Sunday, October 20, 2013

ஒன்டிக்கட்டைகளின் ஓலங்கள்


சென்னையைப் பொருத்தவரை பேட்சுளர்களுக்கு வாடகைக்கு விடவே வீட்டின் உரிமையாளர்கள் பலரும் விரும்புவார்கள். ஏனெனில் வீட்டு வாடகையை எல்லோருமாகப் பங்கிட்டுக்கொண்டு உரிய தேதியில் வாடகைப் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். சம்சாரிகளுக்கு விடுவதால் வாடகைப் பணம் பெறுவதில் பிரச்சனை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வாடகையை உயர்த்தினாலும் பேச்சுலர்ஸ் ஏனென்று கேட்காமல் கேட்கும் தொகையை சப்தமில்லாமல் கொடுத்து விடுவார்கள். இதே கிராமமென்று வரும் பொழுது சிக்கல் எழும். ஒன்டிக்கட்டைகளுக்கு வாடகைக்கு விடவே தயங்குவார்கள். என்னுடைய கிராம வீட்டை வாடகைக்கு விடும் பொழுதும் இதே குழப்பம் நிலவியது. 

ஒரு பிரபல கல்வி நிறுவனத்தின் – சமையல் கூட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தங்க எனது கிராம வீட்டினைக் கேட்டிருந்தார்கள். பெரிய கல்வி நிறுவனம், வாடகைப் பிரச்னை இருக்காது என்பதால் அம்மாவும் ஒத்துக்கொண்டாள். ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் எழுந்தது.

நாங்கள் இருக்கும் பொழுதே பக்கத்து வீட்டு உரிமையாளர்கள் – எங்கள் பகுதியில் நுழைவதும் கிளைகளை வெட்டுவதும், குப்பைகளைக் கொட்டுவதும் என அராஜகம் செய்வார்கள். ஊர்பேர் தெரியாத பேச்சுலர்களை நடத்தும் விதத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பேச்சுலர்களை “நீங்கள் மொட்டை மாடியில் நிற்கக் கூடாது, வீட்டிற்கு உள்ளே மட்டும் தான் இருக்க வேண்டும், வந்தமா போனமான்னு இருக்கணும்” என்று ஊரிலுள்ள ஒருவர் வந்து மிரட்டிவிட்டுச் சென்றாராம். பக்கத்து வீட்டு ஆசாமி குடித்துவிட்டு வந்து ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி இருக்கிறார். அவர்களுடைய வாரிசுகளில் ஒருவன் குடியிருப்பவர்களை அடிப்பதற்காக ஓடியிருக்கிறேன். ஊரிலிருக்கும் பெண்கள் “மொட்டைமாடி இருட்டுல நின்னுக்குனு... நீங்க எங்களையே தான் பாக்குறீங்க?” என மிரட்டி இருக்கிறார்கள்.

“அண்ணா... எங்களுக்கு பயமா இருக்குன்னா...!? எங்க வீட்டுல கூட இப்படியெல்லாம் திட்டினது இல்ல... செல்போன் சிக்னல் வரலன்னு மாடிக்கு போயி நின்னு பேச முடியல. தெருவுல நின்னும் ஊருல இருக்கும் யாருகிட்டயும் பேச முடியல” என குடியிருக்கும் பையன்களில் ஒருவன் அழைத்துப் பேசினான்.

மொத்தம் 12 பேர் அந்த வீட்டில் இருகிறார்கள். அதில் 7 பேர் வட இந்தியர்கள். மீதியுள்ள 5 பேர் தமிழர்கள். ஆறு நபர்கள் வீட்டிலிருந்தால், ஆறு பேர் வேலைக்குச் சுழற்சி முறையில் செல்பவர்கள். சரி அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். குடித்துவிட்டு தகராறு செய்வதாக ஒன்டிக்கட்டைகள் குறிப்பிட்டவர் எதிரில் வந்தார். அவரை மடக்கிக்கொண்டு “பக்கத்துல இருக்கவங்கள நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா? எதுக்கு குடிச்சிட்டு கலாட்டா பண்றிங்க?” என்றேன்.

