Tuesday, June 10, 2014

வார்த்தைகளும் அர்த்தங்களும்

ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் அதிசயித்து அதிர்ச்சியுடன் பார்க்கலாம். தமிழும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள், புரிதலுடன் கூடிய நமுட்டுச் சிரிப்புடன் இதனை அணுகலாம்.

பழைய காலத்தில் மருந்தானது புட்டிகளில் இருக்குமாம். அதனைக் காற்றுப் புகாமல் அடைக்கப் பயன்படும் ரப்பரால் ஆன மூடியை “காக்” என்பார்களாம். போலவே சேவலையும், ஆணுருப்பையும் கூட “காக் (COCK)” என்றே சொல்கிறார்கள். இந்த பிரியாணிக் கடை முதலாளி, ஒரு டிசைன் கம்பெனியை நம்பி பேனர் டிசைனிங் வேலையை ஒப்படைத்திருக்கிறார். டிசைன் கம்பெனியின் மொழி அறிஞர் தான் நூதனமாக COCK என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். வார்த்தைகள் கனமானவை தோழர்களே. தவறாகப் பயன்படுத்தினால் நாம் தான் கோமாளியாவோம், மோசம் போவோம் என்பதற்கு சாமான்ய உதாரணம் இது. டிவிட்டரில் தான் இந்தப் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. இந்த விளம்பரத் தட்டியைப் பலபேர் நக்கலடித்து இணையத்தள சமூக ஊடங்களில் பகிர்ந்திருந்தார்கள். 

பகுத்தறியும் தன்மையில்லாத புலங்களில் தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன என்று நினைப்பீர்களானால், ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதி வேண்டுகிறேன். ஐந்து நிமிடங்கள் எனக்குப் போதுமானது தோழர்களே. சரியான உச்சரிப்பு “கொலேஜ் பஸ்” என்பதாக இருந்தாலும், சாதாரண உச்சரிப்பில் பயன்படுத்தும் அதே வார்த்தையான “காலேஜ் பஸ்” என்பதை Callage Bus என்று எழுதினால் என்னவாகும். அனர்த்தம் தானே மிஞ்சும். (Callage – கூப்பிடும் வயது. இதனர்த்தம் புரிகிறது தானே!.)

தமிழகத்தில் 589 அரசு மற்றும் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருப்பதாக உறுதிபடுத்துகிறார்கள். திருவள்ளூர் & காஞ்சிவரம் மாவட்டத்தில் தான் நிறைய தனியார் கல்லூரிகள் இருக்கும் வேண்டும் என்பதாக நினைக்கிறேன். பொன்னேரிக்கு வந்து, மாணவர்களை ஏற்றிச் செல்லும் பிரபல கல்லூரிகளின் பேருந்துகளைக் கடந்த ஒருவார காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். சென்னைக்குப் பயணப்பட நேர்கையில் கழுத்து வலிக்கத் திரும்பித் திரும்பி பேருந்துகளின் ஜன்னலுக்குக் கீழ் ஓரப்பார்வை பார்கிறேன். (கல்லூரி மாணவிகளை சைட் அடிக்கிறேன் என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். இன்னும் கூட ஆஞ்சநேய பக்தனாகத் தான் இருக்கிறேன் என்பதை நண்பர்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன்.)

ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தது 10 பேருந்துகளாவது ஓடுகிறது. எல்லாவற்றிலும் “College Bus” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. சிலர் பெயின்டால் கைப்பட எழுதி இருகிறார்கள். “College Bus” என்பதன் தமிழாக்கம் போலக் “கல்லூரி பேருந்து” என்று அதே ஸ்டிக்கரில் அச்சிடப்பட்டுள்ளது. அல்லது கைப்பட எழுதப் பட்டுள்ளது.

