Tuesday, January 19, 2010

கிழக்கு மொட்டை மாடியில் - பா ராகவன்

ஒருநாள் எழுத்தாளர் பா ராகவனின் இணைய தளத்தை படித்துக் கொண்டிருந்தேன். 'ஒரு முக்கிய அறிவிப்பு' என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அரசியல், தீவிரவாதம் என்று எழுதிக் கொண்டிருப்பதால் கொலை மிரட்டல் வந்திருக்குமோ என்று நினைத்தேன். அதைவிடப் பெரிய பயங்கரம்.

Jan-17 2010
ல் Non Fiction Writing தொடர்பான நுணுக்கங்களைச் சொல்லித்தர ஒருநாள் வகுப்பு நடத்தப் போவதாகவும், கிழக்குக்கு எழுத விரும்புகிற புதிய நண்பர்கள் சிலரையும் அழைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். விருப்பமும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் முன்கூட்டி பதிவு செய்யும்படிக் கேட்டிருந்தார். எந்தவித யோசனையும் இல்லாமல் என்னை அழைக்குமாறு அவருக்குத் தெரிவித்திருந்தேன். அதன்படி என்னை அழைத்திருந்தார்.

விடிகாலை 5.00 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொண்டேன். ஹாப்பி... இன்று முதல் ஹாப்பி என்ற பாடல் எங்கோ கேட்டது. முக்கியமான தருணங்களில் பாடலின் ஒரு வரி மட்டுமே மறுபடியும் மறுபடியும் எனக்குக் கேட்கும். இந்த முறை முழுப்பாடலும் கேட்டது. அடடே... மேலான நிலையை அடைந்துவிட்டோமோ! என்று நினைத்தேன். குளித்து முடித்து பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றதும் தான் தெரிந்தது எம் ஜி ஆரின் 93-ஆவது பிறந்த நாளாம். புகைப்படத்திற்கு மாலை போட்டிருந்தார்கள். கிழக்கில் இன்னும் வெளுக்கவில்லை. இருள் திட்டிற்கும் பனிப் புகைக்கும் நடுவில் புரட்சித் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

சரியான நேரத்தில் பேருந்து கிடைத்து 8 30 மணிக்கெல்லாம் எல்டாம்ஸ் சாலையில் இருந்தேன். கிழக்கு பதிப்பகத்திற்கு செல்லும் வழியில் அருள் மிகு பாலசுப்பிரமணியன் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதும் கோவிலுக்குள் செல்ல நினைப்பேன். பர பரப்பான வேலையுடன் செல்வதால் முடியாமல் போகும் அல்லது கோவில் பூட்டி இருக்கும். ஞாயிற்றுக் கிழமை என்பதால் 4 நபர்கள் மட்டுமே இருந்தனர். இரண்டு பசுக்களும் கோவிலினுள் இருந்தன. மென்மையான அமைதி அகமும் புறமும் பரவிக்கொண்டிருந்தது. அதே பரவசத்தில் எல்லா விக்ரகங்களையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியில் வந்தேன். வந்த வேலை தானே முக்கியம். நியூ ஹரிசான் மீடியா -வின் முன் அலுவலகத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்.

"நீங்க
தான் முதல் ஆள்" என்றார்கள்.

ஆரம்பத்தில் யாரு First வராங்கன்னு பார்க்கக் கூடாது. கடைசியில யாரு First வராங்கன்னு தான் பார்க்கணும். ஒரு ஹீரோ சொல்லி இருக்காரு.
கன்னத்தில் போட்டுக்கோங்கோன்னு சொல்ல நினைத்தேன். சிறிது நேரத்தில் இன்னொருவரும் வந்து சேர்ந்தார். என்னை பற்றிக் கேட்டார். சொல்வதற்குப் பெரிதாக என்ன இருக்கிறது. அவரைப் பற்றி விசாரித்தேன். எழுத்தாளர் CSK என்றார் (http://www.writercsk.com). அவர் எழுதிய சந்திரயான் கூட கிழக்கு வெளியிட்டுள்ளது. கொஞ்ச நேரத்தில் பத்ரி வந்து எங்களை உள்ளே அழைத்தார். அதன் பிறகு வந்த அநேகரும் ஒரு விதத்தில் எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளராகத் தான் இருந்தனர். என்னைத் தவிர.

பிடித்த எழுத்தாளரை நேரில் சந்திப்பது சங்கடமான சந்தோசம் என்று சேரல் அடிக்கடி கூறுவான். அந்த உணர்வுடனே காத்துக் கொண்டிருந்தேன். பா ரா அருகில் வந்ததும் 'ஹாய்' என்று பெரிய குரலெடுத்துக் கத்தினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

சரியாக 9.30-க்கு பாராவும் பத்ரியும் எங்களை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர். பா ராவிற்கு கடந்த சில நாட்களாக மலேரியாவாம். பேசக் கூட முடியவில்லை. அதைக் கூட பொருட்படுத்தாமல் மதியவம் வரை எங்களுடன் உரையாடினார். ரமணன், CSK, சுரேஷ் கண்ணன், சிவாராமன், யுவ கிருஷ்ணா, பிரதீப், ஆதிஷா, பிரதீப் குமார் ஆகிய பதிவர்களும், சுஜாதா, வைதேகி, பாலு சத்யா போன்ற கிழக்கின் நண்பர்களும் உடன் இருந்தனர்.

உரையாடலில் பின்வரும் விஷயங்களைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு வந்து விரிவாகப் பேசினார்:

1. கதையல்லாத எழுத்தில் உள்ள சவால்கள்
2. தகவல்களைப் பெறுவது எப்படி?
3. ஒரு புத்தகத்தை எவ்வாறு யோசிக்க வேண்டும்?
4. அத்தியாயங்களை எப்படி வகுக்க வேண்டும்?
5. சுவாரசியம் என்பது என்ன?
6. என்னென்ன துறைகள் சார்ந்து எழுதலாம்?
7. புத்தக எழுத்துக்கான அடிப்படை வாசிப்புகள் எவை எவை?
8. புத்தகத்தின் அளவைத் தீர்மானிப்பது எப்படி?
9. பேரா பிரிக்கும் கலை
10. பிழையின்றி எழுத என்ன செய்யலாம்?
11. எழுதுவது என்னும் பணி சார்ந்த சில உபயோகக் குறிப்புகள்.

சாதாரணமாகத்தான் பேச்சை ஆரம்பித்தார். முதலில் அறிமுகம் செய்து கொள்ளலாமே என்று பத்ரி கூறவும் முதல் ஆளாக நான் எழுந்து கொண்டேன்.

இந்த Formality எல்லாம் வேண்டாம். சும்மா உட்கார்ந்து கொண்டே சொல்லுங்கள் என்றார் பாரா.
அறிமுகப் படலத்திற்குப் பின் மறுபடியும் தொடர்ந்தார்.

'குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை' -
தெய்வப் புலவன்

விளக்கம்: ஒருவன் ஆத்மா சித்தியுடன் தன்னிடம் உள்ளதைக் கொண்டு ஒரு காரியத்தை செய்தான் என்றால் மலையின் மீதேறி யாணைப் போர் காண்பது போல தெளிவாகச் செய்யலாம்.

புத்தகம் எழுத உட்காரும் பொழுது, எழுத்தின் கருப்பொருளைப் பற்றிய சந்தேக மனப்பான்மை இருக்கக் கூடாது. அது சம்மந்தமாக நிறைய வாசிக்க வேண்டும். வாசிக்கும் பொழுதே உபயோகமான நல்ல குறிப்புகளை ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்புகளை எடுத்துவிட்டோமே என்று எல்லாவற்றையும் பயன்படுத்தக் கூடாது. தேவையானவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத ஒரு சொல்லைக் கூட வாசகனுக்குக் கொடுக்கக்கூடாது.

மேலும் தொழில் முறையாக எழுத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அதிலுள்ள சவால்கள், மற்றவர்களிடமிருந்து தனித்தன்மையை எப்படி ஏற்படுத்திக் கொள்வது, சொல்லவரும் விஷயத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்வது, தகவல்களைத் திரட்டும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் (தயவு செய்து விக்கிபீடியா உபயோகிக்காதீங்க, பல தகவல்களும் தவறானவை), அத்யாயங்கள் பிரிப்பது எப்படி என்று அடுக்கிக் கொண்டே போனார்.

புத்தகம் எழுதுவதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. அத்யாயம் அத்யாயமாக எழுதுவது ஒரு முறை. ஒரே மூச்சாக உட்கார்ந்து எழுதுவது இன்னொரு முறை. எங்களுடைய அலுவலகத்தில் 10- நாட்களில் ஒரு புத்தகத்தை முடித்திருக்கிறோம். 2 நாட்களில் கூட புத்தகத்தை முடித்திருக்கிறோம். அந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

புத்தகம் எழுதுவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்குமா என்று கேட்கக் கேட்க ஆச்சர்யமாக இருந்தது. பாலகனாகிய என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

கடைசியாக 'எழுதுவது என்னும் பணி சார்ந்த சில உபயோகக் குறிப்புகள்' - பற்றி பேசும் போது முக்கியமான ஒரு விஷயம் கூறினார். உங்களுடைய எழுத்தில் குறையிருந்து, அதை யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களை சாஷ்டாங்கமாக விழுந்து சேவிச்சிக்கோங்கோ. அந்த மாதிரி ஒருத்தர் கிடைக்கிறதே அபூர்வம். மேலும் எழுதும் போது நிறைய தண்ணீர் குடியுங்கள். மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உரையாடலை நிறைவு செய்தார்.

சரி... யார் யாரெல்லாம் புத்தகம் எழுதுகிறீர்கள்? என்று பாராவும், பத்ரியும் வந்திருந்தவர்களைப் பார்த்தனர்.

ஐயா, நான் கல்லூரி படிக்கும் பொழுது முதலாமாண்டு பாடத்தை இரண்டாமாண்டிலும், இரண்டாமாண்டு படத்தை மூன்றாமாண்டிலும், மூன்றாமாண்டு பாடத்தை கல்லூரியிலிருந்து வெளிவந்த பின்பும் முடித்தவன். ஒரு பதிவை எழுதுவதற்கே இங்கு தகிகின தோம் போடுகிறேன். புத்தகம் என்றால் தலையே சுற்றுவது போல் இருக்கிறது. உங்களுடைய வேகம் எனக்கு சரிவராது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

இந்த வருடம் என்னுடைய ராசிக்கு குருபகவான் முதல் ஆறு மாதத்திற்கு நல்லது செய்வாராம். ஆனால் என்னைச்சுற்றி உள்ளவர்களுக்கு கஷ்டம் தானாம். ஐயோ இதைக் கேட்கலையே... பா ரா, பத்ரி, பைத்தியக்காரன், பிச்சைப்பாத்திரம், லக்கிலுக், ஆதிஷா ல்லோரும் என்னைச்சுற்றி அமர்ந்திருந்தனர்.

ஹ ஹ
ஹா... பார்க்கலாம், எனக்கு நல்லது நடக்கிறதா என்று!!!...