“இல்லியே... நான் அப்படியெல்லாம் பண்ணலையே...” என்றார்.

இதென்னடா வம்பா போச்சிதுன்னு, குடியிருப்பவர்களை அடிப்பதற்கு ஓடியதாகக் குறிப்பிட்ட டிப்ளமோ படிக்கும் இளைஞரை “இன்னாடா... அடிப்பன்னு சொன்னியாமே...! அடிச்சிடுவையா...!?” என்றேன்.

“ஐயையோ... நான் ஏன்னா அப்படியெல்லாம் பண்ணப் போறேன்...!?” என்றான்.

அந்த நேரம் பார்த்து குடிகாரரின் நண்பர் வந்தார். “அவங்க அப்படி பண்றதுல என்ன தப்பு இருக்குது...!?” என்றார். இவர் உறவு முறையில் அம்மாவிற்குத் தம்பி.

“என்ன சொல்றிங்க...!?” என்றேன்.

“ஊருக்கு நடுவுல ஒரு 18 ஆம்பள பசங்கள கொண்டுவந்து உட்டுட்டு... எதுக்கு அசிங்கம் பண்றிங்க?” என்றார்.

“இன்னாது அசிங்கமா? குடிச்சிட்டு ங்கோத்தா ங்கொம்மான்னு பேசுறது அசிங்கமா? அவனவன் வேலைய பாக்குறது அசிங்கமா?” என்றேன். “நீங்க செஞ்சது தப்பு?” என்றார்.

அதாவது குடும்பத்திற்கு விடும்பொழுது, அவர்களுடைய “குலம், கோத்திரம், ஜாதி, மதம், மயிறு, மட்டு, லொட்டு, லொசுக்கு” என எல்லாவற்றையும் விசாரித்து வாடகைக்கு விடலாம். பேச்சுலர்ஸ் எனில் அதில் சாதியக் கலப்பு இருக்கும் இல்லையா? அதுதான் அவர்கள் கேட்க விழையும் முக்கியமான விஷயம். சென்ற வாரத்தில் பக்கத்து ஊரைச் சேர்ந்த மேல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தலித் இளைஞருடன் ஓடிவிட்டார் என்பதால் அவளது தந்தை தற்கொலை செய்துகொண்டார். நான்கு நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்து தலித் இளைஞனரை, பக்கத்து ஊரிலுள்ள தலித் இளைஞர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றிருகிறார்கள். இந்த சம்பவங்கள் ஊரிலுள்ளவர்களின் உளவியலில் புகுந்து வேலை செய்கின்றதா என்று தெரியவில்லை.

“நீங்க 12 பேச்சுலற்கு வீட்டை வாடகைக்கு விட்டது தப்பு?” என பலரும் திரும்பத் திரும்பக் கூறினார்கள். இவர்கள் எல்லோருமே ஒருவகையில் எனக்கு தூரத்து உறவினர்கள் தான்.

“தோ... பாருங்க... அந்த பசங்க ஏதாச்சும் தப்பு சென்ஜாங்கண்ணா... என்கிட்டே சொல்லுங்க... சும்மா சத்தம் போட்டா நான் அடங்கிப் போவேன்னு நெனைக்காதிங்க...” என்றேன். என்னுடைய பதிலில் யாருக்கும் திருப்தியே இல்லை. உலகில் சில ருசிகரச் சம்பவங்கள் நடக்கின்றன. நண்பர்கள் அதனை கவனமாகக் கேட்க வேண்டும்.

