Monday, December 20, 2010

மர்மஸ்தான கீறல் - ஆஸ்மேன் செம்பேன்

மூலாடே(genital mutilation) என்பது பெண்களின் பிறப்புறுப்பை கூர்மையான ஆயுதத்தால் சேதப்படுத்தும் ஆப்ரிக்க பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கவழக்கம். பெண்களை பரிசுத்தப்படுத்தும் கொடூரமான சடங்கு முறை. ஆண்களுக்கு செய்யப்படும் சுன்னத்(circumcise) போல ஒரு சடங்கு.திருமணத்திற்கு முன் பெண்குழந்தை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்யும் சடங்காகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்த சடங்கிற்கு உட்படுத்தப்படும் குழந்தைகளின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டதுதான் இந்தத் திரைப்படம்.

மேலும் திரைப்படத்தைப் பற்றி படிப்பதற்கு முன் உயிர்மையில் வெளியான இந்தக் கட்டுரையை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படித்துவிடுங்கள்: மறுக்கப்பட்ட பெண்மை>>

ஆப்ரிக்க தேசத்தின் எங்கோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தின் காலைப் பொழுது ரம்யமாகத் துவங்குகிறது. காலை சூரியன் கிராமத்தில் நுழையும் பொழுது வியாபாரப் பொருட்களை வண்டியில் சுமந்தவாறு ஒருவன் கிராமத்திற்கு வருகிறான். சிறுவர்கள் அவனுடைய ஒட்டைவண்டியை தள்ளி முன்னேற்றுகிறார்கள். மரநிழலில் அவன் வண்டியை நிறுத்துகிறான். அதற்கு எதிரே கிராமத்தின் மசூதி இருக்கிறது. கிராமவாசிகள் அங்குமிங்கும் ஓடி ஏதாவதொரு வேலை செய்தபடி இருக்கின்றனர். கோலே அவளுடைய வீட்டை பெருக்கிக் கொண்டிருக்கிறாள். மூலாடே சடங்கிலிருந்து தப்பித்த நான்கு சிறுமிகள் ஓடி வந்து அவளுடைய காலில் விழுகின்றனர். தன்னுடைய கணவனின் மூத்த மனைவியை கேட்டுக்கொண்டு சிறுமிகளுக்கு கோலே அடைக்கலம் கொடுக்கிறாள். சிறுமிகள் சடங்கிலிருந்து தப்பியதற்கு அடையாளமாக கொட்டுசத்தம் பின்னணியில் கேட்கிறது.

கோலேயின் கணவன் கஸீத்திற்கு மூன்று மனைவிகள். கோலே இரண்டாவது மனைவி. அன்று கஸீத் வியாபாரத்திற்காக வெளியூர் செல்கிறான். வீட்டின் வாசலில் காப்புக் கயிறு கட்டி சிறுமிகளைத் தன்னுடனே தங்கச் செய்கிறாள். தன்னைக் கேட்காமல் யாரும் சடங்கு முடியும் நாள் வரை வெளியில் செல்லக்கூடாது என்று ஆணையிடுகிறாள். இது தெரிந்து சடங்கை நிறைவேற்றும் பெண்கள் சிலர் கோலேவின் வீட்டின் முன்பு கூடி விவாதம் செய்கின்றனர். கோலே குழந்தைகளை அனுப்ப பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள்.

மதத்தின் நம்பிக்கைகளை அழிக்க சதி செய்வதாகக் கூறி கோலேவினை பஞ்சாயத்திற்கு அழைக்கிறார்கள். ஊர்த்தலைவரின் மகன் இப்ராஹிமுக்கு கோலேவின் மகள் அம்சாத்தொவை நிச்சயத்திருப்பதால் அவர் அதிர்ச்சியடைகிறார். மேலும் மூலாடே செய்துகொள்ளாத அம்சாத்தொவிற்கு தனது மகனை கல்யாணம் செய்து கொடுக்கமாட்டேன் என்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இப்ராஹீம் பாரிசிலிருந்து ஊருக்குத் திரும்புகிறான். அவனுக்கு சிறப்பான முறையில் வரவேற்ப்பு அளிக்கிறார்கள். சுத்தப்படுத்தும் சடங்கை முடிக்காததால் அவனை வரவேற்க அம்சாதோ செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாள்.

சில நாட்களில் கஸீத் ஊருக்குத் திரும்புகிறார். வரும் வழியிலேயே அவனிடம் கோலேவின் செயல்களை ஊரார் சொல்கிறார்கள். கோவமுடன் வீட்டிற்கு வந்து மனைவிகளிடம் அவன் வாக்குவாதம் செய்கிறான். சிறுமிகளுடன் அம்சதொவிற்கும் மூலடே செய்யவேண்டும் என்று கோலேவினை வற்புறுத்துகிறான். அதற்கு அவள் மறுத்துவிடுகிறாள். இப்ராஹிமுக்கு 11 வயதான வேறொரு பெண்ணை கல்யாணம் முடிக்கப் பார்த்துவிடுகிறார்கள்.

ரேடியோ கேட்பதால் தான் பெண்கள் இப்படி நடக்கிறார்கள் என்று அவற்றைப் பறிக்கிறார்கள். பெண்கள் ரேடியோ கேட்பதற்கும் தடை விதிக்கிறார்கள். இதற்கு பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. இரவில் கூடி பெண்கள் அனைவரும் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில் காஸீத்-ன் அண்ணன் கோலேயின் வீட்டிற்கு வருகிறான். பிரச்சனை மேலும் வலுக்கிறது. மீண்டும் அவள் பஞ்சாயத்தின் முன் நிறுத்தப்படுகிறாள். மூலாடே செய்ய குழந்தைகளை விடுவிக்குமாறு சாட்டையால் காஸீத் மூர்க்கமாக அடிக்கிறான். பெண்கள் எல்லோரும் செய்வதறியாது தவிக்கிறார்கள். "இன்னும் வேகமாக அடி..." என்று ஆண்கள் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். அவர்களுடன் சடங்கு செய்யும் பெண்களும் சேர்ந்து கொள்கிறார்கள். "எதுவும் பேசாமல் நில்... பொறுத்துக்கொண்டு நில்" என்று பெண்கள் அனைவரும் கோலேவிற்கு குரல் எழுப்புகின்றனர். கோலே வலியைப் பொறுத்துக்கொண்டு பிடிவாதமாக நிற்கிறாள். மரத்தடியில் வியாபாரம் செய்யும் கடைக்காரன் வந்து பிரம்பை வாங்கிக் கீழே போடுகிறான். காஸீத்ன் மற்ற இரண்டு மனைவிகள் கோலேவை கைத்தாங்களாக வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்குள் 4 சிறுமிகளில் ஒரு சிறுமியை அவளிடைய தாய் வந்து பொய் சொல்லி அழைத்துச் செல்கிறாள். அவளுக்கு மூலாடே செய்யும் பொழுது ரத்தப் போக்கு அதிகமாகி இறந்துவிடுகிறாள். அன்று இரவே கோலேவை சித்ரவதையிலிருந்து காப்பாற்றிய கடைக்காரனும் கொலை செய்யப்படுகிறான். சடங்கு நாள் முடிந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல அவர்களுடைய அம்மக்கள் சந்தோஷத்துடன் வருகிறார்கள். குழந்தையைப் பறிகொடுத்தவள் மட்டும் அழுது புலம்புகிறாள். எல்லோரும் மசூதியை நோக்கிச் செல்கிறார்கள். இனி நாங்கள் யாருக்கும் மூலாடே செய்யப்போவதில்லை என்று கத்துகிறாள். ஆவலுடன் மற்ற பெண்களும் சேர்ந்துகொள்கிறார்கள். அந்த நேரம் பார்த்து சிவப்பு உடை அணிந்த சடங்கை நிறைவேற்றும் பெண்கள் வருகிறார்கள். பெண்களில் சிலர் கோலேவுடன் சேர்ந்துகொண்டு அவர்களிடமிருக்கும் துருப்பிடித்த கத்திகளையும், சடங்கு உடைகளையும் எரிந்து கொண்டிருக்கும் ரேடியோக் குவியலில் போடுகிறார்கள்.

"இது இஸ்லாத்தோட மத விரோதச் செயல்" என்று ஊர்த் தலைவர்கள் முறையிடுகிறார்கள்.

"சடங்கு செய்யாத லட்சக்கணக்கான பெண்கள் மெக்காவுக்கே போறதா மதத் தலைவர் ரேடியோவில் பேசனாரே" என்று அவர்களுக்கு கோலே பதில் சொல்கிறாள். பஞ்சாயத்துத் தலைவர்கள் வாயடைத்துப் போகிறார்கள். பெண்கள் அனைவரும் வெற்றி கோஷம் போடுகின்றனர். அம்சதோ கூட்டத்திலிருந்து விலகி தனியாகச் செல்கிறாள். தந்தையின் ஆணையை மீறி அவளையே மணக்கப் போவதாக இப்ராஹீம் அவளை நோக்கிச் செல்கிறான். குவிக்கப்பட்ட ரேடியோக்கள் எரிந்துகொண்டிருக்கிறது. அதிலிருந்து எழும் கரும்புகை மசூதியின் உட்சியிலுள்ள வெள்ளை முட்டையையும் தாண்டி உயரே செல்கிறது. அடுத்த காட்சியில் ரேடியோவிற்கு பதில் டிவி ஆண்டனா முளைக்கிறது.

பெண்களின் மீதான அடக்கு முறையை எதிர்த்து குரல் கொடுக்கும் இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 2004-ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான சிறப்பு விருது பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஆரம்ப சில காட்சிகள் YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது: Moolaadé

இந்த படத்தை இயக்கிய "ஆஸ்மேன் செம்பேன்" ஆப்பிரிக்க சினிமாவின் தந்தையாகப் போற்றப்படுகிறார். அவரைப் பற்றிய கட்டுரை கீற்று தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. அந்த இணைப்பு கீழே உள்ளது.

ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை - ஆஸ்மேன் செம்பேன்

பின்குறிப்பு: இதே போன்ற கதையை Alice Walker என்பவர் ஆங்கிலத்தில் நாவலாக 90 களில் எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் பெயர் எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

Monday, December 13, 2010

கேணி சந்திப்பு - வண்ணதாசன்

உச்சிக் கிளையில் இருக்கும் தேன்கூட்டைப் பார்த்திருக்கிறீர்களா? தேனடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வழவழப்பான தேனீக்கள் தான் எத்தனை அழகு! வெயிலில் மின்னும் அந்த கரிய நிறத்திற்கு ஈடுஇணை எது? ஞானியின் வீடும் இந்த மாதம், தேன்கூட்டைப் போலவே இருந்தது. வாசற்கதவை பிடித்துக் கொண்டும், ஜன்னல் சட்டத்தில் தொங்கிக்கொண்டும், வழிப்பாதையில் சம்மனமிட்டும், சமையல் மேடையில் உட்கார்ந்துகொண்டும் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ராணித் தேனிபோல வண்ணதாசன் வந்தமர்ந்தார்.

"ஒளியிலே தெரிவது" -என்ற புத்தக வெளியீட்டுடன் சந்திப்பு நடக்க இருக்கிறது. முதல் பிரதி யாரிடம் செல்கிறது என்பது வண்ணதாசன் தான் முடிவு செய்யவேண்டும் என்று அறிமுகவுரையுடன் இலக்கிய சந்திப்பை ஞாநி துவங்கி வைத்தார்.

வழி தெரியாமல் ஞாநியின் வீட்டைத் தேடியவாறு சாலையில் நடந்து வந்தேன். என்னை நோக்கி ஒரு நபர் வந்து "நீங்கள் கேணிக்குதானே செல்கிறீர்கள் என்னுடன் வாருங்கள்" என்று இங்கு அழைத்துக்கொண்டு வந்தார். இதிலிருந்து எழுத்தாளன் வாசகனுக்கு வழிகாட்டுவதில்லை. வாசகர்கள் தான் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்பது புரிகிறது. அவர் பெயர் குமார் என்று நினைக்கிறேன். என்னுடைய வாசகராகத்தான் இருக்க வேண்டும். அவருக்கு முதல் பிரதியை கொடுக்க விரும்புகிறேன் என்றதும் பெருத்த கரகோஷம். நண்பர் குமார் பரவசம் கலந்த கூச்சத்துடன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை நாடக நடிகர் பாரதி மணியும், மூன்றாவது பிரதியை எழுத்தாளர் எஸ்ரா -வும் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து கல்யாண்ஜி தனது உரையைத் தொடர்ந்தார்.

எனக்கு பேசத்தெரியாது அதனால் தான் எழுத ஆரம்பித்தேன். அதிகம் பேசாமல் உங்களுடன் இருந்துவிட்டுப் போகவே வந்துள்ளேன். எழுதுபவன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனக்கு எஸ்ரா மாதிரி பேசவராது. எழுதுபவன் எழுதினால் போதும் என்பது என் எண்ணம். ஆறு, குளம், ஏரி என்று எல்லா நீர்நிலைகளும் வற்றிக்கொண்டு வருகின்றன, தாமிரபரணியை பார்ப்பதற்கு மனம் வலிக்கிறது. கேணியின் அருகில் சந்திப்பு என்றதும் ஆர்வமுடன் வந்தேன். ஏனெனில் கிணற்றிற்கும் எனக்கும் சமந்தம் இருக்கிறது. வேலையில்லாத நாட்களில் என்னுடைய அண்ணன் வீட்டு பின்வாசலில் உள்ள கேணிக்கு அருகில் வரைந்துகொண்டும், எழுதிக் கொண்டும் இருந்த நாட்கள் நினைவிற்கு வருகிறது. எழுதுபவனுக்கு ஞாபகங்கள் பெரிய சம்பத்து அல்லது அவஸ்த்தை.

சந்திப்பு உள்ளே நடப்பது ஏமாற்றமாக இருக்கிறது. வந்ததும் கேணி இருக்கும் இடத்தை சென்று பார்த்தேன். மக்கிய இலைகளும், பழுத்து விழுந்த சருகுகளும், சேரும் சகதியும் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அழுகின சருகும் அழகுதானே. சந்திப்பு பின்புறம் ஏற்பாடாகி இருந்தாலும் நீங்கள் ஆர்வமுடன் அங்கு அமர்ந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். குறுக்கும் நெடுக்குமாக செல்லக்கூடிய பல வண்ணக் கொடிகளும், ஈரத் துணியின் வாடையும் கவரக்கூடிய விஷயங்களாக இருக்கிறது. கிரா பேசிய வார்த்தைகள் கேணிக்கு அருகில் உதிர்ந்து கிடக்கிறது. அவற்றை பொருக்கி எடுத்துச்செல்லவே வந்திருக்கிறேன். எல்லோரும் வருவதற்கு முன், இந்த அறையில் பத்தமடை பாயை விரித்திருந்தார்கள். எவ்வளவு அழகாக இருந்தது. அந்த கோரைப்பாயின் வாசனை கூட எனக்குத் தெரியும்.

1962 ஏப்ரல் மாத வெயில் காலத்தில் ஆரம்பித்து, இதோ இந்த குளிர் காலம் வரை நிறைய தூரம் வந்துவிட்டேன். முதன் முதலாக என்னுடைய படைப்பை வாசித்துவிட்டு நம்பிராஜன் என்ற வாசகர் வீடுதேடி வந்திருந்தார். அதிலிருந்து எவ்வளவு தூரம் வந்துவிட்டேன். முதலில் அஃகு பரந்தாமன் என்னுடைய படைப்பை வெளியிட்டார். இப்பொழுது சந்தியா நடராஜன் வரை எவ்வளவு தூரம் வந்துவிட்டேன். உண்மையில் அத்தனை தூரம் நெருங்கி இருக்கிறேன் அல்லது இன்னும் நெருங்க நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கொடுப்பதை எடுத்துக் கொள்கிறேன். அதற்கு பதிலாக என்னிடம் இருப்பதை உங்களுக்குக் கொடுக்கிறேன். என்னிடம் இருப்பது எழுத்தாக இருக்கிறது. அதன் மூலம் உங்களிடம் நெருங்க விரும்புகிறேன்.

சில தினங்களுக்கு முன் ரமணாஸ்ரமம் சென்றிருந்தேன். நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. என்னுடைய முதல் திருவண்ணாமலை பயணம் அதுதான். மழை சந்தோஷத்தையோ அல்லது துக்கத்தையோ நமக்குத் தருகிறது. பகுத்தறிய முடியாத உணர்வுடன் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தேன். அமைதியான இடம் இருட்டாக இருந்தது. என்னைச் சுற்றிலும் எல்லோரும் மெளனமாக இருக்கிறார்கள். இருள்திட்டில் எல்லாமே மெளனமாக இருக்கிறது. எழுத்தாளர்கள் நினைப்பதுபோல எல்லோருடையை மௌனத்தையும் நான் வாங்கிக்கொள்கிறேன். அதனால் நான் தான் அதிக மௌனியாக இருந்தேன். திடீரென்று மயிலின் குரல் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த சப்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. "ஆசிரமத்தின் அந்த மூலையில் மயில் இருக்கிறது, இந்த மூலையில் இருக்கிறது" என்று உடன் வந்தவர்கள் கூறினார்கள். மயில் சப்தம்தான் எனக்கு மயிலானது.

உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அங்கு சந்தித்த எவ்வளவோ முகங்கள் நினைவிற்கு வந்து செல்கிறது. அதிலும் வயதானவர்களின் மௌனம் எத்தனை அழகுடையது. ஓவியனாக இருந்திருந்தால் அந்த முகங்களை வரைந்திருப்பேன். அனைவரையும் கடந்து வரும்பொழுது, ஒரு வயோதிக திபெத்திய மனிதர் வழியில் அமர்ந்திருந்தார். ஒரு நாகலிங்கப் பூவை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் கவனம் வேறெதிலும் செல்லவில்லை. மெளனமாக பூவையே பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றையுமே பார்த்தவர்தான் அப்படி உட்கார்ந்திருக்க வேண்டும். அல்லது எதையுமே பார்க்காதவர் தான் அப்படி மௌனித்திருக்க வேண்டும். அவரை கடந்து செல்லும் பொழுது கையிலுள்ள பூவை என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர் என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு அவரை நெருங்கினேன். திபெத்திய மௌனியின் கையில் பூ இல்லை. யாரோ அவரிடமிருந்து வாங்கிச் சென்றிருக்க வேண்டும். அல்லது மௌனியே யாருக்காவது கொடுத்திருக்க வேண்டும். ஒரு ஜன்னல் ஓரத்தில் கூட பூவை அவர் வைத்திருக்கலாம். [இங்கு பேச்சு தடைப்பட்டு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். சுற்றிலும் மௌனம் நிலவியது.]

இந்த மௌனம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் வீட்டில் நிறைய ஜன்னல்கள் இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த வெளிச்சம் ஏதாவதொரு ஜன்னலில் கிடைக்கலாம். எனக்கு அதுபோன்ற வெளிச்சம் கிடைப்பதாகத் தெரியவில்லை.

