Sunday, June 30, 2013

ஆடுகளம் to அம்பிகாபதி – திரை மொழி

“என்னுடைய தம்பி கஷ்ட்டப்பட்டு ஹிந்தியில் பேசி நடிக்கிறான். ரான்ஜனா டிரைலர் பார்த்தேன். பெருமையாகவும் பிரம்மிப்பாகவும் இருக்கின்றது.” என இயக்குனர் செல்வராகவன் டிவீட் செய்திருந்தார். தம்பியின் அடுத்தடுத்த வெற்றியை ஒரு அண்ணனாக கொண்டாட்ட மனநிலையில் பகிர்வது தவறில்லை தான். ஆனால் செல்வராகவன் பகிர்ந்திருந்ததை ஜனரஞ்சகப் பத்திரிகைகள் உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டார்கள் போல.

இரண்டு மாதங்களுக்கு முன்பு எக்மோர் மியூசியம் தியேட்டரில் “சென்னை அரங்கம்” ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் சுஜாதாவின் “கடவுள் வந்திருக்கிறார்” நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. ஏறக்குறைய இரண்டு மணிநேர நாடகம். அதில் ஓர் இளம் பெண் அக்ரஹார பாஷை பேசி நடித்திருந்தார். அவளுடைய கதாப்பாத்திரம் பிரதானமானது. வசனங்களை பேசிக்கொண்டே இருக்க வேண்டிய பாத்திரம் அவளுடையது. நாடகத்தின் முடிவில் சென்னை அரங்கத்தின் நிறுவனர் பாரதிமணி நடிகர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தார். இளம் பெண்ணை முன்னே நிறுத்தி “இவள் ஆந்திரா கொல்டி. இந்தப் பெண்ணுக்கு தமிழ் மொழிய எழுதி படிக்கத் தெரியாது. நாடகத்தின் முழு ஸ்க்ரிப்டையும் தெலுங்குல எழுதி வச்சிக்குனு பேசி நடிச்சா” என்றார். வதவதன்னு ஏகப்பட்ட வசனங்கல வேற்று மொழியில் எழுதி வைத்து, மேடை நாடகத்தில் நடிப்பதற்கு ஓர் அசாத்தியத் திறமை வேண்டும். அவளுடைய பிராமண தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சுத்தமாக இருந்தது. நடிகர் பாரதிமணி சொல்லவில்லை என்றால், அந்தப் பெண் தெலுங்கு கொல்டி என்பதே பார்வையாளர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால், அந்தப் பெண்ணின் கடினமான உழைப்பு மெச்சத் தகுந்த ஒன்று. 


தெலுங்கு பேசுபவர்கள் எந்த ஒரு மொழியையும் இலகுவாகக் பேசலாம் என்று தெலுங்கு பேசும் நண்பர்களில் சிலர் பகிர்ந்திருக்கிரார்கள். ஏனெனில் எல்லா ஒசைக்குமான எழுத்து தெலுங்கில் இருக்கிறது என்கிறார்கள். சமஸ்கிருத ஸ்லோகங்கள் கூட தெலுங்கர்கள் சொல்லுவார்கள். சிறுவயதில் தொலைக்காட்சியில் பார்த்த மகாபாரத சீரியலில் வரும் கீதா உபதேசம் “சமஸ்க்ரதம், தெலுங்கு” ஆகிய இரு மொழிகளிலும் கேட்டதாக ஞாபகம். தனுஷ் – தெலுங்கு குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். ஒருவேளை வீட்டில் அவர்கள் தெலுங்கு கூட பேசலாம். அந்த பரிச்சியம் இதர மொழி பேசி நடிக்கும் பொழுது அவருக்குக் கைகொடுக்கலாம். நாடகத்தில் நடித்த பெண்ணாக இருக்கட்டும், நடிகர் தனுஷாக இருக்கட்டும் – இருவருமே திறமையானவர்கள் தான்.

சேவற் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆடுகளம், பலரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்திய முக்கியமான திரைப்படம். வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் இந்தப் படம் ஒரு மைல்கல் என்று கூட சொல்லலாம். சேவற் சண்டையில் அதீத ஆர்வமுள்ள ஒருவன், ஆங்கிலோ இந்தியப் பெண்ணை துரத்தித் துரத்திக் காதலிப்பதை கதைக் கருவாகக் கொண்ட திரைப்படம். மதுரைத் தமிழை அச்சு அசலாகப் பேசி நடித்ததால், நடிகர் தனுஷுக்கு தேசிய விருது கூட பெற்றுத்தந்த படமிது. இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதே ஆண்டில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் “அழகர்சாமியின் குதிரை” என்ற சிறுகதை, இயக்குனர் சுசீந்திரனால் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. குதிரை வளர்க்கும் ஒருவன் மலைப்பிரதேச அழகி ஒருத்தியை கரம்பற்ற நினைக்கிறான். அவளுக்காகவே தனது தொலைந்துபோன குதிரையைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். குதிரை வளர்ப்பவனாக நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அதே ஆண்டில் அறிவிக்கப்படுகிறது.

தனுஷ் ஏற்று நடித்ததைப் போலவே முக்கியமான கனமான பாத்திரத்தை, அதாவது ஹீரோ போன்ற ஒரு கதாப் பாத்திரத்தை ஏற்று நடித்த அப்புக்குட்டிக்கு எந்த அளவுகோலில் துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பதை ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகை கூட கேள்வி எழுப்பவில்லை. மாறாக தனுஷை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு களியாட்டம் போட்டார்கள். சரி... உடல் சார்ந்த விருது அரசியலை பின்னர் பிறிதொரு சந்தர்பத்தில் பேசலாம். இப்பொழுது தனுஷின் மதுரை ஸ்லாங்கிற்கு வருவோம். இதைப் பற்றி தனுஷே கூட பெருமையாக நேர்முகங்களில் பகிர்ந்த பொழுது:

ஷூட்டிங் ஸ்பாட்ல நான் (தனுஷ்) டயலாக் பேசிட்டு இருக்கும்போது, ஒரு வயசான மதுரைக்காரர் இருந்தாரு. அவரு என்னை பார்த்து கைய காமிச்சி கூப்பிட்டு “தம்பி, இங்க இருக்கவங்க பேசுறதுலையே - நீங்க பேசுறது தான் அச்சு அசலா மதுரத் தமிழாட்டும் இருக்குதுன்னு சொன்னாரு”.

மேற்கூறிய சம்பவத்தை நினைவு கூர்ந்த பொழுது தனுஷ் மிகவும் பெருமிதப்பட்டார். இயக்குனர் வெற்றிமாறனோ விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் – ஆடுகளம் திரைப்பட ஆக்கம் குறித்து பேசும் பொழுது, தனது உதவி இயக்குனர்களைப் பற்றி மிக உயர்வாகப் பேசி பெருமிதப்பட்டார்.

“ஒவ்வொருநாளும் ஷூட்டிங் நடக்கறதுக்கு முன்னாடி, உதவி இயக்குனர்கள் ரெண்டு பேர் தனுஷின் ரூமுக்கு போயிடுவாங்க. ஹோட்டல் ரூமுல இருந்து ரெடியாகி ஷூட்டிங் ஸ்பாட் வர வரைக்கும் மதுர தமிழ்லயே அவர் கூட பேசிட்டு இருப்பாங்க. அப்புடி ரொட்டீனா வார்ம்அப் பண்ணிட்டுதான் இந்த ஷூட்டிங் எல்லாம் எடுத்தோம்” என்றவர், டப்பிங்கில் கூட அந்த உதவி இயக்குனர் சமரசம் செய்துகொள்ளாமல் மிக வருத்திக்கொண்டு, பல முறை பேச வைத்து குரல் பதிவு செய்ததாகவும் கூறினார். (அந்த உதவி இயக்குனரின் பெயர் தான் ஞாபகத்தில் வந்து தொலைக்கமாட்டேன் என்கிறது.)

ஞாயமாகப் பார்த்தால் தனுஷ் பகர்ந்ததை வெற்றிமாறன் பேசியிருக்க வேண்டும். வெற்றிமாறன் பகர்ந்ததை தனுஷ் பேசியிருக்க வேண்டும். அப்படிப் பேசியிருந்தால் ஆரோக்கியமாக இருந்திருக்கும். என்றாலும் தன்னை முன்னிருத்திக்கொள்ளும் யுக்தி சினிமாத் துறையில் சாதாரணமான ஒன்றுதான். ஆகவே தனுஷை குற்றம் சொல்லி ஆகப்போவதில்லை. தூக்கத்திலிருந்து எழுப்பினால் கூட நுனிநாக்கில் பேசக் கூடிய, பொதுவில் புழங்கும் வட்டார மொழியின் ஓசையில் பேசுவதற்கே இத்தனை மெனக்கெடல்கள் வேண்டுமெனில், கொஞ்சமும் பரிச்சயமற்ற வேறொரு மொழியை பேசி நடிக்க – எவ்வளவு பக்கபலங்கள் தேவையிருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் இதற்காக எவ்வளவு பேர் உதயிருக்க வேண்டும் என்ற யோசனைதான் என்னுள் எழுந்தது. ராஞ்ஜனாவைப் பொருத்தவரை 90% சதவீத ஒளிப்பதிவு செய்தது நட்டி தான். நட்டியிடம் இருக்கும் நான்கில் ஒருவர் மட்டுமே ஹிந்திக்காரர். மற்றவர்கள் அனைவரும் தமிழர்கள் தான். அதிலும் நட்டி “ஹிந்தி, தமிழ், ஆங்கிலம்” போன்ற மொழிகளை லாவகத்துடன் பேசக் கூடியவர். ஹிந்தியில் இவர் பிசியான ஒளிப்பதிவாளரும் கூட. இவர் “நாளை (2006), சக்கர வியூகம் (2008), மிளகா (2010), குலசேகரனும் கூலிப்படையும் (2010), முத்துக்கு முத்தாக (2011)” போன்ற படங்களில் முக்கியமான பாத்திரத்தில் கூட நடித்திருக்கிறார்.

“சக்கர வியூகம்” – திரைப்படத்தின் இணையம் சார்ந்த பங்களிப்பை நான் வேலை செய்த கம்பெனிதான் செய்துக் கொடுத்தது. எங்களுடைய கிரியேடிவ் ஹெட் பிரஜோஷ் பாலகிருஷ்ணன் இணையதளத்திற்கு தேவையான புகைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது நானும் பக்கத்தில் இருந்திருக்கிறேன். நட்டி நடித்த சில ஸ்டில்சும் அதிலிருந்தது. பிரஜோஷிடம் கேட்டேன்:

“இவருதான் இந்தப் படத்துக்கு ஹீரோவா?” என்றேன் சிரித்துக் கொண்டே நக்கலாக.

“நட்டி யாருன்னு உனக்குத் தெரியுமா கிருஷ்ணா?” என்றார்.

“இந்தப் படத்தோட தயாரிப்பாளரா?” என்றேன்.

“படம் ப்ரடியூஸ் பண்றது அவருக்கு பெரிய விஷயமே இல்ல. ஆனா அவருக்கு இன்னொரு முகமும் இருக்கு. அது தெரியுமான்னு கேட்டேன்?” என்றார் பிரஜோஷ்.

“ஆமா... படத்தோட டைரக்டரா இருக்கும். நடிக்க வந்துட்டாரா?” என்றேன்.

பிரஜோஷ் தலையிலடித்துக் கொண்டார். “நட்டி ஹிந்தியில முக்கியமான சினிமட்டோகிராபர்-யா. பாலிவுட்ல ரொம்ப பிசியான ஆளு. ஃப்ரண்ட் யாராச்சும் கேட்டிருப்பாங்க. அதான் நடிச்சி கொடுத்திருப்பாரு. கூகுள்ல போயி அவர பத்தி தேடிப்பாரு. என்னிக்கி தான் இதையெல்லாம் தெரிஞ்சிக்கப் போறியோ?” என்றார்.

“எம்மோ... ஆளப் பார்த்தா அந்த மாதிரி தெரியிலையே ப்ரஜோஷ். சரியான கல்லூலி மங்கனா இருப்பாரு போல.” என்றேன். “நீ வேஸ்ட் கிருஷ்ணா. ஏதாச்சும் சினிமா பார்த்தா தானே!...” என்று ப்ரஜோஷ் சொல்லியதும் தான் நட்டியைப் பற்றி மேலும் சில விஷயங்களை தேடித் தெரிந்துகொண்டேன்.

ஏ. ஆர். ரகுமான் போலவே நாட்டியும் பள்ளிப் படிப்பை முடிக்காதவர். சிறுவனாக இருந்த பொழுது வறுமையின் காரணமாக, இசைக் கருவிகளை வாடகை விடுவதற்காக, அதனை சுத்தம் செய்ய வெண்பட்டுத் துணியை கைகளில் எடுத்தவர் ரகுமான். போலவே, கேமராவை சுத்தம் செய்ய நட்டியும் துணியைக் கைகளில் எடுத்திருக்கிறார். இருவரும் இன்று தொட்டிருக்கும் உச்சம் சாதாரமானது அல்ல. அவரவர் பாதையில் சக்கைபோடு போடுகிறார்கள். (கீழே உள்ள புகைப்படம்: ராஞ்ஜனா திரைப்படத்தில் சோனம் கபூரை உட்கார வைத்துக்கொண்டு நட்டி ரிக்ஷா ஓட்டுகிறார். டெக்கான் க்ராநிகளில் வெளிவந்த கட்டுரை.