“ஒருவருடைய மாமாவின் மகன், அதே நபருடைய அத்தையின் மகளைத் திருமணம் செய்ய இயலுமா?”, “ஒருவரது (ரெண்டு கை தள்ளிய) சித்தியின் மகன், அதே நபருடைய (ஒருகை தள்ளிய) சித்தியின் மகளைத் திருமணம் செய்ய இயலுமா?” – இதெல்லாம் பறந்து விரிந்த “அறம் சார்ந்த, மத ஒழுக்கம் சார்ந்த, இத்தியாதி எல்லா ஒழுக்க நியதிகளையும்” பின்பற்றும் நம் இந்திய மரபுச் சூழலில் ஆங்காங்கு நடக்கிறது. இனம் இனத்தோடு சேரும்பொழுது நியதிகள் நழுவி இதற்கெல்லாம் வழிவிடுகின்றன. இதுபோன்ற சூழல்களில் இருந்துகொண்டு ஒழுக்கங்களைப் பற்றிப் பேசும் நம்மவர்களுக்கு ரெண்டு பொன்னாட்டிகள், ஒன்பது சக்காளித்திகள் இருகிறார்கள். சுய ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்று எதுவுமே இல்லாதவர்கள் – சாதியம் சார்ந்த ஒழுக்கத்தை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதின் மர்மம தான் எனக்கு விளங்கவே இல்லை. இவர்களின் பிரச்சனை தான் என்னவென்றும் புரியவில்லை? எதற்காக அடுத்தவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை?

முத்தாய்ப்பாக ஒரு விஷயத்தைக் கூறினார்கள். “இங்க பாரு அவனுங்க ஹிந்தி காரனுங்க. பாம் வப்பானுங்க... ஏதாச்சும் கடத்தல் செய்வானுங்க... கள்ள நோட்டு மாத்துவானுங்க...” என்று குடித்துவிட்டு கலாட்டா செய்தவர் கூறினார். என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. தொடர்ந்து அவர் பேசினார்: “கவரப்பேட்டை இன்ஸ்பெக்டர் தெரிஞ்சவர் தான்... அவரு எப்பன்னாலும் ரவுண்ட்ஸ் வருவாங்க... மாட்டினால் ஜெயிலுக்குத் தான் போவ...” என்றார். இவருக்குப் பின்னால் பெரிய அரசியல் வாதியின் குடும்பமே இருக்கிறது.

“என்ன மெரட்டுறீங்களா...?” என்றேன்.

“இல்ல உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்...!” என்றார்.

“அவங்க மாட்டினா ங்கோத்தா நான் தானே ஜெயிலுக்குப் போகப் போறேன்... உங்களுக்கு என்ன அதப் பத்திக் கவலை...!? உங்க வேலையைப் பாருங்க...” என்று நடு ரோட்டில் நின்றுகொண்டு தரமான வார்த்தைகளால் ஞாயம் கேட்டுவிட்டு, ஒன்டிக்கட்டைகளுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினேன்.

“யார் கண்டது ஊரிலுள்ளவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று...!?”

இப்படித் தான் போல, தனக்கு ஒத்துவராதவர்களைக் குற்றவாளியாக நிறுத்த ஒரு தந்திரமான சமூகம் பின்னணியில் வேலை செய்துகொண்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருப்பவர்கள் பொம்மலாட்ட மனிதர்களைப் போல சாதாரண மக்களை ஆட்டி வைக்க நினைப்பார்கள். படித்த, ஓரளவிற்கு சிந்திக்கத் தெரிந்த எனக்கே இதுபோன்ற எச்சரிக்கைகள் வருகிறது எனில், ஒடுக்கப்படும் ஒன்டிக்கட்டைகளின் நிலை பாவத்திலும் பாவம். பரிதாபத்திலும் பரிதாபம். நாம் பார்த்து வளர்ந்த மனிதர்கள், காலம்காலமாக சுற்றித் திரிந்த இடத்திலிருந்தே இதுபோன்ற எச்சரிக்கை எதிர்பொலிகள் வருகிறது எனில் தேசம் கடந்து, புலம்பெயர்ந்து வாழும் மனிதர்களை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்கிறேன்.

“அடக் கடவுளே... அவர்களது நிலைமை ரொம்பவும் கஷ்டம் தான்.”

யார் கண்டது? சிறைக்குச் சென்று திரும்பிய அனுபவத்தையும் இதேபோல ஒருநாளில்லை ஒருநாள் உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதோ என்னமோ? எல்லாம் ஒரு அனுபவம் தானே...!