இங்கு “கல்லூரிப் பேருந்து” என்பதாகத் தானே இருக்க வேண்டும். ஒரு “ப்”-ல் என்ன குடிமுழுகி விடப்போகிறது? என்று தான் நானும் நினைத்திருந்தேன். ரஜினியின் கடித்ததிலுள்ள ஒற்றுப் பிழைகளைப் பற்றிப் பேசினால், மலிவான விளம்பரத்தைக் “கிபி” தேடுகிறான் என்கிறார்கள். தினசரி பத்திரிகைகளிலுள்ள ஒற்றுப் பிழைகளைச் சுட்டிக் காட்டினால் “இதெல்லாம் உனக்குத் தேவையா? வேலையப் பாரு...” என்கிறார்கள். “தமிழ், தமிழர், செம்மொழி, தமிழர் உணர்வு” என கொடி பிடிப்பவர்களிடம் ஒற்றுப் பிழைகளைப் பற்றிப் பேசினால் “இந்த காலத்துல யாருதான் ஒற்றுப் பிழையில்லாமல் எழுதுறாங்க? நம்ம தமிழர்கள் கொடி பிடிச்சி சாதிக்க வேண்டிய நெறைய விஷயம் இருக்குது...” என்கிறார்கள் அரசியல் உள்குத்துடன். 

பதிவுலக, சமூக இணையதள நண்பர்களிடம் பேசினால் “நீ போயி மொதல்ல உன்னோட ப்ளாக்கையும், மூஞ்சிப் புத்தக ஸ்டேடசையும் ஒருமுறை படிச்சிப் பாரு... ஆயிரம் மிஸ்டேக்ஸ் இருக்குது” என்கிறார்கள்.

என் போன்ற சாதாரண வேலையற்ற மனிதர்களால் “தமிழை இலக்கண சுத்தத்துடன் பயின்ற “பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்)” ஆட்களை நேர்முகம் செய்து வேலைக்கு எடுக்க முடியாது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள நட்சத்திர ஆளுமைக்கும், வர்த்தக பத்திரிக்கை நிருவனங்களுக்கும் என்ன கேடு?”

சரி... சரி... என்ஜினியரிங் காலேஜ் விஷயத்திற்கு வருவோம். அரசுக் கல்லூரிப் பேராசிரியரும், எழுத்தாளருமான – நண்பர் பெருமாள் முருகனிடம் ஒருநாள் முழுக்க நேரத்தைச் செலவழிக்க நேர்ந்தது. அவரிடம் கேட்டேன்:

“கல்லூரி பேருந்து, கல்லூரிப் பேருந்து – இரண்டில் எது சரிங்க அன்பான அழகான தோழரே?”

“ஹூம்... நீ மோசமான பையனாச்சே... கலியுக நாரதனாச்சே...! இந்த மாதிரி எதாச்சும் நீ கேள்வி கேட்டாலே... ஏதோ குட்டைய கொழப்பபோறேன்னு அர்த்தமேச்சே...! இங்கிருந்து ஓடிப்போயிடு பிரபு... எம்பக்கதுல வராத...! நேரத்த வீணாக்காத...!” என்றார்.

“ஒழுங்கா சொன்னீங்கன்னா நான் ஓடிப் போயிட்றேன். இல்லன்னா... இன்னிக்கிகெல்லாம் உங்க பின்னாடியே வந்து ஃபாலோ பண்ணுவேன். கேள்விமேல கேள்வி கேட்டு உங்கள டிஸ்டர்ப் பண்ணுவேன். வசதி எப்படிங்க என்னுடைய அன்பான, அழகானத் தோழரே...!?” என்றேன்.

“அப்படியாவது தொலைஞ்சி போவேன்னா... சந்தோஷம்தான்” என்று வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு “ரெண்டுமே சரிதாங்க பிரபு. எடத்துக்கு ஏத்த மாதிரி பயன்படுத்தணும்...!” என்றார் முருகன்.

“அடடே... கஷ்டமான கேள்வியா கேட்டுட்டேன் போல இருக்குது. சமாலிஃபிகேஷன்ஸ் செய்யிறாப் போலத் தெரியுதே...” என்றேன்.

“யோவ்... ஊராயா இது? பேருதான் சிங்காரச் சென்னை. ஊரு முழுக்க வெறும் காட்டுப் பூச்சிங்களா இருக்குமாட்டு இருக்கு...” என்றார் பக்கத்திலிருந்த சக எழுத்தாள நண்பரைப் பார்த்து.

