Tuesday, March 16, 2010

நாஞ்சில் நாடன் - கேணி சந்திப்பு

ஞானியின் வீட்டில் நுழைந்தவுடன் நாஞ்சில் நாடன் இருக்கிறாரா என்று தேடினேன். உள் அறையில் பாரதி மணி மற்றும் ஞானியுடன் பேசிக் கொண்டிருந்தார். வெளி அறையில் அவருடைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சொல்ல மறந்த கதை’ என்ற திரைப்படத்தின் ஆதாரக் கதை என்று நண்பர்கள் சொல்லியிருந்ததால் 'தலைகீழ் விகிதங்கள்' வாங்கிக் கொண்டு கேணிக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.

3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். "சுதந்திரமாக பேசலாமா?" என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் அவர் என்ன பேசப்போகிறார் என்பது கூட எனக்குத் தெரியாது. படைப்புகளுக்கு வித்தியாசமான தலைப்புகளை பெயராக சூட்டுவதில் நாஞ்சில் நாடன் என்னை மிகவும் கவர்ந்தவர். எட்டுத் திக்கும் மதயானை, மாமிசப்படைப்பு என்று யோசிக்கும் போதெல்லாம் அவரது பெயரும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை என்று கூறினார். அதைத் தொடர்ந்து நாஞ்சில் நாடன் பேச்சைத் துவக்கினார். தலைப்பாக எதையும் வைத்துக் கொள்ளாமல் மொழியின் கூறுகளைப் பற்றி பேசத் தொடங்கினார்

தேவை கருதியே சொற்கள் உருவாகிறது. அப்படி உருவாகும் சொற்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஒரு படைப்பில் சமுதாயக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்வதைப் போலவே மொழியின் கூறுகளையும் பதிவு செய்வது முக்கியம். 4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச் சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் (லெக்சிகன்) அகராதி. இதிலுள்ள வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகளே தமிழில் இல்லையா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிதாக சொற்களே தோன்றி இருக்காதா? கணினி, பின்னூட்டம் போன்ற வார்த்தைகள் எப்பொழுது தோன்றியது. இவற்றையெல்லாம் அவனப்படுத்த வேண்டாமா?

ஒரு படைப்பாளிக்கு பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. அதுமட்டுமே பலவிதமான மனிதர்களை, கலாச்சாரங்களை, வார்த்தைகளை, அனுபவங்களை படைப்பாளிக்கு வழங்கும். நான் விற்பனைப் பிரதிநிதியாக பல மாநிலங்களுக்கும் பயணம் செய்தவன். அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளைநேசிக்கிறேன். என்னுடைய மொழி தமிழ் தான் என்றாலும் காளிதாசரையோ, காண்டேகரையோ எப்படி நான் வெறுக்க முடியும். அவர்களெல்லாம் மொழியின் கொடைகள் இல்லையா!

ஒரு அறையின் மூலையில் சிகப்பு வண்ண பெயிட்டையும், இன்னொரு மூலையில் பச்சை வண்ண
பெயிட்டையும் கொட்டிக் கவிழ்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வண்ணங்களும் பயணம் செய்து ஒன்றோடொன்று கலந்து மையத்தில் துல்லியமான நீல நிறம் கிடைக்கிறது. ஓரங்களில் மெல்லிய நிறமாற்றங்கள் கிடைக்கிறது இல்லையா? அது போலவே ஒரு மொழி இன்னொரு மொழியுடன் சேரும் பொழுது வேறு பல சொற்கள் மொழிக்குக் கிடைக்கிறது. அது மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். களிறு என்ற சுத்த தமிழ் வார்த்தை நம்மிடம் இன்று புழக்கத்தில் இல்லை. மலையாள மொழியில் இருக்கிறது. இந்த வார்த்தையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதுபோல நிறைய வார்த்தைகள் இருக்கின்றன.

சமீபத்தில் நான் வாசித்த டாக்டர் கு. சீனிவாசன் எழுதிய தாவரங்களைப் பற்றிய புத்தகம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. அதுபோலவே "அக பெருமாள், பெருமாள் முருகன், கிரா, பா சுப்பிரமணியம், கண்மணி குணசேகரன்" போன்றவர்கள் வேலை மெனக்கெட்டு வார்த்தைகளைத் தொகுக்கிறார்கள். "இதை யார் செய்ய வேண்டும்?". ஆராய்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில் கல்லூரியில் என்னதான் செய்கிறார்கள். "மாணவர்களை கிராமங்கள் நோக்கித் துரத்துங்கள். புதுசா வார்த்தைகளையோ, இதிகாச துணைக் கதைகளையோ கண்டுபுடிச்சிட்டு வந்தா, அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுங்க" என்று கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலின் பொழுது துறைத் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறேன். இந்த வேலையை படைப்பாளிகள் உட்கார்ந்து செய்துக்கிட்டு இருக்காங்க.

சென்னையிலிருந்து தமிழ் நாட்டின் கோயபுத்தூர், நெல்லை, கன்யாகுமரி போன்ற உட்புற கிராமங்களுக்கு செல்லும் பொழுது தமிழுக்கு தமிழே மாறுபடுகிறது. அங்கெல்லாம் எவ்வளவு புதிய சொற்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் தொகுக்க வேண்டாமா? ஒரு மண்வெட்டியின் பத்து பாகங்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும். அதையெல்லாம் தொகுக்க வேண்டாமா? சந்தியா பதிப்பகத்தின் எதுகை அகராதியை சமீபத்தில் வாசித்தேன். எதுகையில இவ்வளவு விதம் இருக்கானு ஆச்சர்யமா இருந்தது. சினிமாவுக்கு பாட்டெழுதறவன் கையில கிடைக்கனும்னு நெனச்சிக்கினேன்.

இன்றைக்கு இருக்கும் கவிஞர்கள் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுவதில்லை. தமக்குத் தெரிந்த 1000 சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு எழுதுகிறார்கள். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் முன் அட்டையை கிழித்துவிட்டால் யாருடைய கவிதைத் தொகுப்பு என்றே தெரியாது. அந்த அளவிற்கு சலிப்பாக இருக்கிறது. வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் மெனக்கெட வேண்டும். கட்டுரை, புனைகதை போலவே அகராதி வாசிப்பும் சுவாரஸ்யமான ஒன்று. இளம் படைப்பாளிகள் நேரம் எடுத்து அதை செய்ய வேண்டும்.

"டென்னிஸ் விளையாட்டில் ஒரு பெண் பின் பாக்கெட்டில் இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பந்தை எடுத்து மேலே தூக்கிப் போட்டு பார்க்கிறாள். பந்து சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். அடுத்த பந்தை எடுக்கிறாள் அதுவும் சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். வேறு பந்தைக் கொடுக்கிறார்கள்...அதை சரி பார்த்து சர்வீஸ் போடுகிறாள். ஒரு சர்வீஸ்-கே இப்படி என்றால் 100 வருடம், 1000 வருடம் வாழப்போகிற படைப்பிற்கு சரியான சொல்லைத் தேட வேண்டாமா?" என்று கூறியதும் பலத்த கரவொலி எழுந்தது. எனக்குப் பக்கத்தில் கவிஞர் உழவனும் கைதட்டிக் கொண்டிருந்தார்.

அடிப்படையில் நான் மொழி வல்லுநர் இல்லை. என்னுடைய ஆர்வமெல்லாம் வார்த்தைகளைப் பற்றியது. வார்த்தைகள் தானே மொழியை செம்மையாக்குகிறது. ஒருமுறை ஆனந்தவிகடனுக்கு 'தெரிவை' என்ற கதையை எழுதி அனுப்பியிருந்தேன். அவர்கள் 'நீலவேணி டீச்சர்' என்று தலைப்பை மாற்றி இருந்தார்கள். ஜனரஞ்சக பத்திரிகையில் இதெல்லாம் சகஜம் தான். நான் சொல்ல வருவது, தெரிவை என்பது பெண்களின் பருவ நிலைகளில் ஒன்று. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பருவ நிலைகள் இருக்கிறது என்று பின் குறிப்பில் எழுதியிருந்தேன். வேடிக்கை என்னவெனில் விகடனுக்கு சந்தேகம் வந்து, செம்மொழி மாநாடு நடத்தும் குழுவிலுள்ள முக்கியமானவருக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார்கள். அவருக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாராம். உடனே அவங்க எனக்கு ஃபோன் செய்தாங்க. அந்த நேரம் பார்த்து நான் ஒரு எழவு வீட்டில் இருந்ததால் சரியான தகவல்களை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை.