(“நிறைய பேரு சொல்லி இருக்காங்க. டேய்... நீ லாயர்க்கு படி... நல்லா வருவ...” என்று. நலவிரும்பிகள் சொல்லியதை கேட்டிருக்க வேண்டும் என்று இப்பொழுது தோன்றுகிறது.)

Thursday, October 17, 2013

தாய்மொழி வழிக் கல்வி -மாநில சிறப்பு மாநாடு - தமுஎகச


படத்தின் நூறாவது நாள் விழா – “இயக்குனர் (அவருடைய பெயரெழுதி) “*********” வருக வருக... நடிகை (அவருடைய பெயரெழுதி) “*******” வருக வருக...” இத்தியாதி அடிபொடிகள் (அவர்களுடைய பெயரெழுதி) வருக வருக...” என எங்கு திரும்பினாலும் ஒரே பேனர் மயம். அவுட் டேட்டெட் காமெடி நடிகர்களின் புகைப்படமும் பேனர்களில் இருந்தது. என்றாலும் “ஏதோ உண்மையிலேயே படவிழாதான் நடக்கிறது போல” என்று குழம்பியவாறு நின்றுகொண்டிருந்தேன். பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் “தமுஎகச” ஏற்பாடு செய்திருந்த “தமிழ்வழிக் கல்வி மாநில அளவிலான சிறப்பு மாநாட்டிற்காக” அரைமணி நேரம் முன்னதாகவே சென்றிருந்ததால் வந்தவினை இது. ஏற்கனவே குழப்பத்தில் இருந்த என்னை, பக்கவாட்டில் நடந்து சென்ற ஒருவர் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். (மாநாடு துவங்குவதற்கு முன்பு ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் எடுத்து இருக்கிறார்கள்.)

என்னிடம் பேச்சுக் கொடுத்தவர் “வணக்கம்... நானொரு புரட்சிக்கவிஞர். பேங்க்ல வேலை செய்றேன். ஆனா, எழுத்துதான் எனக்கு ஆத்மா – உயிர், எல்லாம். நான் மிமிக்ரியும் செய்வேன். பல குரலில் பாடுவேன். நித்யஸ்ரீ மகாதேவன், ஜேசுதாஸ், டிஎம்எஸ், சுசீலா எல்லார் வாய்ஸ்லையும் பாடுவேன்.” என அடுக்கிக்கொண்டே போனார். நானோ அவரைப் பார்த்து மிரண்டவாறு நின்றுகொண்டிருந்தேன்.

என்னுடைய மிரட்சியைப் பார்த்து “நான் பொய் சொல்றேன்னு தானே நெனைகிக்கிறீங்க? இப்பப் பாருங்க...” என விரல்களை எடுத்து வாயின் முன் அரண் போல வைத்துக் கொண்டார். “பூனை புள்ள பெத்த மாதிரி ஒரு சவுண்ட். அந்த ஒலியை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு ஆலாபனையை எடுத்துவிட்டார். “இது நித்யஸ்றீ வாய்ஸ்...” என ஹிண்ட்ஸ் கொடுத்துவிட்டு - ஏதோ கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்த பாடலை இழுத்து இழுத்து, கமகத்துடன் பெண்குரலில் பாடினார். எனக்கு மூச்சு முட்டியது. “இப்பப் பாருங்க ஜேசுதாஸ் வாய்ஸ்ல படறேன்...” என மீண்டும் ஒரு கர்நாடக ராகத்தில் அமைந்த பாடலை இழுத்து இழுத்து, கமகத்துடன் ஆண் குரலில் பாடினார். உண்மையிலேயே திறமையான மனிதர் தான் என்று நினைத்துக்கொண்டு - பேந்தப் பேந்த அவரைப் பார்த்து முழித்தேன்.

“இதையெல்லாம் ஒரு தற்பெருமைக்காக செஞ்சி காமிக்கிறேன்னு நெனச்சிக்காதிங்க. ஒரு அறிமுகத்துக்காகத் தான்...” என்றார்.

