Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Thursday, July 10, 2014

கேணி சந்திப்பு - இயக்குநர் ஞான. ராஜசேகரன்

பாரதிமணியை அவருடைய வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது “கிருஷ்ணா...! கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை இயக்குனர் ஞானராஜசேகரன் படமா எடுக்க இருக்குறாரு...” என்றார். 


மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்து – இளநிலை மற்றும் முதுநிலையில் – அரியர் மேல் அரியர் வைத்து - அட்டைக்கு மேல் அட்டை வாங்கிய – அசாத்தியமான மாணவர்களில் நானும் ஒருவன். பின்னர் “ராமானுஜன்” படத்தில் நண்பர் மணிபாரதி நடித்திருப்பது தெரிந்ததும் சந்தோஷத்தில் ததும்பி வழிந்தேன். இருக்காதே பின்னே...! “ராமானுஜன்... ராமானுஜன்...” படத்தில் நமக்குத் தெரிந்த ஒரு நபர் - சின்ன பாத்திரத்தில் தலையைக் காட்டுகிறார்.

ராமானுஜன் படத்தைப் பற்றி பேசுகையில் “பை கணித மன்ற” சிவாவைப் பற்றி நினைக்கவில்லை எனில் என் கட்டை வேகாது. ஒரு நாள் தனது வீட்டிற்கு வருமாறு சிவா அழைப்பு விடுத்திருந்தார். சென்னையின் வீதிகளில் ‘அழுக்கான, சாயம்போன, கிழிந்த’ ஆடையுடன் சுற்றுவதுதான் எனக்கு மிகப் பிடிக்கும். ஆகவே பெரும்பாலான விருந்தோம்பல் அழைப்புகளைத் தவிர்த்துவிடுவேன். ஆனால், ‘பை கணித மன்ற’ சிவாவை அப்படித் தவிர்க்க இயலாது.

டி. ஜி. வைஸ்னவா கல்லூரியில் இளநிலைக் கணிதமும், சென்னை ஐஐடி-யில் முதுநிலைக் கணிதமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்தையும் கணிதத்தில் பெற்றவர். டாக்டரேட் பட்ட ஆராய்ச்சியிலும் ராமானுஜத்தின் நிரூபனங்களைத் தொட்டுத்தான் பயணித்திருக்கிறார். தற்போது டி. ஜி. வைஸ்னவா கல்லூரியில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார். அவரைச் சந்தித்ததின் காரணம் இதுவல்ல. மாறாக பல்வேறு இதழ்களிலும் கணிதம் சார்ந்து தமிழில் எழுதுகிறார். “தி ஹிந்து” தமிழ் நாளிதழில் வாரம்தோறும் கணித்ததைப் பற்றி ஏதேனும் எழுதுகிறார். கணித மேதைகள் பகுதி | & || என்ற தொகுதிகள் ஏற்கனவே வெளிவந்துள்ளது. ராமானுஜன் பற்றிய விரிவான புத்தகத்தைத் தமிழில் எழுதி இருக்கிறார். சிவாவின் இரண்டு புத்தகங்கள் தமிழக அரசு விருது பெற்றுள்ளன.

அன்றாட வாழ்க்கையில் “கணிதப் பயன்பாடுகள்” என்பது நம் போன்ற எளிய மக்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம். ஆகவே, “கணிதப் பயன்பாடுகள்” என்ற புத்தகத்தைக் கூடிய சீக்கிரமே கொண்டுவரும் முயற்சியிலும் இருக்கிறார். இது போன்ற மனிதர்களை சந்திக்கச் செல்வது சுவாரஸ்யம் நிறைந்த விஷயம் தானே...!

வீட்டில் நுழைந்ததுமே அவரது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார். சுவரில் கணித அறிஞர்களின் பிளாக் & வொயிட் படம் மாட்டப்பட்டிருந்தது. தரையில் அமர்ந்துகொண்டேன். சிவா பேசத் துவங்கினார்:

“இங்க பாருங்கோ கிருஷ்ணா...! நான் எங்கையாவது வெளிய போறதா இருந்தாச்சும் கூட ராமானுஜனை சேவிச்சிட்டுத் தான் போவேன்...! அவர் தான் எனக்கு எல்லாமே. கடவுள் மாதிரின்னு வச்சிக்கோங்கோ...!” என்றார்.

இப்படிக் கூடவா மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, “நீங்க ஆச்சரியப் படுத்துறீங்க சிவா...!” என்றேன்.

ஏறக்குறைய ஆயிரம் கணிதப் புத்தகங்களின் சேகரிப்புகள் சிவாவிடம் இருக்கிறது. ராமானுஜத்தின் தேற்றங்களைத் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டவர் சிவா. அவரது அலமாரியிலுள்ள புத்தகங்கள் தான் “ராமானுஜன்” படத்தில் ராமானுஜனாக நடித்த – நட்சத்திரத் தம்பதிகளான ஜெமினிகணேசன் – சாவித்திரியின் பேரன் வைத்துக்கொண்டு திரிந்திருக்கிறார். நமக்குத் தெரிந்தவரின் புத்தகங்கள் ராமானுஜன் படத்தில் நடித்திருக்கிறது. “ஐயோ... ஐயோ... ஐயோ...” சந்தோசம் தாங்கள...!

இரவு நேரத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து - வீடு திரும்ப சில நேரங்களில் பயணிப்பதுண்டு. மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கும் ஒரு நண்பர் அப்படிப்பட்ட பயணங்களில் பழக்கம். அவரது பெயர் உஸ்மான். பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பார். ரயில் ஸ்நேகம் – ரயில் பயணத்தோடு முடிந்துவிடும். ஒரு நாள் திநகர் பழைய GRT தங்க நகைக்கடைக்கு எதிரிலுள்ள மேம்பாலத்தின் கீழ், ரோட்டோரத்தில் கடை விரித்து - உஸ்மான் துணி விற்றுக் கொண்டிருந்தார். “ஓ... நீங்க இங்கதான் வியாபாரம் பண்றீங்களா?” என்றேன்.

“ஆமா’ண்ணா! நீங்க எங்க இந்தப் பக்கம்?” என்றார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். அதன் பிறகு நீண்ட நாட்களாகிவிட்டது உஸ்மானைப் பார்த்து. இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கண்ணில் பட்டார்.

“என்னங்க ஆளையே பார்க்க முடியல?” என்றேன்.

“ராமானுஜன் படத்துல ஒரு சின்ன ரோல்ல நடிச்சேங்க’ண்ணா... கும்பகோணத்துல ஷூட்டிங்... கொஞ்ச நாள் அங்க போயிருந்தேன்... அதான்...” என்றார்.

“அடடே...! மீஞ்சூரில் இருந்தும் ஒருவர் ராமானுஜன் படத்தில் நடிக்கிறாரா?” என்று இறும்பூஊஊஊது எய்தினேன்.

எனுடைய கணிப்பு சரி எனில்... முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பயல் தான் – சக பயணி உஸ்மான். இந்தப் பயலின் மண்டையும், முகவெட்டும் உஸ்மானைப் போலவே உள்ளது.

என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லி இருக்கிறார்: “டேய்.... பசங்களா நீங்க எங்க போனாலும் இந்த மேத்ஸ் உங்கள உடாது... ஒழுங்கா படிச்சிடுங்க...!”

அவர் எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை. நாமாவது படிப்பதாவது!? எனினும், கணிதமேதை ராமானுஜன் பல விதங்களிலும் என்னைத் துறத்துகிறான். என்னமோ தெரியவில்லை இந்தப் படத்தில் வேலை செய்பவர்களை அடிக்கடி சந்திக்க நேர்கிறது.

இதோ ராமானுஜன் படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரன் “கேணி சந்திப்புக்கு” வர இருக்கிறார். “மோகமுள், பாரதி, காமராஜர், ராமானுஜன்” போன்ற முக்கியமான படங்களை இயக்கி இருக்கிறார். ஞானராஜசேகரன் ஓர் ஐ.ஏ.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


“சங்கராபரணம், இது நம்ம ஆளு” போன்ற படங்களில் இசை விற்பன்னராக – முக்கியமான பாத்திரத்தில் நடித்தவர் ஓர் ஐ.ஏ.எஸ் ஆபீசர் என்று கேள்விப்பட்டதுண்டு. அதுகூடப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் நடிக்க வந்தார். ஞானராஜசேகரன் மூன்று வருடங்களோ என்னவே – இடையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்தவர். அரசாங்க வேலையில் தொடர்புடையவர்கள் – கலைத்துறையில் ஈடுபடும் பொழுது எதுபோன்ற “பிரச்சனைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்க நேர்கிறது” என்பதை தோழர் ஞானராஜசேகரிடம் கேட்கலாம் என்றிருக்கிறேன். உங்களுக்கும் சில கேள்விகள் இருக்கலாம். தோழரை சந்திக்க எழுத்தாளர் ஞாநியின் வீட்டிற்கு வாருங்கள். நண்பருடன் உரையாடலாம்.