தமிழின் சமகால 10 சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை சொல்கிறேன். அவர்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பு சென்றிருக்குமா என்று விசாரித்துப் பாருங்கள். ஒருவருக்கும் சென்றிருக்காது. மொழியை அடுத்த இடத்திற்கு நகர்த்துவது படைப்பாளிகள் தான். அவர்களுக்கான கவனிப்பை சரியாகக் கொடுப்பதில்லை. கேரளாவில் வாசுதேவன் நாயர் ஞானபீட விருது வாங்கினால், மத்திய அமைச்சர் அந்தோணி வாசுதேவனின் வீட்டு வாசலில் காலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை வாழ்த்திவிட்டு அமைச்சர் சென்றுவிடுவார். வாசுதேவனும் அவருடைய வேலையைப் பார்க்க சென்றுவிடுவார். தமிழ்நாட்டில் அப்படிநடக்குமா? எழுத்தாளனே ஒரு சால்வையை வாங்கிக்கொண்டு, புகைப்படக்காரனையும் அழைத்துக் கொண்டு பீடத்தில் இருப்பவர்களை சென்று பார்க்க வேண்டும். மறுநாள் அவனே அதை பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் தானே இருக்கிறோம். மூத்த படைப்பாளிகள் அவர்களால் முடிந்த வரை மொழியைத் தாங்கிப் பிடித்தார்கள். அதை முடிந்த வரை பிடித்துக் கொண்டு நாங்கள் ஓடினோம். இனி இளம் படைப்பாளிகள் தான் அதற்கு முன்வர வேண்டும். அதற்க்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று தனது உரையை நிறைவுசெய்தார். அதைத் தொடர்ந்து சில தேவையிலாத கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சூடான விவாதத்துடன் கேணி சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது.

இணைய தமிழ் அகராதி - http://wiki.senthamil.org

கேணி சந்திப்பு பற்றி நண்பர் பிரபாகரன் எழுதிய பதிவு: (http://tprabakaran.blogspot.com)

)()()()()()()()(

பெரியவரிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஞானியின் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு செல்லும் முக்குச்சந்தை கடக்கும் பொழுது "ங்கோத்தா எனக்கு குடுக்க வேண்டிய பணத்தை என் ஊட்டாண்ட வந்து இன்னிக்குள்ள குடுக்குல நடக்கறதே வேற" - என்று ஓர் ஆட்டோக்காரன், எதிரில் இருப்பவனை கோபமாக திட்டிக் கொண்டிருந்தான். அந்த 'ங்' வார்த்தை என்னுள் ஓங்காரமாக ஒரு காலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. என்னுடைய சிறு வயதில் வீட்டிற்குத் தெரியாமல் எத்தனை முறை சொல்லியிருப்பேன். வீட்டுக்குள் சென்ற பிறகு சாகடிச்சாலும் இந்த வார்த்தை என் வாயிலிருந்து வராது. இப்பொழுது அந்த வார்த்தை என்னுள் அடையாளமின்றி எங்கோ இருக்கிறது. அதுபோல இன்னும் எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ! முடிந்தால் எல்லாவற்றையும் நிதானமாக யோசித்து மீட்டெடுக்க வேண்டும். நல்ல வார்த்தைகளையும் சேர்த்துத்தான்...

)()()()()()()()(

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2.
நாஞ்சில் நாடன் அவர்கள் எழுத்தின் வடிவத்தைப் பற்றியோ, ஒலி வடிவத்தைப் பற்றியோ எதுவும் பேசவில்லை.
3. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
4.
அடுத்த மாதம் கேணிக்கு எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வனும், அதையடுத்து எழுத்தாளர் பாமாவும் வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

Monday, February 15, 2010

கேணி சந்திப்பு - ஜெயமோகன்

புத்தக வெளியீட்டிற்காக திருப்பூரிலிருந்து முரளியும், வெயிலானும் வந்திருந்ததால் அவர்களைச் சந்திக்க ஒரு மணி நேரம் முன்பாகவே கேணிக்குச் சென்றிருந்தேன். கேணியின் அருகில் ஞானியின் நாடக நண்பர்கள் கூட்டுவதும் பெருக்குவதுமாக இருந்தார்கள். ஜன்னலின் வழியாக உள்ளே பார்த்தேன். பரவலாக அடுக்கப்பட்ட புத்தக அட்டைகளின் வண்ணங்கள் தெறித்தன. ஓர் ஓரத்தில் ஜெயமோகன் சாய்வு நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்தார். உள்ளே சென்று புத்தகங்களைக் கையிலெடுத்துப் புரட்டிக்கெண்டே ஓரக்கண்ணால் ஜெயமோகனைப் பார்த்தேன். கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தூக்கம் வரவும் உள்ளே சென்று வசதியாகப் படுத்துக்கொண்டார். நானும் வெளியில் சென்று ஓரமாக அமர்ந்துகொண்டேன்.

நாடக நடிகர் பாரதி மணி, எழுத்தாளர் திலீப்குமார், பிரசன்னா என்று பலரும் வந்திருந்தார்கள். ஜெயமோகனும் ஞானியும் சரியான நேரத்தில் வந்து கூட்டத்தைத் தொடங்கினார்கள். சிறுகதை, நாவல், புனைவு என்று இலக்கியம் சார்ந்து ஜெயமோகன் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். 'நம்மால் ஏன் விவாதிக்க முடிவதில்லை?' என்ற தலைப்பில் ஜெயமோகன் பேச இருப்பதாக ஞாநி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நேரடியாக ஜெயமோகன் உரையாடத் தொடங்கினார்.

பதினைந்து நிமிடங்களுக்கு முன்புதான் இந்த தலைப்பைப் பற்றி பேசலாம் என்று முடிவுசெய்தேன். நான் எழுத்தத் தொடங்கி ஏறக்குறைய இருபது வருடங்கள் ஆகிறது. ஆரம்ப நாட்களில் ஆர்வமுடன் பழகிய பலரும் வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பழகிய நண்பர்களும் ஆர்வமுடன் வந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

விவாதம் என்பது படைப்பாளியை முன்னகர்த்தக் கூடிய முக்கியமான விஷயம். தமிழ் சூழலில் விவாதங்கள் சரியான முறையில் நடக்கிறதா என்றால், திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய சூழலிலும் சரி, இதற்கு முன்பிருந்த வெங்கட் சுவாமிநாதன்-பிரமிள் சூழலிலும் சரி, அதற்கு முன்பும் சரி விவாதங்கள் சரியாக நடக்கவில்லை. விவாதம் என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதல்கள் தான் அதிகமாக நடந்திருக்கிறது.

மலையாள இலக்கியத்தில் இருப்பது போன்ற விமர்சனங்களின் மீதான மிதமான சூழல் இங்கு இல்லை. பாலச்சந்திரன் சுள்ளிக்காடை - கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையாக விமர்சிக்கிறேன். ஆனாலும் அவருடைய இளைய சகோதரனாகத் தான் என்னைப் பாவிக்கிறார். ஒரு முறை இந்தியா டுடே-ல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடை அடக்கம் செய்தால் தான் மலையாள நவீனக் கவிதை பிழைக்கும் என்று எழுதியிருந்தேன். சுள்ளிக்காடான் எனக்கு ஃபோன் செய்து "மோகன், நான் நாகர்கோவில் வரலாம் என்றிருந்தேன். நீ அடக்கம் செய்திடுவியோன்னு பயமா இருந்தது. அதனால ட்ரிப் கேன்சல் பண்ணிட்டேன்"னு சொன்னாரு.

அதே மாதிரி ஷாஜி எழுதிய இளைய ராஜா பற்றிய கட்டுரையை மொழி பெயர்த்திருந்தேன். அதைப் பற்றிய விமர்சனக் கட்டுரையையும் நானே எழுதியிருந்தேன்.ஷாஜிக்கு ஃபோன் செய்து ஜெயமோகனை விடக் கூடாதுன்னு சிலர் சொன்னார்களாம். என்னுடைய பக்கம் சில பேரு இருக்காங்க. ஷாஜியை விடக் கூடாதுன்னு சொல்றாங்க. விவாதம் இளையராஜாவின் பங்களிப்பைப் பற்றியது. அது சமந்தமாக யாருமே பேசவில்லை.

இளைய ராஜாவின் ரீ-ரெகார்டிங் பங்களிப்பு மகத்தானது. அதை யாராலும் மறுக்க முடியாது. 'சரத்பாபு Below Emotion நடிகர்' என்று இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார். அவர் தலையைத் தொங்கப் போட்டால் இளைய ராஜாவின் வயலின் தான் சோகமா இருக்காருன்னு சொல்லும். சினிமா என்பது கூட்டு முயற்சி, unit work. இளையராஜாவிற்கு முன்பு படப்பிடிப்பு பெரும்பாலும் உள்-அரங்கிலேயே நடக்கும். அவருடைய காலத்தில் வெளிப்புற படப்பிடிப்பு எளிமையானது. அந்தத் தொழில் நுட்பமும் இளையராஜாவின் இசைக்கு வலு சேர்த்திருக்கலாம் இல்லையா?. இதை ஒருவர் கூட சொல்லவில்லை. ஒரு நிலையில் நானே எனக்கு இந்த Point-ஐ பின்னூட்டம் அளித்துக் கொள்ளலாமா என்று நினைத்தேன்.

