Thursday, December 24, 2009

நிலாரசிகனின் புத்தக வெளியீடு

"மொத்தம் இருபது எழுத்தாளர்களின் நூல்கள் டிசம்பர் 20-ம் தேதியன்று திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகின்றது. அதில் கவிஞர் நிலாரசிகனின் முதல் சிறுகதைத் தொகுப்பும் அடக்கம் (யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்)... ஆகவே எங்கும் சென்றுவிடாதீர்கள்" - என்று ஒரு வார காலமாகவே நண்பர் சதீஷ் அன்புக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையிலுள்ள அக்காவின் வீட்டிற்குச் சென்று அவள் குழந்தைகள் விளையாடுவதை மதியம் வரை வேடிக்கைப் பார்ப்பது என்னுடைய முக்கியமான வேளைகளில் ஒன்று. அவள் வீடு என் கிராமத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் இருப்பதால் பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்து கொண்டிருப்பேன். அவள் வீட்டிற்குச் சென்று திரும்புவதற்கே அன்று முழுவதும் சரியாக இருக்கும். குடும்ப விசேஷங்களையும், நெருங்கிய நண்பர்களையும் கூட சில நேரங்களில் தவிர்த்துவிடுவேன். இதை மீறி கேணி சந்திப்பைத் தவிர்த்து வெளியில் எங்கும் சென்றதில்லை. புத்தக வெளியீட்டைப் பற்றி யோசித்துப் பார்த்தது கூட கிடையாது. இந்த வருடம் தான் சில நண்பர்கள் புத்தக வெளியீட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள். அதில் நிலா ரசிகனின் 'நண்பர் சதீஷும்' ஒருவர்.

சென்னைச் சிறுகதைப் பட்டறையில் அவர்களுடன் கலந்து கொண்டிருந்தாலும் இருவருடனும் பேசிப் பழக்கமில்லை. அசோகமித்திரன் பங்கு பெற்ற கேணி நிகழ்ச்சியில் தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்து பேசிக் கொண்டிருந்ததில் நிலாரசிகனுக்கு சிறுகதையில் ஆர்வம் வர 'கி.ரா' முக்கிய ஆளுமையாக இருந்ததாகக் கூறினார். அவரைக் காணச் சென்ற அனுபவத்தை ரசமாகக் கூறிக் கொண்டிருந்தார். மேலும் சில விஷங்களைப் பேசிவிட்டு களைந்து சென்றோம்.

தேவநேயப்பாவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு மேல் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு மாலை 4. 45 மணிக்கே சென்றுவிட்டேன். மாம்பழக் கலரில் குர்தா அணிந்த ஒருவர் என்னை இருகரம் கூப்பி வர வேற்றார். அவருடன் இருந்தவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

நீங்கள் யார் என்பது போல என்மீது பார்வையை
ச் செலுத்தினார். நிலாரசிகனுக்காக வந்திருப்பதாகக் கூறினேன். மகிழ்ச்சியுடன் என்னை அமரச் செய்தார். அவருடைய கதைகளைப் படித்தேன் நன்றாக இருக்கின்றது.அதிலும் கடைசி கதை வித்யாசமான முயற்சி என்றார்.

"நீங்கள் எழுத்தாளரா?" என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே இல்லை என்றார். கொஞ்ச நேரம் உரையாடியதில் ஆங்கில நாளிதழில் அவர் 20 ஆண்டுகாலம் வேலை செய்திருப்பதும், அவருடைய சுய முன்னேற்றப் புத்தகம் வெளிவந்திருப்பதும் தெரியவந்தது. அவர் தான் திரிசக்தியின் எடிட்டர் ரமணன் என்று சொல்லிய போது மேலும் ஆச்சர்யமாக இருந்தது.

எடிட்டர் வேலை கடினமாகவும், சவாலாகவும் இருக்குமே?

நிச்சயமா... நம்மையும் மீறி சில தவறுகள் நிகழ்ந்துவிடும். கடினமான வேலை தான் என்றார்.

இலக்கிய பீடம் விக்கிரமன் இந்த வயதில் கூட மாத இதழை நடத்துகிறார். அவர்கள் நடத்தும் நாவல் போட்டிக்கு வரும் படைப்புகள் அனைத்தையும் வாசித்து பிழையைத் திருத்துகிறார். நேரில் அவரைப் பார்த்த போது அசந்துவிட்டேன்.அவருடைய புத்தகம் கூட இன்று வெளி வருகிறது என்று நினைக்கிறேன் என்றவாறு அவரைப் பார்த்தேன்.

"ஆமாங்க... அவருடைய புத்தகம் கூட வெளிவருகிறது. அவர் பிழைதிருத்தி அனுப்பிய கையெழுத்துப் பிரதியை அப்படியே பத்திரமா வச்சிருக்கேன். ஒரு கமா, புள்ளியைக் கூட கவனமா சரி செய்து அனுப்பியிருக்கிறார்" என்று சொல்லியவாறு வாசலை நோக்கி நகர்ந்தார். நாஞ்சில்நாடன் புன்னகையுடன் வந்துகொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் வெங்கட் சுவாமிநாதனும் வந்து சேர்ந்தார்.