“இம்மாம் பெரிய விஷயத்தை, அற்பத்திலும் அற்பமான என்னிடம் எதற்குச் செய்து காண்பிக்கிறார்” என்ற குயுக்தியுடனும், அதிர்ச்சியுடனும், குழப்பத்துடனும் அந்த நரை தட்டிய வயோதிக மனிதரைப் பார்த்தவாறு பேந்தப் பேந்த விழித்தேன்.

“ஷார்ட் ஃபிலிமுக்கான நிறைய கருக்கள் உள்ளுக்குள்ள இருக்குது. யாருகிட்ட அதையெல்லாம் கொடுக்கறதுன்னு தான் தெரியல...” என்று சம்பாஷனையின் மணிமகுடமாக ஒரு பிட்டைத் தூக்கிப் போட்டார்.

“எம்மோவ்... இன்னைய தேதிக்கு சித்திரகுப்தன் நம்ம ஓலையில என்னமோ சிறப்பா எழுதி இருக்கறாண்டோவ்...” என நினைத்துக்கொண்டு சுதாரிப்பதற்குள் “ஆமா.... இங்கதான தமுஎகச-வின் தமிழ்வழிக் கல்வி மாநில அளவிலான சிறப்பு மாநாடு நடக்கிறதா சொல்லி இருந்தாங்க? இது என்ன சினிமா பங்ஷன் பேனருங்களா வச்சி இருக்காங்க?” என்றார்.

“அடக் கூறுகெட்டக் கவியே... அதத் தானைய்யா நானும் மண்டைய போட்டு கொடஞ்சிக்குனு இருக்குறேன். ஊடால நீ வேற என்னைய திகிலடைய வக்கிறயே...!” என்றவாறு மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அவரையும் அழைத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்றேன். நண்பர் “இரா. தெ. முத்து” எதிரில் வந்தார். அவரைக் கண்டதும் தான் எனக்கு உயிரே வந்தது. நெருங்கிச் சென்று அவருக்குக் குரல் கொடுத்தேன். பக்கத்தில் இருந்த “புரட்சிக் கவிஞர்” இரா. தெ. முத்துவைப் நிறுத்திக் கொண்டு, சுயபுரானத்தை மீண்டும் முதலிலிருந்து துவங்கினர். இரா. தெ புருவத்தை வில்லென வளைத்து - அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு நின்றார்.

“இதையெல்லாம் தற்பெருமைக்காக சொல்லிட்டு இருக்குறேன்னு நெனச்சிக்காதிங்க. ஒரு அறிமுகத்துக்காகத் தான்...” என்று இரா. தெ-விடமும் கூறினார்.

“எனக்கு ப்ளாடர் வெடிக்கிறா மாதிரி இருக்குது. பிஸ் அடிச்சிட்டு வந்துட்றேனே” என்பதை உணர்த்தும் படியாக ஆள்காட்டி விரலை சைக்கிள் கேப்பில் நைசாகக் காண்பித்துவிட்டு அவசர அவசரமாக நழுவினேன். அந்தக் கவிக்கு நடுவிரலைக் காண்பித்து விட்டுச் சென்றிருந்தாலும் சிறப்பாகத் தான் இருந்திருக்கும்.

புரட்சிக்கவி நின்றுகொண்டிருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அரங்கினுள் நுழைந்தால் தோழர் ச. தமிழ்ச்செல்வன் மேடையில் நின்றுகொண்டு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அதே மேடையின் ஒரோரத்தில் இரா. தெ. முத்துவும் நின்றுகொண்டிருந்தார். “துள்ளத் துடிக்கக் கழுத்தறுக்குறவங்களுக்கு டிமிக்கி குடுக்கறதும் ஒரு கலை தான்” என்று நினைத்துக் கொண்டேன். நீண்ட நாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனைப் பார்த்ததும், அவருடன் சில நிமிடங்கள் பேசியதும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“எதாச்சும் எழுதுறீங்களா?” என்று தமிழ் கேட்டார்.

“இல்லிங்க தமிழ்... இப்பத் தானே சுத்தவே ஆரம்பிச்சி இருக்கோம்... அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்குது...” என்றேன்.