விவாதம் செய்ய சில புரிதல்கள் தேவை.
ஒரு படைப்பாளியின் Frame of reference என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதற்குள் விவாதிக்க வேண்டும். அதற்கு வெளியிலுள்ள விஷயங்களை விவாதிக்கக் கூடாது. உதாரணமாக, சிவராமனின் (பைத்தியக்காரன்) பதிவை விவாதிக்கும் போது பதிவிற்கு பின்னூட்டம் அளித்தவரின் பதிவினை விவாதிக்கக் கூடாது. நிறைய பேர் அப்படித்தான் செய்கிறார்கள். ஒரு படைப்பின் எல்லைகள் எந்த Frame of reference-ல் இருக்கிறதோ, அவற்றிலுள்ள விஷயங்களை விவாதிப்பது ஆரோக்கியமானது. அதில் சொல்லப்படாத விஷயங்களை 'ஏன் சொல்லவில்லை?' என்று விவாதிப்பதில்அர்த்தம் இல்லை.

விவாதங்களில் மிகச்சிறந்த விவாதத்திற்கு பதில் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் நம்மை நாம் செழுமைப் படுத்திக்கொள்ள முடியும். மேலை நாடுகளில் பள்ளி நாட்களிலேயே விவாதங்களைத் தொடங்குகிறார்கள். அதனால் தான் அவர்கள் பள்ளி முடித்து வெளிவரும் போது தன்னம்பிக்கையுடன் வெளிவருகிறார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு கோனார் உரைக்கு அடுத்து எதுவும் தெரிவதில்லை. சமீபத்தில் என்னுடைய நண்பர் கல்லூரிகளில் வகுப்பெடுத்தார். அதைப்பற்றிய எதிர்வினையை எல்லோரையும் எழுதச்சொல்லி இருக்கிறார். மாணவர்களின் கருத்துக்களைப் படிக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார். படித்து அதிர்ந்துவிட்டேன். முப்பது பேரில் ஒருவர் தான் ஓரளவிற்குப் பரவாயில்லை என்று எழுதியிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் காலம் கடந்து நிற்கும் ஆக்கங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். நம்மில் யாராவது 'ஆதி சங்கரின்' வரிகளை மேற்கோள் காட்டுகிறோமா?... 16-ஆம் நூற்றாண்டு வரை நம்மிடமும் செழுமையான விவாதங்கள் நடந்துள்ளது. உபநிஷத்துகள் கூட விவாத நடையில் தான் இருக்கிறது. விவாதத்தில் இரண்டு முறைகள் இருக்கிறது...

1. சந்தஸ் -
கொள்கையை முன்பே வகுத்துக் கொண்டு விவாதிப்பது.
2.
நியாயம் - ஒரு விஷயம் சரியான முறையில் பொய்ப்பிக்கப்பட்டு நியாயத்தை நிலைநாட்டுவது.

மேலைச் சிந்தனை, வேத சித்தாந்தங்கள் போன்ற Professional விவாதங்களில் நான் கலந்து கொள்வதுண்டு. ஆரம்பித்த பத்து நிமிடங்களில் விவாதம் சூடுபிடித்துவிடும். ஒவ்வொருவரும் அவர்களுக்கான நிலையிலுள்ள தன்மையான கருத்திக்களை முன்வைப்பார்கள். அதுபோன்ற விவாதங்களின் மூலம் தான் நம்மைக் கண்டடைய முடியும். அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்த முடியும்.

சரியான அர்த்தத்தில் ஒரு விஷயம் மறுக்கப்படும் பொழுதுதான் அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்துக் கொண்டு செல்ல முடியும். இல்லையெனில் தேங்கிவிடுவோம்.
ஆகவே ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்வது அவசியம் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

கேள்வி நேரத்தின்போது பல நண்பர்களும் ஆர்வமுடன் கேள்வி கேட்டார்கள். சிலர் 'உங்களைக் காயப்படுத்துவதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. வாசகன் என்ற முறையில் கேட்கிறேன்' என்று தயங்கித் தயங்கி கேள்வி கேட்டார்கள். 'நீங்க அப்படி நினைக்கவே வேண்டாம். நான் மன வருத்தமே அடையமாட்டேன். தாராளமா கேளுங்க' என்று தட்டிக் கொடுத்து கேள்விகளை எதிர்கொண்டார். அதைப்பற்றி டோண்டு ராகவன் வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது.

கேணி சந்திப்பு - 14.02.2010

நிகழ்ச்சி முடிந்து ஞானி பேசும்போது 'ஜெயமோகன் புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதாகவும் 10 சதவீத விற்பனைக் கழிவு உண்டு' என்றும் அறிவித்தார். கேணிக்கு வந்துவிட்டு எழுத்தாள நண்பரிடம் பேசாமலோ, கேள்வி கேட்காமலோ போனால் எப்படின்னு ரெண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஜெயமோகனிடம் சென்றேன்.

உங்களுடைய பெயர் என்ன?- ன்னு அவர் முந்திக்கொண்டார்.

கிருஷ்ண பிரபு... (புத்தகத்தில் என்னுடைய பெயரெழுதி அவருடைய கையொப்பத்தை இட்டுக்கொண்டிருந்தார்.)

"ஜெயமோகன்" என்றேன்.

"ம்...!?" என்று திரும்பிப் பார்த்தார்.

உங்களுடைய படைப்புகளிலேயே உங்களுக்கு பிடித்த படைப்பு எது?

புனைவா?... புனைவல்லாத புத்தகமா?...

எதாச்சும் மனசில் பட்டதை சொல்லுங்க...

"கொற்றவை" என்றார்.

என்னிடம் அந்தப் புத்தகமில்லை. ஆகவே இவ்வளவு நேரம் பேசியதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற திருப்தியுடன் கேணியிலிருந்து திரும்பினேன்.


பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2.
கேணி சந்திப்பை வீடியோ எடுத்தார்கள். அதை வாங்க ஞானியிடம் கேட்டுப்பார்க்கலாம்.
3.
பிக்காசாவில் கேணி புகைப்படங்களைக் காண அழுத்தவும்.


Monday, February 8, 2010

லைப் ஸ்கில்ஸ் - புத்தக வெளியீடு

கேணியில் இதுவரை இலக்கிய சந்திப்புகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. முதன் முறையாக சென்ற வாரம் ஞாநி மற்றும் ஏ.எஸ்.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்ட லைப் ஸ்கில்ஸ்’ புத்தகம் வெளியிடப்பட்டது. குழந்தைப் பருவம் முதல் வயோதிகப் பருவம் வரை பல்வேறு துறையிலுள்ள அனைவருக்கும் பயன்படக் கூடிய வாழ்க்கை வழிகாட்டி நூல் இது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

'சுய முன்னேற்றம், வாழும் கலை' போன்ற விஷயங்களில் பிடிப்பிருந்தாலும், புத்தகங்களாக வாங்கிப் படிப்பது குறைவு தான். ஆகவே 'என் வாழ்க்கை என் கையில்' - புத்தக வெளியீட்டிற்குப் போகலாமா? வேண்டாமா? என்ற இரண்டு மனநிலைகளில் இருந்தேன். சென்று பார்ப்போம் பிடிக்கவில்லையெனில் திரும்பிவிடலாம் என்று தான் கேணிக்குச் சென்றிருந்தேன்.

டாக்டர் வசந்தி தேவி, ஸ்ரீராம், ராஜீவ்காந்தி யூத் ஃபவுண்டேஷன் உயர் அதிகாரி, நாசர், Life skills trainer ஒருவர் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள். அவர்களைப் பற்றிய அறிமுக உரையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து பத்மாவதி Life Skills பற்றி உரையாற்றினார்.

1. நான் யார் என்று உணர்
2. தன்னைப் போல் பிறரை நினை
3. உறவாட கற்றுக்கொள்
4. உரையாட கற்றுக்கொள்
5. எதையும் கேள்வி கேள்
6. எதற்கும் பதில் கண்டுபிடி
7. தெளிவான முடிவெடு
8. சிக்கல்களை அவிழ்
9. உணர்ச்சிகளை உணர்ந்துகொள்
10. அழுத்தங்களை லேசாக்கு

ஆரம்பத்தில் இந்தப் பத்து கட்டளைகளை பாலியல் தொழிளார்களுக்கு வகுப்பெடுக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அனால் இதையே குழந்தைக் குற்றவாளிகள், மன அழுத்தத்திலிருக்கும் பள்ளி சிறுவர்கள், இன்னும் சொல்லப் போனால் அனைத்து துறையினரும் பயன்படுத்தலாம் என்று கூறினார். தமிழ்நாடு AIDS கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளில் பயிற்சியாளராக தனக்குக் கிடைத்த அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.