Monday, January 11, 2010

கேணி சந்திப்பு - கவிஞர் சுகுமாரன்

முன் குறிப்பு: கவிதை வாசிப்பில் ச் சிறந்த கோமாளி நான்... கீழே இருக்கும் கவிதைகள் கேள்வி ஞானத்தில் எழுதியது. ஞாபகத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஏமாற்றி இருக்கிறேன். பதிவில் பயன்படுத்தியிருக்கும் கவிதைகள் யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள். மாற்றிவிடுகிறேன்.நன்றி...

::::::::::::: ::::::::::::: ::::::::::::: ::::::::::::: :::::::::::::

Poet Sukumaran
நீண்ட நாட்களுக்கு முன்பு 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் சென்னை சிறுகதைப் பயிலரங்கம் நடந்தது. முதலில் உலகச் சிறுகதைகள் பற்றிப் பேச கவிஞர் சுகுமாரன் தான் ஏற்பாடாகியிருந்தது. அப்பொழுதே கோழியை அமுக்குவது போல் அமுக்கவேண்டும் என்றிருந்தேன். ஏனெனில் அவருடைய மொழி பெயர்ப்பில் மதில்கள் மற்றும் காளி நாடகம் ஆகிய படைப்புகளை வாசித்திருக்கிறேன். அந்த சந்திப்பில் மொழி பெயர்ப்பு சமந்தமான பல கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றிருந்தேன். கடைசி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போகவே அந்த இடத்தை 'சா. தேவதாஸ்' நிரப்பினார். கவிஞரை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தமாகவே இருந்தது.

25-12-2009 அன்று நடந்த உயிர்மை புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர் சிவராமன் கவிஞர் சுகுமாரனை அறிமுகப்படுத்தினார். மூத்த ஆளுமை என்பதால் உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது. தயங்கித் தயங்கி அவருடன் உரையாடினேன். சகஜமான உரையாடலின் மூலம் நெருக்கமாகப் பேசினார். விழாநாள் என்பதால் அவருடன் விளக்கமாக உரையாட முடியவில்லை. கேணிக்கு வருகிறார் என்றதும், அன்று விட்டதை இன்று பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன்.

ஞானியின் வீட்டை நெருங்கியதும் இன்ப அதிர்ச்சி. சுகுமாரன் அவருடைய நண்பருடன் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
தூரத்தில் நின்றுகொண்டு "வணக்கம்" என்றேன். ஆமோதித்து சிரிக்கவும் அருகில் சென்றேன். 'காளி நாடகம்' புத்தகத்தை அவரிடம் கொடுத்து கையொப்பம் வாங்கிக்கொண்டேன். அருகிலிருந்தவரைப் பார்த்து சிரித்தேன். தன்னுடைய பெயர் க. சீ. சிவக்குமார் என்று கூறினார். நானும் என்னுடைய பெயரைக் கூறினேன். 'நீங்கள் பதிவரா?' என்று சிவா கேட்டார். ஆமாம் என்று சொல்லிவிட்டு கவிஞரைப் பார்த்தேன்.

சுகுமார்ஜி, நீங்கள் பதிவுகளைப் படிப்பீர்களா?

எப்பவாவது நேரம் கிடைக்கும்பொழுது படிப்பேன்.

பதிவுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சில பேர் நல்லா எழுதறாங்க. என்ன ஒன்னு நாலு பின்னூட்டம் வந்ததுமே... தான் ஒரு பெரிய எழுத்தாளன் என்ற நினைப்பு வந்துவிட்டால் அவ்வளவுதான்.

நீங்கள் சிறுவயதில் எங்கு வளர்ந்தீர்கள் சுகுமார்ஜி....?

"அதைத்தானே உள்ள பேசப்போகிறோம். அப்போ கேட்டுக்கலாமே..." - என்று கூறவும் உன்னியின் சிறுகதைகளை சிலாகித்துப் பேசினேன். நீங்கள் உண்ணியைப் பார்க்கும் பொழுது என்னுடைய பாராட்டுக்களை சொல்லிவிடுங்கள். அப்படியே அவருக்கான ஒரு வாசகர் தமிழில் இருக்கிறார் என்றும் சொல்லிவிடுங்கள். அவர் சிறுகதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் கரு நன்றாக இருக்கிறது.

மலையாளம் பேசுவிங்களா? - என்று கேட்டார்.

அய்யய்யோ... சுத்தமா தெரியாது...

Can you sepak in English?

ரொம்ப நல்லா பேசமாட்டேன்... கொஞ்சம் கொஞ்சம்...

அதுபோதும், அவனும் ரொம்ப சுமாராத்தான் இங்கிலீஷ் பேசுவான் என்று உன்னிக்கு ஃபோன் செய்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

Unni, this is Krishna prabhu from Chennai. I red your short stories translated by the poet and well known writer Mr. Sugumaran. It is amazing man. You have done a wonderful job. Congratz. என்று அடுக்கிக் கொண்டே போனேன். அவரும் Thank you, Thank you...என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தக் குரலில் ஒரு படைப்பாளி மட்டுமே அனுபவிக்கக் கூடிய சந்தோஷத்தை உணர முடிந்தது.

I saw your E-Mail ID in the same book I suppose to think. So I will send an e-mail to you. Keep in touch with me...
என்றவுடன் Sure... Sure... என்றார்.

Take care... Bye Bye...
என்று பேசி முடிக்கவும் பாஸ்கர் சக்தி வந்து சேர்ந்தார். அனைவரும் உள்ளே சென்றோம்.

சென்ற வாரங்களில் ஞானிக்கு உடல் நிலை சரியில்லை தெரியுமா?

"இங்க வந்த பிறகுதான் தெரியும். இப்போ எப்படி இருக்காரு?" என்று கேட்டேன்.

ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டாரு. இப்போ உள்ளே தூங்கிட்டு இருக்காரு. இனிமேல்தான் எழுப்ப வேண்டும். நேரம் இருக்கிறதே என்று தரையில் அமர்ந்தார். சின்ன கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தோம். உங்களுடைய சிறுகதைப் புத்தகங்களை வாங்கிவிட்டேன் சக்தி. இனிமேல் தான் வாசிக்க வேண்டும். அருகில் இருப்பவர் என்னை விட நன்றாக எழுதுவார் என்று அறிமுகப் படுத்தினார். அவர் வேறுயாருமில்லை அதே க. சீ. சிவக்குமார் தான். கன்னிவாடி - தமிழினி, உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - வம்சி, குனசித்தர்கள் - கிழக்கு, நீல வானம் இல்லாத ஊரே இல்லை - உயிரெழுத்து... ஆகியவை இவர் எழுதி சில புத்தகங்கள் என்று கூறினார். அவருடைய புத்தகங்களை இனிமேல் தான் தேடித் பி()டிக்க வேண்டும்.

ஞானிக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கேணியைத் தொடங்கினார்கள். புத்தகக் கண்காட்சியின் கடைசி நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. கூட்டம் குறைவாக இருக்கும் பொழுதுதான் இலக்கிய கூட்டத்திற்கான லட்சணம் கூடுகிறது என்று சுகுமாரனைப் பற்றியும், கவிதையைப் பற்றியும் நீண்ட உரையாற்றிவிட்டு கவிஞர் பேசுவதற்கு வாய்ப்பளித்தார்.

"எதுவும் சொல்ல பயமாக இருக்கிறது... எதுவும் பேச பயமாக இருக்கிறது..." - என்ற கவிதையுடன் தனது பேச்சை ஆரம்பித்தார். பல வருடங்களுக்கு முன்பு "எழுதுவது எப்படி?" என்ற புத்தகத்தை 'பழனியப்பா ப்ரதெர்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். அதில் 'தி. ஜா' ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அருமையாக இருக்கும். யாராவது அவரிடம் ஒரு சிறுகதை எழுதித் தருமாறு கேட்டால் வயிறில் புளியைக் கரைக்கும் என்று சொல்லியிருப்பார். குமுதம் டாட் காமில் வேலையிலிருக்கும் போதிலிருந்தே என்னை பேச அழைத்தார்கள். இங்கு தானே இருக்கப் போகிறேன் அடுத்த மாதம் வருகிறேனே என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது வசமாக மாட்டிக்கொண்டேன். எனக்கு வயிற்றில் புளி கரைகிறது. அந்த உணர்வுடன் தான் உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன்.

என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் தான் மூத்தவன். அப்பாவின் சகோதரி உதக மண்டலத்தின் வெலிங்ஸ்டன் என்ற இயற்கை சூழலில் இருந்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் என்னை எடுத்து வளர்த்தார்கள். சிறு வயதில் பெற்றோர்களைப் பிரிந்து வளரும் குழந்தைகள் ஒரு விதத்தில் தனிமையை உணர்கின்றன. நானும் அந்தத் தனிமையை உணர்ந்தேன். அந்தத் தனிமையை போக்கவும், என்னை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்தவும் ஏதேனும் ஒரு விஷயம் தேவைப்பட்டது. அது கவிதை வாசிப்பாக அமைந்தது. கையில் கிடைக்கும் காகிதத்தில், அச்சில் உள்ள அனைத்தையுமே படிப்பேன்.

பள்ளியின் இறுதி வாழ்க்கை முடிவதற்குள் 500 செய்யுள் எழுதிவிட்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் செய்யுள் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதின் மூலம் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நான் கிறுக்கியதற்கு பாராட்டுக்களும் கிடைத்தன. பெண்கள் தான் அதிகம் பாராட்டினார்கள். அதனால் நானும் அக்காக்களுடன் இருப்பதைத்தான் அதிகம் விரும்பினேன். ஒரு முறை எனது பக்கத்து வீட்டு அக்கா கவிதைப் புத்தகம் ஒன்றை பரிசளித்தார்கள். அந்த சம்பவம் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. அதன் பிறகு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் புலவர் குழந்தை எழுதிய 'யாப்பதிகாரம்' என்ற நூல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அதில் எனக்குத் தேவையான இலக்கணத்தைக் கற்றுக்கொண்டேன்.

தமிழ் கவிதைகளையும், புத்தகங்களையும் விரும்பிப் படிப்பதால் என்னுடைய தமிழ் ஆசிரியர்களுக்கு நான் பிடித்த மாணவனாகியிருந்தேன். அவர்களும் எனக்கு பல விஷயங்களை விருப்பமுடன் கற்றுக் கொடுத்தார்கள். கவிதை என்று வரும் பொழுது நிறைய ஆதர்சனகள் இருந்தார்கள். வைதீஸ்வரன் மற்றும் தர்மு சிவராம் ஆகிய இருவரும் என்னை வெகுவாக பாதித்தார்கள். இருவரும் அவர்களுக்கான பாணியில் நன்றாக எழுதி தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இருவரும் பிடித்திருந்ததால் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பம் உண்டாகியது. கடைசியாக யாரும் வேண்டாம் என்று எனக்கென ஒரு நடையை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட நம்முடைய கவிதை மரபில் விவசாயம், வைத்தியம், ஜோதிடம் என்று எல்லாமே கவிதை நடையில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பெரிய பாரம்பரியத்தின் ஒரு பகுதிதான் நான். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சவால். பாரம் என்று கூட சொல்லலாம். கவிதையில் ஒரு அனுபவம் இருக்கவேண்டும். இல்லையெனில் அது செய்தியாகிவிடும். உதாரணமாக...