“நீ கர்பூறம்டான்னு ஊரே என்னைப் பாராட்டுங்க முருகன். என்னோட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, தெனறித் தண்ணி குடிக்கணும் போல இருக்குதா?” என்றேன்.

“ஒன்னாப்பு, ரெண்டாப்பு, அஞ்சாப்பு, பத்தாப்பு வரைக்கும் - நீங்க என்னதான் படிச்சிங்க...? சுதந்திர தினத்துல மிட்டாய் கொடுப்பாங்களே... வாரத்துல ரெண்டுநாள் சத்துணவு முட்டை கூடப் போடுவாங்களே... அந்தப் பக்கம் ஒதுங்கனதே இல்ல போல... தெண்டத்துக்குன்னாலும் ஒரு பொறப்புன்னு...” என்றார் குத்தலாக.

“ஹூம்... கூட படிச்ச பொன்னுங்கக் கூட ‘டாடா டீடீன்னு’ கடலை போட்டுக்குனு இருந்தேன்...! ஒரு கேள்வியக் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லுவிங்களா? அதென்ன கவிதை வாசிச்சிக்கிட்டு...” என்றேன்.

“ஒருத்தங்க திட்டினா அது மனசுல ஒரைக்கணும்... அப்பறமேட்டு உணர்ந்து திருந்தனும்... சரி போகட்டும்... இந்த வார்த்தைய எங்க பார்த்து தொலைச்ச...!” என்றார்.

“காலேஜ் பஸ்ல முருகன்... காலேஜ் பஸ்ல... அதுவும் ஜன்னலுக்குக் கீழ...” என்றேன்.

“ஒஹ்... அது தானா விஷயம்... அப்போ ‘கல்லூரிப் பேருந்து’” என்பதுதான் சரி என்றார் முருகன். போலவே, ‘கல்லூரி பேருந்து’ என்று எழுதினால் அது ‘கல்லூரியும் பேருந்தும்’ என்ற அர்த்தத்தில் வரும் என்றும் கூறினார்.

எனக்குத் தேவையானது கிடைத்துவிட்டது. இனி உங்கள் தயவு எனக்கெதற்கு என பேராசிரியரை விடுதலை செய்தேன். ‘கல்லூரியும் பேருந்தும்’ என மாணவர்கள் செல்லும் வாகனத்தில் எழுதவேண்டிய அவசியமில்லை. ஆகவே, ஒற்றுப் பிழையானது உறுதி செய்யப்படுகிறது. வெல்லாலக்குல வெலாங்காய்ப் பெற்றோர்களே...! உங்களை வெல்லத்தில் வைத்து இடித்துச் சாப்பிட...! (வெலாங்கா சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆகிறது. இப்படித் திட்டியாவது அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் புதுமையாக யோசித்தேன். பெற்றோர்களாகிய நண்பர்கள் கோவிக்கக் கூடாது). ரெண்டு தமிழ் வார்த்தைய தப்பில்லாம எழுத முடியல... அந்தத்தப்பக் கண்டு பிடிக்க முடியல இவங்களால.... இவங்க என்சீநியரிங் கத்துக் கொடுக்கறாங்களா?

சரி... விஷயத்திற்கு வருவோம். தமிழகத்தில் 589 அரசு மற்றும் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. ஒரு கல்லூரியின் தலைக்கு 10 பேருந்துகள் என்றாலும் கூட, ஏறக்குறைய ஐயாயிரம் கல்லூரிப் பேருந்துகள் ஓடுகின்றன. “வேலம்மாள் கல்லூரி, ஆர்.எம்.கே கல்லூரி, ஆர்.எம்.டி கல்லூரி, எஸ்.ஆர்.எம் கல்லூரி, ஜேஎன்என் கல்லூரி” போன்ற முக்கியமான கல்லூரிப் பேருந்துகளிலும் தவறாக அச்சிடப்பட்ட “கல்லூரி பேருந்து” என்ற ஸ்டிக்கர் தான் ஒட்டப்பட்டுள்ளது. இதோ இந்தப் பதிவைப் படித்துவிட்டு, சென்னையைச் சுற்றி ஓடும் காலேஜ் பஸ் ஒவ்வொன்றையும் நுட்பமாக கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு உண்மை புரியும். (தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓடும் காலேஜ் பஸ்களைப் பற்றிய தகவலை, புகைப்படத்துடன் நண்பர்கள் யாரேனும் அனுப்பி வைத்தால் மகிழ்வேன். சமூக இணையதள ஊடகங்களில் ஆதாரத்துடன் பகிர்ந்தால் அதனினும் மகிழ்வேன்.) பிரதியுஷா கல்லூரி வாகனத்தில் சரியாகப் பிழையில்லாமல் எழுதியிருகிறார்கள்.