ஒருநாள் காலை சாலையில் சென்றுகொண்டிருந்தேன். இருசக்கர வாகனத்தில் குழந்தையை அமர்த்திக் கொண்டு ஒரு பெண் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். சீருடை அணிந்த குழந்தைகள் வேறெதையும் பார்ப்பதில்லை. குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல செல்கிறார்கள். அவர் வண்டியை ஒட்டிக்கொண்டு செல்லவில்லை. தள்ளிக்கொண்டு சென்றார். வழியெல்லாம் பன்னீர்ப் பூக்கள் பரவிக் கிடந்தன. என்னைக் கடக்கும் பொழுது "எப்பா எவளோ பூ!" என்ற வார்த்தையை அந்தப் பெண்மணி உதிர்த்தார். அந்த வார்த்தைகளை யாருக்காக அவள் சொன்னால். என்னிடமா? குழந்தையிடமா? அல்லது அவளுக்கே சொல்லிக் கொண்டாளா?... அதுபோலத்தான் என்னுடைய எழுத்துக்களும்.

சென்னை, தூத்துக்குடி, பாபநாசம், திருநெல்வேலி என்று எத்தனையோ இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். அங்கெல்லாம் எத்தனையோ மனிதர்கள் என்னை பாதித்திருக்கிறார்கள். பாரம் சுமப்பவர்கள் எழுத்தாளர்களுக்கு நிறைய சொல்லுவார்கள். எழுத்தாளர்களின் முகம் அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய வலியை தோழமையுடன் பகிர்ந்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் எழுத ஓர் ஆயுள் போதாது. படித்த கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை.

என்னுடைய இளம்சூடான சாராயத்தை
அப்படியே வாங்கிக்கொள்ளுங்கள்
தயவுசெய்து வேறு
குவளைகளில் மாற்றிவிடாதீர்கள்
நுரைகள் உடைந்துவிடும்...

என்னுடைய படைப்புகளையும் இளம் சூடான சாராயம் போல கோப்பைகளில் தருகிறேன். தயவு செய்து அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்துரையாடலில் கேட்கப்பட்ட ஒருசில கேள்விகள்:

1. வண்ணதாசன் - பெயர்க்காரணம் சொல்லுங்களேன்?
வல்லிக்கண்ணன் அப்பாவிற்கு கடிதம் எழுதுவார். அவரின் மேல் மிகுந்த ஈடுபாடு எங்களுக்கு. அவரின் நினைவாக இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன். வேறெதுவும் இல்லை. முதலில் என்னுடைய அண்ணன் தான் இந்தப் பெயரில் எழுதினர். அவரிடமிருந்து நான் திருடிக்கொண்டேன். தொலைத்ததை இன்னும் அவர் தேடிக் கொண்டிருக்கிறார்.

2. கவிதைக்கு கல்யாண்ஜி என்ற பெயரில் எழுதுகிறீர்களே?
என்னுடைய பெயர் கல்யான் சி {தி.க. சிவசங்கரன்}. அதனை கல்யாண்ஜி என்று வைத்துக்கொண்டேன். வார்த்தை லயத்திற்காக அப்படி மாற்றிக் கொண்டேன்.

3. நீங்கள் கதை, கவிதை என இரண்டு தளங்களிலும் இயங்குகிறீர்கள். ஒரு சம்பவம் எப்படி கதையாகவோ கவிதையாகவோ உருப்பெறுகிறது?
இதற்கு முன் தீர்மானம் எதுவும் இல்லை. ஒருவரை திடீரெனப் பாடும் படிக்கேட்டால், அவருக்கு அடிக்கடி நினைவிற்கு வரும் பாடலைத் தானே பாடுவார். அப்படி இல்லாமல் யாராவது பாடும்படிக் கேட்டால் இந்தப் பாடலைத் தான் பாட வேண்டும் என்று முன் தீர்மானத்துடன் பாடுவதில்லையே. அதுபோலத்தான் எழுத்தும். உள்ளிருந்து தானாகவே வெளிவர வேண்டும். அது அந்த நேரத்தைப் பொறுத்தது.

4. விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
அந்த மாதிரி எதுவும் வருவதே இல்லையே...வந்தால் தானே அதைப் பற்றி சொல்ல முடியும்.

5. படைப்பாளிக்கு ஞானச்செருக்கு இருக்க வேண்டுமா?
ஞானம் இருப்பவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஜெயகாந்தன் சொல்லலாம். அவருக்கு இருக்கிறது. எனக்கு இல்லை.

6. உங்களுக்கு இணையப் பக்கங்கள் இருக்கிறதே... இணையத்தில் கிடைப்பதை வாசிக்கிறீர்களா?
சில பக்கங்களை அடிக்கடி வாசிப்பேன். எப்பொழுதாவது சில பக்கங்களுக்கு சென்று வந்துவிடுவேன். மற்றபடி இணையத்தில் தீவிரமாக இயங்க விருப்பமில்லை. நேரம் விரயம் ஆகிறது. அந்த நேரத்தில் ஒரு கதையை எழுதிவிடுவேன். 40 வருடங்களுக்கும் மேலாக எழுதிவிட்டேன். அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இணையம் கடந்த 10 வருடத்தில் வந்தது தானே. என்னுடைய பக்கங்களை வேறொருவர் பதிவிடுகிறார். நம்முடைய வேலையை மற்றவர் செய்தால் மகிழ்ச்சி தானே. செய்யட்டுமே. :-)

7. எது இலக்கியம்?
நீங்கள் எதை இலக்கியம் என்று நினைக்கிறீர்களோ அதுவே இலக்கியம்.

8. "மதினி, பெரியம்மா" போன்ற உறவுப் பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறீர்களே?
தயவு செய்து உறவுப் பெயர்களை சொல்லிப் பழகுங்கள். வார்த்தை பயன்படுத்த பயன்படுத்தத் தான் மொழி கூர்மை அடையும். கிரா, நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன் போன்றவர்களை விடவா மொழிக்கு நான் செய்துவிட்டேன்.

இதைத் தவிர மேலும் பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவையெல்லாம் அரசியல், பெண்ணியம், புரட்சி, நாட்டுநடப்பு, சினிமா பற்றிய தேவையில்லாத கேள்விகளாக இருந்தன. அவையெல்லாம் கல்யாண்ஜிக்கு சமந்தப்பட்ட கேள்விகளாகவும் எனக்குத் தெரியவில்லை. எங்கெங்கோ சுற்றி ஒருவழியாக கலந்துரையாடலை நிறைவு செய்தார்கள்.

எடுத்துச் சென்ற புத்தகத்தில் கல்யாண்ஜியிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன், எஸ்ரா, பாரதிமணி, சங்கர் நாராயணன், வேணுவனம் சுகா, பாலபாரதி, பட்டர் ஃபிளை சூர்யா, நிலா ரசிகன், வேல்கண்ணன், உழவன், அடலேறு, வெங்கட் ரமணன், முத்துச்சாமி, பிரபா, நடிகர் சார்லி, நடிகை பாத்திமா பாபு போன்ற பலரையும் சந்திப்பில் பார்க்க முடிந்தது. பலரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கேணிக்கு வந்திருந்தார்கள்.

வண்ணதாசன் கேணி இலக்கிய சந்திப்பு - ஒலி வடிவில்

தொடர்புடைய இதர பதிவுகள்:
1. வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்! - பாலபாரதி

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3.
அடுத்த மாதம் கேணிக்கு தமிழிசை மற்றும் மரபு பற்றி சந்திப்பு நடைபெறும். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

Friday, December 10, 2010

பாரதி திரைப்படம்

இன்று பாரதியின் 129-ஆவது பிறந்த நாள். சென்ற வருடம் அவருடைய பிறந்தநாளுக்கு கட்டுரைத் தொகுதிகளை வாங்கினேன். இது நாள் வரை ஒரு வார்த்தை கூட அந்த கட்டுரைகளிலிருந்து வாசிக்கவில்லை. நேற்று ராஜ் வீடியோஸ் சென்று அவருடைய வாழ்க்கை சம்பவங்கள் அடங்கிய திரைப்பட குறுந்தகட்டை வாங்கினேன். எனவே இன்று காலை 'பாரதி' திரைப்படம் பார்ப்பதென தீர்மானித்தேன்.

பாரதியின் மரண ஊர்வலத்தில் படம் துவங்கியது. அந்த நேரத்தில் பாரதி மணி எழுதிய "நிகம்போத் தில்லி சுடுகாடு" நினைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் அவரே காட்சிகளில் வந்தார். பாரதியின் தந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறார். உடன் நடித்த குழந்தை நட்சத்திரங்கள், சாயாஜி ஷிண்டே, தேவயானி, நிழங்கள் ரவி, ஸ்ரீகாந்த் என்று எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

காணும் காட்சிகளை கண்களில் ஒற்றிக்கொள்ளும் படியாக இருந்தது தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் கேமராக் கண்களும். அதனை நேர்த்தியாக வெட்டி ஒட்டியிருந்த லெனின் மற்றும் VT விஜயனும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இசைஞானி இளையராஜாவின் இசை படைப்பிற்கு கனத்தையும், வலு சேர்ப்பதாகவும் இருக்கிறது. பசி உறக்கம் இல்லாமல் படத்தின் பாடல்களைக் கேட்கலாம்.


பாரதி போன்ற மகா கலைஞனின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது மிகுந்த சிரமத்திற்குரியது. இயக்குனர் ஞான ராஜசேகரன் சிறப்பாக செய்திருக்கிறார். திரைப்படத்தை மூன்று பேர் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். அவர்களில் எழுத்தாளர் சுஜாதாவும் ஒருவர். அவர்களுக்கும் நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

இந்தத் திரைப்பட பாடல்களில் பாரதியின் கவிதைகள் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது, மகாகவியின் மரணமும் தவறாக சொல்லப்பட்டிருக்கிறது, இசை அதீதமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று பாதகமாக ஒருசில விமர்சனங்களைப் படிக்க நேர்ந்தாலும் தமிழ்த் திரைப்படங்களில் இது முக்கியமான படம். 2000-ம் ஆண்டில் தேசிய விருது பெற்ற படம். படத்தின் உருவாக்கத்திற்கு பங்களித்த பலருக்கும் தேசிய விருது பெற்றுத் தந்த படம். திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கோடி வணக்கங்கள்.

