சில நாட்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவரின் குடும்ப விழாவிற்காக 3 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றிருந்தேன். நான் எங்கு சென்றாலும் கூடுமான வரையில் அழுக்கான உடையில் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான், ஊரெல்லாம் சுற்றிவிட்டு, சாயம் போன உடையில் எண்ணெய் வழியும் முகத்துடன் நுழைவாயிலை கடக்க முயன்றேன். ஓட்டலின் காவலர் என்னை வழிமறித்தார். நண்பரோ எங்களை நோக்கி ஓடோடி வந்தார். காவலரிடம் சொல்லிவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்றார். இந்த நட்சத்திர உணவகம் புறம்போக்கு நிலத்தை தேவைக்கு அதிகமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக நாளேடுகளில் படித்திருந்ததை முன்னமே நண்பரிடம் குறிப்பிட்டிருந்தேன்."இத பாருடா... பொறம்போக்கு மாதிரி சுத்தறவனுக்கே பொறம்போக்கு நெலத்த சொந்தம் கொண்டாட முடியல. உள்ள நொழையவும் சிபாரிசு தேவைப் பட்றத எங்க கொண்டு சொல்ல?" என்றேன்.
"ரஜினி மாதிரி தத்துவம் புழிய ஆரம்பிச்சிட்டியா?" என்றான் நண்பன்.
தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு சார்ந்து இயங்கக் கூடிய பொது நிறுவனங்களும் சராசரி மக்களை கோமாளிகளாக்கவே செயல்படுகிறது. அந்த வகையில் கிரிக்கெட் தொடர்புடைய சமீபத்திய ரங்கராஜ் பாண்டேவின் கட்டுரை எனக்கு முக்கியமாகப் படுகிறது.
*கோடிகளை விழுங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்:தமிழக அரசுக்கு நோட்டீஸ்*
சென்னையின் மையப்பகுதியில் ஒரு கிரவுண்டு விலை என்ன என்பது தெரிந்தவர்களுக்கு, இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள, 347 கிரவுண்டு நிலத்தை, சொற்ப தொகைக்கு, ஆண்டு குத்தகையாக தாரை வார்த்திருக்கிறது தமிழக அரசு.
தலைநகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், உலகப் பிரசித்தம்; அதில் தான் பிரச்னையே. 1994 மற்றும் 95ம் ஆண்டுகளில், சேப்பாக்கத்தில் உள்ள, 347 கிரவுண்டு இடம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஒரு பகுதி 2015 ஆண்டு வரையும், மறுபகுதி 2025ம் ஆண்டு வரையும் விடப்பட்டுள்ளது.இந்த, 347 கிரவுண்டின் மொத்த குத்தகை தொகை, ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் மட்டுமே. மாதக்கணக்கு பார்த்தால், 71 ஆயிரம் ரூபாய் தான். சென்னை அண்ணா சாலையில், இந்த தொகைக்கு, ஒரு கடை கூட வாடகைக்கு கிடைக்காது.இந்த விஷயம் நன்றாக தெரிந்தும், இவ்வளவு சொற்ப தொகைக்கு, 347 கிரவுண்டு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சரி, "பொதுநலனுக்கு தானே; போனால் போகிறது' என்றால், அதுவும் இல்லை என்றாகிறது. கிரிக்கெட் கிளப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் மைதானம், கிளப் ஹவுஸ், விருந்தினர் விடுதி, நீச்சல் குளம் மற்றும் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சங்கத்தின் உறுப்பினர்களோ, அவர்களோடு தொடர்பு உடையவர்களோ தவிர, சுத்துப்பட்டுப் பகுதிக்குள், ஒரு ஈ, காக்காய் கூட நுழைய முடியாது. சரி, உறுப்பினராகி விட்டால் போச்சு என்றால், அதற்கும் கட்டணம், லட்சங்களில் இருக்கிறது.
"அப்புறம் எங்கிருந்து பொதுநலன் வருகிறது' என கேள்வி எழுப்பியுள்ளார், இந்து மக்கள் கட்சியின் அமைப்பு செயலர் கண்ணன்.இவர் சார்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும், வருவாய் துறைச் செயலருக்கும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள வாலாஜா சாலை பகுதியின் வழிகாட்டி மதிப்பு, சதுரடிக்கு, 5,430 ரூபாய். சந்தை மதிப்பு ஒரு கிரவுண்டுக்கு, 5.2 கோடி ரூபாய்க்கு குறைவானதில்லை. இதை, 347 கிரவுண்டுக்கு கணக்கிட்டால், 1,800 கோடி ரூபாய். குத்தகைத் தொகை 7 சதவீதம் எனக் கொண்டால், தமிழக அரசுக்கு மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் சேர்ந்து, ஆண்டுதோறும், 126 கோடி ரூபாய் தர வேண்டும்.அவ்வளவு வேண்டாம்... வழிகாட்டி மதிப்பீடையே எடுத்து கொண்டால் கூட, ஆண்டு குத்தகைத் தொகை, 31 கோடி ரூபாய் வர வேண்டும். கொடுப்பதோ, வெறும், 8.5 லட்ச ரூபாய் தான்.
இதில், வியப்புக்குரிய இன்னொரு அம்சம்: ஒரு பகுதி எட்டு லட்ச ரூபாய்க்கும், அதே அளவுள்ள இன்னொரு பகுதி, வெறும், 61 ஆயிரம் ரூபாய்க்கும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது தான். இதில் இருந்து, குத்தகைக்கு விடப்பட்டபோது, சந்தை மதிப்பும் சட்டை செய்யப்படவில்லை; வழிகாட்டி மதிப்பீடும் மதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.இதன் மூலம், தமிழக அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளது. இச்சங்கங்கள் இரண்டும், லாபநோக்கில்லாமல் செயல்படும் சமூக சேவை நிறுவனங்களும் அல்ல.தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை, அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகள், ஐ.பி.எல்., போட்டிகள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் வருமானத்துக்கு குறைவில்லை. அத்தனையும் மக்கள் பணம்; இருப்பதும் மக்கள் இடம்.எனவே, சம்பந்தப்பட்ட இடத்துக்கு புது குத்தகைத் தொகையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். பழைய இழப்பை வசூலிக்க வேண்டும். அவர்கள் மறுத்தால், கிரிக்கெட் ஸ்டேடியத்தை தவிர மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும், வருவாய் துறைச் செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அதன் நகலை, கவர்னருக்கும் அனுப்பி உள்ளோம். உரிய பதில் வராவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.
- ஆர்.ரங்கராஜ் பாண்டே
"ங்கோத்தா லாஸ்ட் ஓவர் போடறவன் எவ்வளோ பொறுப்பா இருக்கணும்? ங்கொம்மால இப்பிடி பண்ணிட்டானே?" என்று பள்ளிக்கு செல்லும் சிறுவன் முதல், கல்லூரிக்கு செல்லும் விடலையையும் சேர்த்து, அலுவலகத்திற்குச் செல்லும் இளைஞர்கள் துவங்கி, ஓய்வுபெற்ற மூத்தக்குடி வரை உதிர்க்கும் வார்த்தைகளை கதம்பமாகக் கேட்க முடிகிறது.
கிரிக்கெட் என்பது இந்தியா போன்ற நாடுகளில் பெரிய வர்த்தகம். அதை நம்பி லட்சக் கணக்கானவர்கள் பிழைக்கலாம். ஆனால் சராசரி மக்களால் 'சேரி' என்று அழைக்கக் கூடிய, கீழ் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழக்கூடிய மக்கள் வசிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட காலனிகள் சென்னையின் மையப்பகுதியில் இருக்கிறது. அவற்றை ஆதாரமாகக் கொண்டு லட்சக் கணக்கான குடும்பங்கள் தின வாழ்க்கையை மேற்கொள்கின்றன. அவற்றையெல்லாம் அரசாங்கம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கான குடியிருப்புகளை சென்னைக்கு வெளியில் அமைக்க அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தக் கூடிய எந்த அமைப்பையும் நான் எதிர்க்கவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்துத்தான். என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமாக செல்லக் கூடிய எதையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்க வேண்டிய கடமையை படித்தவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
விடுதிகளும், விளையாட்டு மைதானங்களும் புறநகர் பகுதிகளில் இருப்பினும் கேளிக்கைக்காகவும், பயிற்சிக்காகவும் சொகுசு வண்டிகளில் செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக எளிய மக்களை பந்தாட வேண்டாமே. ஒவ்வொரு பந்தையும் நுட்பமாக கவனித்து பகிரக்கூடிய நண்பர்கள் இதுபோன்ற விஷயங்களையும் பொதுவில் வைக்கலாமே?. தேவையான கவனிப்பை ஏற்படுத்தலாமே?
குறிப்பு: இந்தப் பதிவு கே வி ஆர், வானவில் கார்த்திக், கிழக்கு பத்ரி போன்ற கிரிகெட் பிரிய நண்பர்களுக்கு சமர்ப்பணம்...
நன்றி: தினமலர் நாளேடு.





