Monday, November 16, 2009

கேணி சந்திப்பு - அசோகமித்திரன்

இரண்டு நாட்களாக அடை மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் ஜன்னலருகில் அமர்ந்து தூறிக் கொண்டிருக்கும் வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றிருந்தது. இரண்டாம் ஞாயிறு என்பதால் இருப்புக் கொள்ளவில்லை. அசோகமித்திரன் பங்கு பெற்று கேணியில் உரையாற்ற இருக்கிறார். மழை என்னவோ நின்றபாடில்லை.

"கேணி சந்திப்பு நிச்சயமாக நடைபெறும் கண்டிப்பாக வரவும்" என்று பி
பு குறுஞ்செய்திஅனுப்பியிருந்தார். உடனே அவருக்கு ஃபோன் செய்து "என்னங்க நிஜமாவா சொல்றீங்க? இவ்வளோ மழை பொழியுதே... ரொம்ப வயசானவரு... எதுக்கு அவர தொந்தரவு செய்யணும். அடுத்த மாதம் சந்திப்பை வச்சிக்கலாமே... அவருக்கு வேறு சமீப காலமா உடம்பு சரியில்லையே" என்று கூறினேன்.

"இல்லைங்க கிருஷ்ணா. ஞாநிகிட்ட கேட்டேன்... கண்டிப்பா கேணி சந்திப்பு நடக்கும்னு சொல்லிட்டாரு" என்று பதில் கூறினார்.

இனி விதி விட்ட வழி என்று ஞானியின் இல்லம் நோக்கிப் புறப்பட்டேன். நன்றாக பெய்து கொண்டிருந்த மழை உதயம் திரையரங்கில் இறங்கியதும் நின்ற மாதிரி தெரிந்தது. 'அந்த பயம் இருந்தால் சரி' என்று வானத்தைப் பார்த்து வருண பகவானை எச்சரித்தேன். ஞானி வீட்டின் நுழைவாயிலில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்திருந்தார்கள். கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே சென்றேன். இந்த மாதக் கூட்டம் வீட்டிற்குள்தான் நடைபெறும் என்றார்கள். சாய்ந்துகொள்ள வசதியாக சுவரோரமாக அமர்ந்துகொண்டேன்.

எனக்கு வலப்பக்கத்தில்
இருந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சனின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். சிரித்துக் கொண்டோம்.

"இன்று வரவிருப்பது அசோகமித்திரன்" என்றேன்.

"அப்படியா?
இருக்கட்டுமே... புத்தகம் நன்றாக இருக்கிறது. அதனால் படித்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்றார்.
"நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
"ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறேன்"
என்றார்.
அப்படியெனில் தமிழ் இலக்கிய சந்திப்பில் எப்படி ஆர்வம் வந்தது?
"எனக்கு கவிதை எழுதுவதில் விருப்பம் அதிகம். புத்தகம் கூட வெளியிட்டிருக்கிறேன்.
இன்று பார்த்து என்னுடைய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை."
"அதனால என்ன...எழுதிய கவிதையில் ஒன்றை சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். ..."

அவரும் ஹைக்கூ மாதிரி ஒரு கவிதையை எனக்குக் கூறினார். புரியவில்லை என்றதும் ஆர்வத்துடன் விளக்கிக் கூறினார். கவிதை கேட்ட மயக்கத்தில் இடப்பக்கமாகத் திரும்பினேன்.

மழையில் நனைந்த ஒருவர் அருகில் உட்கார்ந்தார். சிரித்ததும் பதிலுக்கு சிரித்தார்.
என்னைப்பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். பதிலுக்கு நானும் விசாரித்தேன்.

"நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
"நடித்துக்கொண்டிருக்கிறேன்..."
என்றார்.
"ஓ... நீங்கள் ஷேக்ஸ்பியரின் ரசிகரா?"
"நீங்க என்ன சார் சொல்றீங்க?" என்றார்.
"All the world's a stage, And all the men and women merely players - அப்படின்னு அவரு தானே சொல்லி இருக்காரு..."
"இல்லைங்க சார்... நான் வில்லனா நடிக்க சினிமாவில் முயற்சி செய்றேன். சில டிவி சீரியலிலும், டாகுமெண்டரி படங்களிலும் நடிச்சிக்கினு இருக்கறேன். ஆமா... இங்க என்ன சார் நடக்குது?" என்றார்.

"என்னை 'கிருஷ்ண பிரபு' என்றே கூப்பிடலாம். 'சார்' போடுற அளவிற்கு நான் இன்னும் பெரிய ஆள் ஆகலை. இது இலக்கிய கூட்டம். படைப்பிலக்கியம் பற்றி மூத்த எழுத்தாளர்கள்
வந்து பேசுவாங்க. சில நேரங்களில் சினிமாக்காரங்களும் வருவாங்க. ஆமா... இங்க எப்படி வந்தீங்க?" என்றேன்.

"
வண்டிய இந்த பக்கத்துல சர்வீசுக்கு விட்டிருக்கேன். அதை வாங்கலாம்னு போகும்போது இங்க ஒரே கூட்டம், மழை வேற ஓயாம கொட்டிக்குனு இருந்தது. அங்க இருக்காரே (பதிவர் அகத்தியன்) அவருதான் இங்க வாங்கன்னு கூப்பிட்டாரு. வந்துட்டேன்."

அடடா இது இலக்கிய கூட்டமாச்சே... அசோகமித்ரன்னு பேர்போன எழுத்தாளர் இங்க வரப் போறாரு. அவரோட நாங்க பேசப்போறோம். அவர் சிநிமாகாரன்களைப் பத்தி 'கரைந்த நிழல்கள்-னு ஒரு நாவல் எழுதி இருக்காரு. அவருடைய புலிக் கலைஞன் என்ற சிறுகதை மிகவும் பிரபலம். அதுவும் வேஷம் போடுறவன் பற்றியதுதான் என்று மூச்சுவிடாமல் பேசினேன்.

சுவாரஸ்யமே இல்லாமல்
"அப்படியா" என்றார்.

"தப்பா நெனைக்காதீங்க நடுவுல உட்கார்ந்தா பாதியில எழுந்து போக முடியாது. அதனால வாசல் ஓரமா உட்கார்ந்துக்கோங்க பிடிக்கலன்னா பாதியில போயிடலாம்" என்றேன்.

"இலிங்க, இவளோ தொலைவு வந்துட்டேன். முழுசுமா பார்த்துட்டு போயிடறேனே..." என்றார்.

வெளியில் பார்த்தேன் மழை தூறிக்கொண்டிருந்தது. அசோகமித்திரன் அவருக்கான இடத்தில் வந்தமர்ந்து பேச ஆரம்பித்தார். இடையில் ஞானி குறுக்கிட்டு "நான் வரவேற்புரை கொடுத்துவிடுகிறேனே" என்றார். "Sorry sorry. very sorry" என்று ஞானியைப் பேச அனுமதித்தார்.

தொடக்க உரையாக ஞானி பேசியதையும் அதைத் தொடர்ந்து அசோகமித்திரன் பேசியதையும் எழுத்தாளர் ரவி பிரகாஷ் அழகாக பதிவிட்டுள்ளார்: அசோகமித்திரனும் எனது மித்திரனும்!

அசோகமித்திரன் எந்த தலைப்பில் பேசவிருக்கிறார் என்று ஞானி அவருடைய முகப்புரையில் குறிப்பிடவில்லை. அசோகமித்ரனும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தனது உடல் உபாதைகளைப் பற்றி சக மனிதர்களிடம் பேசுவது போல பேச ஆரம்பித்தார். எழுத்தாளரா தான் வாழ்ந்த ஏழ்மையான நாட்களையும், சக எழுத்தாளர்களான ஜி நாகராஜன், கண்ணன் போன்றோரின் குடிப்பழக்கமும், அதனால் தான் பட்ட கஷ்டங்களையும் கூறிய பொழுது நெருடலாக இருந்தது.

ஒரு முறை எழுத்தாளர் கண்ணனுடைய குடும்பம் மிகுந்த வறுமையில் இருக்கவும், அவர்களுடைய குடும்பத்திற்கு தையல் இயந்திரம் வாங்கிக்கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். உடனே வங்கியில் கடன் வாங்க மேனேஜரை அணுகியிருக்கிறார்.

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு நிரந்தர வருமானம் இருக்கிறதா? என்று இவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
எழுத்தாளருக்கு எங்கிருந்து நிரந்தர வருமானம் இருக்கப் போகிறது. இருந்தாலும் மிகுந்த சிரமத்திற்கிடையில் அந்த குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். சில நாட்களிலெல்லாம் அந்த மெஷினை அடகு வைத்து கண்ணன் குடித்திருக்கிறார். பிறகு வங்கிக் கடனை இவர்தான் தீர்த்தாராம்.