திரைப்படத்தைப் பார்க்க கூகுளே வீடியோஸ் பக்கங்களுக்கு செல்லவும்:

பாரதி திரைப்படம்

Monday, December 6, 2010

நந்தலாலா - மிஸ்கின்

திரைக்கு வந்த மூன்றாவது நாள் 'நந்தலாலா' பார்ப்பதற்கு திரையரங்கு சென்றிருந்தேன். கூட்டமாக இருக்குமெனில் திரும்பிவிடலாம் என்று யோசித்தவாறே சென்றேன். படம் துவங்க 15 நிமிடங்கள் இருக்கிறது. டிக்கெட் கவுண்டரில் எனக்கு முன்பு இரண்டு நண்பர்கள் நின்றிருந்தனர். எனக்கு அடுத்தது யாருமே இல்லை. டிக்கெட் வாங்கிக்கொண்டு எனக்கான இருக்கைக்கு நகர்ந்தேன். 200-ற்கும் அதிக இருக்கைகள் கொண்ட அரங்கில் 35 நபர்கள் மட்டுமே இருட்டறையில் அமர்ந்தோம்.

நீரோட்டத்தின் வாகில் செல்லத் துடிக்கும் புற்களின் அசைவில் படம் துவங்குகிறது. அது கூட அந்திரே தர்கோவிஸ்கி சொலாரிஸின் படத்தில் இருந்து தழுவப்பட்டது என்று ஜெயமோகன் தளத்தில் ஒரு நண்பர் சொல்லியிருந்தார். படிக்க - புல் தண்ணீர் காட்சி.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுவது நல்லது. ஒரு சினிமா மாணவ நண்பரைப் பார்க்க நேர்ந்தது. அவரிடம் உலகப் படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவில் திணிக்கப்படுவதை அல்லது தழுவப்படுவதைப் பற்றி பேசினேன். உரிமம் இல்லாமல் இந்த மாதிரி வேலைகளை செய்வது ஒரு வகையில் அறிவுத் திருட்டு என்று காட்டமாகக் கூறினேன். சிரித்துக் கொண்டே பாலுமகேந்திரா இதைப் பற்றி பேசியதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

கர்னாடக சங்கீதம். பாரத நாட்டியம் என்று எந்த பாரம்பரியக் கலையை எடுத்துக் கொண்டாலும் குறிப்பிட்ட ராகங்களை அல்லது நடனங்களை
த் தான் திரும்பத் திரும்ப மேடை ஏற்றுகிறார்கள். ஏற்கனவே இருப்பவைகளின் நகல்களைத் தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டியது. "புதிதாக எந்த முயற்சியும் ஏன் செய்யவில்லை?" என்று யாரும் அவர்களைக் கேள்வி கேட்பதில்லை. சினிமாவை எடுத்துக்கொண்டால் இது போன்ற விமர்சனங்களைத் தவிர்க்க இயலாது.

பாலு மகேந்திராவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. ஒரு கர்நாடக சங்கீத வித்தாவான் ஓர் இசைக் கோர்வையை மேடையில் பாடுவதற்கு முன்... இந்த ராகத்தில் அமைந்தது... இன்னார் இயற்றியது... அதை இன்னார் மெருகேற்றினார்கள் என்று பட்டியலிட்டுவிட்டு ரசிகர்களுக்கு வழங்குகிறார்கள். திரைபடப் பாடல்கள் கூட இந்த ராகத்தில் அமைந்தது என்று இசையமைப்பாளர்களே சொல்லிவிடுகிறார்கள். சினிமா, இதுபோன்ற நாகரீகங்களிலிருந்து பல நேரங்களில் விலகி நிற்பது வருந்தத்தக்கது.

நந்தலாலா - கிகுஜிரோவின் தழுவல் என்பதை
தயாரிப்பில் இருக்கும் பொழுதே சினிமா விரும்பிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஜப்பானிய மொழியை விரும்பிப் படித்த பொழுது கிகுஜிரோ வாங்குவதற்காக பட்டர் ஃபிளை சூர்யாவைத் தொடர்பு கொண்டேன். "அடடே அந்தப் படமா...? அந்த கதையைத் தழுவி மிஷ்கின் தமிழில் ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மையா? இல்லையா? என்பது திரைக்கு வந்தால்தான் தெரியும்..." என்று பகிர்ந்து கொண்டார். மாயக்கோல் ஒன்று இருந்தால் சுரேஷ் கண்ணன், பட்டர் ஃபிளை சூர்யா போன்ற நண்பர்களின் முன்னாள் நீட்டி இந்த மாதிரி கண்டுபிடிப்புகளை மறக்கடிக்கச் செய்யலாம்.

கிகுஜிரோ - பட்டர்ஃபிளை சூர்யா

நீண்ட விடுப்பில், தனிமையில் வாடும் குழந்தை தொலைவிலுள்ள தாயைப் பார்க்க புறப்படுகிறான். அதற்கு மனைவி கேட்டுக் கொண்டதற்காக அறிமுகமில்லாத ஒருவன் துணைக்குச் செல்கிறான் (லாஜிக் உதைக்கிறது). அவன் ஓர் ஊதாரி. பயணத்தில் சந்திக்கும் இடர்களின் மூலம் அவர்களுக்கான பரஸ்பர அன்பு ஊற்றெடுக்கிறது. ஊதாரித்தனத்திலிருந்து விடுபட்டு பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறான். சிறுவனின் தாய் வாழும் ஊருக்கு அழைத்துச் செல்கிறான். நந்தலாலாவின் மையக்கருவும் இஃதே என்றாலும் தமிழுக்குத் தேவையான மசாலாக்கள் தேவையான அளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. மேலதிக விஷயங்கள் தான் மூலத்திலிருந்து விலகி இதனை தமிழ் சினிமாவின் தனித்த அடையாளமாக முன்னிறுத்தப் பார்க்கிறது.

எனக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதை ஒன்று நினைவிற்கு வந்தது. ஒரு மீன்காரி மீன் விற்கக் கிளம்பினாளாம். பல ஊர்களுக்கும் சென்று பாதி மீன்களை விற்றுவிட்டாள். அவள் மறுபடியும் ஊருக்குத் திரும்புவதற்குள் மேகம் இருண்டு அடைமழை பொழிந்ததாம். செய்வதறியாது திகைத்து நின்றாளாம் மீன்காரி. அருகிலுள்ள ஒரு குடிசைக்குச் சென்று ஒதுங்க நினைத்தாளாம். அது பூ வியாபாரம் செய்பவளின் வீடு. அவளிடம் தயங்கித் தயங்கி "இன்றொரு நாள் உங்கள் குடிசையின் ஓரத்தில் தங்கிக் கொள்கிறேன். நாளை காலை விடிந்ததும் சென்றுவிடுகிறேன்" என்று வேண்டினாளாம்.

பூ தொடுப்பவள் இன்முகத்துடன் அவளை வரவேற்று "தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் நானும் தனியாகத்தான் இருக்கிறேன்" என்றாளாம்.
மீன்காரிக்கு இரவு உணவு பரிமாறி விட்டு தூங்குவதற்கு இடத்தைக் காட்டினாளாம்.

மீன்காரிக்குத் தூக்கமே வரவில்லையாம்.
புரண்டு புரண்டு படுத்தாளாம். விழித்துப் பார்த்தால் தலைமாட்டில் பூக்கூடைகள் இருந்ததாம். அதன் வாசனை அவளுக்குப் பிடிக்கவில்லை. வெளியில் சென்று ஓரமாக வைத்திருந்த மீன்கூடையை எடுத்து வந்து தலைமாட்டில் வைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாளாம் மீன்காரி. அழகான வண்ணப்பூக்களும், மலர்கள் நிறைந்த கூடைகள் இருந்தாலும் "கவிச்சிக் கூடையை சுமந்தவர்களுக்கு பூவாசம் பிடிக்குமா?" என்பது போல இருக்கிறது உலகப் படங்களை தழுவலாக எடுப்பது. நம்மிடம் இல்லாத கதைகளா? நம்மைச் சுற்றி நடக்காத கதைகளா? அவற்றில் ஒன்றை உள்வாங்கி திரைப்படம் எடுக்கலாமே?.

சுராவின் படைப்பு நேரடியாக ஹீப்ருவில் மொழிமாற்றம் செய்யப்பட்டால் மார்தட்டிக் கொள்கிறோம். 'யாவரும் நலமே' உரிமம் பெற்று ஹாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டால் உச்சி குளிர்ந்து போகிறோம். நம் சமூகத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் அடுத்தவர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். நாம் கூட நாகரீகம் கருதி அடுத்தவர்களுக்கு அதைச் செய்யலாமே. கல்யாணப் பூசணியை தர்பூசணி என்று வார்த்தை ஜாலம் செய்ய வேண்டாமே!.

"தமிழ் சினிமாவை உலக அளவில் முன்னெடுத்துச் செல்ல உச்ச நடிகர்கள் முன்வர வேண்டும்" என்று மிஷ்கினை அருகில் வைத்துக் கொண்டு சாரு நிவேதிதா நடிகர் ரஜினிக்குக் கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை நானும் மிஷ்கினுக்கு வைக்கிறேன். ஒரு படைப்பின் மூலம் பாதிக்கப்பட்டால் "Inspired By" என்ற இரண்டு வார்த்தையை சேர்த்து உங்களுடைய படைப்புகளை விளம்பரப் படுத்தலாமே?