பத்திற்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சில படங்கள் ஒளிப்பதிவிற்காக பேசப்பட்ட திரைப்படங்கள் என்பதும் முக்கியம். இவருடைய முழுமையான பங்களிப்பு இல்லையெனில் – காட்சிகளை புரிந்துகொண்டு ராஞ்சனாவில் சுலபமாக ஹிந்தி பேசி நடிப்பவராக (தனுஷ்), இந்த அளவிற்கு மோல்ட் ஆகியிருப்பாரா என்பது குறித்த ஒரு விஷயம் இருக்கிறது. தனியாளாக பாலிவுட்டுக்குச் சென்று தனுஷ் சாதித்துவிட்டு வந்திருப்பதாக தூபம் போடுவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம். நம்மாட்கள் ஏற்கனவே சென்று அடித்தளம் போட்ட இடத்தில் தான் தனுஷ் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். திரைப்பட சட்டகத்திற்கு பின்னாலுள்ள நபர்களின் பங்களிப்பையும் நாம் பார்க்க வேண்டும். அவர்களைப் பற்றி நினைவு கூறவும் பழக வேண்டும். “ராஞ்ஜனா” – ப்ரமோஷனில் நட்டியைப் பற்றி தனுஷ் ஏதேனும் நினைவுகூறக் கூடும் என்று நினைத்தேன். அப்படியின்றும் நிகழவில்லை. (ஹிந்தி தெரிந்த தமிழர் பக்கத்தில் இருக்கும் பொழுது, அவரிடமிருந்து தனுஷ் மொழி சார்ந்த உதவியை பெறாமலா இருந்திருப்பார்.) 

தனுஷ் ஹிந்தியில் அறிமுகமாகிய “ராஞ்ஜனா”, வட இதியாவில் பயங்கர ஹிட் என்கிறார்கள். இசையமைப்பாளர் ரகுமானுக்கு ஹிந்தியில் மார்கெட் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்காகவே திரைப்படம் பார்க்க வருபவர்களும் இருக்கிறார்கள். ரகுமானும் தமிழர். ஒளிப்பதிவாளர் நடராஜன் சுப்பிரமணியம் (நட்டி) கூட தமிழர் தான். ஆக, முக்கியமான துறைகளில் தமிழர்கள் வேலை செய்த படமிது. என்றாலும் தனுஷ் ஹிந்தியில் பேசி நடித்ததை – தமிழ் பத்திரிகைகள் வானளாவக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் நடிகனிடம் இருக்கும் இதுபோன்ற மெனக்கெடல்களை கொண்டாட வேண்டியதும் அவசியம் தான்.

பிரகாஷ்ராஜ் இல்லையா! கன்னடரான அவர் – “தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்” என எங்கு சென்றாலும் தனது சொந்தக் குரலில் பேசி அசத்திவிட்டு வரவில்லையா?. முதுநிலை கன்னடம் படித்த நடிகர் கிஷோர் கூட, “வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, ஹரிதாஸ்” என தமிழில் பேசி கலக்கிக் கொண்டிருக்கிறார் இல்லையா?. (அடிப்படையில் பிரகாஷ்ராஜும் கிஷோரும் – அரங்க நாடகப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஆகவே இதுபோன்ற மெனக்கெடல்கள் இயல்பிலேயே ஊறி இருக்கும்.) அல்லாரி நரேஷ் தமிழ் பேசி நடிக்கவில்லையா? எத்தனை கதாநாயகிகள் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வருகிறார்கள். இங்கிருந்து “வைஜெயந்திமாலா, ஸ்ரீதேவி” போன்றோர் மும்பை சென்று கலக்கவில்லையா? அதிலும் ஸ்ரீதேவி ஹிந்தியில் உச்சத்தைத் தொட்ட நடிகை. (ஆனால் கமல் & ரஜினியால் பாலிவுட்டின் பிரதான இடத்தை அடைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) அப்படியிருக்கையில், இனியொரு இனியொரு விதி செய்ய என்ன இருக்கிறது?

ராஞ்சனாவின் 10% சதவீத ஒளிப்பதிவை வேறொரு நபர் செய்திருக்கிறார். காரணம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி ஹிந்தியில் படமாகிறது. அதற்கு நட்டிதான் ஒளிப்பதிவு. கஜினியின் ஹிந்தி படத்தை இயக்கிய அனுபவம் ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ்-க்கு இருக்கிறது. அதைப் பற்றிய சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை தனது தொலைகாட்சி நேர்முகத்தில், நீண்ட நாட்களுக்கு முன்பு பகிர்ந்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

அமீர்கான் பேசி நடித்த ஒரு காட்சியின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததாம். வசனத்தின் ஒரு வார்த்தையை அமீர் கான் மாற்றிப் பேசிவிட்டாராம். முருகதாஸ் அதனைக் கண்டுபிடித்து அமீர்கானிடம் சொல்லி இருக்கிறார். காட்சிகைப் போட்டுப் பார்த்ததில் அமீர்கான் மாற்றிப் பேசியிருப்பது தெரிய வந்ததாம். இதற்காக அமீர் கான் வெகுவாகப் பாராட்டினாராம்.

“ஏன்யா..! ஒருநாள்ல மூனு நிமிஷ காட்சியைத் தான் படமாக்கப் போறீங்க. அதுல முப்பது வார்த்தைக்கு மேல இருக்கப் போறது இல்ல. மனப்பாடம் செஞ்ச அந்த முப்பது வார்த்தையில இரு வார்த்தை புரண்டு போறத கண்டு புடிக்கறது அவ்வளோ பெரிய கஷ்டமாயா?”.

நடிகராவது? இயகுனராவது? நம்மவர்கள் செய்யும் எது ஒன்றுமே தனிப்பட்ட சாதனைதான் போல. இது இங்கிருந்து வடக்கில் செல்லும் எல்லோருக்குமே பொருந்தும். ஒரு வார்த்தை ஹிந்தி தெரியாது. லாவகமான ஆங்கிலமும் இல்லை. ஆனால் மாஸ் ஹீரோவை வைத்து ஹிந்தி படத்தை ஒருவர் இயக்குகிறார். இதெப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. ஏ. ஆர், முருகதாசுக்கு கஜினியில் ரவி.கே.சந்திரன். துப்பாக்கி ஹிந்தி வெர்ஷனில் நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியன். எனினும் அவர்களைப் பற்றி ப்ரஸ் மீட்டில் ஒரு வார்த்தை பேச மாட்டார்கள்.

நடிகராவது! இயக்குனராவது! இட்ஸ் ஆல் இன் த கேம்.

“ஆடுகளம் to அம்பிகாபதி – திரைமொழி” – இதைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது. திரைமொழியைப் பற்றி பேச அந்த மொழி எனக்கு தெரிந்திருக்க வேண்டுமில்லையா? எனக்கு தான் தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாதே.

Wednesday, June 26, 2013

ஃபிலிம் காட்டும் ஃபிலிம் இஸ்ட்டிடியூட்

“அண்ணா, கவர்மென்ட் ஃபிலிம் இஸ்ட்டிடியூட்ல சேரப்போறேண்ணா” என்றான் என்னுடைய கிராமத்தில் வசிக்கும் ஒருவன்.

“உனக்கு ஏன்டா இந்தக் கேடுகெட்ட புத்தி?” என்றேன்.

“அண்ணே... அங்க படிச்சா ஸ்கோப் இருக்குமாங்ண்ணே?” என்றும் கேட்டான்.


சென்ற வருடத்தின் ஒருநாள் தரமணி திரைக்கலூரிக்குச் சென்றிருந்தேன். உச்சி வெயில் கொளுத்திய மதிய நேரம். குடிப்பதற்கு ஒரு வாய் தண்ணீர் கூட இல்லை. வியர்த்து நனைந்ததில் கசகசப்பாக இருந்ததால் முகம் கழுவலாம் என்று தற்செயலாக பாத்ரூம் பக்கமாக ஒதுங்கினேன். ஒரு குழாயிலும் தண்ணீர் வரவில்லை. கக்கூஸ் சுத்தமாக இல்லை. இந்த ஹாஸ்டலுக்கு சிறைச்சாலையே தேவலாம் என நினைத்துக் கொண்டேன். வெளியில் சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து மொத்தக் கல்லூரியையும் சுற்றிப் பார்த்தேன். சொல்லொன்னா துயரம் மனதில் சூழ்ந்தது. கல்லூரி சிதிலமடைந்திருப்பது கூட எனக்கு இரண்டாம் பட்சம் தான். குடிப்பதற்கும், சுத்தப்படுத்திக் கொள்வதற்கும் கூட தண்ணீர் இல்லாத சூழல் என்னுடைய ரத்தக் கொதிப்பை ஏற்றியது. ஆகவே ஜூனியர் விகடனுக்கு தெரியப்படுத்திவிட்டேன். அவர்கள் கல்லூரியின் தவறையும், கவனக் குறைவையும் சுட்டிக்காட்டிவிட்டு “மொக்கை காலேஜ்” என்று தலைப்பிட்டுவிட்டனர். விகடன் கவரேஜ் கல்லூரி நிர்வாகத்தையும், அதன் தலைப்பு மொத்த மாணவர்களையும் ஒருசேர  கொதிப்படையச் செய்துவிட்டது. (ஜூனியர் விகடன் கவரேஜ் செய்த பிறகு ஹாஸ்டலில் ஆக்குவா பில்டர் தண்ணீர் வைத்து மாணவர்களின் தாகத்தைத் தனித்தார்கள். என்றாலும் வாட்டர் கேன்களுடன் அதே கல்லூரி வளாகத்தில் பிள்ளைகள் மீண்டும் அலைவதை சமீபத்தில் பார்க்க முடிந்தது.)

கனவுத் தொழிற்சாலையில் காலடி எடுத்துவைக்க நினைக்கும் எனது கிராமச் சிறுவனின் ஆழ்மன வேட்கைக்கு பின்னாலுள்ள யதார்த்தத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தின் குக்கிராமத்திலிருந்து பல சிறுவர்களும் இந்த ஆசையில் சென்னைக்கு வருகிறார்கள். சினிமா எல்லா தேசங்களிலும் காலூன்றி சமூக விழுமியத்தையும் கலாச்சாரத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் சினிமாவின் விதை முளைத்து வேர்விட்டதிலிருந்து, இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது வரையிலான நீண்ட கால வரலாற்றினை உற்று கவனித்து ஆராயும் அதே வேலையில், சினிமா சார்ந்த மத்தி\ய மற்றும் மாநில அரசுகளின் கல்வி சார்ந்த நிறுவனங்கள், திரைப்படக் கல்லூரிகள் – நீண்ட நெடிய நூற்றாண்டு கால சினிமா  வரலாற்றில் எதுபோன்ற பங்கினை ஆற்றியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.

மாநில அரசின் பொதுத்தேர்வு நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஒரு பள்ளியில் 50% மாணவர்கள் 
மட்டும் தான் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். மீடியாக்காரர்கள் சும்மா இருப்பார்களா? பெற்றவர்களும் வாய் மூடிக்கொண்டு மௌனிப்பார்களா? இதே அளவுகோளில் சினிமா சார்ந்த பள்ளிகளை நூல் வைத்து அளக்க முடியாது தான். என்றாலும் அரிய துறை என்பதால் தான் பல கோடிகளை வாரி வழங்கி – ஆர்வம் இருக்கும் மாணவர்களின் கலையார்வத்தை வளர்த்தெடுக்க – அரசு திரைப்படக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அப்படியிருக்கையில் “அந்த அரசுக் கல்லூரி - மாணவர்களின் திறனை உண்மையிலேயே வளர்தெடுக்கிறதா?” என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டி இருக்கிறது. 

இந்தியாவிலேயே முதன்முதலில் துவங்கப்பட்ட திரைப்படக் கல்லூரிகளில் – சென்னை திரைப்படக் கல்லூரியும் ஒன்று என தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். “தொழின்முறையாக பயன்படுத்தப்படும் உயர்தர கேமரா முதல், எடிட்டிங் டெஸ்க், ஏசி ஷூட்டிங் ப்ளோர், கிரேன், டிராலி, சப்தத்தை பதிவு செய்யும் உயர்தர ஒலிப்பதிவுக் கருவிகள், இன்னும் இன்னும் எத்தனையோ” என சகல வசதிகளும் சென்னை திரைப்படக் கல்லூரியில் இருக்கின்றன. கேமராவின் விலை சில கோடிகள் மதிப்பு வாய்ந்தவை. “இயக்குதல், ஒளிப்பதிவு, ஒலிவடிவமைப்பு, படத்தொகுப்பு, பதப்படுத்துதல்” என ஏறக்குறைய ஐந்து பிரிவுகள் இந்தக் கல்லூரியில் இருக்கின்றது. ஒவ்வொரு பிரிவிலும் ஏறக்குறைய 14 நபர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆக, பதினாலு தனி குழுக்கள் ஒரு டீமாக பிரிக்கப்படுகிறார்கள். இந்தக் குழுக்கள் இறுதியாண்டில் செய்முறைத் தேர்வாக ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். பன்னிரண்டு பேரில் ஏழு நபர்கள் தான் தன்னுடைய குறும்பட செய்முறையை நிறைவு செய்கிறார்கள். மற்றவர்கள் என்ன ஆகிறார்கள் என்றே தெரியவில்லை.