யாது ஊரே யாவரும் கேளிர் - என்ற வரியைச் சொல்லும் போது அது ஒரு செய்தி மட்டுமே, அதற்கடுத்துள்ள வாசகம் தான் ஒரு அனுபவத்தைத் தருகிறது, ஒரு நிகழ்ச்சியை கண்முன் நிருத்துகிறது. அப்பொழுது தான் அந்தக் கோர்க்கப்பட்ட வாசகங்கள் கவிதைக்கான வடிவத்தைப் பெறுகிறது. இதுதான் கவிதைக்கும், செய்திக்கும் (Statement) உள்ள வித்யாசம். இரண்டுக்குமே பயன்பாட்டு மதிப்பு உள்ளது. அவைகள் தன்னுடைய மதிப்பை எப்பொழுதும் தக்கவைத்துக் கொள்ளும்.

மலையாளத்தில் கவிதை எழுதும் இரண்டு பேரின் பெயர்களைச் சொல்லி இருவரும் வெவ்வேறு தளத்தில் எழுதுபவர்கள். ஒருவர் மென்மையான விஷயங்களையும், இன்னொருவர் தவிப்புகளையும் மையமாக வைத்து எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவரின் சில கூறுகளைக் கழித்துப் பார்த்தால், இரண்டு படைப்பாளிகளின் கவிதைகளும் ஒரே மாதிரி இருக்கும். யார் எழுதியது என்று வித்யாசம் காண முடியாது. ஆனால் தமிழில் இது சாத்தியமில்லை.

அகவற்பா, வெண்பா, செய்யுள், மரபுக் கவிதை என பல வடிவங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது புதுக் கவிதைதான். புதுக் கவிதைகள் ஜனநாயகத்தைப் பிரகடனப் படுத்துவதாக நம்புகிறேன். அதனால் தான் அந்த வடிவத்தை மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக விரும்புகிறேன் போலும்.

என்னைப் பொறுத்தவரை கவிதை மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும். அவைகளாவன 'வடிவம், மொழி மற்றும் உள்ளடக்கம்'. இந்த நிபந்தனைகள் புரியும் விதமாக நீண்ட விளக்கம் அளித்தார். முனைப்புடன் செயல்படும் பல கவிஞர்களுக்கும் இந்த விளக்கம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

சிறுகதையோ, நாவலோ, கட்டுரையோ சொல்ல வரும் விஷயத்தை படைப்பாளி சொல்லியபடியே வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள். கவிதைகள் அப்படி அல்ல. எழுதியவன் ஒன்றை நினைத்து எழுதுவான் படிப்பவர்கள் வேறு ஒரு அனுபவத்தை அதிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஒரே கவிதை ஒவ்வொரு வாசகருக்கும் வேறுவேறு அனுபவத்தை ஏற்படுத்திச் செல்லும். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சுதந்திரமும் கூட என்று சொல்லி அவர் எழுதிய "கையில் அள்ளிய நீர் " கவிதைக்கு வாசகர் அளித்த விளக்கத்தைக் கூறினார். நதியிலிருந்து ஒரு கை நீரை எடுக்கிறார். செடிகளுக்கு அளிக்கிறார். அதை மேகம் கொண்டு மழையாப் பொழிகிறது. அந்த நீரை எடுத்து மீண்டும் நதியில் கவிழ்க்கிறார்.இந்த அனுபவத்தை கவிதையாக சொல்கிறார்...

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?


-
இதை நான் சாதாரண அனுபவமாகத் தான் எழுதினேன். நதி என்பது பரமாத்மா... கையளவு தண்ணீர் ஜீவாத்மா... அது போக வேண்டிய இடம் சென்று கடைசியாக பரமாத்மாவிடமே திரும்பியது என்று சுழற்சியைக் கூறினார். அவருடைய யோசனையில் தவறில்லை. இந்த வார்த்தைகள் அவருடைய யோசனைக்குப் பொருந்துகிறது.

நான் திருவனத்தபுரம் தள்ளி இருக்கும் ஆணையடி என்ற இடத்தில் வசிக்கிறேன். ராஜாக்கள் காலத்தில் அங்கு தான் யானைகளைக் கட்டிப் போடுவார்களாம். அந்தப் புறமும் கூடவே இருக்கும். அங்கு ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாளாம். அதன் காரணத்தை அறிய எனக்கு ஆவல். ஒரு வயதானவரிடம் கேட்டேன்.

"நீ... சிறுபிள்ளை"
என்று கூறிச் சிரித்தார்.

பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன்.

எவ்வளவு கேட்டும் அதற்கான காரணத்தை கடைசிவரை அந்தப் பெரியவர் சொல்லவே இல்லை.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை ஆராய முற்பட்டேன். கடைசி வரை அதற்கான காரணம் தெரியாமல் போனது. ஆகவே அந்த சம்பவத்தை வைத்து ஒரு கவிதை எழுதினேன். இறுதியாக அந்தக் கவிதையை வாசித்து என்னுடைய பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார்.கவிதை வாசிப்பினைத் தொடர்ந்து அவருடனான உரையாடல் நடைபெற்றது.

பல கேள்விகளும் கவிதையை சார்ந்தே இருந்ததால் பேசா மடந்தை போல் உட்கார்ந்திருந்தேன்.
நேரம் பார்த்து மொழி பெயர்ப்பு சமந்தப்பட்ட கேள்வி ஒன்றைக் கேட்டேன். அதற்கு கவிஞரும், ஞானியும் அவர்களுடைய கருத்துக்களை முன் வைத்தார்கள். அவருடைய மொழி பெயர்ப்பு மற்றும் கட்டுரை குறித்து யாரும் பேசாதது வருத்தமாக இருந்தது. ஒரு படைப்பாளி நம் முன் உரையாடுகிறார் என்றால், அவர் நமக்களித்த முக்கியமான படைப்புகளை ஞாபகப்படுத்தி கௌரவிக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. மேலும் சுகுமாரனின் கவிதைகளை முன்வைத்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பது சற்றே ஏமாற்றமாக இருந்தது.

கவிஞர் சுகுமாரின் வலைப்பூ முகவரி: vaalnilam.blogspot.com
விக்கிபீடியா: கவிஞர் சுகுமாரன்

சுகுமாரைப் பற்றிய கட்டுரைகள்:
1. உருமாற்றத்தின் ரகசியம்: பாவண்ணன்
2. கவிஞர் சுகுமாரன் - கவிதைத் திருவிழா 14 - அந்திமழை
3.
சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பல படைப்பாளிகளை தூரத்திலிருந்தும், அருகில் சென்றும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் கவிஞர் வா மணிகண்டன் சுவாரஸ்யமான நண்பர். 10 நிமிடங்கள்அவருடன் பேசியதில் 25 கவிஞர்களின் பெயரை உச்சரித்தார். அவர்களில் சுகுமாரனின் பெயரும் ஒன்று. சுகுமாரனைப் பற்றி எழுதிய பதிவு: கவிஞர் சுகுமாரன்

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்
தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.

2. உரையாடல் கவிதையை மையமாக வைத்து இருந்ததால்
சமயத்தில் கவனம் சிதறியது. ஆகவே தகவல் பிழைகள் ஏராளமாக இருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. நண்பர்கள் குறிப்பிட்டால் மாற்றிவிடுகிறேன்.
3. இங்கு பயன்படுத்தியிருக்கும் கவிதை யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள் சரி செய்துவிடுகிறேன்.


Saturday, December 26, 2009

உயிர்மை புத்தக வெளியீடு

25-12-2009 அன்று 'உயிர்மை' பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த 11 எழுத்தாளர்களின் 12 நூல்களின் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். நான் சென்றிருந்த பொழுது விழாவிற்கான சுவடே இல்லாமல் தேவநேயப் பாவாணர் அரங்கம் பூட்டப்பட்டு இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் நடமாடிக் கொண்டிருந்தேன். ஒருவர் தொல். திருமாவளவனின் ஆளுயர விளம்பரப் பலகையை தயார் செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து பிரிட்டிஷ் கௌன்சில் லைப்ரரிக்குச் சென்றேன். செல்லும் வழி முழுவதும் புத்தகம் பற்றியும், நூலகம் பற்றியும் ஏராளமான வாசகங்கள் சுவரில் எழுதியிருந்தார்கள். அதில் எனக்குப் பிடித்த ஜப்பானியப் பழமொழி...

"நண்பர்களும், புத்தகங்களும் குறைவாக இருந்தாலும் நல்லவைகளாக இருக்கட்டும்."

புத்தம் புதிய எழுத்தாளர்களின் வருகையும், அளவுக்கதிகமான புத்தக வெளியீடுகளும் நடப்பதால் இந்த வாசகம் என்னை யோசிக்க வைத்தது. யோசனையுடனே திரும்பிய பொழுது உயிர்மையிலிருந்து வெளியிட இருக்கும் புத்தகங்களுடன் காரில் வந்து சகாக்கள் இறங்கினார்கள். அவர்கள் வந்த அரை மணி நேரம் கழித்துதான் தேவநேயப் பாவாணர் அரங்கம் திறக்கப்பட்டது. உள் சென்று அமர்ந்து கொண்டேன். சிவசங்கர் என்றொரு நண்பர் அறிமுகமானார். எழுத்தாளர் தமிழ்மகன் வந்தவுடன் இருவரும் சென்று அறிமுகம் செய்து கொண்டோம். தனிப்பட்ட முறையில் புத்தக வெளியீட்டிற்கு வரும்படி அனுப்பியிருந்த மின்னஞ்சலுக்கு நன்றி கூறினேன்.

நலம் விசாரித்துவிட்டு "உங்களோட ஊர் எது?" என்று என்னிடம் கேட்டார்.

அவருக்குப் புரியுமோ! புரியாதோ! என்று கும்மிடிப்பூண்டி போகும் வழி என்றேன்.

"அடடே.. பொன்னேரி பக்கத்துல தான் என்னோட சொந்த ஊர் இருக்குது. உங்களுக்கு 'ஜெகநாதபுரம்' தெரியுமா?" என்றார்.

எங்க ஊரிலிருந்து 5 கி.மீ
தூரத்துல தான் 'ஜெகநாதபுரம்' இருக்குங்க தமிழ்.

"ரொம்ப நெருங்கிட்டோம். அதனால நிறைய பேச வேண்டியது இருக்கு. வெளிவர இருக்கும் நாவல் வெட்டுப்புலி கூட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நடப்பதுதான்" என்றவாறு நண்பர்களை நோக்கி நகர்ந்தார்.