நாம் சந்திக்கப்போகும் இடம் மற்றும் நாள் பின்வருமாறு:

கேணி சந்திப்பு:

பாரதி','பெரியார்', 'ராமானுஜன்' பட இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேசுகிறார்.

ஜூலை 13, ஞாயிறு மாலை 4 மணி,

39 அழகிரிசாமி சாலை,

கலைஞர் கருணாநிதி நகர்,

சென்னை 78.

அன்புடன் அழைப்பது
ஞாநி, பாஸ்கர் சக்தி.

டிஸ்கி: தியேட்டருக்குச் சென்று நீண்ட நாட்கள் ஆகிறது. ராமானுஜன் படத்தைத் திரையரங்கில் பார்க்கலாம் என்றிருக்கிறேன். திருட்டு சிடி-ய இடையில உட்டு எங்கனவுல மண்ணைத் தூவாதிங்க. போலவே, படம் கலக்ஷ்ன் சரியா இல்லைன்னு படத்தையும் தியேட்டர வுட்டு தூக்கிடாதிங்க. இதுபோன்ற அறிவுசார் ஆளுமைகளைப் பற்றிய படங்கள் தமிழுக்குப் புதிது. அவசியம் ஓடவேண்டும். தமிழ் சினிமா வேறு தளத்திற்கு நகரவேண்டும். நம் அசலான மக்களின் முகங்கள் திரையில் தெரிய வேண்டும்.

Wiki: இயக்குநர் ஞான. ராஜசேகரன்

Thursday, August 1, 2013

எளிமை - பிரபஞ்ச ஆற்றல்

ஒவ்வொருவரின் முனேற்றத்திலும் உழைப்பு தவிற்க முடியாத அம்சம். எனினும் பிரபஞ்ச ஆற்றல் ஒருவரை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால், அதனை மீறி யார் தான் என்ன செய்துவிட முடியும்? நீங்களே சொல்லுங்கள்...!

ஏ. ஆர். ரகுமானின் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த தருணம் என எதைச் சொல்வது?

திலீபிற்கு உடல் சுகமில்லாமல் போகிறது. தந்தையை வேறு அவர் சிறுவயதிலேயே இழந்திருக்கிறார். அவருடைய தாயார் எங்கெங்கோ அழைத்துச் சென்று வைத்தியமும் பார்த்திருக்கிறார். குழந்தை திலீபிற்கு குணமாவது போலத் தெரியவில்லை. கடைசியாக பழவேற்காடு செல்லும் வழியில், ஆண்டார் குப்பத்தின் அருகில் முஸ்லீம் நகர் பகுதிய ஓட்டினார் போல இருந்த - ஒரு முஸ்லீம் மார்க்க ஆன்மீகப் பெரியவரிடம் அழைத்துச் சென்றிருகிறார். (நான் தினமும் நடை செல்லும் பகுதிக்கு மிக அருகில் தான் இந்த இடம் இருக்கிறது. அமீர்கான் போன்ற திரை நட்சத்திரங்கள் கூட இந்தப் பெரியவரைப் பார்க்க வந்ததுண்டு. பெரியவர் இறந்ததும் அதே இடத்தில் அவரை சமாதியாக்கிவிட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டேன்.)

என்ன ஆச்சர்யம்!? பெரியவரின் வழிகாட்டுதலில் திலீபிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. பின்னர் பூரணமாகவும் உடல் நலம் தேரியிருக்கிறார். அதன் பிறகு திலீபும், அவரது தாயாரும், சகோதரியும் முஸ்லீம் மார்க்கத்தைத் தழுவியது தனிக் கதை. பின்னர் “திலீப்” என்ற பெயரை மாற்ற வேண்டி – ஒன்றிரண்டு பெயர்களை பரிசீலனையில் வைத்திருக்கிறார்.

“ரோஜா” திரைப்படம் வெளிவரும் சமயம். பெயரைக் கூட உடனே முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். இறுதியில் “அல்லா ரக்கா ரகுமான்” என்ற பெயரைச் சூட்டிக் கொள்கிறார். அதனை மணிரத்னம் “ஏ.ஆர். ரகுமான்” என்று சுருக்கி அம்சமாகவும், கேச்சியாகவும் பயன்படுத்துகிறார். (மணிரத்னம் தான் இந்த பெயரை செலக்ட் செய்தார் என்றும் கூறுகிறார்கள்.)

“ரோஜா” – ரகுமானின் முதல் படம் அல்ல என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். மலையாளத்தில் ஒரு பாடலுக்கோ / இரண்டு பாடலுக்கோ அவருடைய அப்பா வேலை செய்த படத்தில் டியூன் போட்டிருக்கிறார் என்று அரசால் புரசலாக பேசிக் கொல்கிறார்கள். எனினும் “உழவன்” தான் ரகுமானின் முதல் திரைப்படம் என்பது தமிழ்மகன் எழுதியுள்ள “செல்லுலாயிட் சித்திரங்கள்” நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோஜாவிற்கு பின்னர் வெளிவந்த கதிர் இயக்கிய “உழவன்” தோல்விப் படம். செண்டிமெண்ட் பார்க்கும் இந்திய சினிமா உலகில் “உழவன்” திரைப்படம் முதலில் வெளிவந்திருந்தால் ரகுமான் என்னவாகியிருப்பார்?

பிரபஞ்ச ஆற்றல் ஒருவனை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால் – யார் தான் என்ன செய்துவிட முடியும்? சந்தற்பங்களும் பிரபஞ்சத்தின் முடிவுக்கு ஏற்பத் தானே அமைகிறது. உருத்தெரியாத அந்த ஆற்றலிடம் ரகுமான் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டதுதான் அவர் மென்மேலும் மெருகேறக் காரணமோ என்று கூட நினைத்திருக்கிறேன்.

முதலில் கமிட் ஆகிய “உழவன்” பின்னர் ரிலீஸ் ஆனதும், இரண்டாவதாக கமிட் ஆகிய “ரோஜா” முன்னர் ரிலீஸ் ஆகி மியூசிகல் ஹிட் அடித்ததும், அதன் பின்னர் ரகுமான் உச்சத்தைப் பிடித்ததும் வரலாறு. ரகுமானை தேவதூதன் போல நம் மக்களும் தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போலவே, லதா மங்கேஷ்கர் வாழ்வில் நடந்த சம்பவமும் சுவாரஸ்யம் நிறைந்தது. அப்போது லதா மங்கேஷ்கருக்கு பதிமூன்று வயது. ஹிருதயக் கோளாறால் தந்தை இறந்துவிட்டார். லதாஜிக்கு சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம். ஓர் இசையமைப்பாளர் ரயிலுக்காகக் காத்துக் கிடந்தாராம். அந்த நேரம் பார்த்து அங்கு சென்ற லதாஜி சினிமாவில் பாடுவதற்கு ச்சேன்ஸ் கேட்டிருக்கிறார்.

“எதாச்சும் ஒரு பாட்டு பாடு பார்க்கலாம்!” என்று கேஷுவலாகக் கேட்டிருக்கிறார் அந்த ம்யூசிக் அடிப்பவர். ஆம்... “ம்யூசிக் அடிப்பவர்” என்றல் இசைப்பவர் என்று அர்த்தம். லதாஜி சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறார். அருகில் ஒரு காலி சிகரெட் பெட்டி இருந்ததாம். அதனை எடுத்து, தாளம் போட்டு பாடியிருக்கிறார். பின்னர் லதாஜி இந்திய சினிமா இசையுலகில் உச்சத்தைத் தொட்டார் என்பது வரலாறு. இசைப் பிரியர்களுக்கு லதாஜியும் ஒரு தேவ தூதர்தான். பூமிக்கு வந்து அவதாரம் எடுத்த கந்தர்வ குல மங்கை தான்.

இந்திய திரைவானில் ஜொலிக்கும் நட்சத்திரமான லதாஜியின் இசைவாழ்வு சாதாரண ரயில் நிறுத்தத்தில், காலி சிகரெட் பெட்டியுடன் தொடங்கி இருக்கிறது. நான் தான் சொன்னேனே...! பிரபஞ்ச ஆற்றல் ஒருவரை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால் யார் தான் என்ன செய்ய முடியும்?

இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருமே உச்சத்தைத் தொட்டவர்கள். போலவே சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்கள். இந்திய திரையிசை வரலாற்றில் இருவரது இடத்தையும் இன்னொருவர் அடைவது கூட ஒருநாளில்லை ஒருநாள் சாத்தியமாகலாம். காலம் அவர்களை கடந்து செல்லும்.

“திறமை என்ன திறமை? புகழ் என்ன புகழ்?” – இவையெல்லாம் எல்லோருக்கும் தான் வாய்க்கிறது. ஆனால் மனிதம் சுரக்கும் “எளிமை”. அது தான் முக்கியம். எளிமையைக் காட்டிலும் மனிதர்களுக்குக் கவர்ச்சியையும், ஒளியையும் கொடுக்கக் கூடிய வேறென்ன இருக்கிறது இத்த ஜீவகாருண்ய வாழ்வில்?