இன்னொரு விஷயம் சார்ந்த ஐயமும் எனக்கிருக்கிறது. “தரமணி திரைக்கல்லூரி ஊழியர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?” என்று தெரியவில்லை. போலவே காலியாக உள்ள இடங்களுக்கும் ஆட்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்  மர்மமாகவே உள்ளது. "இந்தக் கல்லூரியில் யார் யார் வேலை செய்கிறார்கள்? அவர்களுடைய தகுதி என்ன?" போன்ற எந்தத் தகவல்களும் கூட இணையத்தில் இல்லை. ("Junior Sound Assistant" - என்ற போஸ்டிங்கிற்கு ஒரு வேக்கன்சி இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். எம்ப்லாய்மென்ட் ஆபீசில் பதிவு செய்திருந்தால் தான் இந்த வேலை கிடைக்கும். இந்த கலூரியில் படித்த மாணவர்களே கூட வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் அரசாங்க வேலையின் பின்னணி அரசியல் உலகம் அறிந்த ஒன்று என்பதையும் மறுப்பதற்கில்லை.)

சமீபத்திய ஒருநாளில் திரைக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். இயக்குனர் பிரிவில் படிக்கும் மாணவர் ஒருவர் பகிர்ந்த விஷயம் திகிலளிப்பதாக இருந்தது. இயக்குனர் பிரிவில் துறைத் தலைவராக இருப்பவர் TNPSC தேர்வெழுதி, அரசாங்க ஊழியராக வந்தவராம். அவர் தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் படித்தவராக இருப்பார் எனில் பரவாயில்லை. சினிமா சார்ந்து ஆராய்ச்சி செய்யும் மாணவராக இருந்தாள் கூடப் பரவாயில்லை.  அப்படியில்லாமல் கணக்குப் பதிவியலோ அல்லது உயிரியலோ படித்து, அரசுத் தேர்வெழுதி இந்த வேலைக்கு வந்திருப்பார் எனில் மாணவர்களின் நிலையை நினைத்தால் சங்கடமாகத் தான் இருக்கிறது. (‘ஆந்திரா, மலையாளம், தமிழ்’ ஆகிய மூன்று மொழி மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்வெழுதலாம்.)

“சிலபஸ்ல ஸ்க்ரீன் ப்ளே, வசனம், கதை உருவாக்கம் எல்லாம் வருமே” என்றேன் அவரிடம்.

“ஆமா... நாங்க அப்பப்ப எழுதுவோமே...” என்றார்.

“யாராச்சும் எழுத்தளரை உங்களுடன் விவாதிக்க கல்லூரி நிர்வாகம் அழைத்துக் கொண்டு வருமா?” என்றேன்.

“இல்லியே... அப்படி எல்லாம் நாங்க யாரையும் உள்ள விட மாட்டோம்.” என்றார்.

“சரி... பைனல் இயர் குறும்படம் எடுக்கணும்னா என்ன ப்ரோசிஜர்?” என்றேன்.

“இதுதான் கதைன்னு எழுதி... எல்லா டிபார்மென்ட் கிட்டயும் பர்மிஷன் வாங்கணும்... அவ்வளோதான்...” என்றார்.

திரைக்கல்லூரியின் பழைய ஸ்டுடியோ தளங்கள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப் பட்டு மென்பொருள் துறை நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. டைடல் பார்க், ராமானுஜம் டெக் போன்ற கட்டிடங்கலெல்லாம் அதற்க்கு உதாரணம். சமீபத்தில் கூட ஜப்பானிஸ் கார்டன் சுத்தமாக இடிக்கப்பட்டு சமதளமாக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. உண்மையிலேயே இது நல்ல கல்விக்கூடம் தானா? இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த இஸ்ட்டிடியூட் இருக்கும் இடமே கூட அடையாலமற்றுப் போகலாம். தொழில் நுட்ப பூங்காவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக கல்லூரியின் இடங்கள் தாரை வார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த முதல் இங்கு படித்த பெருந்தலைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கல்லூரியின் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள சுமார் இத்தனை கிலோ மீட்டருக்குள் தான் படப்பிடிப்பும் நடத்த வேண்டும் என்ற ஏராளமான கட்டுப்பாடுகள் கூட மாணவர்களுக்கு இருக்கின்றன. இதுபோன்ற யதார்த்த சிக்கல்களை மனதில் இருத்தித் தான் மாணவர்களும் கதையைத் தேர்வு செய்து எழுதவேண்டி இருக்கின்றது.

2009 –ல் கல்லூரியில் நுழைந்து 2012 -ல் வெளிவரும் 14 டீம் மாணவர்களும், 14 குறும்படங்களைக் கொடுத்திருக்க வேண்டும் இல்லையா? அவ்வளவு கூட வேண்டாம். 10 குறும்படங்கள் என்ற அளவில் வெளி வந்திருந்தால் கூட ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால், இதுவரை ஐந்து குறும்படங்கள் தான் வெளிவந்திருக்கின்றன. கோவா உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதால் தான் அதுவும் தெரிய வருகிறது. மற்றவர்களுடைய வேலைகள் பாதியில் நிற்கின்றன என்பது துருதுஷ்டம். ஏன் இந்த நிலைமை? தொடர்ந்த பல வருடங்களிலும் இதுதான் நிலைமை. பலகோடி ரூபாய் மதிப்பிலான தொழில்நுட்ப உபகரணங்கள் இருந்தும் – அதனை நேர்த்தியாக பயன்படுத்தி திறமையை வெளிக் கொணர்வதில் மாணவர்கள் ஏன் சுணக்கம் காட்டுகிறார்கள்?

அரசாங்கம் சிலபல லட்சங்களை ஒவ்வொரு வருடமும் இந்த மாணவர்கள் குறும்படம் எடுத்து, அதன் மூலம் சினிமா பழக – மானியம் வழங்குகிறது. (ஏறக்குறைய 15 லட்ச ரூபாய் என்ற ஆதாரமில்லாத தகவல் கிடைத்திருக்கிறது.) ஆர்வம் இருந்து சினிமா படிக்க வரும் மாணவர்கள் – நேர்முகத் தேர்வு வைத்துத் தானே சேர்க்கப்படுகிறார்கள். இருந்தும் அவர்கள் பாதியில் விலகிக் கொள்வது ஏன்? சென்ற ஆண்டு மாணவர்களின் ஐந்து குறும்படங்கள் மட்டுமே கோவா உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருக்கின்றன. மற்ற மாணவர்களின் குறும்படங்கள் என்ன ஆனது?

மத்திய அரசின் பிராட்காஸ்டிங் அமைச்சகப் பிரிவின் கீழ் வரும் புனே திரைப்படக் கல்லூரியில் பட்டதாரிகள் மட்டுமே எந்த ஒரு பிரிவிலும் சேர்ந்து படிக்க முடியும். அங்கு படிப்பவர்களுக்கும் BFT சான்றிதழ் தான் வழங்குகிறார்கள். கோடை கால சிறப்பு வகுப்பாக “சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும்?” என்ற டிப்ளமோ கோர்ஸ் மட்டுமே அங்கிருக்கிறது. இந்தக் குறுகிய கால படிப்பிற்கு மட்டுமே அவர்கள் டிப்ளோமா சர்டிபிகேட் வழங்குகிறார்கள். நண்பர் கரு அண்ணாமலை இந்த வருடம் அதில் சேர்ந்து படிப்பதற்காகச் சென்றிருக்கிறார். ஆனால் தமிழக அரசின் பிராட்காஸ்டிங் அமைச்சகப் பிரிவின் கீழ் வரும் சென்னை எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் கூட சேர்ந்து படிக்கலாம். ஆனால் எல்லா மாணவர்களுக்கும் டிப்ளமோ சான்றிதழ் மட்டுமே வழங்குவார்கள். இயக்குனர் பிரிவு மாணவர்கள் மட்டும் ஏதேனும் கல்லூரியில் படித்த இளநிலைப் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஆனால், இயக்குனர் பிரிவு மாணவர்களுக்கும் டிப்ளமோ சான்றிதழ் தான் வழங்குகிறார்கள். இதென்ன லாஜிக் என்றே தெரியவில்லை. +2 முடித்த மாணவர்கள் – ‘இலக்கியம், ஓவியம்’ என்று கலை சார்ந்து படிக்கும் பொழுது BA, BFA போன்ற இளநிலைப் பட்டங்களைக் கொடுக்கிறார்கள். இவர்கள் மேலே ஏதாவது படிக்க நினைத்தாலும் நேரடியாக முதுநிலை பட்டப்படிப்பு படிக்கலாம். ஆனால் சினிமா பயிலும் மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் மட்டுமே கொடுக்கிறார்கள். ஆகவே பலரும் படிப்பைத் தொடராமல் பாதியில் விட்டுவிடுகின்றனர். வேலைக்கான நேர்முகத்திற்குச் செல்லும் இடத்தில் கூட, இவர்கள் விஸ்காம் படித்த பட்டதாரி மாணவர்களுடன் போட்டி போட வேண்டியிருக்கிறது. வேலைக்கான உத்தரவாதம் இல்லாத படிப்பு என்பதால், இளநிலைப் பட்டத்தை வழங்கினால் ஏதேனும் மேற்படிப்பு படித்தாவது தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வார்கள்.

இந்த லட்சணத்தில் “அனிமேஷன் & கிராபிக்ஸ்” சார்ந்த மூன்றாண்டு டிப்ளோமா படிப்பை இந்தாண்டு முதல் துவங்க இருக்கிறார்களாம். கடவுளே...!

இவ்வளவு ஓட்டைகள் ஓடிசல்கள் இருக்கும் மேம்போக்கான ஒரு ஸ்தாபனத்தில் “சினிமா படிக்க சேரப்போறேண்ணா...?” என்று சொல்லும் ஒருவனிடம் என்னத்தைச் சொல்ல? பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

எம்ஜிஆர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் இந்நாள் & முன் நாள் மாணவர்களே. சினிமா ஆர்வலர்களே. உங்களின் மௌனத்தைக் கலைத்து ஓரிரு வார்த்தைகளை எனக்காகச் சொல்லுங்களேன்.

http://www.thehindubusinessline.in/2002/08/03/stories/2002080301931700.htm
http://www.hindu.com/2009/07/05/stories/2009070558850200.htm

Sunday, June 23, 2013

தோழர் மணிவண்ணன் – நினைவேந்தல்

மனதிற்கு நெருக்கமான, ஒத்த அலைவரிசையுள்ள வாசக நண்பர்கள் ஒன்று சேர்ந்து “கே.கே.நகர் டீக்கடை சிந்தனையாளர்கள் பேரவை” என்ற பெயரில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் “நீயா? நானா?” என்று மல்யுத்தம் செய்து கொள்ளலாம் என யோசனை செய்திருந்தார்கள். கவிதாபாரதி, பாஸ்கர் சக்தி, மணிவண்ணன், கரு. பழனியப்பன் போன்றோர் இதற்கான முயற்சிகளை எடுத்தனர். டிஸ்கவரி வேடியப்பன் இதற்கான இடத்தைத் தந்து உதவினர்.

முதல் கூட்டத்திற்கு அறிமுகமற்றவனாகத் தான் சென்றிருந்தேன். சிறப்பு விருந்தினராக இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர் & புத்தகப் பிரியர் மணிவண்ணன் தனது நீண்டகால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுவதற்காக அழைக்கப் பட்டிருந்தார். இவரை காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். ஒருசில படங்களை இயக்கிய ஆளுமையும் தான். போலவே தமிழீழம் சார்ந்த அவருடைய நிலைப்பாடு பற்றியும் ஓரளவிற்கு தெரியும். 



தாங்கித் தாங்கி நடந்தபடிதான் கூட்டத்திற்கு வந்தார். அவருடைய இயல்பான நடையே அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டேன். தோழமையுடனும் தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்புடனும் தெரிந்தவர்களிடம் கை குலுக்கினார். ஓர் ஓரத்தில் அமர்ந்தவாறு இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் சந்திப்பும் துவங்கியது. மணிவண்ணனின் பேச்சு கூட மொன மொனவென்றிருந்தது. “இவர எப்படி பேச வச்சி நடிக்க வெக்கிறாங்க? ஒரு வார்த்தையும் ஒழுங்கா காதுல கேக்கலையே...! தெளிவில்லாத உச்சரிப்பா வேற இருக்கே...?” என்று நினைத்துக் கொண்டேன்.

உண்மை என்னவெனில் – சந்திப்பின் சில வாரங்களுக்கு முன்பு எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி அதற்கான தொடர் சிகிச்சையில் மணிவண்ணன் இருந்திருக்கிறார். டீக் கடை சிந்தனையாள நண்பர்கள் பேசுவதற்கு அழைத்த போது உடல் நலம் சரியில்லாததைக் காரணம் காட்டி மறுப்பு சொல்லி வருவதைத் தவிர்த்திருக்கலாம். என்றாலும் நட்பு பாராட்டி வந்திருந்தார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நண்பர்களுடன் தனது கருத்துக்களை உற்சாகத்துடன் பரிமாரிக்கொண்டார். அதன் பிறகு நீண்ட நாட்களாக கூடாமளிருந்த சிந்தனையாளர்கள் பேரவை தோழர் மணிவண்ணனின் மரணத்தை முன்னிட்டு – நினைவேந்தல் நிகழ்வாக அமைந்துவிட்டது யாரும் எதிர் பார்க்காத ஒன்று. இயக்குனர்/ நடிகர் மனோபாலா, ஓவியர் டிராஸ்கி மருது, இயக்குனர் / நடிகர் பொன்வண்ணன், நிழல் திருநாவுக்கரசு, கரு பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு – மணிவண்ணன் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். 