அவர்கள் குழுவாக பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நாஞ்சில் நாடன் மட்டும் வெளியில் செல்வது போல் தெரிந்தது. எழுத்தாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காண நிழல் மாதிரி அவரைப் பின்தொடர்ந்தேன். நீண்ட நேரம் யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வெளிவர இருக்கும் புத்தகங்களைப் பல்வேறு கோணங்களில் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். நாஞ்சில் நாடன் திரும்பும் வரை புகைப்படம் எடுக்கத் தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நண்பர் சதீஷும் அங்கு வந்தார். "தூரத்தில் பார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இருக்கிறார், இங்கேயே இரு அவர் வரும் பொழுது அறிமுகம் செய்து கொண்டு பேசலாம்" என்றேன்.

"ஐயோ கிருஷ்ணா... அவருடைய புத்தகம் ஒன்றையும் வாசித்ததில்லை. என்னை விட்டுடுங்க..." என்று ஓடிவிட்டார்.

நானும் வாசித்ததில்லை. பாரதி மணியைப் பாராட்டி எழுதியதைத்தான் படித்திருக்கிறேன். அதை வச்சி சமாளிச்சிடலாம்... வாங்க என்ற போது அவர் உண்மையிலேயே ஓடிவிட்டார். நான் என்னுடைய மனசாட்சியுடன் பேசிக்கொண்டிருந்தது போல் எனக்குப் பட்டது.

கைபேசியில் உரையாடலை முடித்த நாஞ்சில் நாடன் எதிரில் வரவும் வழிமறித்து வணக்கம் சொன்னேன். பாரதி மணியைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்தேன். நன்றாக இருந்தது. திருநவேலிக்காரங்க மேல மணிக்குத் தனி பாசம் என்றேன்.

"ஆமாம், ஆமாம் இப்போ கூட சமீபத்துல அவருக்கு ஃபோன் செய்திருந்தேன்" என்றார்.

உங்களுடைய புத்தகம் வாசித்ததில்லை!.... என்று இழுத்தேன்.

"அதனால என்ன இனிமே படிக்கலாமில்ல" என்றார்.

உங்களுடைய கதைக்கான கரு எப்படிக் கிடைக்கிறது, எந்த நிலையில் சாத்தியமாகிறது?

எல்லோருக்குமே படைப்பிற்கான மூலம், அனுபவம் அல்லது புனைவு என்ற இரண்டு வகைகளில் கிடைக்கும். என்னுடையது கரு சொந்த அனுபவத்தில் கிடைப்பது. அது சமந்தமா உதாரணங்களுடன் பேசியவர் நேரம் ஆகவும் நண்பர்கள் காத்துக் கிடப்பார்கள் என்று விடைபெற்றுக் கிளம்பினார்.

பழைய படியே பூனை போல் அவரைப் பின்தொடர்ந்தேன். செல்லும் வழியில் வெளிவர இருக்கும் புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். 'நிலாரசிகன், விக்கிரமன், வெங்கட் சுப்பிரமணியன்' ஆகியோரது புத்தகங்களை எடுத்துக் கொண்டு புத்தகத்திற்கான பணத்தைக் கொடுத்தேன். ஒரு சொட்டு ரத்தம் ரசீதின் மேல் விழுந்தது. பதற்றத்துடன் அருகில் வேலை செய்து கொண்டிருந்தவரைப் பார்த்தேன். அவருடைய விரல் கீறப்பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. தயவு செய்து அதை சரிசெய்யப் பாருங்க என்று சொல்லிவிட்டு மீதிப் பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினேன். புத்தகத்தை மறந்திட்டிங்களே? என்ற குரலைக் கேட்டுதிரும்பினால் முத்துசாமி பழனியப்பன் நான் வாங்கிய புத்தகங்களுடன் நின்றுகொண்டிருந்தார்.

உள்ளே விஷ்ணு, அதி பிரதாபன், சதீஷ் மற்றும் பலர் இருந்தனர். புகைப்படம் எடுப்பதற்கு விஷ்ணு தன்னுடைய கேமராவை சரிசெய்து கொண்டிருந்தார். அவர்களின் அருகில் சென்று அமர்ந்து கொண்டோம்.

வேலையாக இருந்த நிலாரசிகனும் வந்து சேர்ந்தார். எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வணக்கம் தெரிவித்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்து கொண்டு சிறுகதைத் தொகுப்பை வாங்கிவிட்டதையும் தெரியப்படுத்தினேன்.

"நீங்க தான் மொத போனி... சரியா விக்கலையோ சும்மா விடமாட்டேன்" என்று கூறினார்.

"சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிட்டமோ!" - என்று யோசிக்கலானேன். நிகழ்ச்சி ஆரம்பிக்க சிறிது நேரம் இருக்கும் போது சொந்த வேலையின் காரணமாக அங்கிருந்து புறப்பட வேண்டியிருந்தது. ஆகவே அவரின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கிளம்பினேன். எனக்கு முன்வரிசையில் 'யுவ கிருஷ்ணா' உட்கார்ந்து கொண்டிருந்தார். என்னை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன். உங்களுடைய பதிவை படித்திருக்கிறேன் என்றார். புதிய தலைமுறை இதழுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படிஇருக்கின்றது என்பதைப் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்தேன்.

பரபரப்பான அண்ணா சாலையில் நடக்கத் துவங்கினேன். என்னுடைய பேருந்தும் கிடைத்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீடு நடக்கும் சமயத்தில், வெளியிடவிருக்கும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் ஒரே ஆள் உலகத்தில் நானாகத் தான் இருக்கும். பேருந்து நின்றுநின்று சென்று கொண்டிருந்தது. நானும் பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

1 comment:

  1. பகிர்ந்து கொண்ட விதமும் உங்கள் நடையும் அருமை நண்பா

    ReplyDelete