பாலச்சந்தர் இயக்கிய “ஏக் துஜே கேலியா” படத்தின் பாடல் பதிவு. லதாஜியும், SPB-யும் அருகருகே அமர்ந்து, கொடுத்த டியூனுக்கு ஏற்ப ஹிந்தி வரிகளைப் பாடி பயிற்சி செய்து கொண்டிருகிறார்கள். SPB-க்கு முதல் ஹிந்தி பிரவேசம். குடிப்பதற்கு சுடச்சுட காஃபி கொண்டுவருகிறார்கள். எதிர்பாராத விதமாக கோப்பை தடுமாறி லதாஜியின் பக்கம் சாய்ந்திருக்கிறது. லதா மங்கேஷ்கரின் புடவையெல்லாம் காஃபிக் கறை. அதற்கு மேல் SPB-யே சொல்கிறார்.

“நம்மளோட ஹிந்தி ச்சேப்டர் இத்தோட க்ளோஸ். நம்ம வீட்டுக்குப் போக வேண்டியது தான்” என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் “லதாம்மா அதை ரொம்ப கேஷுவலா எடுத்துக்கிட்டாங்க. என்னோட பதட்டத்த பார்த்து, சிரிச்சி பேசி ரிலாக்ஸ் பண்ணாங்க. ஹிந்தி சினிமாவுல அவங்க உச்சத்துல இருக்கறவங்க கிட்ட இந்த மாதிரி முட்டாள் தனம் பண்ணிட்டோம்!. எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல. துக்கடா பையன் தானேன்னு லதாம்மாவும் கோவப்படாம, அருமையா ரெக்கார்டிங் பண்ணி கொடுத்தாங்க. அவங்கள பத்தியெல்லாம் பேசறதுக்கே எனக்கு தகுதி இல்ல. அவங்கெல்லாம் போட்ட பிச்சை தான் இந்த வாழ்கை” என்று அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

“தேர் மேரே பீச்சுமே... கேசா ஹேனா பந்தன் அஞ்சாஆஆஆஅ....நா” என்ற பாடல் SPB-க்கு தேசிய விருது பெற்றுத் தந்தது தனிக்கதை. SPB-யும் ஒரு வரலாறு. நான் தான் சொன்னேனே. பிரபஞ்ச ஆற்றல் நினைத்தால் அதற்க்கு மாற்றேது...!

ரஜினியாக இருக்கட்டும்,ரகுமானாக இருக்கட்டும், லதாஜியாக இருக்கட்டும், எஸ்.பி.பி -யாக இருக்கட்டும் – “திறமையானவர்கள், புகழ் வாய்ந்தவர்கள், உச்சத்தில் இருப்பவர்கள், திரைவானின் நட்சத்திரங்கள்” என ஏதேதோ பகிர்கிறார்கள். இவற்றையெல்லாம் விட “எளிமையானவர்கள், தன்மையானவர்கள்” என்பது தெறிய வரும் பொழுதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் எளிமை தானே ஜீவகாருண்யம். அந்த எளிமை தானே வாழ்வை மெருகேற்றுகிறது. பிரபஞ்ச ஆற்றலும் எளிமையத் தானே வலைவீசித் தேடுகிறது.

சுபம்... மங்களம்...

Saturday, June 4, 2011

வகீசன் - கனடா இசையமைப்பாளர்

தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பல வருடங்களாக பார்ப்பதே இல்லை. நேரமும் பொறுமையும் இல்லை என்றாலும், எல்லாவற்றிலுமே ஒரு நாடகத்தன்மை இருப்பதே அவைகளைத் தவிர்ப்பதர்க்கான முக்கியக் காரணம்.

"தற்போது பாடக் கூடிய 1% இளம் பாடகர்கள் தான் நம்பிக்கை அளிக்கிறார்கள். மீதமுள்ள 99% நபர்கள் மேடையை அலங்காரம் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இந்தப் போக்கு ரொம்பவும் வருத்தம் அளிக்கிறது" என்று SPB தனது நேர்முகத்தில் ஒருமுறை பகிர்ந்துகொண்டார். அவற்றை நிரூபிப்பது போலவே இருக்கிறது இதுபோன்ற நிகழ்ச்சிகள்.

முன்னேறிய நாடுகளில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழர்கள் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள் என்பதால் சமீப காலமாக விஜய் டிவி பார்த்து வருகிறேன். நான் பார்க்கத் துவங்கியபோது கனடா, சிங்கப்பூர், நியுசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

பால் வடியும் முகம், குழந்தைத் தனமான உடல் மொழி, பாடும்பொழுது மட்டும் அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை - என்று சாய் ஈசன் சற்றே என்னுடைய கவனத்தை ஈர்த்தார். பதின் பருவத்தில் இருப்பதால் என்னுடைய செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம். பள்ளி படிப்பைக் கூட பாதியில் நிறுத்திவிட்டு, தனியார் தொலைகாட்சி நடத்தும் பாடல் போட்டியில் கலந்து கொள்வதற்கு நிறையவே தைரியம் வேண்டும். இசைதான் வாழ்க்கை என்ற முடிவை எடுக்காமல் இது சாத்தியம் ஆகாது. அதற்கு மேல் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளின் தாங்குதல் இல்லாமல் கலைப் பயணம் இனிமையாக அமையாது.

சாய் ஈசன் பற்றிய சுய தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடியபொழுது வக்கீசன் வலையில் சிக்கினார். இவர் சாய் ஈசனின் சகோதரர்களில் ஒருவர். "சரிகா" என்ற இசைக் கல்லூரியின் முதல் பட்டதாரி மாணவர். கனடாவில் எடுக்கப்பட்ட "மதி" என்ற தமிழ் படத்தின் பின்னணி இசையமைப்பாளர். அதைத் தொடர்ந்து "என் கண் முன்னாலே", "பாரதம்" போன்ற தயாரிப்பில் இருக்கும் படங்களுக்கும் இசைப் பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறார்.

நேரம் எடுத்து படத்தையும், இசைக் கோர்வையையும் கவனிக்க வேண்டும்.

:-)

மதி - கனடா தமிழ் படம்

Part - 1
Part - 2
Part - 3
Part - 4
Part - 5
Part - 6
Part - 7
Part - 8
Part - 9
Part - 10
Part - 11

கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய முயற்சிகளில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

Tecmaztars

Tuesday, December 28, 2010

வாட்டர் - விதவைகள் தினம்

உலக அளவில் சில தினங்கள் கவனத்தைப் பெறுகிறது. உதாரணமாக நண்பர்கள் தினம், காதலர்கள் தினம், அன்னையர் தினம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சில விழிப்புணர்வு தினங்களும் கவனிப்பாரின்றி நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் மாற்றுத் திறநாளிகள் தினம் (Dec 4), குழந்தைத் தொழிலாளர்கள் தினம் (Jun 12), உலக எயிட்ஸ் தினம் (Dec 1) என்று பல முக்கியமான தினங்களைச் சொல்லலாம்.

"ஜூன் 23 - சர்வதேச விதவைகள் தினம்" என்று ஐநா அறிவித்துள்ளது.

கைம்பெண்களின் உணர்வுகள் நசுக்கப்படும் சமுதாயம் நம்முடையது. கணவனை இழந்த பெண் தனக்குத் தெரிந்த ஆணுடன் பொது இடத்தில் பேச நேர்ந்தால் அவள் மீது சமூகத்தின் சந்தேகப் பார்வை விழுகிறது. சாதாரணமாகப் பேசினாலும் கள்ளத் தொடர்பாகத் தான் பார்க்கிறது.

"காதுகுத்து, குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன்" போன்ற தெய்வ காரியங்களுக்கு குழந்தையின் தலையை மழிப்பது வழக்கம். குழந்தையைக் குதூகலப்படுத்த நாலு வரி பாடல் உண்டு.

"மொட்ட பாப்பாத்தி
ரொட்டி சுட்டாளாம்...
எண்ணை பத்தலையாம்
கடைக்கு போனாளாம்....
காசு பத்தலையாம்
என்ன பண்ணாலாம்?"
..............................
'கட காறன பாத்து கண்ணடிச்சாளாம்...'

பெரியவர்கள் சிரித்து, குழந்தையையும் சிரமப்படுத்தி சிரிக்கவைக்க இந்தப் பாடலை பலமுறை நான் கேட்டதுண்டு. இங்கு கடைசி வரி காட்சிப் படுத்தும் படிமம் வாழ்க்கையை இழந்தவள் மீதான தரக்குறைவான பகடி.