ஒரு ப்ரடக்ஷன் கம்பெனியில் சாதாரண ஆபீஸ் பாயாக இருந்த மணிவண்ணன், தனது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தாலும் நட்பினாலும் மனோபாலாவால் பாரதிராஜாவிற்கு உதவி இயக்குனராக அறிமுக படுத்தப்படுகிறார். பின்னர் பல்வேறு சூழலில் 40 திரைப்படங்களுக்கும் மேல் இருவரும் சேர்ந்து வேலை செய்ததை மனோபாலா அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்துகொண்டார். நிழல்கள் தோல்வி முதல், அதன் தொடர்ச்சியாக அலைகள் ஓய்வதில்லை படத்தின் பிரம்மாண்ட வெற்றி என பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். தனது நீண்டகால நண்பருடனான அனுபவங்களை சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தவர், இருக்கைக்குத் திரும்பும் சமயம் கண்கள் கலங்கி நெகிழ்ந்துவிட்டார். 

அடுத்ததாக பேசிய ‘நிழல்’ திருநாவுக்கரசு “போர் முரசு” என்ற சமிக்ஞையில் மணிவன்னனுடன் சேர்ந்து ஆரம்பத்தில் வேலை செய்தது குறித்தும், அந்த நட்பின் பழக்கத்தில் தான் பரிந்துரைக்கும் ஏராளமான சிறு குழுக்களுக்கும், இயக்கங்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் மணிவண்ணன் தொடர்ந்து உதவி செய்து வந்ததைக் குறித்தும், கடைசி வரை அவருடைய வாசிப்பு சார்ந்த வேட்கை குறித்தும் பலவாறு பகிர்ந்துகொடார்.

இயக்குனர் பொன்வண்ணன் முற்றிலும் வேறொரு கோணத்தில், விமர்சன நோக்கில் தன்னுடைய கருத்துக்களை முன் வைத்தார். அப்போதைக்கு அப்போது முடிக்க வேண்டிய வேலைகளை தள்ளிப்போடுதல், உடல்சார்ந்த அக்கறையின்மை, தாமதமாக முடிவெடுத்தல் போன்ற சராசரி வாழ்வியல் சிக்கல்கள் சார்ந்த மணிவண்ணனின் தன்மைகள் குறித்து பேசினார். மணிவண்ணன் – முரண்பாடுகளின் உச்சம். கொள்கையளவில் பொதுவுடைமைவாதியாக இருந்தவர் “புதிய கார், புதிய கைக்கடிகாரம்” என சந்தையில் புதிதாக அறிமுகமாகும் பொருட்களை வாங்கும் வினோத பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால் உடைக்காக அதிகம் செலவு செய்யமாட்டார். சிறிய உணவகத்தில் தான் சாப்பிடுவார். ஒரு முனையில் அதிக விளைகொடுத்து பொருட்களை வாங்கும் நுகர்வு மனப்பான்மையில் திளைப்பவராகவும், மற்றொரு முனையில் எளிய மக்களுடன் பழகும் ஆளாகவும் அவர் இருந்திருக்கிறார். என்றாலும் பல்வேறு சூழலில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து இனி மீள்வதற்கு வழியில்லை என்ற நிலையிலும் காலத்துடன் சரிக்குச் சமமாக நின்று போராடியவர் மணிவண்ணன். காலத்தை எதிர்த்து போராடுபவனையே காலம் நினைவில் வைத்துகொள்ளும். இவர் காலத்தால் நினைவுகூறப்படுவார்.

அடுத்து வந்த கரு பழனியப்பன் - பொன்வண்ணன் பேசியதில் உணர்ந்த மாற்றுக் கருத்தை முன்வைத்து பேச்சைத் துவக்கினார். “நமது பொதுப்புத்தியில் கம்யூனிஸ்ட் என்பவன் கார் வச்சிக்கக் கூடாது, ஆடம்பரமா வாழக்கூடாது” என்ற புரிதல்கள் இருக்கின்றது. என்னால் கம்யூனிசத்தை அப்படிப் புரிந்துகொள்ள முடியவில்லை. கம்யூனிஸ் என்றால் ஏழையாகத் தான் இருக்க வேண்டுமா? “காரோ, கராண்டோ, கம்ப்யூட்டரோ” – இதெல்லாம் எல்லோருக்கும் கிடைக்கணும். பொதுவுடைமை என்பது அதுதானே. ஒரு தெளிவான கம்யூநிஸ்டாகத் தான் மணிவண்ணன் வாழ்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மேலும் மணிவண்ணனின் திரைப்படங்கள் குறித்தும், அவருடைய செழுமையான பங்களிப்பு குறித்தும், தனிப்பட்ட நட்பு குறித்தும் – தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஓவியர் டிராஸ்கி மருது – ‘மனோபாலா, மணிவண்ணன், நடிகர் சந்திரசேகர்’ போன்றவர்களது ஆரம்பகால அறைத்தோழர் என்பதால் பால்யம் குறித்த நினைவுகளையும், ஆரம்பகால வாழ்க்கைகளையும் நினைவு கூர்ந்தார். “நிழல்கள்” திரைப்படம் அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் தான் என்றார். அந்தப் படத்தில் வரும் ஓவியர் கதாப்பாத்திரம் கூட இவர்தான் என்றார். படத்தில் பயன்படுத்தப்பட்ட ஓவியங்கள் கூட அவர் வரைந்தது தான் என்றார். இடையில் நண்பர்களைப் பிரிந்து பணிநிமித்தமாக ஹைதராபாத் சென்றது, பின்னர் இங்கு வந்து நபர்களுடன் மீண்டும் இணைந்து கொண்டது என பல்வேறு தளங்களில் பேசினார்.

மணிவண்ணன் நடிகராக உச்சத்தில் இருந்த சமயம். ஒரு புதுப்பட தயாரிப்பாளர் தனது படத்தில் நடித்துத் தரும்படி அவரை அணுகினாராம். அவர் கேட்ட தேதியில் ஊட்டியில் நடிப்பதற்கான கமிட்மென்ட் ஏற்கனவே மணிவண்ணனுக்கு இருக்கின்றது. புதுப்பட ஷூட்டிங் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஏற்பாடாகியிருக்கிறது. “மணிவண்ணன் யோசித்துவிட்டு சரி நடிச்சி கொடுக்கறேன்” என்றாராம். ஏறக்குறைய தொடர்ந்து பத்து நாட்கள் இரவு 8 மணிக்கு விமானம் பிடித்து, இரண்டு மணிநேரத்தில் சென்னைக்கு வந்து படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு, அதிகாலையில் விமானத்தைப் பிடித்து ஊட்டிக்குச் சென்று அந்தப் படத்திலும் நடித்துக் கொடுத்தாராம். பயண டிக்கட் எல்லாம் கூட தனது சொந்த செலவிலேயே பார்த்துக் கொண்டாராம். இதுபற்றி தயாரிப்பாளர் விசாரித்ததற்கு பின்வருமாறு கூறி இருக்கிறார்:

“நீங்க கொடுக்கற சம்பளத்த மீறித் தான் டிக்கட் போட்டுக்குனு வந்து நடிச்சி கொடுக்கறேன். இது உங்களுக்கு முதல் படம். பணம் எப்படி செலவாகுதுன்னே தெரியாது. உங்க காச சினிமாவுல போட்டுட்டு லாஸ் பண்ணிட்டிங்கன்னா – மறுபடியும் சினிமா எடுக்க வரமாட்டிங்க. அதான் நானே வந்து நடிச்சி கொடுக்கறேன்” என்றாராம்.

“கே.கே.நகர் டீக்கடை சிந்தனையாளர்கள் பேரவை” நடத்திய முதல் கூட்டம் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. கல்மேல் கால்போட்டவாறு ஓர் ஓரத்தில் அமர்ந்து கொண்டு தோழர் மணிவண்ணன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பேசியதில் ஒரு சந்தேகம். ஆகவே “மிஸ்டர் மணி... ஒன் செகன்ட்...” என்றேன்.

“ம்... சொல்லுங்க தம்பி...” என்றார் அக்கறையுடன்.

“என்ன கேள்வி கேட்டேன்?” என்பது மறந்துவிட்டது. “என்ன பதில் சொன்னார்...!” என்பதும் மறந்துவிட்டது. என்றாலும் நான் கேட்ட கேள்வியை பொறுமையாக எதிர்கொண்டு, அதற்குத் தகுந்த விளக்கத்தை அளித்தார். நான் தொடர்ந்து பேசுவதற்கான வாய்ப்பையும் வழங்கினார். வயது வித்யாசம் பார்க்காமல் முனைப்புடன் உற்சாகமாக உரையாடக் கூடிய நண்பர். முதல் முறையாக அவரைச் சந்தித்த போது ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருக்காமல், நெருங்கிச் சென்று கைகுலுக்கி நிறையவே பேசி இருக்கலாம். இனி காலத்துடன் போராடித்தான் இதுபோன்ற ஜோடனையற்ற சக மனிதனைச் சந்திக்க வேண்டும்.

காலங்காலமாக காலமும் நல்ல மனிதர்களைச் சந்திக்க போராடிக்கொடுதானே இருக்கின்றது. நண்பர்களின் பகிர்வை கவனிக்கையில் மணிவண்ணனின் ஒரு முகம் நல்லதாகவே இருந்திருக்கிறது. காலம் போராடிச் சந்தித்த நல்ல மனிதர்களில் ஒருவராக தோழரை நினைவு கூர்வோம். அவருடைய நினைவைக் கொண்டாடுவோம்.

(பாஸ்கர் சக்தி துவக்கி வைக்க, கவிதாபாரதி தொகுத்து வழங்க, மணிவண்ணனின் இறுதி உரையுடன் – ஒரு நிமிட மௌன அஞ்சலியாக கூட்டம் நிறைவுபெற்றது. ஆகக்கூடி ஒரு நெகிழ்வான சந்திப்பாக அமைந்தது.)

Sunday, June 16, 2013

ஜெமோ - தினகரன் கவர் ஸ்டோரி

தினகரன் வெள்ளி மலரில் வரும் சிவாண்ணனின் (கே. என். சிவராமன் / பதிவுலகில் பைத்தியக்காரன்) எழுத்துக்களை முடிந்த மட்டும் தவறவிடாமல் படித்துவிடுவது வழக்கம். இந்தமுறை ஜெயமோகனைப் பற்றி “14 மலையாளப் படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதும் தமிழ் எழுத்தாளர்” என்ற கவர் ஸ்டோரி வெளியாகப் போகிறது என்பதால் ஆவலுடனும், பிரியத்துடனும் பக்கங்களைப் புரட்டினேன். உண்மையில் ஓர் எழுத்தாளனுக்கு இதுபோன்ற கௌரவம் அளிக்கப்படுவது சந்தோஷத்தையே அளிக்கின்றது. இந்தியர்களின், தமிழர்களின் அல்லது வட்டார ஆளுமைகளை – மொழி சார்ந்தும், இனம் சார்ந்தும் தொடர்புபடுத்தி தூபம் போடுவதே வெகுஜன இதழ்களின் தலையாய வேலை. அப்பொழுது தானே வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள். இந்த சூத்திரத்திலிருந்து தப்புவதற்கு “தினகரன் – வெள்ளி மலர்” மட்டும் விதிவிலக்கா என்ன?

2007 –ஆம் ஆண்டு Sify.com (தமிழ்) தீபாவளி மலரில் வெளியான மாலன் நாராயணின் “அசட்டுப் பெருமைக்கு ஓர் அளவு கிடையாதா?” என்ற கட்டுரைதான் ஞாபகத்திற்கு வந்தது. இந்தியர்களின் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் உளவியல் கூறினை இந்தக் கட்டுரையில் ஆதாரப் பூர்வமாக எழுதியிருப்பார்.

“அமெரிக்கா மாகாணத்திலோ, கியூபாவிலோ, சிங்கப்பூரிலோ, இங்கிலாந்திலோ” – இந்திய வம்சாவளியினர் யாரேனும் குறிப்பிடும்படியான அதிகாரத்திற்கு வந்தாலோ அல்லது அதற்க்கு நிகரான சாதனையை செய்தாலோ – இந்திய மீடியாக்கள் அவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு களியாட்டம் ஆடுவதின் அபத்தம் குறித்து அலசி இருப்பார்.

படிக்க: http://jannal.blogspot.in/2007/11/blog-post.html

அல்லா ரக்கா ரகுமான் ஆஸ்கார் விருது பெற்ற போது கூட எல்லா மீடியாக்களும் இதையே தான் செய்தன. ஒரு நிருபர் கமலஹாசனிடம் மைக்கை நீட்டி “ஏ. ஆர். ரகுமான் ஆஸ்கார் விருது பெற்றதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்கிறார்.

