையானவரும் கூட. அவரின் உற்ற நண்பர்களான குணா மற்றும் தயாளனையும் நன்கறிவேன். ஆழமான நட்பு இல்லையென்றாலும், எங்காவது சந்தித்தால் நலம் விசாரித்துக் கொள்ளும் அளவிற்கு பழக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அருணும் குணாவும் தனியாளாக போராடிக் கொண்டிருந்த நாட்களிலிருந்தே தெரியும். ஆரம்பத்தில் அவர்களுடைய கவனம் முழுவதும் குறும்படங்களின் மீதுதான் இருந்தது. பின் ‘படிமை’ என்ற குறும்பட பயிற்சிப் பட்டறையைத் துவங்கினார்கள். அதில் சேர்ந்து பயின்ற சில தம்பிகள் கூட எனக்குப் பரிட்சயம் உண்டு. இன்னும் சொல்லப் போனால், தமிழீழம் சார்ந்த குறும்படமான “18 தீக்குச்சியை” மருமகன் முத்து தயாரிக்க முன்வந்த போது படிமையின் பயிற்சி மாணவரான ‘செந்தூரனை’த் தான் ஈழத் தமிழ் உட்சரிப்பு சரிபார்பிற்காக நாடினேன்.

பிறகு “கதை சொல்லி, கொஞ்சம் தேநீர் கொஞ்சம் அரட்டை, ஊர் சுற்றலாம் வாங்க” என அவர்களுடைய முயற்சி பல துறைகள் சார்ந்தும் விரிந்து சென்றது. கேணி சந்திப்பின் ஒலி நாடாக்களை அவர்களுக்குக் கொடுத்து தமிழ் ஸ்டுடியோ இணையப் பக்கத்தில் கூட போடச் சொல்லி இருக்கிறேன். அவருடைய சீரிய பங்களிப்பு ஒருபுறம் இருக்கட்டும். நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறதுதானே? பூவும் தலையும் சுண்டிவிட்டால் தானே தெரியும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அருண் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார். அணு உலைக்கு எதிராக எழுத்தாளர்கள் முழு மூச்சில் செயல்படவில்லை என்று. அவர்கள் தெருவில் இறங்கி போராட முன்வர வேண்டும் என்றும் சொல்லாமல் சொல்லியிருந்தார். அவர்களுக்கு பொறுப்பில்லை என்ற தொனியிலும் சொல்லியிருந்தார். அதற்கு பின்வருமாறு நான் மறுமொழி கூறியிருந்தேன்.

“இதோ பாருங்கள் அருண். தெரியாமல் பேசக் கூடாது. சாகித்யமி அகாடமி விருது வாங்கியவர்கள் உட்பட முக்கியமான எழுத்தாளர்கள் உட்பட 25 எழுத்தாளர்கள் முதலமைச்சரை காண வேண்டி நேரம் கேட்டிருக்கிறார்கள். இன்று வரை அவர்களைக் காண முதல்வர் நேரம் கொடுக்கவில்லை. எல்லோரும் கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்” என்றும் சொல்லியிருந்தேன். (ஞாநியும் பாஸ்கர் சக்தியும் அவர்களில் அடங்குவர்.) அதுவுமில்லாமல் அணு உலை அபாயம் பற்றி கவிஞர்களும் எழுத்தாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே என்றும் சொல்லியிருந்தேன்.

இதுபோன்ற அடுத்தடுத்த பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் ஸ்டேடசையே டெலிட் செய்துவிட்டார். சரி போகட்டும் அவருடைய அணுகல் முறை அப்படி என்று விட்டுவிட்டேன்.

அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சி பற்றி எதோ பகிர்ந்திருந்தார். அதற்கு அவருடைய பின்தொடர்தலில் இருக்கும் வளர்ந்துவரும் சினிமாக் கலைஞர்கள் வறுத்தெடுத்து விட்டார்கள். எதோ நானும் என்னுடைய குறை அறிவிற்கு எட்டிய சில கேள்விகளை எழுப்பி இருந்தேன். அதற்கு அவருடைய பதில் “உங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை” என்பதாகத் தான் இருந்தது.