ஒருசில நிறுவனங்கள் இவர்களை அழைத்து ஒரு நாளில் வகுப்பெடுத்து முடிக்கச் சொல்வார்களாம்.
பயிற்சியின் முழுப்பலன் கிடைக்க வேண்டுமெனில் குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிர்ச்சியாளர்கள் செல்வார்கள். ஒரே நாளில் எடுக்கும் பொழுது பல பயிற்சிகள் விடுபட்டுவிடும். சரியான கால அவகாசத்தில் இந்தப் பயிற்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பொழுது நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமாக ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்தப் பயிற்சி நல்ல பலனை அளிக்கும் என்று தனது உரையை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீடு நடைபெற்றது.

முதல் பிரதியை சிறப்பு விருந்தினர்களுக்குக் கொடுத்தார்கள். அதன் பிறகு ஞானியின் சகோதரிகள் இருவருக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவருக்கும், கேணி வீட்டின் உரிமையாளர் திரு: புருஷோத்தமன் அவர்களுக்கும்
பிரதியை வழங்கினார்கள். புருஷோத்தமன் புத்தகத்தை பெற்றுக்கொள்ள வரும் பொழுது பலத்த கரகோஷம் வானைப் பிளந்தது. அண்ணார்ந்து பார்த்தேன். கேணியின் மாடியிலிருந்து வயதான பெண்மணி சந்தோஷமான முகத்துடன் புருஷோத்தமனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்கள். கடைசியாக, பள்ளிச் சிறுமியின் infatuation சமந்தமான பிரச்னை ஒன்றையும் லைஃப் ஸ்கில்ஸையும் இணைத்து ஞாநி இயக்கி, நாசர் மற்றும் துணை நடிகர்கள் நடித்த 'ஆனந்தி' என்ற குறும்படத்தைத் திரையிட்டார்கள். புத்தகத்தினைத் தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் அனைவரும் இருந்து பார்த்தனர். படம் முடியும் பொழுது மணி 7.30 PM. ஆகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புத்தகத்தின் இரண்டு பிரதிகளை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

இதே புத்தக வெளியீட்டைப் பற்றி நண்பர் ரவிபிரகாஷ் எழுதிய பதிவினைப் படிக்க கீழே அழுத்தவும்:


Tuesday, February 2, 2010

வம்சி - புத்தக வெளியீடு

ஞானியுடன் சேர்ந்து கேணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இலக்கிய ஆளுமைகளுடன் உரையாட வழி வகுத்தவர் என்ற முறையில் பாஸ்கர் சக்தியின் மேல் எனக்கு தனி ஈடுபாடு உண்டு. அவருடைய புத்தக வெளியீடு 'Book Point, Chennai'-ல் நடக்கவிருக்கும் தகவல் அறிந்து சந்தோஷப்பட்டேன். புத்தக வெளியீட்டிற்கு முந்தின தினம் இடம் மாற்றப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தீபிகா சென்டரில் இனிதே நடந்து முடிந்தது.

கேணி சந்திப்புக்கு முதன் முறையாக செல்லும் வரை பாஸ்கர் சக்தி எழுத்தாளர் என்பதே எனக்குத் தெரியாது. அதன் பிறகுதான் அவருடைய தொகுப்புகளை தேடித்தேடி வாங்கினேன்.

பழுப்பு நிற புகைப்படம் புத்தகத்தின் முன்னுரையில் வரும் சக்தியின் வார்த்தைகள்:

"...எல்லாவற்றையும் வடிகட்டி நகர்கிறது காலம். உரித்துப் போட்ட பாம்புச் சாட்டைகளாய் முன்னே எனது கதைகள்..." - எதோ ஒரு விஷயத்தை உணர்த்திவிட்டு காலம் சுவடில்லாமல் நகரும் பொழுது, சம்பவங்களைக் கோர்வையாக்கி சுவாரஸ்யமான கதைகளாக பாஸ்கர் நமக்குத் தருகிறார்.

'அழகர்சாமியின் குதிரை (வம்சி பதிப்பகம்), பழுப்பு நிற புகைப்படம் (தமிழினி பதிப்பகம்)' ஆகிய இரண்டு தொகுதிகளும் என்வசம் இருக்கின்றன. ஒன்றையும் முழுமையாகப் படித்ததில்லை. இந்தத் தொகுதிகள் தற்பொழுது கிடைக்கிறதா என்றும் தெரியவில்லை. இரண்டு விடுபட்ட சமீபத்திய படைப்புகளையும் கனக துர்காவில் சேர்த்து

விழா துவங்குவதற்கு முன்பே தீபிகா சென்டருக்கு சென்றுவிட்டேன். போகும் வழியில் கேணி நண்பர்கள் பிரபுவும், லிவிங் சன்னும் இணைந்து கொண்டார்கள். செல்லத்துரை, பாஸ்கர் ஷக்தி, க சீ சிவக்குமார்... இன்னும் பலரும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருந்தார்கள்.

கே.வி.ஷைலஜாவின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. திருவண்ணாமலைக்கு வெளியே நடக்கும் வம்சியின் முதல் நிகழ்ச்சி என்பதாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டதையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

பத்திரிகையாளர் ஞாநி, கவிஞர் யுகபாரதி, இயக்குனர் மகேந்திரன் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் முதல் அமர்வில் பாஸ்கர் சக்தியின் கனகதுர்காவை வெளியிட்டு பேசினார்கள்.

இயக்குனர் சிம்பு தேவன்:

பத்திரிகைத் துறையில் வேலை செய்த நாட்களிலிருந்தே பாஸ்கர் சக்தியை எனக்குத் தெரியும். அவருடைய கதைகள் பலவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். பழுப்பு நிறப் புகைப்படம், தக்ளி, கனக துர்கா இன்னும் சில கதைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். அவருடைய எழுத்தில் இருக்கும் நகைச்சுவை பிரதானமான ஒன்று. அவருடைய பாத்திரப் படைப்புகள் எல்லாம் சுவாரஸ்யம் நிறைந்தவை. ஒரு கார்டூனிஸ்டாக பார்க்கும் பொழுது அதில் நிறைய விஷயங்கள் இருக்கும். கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கவனித்து செய்திருப்பார். என்னைப் பொறுத்தவரை பாஸ்கர் சக்தி கார்டூனிஸ்டாக வந்திருந்தால், அவருடைய நுட்பமான கவனிப்புக்கு மிகப் பெரிய உட்சத்தைத் தொட்டிருப்பார். அவருடைய கதை ஒன்றை திரைப்படமாக எடுக்கும் ஆசை இருக்கிறது என்று பேசிமுடித்தார்.

கவிஞர் யுகபாரதி:

எனக்கு நடை போகும் பழக்கம் இருக்கிறது. அப்படி ஒருநாள் சென்றுகொண்டிருந்த பொழுது ஒருவர் என்னைப் பார்த்து சிரித்தார். "என்னைப் பார்த்து யார் சிரிக்கப் போகிறார்கள்?" என்று பின்னால் திரும்பிப் பார்த்தேன். எனக்கு பின்னால் யாரும் இல்லை. அவர் என்னைப் பார்த்து தினமும் சிரித்துக் கொண்டே இருந்தார். இப்படியே நடந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அவரைப் பார்க்க முடியாமல் போனது. ஒருநாள் ஆனந்த விகடனில் ஒரு கதை பிரசுரமாகியிருந்தது. அடடே... நல்ல கதையாக இருக்கிறதே என்று விகடனில் பணிபுரியும் நண்பருக்கு தொலை பேசியிருந்தேன்.

நமக்குத் தெரிஞ்சவருதான். நல்லா எழுதுவாரு அவரோட நம்பர் கொடுக்கட்டுமான்னு கேட்டாரு.
சரின்னு வாங்கி உங்களுடைய கதை நன்றாக இருக்கிறதென்று....பேசிக்கொண்டிருந்தேன். பிறகு அவரைப் பற்றி விசாரித்தேன்.

"உங்களை எனக்குத் தெரியும், தினந்தோறும் பார்த்து சிரிப்பேனே" என்றார்.

அது வேறு யாருமில்லை பாஸ்கர் சக்திதான்.
இப்படி ஆரம்பித்ததுதான் எங்களுடைய நட்பு என்று அவருடைய சிறுகதைகளைப் பற்றி பேசினார்.

பவா புத்தக வெளியீடு என்று அழைத்ததும் நான் ஒரு கேள்வி கேட்டேன். பவா நீங்கள் மாத இதழைத் தொடங்க வேண்டி இருக்குமே என்று. இப்பொழுதெல்லாம் ஒரு பதிப்பகத்தின் மாத இதழில் அடுத்த பதிப்பகத்தின் புத்தகத்தை, நல்ல புத்தகமாகவே இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்வது தானே கலாச்சாரம் என்று நகைச்சுவைகாச் சொன்னார்.

சுப்ரமணிய ராஜு சிறுகதைகள் மீது
எனக்கு விருப்பம் அதிகம். அதன் பிறகு என்னைக் கவர்ந்தது பாஸ்கர் சக்தி தான்... இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு அவரது உரையை முடித்தார்.