“நம்ம நாட்டுக்கு வந்து அவங்க எடுத்த ஆங்கிலப் படத்துல நம்ம ஆளு வேல செஞ்சதுக்காக (ரகுமானுக்கு) இந்த ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அதுவுமில்லாமல் ரகுமான் ஆஸ்கர் விருது கொடுத்து கௌரவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பிற்காக அதே ஆஸ்கர் விருது பெறுகிறார். நம்மாட்கள் ரசூல் பூக்குட்டியை பின்னுக்குத் தள்ளி ரகுமானை முன்னுக்கு இழுத்து செய்தியாக்கினார்கள். ஏனெனில் மீடியாக்களில் பிரபல ப்ராடக்ட்’கள் தானே ஜனரஞ்சகமாகப் பேசப்படும். (இவர்கள் இருவருக்கும் முன்பே சத்ய ஜித்ரே - ஏதோ ஒரு பிரிவின் கீழ் சிறப்பு ஆஸ்கர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.) ரசூல் பூக்குட்டி விருதுபெற்ற இருபது நிமிடங்கள் கழித்துத் தான் ரகுமான் விருது கொடுத்து கௌரவிக்கப்படுகிறார். அடிப்படையில் இசையமைப்பாளருக்குக் கீழ் பணிபுரியும் ஓர் ஊழியனாகத் தான் ஒலிகலப்பு செய்யும் தொழில்நுட்பக் கலைஞனை நம்மவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளனை விட பலமடங்கு முக்கியத்துவம் வாய்ந்தவன் ஒலி வடிவமைப்பாளன். ஒலி வல்லுனர்கள் ஃபைனல் மிக்ஸ் செய்யாமல் எந்தத் திரைப்படமும் வெளியில் வர சாத்தியமே இல்லை. (ஃபிலிம் இன்ஸ்டிடியூட் எதிலும் இசைக்கான ஒரு தனிப் பிரிவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை).

பார்க்க: http://www.cinemablend.com/new/Oscar-Presentation-Order-Revealed-12100.html

ஆகவே ஜெயமோகனின் இந்த கவர ஸ்டோரியையும் ஜஸ்ட் லைக் தட் என்ற ரீதியில் கடந்து சென்றிருக்கலாம். என்றாலும் சில விஷயங்களைப் பொதுவில் விவாதத்திற்கு வைத்தால் தான் என்ன? என்று தோன்றியது. ஆகவே இதனை எழுதுகிறேன். 



கேணி சந்திப்பில் தான் ஜெயமோகனை முதன்முறையாக நேரில் சந்தித்தேன். சந்திப்பின் துவக்கத்திலேயே அழுத்தமாக ஒரு விஷயத்தை முன் வைத்தார். “தமிழ், தமிழ் எழுத்தாளர், தமிழினம்” என்ற அடையாளங்களுடன் தான் இங்கு பேச வந்திருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால், “நீங்கள் எல்லோரும் என்னை மன்னிக்கணும்...!?” என்ற தோரணையுடன் தான் பேசினார். முதல் வரிசையில் கே.என். சிவராமனும் அமர்ந்திருந்தார். அவர் சொல்லியதிலும் உண்மை இருக்கிறது தானே! ஜெமோ ஆங்கிலத்தில் சில கட்டுரைகள் எழுதி இருக்கிறார். மலையாளத்திலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார். மலையாளம் அவருடைய சொந்த மொழியும் கூட. தமிழில் சொல்லவே வேண்டாம். “புத்தகங்கள், இணையம், சினிமா” என்று எழுதித் தள்ளுகிறார். அப்படியிருக்க ஜெமோ-வை “தமிழ் எழுத்தாளர்” என்ற அடைப்புக் குறிக்குள் அடக்குவது கொஞ்சம் நெருடலாகவே இருக்கின்றது. இதனை மீறித்தான் கவர ஸ்டோரி சொல்ல வரும் விஷயத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது.



மேலே கொடுக்கப்பட்டுள்ள பல தமிழ் படங்களிலும் வசனம் எழுதியவர், வர்த்தக ரீதியில் தோல்விகண்ட ‘கடல்’ படத்தின் திரைக்கதையை மணிரத்னமும் ஜெயமோகனும் சேர்ந்துதான் எழுதியிருக்கிறார்கள். மெட்ராஸ் டாக்கீஸின் ஆதாரப்பூர்வ தகவல்கள் அதைத்தான் தெரிவிக்கின்றன. (வேண்டுமெனில் டைட்டில் கார்டை பார்த்துக்கொள்ளுங்கள்.) இங்கு தேசிய விருது பெற்ற படமான “நான் கடவுள்” திரைப்படத்தை நினைவு கூற வேண்டியதும் அவசியம். இந்தப் படத்தின் வசனங்கள் முழுவதையும் ஜெயமோகன் மட்டுமே எழுதவில்லை. ஹிந்தி வசனங்களை யார் எழுதினார்கள் என்பது தெரியாது. ஆனால் மலையாள வசனங்கள் குறைவாகவே வந்தாலும், அவற்றை எழுதியது இசை விமர்சகர் ஷாஜி என்பது ஊரறிந்த விஷயம். “நீர்பறவை” திரைப்படத்தில் கூட வசனப் பங்களிப்பில் சீனு ராமசாமியின் பெயரையும் சேர்த்தே பார்த்ததாக ஞாபகம். 

ஊர் கூடித் தேரிழுப்பது போன்ற வேலை தான் சினிமா. மேலும் ‘சினிமா மொழி வேறு, இலக்கிய மொழி வேறு’ என்பது சினிமா பரிச்சியம் உள்ள எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இரண்டும் வேறு வேறு ஊடகங்கள். ஓர் எழுத்தாளனுக்கு 10% வேலைதான் சினிமாவில் இருக்கும். குறைந்த சதவீதம் தானே என்று குறைவாக மதிப்பிட முடியாது என்பதும் உண்மையே. இப்படிப்பட்ட பங்களிப்பைத் தான் ஜெயமோகன் சினிமாவில் செய்துகொண்டு வருகிறார். எல்லோரையும் போலவே ‘சில தோல்விகள், சில வெற்றிகள், சில தேசிய விருதுகள்’ என வண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்டவர் மலையாள சினிமாவில் கால் தடம் பதிப்பதைத் தான் வெள்ளி மலரில் சிவாண்ணன் சிலாகித்து எழுதியிருக்கிறார். அதுவும் 14 திரைப்படங்களுக்கு எழுதுகிறார் என்பது தான் விசேஷக் காரணம். இந்தப் பட்டியலில் அடங்காத 4 தமிழ்த் திரைப்படங்கள் வேறு இருக்கின்றது. மலையாளத்தில் கட்டுரை எழுதும் ஒருவர், மலையாளப் படங்களுக்கு வசனம் எழுதுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது?(கன்னடத்தில் ஒரு வார்த்தை கூடத் தெரியாமல், கன்னட மெகா சீரியலுக்கு பா. ராகவன் தமிழில் வசனம் எழுதுகிறார். அதனை அவர்கள் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து கொள்கிறார்கள். பா ராகவனை வேண்டுமெனில் தமிழ் எழுத்தாளர் என்று முத்திரை குத்தலாம். தமிழைத் தவிர வேறந்த மொழியிலும் அவர் எழுதுவதில்லை.)

ஒரு படத்தின் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டால், அதன் பிறகு இயக்குனருக்கு க்ரியேட்டிவாக எல்லா வேலையும் முடிந்து விடுகிறது. அதன்பிறகு கிரியேட்டிவான மேஸ்திரியாகத் தான் அவர் இயங்க வேண்டி இருக்கும். 14 மலையாளப் பட இயக்குனர்களும் முழு ஸ்கிரிப்ட் எழுதும் பொறுப்பை ஜெயமோகனிடம் விட்டுவிட்டால் – அவர்களுடைய பங்குதான் அதில் என்ன? ஓர் இயக்குனரோ அல்லது இரண்டு இயக்குனரோ இது போன்று வேலை செய்தால் பரவாயில்லை. ஒட்டுமொத்த சினிமா சமூகமே இதுபோன்று இயங்குவது மலையாள சினிமா கலைஞர்களின் கற்பனை வறட்சி மற்றும் அடிப்படை உழைப்பு சார்ந்த சந்தேகங்களை எழுப்புகிறது.

அய்யம் புரிபட ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் எனில், எப்பொழுதும் போலத் தான் ஜெயமோகன் சினிமாவில் வேலை செய்யப் போகிறார். ஆனால் மீடியாவிர்க்கு ஏதேனும் விஷயம் வேண்டுமே. அவர்களுக்குக் கிடைத்த அவலாக ஜெமோ பயன்பட்டிருக்கிறார். மீடியாவிலிருந்து வந்திருப்பவர்களிடம் பேசக் கிடைத்த வாய்ப்பை ஜெமொவும் சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார். 


/--துண்டு துண்டான காட்சிகளை இணைத்து திரைக்கதையா மாத்துறாங்க...--/

தமிழ் சினிமாவில் காலங்காலமாக இருக்கும் ஸ்டோரி டிஸ்கஷன் பற்றியும் ஜெமோ தன்னுடைய பாணியில் நக்கலடித்திருக்கிறார். தமிழின் எல்லா விஷயங்களையும் கொஞ்சம் கூட யாசனையின்றி ஜெமோவால் எப்படித்தான் பழித்துப் பேச முடிகிறதோ தெரியவில்லை. இதுவரை எடுக்கப்பட்ட மலையாளப் படங்கள் அத்தனையும் ஸ்டோரி டிஸ்கஷன் இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள் தானா? காட்சிகளைத் துண்டு துண்டாக இணைக்கும் விஷயத்தைப் பற்றியும் சொல்லுகிறார். சினிமா என்பதே காட்சிகளை துண்டு துண்டாக வெட்டி ஓட்டுவது தானே. அதுவுமில்லாமல் துண்டாடப்பட்ட நிகழ்வுகளின் சுவாரஸ்யத் தொகுப்புகள் தானே ஒய் சினிமாவே...! அந்த ப்ராசசிங்கிற்கு ஏற்றால் போலத் தானே திரைக்கதை யோசிக்க வேண்டும். யாருக்கும் காணக் கிடைக்காத ஹாலிவுட் மெதேட் ஆக்டிங்கையும், இதர நுட்பமான விஷயங்களையும் அவதானிக்கும் சூழல் கிடைத்த ஜெமோவிற்கு – ஹாலிவுட்டிலும் இது போன்ற டிஸ்கஷன் இருக்கிறது என்று தெரியாத. உலகிலுள்ள எல்லா மொழி சினிமாவிலும் இந்த முறை இருப்பது தெரியாதா? அதெப்படி சுலபமாக அந்த காலத்து தயாரிப்பு நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பிட்டுப் பேசுகிறார் என்று தெரியவில்லை.

கேரளா கஃபே என்ற படம் பத்து சிறுகதைகளை எடுத்துக் கொண்டு, அதனை பத்து இயக்குனர்கள் – ஒரு ஹோட்டலை மையமாக வைத்து மலையாலத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மம்முட்டி போன்ற பெரிய பெரிய நடிகர்கள் கூட அதில் நடித்திருந்தனர். இதோ ஹிந்தியில் கூட உலகப் புகழ்பெற்ற திரைப்படக்காரரான அனுராக் காஷ்யப் ஒரு பரிசோதனை முயற்சியை செய்கிறார். பல இயக்குனர்கள் பிட்டு பிட்டாக ஒரு படத்தினை எடுக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு மாதகாலமாக அதன் டிஸ்கஷன் சென்றுகொண்டிருக்கிறது. ஆரண்யகாண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜாவும் அதில் ஒருவர். (இது போன்ற முயற்சியில் இயங்கும் பலரும் கலைப்படம் மற்றும் கமர்ஷியல் படம் சார்ந்த ஆளுமைகள் தான்.)

ஒரு கான்செப்ட் எடுத்துக்கொண்டு அதனை பேசிப்பேசி திரைக்கதையாக மாற்றுவது இந்தியா முழுவதும் எடுக்கப்படும் சினிமாவில் இருக்கும் ஒரு விஷயம் தானே. அதெப்படி ஆதிகால தயாரிப்பு நிறுவனங்களில் கதை இலாகாவுடன் மட்டும் ஜெயமோகன் ஒப்பிடுகிறார். நம்ம ஊர் நாளைய இயக்குனர்களை நக்கலடிக்கும் இதுபோன்ற செலப்ப்ரிட்டி இயக்குனர்கள் தான் – மலையாளம் மற்றும் ஹிந்தியில் பின்பற்றப்படும் அதே விஷயங்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதையும் நுட்பமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது.  


சினிமா ஆரம்பத்தில் யாருடைய ஆதிக்கத்தில் இருந்தது என்பது வினோதம் நிறைந்த வரலாறு. கேமரா கண்டு பிடிக்கப்பட்ட புதிதில் – கேமராவை இயக்கத் தெரிந்தவன் (Camera Man) தான் இன்டிபென்டன்ட் ஃபிலிம் மேக்கர் போல சுற்றி வந்திருக்கிறான். செல்வந்தர்கள் தான் கேமராவை வாங்கிப் பயன்படுத்த முடியும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆகவே கேமராவைத் தூக்க ஓர் உதவியாளன் வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறான். பின்னர் அந்த உதவியாளன் கற்பனை நிறைந்தவனாக இருக்கப் போக, உதவியாளன் இயக்குனராக அவதாரம் எடுக்க – கேமரா மேன் அவன் சொல்லும் வேலையை செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறான். இந்திய சினிமாவின் ஆரம்பத்தில் கூட, பல ஆங்கில தொழிநுட்பக் கலைஞர்களும் இப்படித் தான் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். பணத்திற்காக அவர்களும் வந்து வேலை செய்து கொடுத்துவிட்டுச் சென்றது வரலாறு. (இங்கிருந்து வெளிநாடு சென்று தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு வந்து சினிமா எடுத்தவர்களும் உண்டு.)