அடுத்து அ. முத்துலிங்கத்தின் பவித்ரா சிறுகதையை மருமகன் முத்து தயாரித்து, விக்னேஷ்வரன் விஜயன் ‘சித்ரா’ என்ற குறும்படமாக எடுத்திருந்தான். அதற்கு தமிழக அளவில் இரண்டு விருதுகள் கிடைத்தது. அதில் தமுஎகச அளித்த முதல் பரிசு குறிப்பிடத்தக்கது. இந்த குரும்படத்தைப் பற்றி திரு. அருண் அவர்கள் ஒரு ஸ்டேடஸ் பகிர்ந்திருந்தார்.

/-- நிறைய நல்ல குறும்படங்களை இந்த ஆண்டு பார்த்தேன். ஆனால் நெய்வேலி புத்தக காட்சியில் பரிசு பெற்ற படங்களை விட அவை நல்ல படங்கள். தவிர சித்ரா அ. முத்துலிங்கம் அவர்களின் கதை என்பதை விட படம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல என்னால் முடியவில்லை. இப்படி ஒரு படம் எடுக்கிறோம் என்று முத்துலிங்கம் அவர்களிடம் அனுமதியோ, அல்லது எடுத்த பிறகோ அவருக்கு தெரிவிக்கவோ இல்லை என்று வேறு கேள்விப் பட்டேன்.

திருடி எடுக்கப்படும் படங்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம். --/

அதற்கு பின்வருமாறு நான் பதில் சொல்லியிருந்தேன்.
/-- இப்படி ஒரு படம் எடுக்கிறோம் என்று முத்துலிங்கம் அவர்களிடம் அனுமதியோ, அல்லது எடுத்த பிறகோ அவருக்கு தெரிவிக்கவோ இல்லை என்று வேறு கேள்விப் பட்டேன்.--/

அ முத்துலிங்கமே கனடா திரைப்பட விழாவிற்கு இதன் ஒரு பிரதியை அனுப்பி வைக்குமாறு கேட்டிருப்பதாக அதன் இயக்குனர் நீண்ட நாட்களுக்கு முன்பு தெரியப்படுத்தி இருந்தார்.

/-- திருடி எடுக்கப்படும் படங்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்.--/

முழு விஷயம் தெரியாமல் பேசக்கூடாது தோழர்களே. அந்தக் கதையை பாலு மகேந்திரா எடுப்பதற்காக உரிமம் பெற்றிருந்தார். அது சார்ந்து பாலு மகேந்திராவுடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை,

இலக்கியத்தை நாடி காட்சிப் படுத்துபவர்கள் மிகக் குறைவு. அவர்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள். என்றும் சொல்லியிருந்தேன். அதனுடன் அ முத்துலிங்கம் விக்னேஸ்வரனை பாராட்டி எழுதியிருந்த சுட்டியையும் கொடுத்திருந்தேன்: http://amuttu.net/viewArticle/getArticle/276

அதோடு அருண் வேறொரு ஸ்டேடஸ்-க்கு பார்த்து பறந்துவிட்டார். சமீபத்தில் ‘பருத்திவீரன்’ படம் பற்றி அடூர் கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பதாக ஏதோ ஒன்றை பகிர்ந்திருந்தார். பகிர்வின் முடிவில் “ஏதும் தெரியாமலே தையா தக்கா” என்று குதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருந்தார். கவிஞர் மகுடேஸ்வரன் உட்பட இன்னும் சிலர் அதைப் பற்றிய மாற்றுக் கருத்தை முன் வைத்திருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். மற்றவர்களைவிட என்னுடைய கருத்து அருணை கலக்கப்படுத்தி இருக்க வேண்டும். மேற்கூறிய விஷயங்களைத் தான் பகிர்ந்திருந்தேன் வேறொன்றும் இல்லை.

முடிவில் இப்படிச் சொல்லியிருந்தேன், “நீங்கள் ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை அருண். கூட்டம் சேர்ந்துவிட்டது. அகவே உங்களை விளம்பரப் படுத்திக் கொள்கிறீர்களோ என்ற சந்தேகப் பார்வை வலுக்கிறது. மேலும் உங்களுடைய அரைவேக்காட்டுத் தனமான பகிர்தல்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்ற பொருள் வரும்படி எதோ சொல்லியிருந்தேன். ரிஷி மூலத்திலிருந்து சில விஷயங்களை சொல்லி இருந்ததால் என்னுடைய பின்னூட்டங்களை அழித்ததுடன், என்னையும் நட்பு வட்டத்திலிருந்து பிளாக் செய்துவிட்டார். அதுகூட என்னுடைய தம்பி மணி பார்த்து சொல்லியதும் தான் தெரிய வந்தது.