பத்திரிகையாளர் ஞாநி:

ஞாநி பேச வந்ததும் நீண்ட மைக்கை சிலம்பம் போல கையில் எடுத்துக் கொண்டார். பாஸ்கர் சக்தியின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போடப் போறாருன்னு நெனைச்சேன். மக்கள் இந்தப் பக்கம் இருக்கும் போது, மைக் பொசிஷன் அதற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என்று சரி செய்தார்.

எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் இது என்னுடைய வேலை இல்லை என்று புறக்கணிக்கிறோம். எல்லாவற்றையும் தனித் தனியாகப் பிரித்து Specialist Specialist என்கிறோம். holistic View - யாருக்குமே இல்லை. இந்த இடத்தில் மட்டுமில்லை இந்தக் குறை. எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. இந்த அபாயகரமான சூழ்நிலை மாற வேண்டும் என்று எல்லா மேடைகளிலும் நான் வற்புறுத்துகிறேன்.

இளைஞர்கள்
சமுதாயத்தின் மீதும் பார்வையை செலுத்த வேண்டும். பாஸ்கர் சக்தியின் எழுத்து எதோ ஒரு வகையில் சமூகத்தின் குரலை அங்கதமாகக் கொண்டுள்ளன என்பதில் எனக்கு சந்தோஷமே. பத்து வருடங்களாக பாஸ்கர் சக்தி எனக்கு பழக்கம். இன்று குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத் தான் என்னால் கருத முடிகிறது. "உன்னைப் பார்க்கும் பொழுது சிறுவயதில் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது" என்று பாஸ்கரிடம் சொல்லி இருக்கிறேன்.

பாஸ்கர் நுழையும் துறைகளிலெல்லாம் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் நாடு முழுவதும் ரூட் பஸ்களில் பயணம் செய்த அனுபவத்தை எழுதி வைத்துள்ளார். அவற்றையும் புத்தகமாக வெளியிடலாம். எழுத்தாகட்டும், தொலைக் கட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதுவதிலாகட்டும், திரைப்படமாகட்டும் அவருக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துக் கொண்டதுமகிழ்ச்சியளிக்கிறது. பாஸ்கரின் நீண்ட நாள் ஆசை ஒன்று இருக்கிறது. அதை இங்கு போட்டு உடைக்கலாம் என்றிருக்கிறேன். திரைப்படம் இயக்க வேண்டும் என்பது அவரது நீண்ட கால விருப்பம். அதற்கான முயற்சிகளையும் அவர் செய்துகொண்டிருக்கிறார். அதிலும் அவர் வெற்றி பெறுவார் என்று உரையை நிறைவு செய்தார்.

இயக்குனர் மகேந்திரன்:

பத்து வருடங்களுக்கு முன்பு விகடனில் என்னுடைய பேட்டியைக் கேட்டிருந்தார்கள். சூட்டிங் வேலைகளுக்கு இடையில் ஒருநாள் காலையில் வரச்சொல்லி இருந்தேன். பாஸ்கர் சக்தி தான் நிருபராக வந்திருந்தார். அதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு. என்னால் முடிந்த அளவு அவருக்கு பதில் சொன்னேன். எனக்குத் திருப்தி இல்லாததால் மாலை ஒருமணி நேரம் கொடுக்கறேன்... வந்து முடிச்சிடுங்கன்னு சொல்லி இருந்தேன். அதே போல வந்து தொந்தரவு இல்லாம முடிச்சிட்டாரு. அந்தப் பேட்டி விகடனில் வந்ததும் எனக்கு நிறைய பாராட்டுக் கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்தன. உடனே மகிழ்ச்சியோட விகடனுக்கு பாஸ்கரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன்.

சமீபத்தில் அவருடைய சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அற்புதமான கதைகள். அவருக்கு ஃபோன் செய்து பேசினேன். திருவண்ணாமலையில் புத்தகப் பணியில் இருப்பதாகக் கூறினார். எல்லாக் கதைகளுமே அவ்வளவு நகைச்சுவை. நான் எல்லா முக்கியமான எழுத்தாளர்களையும் படிப்பேன். ஆனால் சிலருக்கு மட்டுமே ஆஸ்தான இடம் கொடுப்பேன். பாஸ்கர் சக்தியும் அவர்களில் ஒருவர் என்று உரையை நிறைவு செய்தார்.

நன்றியுரை - பாஸ்கர் சக்தி:

என்ன பேசறதுன்னே தெரியல... புத்தக வெளியீட்டிற்கு இவர்கள் நால்வரையும் கூப்பிட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஆரம்பத்தில் பத்திரிகையில் வேலை செய்தவர்கள்.

"மகேந்திரன் சார் என்னுடைய கதைகளைப் பாராட்டிப் பேசறாருன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. விகடனில் இருக்கும் போது அவர் அனுப்பிய கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. நான் ஒன்னும் பெருசா எழுதிடலை. அவர் சொன்னதைத் தான் எழுதினேன். அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் சாதாரண நிருபரை மதித்து கடிதம் எழுதியதை நினைக்கும் போது நெகிழ்வாக இருக்கிறது. சிம்பு தேவன் டென்ஷனோட இருக்காரு. அவருக்கு வேறொரு விருது நிகழ்ச்சி இருக்கு. நண்பர்கள் என்னோட சிறுகதைகளைப் பாராட்டி பேசியது மகிழ்ச்சியா இருக்கு" என்று வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி உரையை நிறைவு செய்தார்.

அதன் பிறகு மேலும் இரண்டு புத்தகத்தின் வெளியீடுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. திரும்புவதற்கு மனமில்லாமல் நண்பர்களிடம் விடைபெற்று வெளியில் வந்தேன். எழுத்தாளர் பிரபஞ்சனும், திலீப் குமாரும் பேசிக்கொண்டே என்னைக் கடந்து சென்றனர்.

Tuesday, January 19, 2010

கிழக்கு மொட்டை மாடியில் - பா ராகவன்

ஒருநாள் எழுத்தாளர் பா ராகவனின் இணைய தளத்தை படித்துக் கொண்டிருந்தேன். 'ஒரு முக்கிய அறிவிப்பு' என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அரசியல், தீவிரவாதம் என்று எழுதிக் கொண்டிருப்பதால் கொலை மிரட்டல் வந்திருக்குமோ என்று நினைத்தேன். அதைவிடப் பெரிய பயங்கரம்.

Jan-17 2010
ல் Non Fiction Writing தொடர்பான நுணுக்கங்களைச் சொல்லித்தர ஒருநாள் வகுப்பு நடத்தப் போவதாகவும், கிழக்குக்கு எழுத விரும்புகிற புதிய நண்பர்கள் சிலரையும் அழைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். விருப்பமும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் முன்கூட்டி பதிவு செய்யும்படிக் கேட்டிருந்தார். எந்தவித யோசனையும் இல்லாமல் என்னை அழைக்குமாறு அவருக்குத் தெரிவித்திருந்தேன். அதன்படி என்னை அழைத்திருந்தார்.

விடிகாலை 5.00 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொண்டேன். ஹாப்பி... இன்று முதல் ஹாப்பி என்ற பாடல் எங்கோ கேட்டது. முக்கியமான தருணங்களில் பாடலின் ஒரு வரி மட்டுமே மறுபடியும் மறுபடியும் எனக்குக் கேட்கும். இந்த முறை முழுப்பாடலும் கேட்டது. அடடே... மேலான நிலையை அடைந்துவிட்டோமோ! என்று நினைத்தேன். குளித்து முடித்து பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றதும் தான் தெரிந்தது எம் ஜி ஆரின் 93-ஆவது பிறந்த நாளாம். புகைப்படத்திற்கு மாலை போட்டிருந்தார்கள். கிழக்கில் இன்னும் வெளுக்கவில்லை. இருள் திட்டிற்கும் பனிப் புகைக்கும் நடுவில் புரட்சித் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

சரியான நேரத்தில் பேருந்து கிடைத்து 8 30 மணிக்கெல்லாம் எல்டாம்ஸ் சாலையில் இருந்தேன். கிழக்கு பதிப்பகத்திற்கு செல்லும் வழியில் அருள் மிகு பாலசுப்பிரமணியன் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதும் கோவிலுக்குள் செல்ல நினைப்பேன். பர பரப்பான வேலையுடன் செல்வதால் முடியாமல் போகும் அல்லது கோவில் பூட்டி இருக்கும். ஞாயிற்றுக் கிழமை என்பதால் 4 நபர்கள் மட்டுமே இருந்தனர். இரண்டு பசுக்களும் கோவிலினுள் இருந்தன. மென்மையான அமைதி அகமும் புறமும் பரவிக்கொண்டிருந்தது. அதே பரவசத்தில் எல்லா விக்ரகங்களையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியில் வந்தேன். வந்த வேலை தானே முக்கியம். நியூ ஹரிசான் மீடியா -வின் முன் அலுவலகத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்.