பின்னர் இயக்குனர்கள் – தமது பெயருடன் “கதை, திரைக்கதை, வசனம், இசை” அத்தனை துறைகளையும் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் கலாச்சாரமும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலங்கள் உண்டு. (சொல்ல மறந்த கதை என்ற தங்கர் பச்சன் எடுத்த படத்தில் “கதை” என்று யாருடைய பெயரைப் போடுகிறார்கள். பரதேசி படத்தில் கதை என்ற பிரிவில் யாருடைய பெயரைப் போடுகிறார்கள்.) போலவே எழுத்தாளர்களும், கவிஞர்களும் தன்னுடைய பெயருக்குப் முன்னால் “கதை, திரைக்கதை, வசனம்” ஆகியவற்றை போட்டுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள் போல. அதற்கு ஜெயமோகனும் விதிவிலக்கா என்ன? எல்லோரும் மனிதர்கள் தானே!

ஏதோ தமிழன்னு சொல்லி யாராச்சும் ஒருத்தர் உலகத்தில் பிரபலமாக சுற்றி வந்தால் நமக்கெல்லாம் பெருமை தானே. ஏனெனில் நாமும் தமிழன் தானே....!

குறிப்பு: “நான் கடவுள்” – திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது ஊரறிந்த விஷயம். “கதை”-க்கான கிரெடிட்டில் ஜெமோ-வின் பெயரும் அதில் வருகிறது. அகோரிகளை தவறாக சித்தரித்த அந்தப் படத்திற்கு தேசிய விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள். தீவிர இந்துத்துவாவாக அறியப்படும் ஜெமோ – பாலாவுடன் கருத்தளவில் முட்டி மோதி வெளியில் வராமல் – கடைசி வரை எப்படி வேலை செய்தார்? எந்த விதத்தில் சமரசம் செய்துகொண்டார்.

ஓம்கார் சுவாமிகளின் நான் கடவுள் விமர்சனம்:

http://vediceye.blogspot.com/2009/02/blog-post_15.html

http://vediceye.blogspot.com/2009/02/blog-post_17.html

http://vediceye.blogspot.com/2009/02/blog-post_9628.html

http://vediceye.blogspot.com/2009/02/blog-post_19.html

(நண்பர்கள் அவசியம் இந்தச் சுட்டியை படிக்க வேண்டும். விவாதத்தை வேறு தளத்தில் நகர்ந்த அது உதவும்.)

 

Saturday, June 8, 2013

அருண் தமிழ் ஸ்டுடியோ - அறச்சீற்றம் 2

குட்டிப்புலி படத்தில் நடித்த சசிகுமாரை "தமிழ் சினிமாவின் ராமதாஸ்" என்றும், “ஆபத்தான மனிதர்” என்றும் தமிழ் ஸ்டுடியோ அருண் தனது முகநூல் நிலைத்தகவலில் பகிர்ந்திருந்தார். படைப்பை மீறி ஒரு நடிகரை/ தனி மனிதரை தாக்கும் விதத்தில் அருண் எழுதியிருந்ததால் – அதற்கு பதிலளிக்கும் விதத்தில் சினிமா ஆய்வாளர் ராஜன்குறை கிருஷ்ணன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அருண் தனது பக்கத்தில் தொடர்ந்து எழுதிவரும் நிலைத்தகவலின் முதிர்சியின்மை குறித்தும், போதாமை குறித்தும் காட்டமாகவே எழுதியிருந்தார். இரண்டு தரப்பிற்கும் ஆதரவாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

நடிகர் சசிக்குமாரைப் பற்றிய அருணின் அதே நிலைத்தகவலை – திரைத்துறைக் கலைஞர் மாமல்லன் கார்த்தியும் சுட்டிக்காட்டி ஒரு நிலைத்தகவல் எழுதியிருந்தார். இவர் பிரபல இலங்கை இயக்குனர் ”பிரசன்ன விதானகே”-விடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது AR ரகுமானின் நண்பர் பரத்பாலா இயக்கம் மரியான் படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆகவே கலைப்படம், கமர்ஷியல் படம் குறித்த நேரடியான தெளிவான அனுபவம் இவருக்கிருக்கின்றது. இப்படிப்பட்டவர் ஒரு நிலைத்தகவல் எழுதியிருக்கிறார் என்பதால் - ஆதரவாக சிலரும், மாற்றுக் கருத்தை சிலரும் முன்வைத்திருந்தனர். அதில் “சூது கவ்வும்” இயக்குனர் நளன் குமாரசாமியும் அடக்கம். நாளைய இயக்குனர் போட்டியில் கலந்து கொண்ட இன்னும் சிலரும் கூட மாமல்லனுடன் தமது கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். அதற்கு தமிழ் ஸ்டுடியோ அருண் பின்வருமாறு தமது கருத்தை பகிர்ந்திருந்தார்.


"சூது கவ்வும்" இயக்குனர் நளன் குமாரசாமி - மாமல்லன் கார்க்கிக்கு பின்வருமாறு பின்னூட்டம் இடுகிறார்:
அதற்குத் தான் "குழந்தைகளா இங்கே என்ன சத்தம்..." என்ற ரீதியில் அருண் பின்னூட்டம் இடுகிறார். மாற்றுக் கருத்தை முன் வைப்பதில் ஒரு முறை வேண்டாமா? இதென்ன அதிகாரத் தோரணை என்று எனக்குப் புரியவில்லை. இவர் என்னவோ அறிவாளி போலவும், மற்றவர்கள் எல்லோரும் பப்பா என்பது போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? பொதுவாகவே தன்னுடைய கருத்த்தில் குறை காண்பவர்களை அருணுக்குப் பிடிக்காது. "உங்களுக்கு என்னுடைய வளர்ச்சி பிடிக்கவில்லை! உங்களுக்கு மாற்று சினிமாவின் மீது அக்கறை இல்லை. என்மீது தனிமனித தாக்குதல் நடத்துகிறீர்கள்." என்பது போன்ற எதையாவது ஒன்றை திரும்பத் திரும்பச் சொல்லி இரக்கத்தைச் சம்பாதிப்பார். ஆதாரப் பூர்வமான தகவலை அடுக்கினால் - தன்னுடைய பக்கத்திற்கு வரமுடியாதபடி பிளாக் செய்துவிடுவார்.

கடந்த ஆண்டு கூடங்குளம் பிரச்சனையைக் கையில் வைத்துக்கொண்டு - எழுத்தாளர்களுக்கு சமூக அக்கறை இல்லையென வசைமாரி பொழிந்தார். அதனைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்து பதிவில் எழுதியிருந்தேன்: தமிழ் ஸ்டுடியோ – அறச்சீற்றம்

தவறான கருத்தைப் பகிர்ந்ததற்காக சிறு வருத்தத்தைக் கூட பதிவு செய்யவில்லை. மாறாக நிலைத்தகவலை அழித்துவிட்டு வேறு விஷயத்திற்குத் தாவினார். அங்கும் நெய்வேலி குறும்பட விருது குறித்த ஆதாரமற்ற தகவலைப் பகிர்ந்திருந்தார். அதற்கடுத்து நாளைய இயக்குனர்கள் மீது பாய்ந்தார். தொடர்ந்து அவருடன் உரையாடியதில், விமர்சித்ததில், அவருடைய முதிர்ச்சியற்ற பகிர்ந்தல்களையும் குறைகளையும் சுட்டிக் காட்டியதில் என்னை அவருடைய முகநூல் பக்கத்தைப் பார்க்காதபடிக்கு பிளாக் செய்துவிட்டார். நேற்றும் அப்படித்தான் நடந்தது. ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து மாமல்லன் கார்த்தியின் இழையில் தான் அவருடன் உரையாடத் தோன்றியது. பழைய விஷயங்களைச் சுட்டிக்காட்டி அவருடன் உரையாட நினைத்தேன். உடனே என்னை பிளாக் செய்துவிட்டார்.

ஆனால் ஆரோக்கியமான முகநூல் நிலைத்தகவல் விமர்சனம் குறித்தும், விவாதம் குறித்தும் பொதுவான கருத்தைப் பகிரும் பொழுது அருண் பின்வருமாறு அங்கலாய்க்கிறார்.

/-- "எல்லா வகையிலும் இங்கே(முகநூல்) உரையாடலுக்கான வெளி முடக்கப்பட்டிருக்கும் போது.." --/

இவர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். என் போன்று ஆதாரத்தை முன் வைத்து உரையாடுபவர்களை அருண் எந்த அடிப்படையில் தொடர்ந்து பிளாக் செய்து வருகிறார்? (போலியான அக்கவுன்ட் மூலமோ அல்லது நண்பர்களின் அக்கவுன்ட் மூலமோ அவரை அவதானிப்பது கம்ப சூத்திரமா என்ன?)

மாமல்லன் கார்த்திக்கு அருண் கொடுத்த பின்னூட்டம் மிக முக்கியமானது. அதன் ஸ்நாப் ஷாட் கீழே:
அருணின் பக்கத்திலேயே கட்டுரை குறித்த விவாதத்தை முன்னெடுக்க விஷயம் தெரிந்தவர்களுக்கு அவர் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் இல்லையா? விமர்சனம் செய்பவர்களுக்கு பின்னூட்டமிடும் வசதியில்லாமல் செய்வது. மீறிச் செய்தால் பிளாக் செய்யவேண்டியது. பின்னர் தான் ஒரு ஞாயவாதி என்று பிரகடனம் செய்ய வேண்டியது.

/-- இந்த நாயலய இயக்குனர் செல்லக் கண்மணிகளுக்கு நான் ஒருபோதும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒருநாடகத்தை எடுத்து, வெற்றிபெற்றவுடன், நளன் பேசும் பேச்சு, என்னை பிரம்மிக்க வைக்கிறது.--/

மேலும் நளன் குமாரசாமி போன்ற நாளைய இயக்குனர்களின் வெற்றியை ஜீரணித்துக்கொள்ள அருண் தயக்கம் காட்டுவது ஏன் என்று தான் புரியவில்லை. தமிழ் குறும்படம் சார்ந்து எடிட்டர் லெனினின் ஆரம்பகட்ட முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தரமணி அரசு திரைக்கல்லூரி ஆரம்பித்த நாட்களிலிருந்தே, 1970- களின் இறுதி ஆண்டுகளில் இருந்தே குறும்படம் எடுக்கப்படுகிறது. தமுஎகச & கலை இலக்கிய மன்றம் குறும்படங்களை திரையிட்டு மக்கள் மத்தியில் குறும்படம் சார்ந்த விழிப்பை ஏற்படுத்ஹ்டி இருக்கிறார்கள். 1990-களின் மத்தியில் நிழல் திருநாவுக்கரசு & பதியம் போன்ற நண்பர்கள் குறும்படம் சார்ந்த பட்டறைகளை நடத்தத் துவங்கிவிட்டனர். 2001-ஆம் ஆண்டு குறும்பட விழா நடத்தி பரிசுத்தொகை வழங்கும் முறையையும் அந்தந்த காலகட்டத்தில் இயங்கியவர்கள் செய்திருக்கிறார்கள். இதுவரை 29 மாவட்டங்களில் தான் நடத்திய குறும்படப் பயிற்சிப் பட்டறைகளில் ஏறக்குறைய 5000 நபர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என கடைசியாக பேசிய பொழுது நிழல் திருநாவுக்கரசு பகிர்ந்துகொண்டார். சென்னையில் இருப்பதால் திருநாவுக்கரசு பற்றி நான் பேசுகிறேன். வெளியில் தெரியாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எவ்வளவு பேர் இருப்பார்கள். அவர்களெல்லோரும் விளம்பரத்திற்காக இப்படியா அடுத்தவர்களை புழுதிவாரித் தூற்றுகிறார்கள்.

"நான் யாரையாவது தனிமனிதத் தாக்குதல் செய்கிறேனா?" - என்று அருண் தனது பின்னூட்டத்தில் கேட்கிறார். ஞாயமான கேள்விதான். "ஆபத்தான மனிதர்" என சசிக்குமாருக்கு பட்டம் கொடுத்ததை எந்த வகையில் சேர்க்க? "நாயலய இயக்குனர் செல்லக் கண்மணிகளுக்கு" என கலைஞர் டிவியில் குறும்படங்கள் சார்ந்து இயங்கும் நண்பர்களைப் பற்றிய பேசுவது எந்த வகையில் சேரும்? இதையெல்லாம் அருண் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

எதையாவது பேசுவதற்கு முன்பு "யாரிடம் பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? அவர்களின் தகுதி என்ன?" என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு பேச வேண்டும். எதையாவது உளறிக் கொட்டிவிட்டு, பின்னர் ஊர் கூட்டி ஒப்பாரி வைப்பது பொதுவில் இயங்குபவர்களுக்கு அழகில்லை.