மேலும் அருண் அவருடைய ஸ்டேடசில் இப்படிப் பகிர்ந்திருக்கிறாம், “அருண் மற்றும் தமிழ் ஸ்டுடியோ பற்றி எதுவும் தெரியாமல், காழ்ப்புடன் கருத்து தெரிவித்திருந்தமையால் என்னை நண்பர் வட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாக கவிஞர் மகுடேஸ்வரனுக்கு” பதில் சொல்லி இருக்கிறார் போல. நான் என்னத்தைக் கண்டேன். திருநள்ளாறில் தொலைத்ததை மீண்டும் சென்று யாரும் சீண்டுவார்களா என்ன? விட்டது எல்லாம்....

நேர்மையாக விமர்சனத்தை அணுகவேண்டும் என்று ஸ்டேடசுக்கு ஸ்டேடஸ் புரட்சி பேசும் அருண், என்னை நட்பு வட்டத்தில் வைத்துக் கொண்டே பேசி இருக்கலாமே. எது எப்படியோ?! எனக்கு நிம்மதிதான்.

என்றாலும் “புரியவில்லை என்ற ஃபேஸ் நண்பர்களுக்காக” மேலும் ஒரு விஷயத்தை பகிர விழைகிறேன். ‘வழக்கு எண் 18/9’ – பற்றி கறாரான விமர்சனத்தை அருண் முன் வைத்திருக்கிறார். அருண் ‘என்ன பேசினார்? ஏது பேசினார்?’ என்று எனக்குத் தெரியாது. எரிச்சலுற்ற இயக்குனர் வசந்தபாலன் அருணை நட்பு வட்டத்திலிருந்து நீக்கி இருக்கிறார். உடனே அருண் கொண்ட அறத்சீற்றம் இருக்கிறதே. அது சிங்கத்தின் கர்ஜனை!

வசந்தபாலன் நேர்மையாக விமர்சனத்தை அணுகாமல் தன்னை ஒதுக்கிவிட்டார். என்று புலம்பித் தள்ளியிருந்தார். நான் கூட அதனை ஷேர் செய்திருந்தேன். அதுவும் பின்வருமாறு எழுதி...

“மனிதன் ஓரமாகச் சென்று ஒதுக்கி வைப்பவை மட்டுமல்ல மலம். மனிதனை ஒதுக்கி வைத்தால் அவனும் மலமே” – என்று சொல்லியது ,மட்டுமல்லாமல், வசந்தபாலனுக்கு என்னுடைய கண்டனங்களையும் தெரியப் படுத்தி இருந்தேன். இன்று ‘என்னை’ - அருண் ஒதுக்கி வைத்திருக்கிறார். இதைப் பற்றிதான் “வசந்தபாலன் உடைத்தால் பொன் சட்டி!”, “அருண் உடைத்தால் மண் சட்டியா?” என்று கேட்டிருந்தேன். வேறொன்றும் இல்லை தோழர்களே. இப்பொழுது புரிந்ததா?

குறிப்பு: ஃபேஸ் குடுமிப்பிடி விமர்சன கலாட்டாவில் குழப்பம் அடைந்த நண்பர்களுகு சமர்ப்பணம்.

Wednesday, July 11, 2012

பொய்யாய் செதுக்கிய நாட்குறிப்பு - 01

அன்றொருநாள் பெருஞ்சாரலுடன் நல்ல காற்று. கொடுத்து வைத்தவன் போல், வீட்டின் முற்றத்தில் இருந்த பிரம்புக் கூடையில் ஆடிக் கொண்டிருந்தேன். மேகத்தின் உரசல் மின்னலென வெட்ட, இடியானது மழையுடன் சல்லாபிக்கிறது. அறிமுகமான நண்பர் செல்பேசியில் அழைத்தார். அந்த துக்கச் செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பேசியவர்...

"கிருஷ்ணா, நம்ம ஃஷார்ட் பில்முல ஒரு சாங்கு இருக்கு. டியூன் கூட ரெடி. பாடல் வரிகளை நீங்க தான் எழுதுறீங்க" என்றார்.

எனக்கு ஷாக் அடித்தது போல இருந்தது. வம்சத்தின் நலம் கருதி, தேவவிரதன் பிரம்மச்சரிய விரதம் பூண்டு பீஷ்மர் ஆனது போல, உலகை உய்விக்க வாழ்நாளில் ஒருக்காலும் கவிஞன் ஆவதில்லை என நானும் சபதம் எடுத்திருப்பதை நண்பருக்கு விளக்கமாகக் கூறினேன். அவரோ புரிந்து கொண்டபாடில்லை. கொட்டித் தீர்க்கும் மழையை ரசிக்க விடாமல் அவரும் ஒற்றைக் கால் கொக்குபோல தன்னுடைய நிலையில் உறுதியாக நிற்கிறார். தூக்கம் வருவதாக பொய்சொல்லி, தொடர்பை துண்டித்துக்கொண்டு மழையை ரசிக்கத் தொடங்கினேன்.

நீண்ட நாள் கழித்து அதே நண்பர், "குறும்படம் முடிந்து விட்டதாகவும், அவசியம் திரையிடலுக்கு வரவேண்டும்" எனவும் செல்பேசியில் அழைப்பு விடுத்தார். ஏ. வி. எம் ஸ்டுடியோவில் நடந்த திரையிடலுக்கு திரளான இளசுகள் வந்திருந்தனர். "இவன நம்பி இவ்ளோ பேர் எந்த தைரியத்தில் வந்திருக்காங்க" என்று நினைத்துக் கொண்டேன். அருகில் சென்று "சீப் கஸ்ட்" யாரென்று கேட்டேன். கொலையான வெறியுடன் மெட்டமைத்த இசை வல்லுநர் என்றார்கள். ஆமாம்... இங்ஙனக்குல்லையே கேட்டுக்குறா மாதிரி மியூசிக் நோட்ஸ் எழுதுபவர்கள் வெறும் இசை அமைப்பாளர்கள். அங்கிங்கெனாதபடி அகிலமெல்லாம் கேக்குறா மாதிரி மியூசிக் அடிச்சா ((காப்பி)) அவங்க பரிசுத்தமான இசை வல்லுநர்கள் என்பது நம்மோர் கணக்கு.

"வல்லுனரும்...இதோ வருவார், அதோ வருவார்" என்று காத்துக் கிடந்தார்கள். பூப்பெய்தியவள் பிள்ளைபெற்று, பேரப் பிள்ளையும் கண்டு, பிடிச்சாம்பலாய் மாறவேண்டி காடுகூட செல்லும் நிலை வரலாம், அந்த செலப்ரிட்டி தான் வந்தபாடில்லை. நண்பருக்கு முதல் அனுபவம் என்பதால் பதட்டத்துடன் இருந்தார். மெல்ல நெருங்கி யோசனை சொன்னேன். "நீங்கள் ஏன் திரையிடலை ஆரம்பிக்கக் கூடாது?. இவ்வளவுபேர் எதற்காக காத்திருக்க வேண்டும்? இது அநியாயம் இல்லையா?"

"செலேப்ரிட்டி கோச்சிப்பாரே கிருஷ்ணா" என்றார்.

"கோவம் வந்தா கோழிப் பீயில கொண்டு கையை வைக்கச் சொல். மேலதிகமாக உன்னுடைய நடுவிரலை மட்டும் அவருடைய முகத்திற்கு நேராகக் காண்பி" என்றேன்.

"பாட்டெழுத மாட்டேன்னு சொன்னிங்களே, அன்னைக்கே காட்டியிருக்க வேண்டும். இதோ இப்போ காட்டறேன் பாத்துக்கோங்க" என்று முகத்திற்கு நேராக விரலைக் காண்பித்தார். பதிலேதும் சொல்லாமல் இருட்டறையில் சென்று அமர்ந்துகொண்டேன். அழுதிருந்தால் கூட யாருக்குத் தெரியப்போகிறது. ஆறுதல் சொல்ல விஸ்காம் மாணவர் தினேஷ் ஆதி மட்டுமே அருகில் இருந்தார். ஆரம்பத்தில் பாடல் ஒளிபரப்பானது. வரிகள் கூட கேட்கும் படியாகத் தான் இருந்தது. அதைத் தொடர்ந்து திரையிடல் முடிந்து வெளியில் வந்ததும் தான் விசாரிக்கத் தோன்றியது. அந்தப் பாடலை எழுதியது யாரென்று?. படத்தின் இயக்குனரே பாடல் வரிகளை எழுதியதாகச் சொன்னார்கள். மிக மோசமான படமாக்களுக்கும், சுமாரான வரிகளுக்கும், கேட்கும்படியான இசைக்கும் மௌனத்தால் வாழ்த்து சொல்லி விடைபெற்று வீடு திரும்பினேன்.

சமீபத்தில் அந்த நண்பர் மீண்டும் அழைத்தார். "கிருஷ்ணா, ஒரு டெலிபிலிம் எடுக்கப்போறேன். ஒரு டீம் ஃபார்ம் பண்ணி தீயா ஒழட்சிட்டு இருக்கோம். நீங்க ப்ரொடக்ஷன் மேனேஜரா ரோல் எடுத்துக்க முடியுமா? இட்ஸ் எ மேட்டர் ஆஃப் மணி. தட்ஸ் வொய்?" என்றார்.

இங்குதான் தோழரின் புத்திக் கூர்மையை ஆலிங்கனம் செய்ய வேண்டும். திருடன் என ஊருக்குத் தெரிந்தவன் தானே காவலுக்கு உகந்தவன். என்றாலும் சுதாரித்துக் கொண்டு அறிவுரை வழங்கினேன். "வெக்கிறதுக்கு எடமில்லன்னு மசால் வடைய கொண்டுட்டு போயி எலிப் பொந்துல வக்கலாமா? நானோ ஐ.டியில் வேலை செய்தவன். அதுவுமில்லாம கற்பூரம் கணக்கா கையில இருக்குற காசயெல்லாம் காத்துல கரக்கிறவன் நானு. இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்க வேற ஆளப் பாருங்க" என்றேன். நம்ம சர்க்கிள்ல இருக்க பூரா பயலுங்களும் திருடந்தான்னு இந்தாளு மோப்பம் புடிச்சிருப்பான் போல."உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரையாவது ரெகமன்ட் பண்ணுங்க" என்றார்.

மண்டையில அடப்பெடுத்து யோசிச்சி பாத்ததுல உதவி இயக்குனர் யோகிதான் நினைவிற்கு வந்தான். தம்பியான தம்பியை அழைத்துக் கொண்டு தோழரிடம் சென்றேன். "இவ்வளோதான் பட்ஜெட், இதுதான் ஸ்டோரி" என ஒன்லைன் சொல்லியவரைப் பார்த்து யோகி சிரித்தான். தோழருக்குத் தெரியாதவாறு அவனைச் சீண்டி, "சிரிக்காதே... தப்பா நெனட்சிக்கப் போறாரு" என்று சமிஞ்ஞை செய்தேன். யுத்தக் களத்தில் நிற்பதுபோல் எதிரில் இருப்பதால் அவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?. சுதாரித்துக் கொண்டு யோகியைப் பார்த்து "ஏன்டா சிரிக்கிற? அவரென்ன பைத்தியக்காரனா? இல்ல அம்மணமா நிக்கிறானா? ஜாக்கரத ஆமான்னு..." நொங்கு நொங்கென பனை போல் வளர்ந்தவனின் தலையை எட்டி எட்டிக் கொட்டினேன்.

"நோவ்... சும்மா இருங்கண்ணா? இதே கதையதான் எங்க சாரு படமா எடுக்கப் போறாரு. ஸ்கிரிப்ட் வொர்க் போயிட்டு இருக்கு. பின்னே இவரு கூட எப்படி-ணா இருக்கது. அதெல்லாம் தப்பா போயிடும். நீங்க வேற ஆளப் பார்த்துக்கோங்க" என தேனீர் பருகிக் கொண்டிருந்த கண்ணாடித் தம்ளரை டங்கென வைத்துவிட்டு புறமுதுகைக் காட்டியவாறு நடந்து சென்றான். தோழரைக் கூப்பிட்டுக் காண்பித்தேன். "அவன் எதக் காமிட்சிக்குனு நடந்து போறான் பாத்தியா?".

"உலகத்துல எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் நமக்கு முன்னாடி நடந்து போனால், அவனோட முதுகுதான் தெரியும் கிருஷ்ணா" என்றார்.

"முதுகுக்குக் கீழதான் புட்டம் இருக்கு. அவன் நமக்கு சூத்த காம்சிட்டு போறான்டா நேந்து வுட்டப் பாவி. இந்த மானபங்கம் எனக்குத் தேவையா?" என்றேன்.

"இதெல்லாம் ஒண்ணுமே இல்ல கிருஷ்ணா. இன்னும் நம்ம எவ்வளவோ பாக்க வேண்டியிருக்கு" என்றார் உருக்கமாக.

"எனக்கெதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு. இந்த நம்ம நம்ம-ன்ற சமாச்சாரத்த எல்லாம் இன்னியோட நிறுத்திக்கோ" என கோவத்தில் முஷ்டியை மடக்கி தோழருக்கு நடுவிரலைக் காண்பித்து நடக்கத் துவங்கினேன், நீட்டிய விரலால் செல்பேசியை எடுத்து சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு.

Thursday, June 21, 2012

ஆள காணமே மச்சி

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் அந்த வகுப்பிற்குச் செல்லக் கட்டணம் கட்டியிருந்தேன். வகுப்பு நன்றாகச் சென்று கொண்டிருந்தது. ஒருவன் இடையில் வந்து சேர்ந்தான். முதல் நாள் வந்ததும் ஓர் ஓரத்தில் சென்று அமர்ந்தான். அமைதியான பையன் என்று நினைத்துக் கொண்டேன். ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள ஏற்ற தோற்றம் அவனுக்கு. குள்ளமாகவும், அளவெடுத்துச் செதுக்கிய உடல்வாகுடனும் மங்கோலியர்களைப் பிரதிபலிப்பது போல அழகாக இருப்பான். குழந்தையின் வெகுளித்தனம் அவனுடைய முகத்தில் வெளிப்படும். இரண்டு வாரங்கள் சென்றது. சுருட்டி வைத்திருந்த ஆஞ்சநேயர் வாலை அவிழ்த்து விட்டான். அப்பப்பா ஊமைக் குசும்பு என்பார்களே அது அவன் தான்.

தெலுங்கு பிராமின் என்பதால் பல தமிழ் வார்த்தைகள் அழுந்தியும், சுழலும் நாக்கிலிருந்தும் வெளிப்படும். அவன் “அண்ணா“ என்று அழைப்பதே ஒரு விதமாக இருக்கும். சில சமயங்களில் சொல்ல வரும் விஷயத்தை நடிகர் ரஜினியின் குரலில் வெளிப்படுத்துவான். “டேய்... அவன்ல்லாம் ஒரு ஆலுன்னு அவன் குரலில் பேசுறியே“ என்று சீண்டுவேன். “தலிவரப் பத்தி உனக்கு இன்னான்னா தெரியும்“ என்று உரிமையுடன் சண்டைக்கு வருவான். குடும்ப உறுப்பினர்களைப் பற்றித் தரக்குறைவாக பேசினால் கூட அப்படி ஒரு கோவம் ரஜினி ரசிகர்களுக்கு வருமா என்பது சந்தேகமே. கார்த்தியின் அத்தை வீணை டீச்சர் என்பதால் இசையும் ஓரளவிற்குப் பரிட்சயம். அல்லது கேள்வி ஞானமாகக் கூட இருக்கலாம். காதிற்கு இனிமையாகப் பாடுவான். சில ஸ்லோகங்கள் கூட ரசிக்கும்படி ஏற்ற இறக்கத்துடன் கார்த்தி சொல்லக் கேட்டதுண்டு. பொறாமையாகக் கூட இருக்கும்.

பாடம் நடக்கும்போது, சில வார்த்தைகளைக் கேலி பேசி என்னைச் சிரிக்க வைப்பான்.உதாரணமா, 'குசுரி' என்றால் மருந்து என்று பொருள்படும் ஜப்பானிய வார்த்தை. நேட்டிவ் ஜேப்பநிஸ் அந்த வார்த்தையைச் சொல்லி விளக்கும் பொழுது, அவர்களுக்குத் தெரியாமல் என் காதில் கேட்கும்படி 'இன்னா ரீ?' என்று கேட்பான். 'எனக்குத் தெரியாது போடா...!' என்பேன்.

இது கூட தெரியாதா 'குசு... குசு...குசு... குசுரீ' என்பான். அதைக்கேட்டு கொல்லென்று சிரிப்பேன். சென்செய்(ஆசிரியர்) என்னைப் பார்த்து எச்சரித்துவிட்டு பாடத்தில் கவனம் செலுத்துவார். இந்த மாதிரி வார்த்தைகள் எல்லா மொழியிலும் இருக்கிறது. “என்னோட தாய்மொழி தெலுங்கில் கூட இருக்கு. ஆமா “பூ“-வுக்கு தெலுங்குல என்ன வார்த்தைத் தெரியுமா?“ என்பான். “டேய் தம்பி... நானும் ஆந்திரா பார்டர் தான். கொஞ்சம் மூடுறியா?“ என்பேன்.

“அண்ணா... ஆண்டவன் ஓட்டைன்னு எதுக்கு வச்சிருக்கான். தொறந்து இருக்கணும்னு தானே? அத எதுக்கு மூடச் சொல்றிங்க.“ என்பான்.

“இந்த மாதிரி எங்கடா பேசக் கத்துக்குன?“

“அது என்ன மாயம்னு தெரியல? மந்திரம்னு தெரியல மச்சி... உன்ன பார்த்தா மட்டும் அருவி மாதிரி கொட்டுது மச்சி“ என்பான் ரஜினியின் குரலில்.

“என்னது மச்சியா?“

“ஆமாண்ணா...“ என்பான் சாதாரண குரலில்.

ஒவ்வொரு வாரமும் இதுபோல குண்டக்க மண்டக்க பேசியே விடுமுறை நாட்களை இனிமையாக்கிக் கொண்டிருந்தான். JLPT தேர்வுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. “இங்கப் பாரு கார்த்தி, ஜப்பானிய மொழிய கத்துக்குனே ஆகணும்னு நான் இங்க வரல. எனக்குத் தேவ ஒரு அனுபவம். அதுக்காகத் தான் வரேன். ஆனா நீ அப்படி இல்ல...! மரியாதையா கவனி, இல்ல சாக அடிட்சிடுவேன்“ என்று திட்டும்பொழுது, “இங்க பாரு மச்சி லைஃப்புன்னா ஜாலியா இருக்கணும்... சிஸ்டமாட்டிக்கா இருக்கக் கூடாது... பீ கூல்...“ என்பான்.

குளிர் கால ஞாயிற்றுக் கிழமையின் காலை நேரத்தில் மீனாட்சி கல்லூரியில் எங்களுக்கான தேர்வு நடத்த ஏற்பாடாகியிருந்தது. என்னுடைய வகுப்பில் மொத்தம் பனிரெண்டு பேர். பரீட்சை எழுத வந்திருந்தவர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் நபர்கள். ஓர் ஓரத்தில் அமர்ந்து கார்த்தி வேகம் வேகமாகப் படித்துக் கொண்டிருந்தான். அருகில் சென்று நின்றேன். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு மேலும் படித்துக் கொண்டிருந்தான். வகுப்புத் தோழர்களும் அவனுடன் இருந்தனர். அவர்களிடமிருந்து விலகி காலாற நடக்கத் துவங்கினேன். பத்து வயது முதல் நாற்பது வயது வரையுள்ள பலரும் படித்துக் கொண்டிருந்தனர். தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே தெரிந்துவிட்டது நாங்கள் “அவுட்“ என்று. கார்த்திக்கு சரியாக எழுதாதது கொஞ்சம் வருத்தம் தான்.

இது போன்ற உலக மொழிகளைப் படிக்க பணம் கட்டினால், சிரமப்பட்டு படித்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வது புத்திசாலிக்கு அழகு. “சாலித் தனங்கள் கூறு என்ன விலை“ என்று கேட்பவன் ஆயிற்றே. இணையம் தொடர்பாக பார்த்துக் கொண்டிருந்த வேலையை நான் விட்டுவிட்டேன். சென்னைப் புறநகரில் இருக்கும் நோக்கியா கம்பெனியில் கார்த்தி வேலைக்குச் சேர்ந்தான். பெரும்பாலும் அவனுக்கு இரவில் தான் வேலை. இருவரும் அதன்பிறகு பேசிக்கொள்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. எப்பொழுதாவது செல்பேசியில் அழைப்பேன். “தூங்குறேண்ணா... எழுந்ததும் கூப்பிடுறேண்ணா“ என்பான் உளறலில். “சரி கண்ணா... Have a nice dreams“ என்பேன். ஞாபகம் இருந்தால் எழுந்ததும் செல்பேசியில் அழைப்பான். “சொல்லு மச்சி“ என்று ஆரம்பிப்பான்.

“என்ன தொற சந்தோஷமா இருக்கீங்க“.

“Bcoz... Bcoz... I had a nice dream“ என்பான்.

கடந்த ஒருவருடத்திற்கு முன்பு அவனிடம் பேசியது. அதன்பிறகு கார்த்தியத் தொடர்பு கொள்ள முடியாமலே போனது. அவனே அழைக்கட்டும் என வெறுத்துப் போய் விட்டுவிட்டேன். என்னுடைய இந்த செயல் எந்த ஒரு பெரிய குற்றத்திற்கும் நிகரானது என்ற குற்ற உணர்ச்சியை எழுத்தாளர் மதுமிதா லைக் செய்திருந்த இந்த புகைப்படம் ஏற்படுத்திவிட்டது. (புற்றுநோய் முற்றிய நிலையிலும் அவனுடைய முகத்தைப் பாருங்கள். எவ்வளவு சந்தோசம்... வதக்கி எடுக்கும் வலியை அவன் எங்கு புதைத்திருக்கக் கூடும்.)



ரஜினியை பலமுறை கடுமையாக விமர்சித்துப் பேசியதுண்டு. சமூக இணையத் தளங்களில் அவருக்கு எதிரான பல விஷயங்களைப் பகிர்ந்ததுண்டு. என்றாலும் எளிமையுடனும், இரக்கத்துடனும் இருப்பதால் தான் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள் போல. உயிருக்குப் போராடிய தன்னுடைய ரசிகனைப் பார்க்க நேரம் கொடுத்து, கட்டித் தழுவி அவனை சந்தோஷப்படுத்தி இருக்கிறாரே! வறண்ட நிலத்தின் மண் தரையில் விழுந்த மேகத் துளியாக வாழ்வின் விளிம்பில் இருந்த சிறுவனின் ஆழ்மனம் குளிர்ந்திருக்கும் இல்லையா! என்றாவது ரஜினியைப் பார்க்கும் சந்தர்ப்பம் நேர்ந்தால் இந்த ஒரு செயலுக்காக ஆரத் தழுவி நன்றி சொல்வேன்.

“ரஜினியாவது...! உன்னைப் பார்ப்பதாவது?“ என்கிறீர்களா...

ரஜினி மாறுவேடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக எளிய மனிதராகச் சுற்றிக் கொண்டிருப்பாராம். நான் வேடமேற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன். பெரிய முள்ளும், சிறிய முள்ளும் ஒரு புள்ளியில் சந்தித்துத்தானே ஆகவேண்டும். அதுதானே காலத்தின் கட்டாயமும் கூட. அந்த நடிப்புக் கலைஞனை ஒருநாள் நிஜத்தில் சந்தித்து கைகுலுக்குவேன். நன்றி சொல்வேன்...

கார்த்தி புற்று நோயால் போராடி உயிர் விட்டிருக்கிறான். அவனுக்கு குடலில் கேன்சர் இருந்ததாம். கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். இரவு வேலை செய்ததால் அடிக்கடி வாயிற்று வலி மற்றும் ஜீரணக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. சாதாரண சுகமின்மை என்று தான் அவனுடைய பெற்றோர்கள் நினைத்திருக்கிறார்கள். கேன்சர் என்று முற்றிய நிலையில் தான் உணர்ந்திருக்கிறார்கள்.

இனி மருத்துவம் பார்த்து பிரயோஜனம் இல்லை என்ற நிலையில், ஆந்திராவில் இருக்கும் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று கவனித்திருக்கிறார்கள். ஒரு நாள் நெஞ்சை அடைப்பது போல் இருக்கிறது என்று மார்பைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் தோலில் சாய்ந்திருக்கிறான். அவசர சிகிச்சை அளிக்க மருத்துவமனை நோக்கி ஓடியிருக்கிறார்கள். போகும் வழியிலேயே அவன் உயிர் பிரிந்திருக்கிறது. ஆகக்கூடி இருபத்தி ஐந்து வயது இருக்காது. எனக்குத் தெரிந்து எந்தக் கெட்டப் பழக்கமும் அவனுக்கு இல்லை. என்றாலும் விதி வலியது தானே!

“இப்படி அல்பாயுசுல போயிட்டியேடா கார்த்தி!?“ என்று அவனிடம் கேட்டால், அதற்கும் அவனிடம் ஒரு பதில் இருக்கும்.

இனி அது “மௌனம்“... மரணித்த மௌனம்...