"நீங்க
தான் முதல் ஆள்" என்றார்கள்.

ஆரம்பத்தில் யாரு First வராங்கன்னு பார்க்கக் கூடாது. கடைசியில யாரு First வராங்கன்னு தான் பார்க்கணும். ஒரு ஹீரோ சொல்லி இருக்காரு.
கன்னத்தில் போட்டுக்கோங்கோன்னு சொல்ல நினைத்தேன். சிறிது நேரத்தில் இன்னொருவரும் வந்து சேர்ந்தார். என்னை பற்றிக் கேட்டார். சொல்வதற்குப் பெரிதாக என்ன இருக்கிறது. அவரைப் பற்றி விசாரித்தேன். எழுத்தாளர் CSK என்றார் (http://www.writercsk.com). அவர் எழுதிய சந்திரயான் கூட கிழக்கு வெளியிட்டுள்ளது. கொஞ்ச நேரத்தில் பத்ரி வந்து எங்களை உள்ளே அழைத்தார். அதன் பிறகு வந்த அநேகரும் ஒரு விதத்தில் எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளராகத் தான் இருந்தனர். என்னைத் தவிர.

பிடித்த எழுத்தாளரை நேரில் சந்திப்பது சங்கடமான சந்தோசம் என்று சேரல் அடிக்கடி கூறுவான். அந்த உணர்வுடனே காத்துக் கொண்டிருந்தேன். பா ரா அருகில் வந்ததும் 'ஹாய்' என்று பெரிய குரலெடுத்துக் கத்தினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

சரியாக 9.30-க்கு பாராவும் பத்ரியும் எங்களை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர். பா ராவிற்கு கடந்த சில நாட்களாக மலேரியாவாம். பேசக் கூட முடியவில்லை. அதைக் கூட பொருட்படுத்தாமல் மதியவம் வரை எங்களுடன் உரையாடினார். ரமணன், CSK, சுரேஷ் கண்ணன், சிவாராமன், யுவ கிருஷ்ணா, பிரதீப், ஆதிஷா, பிரதீப் குமார் ஆகிய பதிவர்களும், சுஜாதா, வைதேகி, பாலு சத்யா போன்ற கிழக்கின் நண்பர்களும் உடன் இருந்தனர்.

உரையாடலில் பின்வரும் விஷயங்களைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு வந்து விரிவாகப் பேசினார்:

1. கதையல்லாத எழுத்தில் உள்ள சவால்கள்
2. தகவல்களைப் பெறுவது எப்படி?
3. ஒரு புத்தகத்தை எவ்வாறு யோசிக்க வேண்டும்?
4. அத்தியாயங்களை எப்படி வகுக்க வேண்டும்?
5. சுவாரசியம் என்பது என்ன?
6. என்னென்ன துறைகள் சார்ந்து எழுதலாம்?
7. புத்தக எழுத்துக்கான அடிப்படை வாசிப்புகள் எவை எவை?
8. புத்தகத்தின் அளவைத் தீர்மானிப்பது எப்படி?
9. பேரா பிரிக்கும் கலை
10. பிழையின்றி எழுத என்ன செய்யலாம்?
11. எழுதுவது என்னும் பணி சார்ந்த சில உபயோகக் குறிப்புகள்.

சாதாரணமாகத்தான் பேச்சை ஆரம்பித்தார். முதலில் அறிமுகம் செய்து கொள்ளலாமே என்று பத்ரி கூறவும் முதல் ஆளாக நான் எழுந்து கொண்டேன்.

இந்த Formality எல்லாம் வேண்டாம். சும்மா உட்கார்ந்து கொண்டே சொல்லுங்கள் என்றார் பாரா.
அறிமுகப் படலத்திற்குப் பின் மறுபடியும் தொடர்ந்தார்.

'குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை' -
தெய்வப் புலவன்

விளக்கம்: ஒருவன் ஆத்மா சித்தியுடன் தன்னிடம் உள்ளதைக் கொண்டு ஒரு காரியத்தை செய்தான் என்றால் மலையின் மீதேறி யாணைப் போர் காண்பது போல தெளிவாகச் செய்யலாம்.

புத்தகம் எழுத உட்காரும் பொழுது, எழுத்தின் கருப்பொருளைப் பற்றிய சந்தேக மனப்பான்மை இருக்கக் கூடாது. அது சம்மந்தமாக நிறைய வாசிக்க வேண்டும். வாசிக்கும் பொழுதே உபயோகமான நல்ல குறிப்புகளை ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்புகளை எடுத்துவிட்டோமே என்று எல்லாவற்றையும் பயன்படுத்தக் கூடாது. தேவையானவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத ஒரு சொல்லைக் கூட வாசகனுக்குக் கொடுக்கக்கூடாது.

மேலும் தொழில் முறையாக எழுத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அதிலுள்ள சவால்கள், மற்றவர்களிடமிருந்து தனித்தன்மையை எப்படி ஏற்படுத்திக் கொள்வது, சொல்லவரும் விஷயத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்வது, தகவல்களைத் திரட்டும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் (தயவு செய்து விக்கிபீடியா உபயோகிக்காதீங்க, பல தகவல்களும் தவறானவை), அத்யாயங்கள் பிரிப்பது எப்படி என்று அடுக்கிக் கொண்டே போனார்.

புத்தகம் எழுதுவதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. அத்யாயம் அத்யாயமாக எழுதுவது ஒரு முறை. ஒரே மூச்சாக உட்கார்ந்து எழுதுவது இன்னொரு முறை. எங்களுடைய அலுவலகத்தில் 10- நாட்களில் ஒரு புத்தகத்தை முடித்திருக்கிறோம். 2 நாட்களில் கூட புத்தகத்தை முடித்திருக்கிறோம். அந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

புத்தகம் எழுதுவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்குமா என்று கேட்கக் கேட்க ஆச்சர்யமாக இருந்தது. பாலகனாகிய என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

கடைசியாக 'எழுதுவது என்னும் பணி சார்ந்த சில உபயோகக் குறிப்புகள்' - பற்றி பேசும் போது முக்கியமான ஒரு விஷயம் கூறினார். உங்களுடைய எழுத்தில் குறையிருந்து, அதை யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களை சாஷ்டாங்கமாக விழுந்து சேவிச்சிக்கோங்கோ. அந்த மாதிரி ஒருத்தர் கிடைக்கிறதே அபூர்வம். மேலும் எழுதும் போது நிறைய தண்ணீர் குடியுங்கள். மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உரையாடலை நிறைவு செய்தார்.

சரி... யார் யாரெல்லாம் புத்தகம் எழுதுகிறீர்கள்? என்று பாராவும், பத்ரியும் வந்திருந்தவர்களைப் பார்த்தனர்.

ஐயா, நான் கல்லூரி படிக்கும் பொழுது முதலாமாண்டு பாடத்தை இரண்டாமாண்டிலும், இரண்டாமாண்டு படத்தை மூன்றாமாண்டிலும், மூன்றாமாண்டு பாடத்தை கல்லூரியிலிருந்து வெளிவந்த பின்பும் முடித்தவன். ஒரு பதிவை எழுதுவதற்கே இங்கு தகிகின தோம் போடுகிறேன். புத்தகம் என்றால் தலையே சுற்றுவது போல் இருக்கிறது. உங்களுடைய வேகம் எனக்கு சரிவராது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

இந்த வருடம் என்னுடைய ராசிக்கு குருபகவான் முதல் ஆறு மாதத்திற்கு நல்லது செய்வாராம். ஆனால் என்னைச்சுற்றி உள்ளவர்களுக்கு கஷ்டம் தானாம். ஐயோ இதைக் கேட்கலையே... பா ரா, பத்ரி, பைத்தியக்காரன், பிச்சைப்பாத்திரம், லக்கிலுக், ஆதிஷா ல்லோரும் என்னைச்சுற்றி அமர்ந்திருந்தனர்.

ஹ ஹ
ஹா... பார்க்கலாம், எனக்கு நல்லது நடக்கிறதா என்று!!!...

Monday, January 11, 2010

கேணி சந்திப்பு - கவிஞர் சுகுமாரன்

முன் குறிப்பு: கவிதை வாசிப்பில் ச் சிறந்த கோமாளி நான்... கீழே இருக்கும் கவிதைகள் கேள்வி ஞானத்தில் எழுதியது. ஞாபகத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஏமாற்றி இருக்கிறேன். பதிவில் பயன்படுத்தியிருக்கும் கவிதைகள் யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள். மாற்றிவிடுகிறேன்.நன்றி...