“பிரச்சனை அது இல்ல. சிறந்த படைப்புகள படிச்சிட்டதால... இதுதான் சிறந்ததுன்னு நெனசிக்கிறோம். அதனால, சிறந்ததத் தான் எழுதனும்னு ஒரு எண்ணத்த வேற வச்சிக்கறம். எழுதறது ஒரு டைம்ல நடந்துடனும். இப்பல்லாம் நான் எழுதிட்டு – அது புடிக்காம கிழிச்சி போட்டுக்குனு இருக்கேன்...” என்றார்.

“தோழர் சொல்றது ரொம்ப ரொம்ப ஞாயமா இருக்குதே...!” என்ற எண்ணங்களுடன் குளிரூட்டப்பட்ட அரங்கின் ஓரத்தில் சென்று அமர்ந்துகொண்டேன். விழா துவங்கி சிறப்பாகத் தான் சென்றுகொண்டிருந்தது. நீதிநாயகம் சந்துரு பேசும்வரை அரங்கில் இருக்கவேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவருக்கு முன்பு கல்வியாளர் வாஸந்திதேவி பேசினார். இந்தியக் கல்விமுறையின் நடைமுறைச் சிக்கல்கள், அதன் பின்னணி, அரசு பள்ளிகளின் தற்கால சூழல், தாய்மொழிக் கல்வியின் அத்யாவசியம், ஆங்கில மொழியை இரண்டாம் மொழிப் பாடமாகச் சிறப்பாகக் கற்றுக் கொடுக்க வேண்டியதின் அவசியம் என யதார்த்தத்துடன் சில ஆதங்கக் கேள்விகளை எழுப்பிப் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த யாரோ ஒரு அள்ளக்கைக்கு அவருடைய பேச்சு பிடிக்கவில்லை போல. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை - பேச்சை நிறுத்தும்படி சூசகமாகக் கைகளைத் தட்டி, ஓசை எழுப்பித் தெரிவித்துக் கொண்டிருந்தார். அவருடைய இந்தச் செய்கை எனக்கு அருவருப்பாக இருந்தது. வாஸந்திக்கு முன்னால் பேசியவர்கள் “குழந்தைகளுக்குத் தேங்காய் என்ற வார்த்தையைச் சொன்னால் தெரியவில்லை. கோக்கனட் என்றால் தான் தெரிகிறது. தூய தமிழிலுள்ள பொருள், அர்த்தம் போன்ற வார்த்தைகள் தெரியவில்லை. மீனிங் என்றால் தான் தெரிகிறது” என மேடைப் பேச்சுக்குத் தேவையான மாடுலேஷனுடன் அரங்கின் ஒட்டுமொத்தக் கைதட்டல்களை அள்ளினார்கள். அவர்களுக்கு மத்தியில் சா. தமிழ்ச்செல்வன், வாஸந்திதேவி போன்றோரது யதார்த்த மேடைப் பகிர்தல்கள் முக்கியமான ஒன்று. அதிலும் கல்வியாளர் வாஸந்திதேவியின் இந்தியக் கல்வி சார்ந்த யதார்த்த இடியாப்பச் சிக்கல்கல்களைத் தொட்டுப் பேசிய பேச்சு முக்கியம் வாய்ந்தது. அறிவுஜீவிகள் வீற்றிருக்கும் அரங்கில் இதுபோன்ற பேச்சுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது எனில் வேறென்ன சொல்ல. ஓர் அளவிற்கு மேல் என்னால் பொருக்க இயலவில்லை. ஆகவே அரங்கை விட்டு வெளியில் வந்துவிட்டேன். வீட்டிற்குச் செல்ல எப்படியும் இரவு பத்துமணி ஆகிவிடும். ஆகவே குறளகத்தை ஒட்டினாற்போல இருக்கும் ஆவின் பால் கடைக்கு நண்பர்களுடன் சென்றேன்.

ஒரு சிறுவன் தான் எங்களுக்கு காகிதக் கோப்பையில் பாலைக் கொடுத்தான்.

“சின்ன பையனா இருக்கியே... ஸ்கூலுக்கு போகல...” என்றேன். “இல்லை...” என்பது போலத் தலையை ஆட்டினான்.