முத்துசாமி, உழவன் (நவநீத கிருஷ்ணன்), நிலாரசிகன் என்று ஒருவர் பின் ஒருவராக நண்பர்கள் வர ஆரம்பித்தனர். சுகுமாரன், ஞானக்கூத்தன், மனுஷ்ய புத்திரன், தமிழ்செல்வன், சாரு, பாஸ்கர் சக்தி, எஸ் ரா - என்று பல எழுத்தாளர்களையும் காண முடிந்தது. சில சினிமா பிரமுகர்களையும் காண முடிந்தது.

'தேநீர்' அருந்த நண்பர்களுடன் (பதிவர்கள்) வெளியில் வந்தேன். பாரதி மணி எதிரில் வந்து கொண்டிருந்தார். அருகில் சென்றதும் நட்புடன் கைகுலுக்கினார். நிலாரசிகனின் சிறுகதைத் தொகுப்பில் எனக்கான சில சந்தேகங்கள் இருந்தது. அவற்றை பென்சிலில் குறித்து வைத்திருந்தேன். அவற்றைப் பற்றி அவருடன் விவாதம் செய்து கொண்டிருந்தபோது தமிழ்செல்வன் எதிரில் வந்தார். நிலாவிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு தமிழ்செல்வனுக்கு வணக்கம் கூறினேன். சிரித்தார்.

உங்களுடைய 'வெயிலோடு போய்...' சிறுகதையை வாசித்தேன். நன்றாக இருந்தது. அந்தக் கதை 'பூ' என்ற சினிமாவாக ஊடக மாற்றம் அடைந்ததில் உங்களுக்கு மன நிறைவு இருக்கிறதா?

அது எப்படி இருக்கும். சினிமா என்பது வேறு ஊடகம் இல்லையா!... ஆனா படம் ஓரளவிற்கு பேர் வாக்கிடுச்சி இல்ல... அவங்க உழைப்பு பாராட்டப்பட வேண்டியதுதான்.

உங்களுடைய கதைக்கான கரு எப்படி கிடைக்கிறது? சொந்த அனுபவமா அல்லது உங்களை பாதிக்கும் விஷயங்களின் தாக்கமா?

ரெண்டுமே தான்... என்னை பாதிக்கிற அடுத்தவர்களின் சம்பவங்களைக் கூட சொந்த அனுபவமாக உணரும் போதுதானே எழுத்தின் மூலமாக வாசகர்களை உணரச் செய்ய முடியும்.

கோணங்கி எப்படி இருக்காரு?

நல்லா இருக்கான். இங்கதான் சென்னையில இருக்கான்...ஒரு நாவல் எழுத வந்திருக்கான்.

ஓ அப்படியா...! அவரை விசாரிச்சதா சொல்லுங்க...

இவ்வளவு நேரம் பேசியதற்கு நன்றி தெரிவித்துவிட்டு நிலாவை நோக்கித் திரும்பினேன். அவர்கள் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் எழுத்தாளர் சுகுமாரனுடனும், நர்சிம்மிடமும் சிவராமன் (பைத்தியக்காரன்) பேசிக் கொண்டிருந்தார். என்னை அருகில் அழைத்து சுகுமாரனிடம் அறிமுகப் படுத்தினார். பயந்துகொண்டே அருகில் சென்று அவருடைய மதிலுகள் மொழிபெயர்ப்பை பாராட்டிப் பேசினேன்.

புதிதாக நிறைய பேர் தமிழில் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கிறது?

நன்றாக செய்கிறார்கள்... ஆனால், மொழிக்கு என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களுக்கான மொழியில் சிறந்து விளங்கி, ஒரு எல்லையைத் தாண்டினால் தான் படைப்பிலக்கியத்தில் அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும்.

"ஒரு கவிஞனுக்கு தேவையான மொழி என்று எதைக் கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன்.

மொழி என்று நான் சொல்ல வருவது "sense of language". அதனைக் கண்டடைவதுதான் கவிஞனுக்கு மிகப் பெரிய சவால்.

தமிழ்ச் சிறுகதைகள் பற்றி...?

முன்பு இருந்த மாதிரி இப்பொழுது இல்லை...

என்ன சொல்றீங்க சுகுமாரன்?

சரி... நீங்களே சமீபத்துல சிறுகதை எழுதுபவர்கள் பத்து பேரை சொல்லுங்களேன்? - என்று கூறினார்.

"எஸ். ரா, சாரு, யுவன் சந்திர சேகர்..."

"இவங்க எல்லோரும் பத்து வருஷம் முன்னாடியே எழுத ஆரம்பிச்சிட்டாங்க. நான் கேட்டது சமீபத்தில்..." என்று சொல்லவும் திணறிப்போனேன்.

ஜே. பி சாணக்யா இன்னும் சிலரைத் தவிர வேறு யாரும் சொல்லிக்கிறா மாதிரி செய்யலை. தமிழ் சிறுகதை எப்படி இருந்தது...! இப்போ அந்த வீரியம் இல்லன்னுதான் சொல்லணும்.

உயிர்மை வெளியிட்ட மலையாள மொழி பெயர்ப்பான 'காளி நாடகம்' நல்ல சிறுகதைத் தொகுப்பு என்றேன்.

"அதுவும் என்னோட மொழி பெயர்ப்புதானே..." என்ற போது இயக்குனர் தங்கர் பச்சான் நெருங்கி வந்து அவருடன் கைகுலுக்கினார். கிளி பச்சை கலரில் டி-ஷர்ட் அணிந்த அழகான வாலிபர் பவ்யமுடன் தங்கருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். இதற்கு மேல் அங்கு நிற்பது சரியல்ல என்று சிவராமனிடம் விடைபெற்று நர்சிம்மின் அருகில் சென்றேன். அவருடன் யுவ கிருஷ்ணாவும், ஆதிஷாவும் நின்றுகொண்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு நர்சிம்மின் "புளிக்காரக்கா" படிக்கக் கிடைத்தது. மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். கதை பிடித்திருந்ததால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு உள்ளே சென்றேன்.

உமா சக்தியின் புத்தக வெளியீடு இருப்பதால் உமா சக்தி, அமித்துவின் அம்மா (சாரதா), அகநாழிகை, பாஸ்கர் சக்தி இன்னும் பலரைக் காண முடிந்தது.

நிகழ்ச்சியை ஆரம்பித்து கே.வைத்தியநாதன் (தினமணி, ஆசிரியர்), ஞானக்கூத்தன், பிரபஞ்சன் ஆகிய மூவரையும் மேடைக்கு அழைத்தார்கள். பிரபஞ்சன் கொஞ்சம் தாமதமாக வந்து மேடையில் கம்பீரமாக அமர்ந்தார்.

நூல் வெளியீட்டு விழாவில் "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன் பேசியது தமிழ் மகனின் இணையத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. (http://www.tamilmagan.in/2009/12/blog-post_25.html)

சினிமா இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், வெற்றி மாறன், அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இலக்கிய கூட்டங்களில் சினிமாக்காரர்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவில் மற்றம் வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, December 24, 2009

நிலாரசிகனின் புத்தக வெளியீடு

"மொத்தம் இருபது எழுத்தாளர்களின் நூல்கள் டிசம்பர் 20-ம் தேதியன்று திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகின்றது. அதில் கவிஞர் நிலாரசிகனின் முதல் சிறுகதைத் தொகுப்பும் அடக்கம் (யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்)... ஆகவே எங்கும் சென்றுவிடாதீர்கள்" - என்று ஒரு வார காலமாகவே நண்பர் சதீஷ் அன்புக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையிலுள்ள அக்காவின் வீட்டிற்குச் சென்று அவள் குழந்தைகள் விளையாடுவதை மதியம் வரை வேடிக்கைப் பார்ப்பது என்னுடைய முக்கியமான வேளைகளில் ஒன்று. அவள் வீடு என் கிராமத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் இருப்பதால் பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்து கொண்டிருப்பேன். அவள் வீட்டிற்குச் சென்று திரும்புவதற்கே அன்று முழுவதும் சரியாக இருக்கும். குடும்ப விசேஷங்களையும், நெருங்கிய நண்பர்களையும் கூட சில நேரங்களில் தவிர்த்துவிடுவேன். இதை மீறி கேணி சந்திப்பைத் தவிர்த்து வெளியில் எங்கும் சென்றதில்லை. புத்தக வெளியீட்டைப் பற்றி யோசித்துப் பார்த்தது கூட கிடையாது. இந்த வருடம் தான் சில நண்பர்கள் புத்தக வெளியீட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள். அதில் நிலா ரசிகனின் 'நண்பர் சதீஷும்' ஒருவர்.

சென்னைச் சிறுகதைப் பட்டறையில் அவர்களுடன் கலந்து கொண்டிருந்தாலும் இருவருடனும் பேசிப் பழக்கமில்லை. அசோகமித்திரன் பங்கு பெற்ற கேணி நிகழ்ச்சியில் தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்து பேசிக் கொண்டிருந்ததில் நிலாரசிகனுக்கு சிறுகதையில் ஆர்வம் வர 'கி.ரா' முக்கிய ஆளுமையாக இருந்ததாகக் கூறினார். அவரைக் காணச் சென்ற அனுபவத்தை ரசமாகக் கூறிக் கொண்டிருந்தார். மேலும் சில விஷங்களைப் பேசிவிட்டு களைந்து சென்றோம்.

தேவநேயப்பாவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு மேல் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு மாலை 4. 45 மணிக்கே சென்றுவிட்டேன். மாம்பழக் கலரில் குர்தா அணிந்த ஒருவர் என்னை இருகரம் கூப்பி வர வேற்றார். அவருடன் இருந்தவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

நீங்கள் யார் என்பது போல என்மீது பார்வையை
ச் செலுத்தினார். நிலாரசிகனுக்காக வந்திருப்பதாகக் கூறினேன். மகிழ்ச்சியுடன் என்னை அமரச் செய்தார். அவருடைய கதைகளைப் படித்தேன் நன்றாக இருக்கின்றது.அதிலும் கடைசி கதை வித்யாசமான முயற்சி என்றார்.

"நீங்கள் எழுத்தாளரா?" என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே இல்லை என்றார். கொஞ்ச நேரம் உரையாடியதில் ஆங்கில நாளிதழில் அவர் 20 ஆண்டுகாலம் வேலை செய்திருப்பதும், அவருடைய சுய முன்னேற்றப் புத்தகம் வெளிவந்திருப்பதும் தெரியவந்தது. அவர் தான் திரிசக்தியின் எடிட்டர் ரமணன் என்று சொல்லிய போது மேலும் ஆச்சர்யமாக இருந்தது.

எடிட்டர் வேலை கடினமாகவும், சவாலாகவும் இருக்குமே?

நிச்சயமா... நம்மையும் மீறி சில தவறுகள் நிகழ்ந்துவிடும். கடினமான வேலை தான் என்றார்.