மகா குடிகாரனாக இருந்தாலும் கண்ணனுடைய மனைவி மக்கள் அவரிடம் அன்பாக இருந்தார்கள் என்று சொல்லி சந்தோஷப்பட்டார். "எங்கிருந்தாலும் அந்த பெண்கள் சந்தோஷமா இருக்கணும்" என்று ஆசீர்வதித்தார்.
சில நேரங்களில் மளிகை பொருட்கள் வாங்க வைத்திருக்கும் பணத்தை ஜி நாகராஜன் உரிமையுடன் எடுத்துக் கொள்வாராம். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாராம்.

இவையனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கும் போது
துக்கம் அடைத்துக்கொண்டு வந்தது. ஏனோ தெரியவில்லை என்னுடைய உடல் பாரமாவதை உணர்ந்தேன். என்னடா என்று பார்த்தால் சினிமாக்கார சகா என்னுடைய தோல் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். 'தூங்குறவங்களை பாதியில எழுப்பினா ஆயுசு கம்மின்னு' எனக்கு சொல்லி இருக்காங்க. அதனால் பாரத்தை தாங்கிக் கொண்டேன்.

தூக்கம் களைந்து எழுந்த சகா "எனக்கு 6 மணிக்கு ஒருவரைப் பார்க்க வேண்டும். வெளிய போனா தப்பா நெனைப்பாங்களா? என்று கேட்டார்.

"ச்சீ... ச்சீ... அப்படி கூட யாராவது நெனைப்பாங்களா?" என்று சொன்ன போது என்னுடைய பாரம் குறைவதை உணர முடிந்தது.

வெளியே பார்த்தேன் மழை நின்றிருந்தது. காற்றில் குளிர்ச்சியுடன் அசோகமித்ரனின் பேச்சு கேட்டது.அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

முன்பெல்லாம் இலக்கிய சந்திப்பாக இருக்கட்டும், கலந்துரையாடலாக இருக்கட்டும் முன்யோசனையுடன் செய்வார்கள். என்ன பேச வேண்டும் என்று யோசித்து செய்வார்கள். இப்பொழுதெல்லாம் அப்படியில்லாதது வருத்தமாக இருக்கிறது.

வரும்போது ஒரு மூட்டையில் குப்பையைக் கட்டி (ஞாநிக்காக அவர் கொண்டு வந்த புத்தகங்கள்) இங்க எடுத்து வந்து கொட்டியிருக்கிறேன். வீட்டில் இது போல இன்னும் நிறைய குப்பை இருக்கிறது அதைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கிறேன்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் குப்பைத் தொட்டி எப்பொழுதுமே நிறைந்து வழிகிறது. என்னுடைய குப்பைகளையும் கொட்டினால் தொட்டியை மீறி வெளியில் வந்து பறக்கும். யாருடைய கையிலாவது அந்த குப்பைகள் மீண்டும் கிடைத்துவிடும் என்று பயமாக இருக்கிறது. ஆகவே காலியாகும் சமயத்தை எதிர் பார்க்கிறேன்.

'எழுத்தாளன்' என்பது நான் எப்போதோ பார்த்த வேலை. அதைப் பற்றி இப்போது பேச பயமாக இருக்கிறது.
இப்பொழுதெல்லாம் ஞாபக மறதி அதிகமாகியிருக்கிறது. எதைப் பற்றியும் பேச இயலவில்லை. சில நேரங்களில் கதைகளைப் படிக்கிறேன். யார் எழுதினார்கள் என்று மறந்துவிடுகிறேன். ஆகவே என்னுடைய உரையை இதனுடன் முடித்துக் கொள்கிறேன். ஏதாவது கேள்வி வேண்டுமானால் கேளுங்கள் என்றார்.

தண்ணீர், மானசரோவர், புலிக் கலைஞன் மற்றும் இதர சிறுகதைகளைப் பற்றி கேள்வி கேட்டார்கள்.
அவற்றில் சில...

1.
உங்களுக்கு ஆண்பிள்ளைகள் தானே இருக்கிறார்கள்... ஆனால் பெண்களைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்களே?
எனக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றார்.

2.
உங்களுடைய நாவல் தண்ணீரைப் பற்றி?
எவ்வளோ பேரு பேசிட்டாங்க. கூட்டம் கூட்டமா பேசிட்டாங்க. நாங்க அந்த காலத்துல தண்ணிக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். You know, my 4 years old son was sitting in the que for one bucket water. very sad.

3. இப்பொழுதெல்லாம் எழுத்தாளர்களுக்கு உடனுக்குடன் பாராட்டுகள் வருகிறது. உங்களுக்கு பாராட்டுகள் எப்படி வந்தது?
தபாலில் தான். உங்களுடைய படைப்பில் தகவல் பிழை இருக்கிறதே என்று ஒரே வரியில் இருக்கும்

4.
உங்களுடைய படைப்பு சினிமாவாக ஊடக மாற்றம் பெறாதது வருத்தம் இருக்கிறதா?
இல்லை. நான் எழுதுவது படிக்க தான். ஆனால் என்னுடைய புத்தகத்தில் உள்ள காட்சிகள் சில படங்களில் பார்க்க நேர்வதுண்டு. Dozen கணக்குல பார்த்திருக்கிறேன். புத்தகத்தை படித்துவிட்டு அதுபோல வைக்கிறார்களா! இயல்பாகவே அமைகிறதா என்று தெரியவில்லை.

5.
உங்களுடைய 'ஒற்றன்' நாவலில் ஒருவர் Chart போட்டு நாவல் எழுதினர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்? (அடியேன் கேட்டது)
உண்மைதான். பேரு நாட்டு எழுத்தாளர். எழுத்தாளரின் பெயரையும் புத்தகத்தின் பெயரையும் குறிப்பிட்டார். புத்தகம் சரியாக விற்கவில்லை என்பதையும்கூறினார்.

6. உங்களுடைய காலங்களில் இந்த மாதிரி கூட்டங்கள் நடைபெற்றதா?
அப்படியெல்லாம் இல்லை. அவ்வளவு சுலபமா எந்த கூட்டமும் இருக்காது. அப்படியே கூடினாலும் அதற்கான முன்யோசனையுடன் கூடுவார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் இந்த மாதிரி
க் கூட்டத்தில் பங்கு பெறுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய படைப்பாற்றல் சிதைவுறாமல் இருக்கும்.

7. உங்க
ளை இந்தியாவின் ஹெமிங்க்வே என்று கூறுவதைக் கேட்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
அந்தாளு அவருடைய வேலையை செஞ்சாரு... அவரு எங்கயோ இருக்காரு. நம்ம எங்கயோ இருக்கோம்.

8. சிறுகதைக்கு வடிவம் இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. அது ஒரு அனுபவத்தைத் தரவேண்டும். சிறுகதைக்கோ நாவலுக்கோ வடிவம் கிடையாது.

9. அப்படியெனில் சிறுகதைக்கு வடிவம் இல்லை என்று சொல்லிவிடலாமா?
இல்லை இல்லை. நான் கூறியது என்னுடைய கருத்து. அவரு எனக்கு ஹெல்ப் செய்திருக்கிறார். வடிவம் இருக்குன்னா அந்த சார்ட் மாதிரி ஆயிடும் இல்ல? படைப்பு ஒரு அனுபவத்தைத் தரனும் என்று அவருடைய கைகள் என்னை சுட்டியது. கண்கள் ஒரு நிமிடம் என்னைப் பார்த்து கேள்வி கேட்டவரை ஊடுருவியது.

"எவ்வளோ பேரு உட்கார இடமில்லாமல் நிக்கறாங்க. மழை வேற பெய்யுது. எங்க இருந்தெல்லாம் வந்திருக்கான்களோ!. ரொம்ப கஷ்டமா இருக்குது" என்று கூடம் நிறைவுறும் போது கூறினார்.

அடலேறு, நிலா ரசிகன் மற்றும் மகரந்தன் ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அசோகமித்ரனைப் பற்றி பல நாட்களுக்கு முன்பு படித்தனை நினைத்துக் கொண்டே சாலைகளில் நடந்துகொண்டிருந்தேன்.

ஆட்டோவில் போன அசோகமித்திரன்

வீட்டுக்கு வீடு கலர் டிவி கொடுத்து தமிழை வளர்க்கிறேன் என்று முழக்கமிடுபவர்கள் இது போன்ற மூத்த படைப்பாளிகளுக்கு என்ன செய்தார்கள் என்று பார்த்தால் விரக்திதான் மிஞ்சும். சரி... நாமாவது தமிழ் புத்தகம் வாங்குகிறோமா என்றால் அதுவும் இல்லை.

"வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை." - உலகம் அறிந்த எழுத்தாளருக்கே இதுதான் நிலைமை என்றால். மற்றவர்களை நினைக்கும் போது நடுக்கமாக இருக்கிறது.