“நல்லா படிப்பியா?” என்றேன்.

“ஆ(ங்)... ஃபஸ்ட் ரேங்க்குதான்...” என்று இழுத்தான்.

“படிப்பு வந்தா... இவன் ஏன்பா இங்க வேலைக்கு வரான்...” என்றார்கள் ஆவினில் இருந்த ஓர் அக்கா. நான் சிறுவனைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகை வீசினேன். அவன் பார்வை வேறெங்கோ நிலைகுத்தி இருந்தது.

“டேய்... அங்க என்ன பார்வை...!? அவனுக்கு தீஞ்ச ஏடா எடுத்துட்டு போயி போட்டுடாத. கொஞ்சம் வாசன வந்தாக் கூட அவ(ன்) சாப்புட மாட்டான்.” என்று அந்த அக்கா இன்ஸ்ட்டறக்ட் செய்து கொண்டிருந்தார்கள்.

“என்னங்க அக்கா...!? ஆவின் பூத் சார்பா ஏதாச்சும் வளக்கறீங்களா?” என்றேன்.

“வளக்கறது என்னப்பா... இருக்கற பாலேட கொண்டுட்டு போயி வைக்கிறோம்.” என்றார்கள்.

“பரவாயில்லையே...” என்றேன்.

“மூணு நாலு கழிச்சி இன்னிக்கிதான்பா கடைய தொறக்க வந்தோம். தூரத்துல எங்களப் பார்த்துட்டு ஆலொசறத்துக்கு எம்பிக் குதிக்கிது அந்த நாயி. ஆளுங்கள பார்த்தா அவ்வளோ சந்தோசம் அதுங்களுக்கு...” என்றாள் அந்த அக்கா.

“கடையத் தொறக்கும் போது அதுவும் கூட சேர்ந்து கதவத் தொறக்கும்பா” என்றார் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த – அதுவரைப் பேசாதிருந்த ஓர் நடுத்தர வயது அண்ணன்.

“ரொம்ப சுவாரஸ்யமா இருக்குதே...” என்றேன்.

“இது என்னாப்பா... யாரோ ஒரு ஆளு, டெய்லியும் ரெண்டு பாக்கட் பிஸ்கட் பாக்கட் வாங்கிட்டு வந்து – இங்க இருக்கற நாய்களுக்கு போட்டுட்டுப் போறாரு...” என்றார் அந்த அண்ணன்.

“பரவாயில்லையே... பணம் இருந்தாக் கூட மனசு வேணும் இல்ல...” என்றேன்.

“அவரப் பார்த்தா... அப்படி ஒன்னும் சம்பாதிக்கிற மாதிரிக் கூட இலிங்க தம்பி... இருந்தாலும் ஏதோ வாங்கிட்டு வந்துப் போடுறாரு...” என்றாள் அந்த அக்கா.

“வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பிடக் கொடுத்தால், ரொம்ப நன்றியோட நடந்துக்குங்க அக்கா... அதெல்லாம் நமக்கு சந்தோசம் தானே...” என்றவாறு, சைகையால் தலையை ஆட்டி “வரேங்கா” என ஆவினை விட்டுக் கிளம்பினோம்.

ஒரு நாய்க்குக் கூட கருகிய வாசனை இல்லாத தூய பாலேட்டினைப் போட வேண்டும் என்ற அக்கறை சாதாரணப் பெண்மணிக்கு இருக்கிறது, தெருநாய்கள் கூட பசியோடு இருக்கக் கூடாது என்ற அக்கறை கீழ் நடுத்தர வர்க்கத்தில் வாழும் ஒரு மனிதருக்கு இருக்கிறது – ஆனால், நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைப் புகட்ட வேண்டும், அறிவுப் பசியில் வாடக் கூடாது என்ற அக்கறை – அரசு இயந்திரங்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இருக்கிறதா? என்ற சமூகம் சார்ந்த சுயபரிசோதனையை – அவரவரது தளத்தில் நாம் எல்லோருமே செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு – வேலைக்குச் செல்கிறார்கள். அப்படியே தொடர்ந்து படித்தாலும் – இளநிலை படிப்புக்குமேல் பலரும் படிப்பைத் தொடர்வதில்லை. அண்ணா பல்கலையில் கூட மெக்கானிக்கல் & சிவில் என்ஜினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் படிக்க முடியும் என்கிறார்கள். அப்படிப் படிப்பவர்களில் எத்தனை பேர் முதுநிலை செல்கிறார்கள். முதுநிலையிலும் அவர்கள் தமிழ் வழியில் படிக்க வசதி இருக்கிறதா? என்ற கேள்வியைக் குடைந்துகொண்டு போனால் ஆதங்கம் தான் மிஞ்சும்.