தீபா மேத்தா இயக்கிய "வாட்டர்" திரைப்படம் சமூகத்தால் விதவைகள் எவ்வாறு இந்தியாவில் புறக்கணிக்கப் பட்டார்கள் என்பதை விவாதிக்கும் முக்கியமான படம். பல லட்ச ரூபாய் பொருட் செலவில் கங்கைக் கரையில் தொடங்கிய படப்பிடிப்பு, சில மத அமைப்புகளின் எதிர்ப்பால் மேலும் தொடர முடியாமல் முடங்கியுள்ளது. நட்டப்பட்டு நாடு திரும்பிய தீபா மேத்தாவின் தொடர் முயற்சியால், ரகசியமாக இலங்கையில் படப்பிடிப்பை துவங்கி 2005-ல் வெளிவந்து கனடா நாட்டின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.

“A widow should be long suffering until death, self-restrained and chaste. A virtuous woman who remains chaste when her husband has died goes to heaven. A woman who is unfaithful to her husband is reborn in the womb of a jackal.” From the Laws of Manu, Chapter 5 Verse 156-161, Dharamshastras என்ற மனுசாஸ்திர வரிகளுடன் படம் துவங்குகிறது.



கங்கைக் கரையினில் 1930-களில் அமைந்த கதைக்களம். சுய்யா என்ற 7 வயதுச் சிறுமி மணப்பெண் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு மாட்டு வண்டியில் அழைத்து செல்லப்படுகிறாள். கரும்பை சுவைக்கும் அவளின் மீது ஒரு மனிதனின் பாதம் படுகிறது. கரும்பின் ஒரு முனையால் எரிச்சலுடன் பாதத்தை தட்டிவிடுகிறாள். அது அவளுடைய இறந்த கணவனின் பாதம் என்று தெரியாத வயது. சில நொடிகளில் மறையும் காட்சி என்றாலும் (பிணத்தின் கால், கரும்பு, சுவைக்கும் பெண்) அற்புதமான மறைமுகக் குறியீடு.

அக்கரையில் பிணங்கள் எரிய படகில் பயணம் ஆகிறார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் சுய்யாவைத் தட்டி எழுப்பி அலங்காரத்தைக் கலைக்கிறார்கள். தலை மழிக்கப்பட்டு விதவைகள் காப்பகத்தில் திணிக்கப் படுகிறாள். கதவு இழுத்து அடைக்கப்படுகிறது. அன்றிலிருந்து சிறுமியின் சந்தோஷங்களும் மறுக்கப்படுகிறது.

மதுமிதா என்ற கிழவியின் கட்டுப்பாட்டில் விடுதி இயங்குகிறது. அவளின் முன்பு சுய்யா நிறுத்தப்படுகிறாள். அவளிடமிருந்து தப்பித்து ஓட நினைத்த சிறுமி விடுதியைப் புரட்டிப் போடுகிறாள். ஓடிக் கலைத்து சகுந்தலா என்ற நடுத்தர வயதைத் தொட்ட விதவையிடம் தஞ்சம் அடைகிறாள். சந்தனம் அரைக்கும் அவள் சுய்யாவின் தலையில் குளிர்ச்சி ஏற்படத் தடவுகிறாள்.

கல்யாணி என்ற இளம் விதவையுடன் மேலும் பல கிழவிகள் சாகும் வரை அந்த விடுதியில் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். காலு என்ற நாயுடனும் கிருஷ்ண வழிபாட்டிலும் பகலைக் கடத்தும் கல்யாணி, இரவில் விபச்சாரத்தில் திணிக்கப்படுகிறாள். அவள் தான் விடுதியின் வாடகைக்கும், ஒரு வேலை உணவுக்கும் மூலதனம். குலாபி என்ற திருநங்கை மூலம் வாடிக்கையாளர்களை வளைத்துப் போடுகிறாள் மதுமிதா. சகுந்தலாவும் தீவிர பக்தி உடையவள். நடுத்தர வயதைக் கடந்தவள். தனது சந்தேகங்களை மந்திரம் ஓதும் ப்ரோகிதரிடம் கேட்டு தெரிந்துகொள்வாள்.

குருஜி விதவைகள் தங்களுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளலாம்?

"இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறலாம் அல்லது ஆசைகளை துறந்துவிட்டு வாழலாம் அல்லது குடும்பம் சம்மதிக்குமெனில் இறந்தவனுடைய சகோதரனை மணந்துகொண்டு வாழலாம்" என்று மனுதர்மம் கூறுகிறது. ஆனால் விதவைகள் சுதந்திரமாக வாழலாம் என்று இப்போது சட்டம் இயற்றி இருக்கிறார்கள்.

"அப்படியெனில் அந்த சட்டத்தைப் பற்றி எங்களுக்கு ஏன் யாரும் தெரியப்படுத்தவில்லை?" என்று அப்பாவித்தனமாக சகுந்தலா கேட்கிறாள்.

எங்களுக்குப் பயன்படாத சட்டத்தை நாங்கள் ஏன் கவனிக்கப் போகிறோம் என்ற குருஜியின் வார்த்தையை விக்கித்து கேட்கிறாள் சகுந்தலா.


கல்கத்தாவில் வக்கீல் படிப்பை முடித்து விட்டு சொந்த ஊரான ராவல்பூருக்குத் திரும்புகிறான் நாராயண். காந்தியக் கொள்கையில் தீவிர நம்பிக்கை உடையவன். தற்செயலாக கங்கைக் கரையில் கல்யாணியை சந்திக்கிறான். அவள் மீது காதல் கொண்டு திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். இது தெரிந்த மதுமிதா கல்யாணியை சிறை வைக்கிறாள். அந்த ஆத்திரத்தில் மதுமிதா வளர்த்த 'மித்து' என்ற கிளியை சுய்யா கொன்று விடுகிறாள்.

தாய் தந்தையரை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறான் நாராயன். சகுந்தலாவின் துணிச்சலான முடிவால் கல்யாணி விடுவிக்கப் படுகிறாள். விடுதியை விட்டு வெளியேறும் கல்யாணி நாராயணனுடன் செல்கிறாள். வீட்டை நெருங்கும் சமயத்தில் அவனுடைய தந்தையின் பெயர் கேட்கிறாள். பெயரைக் கேட்டதும் படகை வந்த திசைக்கே திருப்பச் சொல்கிறாள். அதற்கான காரணத்தை நாராயன் கேட்க, "உன்னுடைய தந்தையிடம் கேள்" என்று சொல்லிவிட்டு விடுதிக்கே போகிறாள். மதுமிதா அவளை சேர்க்காததால் கங்கையில் சென்று விழுந்துவிடுகிறாள்.

திருநங்கை குலாபி மூலம் கல்யாணியின் இடத்தை நிரப்ப சுய்யாவை பயன்படுத்துகிறாள் விடுதித் தலைவி. இது தெரியாத சகுந்தலா அவளை பல இடங்களில் தேடுகிறாள். சுய்யா இருக்குமிடம் தெரிந்துகொண்டு காப்பாற்ற ஓடுகிறாள் சகுந்தலா. அதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. மயங்கிய நிலையில் இருக்கும் சூயாவை தோளில் போட்டுக் கொண்டு நடக்கிறாள். வழியில் எல்லோரும் காந்தியைப் பார்க்க ஓடுகிறார்கள். சகுந்தலாவும் அங்கு சென்று தியானத்தில் அமர்கிறாள். ரயில் புறப்படும் சமயத்தில் சுய்யாவை காந்தியிடம் கொடுக்க ஓடுகிறாள். அதே ரயிலில் நாராயணும் இருக்க அவனிடம் சேர்பிக்கிறாள். அதனுடன் சுபம்.

நல்ல கதையம்சமுள்ள படமாக இருந்தாலும் குறைகளும் ஏராளமாக இருக்கின்றன. சகுந்தலாவாக நடித்த சீமா பிஸ்வாஸ், சுய்யாவாக நடித்த சரளா, விடுதித் தலைவி மதுமிதா, குந்தி ஆகிய பாத்திரங்களை ஏற்றவர்கள் நிறைவாக செய்திருக்கிறார்கள். கல்யாணி மற்றும் நாராயன் கதாப்பாத்திரத்தில் வந்த லீசா ரே மற்றும் ஜான் அப்ரஹாம் நடிப்பு படு மோசம். தேவையில்லாத பாடல்கள் (AR ரகுமான்) படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. அதை சரிகட்டும் விதமாக பின்னணி இசை (மைக்கேல் தன்னா) அமைந்துள்ளது.

படத்தின் ஜீவனே இந்தக் கதாப்பாத்திரங்களில் தான் இருக்கிறது. இயக்குனர் கவனம் எடுத்து கையாண்டிருக்கலாம். அதே போல நாராயன் முதன் முதலாக காதல் சொல்ல வரும் இடத்தில் ஜீவனே இல்லை. விதவையை மணக்க இருப்பதாக தாயிடம் சொல்லும் இடத்திலும் சொதப்பி இருக்கிறார்கள். தாயும் மகனும் முட்டிக்கொள்ளும் படி எடுத்திருந்தால் உச்ச காட்சியாக அமைந்திருக்கும்.

கோவத்தில் கிளியை சிறுமி கொள்வதாக எடுத்ததற்கு பதில், வானில் பறக்கவிட்டிருக்கலாம். விடுபட்ட கிளி மீண்டும் விடுதிக்கே வந்துவிடுவதாகவோ அல்லது இறைகிடைக்காமல் கங்கைக் கரையில் ஒதுங்கும் படியோ காண்பித்திருந்தால் அழகிய குறியீடாக அமைந்திருக்கும். பறவை பறந்து எங்கோ சென்றிருந்தாலும் விதவைகளின் சுதந்திரம் தொடங்கியதற்கான ஆரம்பக் குறியீடாக அதனைக் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

சுயாவைத் தவிர மற்ற அனைவரும் முதியவர்கள் என்பது நெருடலாகவே இருந்தது. இன்னும் ஓரிரு சிறுமிகளை கதாப்பாத்திரங்களாக்கி, அவர்கள் விடுதி வாழ்க்கைக்கு பழக்கப்பட்டது போல காண்பித்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். மொத்தத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டி இருந்தால் தண்ணீர் தெளிவாகவும், சுவையாகவும் இருந்திருக்கும். அதற்கான பலனும் கிடைத்திருக்கும்.

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலை மீது ஏறிவா
மல்லிகைப் பூ கொண்டுவா

- நிலவின் முகம் குழந்தையின் முகமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? புரட்சியின் முகமாக இருக்கக் கூடாதா? நில்லாமல் ஓடி, மலைமீது பூ எடுப்பவர்கள் மறுமலர்ச்சிக்காக எடுக்கக் கூடாதா?

2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 35 மில்லியன் விதவைகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் பெரிதாக ஒன்றும் உயர்ந்துவிடவில்லை. அவர்களின் நிலை மாறி சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய 'விதவைகள் தினம்' போதுமான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, December 23, 2010

டிராவலர்ஸ் & மெஜிஷியன்ஸ் - நோர்பு

இளஞ்சூரியன் மலையில் இறங்கி உஷ்ணத்தைப் பரப்பி, குளிர்ச்சியை உறிஞ்சக் கூடிய அழகிய பூடான் கிராம். 'தொந்டுப்' இளநிலை அரசு ஊழியராக அங்கே வேலை பார்க்கிறான். அமெரிக்க மோகம் நாட்டின் எந்த மூளையையும் விட்டு வைப்பதில்லையே!. வேலையை உதறிவிட்டு, தன் கனவு பூமியான அமெரிக்கா செல்ல விரும்புகிறான். அதற்காக தன்னுடைய நண்பனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறான். நாட்கள் நத்தை நகர்வதைப் போல உணர்கிறான். ஒவ்வொரு நாளும் தபால் நிலையம் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகிறான். எதிர்பார்த்த கடிதம் ஒருநாள் அவனுக்கு வந்துசேர்கிறது.

அதில் 'இன்னும் மூன்று நாளில் தலைநகர் திம்புவில் இருக்கும் தூதரக அலுவலகத்தில் இருக்க வேண்டும்' என்று எழுதியிருக்கிறது.

திருவிழா துவங்குவதால் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்று பொய் சொல்லி, மேலதிகாரியிடம் விடுமுறை வாங்குகிறான். அமெரிக்கா செல்லப்போகும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறான் தொந்டுப்.

"இங்கே என்ன இருக்கு? கேளிக்கைக்கு இடமில்லை, ஓட்டல் இல்லை, இணக்கமாகப் பழக அழகான பெண்கள் இல்லை" என்று தோழனிடம் சொல்லிவிட்டுத் தனது உடைமைகளுடன் கிளம்புகிறான். எதிரே புதுமனைப் புகுவிழாவிற்கான ஊர்வலம் நடக்கிறது. போகும் வழியில் கிராமத்துப் பெண் வழிமறித்து "நீண்ட தொலைவு போறீங்களே... எப்படி சும்மா அனுப்புறது? கொஞ்சம் இருங்க..." என்று பன்னீர் வத்தல்களைத் தருகிறாள். அதை வங்கிக் கொண்டு பேருந்துக்காக நடக்கிறான். வழியில் தென்படும் ஓடையில் வத்தல்களை வீசி எறிந்துவிட்டுச் செல்கிறான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கடைசி பேருந்து கிளம்பிச் செல்கிறது. வேறு வாகனத்தில் ஏறிப் போய்விடலாம் என்று பாதையோரம் நிற்கிறான். அப்போது ஆப்பிள் விற்கும் வயோதிகன் கூடையுடன் வருகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு புத்த துறவியும் வந்து அவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்.

துறவி எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அதற்கு 'தொந்டுப்' சிடுசிடுவென பதில் சொல்கிறான். அவன் பொறுமை இல்லாமல் தவிப்பதைப் பார்க்கும் துறவி "எதற்காவது நாம் காத்திருக்க நேர்ந்தால், உணர்வுகளின் எல்லைக்கு சென்றுவிடுகிறோம்" என்ற புத்த போதனையை மேற்கோள்காட்டுகிறார். மௌனியாக இருக்கும் கிழவனையும், பேசிக்கொண்டே இருக்கும் துறவியையும் தொந்டுப் தவிர்க்கப் பார்க்கிறான். மெல்ல இருட்டத் துவங்குகிறது. வேறு வழியின்றி, மூவரும் சாலையோரம் தங்குகிறார்கள். துறவி அங்கேயே அடுப்பை மூட்டி சூப் தயாரித்துத் தருகிறார். இரவின் நெருக்கத்தில் ''எங்கே போகிறாய்?'' என்று துறவி கேட்கிறார்.

"ரொம்ப தூரத்தில் இருக்கும் கனவு பூமிக்கு!..."

"அப்படியெனில் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் விழித்துப் பார்க்கும் பொழுது உனக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகலாம்" என்று துறவி சொல்கிறார். அப்படியே கனவு பூமி பற்றிய கதை ஒன்றை சொல்லத் துவங்குகிறார்.

'ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருந்த ஒரு விவசாயிக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தாஷி. இளையவன் கர்மா. மூத்தவனுக்கு மந்திர தந்திரங்கள் கற்றுக் கொடுக்க விரும்பி, ஒரு குருவிடம் அனுப்பினார்கள். தாஷியோ பகல்கனவு காண்பவன். சரியான சோம்பேறி. சதா நேரமும் பெண்களைப் பற்றியும், சிற்றின்பங்கள் பற்றியும் நினைப்பவன். கர்மாவோ அதிபுத்திசாலி. மதிய உணவைக் கொடுக்க அண்ணனின் பள்ளிக்கு தினமும் போகிறான். ஒருநாள் மதிய இடைவேளையில், இருவரும் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். மூலிகை கலந்த மதுவை தாஷிக்குக் கொடுக்கிறான். மகிழ்ச்சியுடன் வாங்கிக் குடித்ததும் போதை ஏறிய நிலையில், புதிதாக வாங்கிய குதிரையில் சவாரிசெய்ய தாஷி புறப்படுகிறான். மிரண்டு ஓடிய குதிரை வெகுதூரம் பயணித்து, அடர்ந்த காட்டில் அவனைக் கீழே தள்ளிவிட்டுச் செல்கிறது. கீழே விழுந்து காயம்பட்ட தாஷி, அடர்ந்த காட்டுக்குள் நடந்து ஒரு வீடு இருப்பதைப் பார்த்துக் கதவைத் தட்டுகிறான்.

தாடி வைத்த முதியவர் கையில் விளக்குடன் கதவைத் திறக்கிறார். அவன் நிலைமையைப் பார்த்து, வீட்டில் தங்க அனுமதிக்கிறார்.தாஷி சோர்வுடன் படுக்கிறான்.வயோதிகருக்குப் பக்கத்தில் ஓர் இளம் பெண் படுத்திருப்பதை பார்க்கும் தாஷியின் மனம் சஞ்சலமடையத் தொடங்குகிறது. கதையைக் கேட்டவாறே தொந்டுப் தூங்கிவிடுகிறான்.

காலை விடிந்ததும் சாலையில் லாரி வருகிறது. அதில் மூவரும் ஏறிக் கொள்கிறார்கள். ஓரிடத்தில் அழகான பெண்ணும், அவளது தந்தையும் லாரியில் ஏறுகிறார்கள். பேசிக்கொண்டே பயணம் தொடர, ஆமை வேகத்தில் நகரும் லாரி பழுதாகி நிற்கிறது. எல்லோரும் இறங்குகிறார்கள். அனைவரையும் அமர்த்திக்கொண்டு துறவி மீண்டும் கதையைத் தொடங்குகிறார்.

சப்தம் கேட்டு கண்விழிக்கும் தாஷி, ஜன்னல் வழியாக இளம் பெண்ணைப் பார்க்கிறான். அவள் துணி நெய்து கொண்டிருக்கிறாள். அவள் கிழவரின் மனைவி 'தேகி' என்று தெரிகிறது. காலை உணவு பரிமாறும்போது அவளை முதன்முறையாகப் பார்க்கிறான். இருவருக்குள்ளும் வேதிமாற்றம் நிகழ்கிறது. அவர்கள் இருவரையும் முதியவர் சந்தேகத்துடன் பார்க்கிறார். சாப்பாடு முடிந்ததும், அவனை அழைத்துச் சென்று போகவேண்டிய திசையைக் காட்டிவிட்டு வீடு திரும்புகிறார்.

லாரி சரிசெய்யப்பட்டு மீண்டும் புறப்படுகிறது. குறிப்பிட்ட தொலைவு சென்று ஒரு வளைவில் நிற்க - துறவி, தொந்டுப், ஆப்பிள் விற்கும் முதியவர், இளம்பெண் சோனம், அவளது அப்பா என எல்லோரும் லாரியிலிருந்து இறங்குகிறார்கள். சோனம், ஆப்பிளை நறுக்கி எல்லோருக்கும் சாப்பிடத் தருகிறாள். அங்கிருந்து ஒன்றாக நடக்கத் தொடங்குகிறார்கள். நீண்ட நேரம் நடந்து, ஓரிடத்தில் எல்லோரும் அமர்கிறார்கள்.

"உங்கள் மாதிரி இளைஞர்கள் இந்த நாட்டிற்குத் தேவை... நீங்க ஏன் அந்த நாட்டுக்குப் போறீங்க?" என்று பூனத்தின் அப்பா கேட்கிறார். "அந்த நாட்டவர்களுக்கு பூடான் எங்கிருக்கிறது என்பது கூட தெரியாது" என்று சோனம் சொல்கிறாள். "வேலை செய்து நிறைய பணம் சம்பாதிக்க!... தட்டு கழுவலாம், ஆப்பிள் பறிக்கலாம்..." என்று தொந்டுப் சொல்கிறான்.

"கனவு பூமிக்கு சென்று ஆப்பிள் பறிக்கப் போறேன்னு சொல்லு. ஆனால் தாஷி மாதிரி நீயும் தொலைஞ்சு போயிடாதே!'' என்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து கதையை சொல்லத் துவங்குகிறார்.

அடர்ந்த காட்டில் வழிதெரியாமல் மீண்டும் தேகியின் இடத்திற்கே வருகிறான் தாஷி. தேகியின் வீட்டில் சில நாட்கள் தங்குகிறான். துணியை நெய்து முடித்துவிட்டால், தாஷி சென்றுவிடுவான் என்று செய்யும் வேளையில் சுணக்கம் காட்டுகிறாள். நூல் செண்டையும் சிக்கலாக்கி விடுகிறாள். கிழவனுக்கு சந்தேகம் முற்றுகிறது. சுடுநீரில் குளிக்க கிழவன் பிரியப்படுகிறான். சூட்டின் இதத்தில் அதிக மது குடித்து கிழவன் மயங்கிவிடுகிறான். அதே இடத்தில் தேகி தனியாகக் குளித்துக் கொண்டிருக்க, தாஷி அவளை நோக்கி பூனை மாதிரி நடக்கிறான். அதனை தேகி ரகசியமாக ரசிக்கிறாள்.

"கிராமத்தில் இருந்தால் இளவயது பசங்களுடன் இவள் சென்றுவிடுவாள். அதனால்தான் இங்கு வந்து வாழ்கிறேன்." என்று தேகி இல்லாத சமயத்தில் தாஷியிடம் கிழவன் சொல்கிறார்.அதனைக்கேட்டு தாஷி சங்கடப்படுகிறான்.

கார் வரும் சத்தம் கேட்க கதையை துறவி நிறுத்துகிறார். வண்டி நிற்காமல் சென்றுவிட அங்கிருந்து நடந்து ஒரு மலை குகைக்குச் செல்கிறார்கள். அங்கு தியான புத்தரின் ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது. இருட்டத் தொடங்கியதால் அங்கேயே தங்குகிறார்கள். சோனம் சமைக்கத் தொடங்குகிறாள். அவளுக்கு உதவுவது போல் தொந்டுப் அருகில் சென்று அமர்கிறான். இருவரும் அன்பாகப் பேசிக் கொண்டே சமைக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு இரவு உறங்கும்பொழுது விட்ட இடத்திலிருந்து மீண்டும் கதையை சொல்லத் துவங்குகிறார் துறவி.

தாஷி,தேகி இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள். அதனால் தேகி கர்ப்பமாகிறாள். 'இது அவருக்குத் தெரிந்தால் நாம் சாகவேண்டியதுதான். அவருடைய கத்தி மரத்தை மட்டும் வெட்டாது!' என்கிறாள். மதுவில் விஷம் கலந்து கிழவனைக் கொள்ள சதி செய்கிறார்கள். விறகு வெட்டிக்கொண்டு களைப்புடன் வரும் கிழவனுக்கு விஷம் கலந்த மதுவைக் கொடுக்கிறார்கள். கிழவனின் ஏங்கிய பார்வை தாஷியின் மேல் விழுகிறது.

சூரியக் கதிர்கள் பரவிய நேரம் தொந்டுப் கண்விழிக்கிறான். பஸ் வரும் சத்தம் கேட்டதும் துறவி ஓடிப்போய் நிறுத்துகிறார். "ஒரு ஆளுக்குதான் இடம் இருக்கு" என்கிறார் டிரைவர். "இரண்டு நாட்களாக ஒன்றாக பயணம் செய்கிறோம். திருவிழா வேறு வருகிறது.." என்று துறவி தயக்கத்துடன் கேட்கிறார்.

"அளவுக்கு அதிகமா ஏத்தினா போலீசுக்கு பதில் சொல்லணும்." என்று டிரைவர் கறாராக பேசுகிறார். எல்லோரும் தொந்துப்பை அனுப்ப நினைக்கிறார்கள். இன்னும் காத்திருந்தால் ஆப்பிள் எல்லாம் அழுகிவிடும். எனவே அவரை அனுப்பலாம் என்று கூடையை எடுத்துக்கொண்டு போய் வண்டியில் வைக்கிறான் தொந்டுப். வியாபாரி மிகவும் சந்தோஷப்படுகிறார்.

"இது கருணையா... இல்ல, வேறு ஏதாவதா?" என்று துறவி கிண்டலாகக் கேட்கிறார். திரும்பவும் அங்கிருந்து நடக்கத் துவங்குகிறார்கள். வழியில் சோனம் அமர்ந்துவிடுகிறாள். தொந்துப் அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான்.

"ஏன், களைப்பா இருக்கா? நான் வேணும்னா உன் சுமையைத் தூக்கிட்டு வரவா?"

"இல்ல, நானே சமாளிச்சுக்கிறேன்!"

"ஏன் கவலையா இருக்கே?"

"ஒண்ணுமில்ல... அந்த ஆப்பிள் தாத்தாவை நினைச்சேன்!"

"ஏன்? அவரை மிஸ் பண்றோம்னு தோணுதா?"

"ஆமா!"

"நீ சந்திக்கும் எல்லோரையுமே இப்படித்தான் மிஸ் பண்றதா நினைப்பியா?'' என்று தொந்துப் புன்னகைக்கிறான். திரும்பவும் நடக்கத் துவங்கி ஓர் இடத்தில் சென்று உட்காருகிறார்கள். சோனத்தின் அப்பா கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார். இசைக்கருவியை மீட்டியவாறே துறவி சொல்லத் துவங்குகிறார்.

விஷம் அருந்திய கிழவன் மரண வேதனையில் துடிக்கிறான். உயிர் பிரிய நீண்ட நேரம் ஆவதால் தாஷிக்கும், தேகிக்கும் சண்டை வருகிறது. தேகியிடம் கோவப்பட்டு தாஷி சென்று விடுகிறான். அவனைக் கூவி அழைத்தவாறே தேகி ஓடி வருகிறாள். அவளை திரும்பிப் பார்க்காமல் வேகமாக தாஷி நடக்கிறான். தேகி அலறியவாறே ஓடும் நதியின் பாறை இடுக்கில் விழுகிறாள்.

தயங்கியவாரே குரல் வந்த திசையை நோக்கி தாஷி ஓடுகிறான். நதியில் அவளின் குருதி பார்த்து அழுகிறான். நீர் நிலையில் அவளின் முகம் தெரிகிறது. மதிய உணவுடன் சேர்த்து அருந்திய போதையில் அவனுடைய தம்பியிடம் "நான் கொலை செய்து விட்டேன்... நான் கொலைகாரன்..." என்று உளறுகிறான். அந்த குதிரைதான் என்னைக் கீழே தள்ளியது என்று கழுதையை காண்பிக்கிறான். கர்மா தாஷியை எழுப்பியவாறு வீட்டிற்கு புறப்படுகிறான்.

சாலையில் ஒரு சிறிய டிராக்டர் வருகிறது. அதில் இருவருக்குதான் இடமிருக்கிறது என்கிறார்கள்.. "நீங்க ரெண்டு பேரும் போங்க! அவர் சீக்கிரம் போகணும்ல?" என்று சோனத்தின் அப்பா சொல்ல,தொந்துப் மௌனமாக அவளைப் பார்க்கிறான். "அமெரிக்கா போற நேரம் வந்திருச்சு. வா! போகலாம்!" என்று துறவி எழுந்திருக்கிறார். வண்டி புறப்படுகிறது. பார்வையிலிருந்து மறையும் வரை, ஒருவருக்கொருவர் கையசைத்து விடைபெற்றுக் கொள்கிறார்கள்.

"நான் உனக்கு இன்னொரு கதை சொல்லவா?" என்று துறவி புன்னகைக்கிறார்.

"ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒருத்தர் அரசாங்க வேலை செய்தார். வேலையை விட்டுவிட்டு கனவு பூமி சென்று ஆப்பிள் பறிக்க புறப்பட்டார். ஆனால், போகும் வழியில் ஒரு அழகான பொண்ணைப் பார்த்தார்..." என்று சொல்லிக்கொண்டு போக...

தொந்டுப் சிரித்துக்கொண்டே, "அதனால அவரு அமெரிக்கா போறதையே மறந்துட்டாரு!" என்று சொல்லிப் புன்னகைக்கிறான். அழகிய மலைத் தொடர்களின் வழியே பயணம் தொடர படம் நிறைவடைகிறது.

ஒரு கழுதை எப்படி குதிரையாக தாசியின் கண்களுக்குத் தெரிந்ததோ? அப்படித்தான் நாமும் வாழ்கிறோம். கிராமத்தில் இருப்பவர்களுக்கு சென்னை செல்ல வேண்டும். சென்னையில் இருப்பவர்களுக்கு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எல்லோருக்கும் அந்த எண்ணம் கைகூடுவது இல்லை.

நந்தலாலா பாதிப்பில் பயணம் தொடர்புடைய இந்தப் படத்தைப் பார்த்தேன். நோர்புவின் திரைமொழி சிறப்பாக இருந்தது. எஸ்ரா இந்தப் படத்தைப் பற்றி அவருடைய பழைய தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுதே பார்த்தது. நீண்ட இடைவெளியில் மீண்டும் பார்க்க நேரம் கிடைத்தது.

அருமையான இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட அழகான படம்.

2003ல் வெளியாகி, உலகின் கவனத்தை ஈர்த்த இந்த பூட்டான் நாட்டுப் படத்தின் இயக்குநர் நோர்பு துறவியாக வாழ்வைத் துவங்கி சினிமா இயக்குனர் ஆனவர். வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் படத்தை வாங்கிப்பாருங்கள். பயணிகளும் மாயக்காரர்களும் ஓர் இனிய பயண அனுபவமாக இருக்கும்.

Monday, December 20, 2010

மர்மஸ்தான கீறல் - ஆஸ்மேன் செம்பேன்

மூலாடே(genital mutilation) என்பது பெண்களின் பிறப்புறுப்பை கூர்மையான ஆயுதத்தால் சேதப்படுத்தும் ஆப்ரிக்க பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கவழக்கம். பெண்களை பரிசுத்தப்படுத்தும் கொடூரமான சடங்கு முறை. ஆண்களுக்கு செய்யப்படும் சுன்னத்(circumcise) போல ஒரு சடங்கு.திருமணத்திற்கு முன் பெண்குழந்தை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்யும் சடங்காகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்த சடங்கிற்கு உட்படுத்தப்படும் குழந்தைகளின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டதுதான் இந்தத் திரைப்படம்.

மேலும் திரைப்படத்தைப் பற்றி படிப்பதற்கு முன் உயிர்மையில் வெளியான இந்தக் கட்டுரையை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படித்துவிடுங்கள்: மறுக்கப்பட்ட பெண்மை>>

ஆப்ரிக்க தேசத்தின் எங்கோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தின் காலைப் பொழுது ரம்யமாகத் துவங்குகிறது. காலை சூரியன் கிராமத்தில் நுழையும் பொழுது வியாபாரப் பொருட்களை வண்டியில் சுமந்தவாறு ஒருவன் கிராமத்திற்கு வருகிறான். சிறுவர்கள் அவனுடைய ஒட்டைவண்டியை தள்ளி முன்னேற்றுகிறார்கள். மரநிழலில் அவன் வண்டியை நிறுத்துகிறான். அதற்கு எதிரே கிராமத்தின் மசூதி இருக்கிறது. கிராமவாசிகள் அங்குமிங்கும் ஓடி ஏதாவதொரு வேலை செய்தபடி இருக்கின்றனர். கோலே அவளுடைய வீட்டை பெருக்கிக் கொண்டிருக்கிறாள். மூலாடே சடங்கிலிருந்து தப்பித்த நான்கு சிறுமிகள் ஓடி வந்து அவளுடைய காலில் விழுகின்றனர். தன்னுடைய கணவனின் மூத்த மனைவியை கேட்டுக்கொண்டு சிறுமிகளுக்கு கோலே அடைக்கலம் கொடுக்கிறாள். சிறுமிகள் சடங்கிலிருந்து தப்பியதற்கு அடையாளமாக கொட்டுசத்தம் பின்னணியில் கேட்கிறது.

கோலேயின் கணவன் கஸீத்திற்கு மூன்று மனைவிகள். கோலே இரண்டாவது மனைவி. அன்று கஸீத் வியாபாரத்திற்காக வெளியூர் செல்கிறான். வீட்டின் வாசலில் காப்புக் கயிறு கட்டி சிறுமிகளைத் தன்னுடனே தங்கச் செய்கிறாள். தன்னைக் கேட்காமல் யாரும் சடங்கு முடியும் நாள் வரை வெளியில் செல்லக்கூடாது என்று ஆணையிடுகிறாள். இது தெரிந்து சடங்கை நிறைவேற்றும் பெண்கள் சிலர் கோலேவின் வீட்டின் முன்பு கூடி விவாதம் செய்கின்றனர். கோலே குழந்தைகளை அனுப்ப பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள்.

மதத்தின் நம்பிக்கைகளை அழிக்க சதி செய்வதாகக் கூறி கோலேவினை பஞ்சாயத்திற்கு அழைக்கிறார்கள். ஊர்த்தலைவரின் மகன் இப்ராஹிமுக்கு கோலேவின் மகள் அம்சாத்தொவை நிச்சயத்திருப்பதால் அவர் அதிர்ச்சியடைகிறார். மேலும் மூலாடே செய்துகொள்ளாத அம்சாத்தொவிற்கு தனது மகனை கல்யாணம் செய்து கொடுக்கமாட்டேன் என்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இப்ராஹீம் பாரிசிலிருந்து ஊருக்குத் திரும்புகிறான். அவனுக்கு சிறப்பான முறையில் வரவேற்ப்பு அளிக்கிறார்கள். சுத்தப்படுத்தும் சடங்கை முடிக்காததால் அவனை வரவேற்க அம்சாதோ செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாள்.

சில நாட்களில் கஸீத் ஊருக்குத் திரும்புகிறார். வரும் வழியிலேயே அவனிடம் கோலேவின் செயல்களை ஊரார் சொல்கிறார்கள். கோவமுடன் வீட்டிற்கு வந்து மனைவிகளிடம் அவன் வாக்குவாதம் செய்கிறான். சிறுமிகளுடன் அம்சதொவிற்கும் மூலடே செய்யவேண்டும் என்று கோலேவினை வற்புறுத்துகிறான். அதற்கு அவள் மறுத்துவிடுகிறாள். இப்ராஹிமுக்கு 11 வயதான வேறொரு பெண்ணை கல்யாணம் முடிக்கப் பார்த்துவிடுகிறார்கள்.