தொடர்புடைய இதரப் பதிவுகள்:

1.
நந்தலாலா: மிஷ்கினின் கூழாங்கற்கள்
2.
நந்தலாலா: உருவகக் குப்பையில் ஒரு மாணிக்கம்
3.
பனிக்குடத்தினுள் நீந்திய களிப்பு... நந்தலாலா
4. நந்தலாலா - மிஷ்கின் ஐ லவ் யூ
5.
நந்தலாலா : வாழ்க்கையெனும் ஜீவநதி
6. நந்தலாலா – மூலமும் நகலும்
7. நந்தலாலா பார்க்கவேண்டியபடமா?
8. நந்தலாலா... உகுநீர் நெஞ்சு சுட

பின் குறிப்பு: சந்தேகமே இல்லை. கண்டிப்பாக இந்தப் படம் பல விருதுகளைப் பெரும். அந்த நேரத்தில் இயக்குனர் சந்திரன் பல வருடங்களுக்கு முன் தீராநதியில் கொடுத்த பேட்டியில் சொல்லியிருந்ததை நினைத்துக் கொள்வேன். அவரின் வார்த்தைகள்:

"சினிமா என்றால் என்னவென்றே தெரியாத நாட்டில், சினிமா என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்களால் நேர்ந்தேடுக்கப்பட்டு, தேசிய அளவில் சினிமாவுக்கான சிறந்த இயக்குனராக நான் தேர்ந்தெடுக்கப் பட்
டு விருது பெறுவதில் பெரிய அதிசயம் ஒன்றும் இல்லை. சாதனையும் இல்லை".

Saturday, November 27, 2010

கேணி - ஓவியர் சந்திப்பு

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart." - மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லரின் இந்த கூற்று முற்றிலும் உண்மை என்பதை மனோகர் தேவதாஸின் கேணி சந்திப்பில் உணர்ந்தேன்.

நாம் உண்ணும் உணவின் சக்தியில் நிறைய கலோரியை கண்பார்வைக்குத் தான் செலவிடுகிறோம். இருந்தும் நம்முடைய பார்வைத் திறன் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் அவற்றை நிவர்த்தி செய்தாலும், மனிதனுடைய கண்டுபிடிப்புகளுக்கு சவால் விடக்கூடிய குறைபாடுகளும் இருக்கத்தானே செய்கிறது. அவற்றில் ஒன்று தான் "ரெட்டினைட்டிஸ் பிக்மன்டோஸா (Retinitis pigmentosa)". தீர்க்க முடியாத இந்த பார்வைக் குறைபாட்டிற்குச் சொந்தக்காரர் மனோகர் தேவதாஸ். அதனை பொருட்படுத்தாமல் அவர் நம் சமூகத்திற்கும், பாரம்பரியத்திற்கும் - ஓவியமாக, புத்தகமாக, கலை வடிவாக செய்திருப்பது ஏராளாம். அந்த பணிகளின் மூலம் சாதித்ததும், கொடுத்ததும், கொடுத்துக் கொண்டிருப்பதும் ஏராளம்... ஏராளம்...

30 வயது வரை கண் பார்வை இருந்து, அதன் பிறகு இல்லாமல் போவது சகிக்க முடியாதது. அதுவும் ஓர் ஓவியனுக்கு இந்த நிலைமை என்பது கொடூரமானது. அ முத்துலிங்கத்தின் 'இருளில்' என்ற கட்டுரை பார்வை இல்லாதவர்களின் விசித்திர உலகை மனக் கண்ணில் நிறுத்துபவை. கட்டுரையை முழுவதும் வாசித்துவிட்டு மனோகருடன் கைகோர்ப்பது நல்லது.

இருளில் - அ முத்துலிங்கம்

தந்தையின் மருத்துவ வேலை காரணமாக மனோகரின் பால்ய வயதில் மதுரைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். அவருடைய சிறுவயது மதுரை அனுபவங்கள் அழகியல் நிரம்பியது. 50 வருடங்களுக்கு முந்தைய மதுரையை அவர் ஓவியமாக வரைந்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பவை. முறையாக யாரிடமும் ஓவிய கலையைக் கற்று கொண்டதாக அவர் எங்குமே குறிப்பிடவில்லை.

அவருடைய நண்பர்களுக்கும் ஓவிய நுணுக்கம் என்பது சிறு வயதிலேயே சுயமாக அமைந்திருக்கிறது. கல்லூரி பேராசிரியராக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் மனோகரின் இளவயது ஆசை. புற்று நோயால் தந்தை இறக்கவும், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனத்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராக சேர்ந்திருக்கிறார். நிறுவன மேலாளர்களுக்கு மனோகரைப் பிடித்துவிடவும், கம்பெனியே ஆறு மாத பயிற்சிக்காக மனோகரை மேல் நாட்டிற்கு அனுப்பி இருக்கிறது. கல்யாண சந்தையில் அவருடைய மதிப்பு உயர்ந்து மஹிமா கிடைக்க அதுவே காரணமாக அமைந்திருக்கிறது. நுண்கலை படித்த மஹிமா வாழ்க்கை துணையாகக் கிடைத்தது அவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். கல்யாணத்திற்குப் பிறகு வேலையை உதறிவிட்டு படிப்பதற்காக சில ஆண்டுகள் வெளிநாடு சென்றிருக்கிறார். அவருடன் சென்ற மஹிமா 'கலை மற்றும் கலாச்சார மைய'-த்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். பல நாட்டு நண்பர்களும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள். இடையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. சொந்த நாட்டிற்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் தோன்றவே நண்பர்களின் வற்புறுத்தலையும் மீறி வாய்ப்புகள் இருந்தும் இந்தியாவிற்குத் திரும்பி இருக்கிறார்கள். வேலை செய்த பழைய நிறுவனத்தில் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.

நாட்கள் மகிழ்ச்சியாக சென்றிருக்கிறது. சென்னையிலுள்ள மஹிமாவின் வீட்டிலிருந்து மதுரைக்கு மனோகர், அவருடைய அம்மா, மகள் சென்றிருக்கிறார்கள். மஹிமாவே கார் ஓட்டியிருக்கிறார். எதிர்பாராமல் நடந்த விபத்து அவர்களுடைய வாழ்க்கையையே திருப்பிப் போட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு லேசான காயம் தான் என்றாலும் மஹிமாவின் முதுகுத்தண்டில் அடிபட்டு கழுத்துக்குக் கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாத நிலை. ஓரிரு வருடத்தில் மனோகருக்கும் வலக் கண் மையப் பார்வையில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. பார்வைக் குறைபாடு வேகமாக அதிகரித்திருக்கிறது.

மஹிமாவோ படுக்கையை விட்டு நகர முடியாத நிலை. மனோகருக்கோ தீர்க்க முடியாத பார்வைக் குறைபாடு. அது அடுத்த கண்ணிலும் பரவக் கூடிய அபாயம் இருக்கிறது. அதற்குள் தங்களது வாழ்நாளுக்குத் தேவையான பொருளினை ஈட்ட வேண்டிய கட்டாயம்.

பார்வையை முழுவதும் இழப்பதற்கு முன்பு, மதுரையை பற்றிய நினைவுகளை புத்தகமாகவும், மதுரை வீதிகளையும், கோவில் மற்றும் கட்டடங்களை கருப்பு வெள்ளை ஓவியமாகவும் வரையுமாறு மஹிமா கேட்டிருக்கிறார். வரைந்த படங்களை மகிமாவே படுக்கையில் இருந்தவாறு வியாரம் செய்திருக்கிறார். பார்வை நன்றாக இருந்த பொழுது வரைந்ததைக் காட்டிலும், கண்ணில் கோலாரினை வைத்துக் கொண்டு மகிமாவுன் பேசிக்கொண்டே வரைந்த ஓவியங்கள் அதிகம், தரமும் முன்பிருந்ததை விட அதிகம் என்று சொல்லிய போது ஆச்சர்யமாக இருந்தது. ஆதர்ஷ்ய தம்பதிகள் என்ற வார்த்தையின் அர்த்தமும் உரைத்தது.

30 வருடம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெரும் பொழுது கிடைத்த ரொக்கம் 3.5 லட்சம். மஹிமாவுன் இருக்க நேர்ந்த ஓய்வு காலத்தில் வரைந்த ஓவியம் மூலமாகவும், எழுதிய புத்தகம் மூலமாகவும் கிடைத்த பணம் 38 லட்ச ரூபாய் என்றார். அந்த பணம் முழுவதும் சங்கர நேத்ராலயா, ஸ்ரீ அரவிந்தர் கண் மருத்துவமனை போன்ற அறக்கட்டளைக்கு ஏழை மக்கள் பயனடையுமாறு மனோகர் தம்பதியினர் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். (நீங்கள் வாங்கும் மனோகரின் ஓவியமோ, வாழ்த்து அட்டையோ, புத்தகமோ எதுவாக இருப்பினும் அதன் மூலம் கிடைக்கும் பணம் நேரடியாக ஏழை மக்களுக்குச் செல்கிறது. அதற்காக நிச்சயம் வாங்க வேண்டும் என்று கோஷம் போடவில்லை). மஹிமாவின் மீதான மனோகரின் காதல் பரவசமானது. சலித்துப் பார்த்தால், அவர் பேசிய கோர்வையான வாக்கியங்களின் தொடக்கத்திலும், முடிவிலும் மஹிமா என்ற பெயர் இருக்கும். ஒரு வட்டத்தின் மையம் போல அவருடைய மனைவியின் ஞாபகத்தை அழுத்தமாக இருத்தி முழு உரையைப் பேசி முடித்தார்.