நான் உங்கள் முன் வைக்க விரும்பும் கேள்வி இதுதான். “கோழி வறுவலுக்கு பதில் காக் ஃப்ரை” என்று எழுதி பேனர் வைப்பவர்களுக்கும், ஒற்றுப் பிழையுடன் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ள, கல்விப் புலத்தில் இயங்கக் கூடிய என்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இனி அந்தந்தக் கல்லூரிகளின் மாணவ நண்பர்கள் தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும்.

அந்தந்த மொழிகளைப் பிரக்ஞையின்றி பிழையாகப் பயன்படுத்தும் சூழல் ஒரு புறமிருக்க, வேற்று மொழியிலிருந்து சில வார்த்தைகள் தமிழுக்கு வருவதும், தமிழிலிருந்து சில வார்த்தைகள் பிற மொழிகளுக்குச் செல்வதும் சகஜமாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நண்பர் ஞாநியுடன் பேசிக் கொண்டிருக்கையில் “ஆல்பொகடாப் பழம், ஆள்தோட்டம்” போன்ற வழக்கு வார்த்தைகளைப் பற்றி அலசிக் கொண்டிருந்தோம். (துருதுஷ்ட வசமாக உரையாடலை நீண்ட நேரம் தொடர முடியாமல் போனது.)

நியூ காலேஜிக்கு எதிரிலுள்ள “ஹால்ஸ்” என்பவரின் நினைவாக கார்டன் ஒன்றிற்கு வைத்த பெயர் “ஆள்தோட்டம்” என்பதாக மாறி இருக்கிறது போல. ஞாநி தான் இதனைப் பகிர்ந்துகொண்டார். “ஆல்பொகடா” என்பது என்ன? ஜுரம் வந்தால் கொடுக்கும் புளிப்பான பழத்திற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? என்பதை மொழியாளர் ஒருவரிடம் தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆக, ஒரு மொழியானது மற்றொரு மொழியுடன் இயல்பாக ஒன்றிணைந்து, சில குறைப் பிரசவ வார்த்தைகள் பிறப்பதையும், பூரண ஆயுசுடன் அவ்வார்த்தைகள் நூற்றாண்டு கடந்து வளமுடன் வாழ்வதையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். பத்திரிக்கை துணுக்குக்காகவோ, வேறு பயன்பாட்டிற்காகவோ - முகமறியாத யாரோ ஒருவர் மொழிபெயர்க்க – யதார்த்தப் பயன்பாட்டில் இவ்வார்த்தைகள் நிலைபெற்று விடுகின்றன.

ஆரியர், முகமதியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என வந்தவர்கள் அனைவரும் இந்தியப் பிராந்திய மொழிகளில் உறவாடித் தோற்றுவித்தப் பல்வேறு வார்த்தைகள், தற்போது அன்றாடப் புழக்கத்தில் உள்ளன. இது மொழியின் தேய்வுக்கு வழிவகுக்கிறதா? அதற்கு மாறாக மொழியின் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சிக்கு வித்தாகிறதா? என்பதை நாம் விழாக்கால சிறப்புப் பட்டிமன்றக் கலைஞர்களிடம் விட்டுவிடுவோம். இறுதித் தீர்ப்பை பட்டிமன்ற நடுவர் பார்த்துக் கொள்ளட்டும்.