**************************************************

புலிக் கலைஞன்
சிறுகதையை வாசிக்க 'ச.ந.கண்ணன்' அவர்களின் இணையப் பக்கத்திற்கு செல்லவும்:[1] [2] [3]

ஜெய மோகனின் : அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்

Friday, November 13, 2009

சேரலின் அழைப்பு: தொடர் பதிவு

பிடித்த, பிடிக்காத விஷயங்களாக தமிழகத்தைத் தொடர்புபடுத்தி, தமிழக பிரபலங்களைத் தொடர்புபடுத்தி பதில்கள் தருமாறு சேரல் சொல்லி இருந்தான். ஆனால் எண்ணங்கள் அந்த நிபந்தனையை மீறிச் செல்கிறது.. அதை அப்படியே இங்கு பதிகிறேன். அழைப்பிற்கு நன்றி சேரல்.

இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

I always break the rules. ha ha ha ha ha... But i hope others will follow...

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

நான் யாரன்னு கண்டு பிடிப்பேன் சேரல்...! முயற்சி செய்கிறேன்.

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

இனி பட்டியல்....

01.
பிடித்த நிர்வாகி : ஸ்ரீதர் வேம்பு (zoho corporation - http://www.zohocorp.com/) சப்தமே இல்லாமல் சாதனை செய்துகொண்டிருக்கும் தமிழர்.
பிடிக்காத நிர்வாகி : ராமலிங்க ராஜு (காரணம் உங்களுக்கே தெரியும்.)

02.
பிடித்த தலைவர் : நர்மதா அணையின் அருகிலுள்ளவர்களுக்காகப் போராடும் 'மேதா பட்கர்'. நோபல் பரிசு வாங்கிய பர்மாவின் இரும்புப் பெண்மணி ஆங் சான் சூ கி மற்றும் செடி,கொடிகளுக்காகக்கூட குரல் கொடுத்த கென்யாவின் வங்காரி மாதாய். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் அவர்களைப் பற்றி நாளேடுகளில் படித்தேன் என்பது நிறைவான விஷயம். இவர்களுடைய எளிமையான வாழ்வு என்னைக் கவருகிறது. அவர்கள் நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் சுகமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் ஒரு தலைமுறைக்காகவே போராடுகிறார்கள்.
பிடிக்காத தலைவர்: 'மனிதன் ஒரு அரசியல் விலங்கு' என்று யாரோ ஒரு தத்துவமேதை கூறியது ஞாபகம் வருகிறது. அதற்கும் ஒரு படி மேலே சென்று மத அரசியல், ஜாதி அரசியல், கட்சி அரசியல், ஆன்மீக அரசியல், ஊடக அரசியல் என்று மிருகங்களாகக் காட்சியளிக்கும் தொண்டன் முதல் தலைவன் வரை அனைவரும். "அட, அப்போ தற்போதுள்ள எல்லா அரசியல் வாதிகளும் என்று சொல்கிறீர்களா?" நிச்சயமாக... அப்போ கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வை கோ, எல்லாரையும் சேர்த்துக்கோங்க.

03.
பிடித்த எழுத்தாளர்கள்: கி ரா, அ முத்துலிங்கம், அசோகமித்திரன், மாலன், குரு மூர்த்தி(www.gurumurthy.net), பாரதி, மதன், சுஜாதா, ஜெ. மோ, எஸ். ரா, கல்கி, ராஜ் கௌதமன், ஆதவன், பாவண்ணன்... இன்னும் இன்னும்...
பிடிக்காத எழுத்தாளர்கள் : சொந்த ஆதாயத்திற்காக தகவல் பிழையுடன் எழுதும் அனைவரும். குறிப்பாக அரசியல் எழுத்தாளர்கள். சில நேரங்களில் BJP மற்றும் RSS இயக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறாரோ என்று குரு மூர்த்தியையும் நெருடலுடன் வாசித்ததுண்டு.

04.
பிடித்த இயக்குனர்கள்: 1.கருப்பு வெள்ளை படம் 'சபாபதி' பட இயக்குக்னர் (பெயர் தெரியவில்லை), 2.காதலிக்க நேரமில்லை 'ஸ்ரீதர்', 3. சில்ரேன்ஸ் ஆப் ஹெவன் 'மஜித் மஜிடி' 3. இயக்குனர் பாக்கியராஜ் ('தூறல் நின்னு போச்சு'-எவ்வளோ அழகான திரைப்படம்!)... (யாரு கண்டா என்னோட மருமகன்கள் முத்துவும், வினோத்தும் கூட இந்த வரிசையில பின்னாளில் வரலாம். பிரபலங்கள் ஆகலாம்.)
பிடிக்காத இயக்குனர்கள்: உதவி இயக்குனர்களிடம் வேலை வாங்கிவிட்டு டைட்டிலில் தன்னுடைய பெயரைப் போட்டுக்கொள்ளும் அனைத்து இயக்குனர்களும். (அப்போ எல்லா இயக்குனரும் என்று சொல்கிறீர்களா? அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.)

05.
பிடித்த இசைக்கலைஞர்: இசைஞானி இளையராஜா... (அவருடைய படைப்பில் பங்கு செலுத்திய நிறைய பேர்...). ஒரே வருடத்தில் 20 முதல் 30 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்று தெரிய வரும் பொழுது பிரம்மிப்பாக இருக்கிறது. அவருக்கு உதவியாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிக்காத இசைக்கலைஞர்: 1. இளையராஜா இசையமைத்த அனைத்துப் பாடல்களுமே பிரசித்தி பெற்றது என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் குறுகிய நாட்களில் படத்திற்கு இசையமைக்கும் அளவிற்கு பரபரப்பாக இருந்திருக்கிறார். அந்த மாதிரியான நேரங்களில் சில சோர்வான படைப்புகள் வருவது இயல்புதானே. அதுபோன்ற அவசர நிலை படைப்புகளைக் கொடுத்த அவருடைய இசை எனக்குப் பிடிக்காது. அந்த நேரங்களில் "நீயா இதை செய்தது?" என்று கோபம் வரும். அடுத்த நிமிடமே அவருடைய சிறந்த படைப்பைக் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்.
2. பழையப் பாடல்களை ரீ-மிக்ஸ் செய்பவர்கள் அனைவரும்.

06.
பிடித்த பாடகர்: ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பி
பிடித்த பாடகி: ஜானகி அம்மா
பிடிக்காத பாடகர்கள்: பிடிக்காதவர்கள் என்று யாரும் ஞாபகம் வரவில்லை. பிடிக்காத பாடல்களை உடனே மாற்றிவிடுவேன். சில நேரங்களில் பிடித்த பாடல்களிலேயே சில கோளாறு இருக்கும். அதாவது பாடும்போது இடையிடையே மூச்சு விடுவதும், எடுப்பதும் கேட்கக் கூடாது. அப்படியில்லாமல் சில பாடல்களைக் கேட்கும் போது பாடியவர்களின் மீது எரிச்சலாக இருக்கும். உதாரணமாக 'முன்பே வா என் அன்பே வா- பாடலில் ஸ்ரேயா கோஷல்' மற்றும் 'எனதுயிரே எனதுயிரே' - பாடலில் நிகில் மாத்யூ.

07.
பிடித்த அரசு அதிகாரி: T.N.சேஷன் (தேர்தல் அதிகாரி), இறையன்பு I.A.S மற்றும் கிரண் பேடி I.P.S (அரசு நிர்வாகத்திலுள்ள அரசியல் காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.) உங்களுக்குத் தெரிந்து நேர்மையானவர்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பகிர்ந்துகொள்ளலாம்.
பிடிக்காத அரசு அதிகாரி: நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் தான் ஏணிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஆசிரியர்கள். பரீட்சை முடிவுக்காக குழந்தைகள் காத்திருக்கும் போது விடைத்தாள்களைத் திருத்தமாட்டோம் ஊதிய உயர்வு வேண்டும் என்று அடம் பிடிக்கும் சங்கங்கள் முழுவதும். (எனக்குப் பிடித்த நிறைய பேர் இதில் அடங்குவார்கள். அதை அவர்களிடமே சொல்லி இருக்கிறேன்.)

08.
பிடித்த பத்திரிகையாளர்: மாலன்
பிடிக்காத பத்திரிகையாளர்: நக்கீரன் கோபால்

அழைக்கும் பதிவர்கள் :

வேல் கண்ணன்
ரகுநாதன்
சுள்ளிக்காடன் ஹிஜு
நிர்வாணம் ஞானசேகர்
அடலேறு

Saturday, November 7, 2009

அன்று பெய்த மழை

மெல்லிய ஓசை "சரசர... சடசட..." வென கேட்டுக் கொண்டே இருந்தது. சிறு வயதிலிருந்தே கேட்டுப் பழகிய ஓசை என்பதால் சப்தம் வந்த திசையை நோக்கி கால்கள் தானாக இடம் பெயர்ந்தது. அலுவலகம் முழுவதும் குளிர்சாதன வசதி இருந்தாலும் இயற்கையாகப் பெய்யும் மழையின் சாரலும், காற்றில் பரவி எலும்பை உருக்கும் பனியின் புகையும் ஏற்படுத்தும் சிலிர்ப்புமே வாழும் வாழ்க்கையில் அலாதியானது.

இந்த வருட மழை அவ்வளவுதான்... இனி அடுத்த வருடம் தான் மழையை எதிர்பார்க்க முடியும் என்றிருந்த நிலையில் திடீரென பெய்த மழை உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அலுவலக தோழர்களிடம் கண்களில் மகிழ்ச்சியுடன் "வெளியே மழை பெய்யுதுடா... வந்து வேடிக்கை பாருங்க... ஜாலியா இருக்குது, வந்து சாரலை அனுபவியுங்கள்" என்றேன்.

"போங்க கிருஷ்ணா, நீங்கதான் ஒரு வேலை செய்யாம சும்மா இருக்கீங்க. நாங்களும் அப்படியா?... அதுவும் இல்லாம ஆபீஸ் டைம்ல வெளிய போனா யாராச்சும் ஏதாவது சொல்லப் போறாங்க... Tempt பண்ணாம எடத்த காலிபன்னுங்க கிருஷ்ணா" என்று பதில் கூறினார்கள்.

"டேய், நான் இதோட பத்துவாட்டி வெளிய போயி வேடிக்கை பார்த்துட்டு வந்துட்டேன். என்னை யாரும் எதுவும் சொல்லலையே..."

"உங்கள மாதிரி நாங்க வர முடியுமா... கிருஷ்ணா..." என்றார்கள்

சிறிது நேரம் கழித்து அனைவரும் Break Time-ல் வெளியில் சென்றோம்.

"We are almost missing many wonderful feelings & experience inbetween our working hours. இந்த Climate-க்கு கோட்டரும், வறுத்த வேர்கடலையும், சிகரெட்டும், சிக்கன் 65-ம் இருந்தா எப்படி இருக்கும். அதுதான் சரி கிருஷ்ணா..." என்று வெளியில் வந்த நண்பர்களில் ஒருவன் கூறினான்.

"டேய், அதோட நிறுத்திக்கோ... அதுக்கு மேல நீ என்ன சொல்லுவேன்னு எனக்குத் தெரியும்... மழையே ஓர் ஆனந்தமான விஷயம் தானே. அதை அனுபவிக்காமல் வேறு எங்கயோ போறயே..." என்று சொல்லிவிட்டு என்னுடைய இருக்கைக்கு வந்தேன்.

அப்படியே 'ஹேம்நாத்'திடம் "டேய் பொடிப்பயலே, இன்னைக்கு மழையில நனஞ்சிக்கினே வீட்டுக்கு போகலாம் சரியா...!" என்று சொல்லியிருந்தேன்.

"கண்டிப்பா கிருஷ்ணா, அனா நம்ம புறப்பட சொல்ல மழை பெய்யணுமே."

"அதெல்லாம் கண்டிப்பா பெய்யும், நீ கவலைப் படாதே... "

நல்லவேலை அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது லேசான மழை பெய்துகொண்டிருந்தது. ஆனந்தமாகப் புறப்பட்டோம். சாரை சாரையாக பெய்த மழையில் வாகனங்கள் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டிருந்தன. மேடு பள்ளங்களில் உருண்டு செல்லும் மழைத் தண்ணீரில் வாகனங்கள் மிதப்பது போலவே இருந்தன. நாங்களும் மிதந்துகொண்டிருந்தோம்.

ஓர் இடத்தில் "கிருஷ்ணா... இப்போ சாக்கடை தண்ணீரில் போயிட்டு இருக்கோம். கொஞ்ச நேரம் கழிச்சி நல்ல தண்ணீர் வரும் அப்போ கால்களை நனச்சிடுங்க." என்று ஹேம்நாத் கூறினான்.

"பரவாயில்லடா... வீட்டுக்கு போயி குளிச்சிடலாம். பிரச்சனை இல்ல..."

"நாலு வருஷம் முன்னாடி பெய்த மழையில் இந்த ஏரியாவுல ஒரே வெள்ளம்... என்னோட தொடை வரைக்கும் தண்ணி இருந்தது கிருஷ்ணா..."

"அப்போ... என்னோட இடுப்பளவு தண்ணி போயிருக்கும்... "

"ஆமா கிருஷ்ணா"

இப்படி பேசிக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் பொழுது காரில் சென்ற ஒருவனின் வண்டிச்சக்கரம் எங்கள் மீது சாலையிலுள்ள நீரை வாரி இறைத்தது.

"டேய்... பொடிப்பயல இப்பவும் சாக்கடை தண்ணியில தான் போயிட்டு இருக்கோமா?"

"ச்சே ச்சே... இல்ல கிருஷ்ணா, அந்த எடம் அப்பவே போயிடுச்சி கிருஷ்ணா. எதுக்கும் வீட்டுல போயி குளிச்சிடுங்க..."

"சரிடா... நாளைக்கு பார்க்கலாம்."

எனக்கான இடத்தில் என்னை இறக்கிவிட்டு ஹேம்நாத் புறப்பட்டான். மழை கொட்டிக்கொண்டே இருந்தது. உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டுள்ளதைப் போல ஈரமும், குளிரும் என்னை அப்பிக்கொண்டிருந்தன. அந்த மாதிரியான நேரங்களில் தான் உஷ்ணத்தின் ஆனந்தமும் புரிய வருகிறது.

வீட்டிற்கு சென்று சேரும் வரை அடைமழை பெய்து கொண்டிருந்தது. சுடுதண்ணீரில் குளித்து முடித்து என்னுடைய உறங்கும் அறைக்குச் சென்றேன்.

சிமெட் ஓடு (சீமை ஓடு) வேயப்பட்ட கூரையின் மேலிருந்து சொட்டு சொட்டாக மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஆயிரம் துளிகளுக்கு ஒரு துளி வீதம் கூரையின் ஐந்து இடங்களில் ஆங்காங்கு ஒழுகிக்கொண்டிருந்தது. அதை நாங்கள் பாத்திரங்கள் வைத்து சேமித்துக் கொண்டிருந்தோம். துளிகள் பாத்திரங்களில் விழும் போது டங்... டிங்... டொங்.. என்ற சத்தம் எழும்பி அறைமுழுவதும் எதிரொலித்தது. சுவர்களும், தரையும் ஓதம் ஏற்படுத்தி குளிரும்படி செய்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தான் நண்பர் மார்க் நெருப்புக் கட்டிகளை சட்டியில் ஏந்திக்கொண்டு வந்தார். அவை தங்கம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன.

பல வருடங்களுக்கு முன்பு நான் வாழ்ந்த கிராமங்களில் விறகு அடுப்புதான் பயன்படுத்துவார்கள். அப்பொழுதெல்லாம் மழைக் காலங்களிலும், குளிர் காலங்களிலும் சமயலரைக்குச் சென்று ஆனந்தமாகக் குளிர் காய்வேன். குழம்பு, பொரியல், வறுவலுடன் நெருப்பின் வாசனையும் ரம்யமாக இருக்கும்.

பிறகு அனைவரும் LPG அடுப்புகளுக்கும், மின் அடுப்புகளுக்கும் மாறிவிட்டார்கள். ஆகவே கரித்துண்டுகளையும், நெருப்பையும் பார்க்க முடிவதில்லை. நீண்ட நாட்கள் கழித்து தகதகவென ஜொலிக்கும் நெருப்புத் துண்டுகளைப் பார்த்த போது சொல்ல முடியாத சந்தோசம் பெருக்கெடுத்தது.

கைகளையும் கால்களையும் நெருப்பின் அருகில் நீட்டி மகிழ்ச்சியாக குளிர் காய்த்தேன். அடைமழைக்கு நெருப்பின் கதகதப்பு இதமாக இருந்தது. இளையராஜாவின் இதமான பாடல்கள் வானொலியில் வழிந்துகொண்டிருந்தது. பாதங்களை மழை நீரில் நனைத்துவிட்டு மீண்டும் நெருப்பில் காட்டினேன். மழைத் தண்ணீரில் கால்களை நனைப்பதும் நெருப்பில் காட்டுவதுமென என்னுடைய விளையாட்டு நெடுநேரம் தொடர்ந்தது. நள்ளிரவைத் தாண்டியும் விளையாட்டு அளிக்கவேயில்லை.

உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே படுக்கைக்குத் திரும்பினேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. கண்விழித்த போது மழை சன்னமாக கொட்டிக் கொண்டிருந்தது.

Friday, October 30, 2009

விருது - அமித்துவின் அம்மாவிடமிருந்து...

கி.ரா பங்குபெற்ற கேணி நிகழ்ச்சியில் தான் அமித்துவின் அம்மா சாரதாவை நேரில் பார்க்க நேர்ந்தது. எங்களுக்கிடையிலான இடைவெளி அதிகமாக இருந்ததினால் ஒருவருடன் ஒருவர் பேச இயலவில்லை. துளசி டீச்சரையும் என்னையும் பார்த்தவுடன் முகமெல்லாம் சிரிப்பு. சக மனிதர்கள் என்ற முறையில் அந்த அன்பு கலந்த சிரிப்பைத் தவிர வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்.

அந்த அன்பின் முறையில் 'நான் வாசித்த தமிழ் புத்தகங்கள்' பதிவிற்கு Scrumptious blog award கொடுத்திருக்கிறார்கள். அதே அன்பை வேறுயாருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது கொஞ்சமும் யோசனையின்றி சில நண்பர்கள் ஞாபகம் வந்தார்கள். அவர்கள்...

புத்தகம்
சேரலாதன் - கருப்பு வெள்ளை
J ஞானசேகர் - நிர்வாணம்
பீ'மோர்கன் - வழிப்போக்கன்
ரெஜோவாசன் - பட்டாம்பூச்சி விற்பவன்

நான் தொடர்ந்து விருப்பமுடன் வாசிக்கும் பதிவு சேரலின் 'புத்தகம்'. இந்த வலைப்பூவில் கவிதை, சிறுகதை, நாவல் என்று அவன் தேடிப்படிக்கும் புத்தகங்கள் பற்றிய தேவையான குறிப்புகளை நிறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்ந்து J ஞானசேகர், பீ'மோர்கன் மற்றும் ரெஜோவாசன் ஆகியோரும் தாங்கள் வாசிக்கும் புத்தகங்களை அறிமுகப் படுத்துகிறார்கள்.

இவர்களில் பீ'மோர்கன் புத்தகங்களைப் பற்றி எழுதும் பதிவுகள் அலாதியாக இருக்கும். புத்தகங்கள் பற்றிய குறிப்பு எங்கிருந்தாலும் தேடிப்படிக்கும் பழக்கமுடையவன் என்பதால் சேரல் மற்றும் நண்பர்களின் பதிவுகள் வாசிக்கக் கிடைத்தது மகிழ்ச்சியே. புத்தகம் தவிர்த்து இவர்கள் எழுதும் தனிப் பதிவுகளையும் விருப்பி வாசிப்பதுண்டு. என்னுடைய நேசத்தை இந்த நால்வருடனுமே பகிர்கிறேன்.

அன்பே சிவம் (முரளி பத்மநாபன்)

இவருடைய நட்பு புத்தகங்களின் மூலம் கிடைத்தது. சிறுகதைப் பட்டறையில் தான் முதன் முதலில் நேரில் சந்திக்க நேர்ந்தது. பயணம், சினிமா, புத்தகம் என தான் ரசித்த விஷயங்களைப் பதிவிடுகிறான். சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன். இனிய நண்பன்.

முதல் சுவடு (விஷ்ணு குமார்)

சுந்தர ராமசாமி பற்றிய 'நீ யார்' ஆவணப்படம் பார்க்கச் சென்றிருந்த இடத்தில் தான் முதன் முறையாக விஷ்ணு எனக்கு அறிமுகமானான். பாரதியின் மீது தீராத காதல் கொண்டவன். 'தமிழ் கவிதை' புனைவதில் மிக்க ஆர்வம் உடையவன். இவனுடைய தாய் மொழி சவுராஷ்டா என்பது அவனாக சொன்னாலன்றி அடுத்தவருக்குத் தெரியவராது. ஜப்பான் மொழியை வேறு பயின்று கொண்டிருக்கிறான். பழகுவதற்கு இனிமையானவன். எதிர்காலத்தில் நல்ல படைப்பாளியாக, மொழிபெயர்ப்பாளனாக வருவான் என்று எதிர்பார்க்கிறேன். அவனுடைய சில வரிகள்...

நான்

என் தகப்பன்
அளித்திட்ட
பல துளிகளில்
என் தாய்
தேர்ந்தெடுத்த
ஒற்றைத் துளி
'நான்'.

பப்பு - (பிரபு)

தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை எளிய தமிழில் அழகாக பகிர்ந்து கொள்கிறார். இவருடைய ஒவ்வொரு பதிவிலும் ஹாஷ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

உணர்தலும் உணர்தல் நிமித்தமும் (முத்துசாமி பழனியப்பன்)

விஷ்ணுவுடன் கன்னிமரா நூலகத்தில் புத்தகம் வாங்கச் செல்லும் போது இவருடன் பழக்கம் ஆரம்பித்தது. கவிதை எழுதுவதில் தீவிர ஆர்வம் உடையவர். வார்ப்பு, உயிரோசை, தடாகம், கீற்று, அகநாழிகை, திண்ணை, தமிழ் ஆதர்ஸ் என பல இணைய இதழ்களில் இவருடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முடிவாக சுந்தர ராமசாமியின் கிருஷ்ணன் நம்பி பற்றிய நினைவோடை தான் இங்கு ஞாபகம் வருகிறது. "நான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன். அப்போது எனக்கு ஒரு ஆள்கூடத் தேவையில்லை. ஒரு முகம் அது மட்டும்தான் தேவையாயிருந்தது. அவன் என்ன கேட்கிறான், என்ன புரிந்துகொள்கிறான், என்ன எதிர்க்கேள்வி கேட்கிறான் என்பது போன்ற விஷயங்களைப் பொருட்படுத்திப் பேசும் நிதானமோ, பக்குவமோ எனக்கு அப்போது இருந்திருக்கவில்லை. நான்தான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன்." (நினைவோடை -கிருஷ்ணன் நம்பி)

எனக்கு முகம் கூட தேவையில்லை அவர்களின் கண்கள் மட்டும் இருந்தால் போதும் என்று எழுதித் தள்ளுகிறேன். நண்பர்களும் சிரமம் பார்க்காமல் தொடர்ந்து வாசிக்கிறார்கள். என்ன எழுதுகிறேன்?, எப்படி எழுதுகிறேன்?, எதற்காக எழுதுகிறேன்? என்ற முன்யோசனை எதுவும் இல்லாமல், அந்த நேரத்தில் எண்ணங்களில் தோன்றுவதை எழுதி வலைப்பூவில் சேர்ப்பிக்கிறேன். அதை நண்பர்கள் படித்துப் பாராட்டும் போதுதான் எங்கோ உறுத்துவது போல் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் அனைவருமே பதிவுலகில் நான் சேர்ந்த முக்கியமான உறவுகள். இதனை விருதுக்கான பரிந்துரை என்பதைவிட அன்பைப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்றே நினைக்கிறேன்.

சாரதா சொல்வதுபோல் "மேற்கூறியவர்கள் மூலம் இந்த அன்பு நிறைய பேருக்கு விருதின் வாயிலாக பல்கிப் பெருகும் என்று" நம்புகிறேன்

இந்த விருதினை எனக்கு அளித்த சாரதாவிற்கு மிக்க நன்றி.

:)

அன்புடன்,
கிருஷ்ண பிரபு.

Monday, October 19, 2009

கவிதை வாசிப்பு...1 - சேரல்

நட்சத்திரத் தொழிற்சாலை

அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன
நதி விழும்
மழைத்துளிகள் - சேரலாதன்
(http://seralathan.blogspot.com/2009/10/blog-post_19.html)

******************************
"அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன" - மழை நாட்களில் தெரு விளக்குகள் விட்டு விட்டு வெளிச்சத்தை உமிழ்ந்து நட்சத்திரம் போல் தோற்றம் அளிக்கின்றன. இதுவரை கவிதையைப் புரிந்து கொண்ட எனக்கு அதற்கு மேல் மூளை வேலை செய்யவில்லை.

'நதி விழும்
மழைத்துளிகள்' - நதி எப்படி விழும். மழைத்துளிகள் தானே வானத்திலிருந்து பூமியை நோக்கி கீழே விழும்.

மேலே உள்ள தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகத்திற்கும், கடைசியில் உள்ள வரிகளுக்கும் சமந்தமே இல்லையே என்று சேரலுக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து எனது சந்தேகத்தைக் கேட்டேன்.

கி.பி: சேரல் உன்னுடைய கவிதையைப் படித்தேன். கொஞ்சம் கேள்வி கேட்கணுமே... வேலையா இருக்கையா என்ன?
சேரல்: அதனால என்ன , கேளுங்க கிருஷ்ணா... :-)
கி.பி: தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகம் புரியுது. அதற்கு அடுத்த இரண்டு வரிகளுக்கும் பாயைப் பிராண்ட வச்சுட்டயே!
சேரல்: இல்ல கிருஷ்ணா, அங்க தான் தப்பு பண்றீங்க... மழைத்துளிகள் தான் இங்கு நட்சத்திரங்களுக்கு உவமையாகின்றன.
கி.பி: இதோ பாரு சேரல், இந்த fraud-வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம்.
சேரல்: (சிரிக்கறாரு...) நான் ஆத்தங்கரைப் பக்கமா இருக்கேன்னு வச்சுக்கோங்க. அங்க தெரு விளக்கு விட்டு விட்டு எரியுது. இது ஒரு நிகழ்ச்சி... இந்த வெளிச்சத்தின் ஊடக நான் மழைத்துளியை பார்க்கிறேன்.
கி.பி: சரி...
சேரல்: Street Lamp விட்டு விட்டு எரியும் போது மழைத்துளியில் வெளிச்சம் பட்டு, துளிகள் அனைத்தும் எனக்கு நட்சத்திரம் போல் காட்சி அளிக்கின்றன. எனவே "நட்சத்திரங்களாகிய மழைத் துளிகள் நதியில் விழுகின்றன - (நதி விழும்
மழைத்துளிகள்) என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.பி: அடடே விளக்கம் நல்லாத்தான் இருக்கு . நன்றி சேரல்...

Tuesday, October 13, 2009

கேணி இலக்கிய சந்திப்பு - கி ராஜ நாராயணன்

கன்று பசுவினைத் தேடி பால் குடிக்க ஓடுவதைப் போல துள்ளலுடன் கேணி இலக்கிய சந்திப்புச் சென்றிருந்தேன். பல வருடங்களாகவே கி ரா-வைப் பார்த்துப் பேசவேண்டும், "கதை சொல்லுங்கள் ஐயா" என்று உரிமையுடன் கேட்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கேணி இலக்கிய சந்திப்பின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் முதல் வரிசையில் உட்கார்ந்தேன். ஒரு பெண் 'உன்னதம்' இதழைப் படித்துக் கொண்டிருந்தார்கள். நியூசிலாந்து பதிவரான 'துளசி கோபால்' என்று பிறகு தெரியவந்தது. வாயைத் திறந்தால் ஹாஸ்யம் தான். அவருடைய பதிவைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவரின் மூலம் 'நாச்சியார்' அறிமுகமானார்.இவர்களைத் தவிர வேறு சில பரிட்சயமான பதிவர்களையும் பார்க்க முடிந்தது. முக்கியமாக "அமித்துவின் அம்மா" வந்திருந்தார்கள். அமித்துவைப் பிரிந்து வந்த பதட்டம் அவர்களுடைய முகத்தில் தெரிந்தது.

ஞானியுடன் கி.ரா தம்பதியர் வருவதைப் பார்த்து அசந்துவிட்டேன். அவ்வளவு அழகான ஜோடி. குழந்தைகளின் குதூகல மகிழ்ச்சி அவர்களுடைய முகத்தில் தெரிந்தது. ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்கின்றனர். கூட்டத்தினரைப் பார்த்து புன்னகைத்தவாறே தெரிந்தவர்களின் ஷேம நலன்களை விசாரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தனர்.

"கரிசல் தந்தை புதுச்சேரியில் எப்படி இருக்கிறார், எந்த சூழலில் வாழ்கிறார், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்" என்று சொல்லி ஞானி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

"பிரியமான அன்பர்களே... கேணி இலக்கிய சந்திப்பைப் பற்றி ஞானி என்னிடம் சொல்லியவுடன், இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சென்னையில் இப்படி ஒரு சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. இந்தத் தோட்டம், சூழல் மற்றும் அமைப்பு கருதியே பார்க்க வந்தேன். மேலும் இந்தச் சந்திப்பை ஒரு கலந்துரையாடல் மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒரு திருப்தி இருக்கும்" என்று உரையை ஆரம்பித்தார்.

அறிமுக உரையில் ஞானி ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டார். 'நான் என்ன தலைப்பில் பேசப்போகிறேன்' என்ற தகவல் தான் அது. எனக்கு எந்தத் தலைப்பும் ஒத்து வராது. அதனால் நாட்டுப்புறக் கதைகள் பற்றிப் பேச விரும்புகிறேன். என்னுடைய கதைகளை விட நாட்டுப்புறக் கதைகள் தான் என்னை வசீகரம் செய்தது.

ஆனால் 'மணிக்கொடி' முதல் எல்லோரும் நாட்டுப்புறக் கதைகளை ஒதுக்கித்தான் இருக்கிறார்கள்.

40 எழுத்தாளர்கள் என்னைப் பற்றி கருத்து தெரிவித்த புத்தகம் ஒன்று வெளிவரப் போகிறது.அதில் "ஏன் இன்னும் கிராமியக் கதைகளைக் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்? அதைத் தாண்டி ஏன் எழுதவில்லை" என்று என்னிடம் கேட்கிறார்கள்.

கரிசல் இலக்கியம் என்பது ஒரு சமுத்திரம் மாதிரி. சமுத்திரத்தில் ஏராளமாக மீன்கள் இருப்பது போல கிராமியக் கதைகளும் நிறையவே நம்மிடம் இருக்கிறது. தேடல் தான் நம்மிடம் இல்லை. ஆரம்பத்தில் கிராமியக் கதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டேன். அதைப் பார்த்து வேறு சிலர் தாமாக முன்வந்து சில கதைகளைக் கொடுத்தார்கள்.

நாட்டுப்புறக் கதையை சொல்ல ஆரம்பித்தால் எங்கோ கேட்டது போலவே இருக்கும். ஒரு பாகவதர் 25 ராகங்களை வைத்துக் கொண்டு வாழ் நாள் முழுவதும் கச்சேரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏன் அந்த ராகங்களையே அவர் திரும்பத் திரும்பப் பாடுகிறார் என்று கேட்கிறோமா? விருப்பம் இருக்கிறது என்பதால் கேட்கிறோம். அவரும் பாடுகிறார். அது போலதான் கிராமியக் கதைகளும்.

மறுபடியும் மறுபடியும் ஒரே கதைகளை வேறுவேறு கற்பனைகளில் கேட்கும் பழக்கம் இன்றுள்ள குழந்தைகளுக்கு இல்லை. ஏனெனில் அவர்களை அவசரமா பழக்கிட்டோம். "தூங்க சொல்ல எழுப்பி வெளிக்கி(கக்கூஸ்) இருக்க வக்கிறோம், குளிக்க வைக்கிறோம், பள்ளிக்கு அனுப்புறோம். புதுப்புது விஷயங்களை அவர்கள் தெரிஞ்சிக்க வேக வேகமா பழக்கறோம். அதெல்லாம் தப்பு. முன்னடிஎல்லாம் அப்படி இல்ல.

இந்தக் கூட்டத்தை "ராகுகாலக் கூட்டம்"னு சொல்லலாம். ஏன்னா ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகுகாலம். சரியா அந்த நேரத்துல இந்தக் கூட்டத்தை ஞானி ஏற்பாடு பண்ணியிருக்காரு. ராகு போல கொடுக்கரவனும் இல்லை, கேது போல கெடுப்பவனும் இல்லைன்னு சொல்லுவாங்க உங்களுக்குத் தெரியுமா?

இந்த இடத்தில் ஜோசியம் மற்றும் சகுனம் சமந்தமான இரண்டு கதைகளைச் சொன்னார். (ஜோசியரிடம், வியாழன் அவருடைய மகனுக்கு ஜாதகம் கணித்தது மற்றும் நாய் ஒன்று சகுனம் பார்த்து வெளியில் செல்ல நினைக்கும் கதை). 'கிராமியக் கதைகள்- கி. ரா' என்ற புத்தகத்தில் அந்தக் கதைகளைப் படித்த ஞாபகம்.

"இப்படி பேசிக்கிட்டே போனா வெறுப்பா இருக்குதோ?. வேறுமாதிரி வேணும்னா பேசலாமா" என்று சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். அந்த நேரம் பார்த்து கிராவிடம் ஞானி ஒரு கேள்வி கேட்டார்.

"ஆரம்பத்தில் இடது சாரியில் இருந்த நீங்கள் பிறகு வேறு திசையில் பயணித்தது எப்படி? உங்களுடைய நம்பிக்கையில் எதனால் மாற்றம் வந்தது?"

"அதாவது ஆரம்பத்துல கம்யுனிஸ்டா இருந்தவனுக்கு, இப்ப கடவுள் நம்பிக்கை எப்படி வந்துச்சுன்னு கேக்குறீங்க(எல்லோரும் சிரிக்கிறார்கள்) அப்படிதானே?" - என்று பேச்சைத் தொடங்கினார்.

ஆங்கில மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் சமந்தமான ஆராய்ச்சியை தொடர்புபடுத்தி அழகான கதை ஒன்றைச் சொல்லி ஞானியின் கேள்விக்குப் பதிலளித்தார்.

மேலும் பெரியார் ஒரு முறை பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மின்சாரம் (ஜெனரேட்டர்) தடைப்பட்டு, ஒலிபெருக்கியில் அவர் குரல் வெளிவரவே இல்லையாம். பின்னர் சரி செய்யப்பட்டு மீண்டும் பேசத் தொடங்கினாராம். சில விநாடிகளில் மீண்டும் ஜெனரேட்டரில் கோளாறு ஏற்பட்டதாம். இதுபோல் பல முறை நடந்ததாம். பெரியார் சலித்துப் போய், ‘அட ராமா!’ என்று உரக்கச் சொல்லிவிட்டாராம். அவரே தன்னை மறந்த நிலையில் மனதின் ஆழத்திலிருந்து அப்படி சொல்லி இருக்கிறார். இது எல்லோருக்கும் நேர்வது தானே என்று கூறினார்.

இறுதியில் "கி ராவிற்கு ஒரு விஷயத்தில் நம்பிக்கை இருந்தது. இப்பொழுது அது மாறி இருக்கிறது அவ்வளவுதான்" என்று முடித்தார்.

பிறகு எதைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் இருக்கிறது என்று பேசத் தொடங்கினார்.

கடவுள் தொடங்கி, ராஜாக்கள் (ஊர்சுற்றி ராஜாக்கள், நாடாளும் ராஜாக்கள்), பிச்சைக்காரர்கள், பரதேசி, சாதுக்கள், துறவிகள், தேவர்கள், சபைக்கு முன்னாள் சொல்ல முடியாத சில கதைகள் (எல்லோரும் சிரிக்கிறார்கள்), பேய், பிசாசு, பூதம், தாழ்வு மனப்பான்மை, திமிர், கர்வம், கோபம், சோகம், இது போன்ற உணர்வுகள், வதந்திகள், அது பரவும் விதம், அறிவாளிகள் பற்றி, மாமியார்-மருமகள் பிரச்சனை, தகப்பன்-மகன், கணவன் மனைவி, பொறாமை, லஞ்சம், வீரம், காதல், நட்பு, பாலியல், ஞாய தீர்ப்பு என எவற்றைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் வந்திருக்கிறது என்று விளக்கினார்.

லஞ்சம், ஞாய தீர்ப்பு, சகுனம், தாழ்வு மனப்பானை பற்றி அவர் கூறிய உதாரணக் கதைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றிருந்தது.

கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பெரும்பாலும் கதைகளிலேயே பதில் கூறினார். ஒருவர் ஹாரி பார்ட்டர் கதைகளை முன்வைத்து கேட்டக் கேள்விக்கு, சுவாரஸ்யமான மாயக் கதை (பெருவிரல் குள்ளன் கதை) ஒன்றைக் கூறினார். நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். நேரம் 7 மணியைத் தாண்டிச் சென்றதனால் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் 'உன்னதம்' , 'அகநாழிகை' சிற்றிதழ்களை அறிமுகம் செய்தது மகிழ்ச்சியாய் இருந்தது. விஷ்ணு அசோகமித்ரனின் நாவலை எனக்காக வாங்கி வந்திருந்தான். அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு திரும்புவதற்கு மனமில்லாமல் கி. ராவின் நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.

இதே சந்திப்பைப் பற்றிய இதர பதிவுகள்:

ரவிபிரகாஷ் - ராகு காலக் கூட்டம்!
கி.ராவுடன் 'கேணி’யில்...

பி.கு:-
1.இந்தப் பதிவை கி ரா-வின் இயல்பான மொழியில் பதிய வேண்டும் என்று தான் நினைத்தேன். அவருடைய மொழியை என்னை மறந்து கேட்டது என்னமோ உண்மைதான். ஆனால் எழுத வரவில்லை. அவர் பேசியதில் 5 சதவீதம் கூட இங்கு பதியவில்லை. அவர் பேசியதின் Outline -என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
2. அனைவருடைய வசதிக்கும் ஏற்றவாறு, அடுத்த மாதம் முதல் கேணி இலக்கிய சந்திப்பு மாலை 3.30 மணிக்கு நடக்கும் என்று அறிவித்தார்கள்.

Monday, September 14, 2009

சென்னை சிறுகதைப் பட்டறை

நினைத்துப் பார்த்தால் எல்லாமே கனவு போல் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பன் கிறிஸ்டோஃபருடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பசியுடன் அலைந்து திரிந்த நாட்கள் ஞாபகம் வருகின்றன. அப்பொழுதெல்லாம் "அல்ஜீப்ரா, ரியல் அனாலிசிஸ், டிரிக்நோமேத்ரி" என தொல்லைகளின் மொத்த உருவங்கள் அவனுடைய கைகளில் இருக்கும். என்னிடமோ "காலச்சுவடு, தீராநதி, உயிர்மை" போன்ற இலக்கிய இதழ்கள் இருக்கும். இதென்ன விந்தை! இந்த இதழ்களில் எழுதுபவர்கள் எல்லோரும் புது உலகின் வாசல்களைத் திறக்கிறார்களே என்று வியப்பாகவும் பரவசமாகவும் இருக்கும். சிற்றிதழ்களுக்கு எழுதுபவர்கள் எங்கு சென்று கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற கேள்வியும் உடன் எழும். அதைப்பற்றி பச்சையப்பன் கல்லூரியின் மாணவர் விடுதியில் நண்பர்களுடன் பேசி இருக்கிறேன்.

"டேய் எக்ஸாம் வருதுடா... உருப்புடற வழியைப் பாருடா...இப்படியே பேசிட்டு இருந்த நாசமா போயிடுவ" என்று கிறிஸ்டி தலையில் கொட்டுவான். அவனுடைய அக்கறையினால் சில பாடங்களில் தேறினேன் என்பது உண்மை.

கல்லூரி முடித்து (வருடங்கள் மட்டுமே கடந்தது) வேலையைத் தேடவேண்டிய நிர்பந்தம். அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு சொந்தக் காலில் நிற்கப் பிரயத்தனப்பட்டேன். என்னுடைய அக்காவின் மூலம் நல்ல வேலையும் கிடைத்து, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கையில் சிவராமனின் "உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு - சிறுகதைப் பட்டறை" பதிவு கண்ணில் படுமா...!?.

அதுமட்டுமில்லாமல் பதிவெழுதும் நண்பர்கள் முரளி, சேரல், விஷ்ணு மற்றும் அமித்துவின் அம்மா (சாரதா) ஆகியோரும் கலந்து கொள்ளப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். "ஈஸ்வரா... தமிழ் கூறும் நல்லுலகை என்னிடமிருந்து காப்பாற்று" என்று நானும் மனுச்செய்திருந்தேன்.

Sep 13, 2009 - 9 மணிக்கு முன்பே கதைப் பட்டறை நடக்கும் அரங்கிற்குச் சென்றுவிட்டேன். யுவன் சந்திரசேகரும், பாஸ்கர் சக்தியும் சீக்கிரம் வந்திருந்தார்கள்.

யுவனுடன் இதற்குமுன் பரிச்சயம் இல்லை. பாஸ்கர் சக்தியை யாரென்றே தெரியாமல் அவருடன் பேசியிருக்கிறேன். அது ஒரு வித்யாசமான அனுபவம். பாலு மகேந்திரா பங்கு பெற்ற கேணி சந்திப்பிற்கு அரை மணி நேரம் முன்னதாகச் சென்றிருந்தேன். ஒருவர் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார். அவரைக் கூப்பிட்டு நீங்கள் யார்? ஞானியுடைய நண்பரா? இங்கிருப்பவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களா? என்பது போன்ற தொடர் கேள்விகளைக் கேட்டேன்.

"நான் ஞானியின் நண்பன் தான். ஏதோ கொஞ்சம் எழுதுகிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு, செய்து கொண்டிருந்த வேலையில் கவனம் செலுத்தினார். இந்த சிங்காரச் சென்னையில் முகம் கொடுத்து பேசுவதற்கு ஆளில்லாத போது, வலிய வந்து பேசுபவனை நிராகரித்து வேலை செய்கிறாரே...என்ன ஜென்மமோ என்று மனதிற்குள் குறைபட்டுக் கொண்டேன். நான் கேள்வி கேட்டுத் துளைத்தவர் தான் பாஸ்கர் சக்தி என்பது நிகழ்ச்சி முடியும் தருணத்தில் தான் தெரியவந்தது.

சிறுகதைப் பட்டறைக்கு வந்திருந்த அவரின் அருகில் சென்று அனைத்தையும் ஞாபகப்படுத்தினேன். "ஓ... அது நீங்கள் தானா" என்று சிரித்தார்.

பிறகு அவரிடமிருந்து பா. ராகவனிடம் சென்றேன். அலகிலா விளையாட்டு நாவலைப் பற்றி எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன். அவருக்கு நீண்ட நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்த மின்னஞ்சலை ஞாபகப்படுத்தினேன். "படிச்சேன்...படிச்சேன்... புத்தகம் கெடச்சுதா" என்று சிரித்தார். இதுவரை அந்த நாவலை ஏழு பேர் வாங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறேன் என்றதும் சிரித்தார். வேதங்கள் பற்றி நிறைய இடங்களில் வருகிறதே...பாட சாலையில் படித்தவரா என்றதற்கு "ஆம்" என்றார். அப்பொழுது பார்த்து செல்பேசியில் அழைப்பு வர அவரிடமிருந்து விலகிச் செல்லும் படி நேர்ந்தது.

அடுத்தது யுவனிடம் பேசினேன். பழகிய நண்பரைப் போல் விருப்பத்துடன் பேசினார். ஒளிவிலகல் புத்தக முன்னுரையில் "இரண்டு கவிதைத் தொகுப்பு வெளிவந்தும் கவிதைகள் மீதான தெளிவிற்குப் பதிலாக குழப்பமே அதிகமாகி இருக்கிறது. இப்பொழுது சிறுகதைத் தொகுப்பு வெளிவரும் சமயத்திலும் சிறுகதைகள் மீதான சிடுக்குகள் அதிகமாகிறது. ஆனால் அதைக் கண்டு தீர்ப்பது வாசகர்களின் வேலை" என்று சொல்லியிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்தேன். ஏற்புடைய சில மறுமொழிகளைக் கூறினார்.

அவரிடம் பேசிவிட்டுத் திரும்பும் சமயத்தில் பத்ரி எதிரில் வந்தார். அவருடைய கணக்கு பதிவின் சில பகுதிகள் படிக்கக் கிடைக்கவில்லை அதுபற்றி அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன்.

கி பி: Good Morning பத்ரி. உங்களுடைய கணக்குப் பதிவு...
பத்ரி: மெயில் பார்த்தேன். அதில் சில பிரச்சனை இருக்கு. சீக்கிரமே சரி செய்துவிடுகிறேன்.
கி பி: என்னுடைய பல நண்பர்களுக்கு அந்தப் பதிவினை பரிந்துரை செய்திருக்கிறேன்.
பத்ரி: இல்ல... இல்ல... இப்போ வேணாம். Word Press-ல மாத்திட்டு சொல்றேன். பிறகு Recommend பண்ணுங்கோ.
கி பி: நீங்கள் ஏன் அதை புத்தகமாகக் கொண்டு வரக்கூடாது?
பத்ரி: அப்படி செய்ய முடியாது. யோசிக்கலாம்...
நான்: தயவு செய்து புத்தகமாகக் கொண்டு வாருங்கள். கிழக்கின் நிறுவனர்... நீங்களே இப்படிச் சொல்லலாமா?"
பத்ரி:"Publisher என்பதால் தான் அப்படிச் சொல்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

வெளியூரிலிருந்து வரும் நண்பர்களுக்காக சிறிது நேரம் காத்திருந்துவிட்டு சிவராமனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதலில் பேசினார். தனது வாழ்வியல் அனுபவங்களை எப்படி கதைகளுக்கான கருவாக பாவிக்கிறார் என்று நீண்ட உரையாற்றினார். இவர் பேசிக்கொண்டே இருந்தபோது மின்சாரத் தடை ஏற்பட்டது. குறைந்த வெளிச்சத்தின் கருமையான இருளில் ஒரு நிமிடம் ஆழ்ந்திருந்தோம். எங்கும் அமைதி பரவிக்கிடந்தது. பிறகு தடையில்லா மின்சாரம் பாயவும் நிகழ்ச்சி தொடர்ந்தது. அவருடைய கிராமம் சார்ந்த அனுபவங்களையும், அதன் தாக்கத்தில் எழுதிய கதைகளையும் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார்.

கதையில் சுவாரஸ்யம் இருக்க வேண்டும் ஆனால் படிப்பினை (Message) இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று உரையை முடித்தார். அதன் பிறகு கேள்வி நேரம் ஆரம்பமானது. அனைவருடைய கேள்விகளுக்கும் நிதானமாக பதில்கள் கூறி அவருடைய பகுதியை நிறைவு செய்தார்.

இரண்டாம் பகுதியாக "Magical Realism" பற்றி யுவன் சந்திரசேகர் அருமையாக உரையாற்றினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சாலமன் பாப்பையாவிடம் பேச்சு மற்றும் இலக்கியம் கற்றது, புனைவுக் கதைகளின் களம், அதைக் கண்டடையும் விதம், கவிதை, சாருவினுடனான மோதல் என பல விஷயங்களைத் தொட்டுச் சென்றார்.

ஒருவனுடைய கவிதை இன்னொருவனுக்குப் புரியாது எழுதியவர்களுக்கு மட்டுமே புரியும் என்று சொல்லியது என்னை வெகுவாக தேற்றியது போல் இருந்தது. ஏனெனில் கவிதைகளின் மீதான வாசிப்பில் ஆகச்சிறந்த வெகுளி நான்.

யுவனிடம் எனக்குப் பிடித்தது மற்ற படைப்பாளிகள்(பாஸ்கர், தேவதாஸ், பா ரா) பேசும் பொழுது தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து செல்வது போல் அனைவரையும் நோட்டம் விட்டார். கேள்வி கேட்பவர்களின் கண்களைக் கூர்ந்து கவனித்தார். அனைவரிடமும் இயல்பாகப் பழகினார்.

மதிய உணவிற்குப் பிறகு மொழிபெயர்ப்புக் கதைகள் பற்றி உரையாட திரு: தேவதாஸ் முன்வந்தார். பல ரஷ்ய, ஜப்பானிய, ஜெர்மானிய படைப்பாளிகளையும் அறிமுகம் செய்தார். மொழிபெயர்ப்பிலுள்ள கடினங்களும், மெத்தனங்களும் இந்தப் பகுதியில் தெரியவந்தது.

கேள்வி நேரத்தின்போது பல மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வரும் படைப்புகளின் தரம் பற்றி அனைவரும் விவாதம் செய்தார்கள். தேவையில்லாத பல கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்களோ என்று சலிப்பு ஏற்படும்படி இருந்தது. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு யுவன் அளித்த மறுமொழி விவாதத்தை சுவாரஸ்யமாக்கியது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, இறுதி பகுதியாக "பத்திரிக்கைகளுக்கு சிறுகதை எழுதுவது எப்படி?" என்பதை விளக்க கிழக்கின் முதன்மை ஆசிரியர் பா. ராகவன் முன்வந்தார். உதவி ஆசிரியராக தனக்கு நேர்ந்த படிப்பினைகள், அனுபவங்கள் என அனைத்தையும் நகைச்சுவை இழையோட அனைவரிடமும் பகிர்ந்து கொண்டது ரசிக்கும் படியாக இருந்தது. பலருக்கும் அறிமுகமான பிரபல எழுத்தாளர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகினார். அவரை நெருங்கி கேட்டக் கேள்விகளுக்குப் பணிவுடன் பதில் கூறினார்.

பைத்தியக்காரன் (சிவராமன்) தனது நன்றியுரையில் பாஸ்கர், யுவன், தேவதாஸ், பா ராகவன், பத்ரி, நர்சிம் ஆகியோருக்கு நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தமிழகத்தின் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருந்த பல பதிவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரிந்து சென்ற கல்லூரித் தோழர்கள் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொள்வதைப் போல் அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். எவ்வளவு வாஞ்சையுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அனைவருடைய கண்களிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. படைப்பில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்தப் பட்டறை தீனி போட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் சிறக்க வாழ்த்துக்கள்.

"முரளி" மற்றும் "சேரல்" எனக்காக வாங்கிவந்திருந்த பல புத்தகங்களை அன்புடன் தந்தார்கள். நானும் சில புத்தகங்களை அவர்களுக்குக் கொடுத்தேன். அன்புடன் பெற்றுக் கொண்டார்கள்.

கூட்டம் தொடங்குவதற்கு கால்மணி நேரம் முன்னதாக வருகிறேன் என்றால், கூட்டம் முடிந்த ஒருநிமிட நேரத்தில் கிளம்ப்பும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். அதன்படி புறப்படத் தயாரானேன். எனக்குத் தெரிந்த சிலரிடம் கைகுலுக்கி விடைபெற்று சிவராமனுக்கு நன்றி சொல்லிவிட்டு சாலையில் இறங்கி நடந்தேன். கல்லூரி நாட்களில் படித்த ஆங்கில வரிகள் ஞாபகம் வந்தன.

எல்லா சாலைகளுக்கும் முடிவுண்டு
பயணங்கள் எல்லாம் சாலையில் தான்
பயணங்கள் முடிவுக்கு வரலாம். சில நாட்களில்
மீண்டும் தொடரலாம் - அப்பொழுது நீ
பிரபஞ்சத்தையே கண்டடையலாம், ஒரு நாள்
பிரமஞ்சம் உனக்குள் இருக்கும் - யாரோ மகராஜ்