கேணியில் அவர் பேசிய 3 மணி நேரத்தில் 'மஹிமா' என்ற பெயரை நூறு முறைக்கு மேல் உச்சரித்திருப்பார். கல்யாண நிச்சயம் ஆனது முதல், மஹிமா இறந்தது வரை வரையப்பட்ட பல ஓவியங்களையும் காண்பித்தார். தொடர்புடைய பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தேவையான பொழுது ஞாநியிடன் உதவி கேட்டு, மடிக்கணினியை அவர் உபயோகித்த விதம் ஆச்சர்யமாக இருந்தது.

ஒரு கேள்விக்கான பதில் எனக்கு சுவாரஸ்யம் நிரம்பியதாக இருந்தது. ஒவ்வொரு உலகியல் அனுபவத்திலும் அவருடைய மனைவியை எப்படி நினைவு கூர்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் பதிலாகவும் அது அமைந்தது.

புழு, பட்டாம் பூச்சியாக மாறும் விதத்தை குழந்தைகளுக்கு அனுபவபூர்வமாக கற்பிப்பதர்க்காக அவருடைய மகள், தேவையான இலைகளுடன் ஒரு பட்டாம் பூச்சி முட்டையிலிருந்து வெளியில் வந்த புழுவை பாட்டலில் வளர்த்தாராம். இலைகளை சாப்பிட்டு வளர்ந்த கூட்டுப் புழு முழுமையான வடிவம் பெற்று ஒரு நாள் வெளிச்சத்தை நோக்கிப் பறந்து சென்றதாம். என்னுடைய மஹிமாவும் அப்படித்தான். படுத்த படுக்கையில் சுமக்க முடியாத பாரங்களை சுமந்தாள். அவளுக்கான நேரம் வந்ததும் ஒரு பட்டாம் பூச்சியைப் போல வெளிச்சத்தை நோக்கி பறந்து விட்டாள் என்ற போது அவருடைய முகம் பூவைப் போல மலந்தது. அவருடைய உதடசைவில் மீசை கூட பறக்கத் துடிக்கும் பட்டாம் பூச்சி போலவே இருந்தது.

'இருட்டு என்பதே குறைந்த வெளிச்சம்' என்று எங்கோ படித்த ஞாபகம். குறைந்த வெளிச்சத்தையும் காண முடியாத நிலையிலுள்ள ஓர் ஓவியனை சந்திக்க இருப்பது பரிதாபத்திற்குரியது என்ற எண்ணங்களுடனே மனோகரை சந்திக்க கேணிக்குச் சென்றிருந்தேன். திரும்பும் பொழுது மனோகரின் 'எனது மதுரை நினைவுகள்' நாவலில் வரும் ஜித்தன் சாட்டர்ஜியின் மனநிலையுடன் எனது மனநிலை ஒத்திருந்தது. நாவலில் சாட்டர்ஜி சொல்லியவை...

"மிஸ்டர் மனோகர், நான் உங்களைப் பார்த்துப் பரிதாபப் படவே இல்லே. ஒரு விதத்தில் உங்களைக் கண்டு பொறாமைப் படறேன்னு சொல்லலாம்."

நீங்கள் கூட மனோகருடன் உரையாட நேர்ந்தால் நிச்சயம் பொறாமைப்படுவீர்கள். பொறாமை என்பது இத்தனை சந்தோஷத்தைத் தரக்கூடிய சிறந்த, அழகான விஷயம் என்பதை முதன் முறையாக, அந்த அழகான மாலையில் உணர்ந்தேன். அப்பொழுது ஹெலன் கெல்லரின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன்.

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart." - Helen Keller

மனோகர் தேவதாசைப் பற்றிய இதர பதிவுகள்:
1. வாழ்க்கையல்ல... வேதம்! - எழுத்தாளர் ரவிபிரகாஷ்
3. எனது மதுரை நினைவுகள் - மனோகர் தேவதாஸ்
4.
கேணி சந்திப்பு - பிரபாகரன்

கேணியின் அடுத்தடுத்த சந்திப்புகள் பற்றிய விவரம்:

டிசம்பர் - எழுத்தாளர் வண்ணதாசன்.
ஜனவரி - தமிழிசை மற்றும் தமிழிசை மரபு பற்றி
பிப்ரவரி - கர்னாடக சங்கீதக் கலைஞர் TM கிருஷ்ணா

பின் குறிப்பு:
1. நீண்ட நாள் கழித்து எழுதுவதால் ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.,
2. Multiple Facets Of My Madurai, Green Well Years, A Poem To Courage, Dreams, Seasons And Promises, எனது மதுரை நினைவுகள் போன்ற புத்தகங்கள் விலைக்குக் கிடைக்கிறது.
3. புத்தக விற்பனையில் கிடைக்கும் பணம் கண்மருத்துவ மனைகளுக்கு நன்கொடையாக அளிக்கப் படுகிறது.
4. East West Books (madras) Pvt Ltd மற்றும் கண்ணதாசன் பதிப்பகத்தில் இவருடைய புத்தகங்கள் கிடைக்கிறது.

Tuesday, November 9, 2010

திருவடிசூலம் to திருக்கழுக்குன்றம்

ஜில் புயலின் மூர்க்கம் தணிந்து காலநிலை சாதகமாக இருந்ததால், பால்ய நண்பன் வில்சன்ராஜின் திருமணத்திற்கு திருக்கழுக்குன்றம் கிளம்பினேன். மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கும் திருமண வரவேற்பிற்கு காலை பத்து மணிக்கே 10 நண்பர்களுடன் கிளம்பிவிட்டேன். முதலில் திருவடிசூலம் என்ற மலை கிராமத்திற்கு செல்வதாக முடிவானது. செங்கல்பட்டு - திருபோரூர் செல்லும் வழியில் இருக்கிறது. பனைமர உயர அம்மன் சிலையை நிர்மாணித்து இந்த ஊரில் கோவில் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.எங்களுடைய குலசாமி முனீஸ்வரன். என்னுடைய தம்பிக்கு இந்த அம்மன் தான் குலசாமி மாதிரி. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

சிலையை கிராமத்தில் எடுத்து வந்து சேர்க்க ஏதோ ஒரு ஷிப்பிங் கம்பெனியை அணுகினார்களாம். பல லட்சம் தரவேண்டியிருக்கும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் கம்பெனி முதலாளிக்கு நீண்ட நாட்கள் இழுத்துக் கொண்டிருந்த வேறொரு வியாபாரத்தில் பெருத்த லாபம் கிடைத்ததாம். இந்த சிலை வந்த நேரம் தான் அதிர்ஷ்டம் கொட்டுகிறது என்று இலவசமாகவே சிலையை கிராமத்திற்கு எடுத்து வந்து கொடுக்கச் சொன்னாராம். L&T கூட இலவசமாகவே சிலையை பூப்போல எடுத்து நிமிர்த்தினார்கலாம். அதுமட்டுமில்லாமல் இரண்டு நிறுவனமும் ஏதோ நன்கொடை வேறு வழங்கி இருக்கிறார்கள்.

"இதையெல்லாம் யாரும் சும்மா செய்யமாட்டாங்கடா...! ஏதோ சக்தி இருக்குது...! நீ வேணும்னா பாரு, இன்னும் கொஞ்ச நாள்ல இந்த இடம் பெரியப்பாளையம் மாதிரி, திருவேற்காடு மாதிரி... பிரபலம் ஆயிடும்" என்று தம்பி சொல்லிக் கொண்டிருந்தான். சிலையின் பிரம்னாண்டத்தைப் பார்த்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

திருபோரூர் செல்லும் பிராதான சாலையில் திருவடிசூலம் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த அமைதியான கிராமம். பிரதான சாலைகள் கூட வளைந்து நெளிந்துதான் செல்கிறது. அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைச் சாலையின் 3 கி மீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அம்மன் கோவில் செல்லும் வழியில் பழமைமிக்க சிவஸ்தலம் அமைந்துள்ளது. (ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்) அதனைக் கடந்து சென்றால் 'ஆதி பரமேஸ்வரி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் க்ஷேத்ரம்' பிரமாண்டத்துடன் நம்மை வரவேற்கிறது.

நாங்கள் சென்ற நேரத்தில் ஜோடியாக இரண்டு தம்பதியினர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி சென்றதும் பூசாரி எங்களை வரவேற்று தீப ஆராதனை காண்பித்தார். போலவே ரவா கேசரியை தொன்னையில் வைத்துக் கொடுத்தார். நாங்களும் பிரசாதம் சாப்பிட உட்கார்ந்தோம். இலவச பிரசாதம் சுவையாக இருந்தது.

கோவில் கோபுரங்கள் இன்னும் முழுமை பெறவில்லை. அதற்கான பணிகளை நன்கொடையின் மூலம் செய்து கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணிகள் முடிந்ததும், பிரம்மாண்ட அளவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக பூசாரி பகிர்ந்துகொண்டார். கோபுரவிழா விரைவில் நடக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கீழ்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆதி பரமேஸ்வரி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் க்ஷேத்ரம்,
ஸ்ரீ கோவில்புரம், திருவடி சூலம்,
செங்கல்பட்டு தாலுகா - 603108

(அல்லது)

9/13, முதல் மேற்கு தெரு,
காமராஜ் நகர், திருவான்மியூர்,
சென்னை - 41

ஒருவழிச் சாலையாக இருக்கும் திருபோரூர் சாலையை அகலப்படுத்த மக்கள் - சாலை மறியல் செய்ததாக நீண்ட நாட்களுக்கு முன்பு படித்த ஞாபகம். அவர்களுக்கு சாதகமாக விஷயம் நடக்குமெனில் இயற்கை அன்னை கொஞ்சம் அனுசரித்துக் கொள்ளவேண்டும். சிவன் கோவில் மூடி இருந்ததால் பார்க்க முடியவில்லை. அங்கிருந்து திருக்கழுக்குன்றம் சென்றோம்.