இலக்கிய பீடம் விக்கிரமன் இந்த வயதில் கூட மாத இதழை நடத்துகிறார். அவர்கள் நடத்தும் நாவல் போட்டிக்கு வரும் படைப்புகள் அனைத்தையும் வாசித்து பிழையைத் திருத்துகிறார். நேரில் அவரைப் பார்த்த போது அசந்துவிட்டேன்.அவருடைய புத்தகம் கூட இன்று வெளி வருகிறது என்று நினைக்கிறேன் என்றவாறு அவரைப் பார்த்தேன்.

"ஆமாங்க... அவருடைய புத்தகம் கூட வெளிவருகிறது. அவர் பிழைதிருத்தி அனுப்பிய கையெழுத்துப் பிரதியை அப்படியே பத்திரமா வச்சிருக்கேன். ஒரு கமா, புள்ளியைக் கூட கவனமா சரி செய்து அனுப்பியிருக்கிறார்" என்று சொல்லியவாறு வாசலை நோக்கி நகர்ந்தார். நாஞ்சில்நாடன் புன்னகையுடன் வந்துகொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் வெங்கட் சுவாமிநாதனும் வந்து சேர்ந்தார்.

அவர்கள் குழுவாக பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நாஞ்சில் நாடன் மட்டும் வெளியில் செல்வது போல் தெரிந்தது. எழுத்தாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காண நிழல் மாதிரி அவரைப் பின்தொடர்ந்தேன். நீண்ட நேரம் யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வெளிவர இருக்கும் புத்தகங்களைப் பல்வேறு கோணங்களில் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். நாஞ்சில் நாடன் திரும்பும் வரை புகைப்படம் எடுக்கத் தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நண்பர் சதீஷும் அங்கு வந்தார். "தூரத்தில் பார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இருக்கிறார், இங்கேயே இரு அவர் வரும் பொழுது அறிமுகம் செய்து கொண்டு பேசலாம்" என்றேன்.

"ஐயோ கிருஷ்ணா... அவருடைய புத்தகம் ஒன்றையும் வாசித்ததில்லை. என்னை விட்டுடுங்க..." என்று ஓடிவிட்டார்.

நானும் வாசித்ததில்லை. பாரதி மணியைப் பாராட்டி எழுதியதைத்தான் படித்திருக்கிறேன். அதை வச்சி சமாளிச்சிடலாம்... வாங்க என்ற போது அவர் உண்மையிலேயே ஓடிவிட்டார். நான் என்னுடைய மனசாட்சியுடன் பேசிக்கொண்டிருந்தது போல் எனக்குப் பட்டது.

கைபேசியில் உரையாடலை முடித்த நாஞ்சில் நாடன் எதிரில் வரவும் வழிமறித்து வணக்கம் சொன்னேன். பாரதி மணியைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்தேன். நன்றாக இருந்தது. திருநவேலிக்காரங்க மேல மணிக்குத் தனி பாசம் என்றேன்.

"ஆமாம், ஆமாம் இப்போ கூட சமீபத்துல அவருக்கு ஃபோன் செய்திருந்தேன்" என்றார்.

உங்களுடைய புத்தகம் வாசித்ததில்லை!.... என்று இழுத்தேன்.

"அதனால என்ன இனிமே படிக்கலாமில்ல" என்றார்.

உங்களுடைய கதைக்கான கரு எப்படிக் கிடைக்கிறது, எந்த நிலையில் சாத்தியமாகிறது?

எல்லோருக்குமே படைப்பிற்கான மூலம், அனுபவம் அல்லது புனைவு என்ற இரண்டு வகைகளில் கிடைக்கும். என்னுடையது கரு சொந்த அனுபவத்தில் கிடைப்பது. அது சமந்தமா உதாரணங்களுடன் பேசியவர் நேரம் ஆகவும் நண்பர்கள் காத்துக் கிடப்பார்கள் என்று விடைபெற்றுக் கிளம்பினார்.

பழைய படியே பூனை போல் அவரைப் பின்தொடர்ந்தேன். செல்லும் வழியில் வெளிவர இருக்கும் புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். 'நிலாரசிகன், விக்கிரமன், வெங்கட் சுப்பிரமணியன்' ஆகியோரது புத்தகங்களை எடுத்துக் கொண்டு புத்தகத்திற்கான பணத்தைக் கொடுத்தேன். ஒரு சொட்டு ரத்தம் ரசீதின் மேல் விழுந்தது. பதற்றத்துடன் அருகில் வேலை செய்து கொண்டிருந்தவரைப் பார்த்தேன். அவருடைய விரல் கீறப்பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. தயவு செய்து அதை சரிசெய்யப் பாருங்க என்று சொல்லிவிட்டு மீதிப் பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினேன். புத்தகத்தை மறந்திட்டிங்களே? என்ற குரலைக் கேட்டுதிரும்பினால் முத்துசாமி பழனியப்பன் நான் வாங்கிய புத்தகங்களுடன் நின்றுகொண்டிருந்தார்.

உள்ளே விஷ்ணு, அதி பிரதாபன், சதீஷ் மற்றும் பலர் இருந்தனர். புகைப்படம் எடுப்பதற்கு விஷ்ணு தன்னுடைய கேமராவை சரிசெய்து கொண்டிருந்தார். அவர்களின் அருகில் சென்று அமர்ந்து கொண்டோம்.

வேலையாக இருந்த நிலாரசிகனும் வந்து சேர்ந்தார். எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வணக்கம் தெரிவித்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்து கொண்டு சிறுகதைத் தொகுப்பை வாங்கிவிட்டதையும் தெரியப்படுத்தினேன்.

"நீங்க தான் மொத போனி... சரியா விக்கலையோ சும்மா விடமாட்டேன்" என்று கூறினார்.

"சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிட்டமோ!" - என்று யோசிக்கலானேன். நிகழ்ச்சி ஆரம்பிக்க சிறிது நேரம் இருக்கும் போது சொந்த வேலையின் காரணமாக அங்கிருந்து புறப்பட வேண்டியிருந்தது. ஆகவே அவரின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கிளம்பினேன். எனக்கு முன்வரிசையில் 'யுவ கிருஷ்ணா' உட்கார்ந்து கொண்டிருந்தார். என்னை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன். உங்களுடைய பதிவை படித்திருக்கிறேன் என்றார். புதிய தலைமுறை இதழுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படிஇருக்கின்றது என்பதைப் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்தேன்.

பரபரப்பான அண்ணா சாலையில் நடக்கத் துவங்கினேன். என்னுடைய பேருந்தும் கிடைத்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீடு நடக்கும் சமயத்தில், வெளியிடவிருக்கும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் ஒரே ஆள் உலகத்தில் நானாகத் தான் இருக்கும். பேருந்து நின்றுநின்று சென்று கொண்டிருந்தது. நானும் பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

Tuesday, December 15, 2009

எழுத்தாளர் திலீப் குமார்

சந்திப்பு தொடங்குவதற்கு 20 நிமிடங்கள் இருக்கும் போதே கேணிக்குச் சென்றுவிட்டேன். யாருமே இல்லாததால் வற்றிய கிணறினை எட்டிப் பார்ப்பது போல் இருந்தது. ஞானியின் குரல் மட்டுமே உள்ளறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. வெளியில் செல்ல வாசலுக்கு வந்தேன், பாஸ்கர் சக்தி அவருடைய நண்பருடன் நின்றுகொண்டிருந்தார்.

அருகில் சென்று மிரச்சியுடன் அவரைப் பார்த்தேன். "ஞானி வந்துவிட்டாரா?" என்று கேட்டார்.

"அவருடைய குரல் உள்ளறையில் கேட்டது. ஆனால்...மற்றவர்கள்....?" என்றேன்.

"15 நிமிடங்கள் இருக்கிறதே... மக்கள் வந்துவிடுவார்கள்..." என்று சொல்லிவிட்டு அவரும் எங்கோ சென்றுவிட்டார்.

மீண்டும் தனியாளாக மிரட்சியுடன் நின்றுகொண்டிருந்தேன். சிவராமன் (பைத்தியக்காரன்) வந்து தேநீர் அருந்திவிட்டு வரலாமா? என்று சுத்தத் தமிழில் கேட்டார். பலூன் விற்பவனின் பின்னால் குழந்தை செல்வது போல சிவராமனுடன் சென்றுகொண்டிருந்தேன். தமிழின் சிறந்த புத்தகங்களைப் பற்றி அந்த நேரத்தில் பேச முடிந்தது. தேநீர் அருந்திவிட்டு கேணிக்குத் திரும்பிய போது 10 நபர்கள் இருந்தார்கள்.அவர்களுடன் நானும் சென்று அமர்ந்துகொண்டேன். சினிமாவில் எடிட்டிங் துறையில் பணியாற்றும் இருவரும், தரமணி ஃபிலிம் இன்ஸ்ட்யூடில் பயிலும் இருவரும் எனதருகில் அமர்ந்திருந்தனர்.

கூட்டம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருந்த போது இரண்டாம் குழந்தைப் பருவத்திலிருக்கும் 'அஞ்சளா' அருகில் வந்தமர்ந்தார். என்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு அவரைப் பற்றி விசாரித்தேன். சிரித்தார்....

நீங்கள் என்ன பதிவு எழுதுகிறீர்கள்? என்று கேட்டேன்.

"Me... Blog...No..." என்றார்.

துருவி விசாரித்ததில், அவர் டெல்லியில் வாழ்ந்தவர் என்பதும், சாகித்ய அகாடமிக்காக பெங்காலி மற்றும் ஹிந்தி படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் என்பதும் தெரியவந்தது. (உரையாடலின் போது இந்திரா பார்த்த சாரதியின் மாணவி என்றும், பிரபல எழுத்தாளரின் வகுப்புத் தோழி என்றும் கூறினார்.)

) 0 (

"நானும் பாஸ்கர் சக்தியும் சேர்ந்து கேணி சந்திப்பை ஆரம்பிக்கும் போது, அதிகமாக 30 நபர்கள் வருவார்கள் என்றுதான் நினைத்திருந்தோம். எஸ்.ரா -பங்கு பெற்ற முதல் சந்திப்பில் 150 பேரும், விடாத மழைக்கு இடையிலும் அசோகமித்திரன் பங்கு பெற்ற சந்திப்பில் 90 பேரும் பங்கு பெற்றனர்.ஆகவே இந்தச் சந்திப்பு தான் இலக்கிய சந்திப்பு போல இருக்கிறது. ஆனாலும் 30 நபர்களுக்கு அதிகமாகத் தான் இருக்கிறார்கள்" -என்று ஆரம்பித்தார்

30 வருட கால எழுத்தாள நண்பரான திலீப் குமாரை அறிமுகம் செய்வதற்கு முன்பு "எத்தனை பேர் இவருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

5 பேர் கையை உயர்த்தினார்கள்.

ஒரு சிறுகதையாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிய போது, மேலும் 3 பேர் கையை உயர்த்தினார்கள் அதில் நானும் ஒருவன்.