கடைசியாக ஒன்று. "ஒரு நடிகரோ அல்லது இயக்குனரோ" - மாற்று சினிமா சார்ந்து பேசுகிறார் எனில் அதனை உச்சி முகர்ந்து ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மாற்று சினிமா சார்ந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவர் தன்னை "நடிகர்/ இயக்குனர்" என்று சொல்லிக்கொண்டால் - அது அபாயம் நிரம்பிய ஒன்று. அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ் ஸ்டுடியோ அருணின் முகநூல் பக்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில் உடனே சென்று பாருங்கள். நீங்கள் பிளாக் செய்யப்பட்டவரா பிரச்சனை இல்லை. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். "Actor / Director" - என்று தான் அவருடைய பக்கத்தில் போட்டிருக்கிறார். தானும் ஒரு நடிகனாக, இயக்குனராக பரிமளிக்க நினைத்து அது நிறைவேறாத பட்சத்தில் சமூக இணையதளங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதியை அருண் தவறாகப் பயன்படுத்துகிராரோ என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

(அவர் நடித்த படத்தையும், இயக்கிய படத்தையும் அல்லது இயக்கி நடித்த படத்தையும் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் கிடைத்தாள் எனக்கும் ஒரு பிரதி கொடுத்து உதவுங்கள்.)

விளம்பரத்தைத் தேடிக்கொள்ளாத அற்பணிப்பு உணர்வு தான் கலையை வளர்த்தெடுக்கும். மாற்று சினிமா சார்ந்து இயங்கும் எத்தனையோ தோழர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சப்தமின்றி அற்பணிப்புடன் தான் இயங்குகிறார்கள். நண்பர் அருணும் அதுபோல பரிமளிக்க வாழ்த்துக்கள்.


Thursday, May 23, 2013

கறயண்டா ஷாஜி கறயண்டா

சமீபத்தில் பின்னணிப் பாடகர் பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் இயற்கை எய்தினார். பல்வேறு மொழிகளின் கருப்பு வெள்ளை திரைப்பட கதாநாயகர்களின் ஆஸ்தானப் பாடகராக விளங்கியவர் என்பதால் அவரைப் பற்றிய துண்டுச் செய்திகளும், ஏராளமான துணுக்குகளும், ஒருசில நுனிப்புல் கட்டுரைகளும் என பலதையும் படிக்கக் கிடைத்தன. (பிழையான கட்டுரைகளையும் சேர்த்தே தான் இங்குக் குறிப்பிடுகிறேன்.) அவற்றில் மே மாதம் உயிர்மை இதழில் வெளியான ஷாஜியின் கட்டுரையை வாசித்துவிட்டு துக்கத்தில் அழுவதா அல்லது ஷாஜியின் அறியாமை நினைத்துச் சிரிப்பதா என்ற தீவிர குழப்பத்தில் ஆழ்ந்தேன். ஏற்கனவே ஷாஜி எழுதியுள்ள பி பி ஸ்ரீனிவாஸ் பற்றிய கட்டுரையையும் படித்ததுண்டு. அந்தக் கட்டுரையில் “உட்லண்ட்ஸ் டிரைவ் இன் எங்கிருந்தது? அந்த ஹோட்டலுக்கு P B ஸ்ரீனிவாஸ் எதில் வருவார்? அங்கு PBS என்ன செய்வார்? அவருடன் ஷாஜி கைகுலுக்கு பேசிய சம்பவங்கள்... மேலும் PBS என்ன பாடினார்? ஏது பாடினார்?” போன்ற தகவல்களை அடுக்கி, அவருடன் சமகாலத்தில் பின்னணி பாடியவர்களுடன் PBS -ன் குரல் வளத்தை ஒப்பிட்டு – முழுக் கட்டுரையையும் ஓரளவிற்கு ஒப்பேற்றி இருப்பார். அந்தக் கட்டுரை இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது.

பி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்

ஒரு பாடகராக பி பி ஸ்ரீனிவாஸ் என்ற கலைஞரை அணுகும் பொழுது, “அவர் பட்டுப் பீதாம்பர ஆடை அணிந்து கொண்டு, ஜொலிக்கும் தங்கக் கிரீடத்தை சூட்டிக் கொண்டு, சட்டை பாக்கெட்டில் எட்டு கலர் எழுதுகோல்களை வைத்துக் கொண்டு உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் வளம் வருவார்” போன்ற வியந்தோதும் விஷயங்களைத் தான் முதன்மையானதாக ஷாஜி கருதுகிறார் போல. வாசிப்பவர்களுக்கும் இந்த விஷயங்கள் தான் தேவைப்படுகின்றன என்று நினைத்துவிட்டார் போல.

ஷாஜியை இசை விமர்சகர் என எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஷாஜி எழுதும் பெரும்பாலான தமிழ் கட்டுரையகளில் இசைக் கலைஞர்களின் பிறப்பு இறப்பு பற்றிய குறிப்புகளும், அவர்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியும் வர்ணிக்கப்பட்டு – பின்னர் அந்த இசைக் கலைஞரின் பங்களிப்பை போகிறபோக்கில் தொட்டுக் கொண்டும் எழுதப்பட்ட கட்டுரைகளாகத் தான் இருந்திருக்கின்றன. அதற்கு மேலே கொடுத்துள்ள பிபிஎஸ் பற்றிய கட்டுரையையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். “அனுபவக் குறிப்பின் தன்மையில் எழுதப்படும் கட்டுரைகளை விமர்சனமாக எப்படி எடுத்துக் கொள்வது?” என்று புரியவில்லை. கேணி போன்ற சந்திப்புகளில் கூட பத்திரிகையாளர் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் ஷாஜியை இசை விமர்சகர் என்று தான் குறிப்பிடுகிறார்கள். இசையை அதன் தொழின்முறை நுட்பம் சார்ந்து அணுகாமல் – வெறுமனே வியாபார அனுகூலங்களையும் இயந்திரத் தொழில் நுட்பங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்படும் தட்டையான கட்டுரைகளை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு ஷாஜியை விமர்சகராக ஏற்றுக் கொள்வதில் சங்கடங்கள் நிறையவே இருக்கின்றது.

உயிர்மை இதழில் ஷாஜி சமீபத்தில் எழுதிய அஞ்சலிக் கட்டுரைக்கு வருவோம். ஒருவர் இறந்துவிட்டால் “ஐயையோ... அவர் உயிருடன் இருந்த பொழுது அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை... விருதுகள் கொடுத்து கௌரவிக்கவில்லை” என்பது சாதாரணமாக நடப்பதுதான். பாரதி, புதுமைப்பித்தன், கணித மேதை ராமானுஜர் போன்றவர்களை ஒவ்வொரு துறைக்கும் உதாரணமாகச் சொல்லலாம். போலவே பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் பற்றி ஷாஜியும் அங்கலாய்க்க வருவதும் அதுதான். ஆனால் அந்த அங்கலாய்ப்பையும் மீறி அவருடைய “சொல்லில் அடங்காத இசை” என்ற புத்தகம் சார்ந்த சுய விளம்பரம் தான் கட்டுரை முழுவதும் விரவிக் கிடக்கிறது. (கட்டுரையிலிருந்து ஒருசில பகுதிகள் கீழே)

/-- பிபிஎஸ் பற்றி “போன காலங்களின் இசை வசந்தம்” – என்னுடைய இணையதளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் அந்த ஒரே கட்டுரைதான் PBS பற்றி இதுவரைக்கும் வந்திருக்கும் ஒரே விரிவான பதிவு.

இதை நான் மகிழ்ச்சியுடன் சொல்லவில்லை. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள வெகு ஜன இசையின் தவிர்க்க முடியாத ஆளுமையான PBS -ஐ பற்றி இந்த மொழிகளின் வெகுஜன கலை சார்ந்த இதழ்கள், ஊடகங்கள் சொல்லும் படியாக எதுவுமே பதிவு செய்ய முடியவில்லை என்பது எவ்வளவு துர்பாக்கியமானது. ---/

இவருடைய கட்டுரை மட்டும் தான் இதுவரைக்கும் வந்திருக்கும் விரிவான கட்டுரை என்று ஷாஜி சொல்கிறார். எண்பதுகளின் இறுதிகளிலேயே PBS பாடுவதை நிறுத்திவிட்டார். (அல்லது அவருக்கான வாய்ப்பு அதற்குப் பின் மங்கி இருக்கிறது.) அதற்கு முன்பு வெளியான இதழ்களில் (கல்கி, விகடன், அமுதசுரபி) போன்ற இதழ்களில் அவரைப் பற்றிய விரிவான கட்டுரைகளும் நேர்முகங்களும் வந்திருக்க வாய்பிருக்கிறது இல்லையா?

அந்த காலத்து சிற்றிதழ்களை விட்டு விடுங்கள். அந்த காலத்து சிற்றிதழ்கள் சினிமாவைச் சீண்டவில்லை. ஆகவே அதைப் பற்றி எழுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்பதிலும் ஞாயம் இல்லை. அப்படியே எழுதி இருப்பதாக வைத்துக் கொண்டாலும் – 2009 ஆண்டுகள் வரை ஜெமோ தான் ஷாஜியின் ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துக் கொடுக்கிறார். அதன் பிறகு ஷாஜியே தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டுவிட்டார். இடைப்பட்ட இந்த குறைந்த ஆண்டுகளில் அவர் கடந்த ஐம்பதாண்டுகள் வெளியான இதழ்களை எல்லாம் ஆராயந்துவிட்டுத் தான் – “தன்னுடைய கட்டுரை மட்டும்” தான் PBS பற்றி வந்திருக்கும் ஒரே பதிவு என்று கிளைம் செய்கிறாரா?

/-- நான்கு மொழிகளிலும் முன்னணிப் பாடகராக இருந்த PBS –க்குத் தனது வாழ்நாளில் சொல்லிக்கொள்ளும் படியான எந்தவொரு விருதுமே கிடைக்கவில்லை. பட்டங்களும் பதவிகளும் அவரைத் தேடி வரவில்லை. நாம் அவரைப் பெரிதாகக் கொண்டாடவில்லை. (ஆங்கிலப் பத்திரிக்கை ஸ்ரீனிவாஸ் இறந்துவிட்டதாக வந்த செய்தியைக் குறிப்பிட்டு – அந்த இளம் பாடகர் தனது நண்பர் தான். அதே புத்தக வெளியீட்டில் அந்த இளம் பாடகர் தான் கஸல் கச்சேரி செய்தார் என்பதையும் ஷாஜி கட்டுரையில் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார்.) --/

இங்கும் கூட தன்னுடைய புத்தக வெளியீட்டைப் பற்றித் தான் சுற்றிச் சுற்றிப் பேசுகிறார்.

/-- PBS - பற்றின எனது கட்டுரையுடன் இணையத்தில் நான் போட்டிருக்கும் புகைப்படங்களைத் தான் உலகம் முழுவதுமுள்ள தொலைகாட்சி, இணைய, அச்சு ஊடகங்கள் பயன்படுத்திக் கொண்டன. முன்சொன்ன உயிர்மை புத்தக வெளியீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அவை...--/

அய்யா ஷாஜி... தமிழில் உள்ள பெரும்பாலான இதழ்கள் கட்டண சேவையில் இயங்குபவை. அப்படி இருக்க... இலவசமாக எங்கெல்லாம் தேவையான ரிசோர்ஸ் கிடைக்கிறதோ அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது தானே இணைய தர்மம். அந்த ரீதியில் தான் உங்களுடைய வலைப் பூவில் பதிவேற்றியிருந்த புகைப்படங்களை மீடியா தோழர்கள் எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள். (விகடன், குமுதம், கல்கி – போன்ற இதழ்களில் PBS –ன் புகைப்படங்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் கட்டணம் செலுத்தி அவற்றை பெற்றிருக்க வேண்டும்.) மேலும் நூறாண்டுகளாகவா இணையம் இருக்கின்றது. கடந்த இருபதாண்டு காலமாகத் தானே. அதிலும் தமிழ் இதழ்கள் கடந்த பத்தாண்டு காலமாகத் தானே இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. இவ்வளவு ஏன் உயிர்மை தளத்திற்குச் சென்று பாருங்கள். கடந்த நவம்பர் 2012 கழித்து வெளிவந்த இதழ்களை கட்டணம் கட்டித் தான் படிக்க முடியும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரைகள் வெளியாகும் இதழே இணையத்தில் கட்டணச் சேவையிலும், எளிதில் தகவல்களை எடுக்க முடியாத வகைத் தன்மையிலும் இருக்கும் பொழுது - மற்ற வெகுஜன இதழ்களையும், ஊடகங்களையும் குறைபட்டுக் கொண்டு என்ன பயன்? மேலும் தேடு பொறியில் பாடகர் PBS பற்றி தேடிய பொழுது உங்களுடைய வலைப்பூவை கூகுள் முன்னணியில் வரிசைப் படுத்தி இருக்கும். ஆகவே அதனை மீடியா நண்பர்கள் பயன்படுத்தி இருக்கலாம். அப்படி இருக்கையில் அஞ்சலிக் கட்டுரையில் கூடவா சுயா விளம்பரம் தேடிக்கொள்வது என்ற இங்கிதம் வேண்டாமா உங்களுக்கு!? இது போன்ற கட்டுரைகளை வாசிக்கும் பொழுது வருத்தத்தை விட அருவருப்பு தான் மிஞ்சுகிறது ஷாஜி.

உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. நிறையவே எழுதுங்கள். ஆனால் இந்தத் திமிர் தனம் வேண்டாமே ஷாஜி. அழுவலாம்... ஆனால் அழுவதின் மூலம் சுயவிளம்பரம் தேடக் கூடாது. ஆகவே கறயண்டா ஷாஜி கறயண்டா.

# உங்களுடைய வலைப்பூவில் இருந்த புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வேண்டுமென்றே தான் உங்களுக்கான மரியாதையைச் செலுத்துகிறேன். நன்றி ஷாஜி. 

Tuesday, May 21, 2013

பாலுமகேந்திராவின் நேர்மை


கலந்துரையாடல் மற்றும் விவாதம் சார்ந்த ஆரோக்கியமான முன்னெடுப்புகள் படைப்பு ரீதியாகச் செயல்படும் கற்பனாவாதிகளிடமும், நம்முடைய சூழலிலும் இருக்கிறதா என்பது சந்தேகம் தான். முரணான எதிர் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நட்புடன் அணுகும் மனப்பாங்கு அரிதிலும் அரிதாகத் தான் இருக்கின்றது.

எழுத்தாளர் மற்றும் விமர்சகர் கௌதம சித்தார்த்தனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். திரைப்படங்களைப் பற்றிய கறாரான விமர்சனங்கள் எழுதக் கூடிய நண்பர் என்பதால் தான் “எதற்கும் கேட்டு வைப்போமே...!” என்று கேட்டேன்.

“கெளதம்... நீங்கள் விமர்சனம் எழுதுகிறீர்கள் சரி... அதற்கு முன்பு நீங்கள் ஒரு சிறுகதையாளரும் கூட. அப்படி இருக்கையில் உங்களுடைய விமர்சனங்கள் –நல்ல நண்பர்களையும் எதிரிகளாக்கி விடுமே? எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்றேன்.

“அட... போங்க தலைவா...! அதெல்லாம் எவ்வளவோ பார்த்துட்டோம்....” என்றார்.

(“எஸ்ரா, ஜெமோ” போன்றவர்கள் நூறு சிறந்த சிறுகதைகளில் இவருடைய கதையையும் சேர்த்தால் தான் – “கௌதம சித்தார்தன்” போன்றவர்கள் சிறுகதையும் எழுதி இருக்கிறார்கள் என்று தற்கால வாசக உலகம் ஏற்றுக்கொள்ளும். இல்லையேல் கஷ்டம் தான். சிறுகதை நாவல் சார்ந்த எத்தனையோ விமர்சனக் கட்டுரைகள் அந்தந்த காலங்களில் நிச்சயம் வந்திருக்கும். அவற்றை வசித்து வாசகர்கள் ஏன் தெரிந்துகொள்ள முற்படுவதில்லை என்ற புதிர் நீண்ட காலமாக எனக்கு இருக்கிறது. தனிப்பட்ட ஒரு நபர் விரும்புவதை – அவருடைய ஒளிவட்டம் கருதி மற்றவர்களும் விரும்பக் கூடிய காலகட்டத்தில் தான் இன்னும் இருக்கிறோம் என்பது வேதனையான விஷயம். இணையத்தில் எதையோ ஒன்றை எழுத வேண்டும் என்று அவர்களும் எழுதுகிறார்கள். வாசகர்களும் அவர்களுடைய பகிர்தல்கலையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு அவற்றை பரப்புரை செய்கிறார்கள்.)

சரி விஷயத்திற்கு வருவோம். கௌதம சித்தார்த்தனுடன் மேலும் கதைக்களானேன்.

“ம்ம்... சரி போகட்டும் கௌதம்.... கறாரான விமர்சனத்தை முன் வைத்தும்... கருத்து மோதலை மறந்துவிட்டு உங்களுடன் தொடர்பு கொண்டு பேசிய யாரேனும் ஒரேயொரு சினிமா படைப்பாளியாவது இருக்கிறார்களா?” என்று கேட்டேன்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் “அட்டகத்தி ரஞ்சித்” என்றார். தீராநதியில் கௌதமின் விமர்சனத்தைப் படித்துவிட்டு செல்பேசியில் அழைத்து - அவர் எழுதிய விமர்சனம் சார்ந்து பாராட்டிப் பேசினாராம். அதிலுள்ள சில மாற்றுக் கருத்துக்களையும் முன்வைத்தாராம். இத்தனைக்கும் ரஞ்சித்தின் முதல் படம் “அட்டகத்தி” என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் கோலோச்சும் அனைவருக்கும் இருக்க வேண்டிய தன்மையான குணம் இது.

ஆடுகளம் திரைப்படம் தேசிய அளவில் பலப்பல விருதுகளை அள்ளிய தருணம் அது. தரமணி திரைக் கல்லூரிக்கு அந்தப் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனை மாணவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பேச அழைத்திருக்கிறார்கள். “ஆடுகளம்” குறித்த பல கேள்விகளையும் அந்த சமயத்தில் மாணவர்கள் எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவு பிரிவில் படிக்கும் ஒரு மாணவர் ஆடுகளத்தின் DI சார்ந்த கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.

“சார்... ஆடுகளத்தின் DI (Digital intermediate) வொர்க் – அந்தப் படத்துக்கு என்ன தேவையோ... அது சரியா இல்லாதமாதிரி இருக்குங்களே சார்...?” என்று படத்தின் கலர் டோன் பற்றிய கேள்வியை ஒளிப்பதிவு மாணவர் முடிக்கும் முன்பே இயக்குனர் வெற்றிமாறன் குறுக்கிட்டிருக்கிறார்.

ஞாயமாக வெற்றிமாறன் பதில்தனே சொல்லி இருக்க வேண்டும். DI சார்ந்த பதிலாகத் தானே அதுவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு முக்கியமான மடைமாற்றலை வெற்றிமாறன் அங்கே செய்திருக்கிறார்.

கேள்விகேட்ட மாணவரைப் பார்த்து “உங்கள விட பாலு மகேந்திரா நல்ல ஒளிப்பதிவாளர்னு நான் நம்புறேன்... அவரே இந்தப் படத்தைப் பார்த்துட்டு DI வொர்க் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு சொல்லிட்டாரு.” என்றாராம். கேள்வி கேட்ட ஒளிப்பதிவு மாணவர் வாயடைத்துப் போய் இருக்கையில் அமர்ந்தாராம்.

ஒரு திரைப்படக் கல்லூரி மாணவன் – திரைப்படம் சார்ந்த நுணுக்கமான கேள்வியைக் கேட்கிறான் எனில் அதற்கு நேரடியான ஞாயமான பதிலைத் தராமல் - தனது குருவான, வாத்தியாரான பாலுமகேந்திராவை, வெற்றிமாறன் கேடயமாகப் பயன்படுத்தி சூழலை சமாளித்து இருக்கிறார். விழாவினை எப்படியும் கல்லூரி இயக்குனராக இருந்தவர் (ஸ்ரீதர்) தலைமை தாங்கி இருப்பார். இயக்குனர் பிரிவு துறைத் தலைவராக இருந்தவர் (ரவிராஜ்) உடன் இருந்திருப்பார். ஒளிப்பதிவு துறைத் தலைவர் (ஜிபிகே) அருகில் இருந்திருப்பார். இவர்கள் எல்லாம் வெற்றிமாறனின் இந்த பதிலை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்பதை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. (ஜிபிகே எனும் கிருஷ்ணன் பிசி ஸ்ரீராமிடம் அசோசியேட்டாக இருந்தவர். திரைக்கல்லூரியில் பணிபுரிபவர்களில் திறமையானவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.)

கேள்வி கேட்கும் மாணவனை வகுப்பறையில் மட்டுமல்ல, பொதுவாக நடக்கும் கலந்துரையாடலிலும் வாயடைக்கும் வேலையைத் தான் நிர்வாகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அல்லது அப்படி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறனே இதனை மறந்திருப்பார். இதனை இப்பொழுது நான் ஏன் கிளற வேண்டும்?

கடந்த ஞாயிறு அன்று இயக்குனர் பாலுமகேந்திராவின் பிறந்த நாள். பாலு கேக் வெட்டும் வைபவம் சமூக இணையதளத்தில் பார்க்கக் கிடைத்தது. அருகில் பாலுவின் சீடர்கள் எல்லோரும் இருக்கின்றனர். வெற்றிமாறனும் அருகில் நின்று கொண்டிருந்தார். பாலுவின் திரைக்கல்லூரி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் படித்த ஒருவர் என்னுடைய நண்பர். நீண்ட நாட்களுக்கு முன்பு அந்த நண்பர் என்னிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருந்தார். வெற்றிமாரனையும் பாலுவையும் ஒன்றாகப் பார்க்கும் பொழுது நண்பர் பகிர்ந்த விஷயம் தான் நினைவிற்கு வந்தது.

ஒருமுறை பாலுமகேந்திரா அவருடைய குரும்படத்தைத் திரையிட்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாராம். அதிலொரு மாணவர் திரையிடப்பட்ட குறும்படத்தில் இருந்த தற்கப் பிழையைச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்டாராம். பாலுமகேந்திரா சமாளிக்க முயன்றிருக்கிறார். மாணவர் மேலும் மேலும் கேள்வியைக் கேட்டு நெருக்குதல் கொடுத்திருக்கிறார். பாலுவால் சூழலை சமாளிக்க முடியவில்லை. மாணவரிடம் கோவத்தை வெளிப்படுத்தி அடக்கியிருக்கிறார். வகுப்பு முடிந்து எல்லோரும் சென்றுவிட்டார்கள். பாலுவும் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். மறுநாள் பாலு திரைக்கல்லூரிக்கு வந்திருக்கிறார். கேள்வி கேட்ட மாணவரை அழைத்தாராம்.

“இங்க பாரு (...............)... நான் இத்தன வருஷமா தரமான படங்களைத் தான் கொடுத்திருக்கேன்னு கர்வத்தோட இருக்கேன். எல்லா படத்தையும் பார்த்துப் பார்த்துதான் செஞ்சிருக்கேன். ஆனா... அதுல நீ ஒரு கொற சொல்லும் போது என்னால தாங்க முடியல... அதான் நேத்து கோவப்பட்டுட்டேன்... மத்தபடி நீ புத்திசாலிதான்... நீ சரியான கேள்வியைத் தான் கேட்டிருக்க...” என்றாராம்.

ஒரு படைப்பாளியாக, ஆளுமையாக இங்குதான் பாலுமகேந்திரா வெற்றி பெற்று நிற்கிறார். ஏறக்குறைய ஏழு தேசிய விருதுகளை பெற்றவர் பாலு என்பது குறிப்பிடத் தக்கது. இயக்குநருக்காக மூன்றுமுறை பெற்றிருக்கிறார். “கேமரா, எடிடிங், திரைக்கதை, இயக்கம்” என பல துறைகளிலும் தேசிய விருது பெற்ற ஒரே திரைக் கலைஞர் இவராகத் தான் இருப்பார். தன்னுடைய தவறை உணர்ந்து அதற்கான வருத்தத்தையும், சரியான பதிலையும் – வளரும் கலைஞர்களான தன்னுடைய திரைப்பள்ளி மாணவருக்குக் கொடுத்திருக்கிறார். தன்னிடம் ஒரு கேள்வியை அல்லது விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் எனில் அதற்கான தன்னிலை விளக்கத்தைக் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். (வார்த்தை ஜாலத்தால் செய்த தவறை ஞாயப்படுத்தும் பதில் அல்ல. சரியான விளக்கம். தவறு எனில் அதை ஏற்றுக்கொள்ளும் தன்னிலை விளக்கம்.) பாலு மகேந்திராவிற்கு அந்தத் தன்மை இருக்கிறது. அவரிடம் சினிமா பயின்றவர்களுக்கும் அது இருப்பின் மிக்க மகிழ்ச்சிதான்.

இந்த மாதிரியான உங்களுடைய மென்மையான குணங்கள் வெளியில் தெரியாததால் தான் பாலு... தேவையில்லாமல் எதிர்மறையாக விமர்சிக்கப் படுகிறீர்கள். அதனால் தான் இன்னும் கூட உங்களுடைய உண்மையான முகம் வெளியில் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றுதான் அந்த நண்பர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். தமிழ் சினிமாவின் போக்கை திசை திருப்பியதில் உங்களுடைய பங்களிப்பு நிறையவே இருக்கிறது. போலவே இந்தச் சம்பவத்தைப் பகிர்வதில் மூலம் சமகால இயக்குனர்கள் - கேள்வி கேட்பவர்களிடமும், விமர்சகர்களுடமும் எப்படி தன்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற போக்கையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் தான் பகிர்ந்துகொண்டேன். இதுவரை யாரும் பெறாத அளவிற்கு தேசிய அங்கீகாரம் பெற்றுவிட்டீர்கள். எனினும் அந்த அளவிற்கு உங்களை தென்னிந்திய சமூகம் கொண்டாடவில்லையோ என்ற ஏக்கம் உங்களுடைய ரசிகர்களான எங்களுக்கு இருக்கின்றது. இதோ அடுத்ததாக நடிக்கவும் செய்கிறீர்கள். எல்லோரும் ஆவலுடன் இருக்கிறோம். சீக்கிரமே திரைக்கு வந்துவிடுங்கள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலு.