Sunday, August 28, 2016

ஆத்மாநாம் சர்ச்சை - சமயவேல் கருப்புசாமி

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 26, 2016 - நேரம்: 3.02 PM

ஆத்மாநாம் கவிதைகளின் பிரசுரிப்பின் பாடபேதங்கள் மற்றும் பிழைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டிருப்பது தமிழின் மிக முக்கியமான கவிஞர் பிரம்மராஜன்.இது குறித்து என்னுடைய நிலை:

1. பாடபேதங்கள் பற்றிய கட்டுரை இவ்வளவு தாமதமாக வருவது ஏன்?
2. பிரம்மராஜனைத் தொடர்பு கொண்டு அவரோடு இணைந்து ஒரு திருத்திய பதிப்பு கொண்டு வரலாமே. பிரம்மராஜன் தமிழ் கவிதைகளுக்கோ ஆத்மாநாமுக்கோ எதிரி இல்லையே.
3. இந்தப் பிரச்னையில் சில நண்பர்கள் அநாகரிகமான மொழியில் பதிவிடுதல் தேவையில்லை.
4. பாடபேதங்கள் என்பது எல்லா மொழிகளிலும் இருக்கும் சர்வ சாதாரணமான விஷயம். அதற்காக பிரம்மராஜன் போன்ற முக்கியமான படைப்பாளியை மட்டம்தட்டும் கட்டுரையாளரின் குரல் அதிர்ச்சியளிக்கிறது.
5. 90களில் யவனிகா ஶ்ரீராம் தொடங்கி சபரிநாதன் வரை எழுதும் கவிதைகளின் மொழியில், பிரம்மராஜன் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் மொழியின் தாக்கம் மிக அதிகம். அவ்வளவு முக்கியமான கவிஞர் பிரம்மராஜன்.
6. லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் வெளிப்படுத்தும் உழைப்பு மிகு பதிவுகளை மதிக்கிறேன். உணர்ச்சிவசப்படத் தேவையில்லாத ஒரு அற்ப விஷயம் இது.

பின்னூட்டங்கள்:

Riyas Qurana: இந்த அணுகுமுறை மிகவும் பிடித்திருக்கிறது. மகிழ்வாகவும் இருக்கிறது. மிக்க அன்பு தோழர்.

Tk Kalapria: 2. பிரம்மராஜனைத் தொடர்பு கொண்டு அவரோடு இணைந்து ஒரு திருத்திய பதிப்பு கொண்டு வரலாமே. பிரம்மராஜன் தமிழ் கவிதைகளுக்கோ ஆத்மாநாமுக்கோ எதிரி இல்லையே.// இப்போதைய பதிப்பினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அதற்கு addenda/ erratum இணைத்துக் கொள்ளலாம்.இது தவிர்த்தும் நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் சரிதான்

அ. ராமசாமி: காலச்சுவடு ஆதரவாளர்கள் போலக்காட்டிக்கொண்டு பதிவு எழுதுபவர்களைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு காலச்சுவடு பதிப்பகம் மற்றும் இதழுக்கு உண்டு. அதன்சார்பில் ஒருவர் பேசியாகவேண்டும். தவறும்போது தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவே தோன்றும்

கவிஞர் ஜெயதேவன்: எனக்கு சற்று தூரமான விவாதம் என்றாலும் அனைவர் பதிவுகளை வாசித்தேன்..பாரதி முதல் பல முன்னோர் படைப்புத் தொகுப்பில் இது மாதிரி குறை நேர்ந்தது உண்டு..அடுத்த பதிப பில் குறையை சுட்டி திருத்தி. வெளியிடுவர்..இது நடைமுறை..இந்த அளவு விவாதம் போவது என்ன ஆரோக்கியம்.

Perundevi Perundevi: இந்தக் கட்டுரையை வெளியிடும்போதே பிரம்மராஜனின் கருத்துகளையும் கேட்டு வெளியிட்டிருக்கலாம் காலச்சுவடு என்பது என் தாழ்மையான கருத்து. பிரம்மராஜன் தொகுத்த நூல் காலச்சுவடு வெளியீடாக வந்திருப்பதால் பதிப்பாளராக ஒரு பொறுப்பு அதற்குண்டு.

              Samayavel Karuppasamy: சரி தான். விரோதங்களின்றி இதை சரி செய்துவிடலாம். காலச்சுவடு சிற்றிதழ்
              பண்பாட்டைக் காப்பாற்றும் என நம்புகிறேன்.


Sudheer Sendhil: இது ஆத்மநாம் கவிதைகள் குறித்த அக்கரையோடு மட்டும் நிற்காமல் சாதிமோதல் போன்று நடத்தப்படும் உரையாடல்களை நண்பர்கள் தவிர்க்க வேண்டும். அ.ராமசாமி கலாப்ரியா சமயவேல் ஆகியோர் கருத்துகளோடு உடன்படுகிறேன்.

அ. வெற்றிவேல்: காலச்சுவடு சார்பில் official யா யாராவது பேசணும்.

S Sankaranarayanan: பாயிண்ட் 6 - அற்ப விஷயம் என முடிப்பது தான் சரியாகப் படவில்லை...அப்பன்னா நீங்களே விட்டிருக்கலாமே? அற்பர்களின் விஷயம் என்று சொல்ல வந்தீர்களா!

                   Samayavel Karuppasamy: கொந்தளிப்பான சில பதிவுகளை சாந்தப் படுத்தும் சொற்கள் இவை. இதழ்களில் வந்த
                  கவிதைகளைத் தொகுப்பாக கொண்டுவரும்போது கவிஞர்கள் சில திருத்தங்களை மேற்கொள்வது இயற்கை. நானே
                  என்னுடைய தொகுப்புகளில் செய்திருக்கிறேன். பிற்கால ஆய்வாளர்கள் கவிஞனை நம்பாமல் இதழ்களை நம்பினால்
                  என்ன ஆகும்? ஆத்மாநாம் நான் நேரடியாகப் பழ்கிய நண்பர். அவரது நோய் பற்றி எல்லாம் இந்த ஆய்வாளர் சந்தேகம்
                  எழுப்புகிறார்.


                   S Sankaranarayanan: இது அற்ப விஷயம் அல்ல... என்பது தான். அப்படித்தான் நீங்கள் வாதிடுகிறீர்கள் என்கிறேன்
                   நான் . அவ்வளவே...


                 Samayavel Karuppasamy: கவிஞர் ஜெயதேவன் பதிலை நான் ஒத்துக்கொள்கிறேன்.

Raja Frames ஒரு அற்ப விஷயம் இது... ! நன்றி சார் !

ஆத்மாநாம் சர்ச்சை - லதா ராமகிருஷ்ணன்

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 25, 2016 - நேரம்: 12.21 AM

இன்று ஒரு செய்தி!

ஆத்மாநாமுடைய கவிதைகள் குறித்து யாருக்கும் எந்த அக்கறையும் இல்லாதது போலவும், எல்லோரும் அவருடைய கவிதைகளைச் சிதைத்துக் குட்டிச்சுவராக்கி அதன் மூலம் அந்த நிலாவையோ சூரியனையோ கையகப்படுத்திவிடுவதே குறியாகச் செயல்பட்டிருப்பது போலவும் 'மேதகு ஆய்வாளர்' பதறிப் பதறிக் கட்டுரை எழுதியிருப்பதைப் படிக்கும்போது பாவமாயிருக்கிறது.
ஆத்மாநாமின் அனுமதியோடு தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதா என்று எப்படி தெரிந்துகொள்வது, அப்படியே அனுமதித்திருந்தாலும் அவர் மனநோய்க்காளாகி யிருந்தவர் என்பதால் அவர் சுயநினைவோடு அனுமதி கொடுத்திருப்பார் என்று எதை வைத்து நம்புவது என்று மேதகு ஆய்வாளர் துடித்துப் பரிதவித்து ஆத்மாநாமுக்காகக் குரல் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது அவருக்கு சில யோசனைகளை சொல்லத் தோன்றுகிறது :
குறத்தியிடம் ஜோசியம் கேட்கலாம், கிளி ஜோஸியம் பார்க்கலாம், மெழுகுவர்த்தி உதவியோடு ஆவிகளைப் பேசவைக்கலாம், ராசிபலன் பார்க்கலாம் சோழி குலுக்கிப் போட்டுப் பார்க்கலாம் – இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
கவிதை எழுதும் தோழர்களுக்கு,
இருக்கும்போது நம் கவிதையைச் சீந்துவாரில்லையே என்று பஸ்-டிக்கெட் உள்ளிட்ட கண்ட கண்ட துண்டுத்தா ளில் கிறுக்கிவைத்து எங்கேயாவது போட்டுவிடாதீர்கள். இன்னும் முக்கியம், உங்கள் கவிமனம் போன போக்கில் 00/00/0000 என்று ஏதாவது தேதியற்ற தேதி குறித்துவிடா தீர்கள். நாளை உங்கள் கவிதைகளுக்கு மவுசு வரலாம். நீங்கள் போட்டிருக்கும் தேதிக்காய் பல மேதகு ஆய்வாளர்கள் எப்படி யெல்லாம் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் – யாரையெல்லாம் குற்றஞ்சாட்டவேண்டியிருக்கும் - எண்ணிப் பாருங்கள்.
மிக மிக முக்கியமாக,
உங்கள் கவிதைகள் உங்களுக்கும் உங்கள் கவிதைகளை உண்மையாக நேசிப்பவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும் அளவில் முதுமக்கட்தாழி போன்ற பெருங்குடுவையில் அவற்றைப் போட்டு பூமிக்கு அடியில் ஆழப் புதைத்துவிடுங்கள். நகரில் பொந்து போன்ற வாடகைவீட்டில் இதை எப்படிச் செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா? – யோசிக்க வேண்டிய விஷயம்தான். எப்படியிருந்தாலும், எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொண்டால் நல்லதுதான்!
இன்னுமொன்று,
இன்று உங்கள் கவிதைகள் சல்லிக்காசுக்கு உதவாததாய், உங்கள் நட்பினரால் மட்டுமே படிக்கப்பட்டு சிலாகிக்கப் பட்டு வரலாம். நாளையே அவற்றில் சில வியாபாரிகள் தங்கச் சுரங்கத்தை இனங் கண்டு, உங்களை ஒரு பண்டமாகத் தங்கள் உடைமையாக்கிக்கொள்ளும் கீழ்த்தரமான முனைப்பில், உங்கள் கவிதைகளை ஆர்வங் காரணமாக, தன் நண்பருக்குச் செய்தாகவேண்டிய உரிய மரியாதையாக பல்வேறு இ்டையூறுகளுக்கு இடையில் பிரசுரம் செய்யும் உங்கள் அன்புக்குரிய நண்பர் மீது புழுதி வாரித் தூற்றலாம், உங்களுடைய கவிதைகளை உங்கள் நண்பர் வேண்டுமென்றே திருத்திக் குதறி வெளியிட்டு மாளிகைகளாகக் கட்டிக்கொண்டு விட்டார், உங்கள் மதிப்பழித்துவிட்டார் என்று எந்தவித முகாந்திரமுமின்றி வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆத்ம நண்பர் பற்றி புரளி பேசலாம்.
அத்தகைய ’மேதகு ஆய்வாளரை’ வைத்து தங்களுக்கு வேண்டிய ஆதாயங்களைப் பெறுவதே நோக்கமாக அந்த ஆய்வற்ற ஆய்வுக்குப் பக்கங்கள் ஒதுக்கி ஆராதனை செய்யவும். அந்த மேதகு ஆ ய்வாளரின் ஆய்வுத்திறனை விழுந்துவிழுந்து பாராட்டவும் ஆட்கள் இருப்பார்கள்.
உங்கள் உழைப்பில் உருவான படைப்புகள் மேல் கைவைக்க முடியவில்லையென்றால் தந்திரமாக அவற்றை நாட்டுடைமையாக்கும் முயற்சியை மேற்கொள்ளவும் கூடும்.
எனவே, உஷாராயிருங்கள்!
உங்கள் படைப்புகளுக்கு, முக்கியமாக கவிதைகளுக்கு உங்கள் நம்பிக்கைக்கு உரிய நட்பினரை சட்டரீதியான உரிமையாளர்களாக்கி விடுங்கள்.
உடனடியாக ஒரு மந்திரவாதி்யைக் கைக்குள் போட்டுக்கொள்ளுங்கள்!
உங்கள் படைப்புகளைக் கொண்டு பணத்தால் அல்லது பட்டத்தால் லாபம் சம்பாதிப்பதே குறிக்கோளாய் உங்கள் படைப்புகளுக்காக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் மேதகு மனிதர்கள் கண்களுக்கு அவை தட்டுப்படாமல் இருக்கும்படிச் செய்யுங்கள்.
அல்லது, குறை காண்பதே நோக்கமாய் உங்கள் படைப்புகளை அணுகுவோர் பார்வைக்கு உங்கள் படைப்பிலக்கியங்கள் எல்லாம் பெரிய பெரிய சொல்லகராதிகளாகத் தட்டுப்படும்படியாகச் செய்துகொண்டு விடுங்கள்.
அச்சுப்பிழையைக் கூட வேண்டுமென்றே செய்யப்பட்ட வேண்டாத் திருத்தமாய் சுட்டிக்காட்டியபடியிருக்கும் மேதகுமக்களுக்குக் கிட்டும் அத்தகைய அகராதிகளில் அச்சுப்பிழைகள் வார்த்தைக்கு வார்த்தை இருக்கும்படி செய்யவேண்டுமென்றும் அந்த மந்திரவாதியிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டுவிடுங்கள்.
இன்னும் நிறைய சொல்லவிருக்கிறது.
மேதகு ஆய்வாளரின் பரிதவிப்பு எனக்கு க.நா.சுவின் கவிதையொன்றை நினைவுகூரச் செய்தது:
(க.நா.சு கவிதைகள் – சிடாடெல் வெளியீடு (1986)
விலை
க.நா.சு

ஓ! ஓ! ஓ! ஓ!
இவனுக்குத் தேச பக்தி
நிறைய வுண்டு. தேசத்தை
விற்கும்போது
நல்ல விலை போகும்படிப்
பார்த்துக்கொள்வான்
இவனுக்கு தேசபக்தி
நிறைய வுண்டு
ஓ! ஓ! ஓ! ஓ!

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 25, 2016 - நேரம்: 8.37 PM

இன்று ஒரு செய்தி!
(அல்லது) ஆத்மாநாம் ஆய்வாளரின் அப்பட்டமான பொய்!

வாடகை வீடு மாறும்போது புத்தகங்களை மூட்டை மூட்டையாய்க் கொண்டுபோய் இறக்கினால் வீட்டு உரிமையாளர்கள் பயந்துபோய்விடுகிறார்கள் என்பதால் புத்தகங்களைச் சின்னச்சின்னப் பையில் குவித்து எடுத்துப்போய் பாத்திர பண்டங்களைப் போல் சாதுவாக அவற்றை இறக்கி கட்டிலின் கீழ் போட்டாயிற்று.

ஆனால், மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ திரு. கல்யாணராமன் திறனாய்வு என்ற பெயரில் இப்படிக் கிறுக்கித் தள்ளியிருக்கிறாரே, அச்சுப்பிழைகளை யெல்லாம் தீவிரவாத சதித்திட்டமாய், நவீன தமிழ்க் கவிதைகளுக்குப் பொருள்கூற இவர்தான் ‘அத்தாரிட்டி’ என்பதுபோல் என்னென்னவோ உளறிக்கொட்டி யிருக்கிறாரே, இவர் மாதிரி ஆட்களுக்கெல்லாம் பதிலளிக்கவேண்டிய நிலைக்கு சிற்றிதழ் வாசகர்களும் படைப்பாளிகளும் ஆளாக்கப்பட்டிருக்கிறோமே, அதற்காக பேசாமலிருந்தால் இப்படிப்பட்ட அரைகுறைத் திறனாய்வு களுக்கு அங்கீகாரம் வழங்கினாற்போலாகிவிடுமே என்று மனதில் பலவாறாய் எண்ணங்கள் ஓட, புத்தகங்கள் இருந்த பைகளைத் துழாவி ஆத்மாநாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடி வெளியே எடுத்தேன்.

முதலில் கைக்குக் கிடைத்தது ‘மீட்சி’ இதழ் 28.(january - march 88) பக்கங்கள் 47 முதல் 51 வரை ஆத்மாநாமின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. “இக்கவிதைகள் ஆத்மாநாமின் குறிப்பேடுகள் 2 மற்றும் 4இலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. 1983 – 84வருடங்களில் இக்கவிதைகள் எழுதப்பட்டிருக்கலாம். “உறைந்து போன நேரம்” கவிதை, கவிதை யாக்கம் பற்றிய முறைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.” என்று மீட்சி ஆசிரியர் பிரம்மராஜனின் குறிப்போடு வெளியாகியுள்ளன.

இந்த ‘உறைந்துபோன நேரம்” கவிதை குறித்து மேதகு ’ஆத்மாநாம் ஆய்வாளர்” அல்லது Athmanam’s ‘Instant Noodles Critic’ காலச்சுவடு கட்டுரையின் கடைசிப் பத்தியில் பின்வருமாறு அங்கலாய்த்திருக்கிறார்:

“ஆத்மாநாம் எழுதிய ‘உறைந்துபோன நேரம்’ கவிதையின் கடைசி இரண்டு சொற்களைச் “சூனியத்தில் முற்றுப்புள்ளி”(2002: பக்கம் 49 – 50) எனப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். ஆனால், உண்மையில் இந்தச் சொற்கள் “சூனியத்தில் வெடித்த, முற்றுப்புள்ளி” என்றுதான், ஆத்மாநாமின் குறிப்பேட்டின் அடிப்படையில், மீட்சியில் (இதழ் 28: ஜனவரி – மார்ச் 1988; பக்கம் 50 – 51) வெளிவந்தபோது இடம்பெற் றிருந்தன. ”

இதோ, என் கையில் மீட்சி 28 இதழ் (ஜனவரி மார்ச் 88) இருக்கிறது. உறைந்துபோன நேரம் கவிதையின் கடைசி மூன்று வரிகள் (பக்கம் 51இல் இடம்பெறுகின்றன)

பட்டன்
உருண்டைப் பந்து
சூனியத்தில்
முற்றுப் புள்ளி
இதோ முழுக்கவிதை ( மீட்சி 88இல் வெளிவந்துள்ளது)
நடையியல்
பயிலுமுன்
கிழி
பற
5. தூள்
தூள்
நூல்
குடி
விளக்கு வரிசை
10. சீப்பு
காகிதம்
ஓலோலம்
புராதன இசை
வழியும் மை.
15. பஸ்ஸுக்குள்
ஊர்ந்து செல்லும்
மண் புழு
பேனா
சிகரெட்
20. காலம்
சென்றவரின்
புகைப்படம்
கிழிந்த காகிதம்
உடைந்த ப்ளாஸ்டிக்
25. தகரச் சிதறல்கள்
கிழிந்த ட்ராயர்
நீளமான பை
தேவையான பணம்
பலப்பம்
30. ஷேவிங் சாமான்கள்
தூக்கு
எழுத்து
கொட்டகை
ஒற்றைக் கம்பளி
35. பட்டன்
உருண்டைப் பந்து
சூனியத்தில்
முற்றுப் புள்ளி.

*மீட்சி88இல் ஆத்மாநாமின் ’உறைந்து போன நேரம்’ கவிதை மேற்கண்டவிதமாய்த்தான் அச்சாகியிருக்கிறது. ஆனால், மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் என்னமாய் பொய்பேசியிருக்கிறார் பாருங்கள் :

”ஆத்மாநாம் எழுதிய ‘உறைந்துபோன நேரம்’ கவிதையின் கடைசி இரண்டு சொற்களைச் “சூனியத்தில், முற்றுப்புள்ளி (2002: பக்49 – 50) எனப் பிரம்மராஜன் பதிப்பித்துள்ளார். ஆனால், உண்மையில் இந்தச் சொற்கள் “சூனியத்தில் வெடித்த, முற்றுப்புள்ளி” என்றுதான். ஆத்மாநாமின் குறிப்பேட்டின் அடிப்படை யில், மீட்சியில் (இதழ் 28: ஜனவரி – மார்ச் 1988: பக்கம் 50 – 51) வெளிவந்தபோது இடம்பெற்றிருந்தன.

எத்தனை அப்பட்டப் பொய்! நான் என்னிடமுள்ள மீட்சி 88 இல் வெளியாகியுள்ள அக்கவிதையை ‘போட்டோ ஷாட்’ எடுத்து இங்கே பொதுவெளியில் வைக்கிறேன். மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் அவரிடமுள்ள மீட்சி 88 இதழில் வெளியாகியுள்ள அந்தக் கவிதையை அப்படி வெளியிடத் தயாரா? இல்லை, பிரம்மராஜனிடம் அவர் பொதுவெளி யில் மன்னிப்பு கோரவேண்டும். செய்வாரா?

இப்படிப்பட்ட வெட்கங்கெட்ட, மனசாட்சியற்ற ஆய்வாளர்களிடமிருந்து, அவருடைய பொய்கள் மூலம் ஆதாயம் தேட முனைவோரிடமிருந்து, அத்தகையோரை விசுவாசத்தோடு கண்மூடித்தனமாக ஆதரிப்போரிட மிருந்து பிரம்மராஜனைக் காப்பாற்றுவதற்கு முன் ஆத்மாநாமையும் அவர் கவிதைகளையும் காப்பாற்றியாக வேண்டும்.

”சூனியத்தில் முற்றுப்புள்ளியாகி முடிந்துபோய் விடுபவரல்லர் ஆத்மாநாம்; சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளியாய் பெருவெடிப்பின் சாட்சியாய்த் தற்கொலையிலிருந்து தம் எழுத்துகள் வழி ‘என்னை அழித்தாலும், என்னை அழிக்க இயலாது” (2013:ப.27) என்று உயிர்த்தெழும் ‘பழமையினால் சாகாத’ பெருங்கலைஞர் அவர்”. என்று நாடகபாணியில் வெற்று rhetoric முழக்கமிட்டிருக்கிறார் இந்தப் பொய்ப்பித்தலாட்ட ஆய்வாளர்.

ஆத்மாநாமின் எழுத்துகளை யாரும் அழிக்க முடியாது. தற்கொலை செய்துகொண்ட ஆத்மாநாமை இப்படிக் கண்டபடிக்கு யாரும் படுகொலை செய்வதையும் அனுமதிக்கலாகாது.



முகநூல் பதிவு: ஆகஸ்ட் 26, 2016 - நேரம்: 9. 49 AM

இன்று ஒரு செய்தி: 03

ஆத்மாநாமும் அரைகுறைத் திறனாய்வாளரும்:

‘மீட்சி’ இதழ் 28.(january - march 88) பக்கங்கள் 47 முதல் 51 வரை ஆத்மாநாமின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. “இக்கவிதைகள் ஆத்மாநாமின் குறிப்பேடுகள் 2 மற்றும் 4இலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு வெளியிடப்பட்டி ருக்கின்றன. 1983 – 84வருடங்களில் இக்கவிதைகள் எழுதப்பட்டிருக்கலாம். “உறைந்து போன நேரம்” கவிதை, கவிதை யாக்கம் பற்றிய முறைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.”
- மீட்சி ஆசிரியர் பிரம்மராஜன்.

என்னிடம் உள்ள மீட்சி இதழ் 28இல் கண்டுள்ள அளவில், ஆத்மாநாமின் அக்கவிதையின் இறுதி வடிவத்தில் ’வெடிப்பு’ என்ற வார்த்தை அவராலேயே விலக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கவிதைக்கு முன்னோட்டமாக அவர் எழுதியுள்ள வரிகளும் அவருடைய குறிப்பேட்டில் கண்டபடி அந்த இதழில் தரப்பட்டுள்ளன – ’உறைந்துபோன நேரம்’ கவிதை கவிதையாக்கம் பற்றிய முறைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது” என்று அந்த மீட்சி இதழில் பிரம்மராஜன் குறிப்பிட்டிருப்பது அதைத்தான்.

அந்த வரிகளும் மீட்சி 88 இதழில் தரப்பட்டுள்ளன: அவை ஒரு கவிதையை எழுத ஆத்மாநாம் எடுத்துக்கொள்ளும் கவனத்தையும் தன் க விதையில் தான் பயன்படுத்திய வார்த்தைகளை இறுதிவடிவத்தில் அவரே நீக்கிவிடும் பழக்கத்தையும்( இது எல்லாக் கவிஞர்களுக்கும் உள்ள பழக்கம்தான்) எடுத்துக்காட்டுகின்றன: மீட்சி இதழ் 28இன் பக்கம் 48இல் 3 என்ற எண்ணில் அந்தக் கவிதையின் முதல் வடிவம் ஆத்மாநாமால் வடிவமைத்துக் கொள்ளப்பட்ட விதத்தில் இப்படி இடம்பெற்றுள்ளது.

3.
1. நடையியல்
2. பயிலுமுன்
3. கிழி
4. பற
5. தூள்
6. தூள்
7. நூல்
23. கிழிந்த காகிதம்
24. உடைந்த ப்ளாஸ்டிக்
25. தகரச் சிதறல்கள்
26. கிழிந்த பை
27. நீளமான பை
28. தேவையான பணம்
8. குடி
31. தூக்கு
33. கொட்டகை
9. விளக்கு வரிசை
20. காலம்
21. சென்றவரின்
22. புகைப்படம்
10. சீப்பு
19. சிகரெட்
29. பலப்பம்
30. ஷேவிங் சாமான்கள்
11. காகிதம்
18. பேனா
32. எழுத்து
12. ஓலோலம்
13. புராதன இசை
14. வழியும் மை
15. பஸ்ஸுக்குள்
16. ஊர்ந்து செல்லும்
17. மண் புழு
34. ஒற்றைக் கம்பளி
35. பட்டன்.
36. உருண்டைப் பந்து
37. சூனியத்தில் வெடித்த
38. முற்றுப் புள்ளி
உறைந்து போன நேரம்
நடையியல்
பயிலுமுன்
கிழி
பற
5. தூள்
தூள்
நூல்
குடி
விளக்கு வரிசை
10. சீப்பு
காகிதம்
ஓலோலம்
புராதன இசை
வழியும் மை.
15. பஸ்ஸுக்குள்
ஊர்ந்து செல்லும்
மண் புழு
பேனா
சிகரெட்
20. காலம்
சென்றவரின்
புகைப்படம்
கிழிந்த காகிதம்
உடைந்த ப்ளாஸ்டிக்
25. தகரச் சிதறல்கள்
கிழிந்த ட்ராயர்
நீளமான பை
தேவையான பணம்
பலப்பம்
30. ஷேவிங் சாமான்கள்
தூக்கு
எழுத்து
கொட்டகை
ஒற்றைக் கம்பளி
35. பட்டன்
உருண்டைப் பந்து
சூனியத்தில்
முற்றுப் புள்ளி.

*ஆக, கவிதையாக்கப் போக்கில் ஆரம்பக்கட்டத்தில் கவிஞர் வரிசைப்படுத்திக் கொண்டுள்ள வார்த்தைகளில் இடம்பெறும் வெடிப்பு என்ற அதன் இறுதி வடிவத்தில் கவிஞர் ஆத்மாநாம் விலக்கியிருக்கிறார். அந்த வார்த்தை அவருக்கு redundant ஆகத் தோன்றியிருக்கலாம்.

மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர் ஆத்மாநாம் எழுதிய சுதந்திரம் கவிதையில் ‘ஸ்வரம்’ இதழில் 'உனதுயிர் மீது ஆசை இருந்தால்' என்றுதான் வெளியாகி யிருப்பதாகவும் ஆனால், பிரம்மராஜன் அதை ‘உன்மீது ஆசை’ என்பதாகச் செறிவுபடுத்திவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். 

(தன்னையும் அறியாமல் செறிவு என்ற வார்த்தையை அவர் இங்கே பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது!) உனதுயிர் மீது ஆசை’ என்பதில் உயிர்மீது என்பதை redundant ஆக உணர்ந்து ஆத்மாநாம் அதை நீக்கியிருக்க வேண்டும். என் உயிர் இல்லாமல் என் மீது நான் ஆசை கொள்ள வழியேயில்லையே!)

கவிஞர் பிரம்மராஜன் 1989 செப்டம்பர் 1989இல் தன் நண்பரை மரியாதை செய்யும் விதமாய் தன்யா & பிரம்மா வெளியீடாய்க் கொண்டுவந்த ஆத்மாநாம் கவிதைகள், தொகுப்பில் இவ்விதம் குறிப்பிடுகிறார்:

”பிரக்ஞாபூர்வமாக எதிர்கவிதை எழுதியவர்களில் ஆத்மாநாம் முதன்மை யானவர். எதிர்கவிதை அழகியலை இரண்டாவது நிலைக்குத் தள்ளுகிறது. ஆத்மாநாமின் கவிதைகளில் படிமங்களோ, உருவகங்களோ அவற்றின் செயல் பங்குக்காகப் பயன்படுத்தப்ப்ட்டிருக்கின்றனவே அன்றி, வாசகனை ஏமாற்றும் வார்த்தைகளின் அளவில் நீர்த்துப்போகிற ஜாலங்கள் அல்ல”.

ஆத்மாநாம் படைப்புகள் என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியிட்டுள்ள முதல் பதிப்பில் (டிசம்பர் 2002) தனது பதிப்புரையில் கவிஞர் பிரம்மராஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“பொதுவாகத் தன் கவிதைகள் வெளிவந்த இதழ்கள் மற்றும் மாதம் போன்ற தகவல்களைப் பதிவு செய்து வைப்பது பற்றி ஆத்மாநாம் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வெளிவந்தவை, வெளியிடப்படாதவை என்று பிரித்து என்னிடம் இரண்டு கோப்புகளைக் கொடுத்திருந்தாரே ஒழிய வெளிவந்த இதழ்கள் பற்றிய குறிப்புகள் அவற்றில் இல்லை.

இவை தவிர ஆத்மாநாமின் இறப்புக்குப் பிறகு அவரது அம்பத்தூர் வீட்டிலிருந்த 6 நோட்டுப்புத்தகங்களை நண்பரும் கவிஞருமான திரு. எஸ். வைத்தியநாதன் பத்திரமாக எடுத்துவைத்திருந்து என்னிடம் கொடுத்தார். அந்த இரண்டு கோப்புகளில் இல்லாத பல புதிய கவிதைகள் இந்த நோட்டுப் புத்தகங்களில் காணப்பட்டன.

அவ்வாறே சில மொழிபெயர்ப்புகளும். என்றாலும் ப்ரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதிவைத்திருந்தார் ஆத்மாநாம் – ஒருவேளை பிறகு சீர் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்படி விட்டிருக்கலாம்.

மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை அவர் மொழியாக்கம் செய்தவற்றையும் சிற்றிதழ்களில் வெளியிட்டவற்றையும் பற்றி அவர் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. சில மொழிபெயர்ப்புகளைப் பற்றிக் கடிதத்தில் குறிப்பிட் டிருக்கிறார். ‘எல்சால்வடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையின் மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதியும் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. கணையாழியில் அது வெளிவந்தி ருக்க வாய்ப்பிருக்கிறது. அதைத் தேடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை. இது தவிர, மேலும் சில விடுபடல்கள் எனது கவனக்குறைவின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம்.

என்னிடம் கொடுத்திருந்தது போலவே கையெழுத்துப் பிரதிகளின் ஒரு கோப்பினை தன்னிடமும் ஆத்மாநாம் கொடுத்ததாக ஞானக் கூத்தன் கூறினார். அவரிடம் கொடுக்கப்பட்ட கோப்பில் இருந்தவற்றிற்கும் என்னிடம் தரப்பட்ட கோப்பில் இருந்த கவிதைகளுக்கும் ஏதும் விடுபடல் இருக்கிறதா எனச் சரிபார்த்து, விடுபடல்கள் எதுவுமில்லை என்று எனக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தார். ஆனால் சின்னச் சின்ன வார்த்தை மாற்றங்கள் – இரண்டு அல்லது மூன்று கவிதைகளில் – இருப்பதாக அவர் எழுதியிருந்தார்.

நான் கூடுமானவரை என்னிடம் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையில்தான் இந்தத் தொகுப்புநூலைப் பதிப்பித்திருக் கிறேன்.”
_ இவ்வளவு விவரமாக வெளிப்படையாக, தன் தொகுப்பாக்கம் குறித்துப் பேசியிருப்பவரை ஆத்மாநாமின் Instant Noodles Critic மதிப்பழிப்பதே குறியாகக் கட்டுரை எழுதுவாராம் . கவிதைமேல் உள்ள ஆர்வம், அக்கறை காரணமாக, கவிஞர் ஆத்மாநாமின் மேல் அவர் கவித்துவம் மேல் உள்ள அபிமானம், மரியாதை காரணமாக அரும்பாடு பட்டு பிரம்மராஜன் 270 பக்கங்கள் போல் உருவாக்கியுள்ள ஆத்மாநாம் படைப்புகளை மூன்று நான்கு பதிப்புகள் வெளியிட்டு முடித்த நிலையில் காலச்சுவடு அந்தக் கட்டுரையை தங்கள் 200வது இதழில் வெளியிடுமாம். அவதூறுக் கட்டுரையை எழுதியவரும் சரி, அந்தக் கட்டுரையை ’கறாரான விமர்சனக் கட்டுரையாக அடையாளங்காட்டத் துடிப்பவர்களும் சரி, காலச்சுவடை எந்தக் கேள்வியுமே கேட்கமாட்டார்களாம். அவர்களுக்கு பிரம்மராஜன் பதில் சொல்லியாகவேண்டுமாம். இல்லாவிட்டால் அவரை சாதிப்பெயரைச் சொல்லித் தூற்றுவார்களாம். ஆனால், நான் ஆத்மாநாமின் ‘இன்ஸ்டண்ட் நூடில்ஸ்’ திறனாய்வாளர் மீதான தனிநபர் தாக்குதல் நடத்துகிறேனாம். அப்படிச் செய்யக் கூடாதாம்.

அவ்வாறு அறவுரைப்போருக்கு நான் சொல்லிக்கொள்வது இப்போதைக்கு இதுதான்: GIVE RESPECT AND TAKE RESPECT.


(புகைப்பட உதவி: பிரதாப ருத்ரன்)


முகநூல் பதிவு: ஆகஸ்ட் 28, 2016 - நேரம்:......

இன்று ஒரு செய்தி! - 04


இன்று ஒரு செய்தி! மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளரின் அரும்பெரும் ஆய்வு அணுகுமுறை அல்லது நுணுகுமுறை (2)
அதென்னவோ தெரியவில்லை, பொதுவாகக் கனவே வராத எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் கவிஞர் ஆத்மாநாமையும், நவீன தமிழ்க் கவிதையையும் மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் கைபோன போக்கில் பிய்த்தெறிந்து கொண்டிருப் பதாகவும், தன் கட்டுரைக் கத்தியால் குத்திக் குதறிக்கொண்டிருப் பதாகவும் வரும் பீதிக்கனவில் பாதி ராத்திரியில் எழுந்து உட்கார்ந்து இப்படி ‘இன்று ஒரு செய்தி’ எழுதும்படியாகிவிடுகிறது.
(*பி.கு: ‘ஆத்மாநாம் ஆய்வாளரின் அரும்பெரும் ஆய்வு அணுகுமுறை அல்லது நுணுகுமுறை(1)இல் இடம்பெற்றிருக்கும் முதல் சில வரிகளே இதிலும் இடம்பெற்றிருக்கின்றன. இது நானே பிரக்ஞாபூர்வமாகச் செய்தது, இதில் எந்த சதித்திட்டமும் கிடையாது, ஒருவேளை என் கட்டுரைத்தொகுப்பு எதிலாவது பின்னாளில் இடம்பெறுமானால் அடைப்புக்குறிகளுக்குள் உள்ள 1, 2 என்பவை அ, ஆ என்றும் மாறலாம். இல்லை இந்த இரண்டு குறுங்கட்டுரைகளுக்கும் வேறு தனித்தனித் தலைப்புகளும் என்னால் தரப்படலாம் என்று இவண் நான் தெளிவாக, உறுதிபடக் கூறுகிறேன். (இப்போது நான் சித்தசுவாதீனத்தோடுதான் இந்த உறுதியைக் கூறுகிறேனா என்று எந்த ‘மேதகு ஆய்வாளராவது கேள்வியெழுப்பினால் நான் கண்டிப்பாக ஆவியாக வந்து அவர் ஐயம் தீர்ப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்!)
மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ பிரம்மராஜனைக் திறனாய்வுக் கழுமேடையில் ஏற்றும் அதீத முனைப்பில் பின்வருமாறு குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்:
“ஆத்மாநாமின் ‘டெலெக்ஸ்’ என்ற கவிதை, முதலில் நிஜங்களில் (ஏப்ரல் 1982: ப.15) வெளிவந்தது. பிறகு படிகளில் (இதழ் 15: 1983: ப.&) மறுபிரசுரமானது. படிகளில் இக்கவிதையின் தலைப்பு ‘டெலக்ஸ்’ எனத் திரிந்து விட்டது. நிஜங்கள், ப டிகள் ஆகிய இரண்டு இதழ்களிலுமே, இக்கவிதையின் மூன்றாம்வரி, ‘1,74,843 தலைகள் வீழ்ந்துள்ளன” என்றுதான் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையைத் தம் பதிப்பில் பிரம்மராஜன், ‘1,75,843’ தலைகள் வீழ்ந்துள்ளன” என்று, ஆயிரம் தலைகளைக் கூட்டிப் பதிப்பித்துவிட்டார். கணக்கைச் சரிபார்க்க ஆத்மாநாம் இல்லாவிட்டாலும் அவரது வாசகர்கள் உள்ளார்களே என்பதைப் பற்றிப் பிரம்மராஜன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.”
எத்தனை ஆழமான திறனாய்வு பாருங்கள். ‘டெலெக்ஸ்’, டெலக்ஸ்’ எனத் திரிந்துவிட்டதாம். 1,74,843 என்பது 1,75, 843 என்று பிரம்மராஜன் பதிப்பில் ஆயிரம் தலைகள் அதிகமாக வந்துவிட்டதாம்.
ஆத்மாநாம் வாசகர்கள் ஆத்மாநாம் கவிதைகளை வாசிப்பது இந்தவிதமான அச்சுப்பிழைகளை அங்கலாய்ப்பதற்கா?
இவை அச்சுப்பிழைகள் இல்லையென்று மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளரால் ஆதாரபூர்வமாகச் சொல்லமுடியுமா?
அப்படியே இவை பிழைகளல்ல, பிரம்மராஜனால் வேண்டுமென்றே செய்யப்பட்ட தண்டனைக்குரிய குற்றங்கள் என்றால் ‘what is the motive?
(பி.கு: திரும்பவும் கேட்காமலிருக்க முடியவில்லை. தமிழ் இலக்க ணத்தை நவீன தமிழ்க்கவிதைகளுக்குள் பொருத்திப் பொருத்தித் தவறுகளைச் சுட்டிக்காட்டும் மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ ‘என்பதைப் பற்றிப் பிரம்மராஜன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை’ என்று பற்றி பிரம்மராஜன் ஆகிய சொற்களுக்கிடையே ‘ப்’ போடுவது சரியா? தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்)

முகநூல் பதிவு: ஆகஸ்ட் 28, 2016 - நேரம்:......

இன்று ஒரு செய்தி! - 05

இன்று ஒரு செய்தி! மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளரின் அரும்பெரும் ஆய்வு அணுகுமுறை அல்லது நுணுகுமுறை (3)
அதென்னவோ தெரியவில்லை, பொதுவாகக் கனவே வராத எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் கவிஞர் ஆத்மாநாமையும், நவீன தமிழ்க் கவிதையையும் மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர் கைபோன போக்கில் பிய்த்தெறிந்து கொண்டிருப்பதாகவும், தன் கட்டுரைக் கத்தியால் குத்திக் குதறிக்கொண்டிருப்பதாகவும் வரும் பீதிக்கனவில் பாதி ராத்திரியில் எழுந்து உட்கார்ந்து இப்படி ‘இன்று ஒரு செய்தி’ எழுதும்படியாகிவிடுகிறது.

(*பி.கு: ‘ஆத்மாநாம் ஆய்வாளரின் அரும்பெரும் ஆய்வு அணுகுமுறை அல்லது நுணுகுமுறை(1)இல் இடம்பெற்றிருக்கும் முதல் சில வரிகளே இதிலும் இடம்பெற்றிருக்கின்றன.

இது நானே பிரக்ஞாபூர்வமாகச் செய்தது, இதில் எந்த சதித்திட்டமும் கிடையாது, ஒருவேளை என் கட்டுரைத்தொகுப்பு எதிலாவது பின்னாளில் இடம்பெறுமானால் அடைப்புக்குறிகளுக்குள் உள்ள 1, 2, 3 என்பவை அ, ஆ, இ என்றும் மாறலாம். இல்லை இந்த இரண்டு குறுங்கட்டுரைகளுக்கும் வேறு தனித்தனித் தலைப்புகளும் என்னால் தரப்படலாம் என்று இவண் நான் தெளிவாக, உறுதிபடக் கூறுகிறேன்.

(இப்போது நான் சித்தசுவாதீனத்தோடுதான் இந்த உறுதியைக் கூறுகிறேனா என்று எந்த ‘மேதகு ஆய்வாள ராவது கேள்வியெழுப் பினால் நான் கண்டிப்பாக ஆவியாக வந்து அவர் ஐயம் தீர்ப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்! – லதா ராமகிருஷ்ணன்) ஆத்மாநாம் கவிதைகளின் தொகுப்பாசிரியர் பிரம்ம ராஜனைப் பழித்து, மதிப்பழித்துக் குற்றஞ்சாட்டி குறைசொல்லிச் சொல்லி களைப்பாகி விட்டதோ என்னவோ, மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ திடீரென்று ‘ழ’ சிற்றிதழ் மேல் பாய்கிறார்:

‘"அவசரம் ‘ என்ற தலைப்பில், நெருக்கடிநிலையை எதிர்த்து ஆத்மாநாம் எழுதிய புகழ்பெற்ற கவிதை, பிரக்ஞையில் (செப்டம்பர் 1975: இதழ் 12: ப.2) வெளிவந்துள்ளது. ஆனால், இதுபற்றி, ‘ஆத்மாநாமின் இக்கவிதை (அவசரம்), எந்த இதழிலும் வெளியாகவில்லை. ஞானக்கூத்தன், இதைக் கையெழுத்துப் பிரதியாகவே படித்ததாக நினைவுகூர்கிறார்”(உயிர்மை: மார்ச் 2016, ப.64) என்கிறார் நஞ்சுண்டன். இத்தகவல் முற்றிலும் தவறு என்பதைக் கண்டோம். ஆனால், நெருக்கடிநிலையை எதிர்த்து ஆத்மாநாம் எழுதிய இக்கவிதை மட்டுமன்று, இது தொடர்பான அவரது பிற கவிதைகளும் ழ வெளியீடாக வந்த ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பில் ஏனோ சேர்க்கப்படவில்லை. இந்தப் ‘பதிப்பரசியல்’ குறித்தும் விவாதிக்கவேண்டிய தேவைஇ இன்றுள்ளது.

1981இல் வெளியான காகிதத்தில் ஒரு கோடு என்ற ஆத்மாநாமின் கவிதைகளடங்கிய(KAKITHATHIL ORU KODU, Poems in Tamil, Atmanam©, First Edition May 1981, Art Editor : K. M.Adimoolam, Drawings:R.Varadarajan, S.Muralidharan, ழ Veliyeedu, 39, Eswaradoss Lala street, Triplicane Madras – 600 005, Makkal Acchakam Madras – 600 002, Price Rupees Four) சிறுநூலின் ஆரம்பவரிகள் இவை:

“எட்டாண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டுவரும் ஆத்மாநாமின் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளில் ஒரு பகுதியே இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னமேயே அச்சேறிய கவிதைகளில் ஒரு பகுதியையும், இன்னும் அச்சேறாத கவிதைகளில் ஒரு பகுதியையும் இத்தொகுப்பு உள்ளடக்கியிருக்கிறது.”
இலக்கியத்தின் மேல் அபிமானம் கொண்டவர்கள் ஒரு சிறு முயற்சியாய் கைக்காசைப் போட்டு 'ழ' இதழ் கொண்டுவந்து, ஆத்மாநாமின் கவிதைகளை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக வெளியிட்டது, ஆத்மாநாம் கவிதைகளின் ஒரு பகுதியே இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று நூலின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட்ட நிலையிலும் அவர்கள் செய்திருப்பது பதிப்பரசியலாம். (அந்த நூலுக்குப் பின் வந்த ஆத்மாநாம் கவிதைகள் (1989), மற்றும் காலச்சுவடு பதிப்பு இரண்டிலுமே அந்தக் கவிதை இடம்பெற் றிருக்கிறது.)

காசில்லாத காலத்தில் கைக்காசைப் போட்டு சிறிய நூல் பதிப்பித்திருப் பதில் இத்தனை பதிப்பரசியலைப் பகுப்பாய்வு செய்து துப்பு துலக்கி யிருக்கும் மேதகு ஆத்மாநாம் ஆய்வாளர், பிரம்மராஜன் தொகுப்பாக்கத்தில் பிழை மலிந்திருப்பதாய் பிழையான கருத்தைத் தன் கட்டுரை முழுவதும் திரும்பத் திரும்பப் பலவாறு வலியுறுத்துபவர், அத்தனை பிழைபட்ட நூலைத் திரும்பத் திரும்பப் பதிப்பித்திருக்கும் காலச்சுவடு பதிப்பகம் குறித்து மருந்துக்கும் ஒரு கண்டனத்தை முன்வைப்பதில்லை!

இதில் உள்ள ’பதிப்பரசியலைத்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.

Friday, August 26, 2016

ஆத்மாநாம் கவிதை சர்ச்சை

பெருமாள்முருகன், ம.ரா, சலபதி, சீனிவாசன் நடராஜன், ஆர். சிவக்குமார், பெருந்தேவி போன்றவர்களை எனக்கு மிகப் பிடிக்கும். இளைய தலைமுறையினரில் அனிருத்தன் வாசுதேவன்.

ஒன்று, கல்விப்புலத்தில் இருந்துகொண்டு மிகத்  தீவிரமாக நவீன இலக்கியம், ஆய்வு சார்ந்து இயங்கும் அவர்களது பண்பும் உழைப்பும். மற்றொன்று, ஒவ்வொரு வார்த்தைக்கும் இவர்கள் கொடுக்கும் மரியாதை மற்றும் முக்கியத்துவமும்.

இலக்கியமும் சிற்றிதழ்களும் எல்லா மொழிகளுக்கும் ஊட்டம் அளிப்பவை. எனது இலக்கிய வாசிப்புப் பழக்கம் கல்லூரி காலந்தொட்டே இருப்பதுதான் என்றாலும், சிற்றிதழைப் (இடைநிலை இதழ்களும் சேர்த்துதான்) பொருத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் நேரடித் தொடர்பும், பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

அதிலும் 'கணையாழி'யில் மட்டும்தான் சில மாதங்கள் பொருப்பில் இருந்தேன். வாரத்தின் புதன்கிழமையில் ஆசிரியர் ம.ரா(சேந்திரன்), இணையாசிரியர் சீனிவாசன் நடராஜன், துணை  ஆசிரியர்கள் - கவிஞர் வேல்கண்ணன், கட்டுரையாளர் ஜீவ கரிகாலன், உதவி ஆசிரியர் - எழுத்துக்காரன் ரமேஷ் ரக்சன், இதழழகு - கோபு ஆகியோர் சந்தித்துப் பேசுவோம். அந்த மாதத்தில் வெளியான படைப்புகள் குறித்தும், இதழின் வேறுசில பிரச்சனைகள் குறித்தும், சமகால இதழ்களின் போக்கு குறித்தும் பேசுவோம்.

நானும் குழுவில் இணைந்து இரண்டு வாரங்கள் மட்டுமே சென்றிருக்கும். ஒருநாள் ம.ரா புன்சிரிப்புடன் அலுவலகத்தில் நுழைந்தார். சந்திப்பு இதமாகக் கழிய இருக்கிறது என்றுதான் நினைத்தேன். அம்மாதக் கணையாழியில் மீள் பிரசுரம் ஆகியிருந்த 'விதை நெல்' கட்டுரை குறித்து அனுப்பியிருந்த காட்டமான  மின்னஞ்சலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்,
"கணையாழி இதழை இந்த மாதத்துடன் நிறுத்திடலாம்ன்னு இருக்கேன். இதுபோலப் பிழை வரதெல்லாம் அசிங்கம்." என்றார் எங்கள் எல்லோரையும் ஊடுருவிப் பார்த்தவாறு.

"இந்த மாதிரியான விஷயத்த எமோஷனலா டீல் பண்ணக் கூடாது. இது சின்ன தப்போ... பெரிய தப்போ...! தப்பு நடந்துடுச்சி. இனிமே இந்த மாதிரி தப்பு வராம பார்த்துக்கலாம். எனக்கும்தாங்கய்யா ரொம்பக் கஷ்டமா இருக்கு. அதுக்காக நம்ம இதழ நிறுத்தக்கூடாது. தப்பு நடந்துடுச்சின்னு அவங்கக்கிட்ட நாம பேசலாம்.... தப்ப அக்சப்ட் பண்ணிக்கலாம். இதுபோல பிரச்சனைகள எல்லாம் மீறித்தான் சிற்றிதழ்கள் வந்துட்டு இருக்கு..." என சீனிவாசன் ப்ராக்டிகலாகப் பேசிக் கொண்டிருந்தார்.

கூட்டம் முடிந்த பிறகு சீனிவாசன் என்னைக் காரிக் காரி உமிழ்ந்தார் என்பது வேறு விஷயம். ஏனெனில் சில பக்கங்களின் பிழைதிருத்தத்தை நானும் பார்த்திருந்தேன்.

விஷயம் இதுதான்: "பெரியார்" என்று இருக்க வேண்டிய இடத்தில் 'பெயர் யார்' என்று அச்சாகி இருந்தது.

"இது எவ்வளவு பெரிய தப்பு... ரொம்ப முன்னாடி வந்த கட்டுரைய மறுபடியும் பிரசுரம் செய்யும்போது எவ்வளோ கவனமா இருக்கனும். இந்த மாதிரி தப்பு நடக்கும்னா... நாம எதுக்கு இவ்வளோ கஷ்டப் படனும். இத்தன பேரு இதழுக்காக உழைக்கனும்" என்று ஜீரணிக்க முடியாமல் வாதாடிக்கொண்டிருந்தார் ம.ரா.

ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார் சீனிவாசன். நான் குழுவில் இணைந்த புதிது என்பதால் கூலாக இருந்தேன். மற்றவர்கள் எல்லோரும் ஒரு கொதிநிலையிலேயே இருந்தனர். ஆகவே, இடையில் புகுந்து நான் சொன்னேன்:

"ஏங்க சீனிவாசன், எவ்வளோ பெரிய தப்பு இது. இதப் போயி சாதாரணமா பேசிட்டு  இருக்கீங்களே...!"

நண்பர்கள் கண்களை உருட்டி ஜாடை செய்தார்கள். இருந்தாலும் சில வார்த்தைகளை உதிர்த்தேன். அதைத் தொடர்ந்த நான்கு வாரங்களுக்கு மா.ரா நிம்மதியில்லாமல்தான் புலம்பிக் கொண்டிருந்தார். அங்கிருந்த வரை வேறு எதற்காகவும் ம.ரா அவ்வளவு வருத்தப்பட்டு நான் பார்த்ததில்லை.

'ஒரு வார்த்த மாறிட்டதுக்கு ஒரு மனுஷன் இப்படி வெப்ராளப் படுவாரா'ன்னு போச்சு. ஆனால், ஆய்வு சார்ந்த மனநிலையில் இருந்து பார்த்தால்தான் அதன் மதிப்பு தெரியும்.

'விடம்பனம்' நாவலைத் தட்டச்சு செய்தபோது சில வார்த்தைகளைக் கவனத்துடன் சீனிவாசன் ஸ்கெட்ச்  செய்தார். ஒவ்வொரு வார்த்தையும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதிலும், இதுவாகத்தான் இருக்கவேண்டும்  என்பதிலும் புத்தகம் அச்சாகிக் கைக்கு வரும்வரை  கவனத்துடன் இருந்தார்.

மாதொருபாகன் வழக்கில் கருத்துச் சுதந்திரம் சார்ந்து தமிழ் ஹிந்து மொழியாக்கம் செய்திருந்ததின் (வார்த்தைத் தேர்வின்) கவனக் குறைவை வருத்தப்பட்டு ஆர். சிவக்குமார் முகநூலில் பதிவிட்டிருந்ததை எல்லோரும் அறிவர். அல்லாதோர் அவரது பக்கத்தில் சென்று பார்க்கலாம். அதேபோல  முருகனுடனும் சரி, சலபதியுடனும் சரி, பெருந்தேவியுடனும் சரி வார்த்தை சார்ந்த உரையாடல் அனுபவங்கள் எனக்கு நிறையவே உண்டு.

இப்படிப்பட்ட வார்த்தைகள் சார்ந்த ஒரு விஷயத்தைத்தான் ஆத்மாநாம் கவிதைத் தொகுப்பு சார்ந்து (எழுத்து, வார்த்தை, வாக்கியம்)  கல்யாணராமன் தனது கட்டுரையில் காட்டமாக விவாதிக்கிறார். இதில் பிரம்மராஜனை இழுவுபடுத்தும் செயல் என்ன இருக்கிறது? பிரம்மராஜனின் படைப்புலக பிம்பத்தையே சரிக்கிறோம் என்று வாதிடுகிறார்கள்.

20 வருடங்களாக ஒரு தொகுப்பு அச்சில் இருக்கிறது. ஏறக்குறைய 5 பதிப்புகள் வெளிவந்திருக்கிறது. அடுத்தடுத்த ஒவ்வொரு பதிப்பின் போதும் ஏதேனும் பிழை உள்ளதா? வேறு ஏதேனும் கண்ணை மறைக்கும் மோகினிப் பிழைகள் உள்ளதா? என்று பிரம்மராஜன் பார்த்திருக்கலாமே. டிடிபி பிழைகள் இருக்க வாய்ப்புண்டு என்பதால் மூலத்துடன் ஒப்பிடுவோம் என்ற பிரக்ஞை ஏன் பிரம்மராஜனுக்குத் தோன்றவில்லை? மறுபடியும் தொகுப்பை ஏன் செழுமை செய்யவில்லை போன்ற அடிப்படையான கேள்விகள் எனக்கு  எழுகின்றன? இதெல்லாம் ஞாயமான கேள்விகள்தானே..!

தொகுப்பு வெளிவந்து பல பத்து வருடங்கள் ஆகிறது. இவ்வளவு காலம் தமிழ்த்துறை என்ன செய்துகொண்டிருந்தது? கல்யாணராமன் யார்? பேராசிரியர்ன்னா பெரிய புடுங்கியா? ஆய்வாளர்ன்னா அப்பாடக்கரா? விமர்சகர்ன்னா வீர வண்டு முருகனா? போன்ற கேள்விகளை எழுப்புவது எந்த வகையில் ஞாயம்? கடந்த பத்து வருடங்களில் தொகுப்பை ஒரு முறை சீர் செய்திருக்கலாமே. 

தோழர் லதா ராமகிருஷ்ணன் மட்டும்  ஓரளவிற்குச் சமாதானம் அடைந்து மீட்சி இதழுடன் - கல்யாணராமன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயத்தை - ஒப்பிட்டுப் பேசி முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இதுதான் சிற்றிதழ் சூழலுக்கு ஆரோக்கியமானது. அகிலன் எத்திராஜூம் ஆரோக்கியமாக நாகரீகமாக விவாதத்தை முன்னெடுக்கிறார். மற்றவர்கள் எல்லோரும் பிரம்மராஜனின் புனித பிம்பத்தைச் சரியாமல் தாங்கிப் பிடிக்கவும், காலச்சுவடு நிறுவனத்தை வசை பாடவும் செய்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கீழ்த்தரமாக வசைபாடியும், அதன் மூலம் சந்தர்ப்ப ஆதாயம் அடையவும் பிரியப்படும் சிலர் சிற்றிதழின் ஆசிரியர் பொருப்பில் வேறு இருக்கின்றனர். தான் பொருப்பிலுள்ள சிற்றிதழில் ஒடிக்கொண்டிருக்கும் விவாதம் சார்ந்த கட்டுரை ஒன்றினை ஆதாரத்துடன் கல்யாணராமனுக்கு எதிராகவும், காலச்சுவடு இதழுக்கு எதிராகவும் (விமர்சனக் கட்டுரை) எழுதலாமே!? அதற்கெல்லாம் உழைப்பு வேண்டுமே.

தடம் இதழுக்குக் கொடுத்த நேர்முகத்தில் "இப்போதைய தமிழ்ச்  சூழலுக்கு உடனடித் தேவை 10 நல்ல விமர்சகர்கள்..." என்றார் பிரபஞ்சன். இந்தக் கூற்றில் முழு உண்மை இருக்கிறது. ராமன் போன்றோர் முளை விடும் பொழுதே இவர்கள் பதட்டம் அடைகிறார்கள். இவர்களுக்குத் தேவை இனிக்க இனிக்கப் பேசி மயக்கும் பேச்சாளர்கள். அதனால்தான் கீழான சொற்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

சென்னையில் ஒரு மாதத்தில் ஆயிரம் இலக்கிய கூட்டங்கள் நடக்கிறது. எல்லா கூட்டங்களிலும் பாராட்டு பாராட்டு பாராட்டு. இல்லையேல் கீழ்த்தரமான முகநூல் விவாதம்.

கல்யாணராமன் இதழின் பிரதிகளையும், முதல் பதிப்பையும், காலச்சுவடு பதிப்பகத்தில் வெளிவந்த தொகுப்பையும் ஒப்பிட்டுத்  தெளிவாகவே தனது விமர்சனக் கேள்விகளைக் கட்டுரையில் கேட்கிறார். அதற்கு இதுவரையிலும்  விளக்கம் அளிக்காமலிருந்த பிரம்மராஜன் - வன்னிய இலக்கிய அமைப்பில், இலக்கிய முன்னணிப் படையினருக்குப் படைப்பூக்கத்துடன் செயல்பட அவர் அழைப்பு விடுத்ததாக எழுதியிருந்த - ஜெமோவின் இணையப் பதிவை சுட்டிக் காட்டியபோது பொங்கி எழுந்திருக்கிறார்.

ஆத்மாநாம் கவிதைகளை பிரம்மராஜன் தொகுத்துப் பதிப்பித்தபோது ஏற்கனவே  வெளியாகியிருந்த கவிதை வரிகளை மாற்றியும், விடுபட்டும், இடைச்செருகலாக சிலவற்றைச் சேர்த்தும் வெளியிட்டிருந்ததை கல்யாணராமன் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியுள்ளார். இதற்கு பதிலளிக்காமல் கள்ள மெளனம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த பிரம்மராஜன், அவர் 2008ல் ‘வன்னியர் படைப்பாளிகள் பேரியக்கத்தில்’  இணைந்ததைக் குறிப்பிட்டு எழுதியதும் மெளனம் கலைந்து “ஆமாம், நான் வன்னியகுல ஷத்ரியன் தான், அதற்கு என்ன இப்போது?” என்று சிலிர்த்தெழுந்திருக்கிறார்.
இது எதைக் காட்டுகிறது?


மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரே ஒரு நாள் மட்டும் பொறுப்பு வகித்துவிட்டு விலகிவிட்டார், மற்றபடி அவருக்கு ஜாதியுணர்வெல்லாம் கிடையாது என்று சப்பைக்கட்டு கட்டிகொண்டிருந்த அவருடைய ஆதரவாளர்கள் எல்லோருடைய முகங்களிலும் கரியைப் பூசிவிட்டு , “ ஆமாம், நான் வீர வன்னியன்தான் ‘ என்று பெருமையாக முழக்கமிடுகிறாரென்றால் என்ன அர்த்தம்?

ஒன்று: ஆத்மாநாம் கவிதைகளை இவர் இஷ்டத்துக்கும் மாற்றிப் பதிப்பித்திருப்பதைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. அதனால்தான் இவ்வளவு நாட்களாக மெளனம். அவர் அப்பட்டமாகப் புரிந்திருக்கும்  தவறுகளை ஒருவர் சுட்டிக்காட்டியதை  அவரை அவதூறு செய்துவிட்டதாகவும், இழிவுபடுத்திவிட்டதாகவும் வெற்றுக்கூச்சல் போட்டுக்கொண்டிருக்கும் தொண்டர்களிடமும் கல்யாணராமனின் கேள்விகளுக்கு பதில் இல்லை.

இரண்டு: பிரம்மராஜன் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று யாரும் கேட்கவில்லை. ஒரு படைப்பாளி சாதி அமைப்பு ஒன்றில் பங்கெடுத்துக்கொள்வது சரியா என்பதுதான் கேள்வி. ஜெமோவும் அதைத்தான் கேட்கிறார்.

அதற்கு “ ஆமாம், நான் அந்த ஜாதிதான்”  என்று முழக்கமிட்டால் அதற்குப் பொருள் ‘ ஆமாம், எனக்கு சாதியப்பற்றுதான் பிரதானம்; இலக்கியப்பற்று அதற்குப் பின்னால்தான்’ என்பதுதான்.
ஆத்மாநாம் உங்களுடைய தனிப்பட்ட சொத்து அல்ல. எல்லோருக்கும் பொதுவானவர். தமிழின் கொடை. ஆத்மாநாமின் ரெப்ரெசன்ட்டேட் நான்தான் என்ற மனப்போக்கில் பிரம்மராஜன் அமைதி காப்பதும், பிரம்மராஜனின் மவுத் வாய்ஸ் நாங்கள்தான் என்று தொடர்கள் படை ஆக்ரோஷத்துடன் அரசியல் கடைசி போலக் கூச்சலிடுவதும் அவலத்தின் உச்சம். 
முகநூலில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம்  கொந்தலிப்பான மனநிலையின் வெளிப்பாடுதான். அதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லைதான் என்றாலும், இதெல்லாம் தேவையில்லாத உரையாடல்கள்தான்  என்றாலும், பிரதி சார்ந்து பேச உங்களுக்கு நிறையவே இருக்கும்.

நீங்கள் மெளனம் கலைய வேண்டும். எங்களுடன் பேச வேண்டும்.
உங்களுடைய மெளனம் மற்றவர்களுக்கு ஆதாரத் தேவை. உங்கள் மெளனம் கலைந்தால் அவர்களுக்குப் பிழைப்பு இல்லை. பிழைப்புவாதிகளைப் புறந்தள்ளுங்கள். உங்களின் கால்களைப் பிடித்து சகதிக்குள் இழுக்க நினைப்பவர்கள் அவர்கள். நீங்கள், ஆத்மாநாம் வாசகர்களாகிய  எங்களுடன் பேச வேண்டும். அதுவே எங்களுக்கான மகிழ்ச்சி.

கடைசியாகக் கேட்பதற்கு வேறொன்றும் இல்லை பிரம்மராஜன். ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அதுகூட ஆரம்பத்திலிருந்தே கேட்பதுதான்.

மௌனம் கலைத்துப் பேசுவீர்களா பிரம்மராஜன்? 

Thursday, August 18, 2016

காலச்சுவடு வெறுப்பரசியல்

ஆதாய அரசியல் ஆபத்தானது. அதனினும் ஆபத்தானது (வெற்று அல்லது ஆதாய) இலக்கிய அரசியலும், காரணமற்ற வெறுப்பரசியலும்தான். பிரம்மராஜனுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாதது அல்ல.

ஆத்மாநாம் முழுத்தொகுப்பு விமர்சனக் கட்டுரைக்கு - காலச்சுவடு பதிப்பகத்துக்கும், காலச்சுவடு கண்ணனனுக்கும் - எதிராக முகநூலில் பகிரப்படும் நிலை தகவல்களைத் தொடர்ந்து பிரம்மராஜன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து (Facebook share) வருகிறார். இதெல்லாம் பதட்ட நோய்மை மனநிலையின் உச்சம் என்றுதான் புரிந்துகொள்கிறேன். விமர்சனக் கட்டுரையைப் பரவலாக அறியப்பட்ட கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான பிரம்மராஜன் நேர்மையாகவே அனுகலாம்தானே. தொகுப்பு சார்ந்து இதெல்லாம் இயல்பாக நடப்பவைதானே.

ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழ், 200-ஆவது சிறப்பிதழாக வந்தது மட்டுமல்லாமல் வந்த சூட்டுடன் பலரது பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்றுள்ளது. 164 பக்கங்களில் விளம்பரங்கள் போகப் பல சிறப்புப் பகுதிகள் இருந்தாலும் இதழில் வெளியான - பிரம்மராஜன் தொகுத்த - ஆத்மாநாம் முழுத்தொகுப்பு சார்ந்த விமர்சனக் கட்டுரையை முகநூலில் பகிர்ந்ததும் பலதரப்பிலிருந்தும் சலசலப்புகள் எழுந்துள்ளன.

சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி - கல்யாணராமன், காலச்சுவடு

காலச்சுவடு பதிப்பகம் அரசியல் செய்கிறார்கள், பேராசிரியர்களையும் ஆய்வாளர்களையும் வளைத்துப் போட்டுப் பதிப்பரசியல் செய்கிறார்கள் என்ற தேய்ந்து போன ரெக்கார்டு குரல்கள் தற்போது மீண்டும் எழ ஆரம்பித்துள்ளன.

படைப்புகள் சார்ந்த விமர்சனங்களையும், விவாதங்களையும் முன்னெடுப்பதில் பேரா. கல்யாணராமன் ஆர்வம் மிகுந்தவர் என்பது பலருக்கும் தெரியும். மரபிலக்கியம், நவீன இலக்கியம் என இரண்டு புலங்களிலும் ஆழ்ந்த பார்வையும் ஈடுபாடும் உள்ளவர் என்பது தீவிர இலக்கிய நண்பர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான்.

ஆய்வுக் கூட்டம் ஒன்றில் ராமனுடன் மோதி வார்த்தைப் போர் செய்தது ஞாபகத்திற்கு வருகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் மாதம்தோறும் ஓர் ஆய்வுக் கூட்டம் ஏற்பாடாகும் (ஒவ்வொரு மாதமும் நிகழ்வு குறித்த தகவல் எனக்கு வருகிறது). மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை மாணவர்களும், சென்னை பல்கலைக் கழக ஆங்கிலத் துறை மாணவர்களும் கூட்டத்தில் உரை நிகழ்த்துவார்கள். மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சீனிவாசனும், சென்னை பல்கலை ஆங்கிலத் துறை பேராசிரியர் அழகரசனும் சேர்ந்து முன்னெடுக்கும் ஆய்வுக் கூட்டம் அது.

நான் வலது பக்கமும், பேரா. கல்யாண ராமன் இடது பக்கமும் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் அபிலாஷும் உடனிருந்ததாக ஞாபகம். அகலிகை குறித்த ஆய்வு நோக்கிலான கட்டுரை ஒன்றினை அழகரசனின் மாணவி ஒருவர் வாசித்தார். தமிழ்ப் பேரா. பழனியப்பனின் ஆய்வு மாணவர் ஒருவரும் பங்குபெற்று உரையாற்றினார். ஆய்வுக் கூட்டம் ஏற்பாடாகியிருந்த மாதத்தில் வெளிவந்திருந்த - காலச்சுவடு இதழில் மறு பிரசுரமாகியிருந்த - சுந்தர ராமசாமியின் கதையைப் பற்றிப் பேரா. பழனியப்பனின் ஆய்வு மாணவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார். காலச்சுவடு இதழின் அரசியல் பார்வைகள் குறித்தும் கடுமையான பார்வைகளை முன்வைத்தார். காலச்சுவடு, தலித்துகளுக்கு எதிரான இதழ் என்பதில் அந்த மாணவர் உறுதியுடன் பேசினார்.

அவர் பேசி முடித்ததும், பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த - மாநிலக் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் - மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவக்குமார் 'ஒரு இதழ் குறித்தும், அந்த இதழின் அரசியல் பார்வை குறித்தும் இவ்வளவு அவநம்பிக்கையுடன் அனுகத் தேவையில்லை' என்ற கருத்தை மென்மையான வார்த்தைகளில் முன்வைத்தார்.

அதற்கு பேரா. ராமன், "மாணவரின் தலித் அரசியல் பார்வை சரியானதுதான். காலச்சுவடு சார்ந்து மாணவரின் தலித் அரசியல் தளத்திலிருந்து பார்க்கையில், மாணவர் முன்வைத்த வாதம் சரிதான்." என்று குறிப்பிட்டார்.

பேச்சு எங்கெங்கோ சென்ற விவாதத்தில் தி.ஜாவின் முழுத்தொகுப்பு ஏற்கனவே உள்ள நிலையில் காலச்சுவடு மீண்டும் தி.ஜாவின் முழுத் தொகுப்பைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? கவிஞர் சுகுமாரனைக் கொண்டு தொகுக்க வேண்டியதின் அவசியம் என்ன? என்ற கருத்து சார்ந்த விவாதம் எழுந்தது.

அதற்குக் கடுமையான ஆட்சேபங்களை நான் முன்வைத்தேன். "தி.ஜாவின் மற்ற தொகுப்புகளில் இல்லாத சில கதைகளை சுகுமாரன் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். சில கதைகள் வெளியான இதழின் விவரமும், கால வரிசையும் ஐந்திணை பதிப்பில் தவறாக உள்ளது. அதுவுமில்லாமல் உரிமம் பெற்றுத்தான் காலச்சுவடு புத்தகத்தை அச்சிட்டிருக்கிறார்கள். மேலும், படைப்பு எந்தப் பதிப்பகத்தில் வெளிவர வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது படைப்பின் உரிமைக்குச் சொந்தமானவர்கள்தானே தவிர வாசகர்களோ பதிப்பகத்தாரோ அல்ல..." என்று ராமனிடம் வாதம் செய்தேன். நண்பர் காமராசு என்னுடைய குரலின் அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு சைகை செய்தார். "மோகமுள்" என்ற வார்த்தையை தி.ஜா எங்கிருந்து பெற்றார் என்று சுகுமாரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்த சில தகவல்கள் சார்ந்த கருத்தையும் முன்வைத்தார். தொடர்ந்து ராமனுக்கும் எனக்கும் விவாத உரசல் மூண்டது.

ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் ராமனிடம் சென்று கை குலுக்கி "நீங்கள் பல அருமையான கருத்துக்களை முன்வைத்தீர்கள்" என்றேன். அவரும் மகிழ்ச்சியுடன் உரையாடினார். தமிழ் பதிப்புச் சூழல் சார்ந்தும், காலச்சுவடு கிளாசிக் பதிப்புகள் சார்ந்தும் கூட ராமனுக்கு விமர்சனங்கள் உண்டு. அதையெல்லாம் ராமன் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அவற்றைப் பற்றியெல்லாம் கூட விமர்சனம் எழுதும் எண்ணம் ராமனுக்கு இருக்கலாம்.

நேர்ப்பேச்சில் சந்தித்துப் பேசியதில் ராமனிடம் மொழிபெயர்ப்புகள் சார்ந்தும், தொகுப்புகள் சார்ந்தும் சொல்ல நிறையவே இருக்கிறது. அவருடைய பார்வைகள் தற்காலப் பதிப்புச் சூழலில் விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய ஒன்று. மாறாக காலச்சுவடு கண்ணனைத் திட்டுவதின் மூலமும், ராமனைத் தனிமனிதத் தாக்குதல் நடத்துவதன் மூலமும் கட்டுரையின் சாரத்தை மடைமாற்றி விஷமிகள் குளிர் காய்கிறார்கள்.

காலச்சுவடு என்றில்லை முழுத்தொகுப்பு வெளியிட்டுள்ள எல்லா பதிப்பகங்களின் கிளாசிக் படைப்புகளும், கிளாசிக் ஆளுமைகளின் முழுத் தொகுப்புகளும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவை அல்ல. சிறுசிறு அச்சுப் பிழைகள் நிச்சயம் இருக்கும். ஆனால் படைப்பின் அர்த்தத்தையே மாற்றுகின்ற பிழைகள் பொருத்துக்கொள்ள முடியாத ஒன்று. வார்த்தையையும், வாக்கியங்களையும் மாற்றுவதின் மூலம் படைப்பின் சாரத்தையே மாற்றுகிறோம் என்பது தொகுப்பாளர்கள் அறியாததா? பொருட்படுத்தி இவற்றை எல்லாம் நாம் விவாதிக்க முன்வர வேண்டும் இல்லையா?. அதைத்தான் ஆகஸ்டு மாத (2016) இதழின் கட்டுரையில் கல்யாணராமன் முன்வைத்திருக்கிறார்.

கல்யாணராமன் முன்வைக்கும் விமர்சனத்தில் ஒன்றுக்குக் கூட பதில் அளிக்காமல், காலச்சுவடு பதிப்பகத்தின் மீதான தாக்குதலாக கே.என். சிவராமன் மடைமாற்றுகிறார். கடந்த பல ஆண்டுகளில் - போதிய இடைவெளியில் - இதுபோன்ற வெறுப்பரசியலைப் பதிப்பகங்களுக்கு இடையே அவர் செய்து வருகிறார். சிவராமன் போன்ற தீவிர வாசகர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது ஏமாற்றம் அளிக்கிறது.

பிரம்மராஜன் தொகுத்துக் கையளித்த 'ஆத்மாநாம் முழுத்தொகுப்பு' மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல் போற்றப்பட வேண்டிய ஒரு வேலைதான். கடந்த 20 ஆண்டுகளாக அந்தத் தொகுப்புதான் நமக்குப் படிக்கக் கிடைக்கிறது. பிரம்மராஜனுக்குத் தமிழ்ச் சூழல் அந்த வகையில் நன்றிக் கடன்பட்டுள்ளதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், கல்யாணராமன் தனது கட்டுரையில் குறிப்பிடும் விஷயங்களை விவாதித்து 'ஆத்மாநாம் படைப்புகள்' சார்ந்த புரிதலை முன்னெடுக்காமால், பதிப்பரசியலை முன்வைத்து விவாதத்தை மடை மாற்றுவது துருதிஷ்டமான ஒன்று.

'ஜி. நாகராஜன் படைப்புகள்', 'ஜி. நாகராஜன் ஆக்கங்கள்' என சி. மோகன் தொகுத்துக் கையளித்த பதிப்பையும், ராஜமார்த்தாண்டன் கையளித்த பதிப்பையும் காலச்சுவடு பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்கள். சி. மோகனின் தொகுப்பில் இல்லாத பல படைப்புகளும், கடிதங்களும், ஆங்கிலப் படைப்புகளும் ராஜமார்த்தாண்டனின் பிந்தைய தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வாசகர்கள் இரண்டு தொகுப்பையும் ஒப்பிட்டு இதனைப் புரிந்துகொள்ளலாம். இதுபோன்ற அடுத்தடுத்த தொகுப்பு வேலைகள்தான் ஒரு படைப்பாளிக்கு மரியாதை செய்யும் செயல்கள். இதெல்லாம் புதிதாக ஒன்றும் நடப்பதல்ல.

ஆங்கிலப் பதிப்பில் ஒரே எழுத்தாளனுக்கு, ஒரே பதிப்பகத்தின் மூலம் இரண்டு தொகுப்புகள் வெளிவருகின்றன. ஒரு புத்தகத்தின் இரண்டு மொழிபெயர்ப்புகளும் ஒரே பதிப்பகத்தில் ஒன்றாகவே அச்சாகின்றன. வாசகர்கள் விரும்பும் தொகுப்பையும், மொழியாக்கத்தையும் வாங்கிக் கொள்ளலாம். ஓரான் பாமுக், முரகாமி போன்ற எழுத்தாளர்களுக்குத் தமிழில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. அடுத்தடுத்த மேம்படுத்தப்பட்ட தொகுப்பு வந்தால் கூட பதிப்பகங்களுக்கு இடையிலான வெறுப்பரசியலாக முன்னெடுப்பதில்தான் சிவராமன் போன்றவர்கள் முனைப்பாக இருக்கின்றனர்.

'தனிமையின் நூறு ஆண்டுகள்' மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரே பதிப்பில் இரண்டு விதமான முன்னட்டை வடிவமைப்பைச் செய்து காலச்சுவடு பதிப்பகம் முன்னோடியான முயற்சியைக் கடந்த ஆண்டுகளில் செய்திருந்தார்கள். தமிழ்ச் சூழலில் முன்னட்டை மேக்கப் வேலைகள்தான் சாத்தியம் போல. தொகுப்பு சார்ந்த கறாரான வேலைகள் செய்தால் பொங்கி எழுகிறார்கள்.

ஒவ்வொரு வார்த்தையையும் வாக்கியத்தையும் வரியையும் படைப்பாளன் தனது ஓர்மையில் வடித்தெடுக்கிறான். அதற்கான மரியாதையை உணர்ந்தவர்கள் தொகுப்பாளர்களாக அமைந்தால் வாசகர்கள் தப்பித்தோம். இல்லையேல் சிரமம்தான். எல்லாவற்றையும் பாராட்டும், எல்லோரையும் பாராட்டும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நியாயமான விமர்சனம் செய்தால் கூட பதிப்பரசியலாகவும், பதிப்பக - எழுத்தாள பிரச்சனையாகவும் திரிதல் செய்யும் விஷமிகளுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

சமூக வலைதளங்களில் கல்யாண ராமன் எழுதிய கட்டுரைக்குக் காலச்சுவடு நிறுவனத்தையும், கண்ணனையும் சாடும் பதிவுகளைத் தொடர்ந்து பிரம்மராஜன் தனது முகநூலில் பகிர்ந்து வரும் மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. பிரம்மராஜன் தமிழ் வாசகர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறாரா என்ன? இது போன்ற போலித்தனமான அனுகுதல்கள் பிரம்மராஜனுக்கு எதற்கு? ஒரு தொகுப்பின் சர்ச்சைகள் குறித்து வாய் திறக்க வேண்டியதும், அதன் புரிதலை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டியதும் புரிதலுள்ள தொகுப்பாளரின் அடிப்படை தர்மம். மாறாகக் கீழ்த்தரமான இலக்கிய அரசியலை வளர்த்தெடுப்பது அல்ல.

பஷீர் நினைவு தினத்தில் எஸ்ரா தொகுத்த "நூறு சிறந்த சிறுகதைகள்" தொகுப்பு குறித்து சில ஐயங்களை நான் முன் வைத்துப் பேசினேன். கொஞ்சம் கூடப் பொறுப்பின்றிக் கதைகளை எஸ்ரா தொகுத்திருக்கிறார் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதனைப் பதிவிலும் எழுதி இருக்கிறேன். இன்று வரையிலும் எஸ்ரா அது குறித்து வாய் திறக்கவில்லை. எஸ்ராவின் தீவிர வாசகர்கள் என்னைப் பழித்ததுதான் மிச்சம்.

Link: பஷீரும் தமிழ்ச் சூழலும் (Click to read more)

ஆத்மாநாம் முழுத்தொகுப்பு குறித்து பேரா. கல்யாண ராமன் கட்டுரை எழுதியதற்கு, 'இவ்வளவு நாட்களும் தமிழ்த்துறை தூங்கிக் கொண்டிருந்ததா? இவ்வளவு நாள் இல்லாத அக்கரை திடீரென்று ராமனுக்கு எங்கிருந்து வந்தது?' போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.

தமிழர்களிடம் எங்கோ ஒரு பிறழ்வு இருக்கிறது. எல்லாம் நண்டு கதையின் தாத்பர்யம்தான். ஆத்மாநாம் அறக்கட்டளையை சீனிவசன் நடராஜன் ஆரம்பித்த போதும் இதே பிரச்சனை எழுந்தது. ஆத்மாநாம் பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கவும், விருதினைக் கொடுக்கவும் இவர்கள் யார்? என்ற பிரச்சனையை எழுப்பினார்கள்.

தமிழ்ச் சூழல் எல்லா காலத்திலும் இப்படித்தான் இருந்துள்ளதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. இரட்டை அர்த்தம்தான் என்றாலும் ஒரு பழமொழியைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

'தானும் படுக்க மாட்டானுங்க. தள்ளியும் படுக்க மாட்டானுங்க.'

ஆத்மாநாம் முழுத் தொகுப்புக்கும் சரி, ஆத்மாநாம் பெயரிலான அறக்கட்டளையைப் பதிவு செய்ததற்கும் சரி, அப்பெயரிலான விருதினை அறிவித்தபோதும் சரி, தமிழ்ச் சூழலை நினைக்கும்போதும் சரி, இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்வது பொருத்தமாகத்தான் இருக்கிறது.

இந்த விஷயத்தில் வாய் திறக்க வேண்டியது பிரம்மராஜன்தான். விளக்கம் அளிக்க வேண்டியதும் அவர் மட்டும்தான். இந்த விவாதம் குறித்து அவருக்குச் சாதகமாக எழுதும் முகநூல் பதிவுகளை ஷேர் செய்யும் பிரம்மராஜனுக்குக் கட்டுரை வெளியான இதழுக்கு எதிர்விமர்சனம் அல்லது பதில் கட்டுரை எழுதத் தெரியாதா?

பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் காலச்சுவடு பதிப்பகத்துக்கு எதிராகவும், பிரம்மராஜனுக்கு ஆதரவாகவும் முகநூலில் பகிர்ந்துள்ள நிலைத்தகவல் வெறுப்பரசியலின் உச்சம். முதல் வரியிலேயே சிவராமன் இப்படி ஆரம்பிக்கிறார்.

/-- பிரம்மராஜனைக் குறிவைத்துத் தாக்க ஆரம்பித்திருக்கிறதா? அழிக்க நினைக்கிறதா காலச்சுவடு? --/

ஒரு படைப்பை விமர்சனம் செய்வது ஒருவரை அழிப்பதாகுமா? காலச்சுவடு பதிப்பகம் என்ன இலக்கிய சர்வாதிகாரிகளா? இலக்கிய வரலாற்றில் பிம்மராஜனுக்கான இடத்தை யாரும் தாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. அதைப் போலவே விமர்சனத்திலிருந்து பிரம்மராஜன் தப்பிக்கவும் முடியாது. ஒரு வகையில் காலச்சுவடு பதிப்பகம் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் அக்கட்டுரை வழி ஏற்படுத்துகிறதுதானே!? வசகர்களாகிய நமக்கும் தொகுப்பு சார்ந்த ஒரு புரிதலை ஏற்படுத்துகிறதுதானே. உ.வே.சா முன்னுரை தொகுப்புப் பணியை அதிகாரத்தால் காலச்சுவடு பெற்றது என்ற யூகத்தின் அடிப்படையிலான ஆதாரமில்லாத தகவல்களைப் பகிர்வது அபத்தத்தின் உச்சம்.



சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் காலச்சுவடு பதிப்பகத்தின் மீதும், கண்ணன் மீதும் பிரயோகிக்க நினைக்கும் வெறுப்பரசியலை - காலச்சுவடு பதிப்பகம் வாயிலாகப் புத்தகங்கள் கொண்டு வரும் - ஆய்வாளர்கள் மீதும் படைப்பாளிகள் மீதும் சிவராமன் கக்குவதற்குத் தயாராகவே இருக்கிறார். இதெல்லாம் தமிழின் ஆரோக்கியத்தின் முதுகில் விஷக் கத்தியைச் சொருகும் வேலை. காலச்சுவடையும், கண்ணனையும் வசைபாட எவ்வளவோ விஷயங்கள் சிவராமனுக்குக் கிடைக்கலாம், அதற்குப் பதில் சலபதி போன்ற ஆய்வாளர்களின் உழைப்பையும், பெருமாள்முருகன் போன்ற படைப்பாளிகளையும்தான் புறந்தள்ள வேண்டுமா?

புதுமைப்பித்தன் கதைகளைக் காலச்சுவடு கொண்டுவரும் அறிவிப்பை வெளியிட்டபோது தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தியவர்கள் - 8 பதிப்புகளைக் கடந்துவிட்ட (ஆ.இரா.வேங்கடா)சலபதி தொகுத்தளித்த முழுத்தொகுப்பை அதற்கு முன் வந்த தொகுப்புகளுடன் ஒப்பிட்டு - சலபதியின் தொகுப்பு செம்பதிப்பு அல்ல என்பதை இவர்கள் நிரூபிக்கலாமே. பெருமாள்முருகன் தொகுத்தளித்த கு.ப.ரா கதைகளுக்கும் அதனைச் செய்யலாமே?

சங்க இலக்கியங்களைத் தொகுத்தளித்ததில் சாமிநாதைய்யர் எப்படி முன்னோடியோ, அதுபோலவே நவீன கிளாசிக் படைப்புகளை - நவீன பார்வையோடும் அறிவின் பின்புலத்திலும், கல்விப் புல ஆய்வாளனின் நோக்கோடும் - தொகுத்தளிப்பதில் சலபதி முன்மாதிரி ஆளுமை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பதிப்பிலும் ஏதாவது ஒரு புதுத் தகவலைச் சேர்த்து புதுமைப்பித்தனை இன்னும் இன்னும் என சலபதி நெருங்குகிறார். அதன் மூலம் வாசகர்களும் நம்பகத்தனமான மூலத்தை நெருங்க வழி சமைக்கிறார். இதுவரையிலும் வெளிவந்த தொகுப்பின் முன்னுரைகளைப் படித்தாலே அது விளங்கும். சலபதி செய்யும் ஒவ்வொரு வேலையின் பின்னும் இந்தச் செய்நேர்த்தி இருக்கும். ஒரு வார்த்தையில் சொல்லுவதாக இருந்தால் சலபதியின் தொகுப்புப் பணியை 'அபாரம்' என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட பணியைப் பாராட்டவில்லை என்றாலும் தூற்றாமல் இருக்கலாமே.

பழ. அதியமான் தொகுத்தளித்த கு. அழகிரிசாமி கதைகள் முழுத்தொகுப்பு, பெருமாள்முருகன் தொகுத்தளித்த கு.ப.ரா கதைகள் முழுத்தொகுப்பு போன்ற வேலைகளுக்கும் சலபதியின் 'புதுமைப்பித்தன்' முழுத்தொகுப்பே முன்மாதிரி. வரலாற்றுப் பார்வையிலும், அறிவார்த்த பார்வையிலும் அறிவியல் பின்புலத்தின் துணைகொண்டு இந்தத் தொகுப்பு வேலைகளைச் சலபதி செய்திருக்கிறார். இதுவரையிலும் வெளிவந்துள்ள புதுமைப்பித்தன் கதைகளின் பல்வேறு பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே வாசகர்களுக்கு உண்மை புலனாகும். இதுபோன்ற நம்பகத்தனமான பதிப்புகளை நூலகங்களும் கல்வி நிறுவனங்களும் தேடி வாங்குவதில் வியப்பில்லையே. (இதைத்தான் நூலகங்களைக் குறி வைத்து காலச்சுவடு லாபி செய்கிறது என்று சிவராமன் ஊடுசால் ஓட்டுகிறார்.)

சிவராமனின் பாஷையில் சொல்லுவதென்றால் காலச்சுவடு மீதுள்ள வெறுப்பரசியலில் சலபதியையும், பெருமாள்முருகனையும் இவர் தாக்க நினைக்கிறாரா? அல்லது அழிக்க நினைக்கிறாரா?

ஆம்... அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என்று சிவராமன் போல நானும் சொல்ல மாட்டேன். ஏனெனில் இவர்கள் செய்யும் வேலைகளால் வரலாறு அவர்களுக்கான இடத்தைக் கொடுக்கும். உழைப்பு, செய்நேர்த்தி ஆகியவற்றின் பொருட்டு அவரவர்க்கான இடம் அவரவர்க்கு வாய்க்கும்தானே.

மாதொருபாகன் சர்ச்சை வெடித்தபோது கருத்துச் சுதந்தரத்திற்காகக் குரல் கொடுக்கிறேன் என்று பெருமாள்முருகனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் சிவராமன் பேசியதும் கூட காலச்சுவடு மீதுள்ள வெறுப்பரசியல்தான் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது.

ஒரு தொகுப்பு வெளிவருவதன் - கால இடைவெளியில் அதே தொகுப்பின் மேம்படுத்தப்பட்ட செம்பதிப்பு ஆதாரத் தகவல்களுடன் வெளிவருவதன் - சாத்தியக் கூறுகள் தென்பட்டால் இலக்கியச் சூழலில் மகிழ்வுக்கான வெளி அமையவேண்டும். அப்படியில்லாமல் பதிப்பகங்களுக்கு இடையிலான அரசியலாக சிவராமன் போன்றவர்கள் மடைமாற்றுவது சந்தர்ப்பவாதம்.

இதுபோன்ற தொகுப்புப் பணிகள் தமிழுக்குப் புதிது என்பதால் மற்றவர்களும் குழப்பத்துடன் புரிந்து கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. ஆதாரப் பூர்வமான, செறிவான நல்ல பதிப்பைத் தீவிர வாசகர்கள் தேடிச் செல்வார்கள். காலச்சுவடு பதிப்பகத்தில் வெளிவந்த புதுமைப்பித்தன் முழுத்தொகுப்பே அதற்குச் சான்று. இதுசார்ந்த புரிதலுள்ள வாசகர்கள் நல்ல பதிப்பைக் கண்டடைவார்கள். தீவிர வாசகர்களே ஒரு பதிப்பகத்தின் நம்பிக்கைக் கீற்று. சிவராமனும் அதில் ஒருவர் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனினும் அவர் ஏன் காலச்சுவடு பதிப்பகத்தின் மீது வன்மத்தைக் கக்குகிறார் என்பதுதான் புரியவில்லை.

தன்னுடைய நண்பரின் படைப்புகளின் மூலத்தைத் தேடித் திரிந்து ஒருவன் கண்டுபிடித்திருக்கிறான் என்பதில் பிரம்மராஜன் உண்மையில் மகிழ வேண்டும். அதை விடுத்து சிவராமன் போன்றவர்கள் பதிவிட்டிருக்கும் - ராமனின் விமர்சனக் கட்டுரையை நீர்த்துப் போகச் செய்யும் தன்மையிலான - முகநூல் பதிவுகளை பிரம்மராஜன் தனது முகநூல் பக்கங்களில் ஷேர் செய்வது எந்த வகையிலும் நியாயம் என்று தெரியவில்லை. பிரம்மராஜனின் இலக்கியப் பங்களிப்புக்குக் கல்யாணராமனின் விமர்சனக் கட்டுரை களங்கம் ஏற்படுத்துவதால் வழக்கு தொடர வேண்டும் என்று ஒரு சீனியர் டிரான்ஸ்லேட்டர் முகநூல் பின்னூட்டத்தில் யோசனையை முன்வைக்கிறார். அடக் கடவுளே...! தமிழ்ச் சூழல் வெளங்கிடும்.

ஆர். சிவக்குமார், விமலாதித்த மாமல்லன், கவிஞர் சுகுமாரன், பிரம்மராஜன், அகிலன் எத்திராஜ் போன்றவர்கள் ஆத்மாநாம் படைப்பு குறித்து நம்பத் தகுந்த தகவல்களைக் கொடுக்க வல்லவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆகவே, இத்தொகுப்பு குறித்தும், விமர்சனக் கட்டுரை குறித்தும் பேச இவர்களுக்கு நிறையவே விஷயம் இருக்கும். வினோதம் என்னவெனில் இவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. மற்றவர்கள்தான் பார்ப்பனக் கண்ணன், பதிப்பரசியல் என்று சமர் செய்கிறார்கள்.

தமிழ் இலக்கியப் பிரதிகளைக் கவனத்துடன் அனுகி அதுசார்ந்த கருத்துக்களைப் பகிரும் விமலாதித்த மாமல்லன் கூட அமைதி காப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இலக்கிய சூழலிலிருந்தும், பொதுவெளியிலிருந்தும் விலகி வாழும் பிரம்மராஜன் மெளனம் கலைய வேண்டும். இல்லையேல், முடிந்த மட்டும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் (கள்ள இலக்கிய அரசியல்) வெறுப்பரசியலைப் பரப்புபவர்களை ஊக்கப்படுத்தி, (தனது நிழலில்) உரப்படுத்தி இலக்கிய விவாதத்தைத் திரிக்கும் வேலையை பிரம்மராஜன் செய்யாமல் இருக்க வேண்டும். அதுவே நவீன இலக்கியத்துக்கு - கவிப் பங்களிப்பை விட, ஆத்மாநாம் தொகுப்பைக் கையளித்ததை விட இலக்கியச் சூழலுக்கு - பிரம்மராஜன் செய்யும் மிகப் பெரிய கைமாறாக இருக்கும். அதைவிட முக்கியம் பிரம்மராஜன் நேரடியாக நம்முடன் பேச வேண்டும். பேசுவாரா அவர்?

டிஸ்கி:

1. ஆங்கிலத் துறை பேராசிரியரின் பெயரைத் தவறுதலாக 'சிவக்குமார்' என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பர்கள் 'அழகரசன்' என்பதை கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

2. அபிலாஷ் - உரையாற்றினார் என்று குறிப்பிட்டிருந்தேன். 'அகலிகை' பற்றிய கட்டுரையை வாசித்தவர் நந்தனம் கல்லூரிப் பேராசிரியர்.

3. 'ஐந்திணை' என்ற பதிப்பகத்தின் பெயரை நீக்கி இருக்கிறேன். தி.ஜா தொகுதியை பலரும் வெளியிட்டிருக்கலாம். ஆகவே பொதுவாகவே பேசுவோம்.