திருக்கழுக்குன்றம் - http://thirukalukundram.blogspot.com

மலைக்கோவிலுக்குச் செல்ல சாதாரணமாகவும், செங்குத்தாகவும் செல்லும் படிகளில் ஏறினோம். மூச்சுவாங்க கோவிலுக்குள் நுழையும் பொழுது அபிஷேகம் ஆரம்பமாகியிருந்தது. சிவனும், அம்மனும் அமிஷேகம் முடிந்து பிரகாசமாக காட்சி தந்தார்கள். கலை நயமிக்க தூண்களும், சித்திர வேலைப்பாடுகளும் மனத்தைக் கொள்ளை கொண்டது. எண்ணை விளக்கின் மனமும், ஒளியும் மனதிற்கு புத்துணர்வை அளித்தது. மலையின் மேலிருந்து ஊரினைப் பார்க்கும் பொழுது தெரியும் பெரிய கோவிலும், தெப்பக்குளமும், வயல் வெளியும் தேர்ந்த கலைஞனின் ஓவியம் போல தெரிந்தது. பூஜை முடிந்ததும் வேறு பதை வழியாக கீழே இறங்கினோம். அங்கிருந்து பெரிய கோவிலுக்கு சென்றோம்.


பெரிய கோவிலைச் சுற்றி வீடுகளும், கடைகளும் இருப்பதால் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கிறது. மழைக் கோவிலின் அமைதி இங்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிவனும் அம்மனும் அலங்காரமாக வீற்றிருக்கிறார்கள். முருகர், விநாயகர் என்று பல கடவுளுக்கும் சிறிய அளவில் கோவில்களும் உள்ளே இருக்கின்றன. வேகமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு திருமண வரவேற்பிற்குச் சென்றோம்.

நண்பன் அவனுடைய துணையுடன் மேடையில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பிரியாணி வேட்டையில் இறங்கினோம். பிரியாணியில் பீஸ் கம்மி, குஸ்கா அதிகம். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு இருண்ட சாலையில் ஹெட் லைட் வெளிச்சத்தில் செங்கல்பட்டிலிருந்து வண்டலூர் வழியாக அம்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பயணமானோம். சில இடங்களில் பாலியல் தொழிலாளிகள் கையசைத்து நின்று கொண்டிருந்தனர். இந்த மாதிரி நபர்கள் சபலப்பட்டு நிற்பவர்களிடம் கொள்ளை அடிப்பது பரவலாக நடப்பதாக நாளேடுகளில் படித்தது ஞாபகம் வந்தது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான். கூடவே தடிமாடு மாதிரி வாலிபர்கள் பக்கத்தில் இருந்ததால் வண்டியை நிறுத்துமாறு தம்பியிடம் கூறினேன். "நல்லபடியா போறது உனக்கு புடிக்கலையா? அதுவும் இல்லாம பாக்கறவங்க என்ன நெனைப்பாங்க?" என்று தம்பி இடித்துரைத்தான்.

"அவர்களிடம் 10 நிமிடம் நேர்முகம் செய்வதில் நீ ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை" என்று குரலை உயர்த்தியதும் நிறுத்த சம்மதித்தான்.

"என்னமோ கடவுள் விட்ட வழி... டேய் கழுத்துல நகை இருந்தா மறச்சிக்கன்கடா.." என்று பின்னால் குரல் கொடுத்தான்.

"வண்டியிலிருந்து இறங்கி ஹாய்..." என்றதும் பாலியல் தொழிலாளிகள் ஓடி விட்டார்கள்.

"நீ ரம்பம்னு அவங்களுக்கு எப்படிடா பேசாமலேயே தெரிஞ்சிது" என்று தம்பி வண்டியுடன் சேர்த்து என்னையும் ஒட்டிக் கொண்டு ஊரை நோக்கி பயணமானான். என்னுடைய மனமோ தப்பித்து எதிர்திசையில் ஓடியவர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தது.

Monday, November 1, 2010

உலகத் திரைப்பட விழா - சென்னை

சென்னையில் மழைக்காலம் ஆரம்பித்து ஓடுகிறது. பாதுகாப்பிற்கு குடையுடன் தான் அலைகிறேன். இருந்தாலும் செவந்த் சேனல் சினிமா தயாரிப்பு நிறுவனமும், இண்டர்நேஷனல் தமிழ் ஃபில்ம் அகாதமியும் இணைந்து 28.10.2010 முதல் 31.10.2010 வரை ஏற்பாடு செய்திருந்த சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு திட்டமிட்டு (மழைக்காக) ஒதுங்கினேன்.

முதல் நாளில், 20 நிமிடம் தாமதமாக விழா துவங்கியது. சாருவுக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். அவர் வந்ததும் செவந்த் சேனல் மாணிக்கம் நாராயணன் துவக்க உரையாற்றி விழாவைத் துவங்கி வைத்தார். எந்தவித லாப நோக்கும் இன்றி தனது கைக்காசைப் போட்டு இந்த விழாவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி கூறினார். சாருவுக்கும் மிஷ்கினுக்கும் நன்றி கூறிய பொழுது சாதாரணமாகப் பேசியவர், பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி கூறிய பொழுது நிறையவே உணர்ச்சி வசப்பட்டார். சமாளித்துக் கொண்டு சாருவை பேச வருமாறு அழைத்தார்.

மிருதுவான நடையில் துருதுரு பார்வையுடன் சாரு பேச வந்தார். ஏற்கனவே எழுதியிருந்த சினிமா கட்டுரைகளை புத்தகத்திற்காக தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த பணியின் காரணமாக 10 நிமிட தாமதமாகிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் 'நண்பன் மிஷ்கினுக்கு' என்று எழுதி விட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன் என்று பேச ஆரம்பித்தார்.

நானும் ஒரு தயாரிப்பாளரும் மதுவினை குடித்துக் கொண்டிருந்தோம். வேறொரு முக்கியமான சினிமா நண்பர் அப்பொழுது வந்தார். எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்றோம். 'இன்று மட்டும் குடிக்க மாட்டேன்' என்றார். காரணத்தை ஆவலுடன் கேட்டோம்.

'இப்பதான் சார், எந்திரன் பாத்துட்டு வரேன். குடிச்சேன்னா எங்கிட்ட இருக்குற சினிமா நண்பர்களுக்கு ஃபோன் போட்டு, மனசு தீர படம் எடுத்தவங்களை திட்டிடுவேன். அப்புறம் நான் சினிமாத் துறையிலையே இருக்க முடியாது... என்னை விட்டுடுங்க..' என்றார்.

எனக்குக் கூட 50 வயசு ஆள் 25 வயசு பையன் மாதிரி காலேஜ் ஸ்டுடென்ட் வேஷம் போட்டுக் கொண்டு மரத்தை சுற்றி ஆடுவதைப் பார்க்கும் பொழுது கரப்பான் பூச்சி உடம்பில் ஊறுவது போல இருக்கிறது. இதற்கு சுவிசர்லாந்து வேறு செல்கிறார்கள். அமிதாபச்சன் 56 வயது கிழவனாக 25 வயது பெண்ணைக் காதலிப்பது போல நடிக்கிறார். எந்த பந்தாவும் இல்லாமல் 25 வயது பையனின் காலில் விழுகிறார். Black, Paa போன்ற வித்யாசமான முயற்சிகளின் மூலம் சினிமாவை முன்னெடுத்துச் செல்கிறார். அந்த துணிச்சல் ரஜினி போன்ற நடிகர்களுக்கு இல்லை. ரஜினி இது போன்ற விழாக்களுக்கு வந்து ஊக்கப்படுத்த வேண்டும். திருவனந்தபுரத்தில் நடக்கும் சர்வதேச பட விழாக்களுக்கு நான் செல்லுவதே இல்லை. கடைசி வரை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். சென்னையிலும் அது போன்ற ஆரோக்கியமான நிலை உருவாக வேண்டும். அதற்கு ரஜினி போன்றவர்கள் முன்வர வேண்டும். இது ஒரு கோரிக்கை மட்டுமே என்று உரையை முடித்தார்.

அழுவது மாதிரியான சுகம் வேறெதுவும் இல்லை. என்னுடைய துணை இயக்குனர்களிடம் 'அழுங்கடான்னு' சொல்லுவேன் என்று பத்திரிகை நண்பர்களைப் பற்றி பேசியபொழுது மாணிக்கம் நாராயணன் சிந்தாத கண்ணீருக்கு கனத்தை ஏற்றினார் இயக்குனர் மிஷ்கின். அவருடைய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும்போது ஓர் இடத்தில் அடக்க மாட்டாமல் அழுதாராம். அந்த நேரத்தில் சுகமாக இருந்தது என்றார். அவருடைய அம்மாவுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்து 13 வருடங்கள் ஆகிறதாம். மறுபடியும் வீட்டிற்கு திரும்பவே இல்லை என்றார். இது வரை 22 வேலைகள் பார்த்திருக்கிறேன். எதுவுமே பிடிக்கவில்லை. லேண்ட்மார்க்கில் இருந்த பொழுது நிறைய புத்தகங்கள் வாசித்தேன். மணிரத்னம் போன்ற மனிதர்களை சந்திக்க முடிந்தது. அவர்களுடன் உரையாட முடிந்தது. அதன் பிறகு சினிமாவில் இருப்பதுதான் பிடித்திருக்கிறது.