ரேடியோ கேட்பதால் தான் பெண்கள் இப்படி நடக்கிறார்கள் என்று அவற்றைப் பறிக்கிறார்கள். பெண்கள் ரேடியோ கேட்பதற்கும் தடை விதிக்கிறார்கள். இதற்கு பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. இரவில் கூடி பெண்கள் அனைவரும் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில் காஸீத்-ன் அண்ணன் கோலேயின் வீட்டிற்கு வருகிறான். பிரச்சனை மேலும் வலுக்கிறது. மீண்டும் அவள் பஞ்சாயத்தின் முன் நிறுத்தப்படுகிறாள். மூலாடே செய்ய குழந்தைகளை விடுவிக்குமாறு சாட்டையால் காஸீத் மூர்க்கமாக அடிக்கிறான். பெண்கள் எல்லோரும் செய்வதறியாது தவிக்கிறார்கள். "இன்னும் வேகமாக அடி..." என்று ஆண்கள் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். அவர்களுடன் சடங்கு செய்யும் பெண்களும் சேர்ந்து கொள்கிறார்கள். "எதுவும் பேசாமல் நில்... பொறுத்துக்கொண்டு நில்" என்று பெண்கள் அனைவரும் கோலேவிற்கு குரல் எழுப்புகின்றனர். கோலே வலியைப் பொறுத்துக்கொண்டு பிடிவாதமாக நிற்கிறாள். மரத்தடியில் வியாபாரம் செய்யும் கடைக்காரன் வந்து பிரம்பை வாங்கிக் கீழே போடுகிறான். காஸீத்ன் மற்ற இரண்டு மனைவிகள் கோலேவை கைத்தாங்களாக வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்குள் 4 சிறுமிகளில் ஒரு சிறுமியை அவளிடைய தாய் வந்து பொய் சொல்லி அழைத்துச் செல்கிறாள். அவளுக்கு மூலாடே செய்யும் பொழுது ரத்தப் போக்கு அதிகமாகி இறந்துவிடுகிறாள். அன்று இரவே கோலேவை சித்ரவதையிலிருந்து காப்பாற்றிய கடைக்காரனும் கொலை செய்யப்படுகிறான். சடங்கு நாள் முடிந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல அவர்களுடைய அம்மக்கள் சந்தோஷத்துடன் வருகிறார்கள். குழந்தையைப் பறிகொடுத்தவள் மட்டும் அழுது புலம்புகிறாள். எல்லோரும் மசூதியை நோக்கிச் செல்கிறார்கள். இனி நாங்கள் யாருக்கும் மூலாடே செய்யப்போவதில்லை என்று கத்துகிறாள். ஆவலுடன் மற்ற பெண்களும் சேர்ந்துகொள்கிறார்கள். அந்த நேரம் பார்த்து சிவப்பு உடை அணிந்த சடங்கை நிறைவேற்றும் பெண்கள் வருகிறார்கள். பெண்களில் சிலர் கோலேவுடன் சேர்ந்துகொண்டு அவர்களிடமிருக்கும் துருப்பிடித்த கத்திகளையும், சடங்கு உடைகளையும் எரிந்து கொண்டிருக்கும் ரேடியோக் குவியலில் போடுகிறார்கள்.

"இது இஸ்லாத்தோட மத விரோதச் செயல்" என்று ஊர்த் தலைவர்கள் முறையிடுகிறார்கள்.

"சடங்கு செய்யாத லட்சக்கணக்கான பெண்கள் மெக்காவுக்கே போறதா மதத் தலைவர் ரேடியோவில் பேசனாரே" என்று அவர்களுக்கு கோலே பதில் சொல்கிறாள். பஞ்சாயத்துத் தலைவர்கள் வாயடைத்துப் போகிறார்கள். பெண்கள் அனைவரும் வெற்றி கோஷம் போடுகின்றனர். அம்சதோ கூட்டத்திலிருந்து விலகி தனியாகச் செல்கிறாள். தந்தையின் ஆணையை மீறி அவளையே மணக்கப் போவதாக இப்ராஹீம் அவளை நோக்கிச் செல்கிறான். குவிக்கப்பட்ட ரேடியோக்கள் எரிந்துகொண்டிருக்கிறது. அதிலிருந்து எழும் கரும்புகை மசூதியின் உட்சியிலுள்ள வெள்ளை முட்டையையும் தாண்டி உயரே செல்கிறது. அடுத்த காட்சியில் ரேடியோவிற்கு பதில் டிவி ஆண்டனா முளைக்கிறது.

பெண்களின் மீதான அடக்கு முறையை எதிர்த்து குரல் கொடுக்கும் இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 2004-ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான சிறப்பு விருது பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஆரம்ப சில காட்சிகள் YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது: Moolaadé

இந்த படத்தை இயக்கிய "ஆஸ்மேன் செம்பேன்" ஆப்பிரிக்க சினிமாவின் தந்தையாகப் போற்றப்படுகிறார். அவரைப் பற்றிய கட்டுரை கீற்று தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. அந்த இணைப்பு கீழே உள்ளது.

ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை - ஆஸ்மேன் செம்பேன்

பின்குறிப்பு: இதே போன்ற கதையை Alice Walker என்பவர் ஆங்கிலத்தில் நாவலாக 90 களில் எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் பெயர் எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

Monday, May 24, 2010

தி வே ஹோம்

ஜிபுரோ (கொரியப் படம்) - இயற்கையின் சூழலில் அமைந்த மலை கிராமத்தில் எளிமையாக வாழும் பாட்டிக்கும், நகரச் சூழலின் பரபரப்பான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட பேரனுக்கும் இடையிலான முரண்பட்ட வாழ்க்கை எங்கு சங்கமிக்கிறது என்பது தான் கதை. எளிமையான கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதையை பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். மொத்தப் பட வசனத்தையும் இரண்டு பக்க வெள்ளைத் தாளில் எழுதி விடலாம். ஆகவே திரையில் தென்படும் ஒவ்வொரு காட்சிகளும், ஒளிப்பதிவும், இசையும் படத்தின் வெற்றிக்கு பக்கபலம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகர்களும் தங்களது அருமையான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தமக்கான பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். நடித்திருக்கும் பலருக்கும் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவனைப் பிரிந்த பெண் ஒருத்தி, பள்ளி விடுமுறையில் இருக்கும் தன் மகனான ஏழு வயது சிறுவனை (
சாங் வூ - 7 வயது) மலை கிராமத்தில் தனிமையில் வசிக்கும் தன் அம்மாவின் (கிம்- யூல்-பூ - 77 வயது) வீட்டிற்கு முதன் முறையாக அழைத்துச் செல்கிறாள். அந்த பயணத்திலிருந்தே படம் துவங்குகிறது. குக்-கிராமத்திற்குச் செல்லும் பேருந்துப் பயணமே அவனுக்கு அலுப்பூட்டுவதாக அமைகிறது. உடன் பயணிக்கும் வெள்ளந்தியான மனிதர்களின் பேச்சும், உடல் மொழியும் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. பாதியிலேயே திரும்பிவிடலாம் என்று அம்மாவுடன் சண்டை போடுகிறான்.

சிறுவனை அடித்து இழுத்துக்கொண்டு
பாட்டியிடம் செல்கிறாள். கணவனைப் பிரிந்து வாழும் அவள், தனக்கொரு வேலை கிடைக்கும் வரை அவனை பார்த்துக்கொள்ளுமாறு பாட்டியிடம் கூறிவிட்டு கடைசிப் பேருந்தைப் பிடிக்கப் புறப்பட்டுவிடுகிறாள்.

மலையின் மேலுள்ள குடிசை வீட்டில் பாட்டியும் பேரனும் தனியாக வசிக்கிறார்கள். தனது குறும்புத்தனத்தால் ஏகப்பட்ட இடைஞ்சல்களை சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்கிறான். சுவையான உணவிற்காகவும், விளையாட்டுப் பெருட்களுக்காகவும் சிறுவன் கொடுக்கும் தொல்லைகளை துறவியின் அமைதியுடன் முதியவள் எதிர்கொள்கிறாள்.

அன்பான பணிவிடைகளும், எளிமையான தியாகமும் மூதாட்டியின் மீதான அன்பை சிறுவனுக்கு ஏற்படுத்துகிறது. அழுக்கானவள் என்றும், பைத்தியக்கார ஊமை என்றும் ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்கிய பாட்டியை பிரிய மனமில்லாமல் கடைசியில் சிறுவன் தவிக்கிறான். சில வார்த்தைகளை எழுதி தபாலில் அனுப்ப அவளுக்குக் கற்றுத் தருகிறான். முடிவில் பேரனை வழியனுப்பிவிட்டு சோகம் ததும்ப அந்த மலைப்பாதை வழியே தனிமையுடன் கூன் முதுகிட்டு பாட்டி நடந்து செல்கிறாள். திரையில் இருள் கவிய 'எல்லா பாட்டிகளுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்' எனும் எழுத்துக்களுடன் படம் முடிகிறது.

பாட்டிகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்குமான உறவு மாதிரியான பலமான விஷயம் வேறெதுவும் இல்லை. நாள் முழுவதும், வருடம் முழுவதும் பெற்றவர்களுடன் இருந்தாலும் விடுமுறையின் சில தினங்களில் பகிரக் கிடைக்கும் தாத்தா பாட்டியின் அன்பு வருடம் முழுவதற்குமான உற்சாக ஆற்றல் தரும் விஷயமாக சிறுவர்களுக்கு இருக்கிறது.

எல்லாருமே வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்கள் தான்... திரையில் பார்க்கும் பொழுது இழந்துவிட்ட எதையோ ஞாபகப்படுத்துவதை உள்ளுணர்வு ஏற்படுகிறது. மொத்தப் படமும் ஆங்கில வரிகளுடன் யூட்யுப்-ல் காணக் கிடைக்கிறது.

Youtube Link:

The Way Home - Part 1
The Way Home - Part 2
The Way Home - Part 3
The Way Home - Part 4
The Way Home - Part 5
The Way Home - Part 6
The Way Home - Part 7
The Way Home - Part 8
The Way Home - Part 9
The Way Home - Part 10

இந்தப் படத்தைப் பற்றிய நண்பர் சுரேஷ் கண்ணனின் விமர்சனம்: பாட்டிமார்களுக்குச் சமர்ப்பணம்