மொழிபெயர்ப்பு என்பது கலை. தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்கள் கலாச்சாரத் தூதுவர்கள் போல. ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு வளமான விஷயங்களைப் பதியம் செய்கிறார்கள். ஓர் எழுத்தாளனுக்கே நம் சமூகத்தில் மதிப்பில்லாத போது, சரியான அங்கீகாரம் கிடைக்காத போது - மொழிபெயர்ப்பு சார்ந்து இயங்குபர்கள் உள்ளார்த்த ஆர்வத்தின் காரணமாகத் தான் இதனைச் செய்கிறார்கள். “புனைவு, அ-புனைவு” என எந்தப் புலத்தில் இயங்கினாலும் (ஒரு சிலர் இரண்டையுமே செய்கிறார்கள்), அவர்களது முயற்சி பாராட்டத்தக்கது. தமிழில் மொழிபெயர்ப்பு சார்ந்து ஆங்காங்கு நிறைய பேர் பங்காற்றுகிறார்கள். ஆனால், ஒருவருக்கு ஒருவர் பரிசியமில்லை என்ற நிலைதான் இருக்கிறது.

எனவே, மொழிபெயர்ப்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, ஒருங்கிணைந்து பணியாற்றும் சூழல் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில், கிழக்கு பதிப்பகம் ஒருநாள் “மொழிபெயர்ப்பு கருத்தரங்கை” ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கில் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்ற சலுகை இருந்ததால் நானும் சென்றிருந்தேன். ஒரு நாள் பட்டறையில் “நலங்கிள்ளி, தீக்கதிர் குமரேசன், ஜி. குப்புசாமி” என மொழிபெயர்ப்பில் தீவிரத்துடன் இயக்கக் கூடிய சிலரும், மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் வந்திருந்து பல்வேறு நுணுக்கங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். “பிரியாணிக் கடை விளம்பரத் தட்டிபோல, காலேஜ் பஸ் ஸ்டிக்கர் போல” மொழிபெயர்ப்பு பல நேரங்களில் காலை வாரிவிடும். அதனை நுட்பத்துடன் எதிர்கொண்டால் தான் மொழிபெயர்ப்பில் சிறந்து விளங்க முடியும் என்பதுபோல இருந்தது அவர்களது பகிர்வுகள். ஒருநாள் கருத்தரங்கின் முடிவில் பத்ரி பகிர்ந்துகொண்ட விஷயம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய ஒன்று.

“இந்த ஒருநாள் கருத்தரங்கை முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாம். மூன்று அல்லது நான்குநாள் பயிலரங்கம் ஒன்றை மொழிபெயர்ப்பு சார்ந்து ஏற்பாடு செய்யவேண்டும் என்ற ஆசை என்.எச்.எம் நிறுவனத்திற்கு இருக்கிறது. மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நாங்கள் பயிற்சியளிக்க விரும்புகிறோம். இங்க வந்திருக்கவங்க கிழக்கு பதிப்பகத்துக்கு மட்டுமே மொழிபெயர்ப்பு வேலைய செய்யணும்னு நாங்க எதிர்ப்பார்கல. ஏதோ பேசினோம், களஞ்சி போனோம்னு இருக்கக் கூடாது. ஒரு குழுவா நெறைய விஷயங்கள நம்ம மொழிபெயர்ப்பு சார்ந்து ஷேர் பண்ணிக்கணும். அதுக்கொரு ஆரம்பமா இந்தக் கருத்தரங்கு அமையனும்.” என்றார்.

கிழக்கு பதிப்பக பத்ரி ஷேசுவைத் தொடர்ந்து ஃபாலோ செய்யுங்கள். என்றேனும் அவர் மூன்று நாள் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கிற்கு அழைப்பு விடலாம். ஆர்வமுள்ள இளவட்டங்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாகக் கல்லூரி மாணவர்களை மொழிபெயர்ப்பு சார்ந்து பயன்படுத்திக்கொள்ள பத்ரி விரும்புகிறார். ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களே உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். உங்களது கல்லூரிப் பேருந்தை உற்று நோக்கி அதிலிருந்து தொடங்குங்கள்.

நன்றி...

No comments:

Post a Comment