::::::::::::: ::::::::::::: ::::::::::::: ::::::::::::: :::::::::::::

Poet Sukumaran
நீண்ட நாட்களுக்கு முன்பு 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் சென்னை சிறுகதைப் பயிலரங்கம் நடந்தது. முதலில் உலகச் சிறுகதைகள் பற்றிப் பேச கவிஞர் சுகுமாரன் தான் ஏற்பாடாகியிருந்தது. அப்பொழுதே கோழியை அமுக்குவது போல் அமுக்கவேண்டும் என்றிருந்தேன். ஏனெனில் அவருடைய மொழி பெயர்ப்பில் மதில்கள் மற்றும் காளி நாடகம் ஆகிய படைப்புகளை வாசித்திருக்கிறேன். அந்த சந்திப்பில் மொழி பெயர்ப்பு சமந்தமான பல கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றிருந்தேன். கடைசி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போகவே அந்த இடத்தை 'சா. தேவதாஸ்' நிரப்பினார். கவிஞரை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தமாகவே இருந்தது.

25-12-2009 அன்று நடந்த உயிர்மை புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர் சிவராமன் கவிஞர் சுகுமாரனை அறிமுகப்படுத்தினார். மூத்த ஆளுமை என்பதால் உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது. தயங்கித் தயங்கி அவருடன் உரையாடினேன். சகஜமான உரையாடலின் மூலம் நெருக்கமாகப் பேசினார். விழாநாள் என்பதால் அவருடன் விளக்கமாக உரையாட முடியவில்லை. கேணிக்கு வருகிறார் என்றதும், அன்று விட்டதை இன்று பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன்.

ஞானியின் வீட்டை நெருங்கியதும் இன்ப அதிர்ச்சி. சுகுமாரன் அவருடைய நண்பருடன் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
தூரத்தில் நின்றுகொண்டு "வணக்கம்" என்றேன். ஆமோதித்து சிரிக்கவும் அருகில் சென்றேன். 'காளி நாடகம்' புத்தகத்தை அவரிடம் கொடுத்து கையொப்பம் வாங்கிக்கொண்டேன். அருகிலிருந்தவரைப் பார்த்து சிரித்தேன். தன்னுடைய பெயர் க. சீ. சிவக்குமார் என்று கூறினார். நானும் என்னுடைய பெயரைக் கூறினேன். 'நீங்கள் பதிவரா?' என்று சிவா கேட்டார். ஆமாம் என்று சொல்லிவிட்டு கவிஞரைப் பார்த்தேன்.

சுகுமார்ஜி, நீங்கள் பதிவுகளைப் படிப்பீர்களா?

எப்பவாவது நேரம் கிடைக்கும்பொழுது படிப்பேன்.

பதிவுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சில பேர் நல்லா எழுதறாங்க. என்ன ஒன்னு நாலு பின்னூட்டம் வந்ததுமே... தான் ஒரு பெரிய எழுத்தாளன் என்ற நினைப்பு வந்துவிட்டால் அவ்வளவுதான்.

நீங்கள் சிறுவயதில் எங்கு வளர்ந்தீர்கள் சுகுமார்ஜி....?

"அதைத்தானே உள்ள பேசப்போகிறோம். அப்போ கேட்டுக்கலாமே..." - என்று கூறவும் உன்னியின் சிறுகதைகளை சிலாகித்துப் பேசினேன். நீங்கள் உண்ணியைப் பார்க்கும் பொழுது என்னுடைய பாராட்டுக்களை சொல்லிவிடுங்கள். அப்படியே அவருக்கான ஒரு வாசகர் தமிழில் இருக்கிறார் என்றும் சொல்லிவிடுங்கள். அவர் சிறுகதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் கரு நன்றாக இருக்கிறது.

மலையாளம் பேசுவிங்களா? - என்று கேட்டார்.

அய்யய்யோ... சுத்தமா தெரியாது...

Can you sepak in English?

ரொம்ப நல்லா பேசமாட்டேன்... கொஞ்சம் கொஞ்சம்...

அதுபோதும், அவனும் ரொம்ப சுமாராத்தான் இங்கிலீஷ் பேசுவான் என்று உன்னிக்கு ஃபோன் செய்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

Unni, this is Krishna prabhu from Chennai. I red your short stories translated by the poet and well known writer Mr. Sugumaran. It is amazing man. You have done a wonderful job. Congratz. என்று அடுக்கிக் கொண்டே போனேன். அவரும் Thank you, Thank you...என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தக் குரலில் ஒரு படைப்பாளி மட்டுமே அனுபவிக்கக் கூடிய சந்தோஷத்தை உணர முடிந்தது.

I saw your E-Mail ID in the same book I suppose to think. So I will send an e-mail to you. Keep in touch with me...
என்றவுடன் Sure... Sure... என்றார்.

Take care... Bye Bye...
என்று பேசி முடிக்கவும் பாஸ்கர் சக்தி வந்து சேர்ந்தார். அனைவரும் உள்ளே சென்றோம்.

சென்ற வாரங்களில் ஞானிக்கு உடல் நிலை சரியில்லை தெரியுமா?

"இங்க வந்த பிறகுதான் தெரியும். இப்போ எப்படி இருக்காரு?" என்று கேட்டேன்.

ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டாரு. இப்போ உள்ளே தூங்கிட்டு இருக்காரு. இனிமேல்தான் எழுப்ப வேண்டும். நேரம் இருக்கிறதே என்று தரையில் அமர்ந்தார். சின்ன கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தோம். உங்களுடைய சிறுகதைப் புத்தகங்களை வாங்கிவிட்டேன் சக்தி. இனிமேல் தான் வாசிக்க வேண்டும். அருகில் இருப்பவர் என்னை விட நன்றாக எழுதுவார் என்று அறிமுகப் படுத்தினார். அவர் வேறுயாருமில்லை அதே க. சீ. சிவக்குமார் தான். கன்னிவாடி - தமிழினி, உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - வம்சி, குனசித்தர்கள் - கிழக்கு, நீல வானம் இல்லாத ஊரே இல்லை - உயிரெழுத்து... ஆகியவை இவர் எழுதி சில புத்தகங்கள் என்று கூறினார். அவருடைய புத்தகங்களை இனிமேல் தான் தேடித் பி()டிக்க வேண்டும்.

ஞானிக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கேணியைத் தொடங்கினார்கள். புத்தகக் கண்காட்சியின் கடைசி நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. கூட்டம் குறைவாக இருக்கும் பொழுதுதான் இலக்கிய கூட்டத்திற்கான லட்சணம் கூடுகிறது என்று சுகுமாரனைப் பற்றியும், கவிதையைப் பற்றியும் நீண்ட உரையாற்றிவிட்டு கவிஞர் பேசுவதற்கு வாய்ப்பளித்தார்.

"எதுவும் சொல்ல பயமாக இருக்கிறது... எதுவும் பேச பயமாக இருக்கிறது..." - என்ற கவிதையுடன் தனது பேச்சை ஆரம்பித்தார். பல வருடங்களுக்கு முன்பு "எழுதுவது எப்படி?" என்ற புத்தகத்தை 'பழனியப்பா ப்ரதெர்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். அதில் 'தி. ஜா' ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அருமையாக இருக்கும். யாராவது அவரிடம் ஒரு சிறுகதை எழுதித் தருமாறு கேட்டால் வயிறில் புளியைக் கரைக்கும் என்று சொல்லியிருப்பார். குமுதம் டாட் காமில் வேலையிலிருக்கும் போதிலிருந்தே என்னை பேச அழைத்தார்கள். இங்கு தானே இருக்கப் போகிறேன் அடுத்த மாதம் வருகிறேனே என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது வசமாக மாட்டிக்கொண்டேன். எனக்கு வயிற்றில் புளி கரைகிறது. அந்த உணர்வுடன் தான் உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன்.

என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் தான் மூத்தவன். அப்பாவின் சகோதரி உதக மண்டலத்தின் வெலிங்ஸ்டன் என்ற இயற்கை சூழலில் இருந்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் என்னை எடுத்து வளர்த்தார்கள். சிறு வயதில் பெற்றோர்களைப் பிரிந்து வளரும் குழந்தைகள் ஒரு விதத்தில் தனிமையை உணர்கின்றன. நானும் அந்தத் தனிமையை உணர்ந்தேன். அந்தத் தனிமையை போக்கவும், என்னை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்தவும் ஏதேனும் ஒரு விஷயம் தேவைப்பட்டது. அது கவிதை வாசிப்பாக அமைந்தது. கையில் கிடைக்கும் காகிதத்தில், அச்சில் உள்ள அனைத்தையுமே படிப்பேன்.

பள்ளியின் இறுதி வாழ்க்கை முடிவதற்குள் 500 செய்யுள் எழுதிவிட்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் செய்யுள் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதின் மூலம் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நான் கிறுக்கியதற்கு பாராட்டுக்களும் கிடைத்தன. பெண்கள் தான் அதிகம் பாராட்டினார்கள். அதனால் நானும் அக்காக்களுடன் இருப்பதைத்தான் அதிகம் விரும்பினேன். ஒரு முறை எனது பக்கத்து வீட்டு அக்கா கவிதைப் புத்தகம் ஒன்றை பரிசளித்தார்கள். அந்த சம்பவம் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. அதன் பிறகு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் புலவர் குழந்தை எழுதிய 'யாப்பதிகாரம்' என்ற நூல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அதில் எனக்குத் தேவையான இலக்கணத்தைக் கற்றுக்கொண்டேன்.

தமிழ் கவிதைகளையும், புத்தகங்களையும் விரும்பிப் படிப்பதால் என்னுடைய தமிழ் ஆசிரியர்களுக்கு நான் பிடித்த மாணவனாகியிருந்தேன். அவர்களும் எனக்கு பல விஷயங்களை விருப்பமுடன் கற்றுக் கொடுத்தார்கள். கவிதை என்று வரும் பொழுது நிறைய ஆதர்சனகள் இருந்தார்கள். வைதீஸ்வரன் மற்றும் தர்மு சிவராம் ஆகிய இருவரும் என்னை வெகுவாக பாதித்தார்கள். இருவரும் அவர்களுக்கான பாணியில் நன்றாக எழுதி தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இருவரும் பிடித்திருந்ததால் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பம் உண்டாகியது. கடைசியாக யாரும் வேண்டாம் என்று எனக்கென ஒரு நடையை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட நம்முடைய கவிதை மரபில் விவசாயம், வைத்தியம், ஜோதிடம் என்று எல்லாமே கவிதை நடையில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பெரிய பாரம்பரியத்தின் ஒரு பகுதிதான் நான். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சவால். பாரம் என்று கூட சொல்லலாம். கவிதையில் ஒரு அனுபவம் இருக்கவேண்டும். இல்லையெனில் அது செய்தியாகிவிடும். உதாரணமாக...

யாது ஊரே யாவரும் கேளிர் - என்ற வரியைச் சொல்லும் போது அது ஒரு செய்தி மட்டுமே, அதற்கடுத்துள்ள வாசகம் தான் ஒரு அனுபவத்தைத் தருகிறது, ஒரு நிகழ்ச்சியை கண்முன் நிருத்துகிறது. அப்பொழுது தான் அந்தக் கோர்க்கப்பட்ட வாசகங்கள் கவிதைக்கான வடிவத்தைப் பெறுகிறது. இதுதான் கவிதைக்கும், செய்திக்கும் (Statement) உள்ள வித்யாசம். இரண்டுக்குமே பயன்பாட்டு மதிப்பு உள்ளது. அவைகள் தன்னுடைய மதிப்பை எப்பொழுதும் தக்கவைத்துக் கொள்ளும்.

மலையாளத்தில் கவிதை எழுதும் இரண்டு பேரின் பெயர்களைச் சொல்லி இருவரும் வெவ்வேறு தளத்தில் எழுதுபவர்கள். ஒருவர் மென்மையான விஷயங்களையும், இன்னொருவர் தவிப்புகளையும் மையமாக வைத்து எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவரின் சில கூறுகளைக் கழித்துப் பார்த்தால், இரண்டு படைப்பாளிகளின் கவிதைகளும் ஒரே மாதிரி இருக்கும். யார் எழுதியது என்று வித்யாசம் காண முடியாது. ஆனால் தமிழில் இது சாத்தியமில்லை.

அகவற்பா, வெண்பா, செய்யுள், மரபுக் கவிதை என பல வடிவங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது புதுக் கவிதைதான். புதுக் கவிதைகள் ஜனநாயகத்தைப் பிரகடனப் படுத்துவதாக நம்புகிறேன். அதனால் தான் அந்த வடிவத்தை மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக விரும்புகிறேன் போலும்.

என்னைப் பொறுத்தவரை கவிதை மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும். அவைகளாவன 'வடிவம், மொழி மற்றும் உள்ளடக்கம்'. இந்த நிபந்தனைகள் புரியும் விதமாக நீண்ட விளக்கம் அளித்தார். முனைப்புடன் செயல்படும் பல கவிஞர்களுக்கும் இந்த விளக்கம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

சிறுகதையோ, நாவலோ, கட்டுரையோ சொல்ல வரும் விஷயத்தை படைப்பாளி சொல்லியபடியே வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள். கவிதைகள் அப்படி அல்ல. எழுதியவன் ஒன்றை நினைத்து எழுதுவான் படிப்பவர்கள் வேறு ஒரு அனுபவத்தை அதிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஒரே கவிதை ஒவ்வொரு வாசகருக்கும் வேறுவேறு அனுபவத்தை ஏற்படுத்திச் செல்லும். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சுதந்திரமும் கூட என்று சொல்லி அவர் எழுதிய "கையில் அள்ளிய நீர் " கவிதைக்கு வாசகர் அளித்த விளக்கத்தைக் கூறினார். நதியிலிருந்து ஒரு கை நீரை எடுக்கிறார். செடிகளுக்கு அளிக்கிறார். அதை மேகம் கொண்டு மழையாப் பொழிகிறது. அந்த நீரை எடுத்து மீண்டும் நதியில் கவிழ்க்கிறார்.இந்த அனுபவத்தை கவிதையாக சொல்கிறார்...

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?


-
இதை நான் சாதாரண அனுபவமாகத் தான் எழுதினேன். நதி என்பது பரமாத்மா... கையளவு தண்ணீர் ஜீவாத்மா... அது போக வேண்டிய இடம் சென்று கடைசியாக பரமாத்மாவிடமே திரும்பியது என்று சுழற்சியைக் கூறினார். அவருடைய யோசனையில் தவறில்லை. இந்த வார்த்தைகள் அவருடைய யோசனைக்குப் பொருந்துகிறது.

நான் திருவனத்தபுரம் தள்ளி இருக்கும் ஆணையடி என்ற இடத்தில் வசிக்கிறேன். ராஜாக்கள் காலத்தில் அங்கு தான் யானைகளைக் கட்டிப் போடுவார்களாம். அந்தப் புறமும் கூடவே இருக்கும். அங்கு ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாளாம். அதன் காரணத்தை அறிய எனக்கு ஆவல். ஒரு வயதானவரிடம் கேட்டேன்.

"நீ... சிறுபிள்ளை"
என்று கூறிச் சிரித்தார்.

பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன்.

எவ்வளவு கேட்டும் அதற்கான காரணத்தை கடைசிவரை அந்தப் பெரியவர் சொல்லவே இல்லை.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை ஆராய முற்பட்டேன். கடைசி வரை அதற்கான காரணம் தெரியாமல் போனது. ஆகவே அந்த சம்பவத்தை வைத்து ஒரு கவிதை எழுதினேன். இறுதியாக அந்தக் கவிதையை வாசித்து என்னுடைய பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார்.கவிதை வாசிப்பினைத் தொடர்ந்து அவருடனான உரையாடல் நடைபெற்றது.

பல கேள்விகளும் கவிதையை சார்ந்தே இருந்ததால் பேசா மடந்தை போல் உட்கார்ந்திருந்தேன்.
நேரம் பார்த்து மொழி பெயர்ப்பு சமந்தப்பட்ட கேள்வி ஒன்றைக் கேட்டேன். அதற்கு கவிஞரும், ஞானியும் அவர்களுடைய கருத்துக்களை முன் வைத்தார்கள். அவருடைய மொழி பெயர்ப்பு மற்றும் கட்டுரை குறித்து யாரும் பேசாதது வருத்தமாக இருந்தது. ஒரு படைப்பாளி நம் முன் உரையாடுகிறார் என்றால், அவர் நமக்களித்த முக்கியமான படைப்புகளை ஞாபகப்படுத்தி கௌரவிக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. மேலும் சுகுமாரனின் கவிதைகளை முன்வைத்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பது சற்றே ஏமாற்றமாக இருந்தது.

கவிஞர் சுகுமாரின் வலைப்பூ முகவரி: vaalnilam.blogspot.com
விக்கிபீடியா: கவிஞர் சுகுமாரன்

சுகுமாரைப் பற்றிய கட்டுரைகள்:
1. உருமாற்றத்தின் ரகசியம்: பாவண்ணன்
2. கவிஞர் சுகுமாரன் - கவிதைத் திருவிழா 14 - அந்திமழை
3.
சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பல படைப்பாளிகளை தூரத்திலிருந்தும், அருகில் சென்றும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் கவிஞர் வா மணிகண்டன் சுவாரஸ்யமான நண்பர். 10 நிமிடங்கள்அவருடன் பேசியதில் 25 கவிஞர்களின் பெயரை உச்சரித்தார். அவர்களில் சுகுமாரனின் பெயரும் ஒன்று. சுகுமாரனைப் பற்றி எழுதிய பதிவு: கவிஞர் சுகுமாரன்

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்
தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.

2. உரையாடல் கவிதையை மையமாக வைத்து இருந்ததால்
சமயத்தில் கவனம் சிதறியது. ஆகவே தகவல் பிழைகள் ஏராளமாக இருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. நண்பர்கள் குறிப்பிட்டால் மாற்றிவிடுகிறேன்.
3. இங்கு பயன்படுத்தியிருக்கும் கவிதை யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள் சரி செய்துவிடுகிறேன்.