சினிமாவைத் திரையிடும் இருட்டறையில் இருக்கும் பொழுது, தாயின் கருவறையில் மீண்டும் சென்றது போல இருக்கிறது என்று இரண்டு கைகளையும் அகலமாக விறித்து நின்றார். டைடானிக் ஹீரோ கெட்டப்பில் மாடியின் உச்சியில் நின்றுகொண்டு கூவம் நதியைச் சுட்டிக் காட்டும் கவுண்டமணியின் பிம்பம் என் கண்களுக்குள் தோன்றி மறைந்தது. போலவே விறித்த கைகளை விறித்தவாறு மிஷ்கின் சுகமாக நின்று கொண்டிருந்தார்.

நல்ல படங்களை எடுக்கும் சூழல் தமிழகத்தில் இல்லை. 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' இரண்டும் மட்டமான படங்கள். ஆனால் ஹிட். நந்தலாலா அருமையான படம். வெளியிடுவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு வெளியில் செல்ல இருந்தாராம். இந்த விழாவுக்கு அழைத்ததால் அதையும் பொருட்படுத்தாமல் வந்தாராம். ஹிந்தியில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும், நந்தலாலா தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தப் படத்தில் இளையராஜா அருமையான குத்துப்பாடல் ஒன்றை அமைத்திருப்பதாக பகிர்ந்து கொண்டார்.

வேறு யாரையோ வைத்து இந்த குத்துப் பாடலை இசையமைத்து இளையராஜாவைக் கேட்காமல் படத்தில் சேர்த்து விட்டதால் மிஷ்கினுடன் கருத்து வேறுபாடு என்ற செய்தியை நாளேடுகளில் படித்த ஞாபகம். கிக்கிஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் தான் நந்தலாலா என்று சினிமா நண்பர்கள் சொல்லக் கேட்டதும் ஞாபகம் இருக்கிறது.

மிஷ்கின் தனது உரையை நிறைவு செய்த பொழுது 'ஜாக்கிசேகர்' அருகில் வந்து அமர்ந்தார். அடுத்து டாக்டர் க்ளோரியானா G செல்வநாதன் பேச வந்தார். இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் (மீடியா) பெற்றவர். தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் நிருபராக வேலை பார்த்தவர். ஒரு TV சேனலையும் நடத்திய அனுபவம் உண்டு. குறும்படங்கள் எடுப்பதற்கு தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் பங்களித்த குறும்படம் பரிசைப் பெற்றதால் பரவலாக அறியப்பட்டு 2008 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் திரைப்பட விழாவின் இயக்குனராக இருந்திருக்கிறார். பிரான்ஸ், ஜெர்மன், லண்டன் போன்ற இடங்களில் திரைப்பட விழாக்கள் நடத்துகிறார்.

உலகப் பட விழாக்களில் ஆங்கிலத்தில் பேசிப்பேசி அலுத்துவிட்டது. இங்கு தமிழில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. செவந்த் சேனல் நிறுவனம் மற்றும் இண்டர்நேஷனல் தமிழ் ஃபில்ம் அகாதமியுடன் இணைந்து இந்த விழாவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையிடப் போகும் படங்கள் எல்லாம் சர்வதேச விழாக்களில் ஒரு முறையாவது பங்குபெற்ற திரையிடப்பட்ட படங்கள். எனவே வடிகட்டப்பட்ட படங்களிலும் வடிகட்டப்பட்ட முக்கியமான படங்கள் தான் காண்பிக்க இருக்கிறோம். எதிர் வரும் நான்கு நாட்களும் நான் உங்களுடனே இருப்பேன். எப்பொழுது வேண்டுமானாலும் என்னுடன் உரையாடலாம் என்று உரையை முடித்தார்.

முதல் படம் திரையிடப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் சிணுங்காத தொலைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு ஜாக்கிசேகர் வெளியில் சென்றார். அரங்கில் இருந்தவர்களில் பலரும் தெறித்து ஓடினார்கள். அப்பொழுதேசுதாரித்து இருக்க வேண்டும். எல்லாம் என்னுடைய நேரம், வேறொன்றும் சொல்லுவதற்கு இல்லை. அரை மணி நேரம் கழித்து வெளியில் சென்றேன். "என்னங்க தலையும் புரியல... காலும் புரியல... ஒன்னும் சரியில்லையே" என்று ஜாக்கியிடம் கேட்டேன்.

"அது முன்னாடியே தெரிஞ்சதாலதான் எழுந்து வந்துட்டேன்" என்று கூலாக பதில் சொன்னார். முதல் நாளை அப்படியே முடித்துக் கொண்டு ஜாக்கிக்கு டாட்டா காட்டினேன். எதிர் டாட்டா காட்டியவர் இருட்டறையில் மறைந்து போனார்.

இரண்டாவது நாள் வேலை இருந்ததால் செல்லவில்லை. ஆகவே மூன்றாம் நாள் சென்றிருந்தேன். பத்து நிமிடம் தான் அரங்கில் படம் பார்த்தேன். பாலுமகேந்திரா திரைப் பட்டறையில் படித்த அனந்துவை சந்தித்தேன். சுரேஷ் கண்ணனின் சினிமா கட்டுரைகளை வெகுவாகப் புகழ்ந்தார். அண்ணா சாலையில் நடந்தவாறே 'ஆதவன், இபா, எஸ்ரா, ஜெமோ, கோபி கிருஷ்ணா, கோணங்கி, லாசாரா' என்று பலரது நாவல்களையும் பற்றி பேசிக் கொண்டே ஒரு தூதரகத்தின் அருகில் சென்று நின்றார். அங்கு வேலை செய்யும் அவருடைய நண்பரான கணேஷை அறிமுகப் படுத்தினார்.

அலுவலகத்தில் நான் வேலை செய்வதைப் பார்த்து 'உன் வாழ்க்கை யாருக்குடா வரும்' என்று உடன் வேலை செய்த பலரும் பொறாமைப் பட்டதுண்டு. வாழ்க்கையில் முதன் முதலில் ஒருவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன் என்றால் அது கணேஷாகத் தான் இருக்கும். அவர்களுடன் உரையாடியே விழாவின் மூன்றாவது நாளைக் கழித்தேன்.

விழா நடத்துனர் க்ளோரியானாவிடம் உரையாடும் சந்தர்ப்பம் கடைசி நாளன்று கிடைத்தது.

கேள்வி 1: விழாவுக்கான படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

சர்வதேச பட விழாக்களில் ஒரு முறையாவது பங்கு பெற்ற படங்களைத் தான் தேர்வு செய்கிறோம். தேர்வு நாட்டிற்கு நாடு வேறுபாடும். திரையிடப் போகும் நாடுகளின் அரசியல், மதம், கலாச்சாரம், வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப படங்களைத் தேர்வு செய்து தணிக்கைத் துறைக்கு அனுப்புவோம். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் இங்கு திரையிடப் படுகிறது. சில படங்களை தணிக்கைத் துறையினர் நிராகரித்து விடுவார்கள்.

கேள்வி 2: விழாவின் துவக்கத்தில் திரையிடப்பட்ட படத்தினை எதன் அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?

ஒன்றிணைந்த ரஷ்யா சிதறியபொழுது உருவான சிறிய தேசம் தயாரித்து இயக்கிய முதல் படம் என்பதால் இந்தப் படத்தை தெரிவு செய்தேன். புதியவர்களை அறிமுகம் செய்வதும் நமது பணி தானே. (http://www.sweatybeards.com)

கேள்வி 3: தமிழ் ஃபில்ம் அகாதமி இணைந்து நடத்தும் விழாவில் ஒரேயொரு தமிழ்ப் படம் கூட திரையிடப் படவில்லையே - ஏன்?

தமிழ் படங்கள் இங்கு ஏற்கனவே திரையிடப்படுகின்றன. குறும்படங்களையும் சில தொலைக்கட்சி சேனல்கள் ஒளிபரப்புகின்றன. அதே படங்களை மறுபடியும் ஒளிபரப்ப வேண்டாமே என்று தான் கருதினோம். மற்றபடி தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. வெளிநாடுகளில் விழாவை நடத்தி இருந்தால் கண்டிப்பாக தமிழ்ப் படமும் காண்பித்திருப்போம்.

கேள்வி 4: திரையிடப்படும் படங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?

ஒரு முறை திரையிடுவதற்கு 100 EURO முதல் 1200 EURO வரை படத்தினை வாங்கிய கம்பெனிக்குக் கொடுக்க வேண்டும். குறும்படத்திற்கு 50 EURO வரை கொடுக்கிறோம். அவர்களுக்கு இதுதானே வருமானம்.

இரண்டாவது கேள்வியை மனதில் வைத்துதான் அவருடனான உரையாடலை ஆரம்பித்தேன். அதற்கான பதில் கிடைத்துவிட்டதால் நேரம் எடுத்து உரையாடியதற்கு நன்றி கூறி விடை பெற்றேன்.

28-ஆம் தேதி காலையில் தினத்தந்தி வாசித்த பொழுது என்னுடைய ராசிக்கு 'புதிதாக நல்ல அறிமுகம் கிடைக்கும்' என்றிருந்தது. நாளிதழை வைத்துவிட்டு செல்பேசியைக் கையில் எடுத்தேன். 29-ஆம் தேதி வளைகாப்பு ஏற்பாடாகி இருந்த தங்கைக்கு, முந்திய நாள் அதிகாலை 1.50-க்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஹேம்நாத்திடமிருந்து தகவல் வந்திருந்தது. இந்த நான்கு நாட்களில் எத்தனையோ நண்பர்கள் அறிமுகமானார்கள். இருந்தாலும் தோளில் ஏறி தலையில் ஒன்னுக்கடிக்கப் போகிறவன் போல வருமா? விழா முடிந்ததும் அவனைப் பார்ப்பதற்கு தான் சென்றுகொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு சுட்டிப் பையனும் என்னுடன் வருவான்.