இந்தக் கேள்வியை எதற்கு நான் கேட்கிறேன் என்றால் அவருடைய புத்தகங்கள் இப்போது அச்சில் இல்லை. மீண்டும் அவருடைய புத்தகங்கள் இளம் வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிறுகதை, இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்று அவர் ஆற்றிவரும் சீரிய பங்களிப்பையும், வெளிநாட்டிலுள்ள நூல் நிலையங்களுக்கு மிகுந்த சிரமங்களுக்கிடையில் முக்கியமான நவீன இலக்கியங்களை அறிமுகம் செய்து வைப்பதையும் சிலாகித்துப் பேசினார். அமேரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களின் தமிழ் த்துறை மாணவர்களுக்கு பகுதி நேர ஆசிரியராக இருந்து நவீன இலக்கியம் பற்றி வகுப்பெடுப்பதாகவும் கூறினார்.

1857 முதல் 2007 வரையிலான சிறந்த சிறுகதைகளை வரிசைப்படுத்தி அதனை வெளியிடுவதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற உப தகவலையும் வெளியிட்டார். இவர் செய்யும் வேலைகளை மாணவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இலக்கியப் பணி ஆற்றியவர். என்றாலும் இவர் பள்ளிப் படிப்பை தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது என்றபோது பிரம்மிப்பாக இருந்தது.

பாஷா பாரதி, சாரல் விருது போன்ற பல முக்கியமான விருதுகளைப் பெற்ற அவருடன் எழுபதுகளின் தொடக்கத்தில் ஒரே வீட்டில் வசித்த போது இருவரும் சேர்ந்து மொட்டை அடித்ததையும் சொல்லி சந்தோஷப்பட்டார்.

இலக்கிய நண்பர்களின் சம்மதத்துடன் - திலீப் குமாரின் 'நிகழ மறுத்த அற்புதம்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்ற குறும்படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு திலீப் குமார் தனது உரையாடலைத் துவக்கினார்.

) 0 (

பொதுவாகவே எனக்குக் கூச்சம் அதிகம். பிரபஞ்சன், எஸ்.ரா-வைப் போல எனக்குப் பேசவராது. கூட்டத்துக்குப் போறேன்னு என்னோட மனைவியிடன் சொன்ன போது "இன்னுமாயா இந்த ஊரு உன்ன நம்புது?" -ன்னு வடிவேல் மாதிரி சொன்னாங்க. அதனால கொஞ்சம் சமாளிச்சுக்கோங்க.

என்னுடைய ஆரம்ப கால பள்ளி வாழ்க்கை முரணானது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் பள்ளியிலும், எட்டாவது வரை குஜராத்தி மொழிப் பள்ளியிலும் கல்வி பயின்றேன். எதிர்பாராத விதமாக என்னுடைய பதின் பருவத்தில் தந்தையை இழக்க நேர்ந்ததால், குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தேன். குடும்ப கஷ்டத்தைக் கலைவதர்க்காக ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு நாளைக்கு 35-/ ரூபாய் சம்பளம். லாட்டரி சீட்டு, டீத் தூள், கேஸ் பர்னர் போன்ற பல பொருட்களையும் விற்றிருக்கிறேன். Dry Clean Shop-ல் Bill போடும் வேலையையும், டெலிவரி செய்யும் வேலையையும் செய்திருக்கிறேன். வேலை கடினமாக இருக்கும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் கையில் கிடைக்கும் அனைத்தையும் படிப்பேன்.

மாறிமாறிப் படித்ததால் தமிழ், குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. ஆங்கிலத்தையும் அதுபோலவே கற்றுக் கொண்டேன்.

ஒரு முறை குஜராத்தி பள்ளியில் படிக்கும் போது ஆண்டு மலருக்காக ஒரு சிறுகதை எழுதினேன். சிறப்பு என்னவெனில் தமிழ் மொழியில் எழுதினேன். எங்களுடைய தமிழ் வாத்தியார் ஒரு மாதிரி... 'சாக்ரடீஸ்' என்ற வார்த்தையை 'சாக்ரடீசு' என்றும், 'விஷம்' என்ற வார்த்தையை 'விடம்' என்றும்தான் சொல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார். மறதியில் தவறாகக் கூறினாலும் அடித்துவிடுவார். அவரிடம் என்னுடைய சிறுகதையை எழுதிக் கொடுத்துவிட்டேன்.

கதை வித்யாசமாக இருக்க வேண்டுமென்று 1962-ல் நடந்த போரினை மையமாக வைத்து எழுதினேன். 'மங்களா' - கதையின் நாயகி.
கதையின் தலைப்பு 'அசம்பாவிதம்'. போரினால் விதவையாகிறாள். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையையும் நாட்டுக்கு அற்பணிக்கும் திலகமாக அவளைக் கற்பனை செய்து எழுதினேன். இந்த பாத்திரத்திற்கு கண்ணம்மா தான் எனக்கு Inspiration. படம் ஆரம்பித்து முடியும் அரை அழுது கொண்டிருப்பார்களே அவர்களே தான்.

அதன் பிறகு நீண்ட காலம் எழுதுவதைப் பற்றி நினைத்ததில்லை. ஜவுளிக் கடையில் வேலை செய்தபோது தினம்தோறும் டீ குடிப்பதற்கு காலணா கொடுப்பார்கள். அப்படி டீ-குடிக்கச் சென்ற போது ஒரு முறை 'ஞான ரதம்' இலக்கியப் பத்திரிகையை பார்க்க நேர்ந்தது. ஜெய காந்தன் ஆசிரியராக இருந்து வெளிவந்த பத்திரிகை. இரண்டு நாள் டீ-காசை மிச்சப்படுத்தி அந்தப் பத்திரிகையை வாங்கினேன். அந்த சூழ்நிலையில் எனக்கு அது ஒரு பெரிய தொகை. இருந்தாலும் எனக்குள் இருந்த இலக்கிய ஆர்வம் பற்றிக் கொண்டது.

உடனே என்னுடைய நான்கு கவிதைகளை 'ஞான ரத்தத்திற்கு' அனுப்பினேன். ஜெயகாந்தன் எதிரில் இருப்பவர்களை ஆச்சர்யப் படுத்துபவர். நாம் ஒன்று நினைத்து "இதை ஏன் எழுதினீர்கள்?" என்று கேட்டால்... "நீ ஏன் படிக்கிறாய்?" என்று திருப்பிக் கேட்பார்..." அவரிடமிருந்து நான் அனுப்பிய கவிதைக்கான ஒரு கடிதம் வந்தது. "நீங்கள் ஷெல்லியைப் படித்ததுண்டா?" என்று. இல்லை என்று ஒரு பதில் கடிதம் எழுதினேன்.

கவிதை நன்றாக இருக்கிறது என்று அவர்களும் பதில் கடிதம் போட்டார்கள். நீண்ட நாட்கள் பிரசுரம் ஆகாததால் விசாரித்து மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். கவிதை தொலைந்துவிட்டது என்றார்கள். மேலும் சிறுகதை எழுதி அனுப்புமாறு கேட்டார்கள். நானும் ஒன்னரை பக்க கதையை பெரிய பெரிய எழுத்துகளில் 6-பக்கங்கள் வருவது போல எழுதி அனுப்பினேன். அதிர்ஷ்ட வசமாக அந்தக் கதை பிரசுரம் ஆனது.

நீண்ட நாள் கழித்து 'ஞான ரதம்' என்னை வசீகரித்ததைப் பற்றி ஜெய காந்தனை நேரில் சந்தித்த போது தெரியப்படுத்தினேன். "அந்த காசிற்கு நீ நல்ல சினிமா பார்த்திருக்கலாமே!" என்றார். அவர் எப்பவுமே அப்படித்தான். பகட்டான தோரணையான மனிதர். அவருக்கு இதெல்லாம் பிடிக்கும் ஆனால் பகிரங்கமாகத் தெரியப்படுத்த மாட்டார். என்னைப் பொறுத்தவரை ஜெயகாந்தன் மாதிரியான ஆட்கள் ஹால் டிக்கெட் மாதிரி. அது இருந்தால் தான் தேர்வு எழுத முடியும். எது எப்படி இருந்தாலும் தேர்வுதானே முக்கியம்.

அதன் பிறகு எனக்கு tuberculosis (TB) வந்து கொடுமையான வலியை அனுபவித்தேன். ஒருநாள் திடீரென ரத்த வாந்தி எடுத்தேன். இரவு 2 மணிக்கு நடந்தே 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அவர்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் 60 ரூபாய் ஆகும் என்றார்கள். அந்தக் காலத்தில் TB தீவிர வியாதி என்பதால் சீக்கிரமே இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். இரண்டு மாத காலம் வீட்டிலிருந்து ஒய்வு எடுக்கச்சொன்னார்கள். தயவு செய்து இதையெல்லாம் சுய இரக்கத்திற்காக சொல்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். நான் கடந்து வந்த பாதையை உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.

ஒய்வு நேரத்தில் சும்மா இல்லாமல் "தீர்வு" என்ற கதையை எழுதிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அண்ணன் கோவத்துடன் கதையைப் பிடுங்கி எங்கள் வீட்டின் பக்கத்திலுள்ள குழியில் போட்டுவிட்டார். அந்தக் குழி எங்கள் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்கும் இடம். இது நடந்தது மாலை 6 மணிக்கு என்பதால் அங்கு சென்று எடுத்துவரவும் முடியவில்லை. ஆகவே அதன் மீது யாரும் மலம் கழித்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பாருங்கள் கடவுளை எதற்கெல்லாம் கூப்பிடவேண்டியிருக்கிறது. நல்ல வேலை யாரும் அசம்பாவிதம் செய்யவில்லை. விடிந்தவுடன் அந்தத் தாள்களை எடுத்து கதையை வேறு பிரதியெடுத்து கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். கணையாழியில் அது பிரசுரம் காண ஒரு வருட காலத்திற்கும் மேலானது.

ஒரு முறை நான் சென்னையிலிருந்த போது கணையாழி கஸ்தூரிரங்கனை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது "தீர்வு" கதையை ஞாபகப் படுத்தினேன். அது நல்ல கதையாச்சே அப்பவே
போட சொல்லிட்டேனே! என்று அருகிலிருந்தவரிடம் கூறினார். அவர் தேடித் பார்த்து விட்டு கடைசி நாலு பக்கங்கள் தொலைந்துவிட்டது என்றார். அதன் பிறகு உட்கார்ந்து மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இன்று வரை அந்தக் கதை என்னை அடையாளப்படுத்துகிறது. "தீர்வு" வெளியான பிறகு நிரந்தரமாக சென்னைக்கு வந்துவிட்டேன். அப்பொழுதுதான் ஞானியுடன் ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்தது என்று சிநேகத்துடன் அவரைப்பார்த்தார்.

சிரமங்களுக்கிடையிலும் க்ரியா ராமகிருஷ்ணனுடன் 15 வருடங்கள் இருந்ததன் மூலம் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். நானும் நேரம் கிடைக்கும் போது எழுதத் துவங்கினேன். பின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள என்னால் முடிந்தது. மொழி, அறிவு சார்ந்த போதாமையையும் மீறி நான் எழுதுவதற்கு நான் சந்தித்த மனிதர்களே காரணம்.

) 0 (

வறுமை காரணமாக சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றதால் அடித்தட்டு மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் ஜவுளிக் கடையில் வேலை செய்த போது ஒரு விபச்சார விடுதியின் ஸ்தாபகர் எங்கள் கடைக்கு வருவார். அங்கிருக்கும் பெண்களை வெளியில் அனுப்பமாட்டார்கள். ஆகவே யார் யாருக்கு என்னென்ன வேண்டுமென்று கேட்டு ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டு வருவார். அதைப் பார்த்தாலே அங்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். 32 Size Bra நாலு செட், 36 Size Bra மூணு செட் என்று அவர்களுக்குத் தேவையானது எல்லாமே இருக்கும். என்னுடைய கடையில் நான்தான் சிறியவன் என்பதால் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு அவர்களிடம் கொடுக்கச் செல்வேன்.

அங்கு குயின் என்றொரு பெண் இருந்தாள். அந்தக் காலத்துலேயே நல்லா படிச்சவங்க. இங்க்லீஷ் எல்லாம் நல்லா பேசுவாங்க.அதனால எல்லாருக்கும் அவங்க மேல ஒரு மோகம். சில பேருக்கு வாழ்க்கையின் பெரிய லட்சியமே காசு சேர்த்து வச்சி அவங்களை அடையறதுதான். எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்க. அவங்கள பத்திக் கூட ஒரு கதை எழுத யோசிச்சிக்குனு இருக்கேன்.

இதே மாதிரி ஒரு முறை என்னோட நண்பனை சினிமா பார்க்க கூப்பிட்டு இருந்தேன். அவனுடைய அம்மா விதவை. வேலையிலிருந்து சீக்கிரமே புறப்பட்டு வீட்டிற்கு சென்று சாப்பிட்டுட்டு வந்துவிட்டேன். அவனோட வீட்டிற்கு அருகில் சென்ற போது வெளியே நின்று கொண்டிருந்தான். "நீ இன்னும் கிளம்பலயாடா?" என்று கேட்டேன். "கொஞ்சம் பொருடா" என்று சொன்னான். நீண்ட நேரம் கழித்து ஒரு ஆள் அவனுடைய வீட்டிலிருந்து வெளியே வரவும் இவன் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான்.

சினிமா பார்த்துவிட்டு திரும்பும் போது அதைப் பற்றி விசாரித்தேன். "எங்க அம்மா எனக்காக ரொம்ப கஷ்டப் படுறாங்கடா. அவங்களுக்கு அது சந்தோஷமா இருக்கும் போல... அதான் அப்படியே விட்டுட்டேன்..." என்று சொன்னான்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளாலும், 4 தலைமுறைகளுக்கு முன்பே தமிழகத்திற்கு வந்ததினாலும் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட எண்ணங்கள் இவற்றால் என்னுடைய தனித்துவத்தை அடையாளப்படுத்தப் போராடினேன். அந்த தனித்துவம் எனக்கு இலக்கியமாக அமைந்தது. மேற்சொன்ன மனிதர்களின் பரிச்சயம் அதற்கான
களமாக அமைந்தது.

பெரிய பத்திரிகையின் தீபாவளி இதழுக்காக என்னிடம் ஒரு காதல் கதையைக் கேட்டிருந்தார்கள். எனக்கு காதல் கதையெல்லாம் வராது என்று சொல்லிவிட்டேன். "என்ன சார்... நீங்க பெரிய எழுத்தாளர் எதாச்சும் ஒன்னு எழுதிக் கொடுங்களேன். உங்களைப் போல எழுத்தாளர்கள் எல்லாம் எழுதறாங்க நீங்க மட்டும் ஏன் நிராகரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

"நீங்கள் எத்தனை சிறுகதைகளை ஒதுக்குகிறீர்கள். அதன் மூலம் எத்தனை நூறு பேரை நிராகரிக்கிறீர்கள். நீங்கள் நிராகரிப்பதை அவர்கள் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நூறு எழுத்தாளர்களில் ஒருவன் உங்களுடைய ஒரேஒரு பத்திரிகையை நிராகரிப்பதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு கோவப்படுகிறீர்கள்" என்று கூறினேன்.

ஜெயகாந்தன் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் கொண்டுவந்தது போல, என்னை பாதித்த விஷயங்களை எழுதத்தான் நானும் பிரியப்படுவேன். பல மனிதர்களை ஏற்றுக் கொள்வதாலும், அவர்களுடைய உணர்விற்கு மதிப்பளிப்பதாலும், நகைச்சுவை உணர்வு இருப்பதாலும் வாழ்க்கையின் யதார்த்த நிலைகளைக் கொண்டே என்னுடைய இலக்கிய முயற்சிகளை மேற்கொள்ள விழைகிறேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை என்று கூறியதோடு நீண்ட நேரம் பேசி அருத்துவிட்டதாகத் தெரிகிறது என்பது போல் பார்த்தார்.

எஸ். ராவின் புத்தக வெளியீட்டிற்கு நேரம் ஆனதால் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். ஒரு சிலர் சத்தமில்லாமல் கடைசி வரிசையிலிருந்து நழுவினார். ஞானி மட்டும் கூலாக இருந்தார். அவர் பேச்சின் மீதான உரையாடலையும் தொடங்கி வைத்தார். யாருமே கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தனர். அடியேன் முதல் கேள்வியைக் கேட்டு துவக்கி வைத்தேன். அதன் பிறகு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதில் கூறினார். ஆரம்பம் முதலே அவருடைய பேச்சில் ஆங்காங்கு நகைச்சுவை வெளிப்பட்டது. கேள்வி நேரத்தின் போது அதிகமான நகைச்சுவை வெளிப்பட்டது.

நல்ல எழுத்தாளர் என்பதையும் மீறி நல்ல மனிதரைச் சந்தித்த திருப்தியுடன் கேணியிலிருந்து திரும்பினேன்.

திலீப் குமாரின் இரண்டு சிறுகதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.
1. கண்ணாடி
2. அக்ரகாரத்தில் பூனை


பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்
தில் இருப்பதை எழுதி இருக்கிறேன்.
2. நண்பர் 'ரவி பிரகாஷ்' வராததால் பதிவு நீண்டு விட்டது.
3.
அவர் பேசியது அனைத்துமே நகைச்சுவையாக இருந்தது. படிக்கும் போது சீரியசாகத் தெரிந்தால் அதற்கு நானே பொறுப்பு. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பேச்சின் சிறு வடிவம். ஆகவே பல விஷயங்கள் விடுபட்டிருக்கலாம்.

Wednesday, December 2, 2009

மணியுடன் சில மணித்துளிகள்

முன்பெல்லாம் ஏதாவது ஆலோசனை தேவையென்றால் வினோத்திடம் கேட்பேன். அவன் சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளதால் முத்துவிற்கு ஃபோன் செய்தேன்.

"டேய் முத்து, பாரதி மணி [S K S மணி] -ன்னு ஒரு மேடை நடிகர் சென்னையில இருக்காரு... பாபா, அந்நியன் போன்ற வர்த்தகப் படங்களிலும்,
பாரதி போன்ற நிறைய விருதுப் படங்களிலும் நடித்தவர். அவருடைய மொபைல் நம்பர் கெடச்சிது. அதான் அவரைப் பார்க்க போகலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற..."

அவனுக்கு சினிமா ஆர்வம் அதிகம் என்பதால். "சரி மாமா, போய்த் தொலைங்க" என்று கூறினான்.

விசேஷம் என்னவென்றால் அவருக்கு வயது 72. ஆகச்சிறந்த விசேஷம் என்னவென்றால் அவருடைய 'பல நேரங்களில் பல மனிதர்கள்' புத்தகம் தான். தன்னுடைய ஐம்பது வருட டெல்லி வாழ்க்கையையும், தான் சந்தித்த சிறந்த ஆளுமைகளுடனான அனுபவங்களையும் கட்டுரையாக்கியுள்ளார்.

"ரஜினியுடன் நடிப்பவர், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா போன்றவர்களுடன் மேடை நாடகத்திற்கு விவாதித்தவர், அமரர் நேருவுக்கு தோல் கொடுத்து ஒன்றாக நடந்தவர், அருந்ததி ராய், ராஜீவ் காந்தி போன்றவர்களுடன் கை குளுக்கியவர், கா நா சு -வுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்" நமக்கு எங்கு நேரம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு அவருடைய மொபைலில் தொடர்புகொண்டேன்.

முடுக்கிவிடப்பட்ட எண்கள் எதிரே ஒலிக்கிறது. காலை 9 மணி என்பதால் நீண்ட நேரமாக ஒலிக்கிறது. எதிர் முனையில் மொபைலை எடுத்தவர் "ஹலோ" என்றார். நானும் வணக்கம் சொல்லிவிட்டு, "ஐயா, பாரதி மணி இருக்கிறார்களா?" என்றேன்.

"நான் தான் பேசறேன். சொல்லுங்க..."

"நான் கிருஷ்ணப் பிரபு பேசறேன். உங்களை இன்று பார்க்க வரலாம் என்றிருக்கிறேன். வீட்டில் இருப்பீர்களா மணிஜி?" என்று கேட்டேன்.

"ஓ நீங்களா!... அந்தப் பதிவர் தானே. என்னை பாக்கறதுக்கு எதுக்கய்யா Appointment. தாராளமா வாரும்"

"என்ன சொல்றீங்க மணிஜி... எவ்வளோ பெரிய
மேடை நடிகர் நீங்க!. எதாச்சும் ஒத்திகை அல்லது ஷூட்டிங் இருக்கும் இல்ல..." என்றேன்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை. சும்மா தான் இருக்கேன் நீங்க தாராளமா வாங்க."

"உங்களுடைய முகவரி தெரியாது... அதனால கொஞ்சம் சொல்றீங்களா நான் எழுதிக்கிறேன்?" என்றேன்.

"எதுக்கு எழுதிக்கிட்டு. நான் SMS அனுப்பிடறேன்..." என்று சொல்லி முடித்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் எனக்கான குறுந்தகவல் வந்து சேர்ந்தது.

பனி பொழியவேண்டிய காலத்தில் லேசான தூறல் தூறிக் கொண்டிருந்தது. என்னுடைய
சாதாரண இயல்பும் மாறி லேசான பதற்றம் இருந்தது. "சாய் நகர், மூன்றாவது பிரதான சாலை, விருகம்பாக்கம்" - இதற்கு கோயம்பேட்டில் இருந்து வடபழனி செல்வதுதான் சரியென்று அங்கு சென்று பிறகு விருகம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.

ஓட்டுனரின் அருகில் சென்று 'சாய் நகர் வந்தால் தெரியப்படுத்துங்கள்' என்று சொல்லிவிட்டு அவரின் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். மண்டையை மண்டையை ஆட்டியவர் தூங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். கோயம்பேடு மார்கெட் நெருக்கமாக வரவும் நான் விழித்துக் கொண்டேன்.

"இதைத் தாண்டியா 'சாய் நகர்' இருக்கிறது?" என்றேன்.

"அடடே... மூணு ஸ்டாப்பிங் முன்னாடியே சாய் நகர் போயிடுச்சே... என்னப்பா இப்போ வந்து கேக்குற..."

திருவிழாவில் உறவினர்களைத் தொலைத்துவிட்டு அழுதுகொண்டிருக்கும் குழந்தையைப் பார்ப்பது போல் இரக்கமுடன் என்னைப் பார்த்தார். இதெல்லாம் என் வாழ்க்கையில் சகஜம் என்பது போல் அவரை நோக்கி சமாதானப் புன்னகையை வீசினேன். . முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்ற கொள்கையை உடையதால் மூன்று நிறுத்தங்கள் பின்னோக்கி சென்றேன். (
கோயம்பேட்டிலிருந்து நடந்தே சென்றிருக்கலாம். கோவில் சுற்றுவது போல் பாரதி மணியின் வீட்டை மையமாக வைத்து சுற்ற வேண்டும் என்றிருந்தால் யாரால் மாற்றமுடியும்.)

வழியில் விசாரித்துக் கொண்டே அவருடைய அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்று அழைப்பு மணியை அழித்தினேன். கதவு திறக்கப்பட்டு என்னை எதிர் கொண்டவர் "நீங்க தானே கிருஷ்ண பிரபு, Come in... Come in..." என்று உள்ளேஅழைத்தார். நான் வரவேற்பரையிலேயே நின்றுவிட்டேன். அவருடைய படுக்கை அறையிலிருந்து மீண்டும் குரல் கேட்டது "Come in... Come in... Take you space here"

சங்கோஜத்துடன் உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டேன். அவரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. புகையிலையை லேசாகத் தூவி புகையிழுக்கும் பைப்பை உதட்டில் திணித்து பற்ற வைத்துக்கொண்டே என்னைப் பற்றி விசாரித்தார். சொந்தக் கதை, வந்தக் கதையையெல்லாம் சொல்லிவிட்டு அவரைப் பற்றி விசாரித்தேன். இடையே புகை பிடிக்கறது சிரமமா இருந்தா சொல்லிடுங்க என்றார்.

அவருடைய டெல்லி வாழ்க்கையையும், நண்பர்களுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நிகம்போத் காட், பூர்ணம் விஸ்வநாதன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, அருந்ததி ராய், ரிலையன்ஸ் பாலு போன்ற பல நபர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தயங்கி தயங்கி, "நான் சினிமாவையோ டிவியையோ அவ்வளவாகப் பார்ப்பதில்லை" என்றேன்.

No problem... நானும் பார்ப்பதில்லை. பழி வாங்கறத தவிர வேற என்ன இருக்கு அதுல... அப்படியே பார்த்தாலும் "animal channels" -தான் பார்க்கிறேன் என்றார்.

ராஜ் டிவியில் எஸ். ரா திரைக்கதை எழுதிய ஒரு நாடகத்தில் நடித்ததைப் பற்றி கேட்டேன்.

ரஜினி கூட அந்த சீரியலை விரும்பிப் பார்த்தாராம். எங்கயாவது வெளிய போயிட்டாலும் சௌந்தர்யாவிடம் சொல்லி ரெக்கார்ட் பண்ணச் சொல்லுவாராம். சில வெளியூர்களுக்கு ஷூட்டிங் போகும் போது பெண்கள் வந்து அந்த வயசான கேரக்டரில் நடித்ததைச் சொல்லி பாராட்டுவாங்க. எனக்கே ஆச்சர்யமா இருந்தது என்று கூறினார். எது எப்படி இருந்தாலும் ஒரு மேடை நாடகத்தில் நடித்துவிட்டு கீழிறங்கும் போது, 'நல்லா நடிச்சீங்க' என்று சொல்லி கை குளுக்குவாங்க பாருங்க... அந்த 'கிக்கே' தனி என்று கூறினார்.

மூன்று படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அவர் மட்டும் தனியாக இருக்கவும், அவருடைய குடும்பத்தைப் பற்றி எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் தவித்தேன். நீண்ட நேரம் தொண்டையிலேயே இருந்ததால் பேச்சோடு பேச்சாக அந்தக் கேள்வி வெளியே வந்துவிட்டது.

நீங்கள் மட்டும் இருப்பதாகத் தெரிகிறது...?

ஓ அதுவா ... என்னோட ரெண்டு பெண்களும் Phd முடிச்சிட்டு நல்ல வேலைல இருக்காங்க. பெரியவ பெங்களூரில் தான் இருக்கா. அங்க இருக்கப்போ வாஸந்தி, பாவண்ணன், சொல்வனம் (இணையத்தளம்
) நிறுவனர் என சில நண்பர்களைப் பார்ப்பதுண்டு. வீட்டுக்கு வந்து பேசிட்டுப் போவாங்க. அவ கூப்பிடுராலேன்னு போனா Return Ticket கெடைக்கலன்னு சொல்லி படுத்தி எடுத்துட்ரா. இங்க இருக்க உங்களுக்கு என்னப்பா கொறச்சல், எதுக்கு தனியா இருந்து கஷ்டப் படனும்ன்னு சொல்றா. எனக்கு என்னமோ இங்கதான் சரியா வருது. இப்போல்லாம் புறப்படுற தேதி, கெளம்பற தேதி-ன்னு ரெண்டு டிக்கெட்டும் இருந்தாதான் போறது.

சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்குமே... யார் சமைக்கிறார்கள்...?

இதோ பாருங்க, எனக்கு நாக்கு நாலு முழம். ருசியா சாப்பிடனும். அதனால வார நாட்களில் சமையல் செய்யறவங்க வந்து சமைப்பாங்க. அவங்களுக்கு எதுஎது எப்படி இருக்கனும்னு சொல்ல சொல்ல அவங்க சமைப்பாங்க. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நான் சமைப்பேன். இன்னைக்குக் கூட என்னோட சமையல் தான் என்று எழுந்து போனார்.

வரும்போது ஒரு தட்டில் வத்தல், வாழைப்பழம், கைக்குத்தல் அரிசி சாதம் (தேங்காய்த் துருவலுடன்) எடுத்துக் கொண்டு வந்தார். அவர்தான் சாப்பிடப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் என்னிடம் நீட்டினார். கா நா சுவுக்கு என்னுடைய சமையல் என்றால் அலாதிப்பிரியம் தெரியுமோ என்றார். அதைப் பற்றி ஒரு கட்டுரைஅமுதசுரபி தீபாவளிமலரில் வந்திருக்கே பார்த்தீர்களா? என்று என்னிடம் நீட்டினார்.

இட்டிலி வடையில் அந்தக் கட்டுரையைப் படிக்க: அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! - பாரதி மணி

நான் அசை போட்டுக் கொண்டே புத்தகத்தை வாங்கினேன். ஒரு கையில் தட்டுடனும், ஒரு கையில் கட்டுரையுடனும் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நீங்க சாப்பிட்ட பிறகே படியுங்கள் என்ற சலுகையை வழங்கினார். சமையலைப் பற்றிய பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில் வறுத்த கொட்டையை அரைத்து தயார் செய்யும் காபியும் அடக்கம். அதை அவருடைய நண்பர்கள் பலரும் விரும்புவார்களாம். இந்த மாதிரி வித்யாசமான விஷயங்கள் எனக்கும் பிடிக்கும் அதற்கு இன்னொரு நாள் வருவோம் என்று நினைத்துக் கொண்டேன்.

நீங்க கொடுத்த dish ருசியாவும் வித்தியாசமாகவும் இருந்தது...

ஒரு நண்பர் நீண்ட நாட்களுக்கு முன்பு 'சரவணா பவன் அண்ணாச்சி இதைதான் தினமும் சாப்பிடுகிறார்' என்று அறிமுகம் செய்து வைத்தார். அதிலிருந்து நானும் இரண்டு வருடமாக இதைதான் சாப்பிடுகிறேன். என்ன ஒன்னு... அவர மாதிரி ஜெயிலுக்கு போக வேண்டியதுதான் பாக்கி என்றதும் பற்கள் தெரிய சிரித்தேன்.

இந்த பைப்ல எப்போதிலிருந்து சிகரட் பிடிக்க ஆரம்பிச்சீங்க?

முதல்ல ஆறு மாதத்திற்கு ஒரு முறை சிகரெட் பிடிப்போம்.
பிறகு தினம் மூன்றானது. அதன் பிறகு தினமும் முப்பது என்றானது. இதைப் பிடிக்கறதால அதைக் கணிசமா குறைச்சிட்டேன்.

பல வருஷங்களுக்கு முன்னாடி நெருங்கிய நண்பர் பிறந்த நாள் பரிசா கொடுத்தான். ரொம்ப நாளா உபயோகிக்காம வச்சிருந்தேன். இப்போ என் கூடவே இருக்குது என்றார். நான் அவருடைய மேசையைப் பார்த்தேன். அங்கு 6 சிகரெட் பைப்கள் இருந்தன.

நீங்கள் பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றி எழுதிய கட்டுரையை விரும்பி வாசித்தேன். (
அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?)

ஓ என்னுடைய புத்தகம் படித்தீர்களா?

இல்லை இல்லை. உயிர்மை - இணையத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. உங்களைப் பார்க்க வந்ததே புத்தகம் வாங்கிக் கொள்ளத்தான். என்றதும் அவரிடம் இருந்த 'பல நேரங்களில் பல மனிதர்கள்' புத்தகத்தின் பிரதியை அன்பளிப்பாகக் கொடுத்து ஆசீர்வதித்தார். புத்தகத்தில் என்னைப் பற்றி எழுதியவர்கள் நிறைய பொய் சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

நான் எழுந்து நின்று அவரிடமிருந்து அந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டேன்.

எங்களுடைய உரையாடலில் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் புத்தகத்திலும் இருக்கிறது என்றார்.அதன் பிறகு பேச்சு அவர் சமீபத்தில் நடித்துவரும் 'படித்துறை' சினிமாவிற்கு திரும்பியது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனகராக இருந்த சுகா படத்தை இயக்குகிறார். அதில் அவர் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் புகைப்படம் சிலவற்றை மொபிலில் காண்பித்தார். வெளிவராத படம் என்பதால் சுகாவின் பதிவுகளுக்கு (வேணுவனம்) பேச்சை மாற்றினேன்.

சுகாவைப் பற்றி சில மணித்துளிகள் பேசிவிட்டு மணியைப் பார்த்தேன். என்னுடைய கைபேசியில் நண்பகல் 1 மணி என்றிருந்தது. இதற்கு மேல் இருப்பது அவருக்கு சிரமமாக இருக்குமென்று அவருடன் கை குலுக்கிவிட்டு புறப்படுவதாகக் கூறினேன். வாசல் வரை வந்து வழியனுப்பினார். எனக்கென்னவோ வழியெல்லாம் காஃபி வாசனை வந்துகொண்டே இருந்தது.