அண்ணா பல்கலையில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் “ME, M.Phil, Phd போன்ற என்ஜினியரிங் சார்ந்த மேற்படிப்புகளை தமிழ் வழியில் படிக்கமுடியுமா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“முடியாது... இது தொழின்முறை சார்ந்த படிப்பு...” என்ற பதில் வந்தது.

“BE எஞ்சினியரிங்கும் தொழின்முறை படிப்புதானே? அதனை தமிழ் வழியில் படிக்கும் பொழுது... மேற்படிப்புகளை ஏன் தமிழ் வழியில் தொடர முடியாது? ஒரே காரணம் ஆங்கில வழியில் படிப்பதால் கிடைக்கும் வேலை வாய்ப்பாகத் தான் இருக்கும். அப்படித்தானே...!?” என்றேன்.

“அதெல்லாம் எனக்குத் தெரியல. இதெல்லாம் அரசாங்க உத்தரவுகள். அதன்படித்தானே பல்கலைக் கழகங்கள் செயல்பட முடியும். என்றாலும் தமிழ் வழியில் என்ஜினியரிங் படித்த பலரும் ME – படிக்க இருக்கிறார்கள்” என்பதையும் அந்த நண்பர் தெரிவித்தார்.

மேற்கூறிய சம்பாஷணையை என்ஜினியரிங் மாணவர் மட்டுமல்ல, கலை, அறிவியியல், கணக்குப்பதிவு, அக்கவுண்ட்ஸ் என எந்தத் துறை மாணவருடன் உரையாடினாலும் உங்களுக்குக் கிடைக்கும். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருக்கலாம். கிளாசிக் மொழி என உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்ளலாம். என்றாலும் தற்போது வழக்கில் இருக்கும் மனிப்பிரவாக மொழி – ரீஜினல் லாங்குவேஜ். தமிழ் மட்டுமல்ல, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி போன்ற பல மொழிகளும் ரீஜினல் லாங்குவேஜ் தான். ஹிந்தி போன்று தேசிய மொழி அல்ல. என்றாலும் அவரவர் தாய்மொழியில் பயில்வது கற்பனைத் திறனையும், துறை சார்ந்த தெளிவாக சிந்திக்கும் கண்டுபிடிப்பாளர்களையும், அறிஞர்களையும் நமக்குக் கொடுக்கும்.

தாய்மொழி வழியில் பயிலும் மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் மொழியை பயிற்றுமொழியாகக் கொண்ட மாணவர்கள் - கல்லூரி இளநிலையை வரை பிரச்சனை இல்லாமல் படிப்பைத் தொடரலாம். முதுநிலை என்று வரும் பொழுது ஆங்கில வழியில் தான் படிக்கவேண்டி இருக்கிறது. ஆங்கிலத்தில் தான் தேர்வெழுதவேண்டி இருக்கிறது. இதன் காரணமாகவே பலரும் முதுநிளைக்குச் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் படிப்பில் சோபிக்க முடிவதில்லை. குறிப்பாக வாஸந்திதேவி சொல்வதுபோல அரசுப் பள்ளியில், தாய்மொழி வழியில் யாரெல்லாம் படிக்கிறார்கள் என்று பார்த்தால் தலித்துக்களும், விளிம்புநிலை மனிதர்களின் வாரிசுகளும் தான். ஆகவே இந்த சிக்கல் வர்க்கம சார்ந்த பிரிவினையை ஏற்படுத்துகிறது. அடித்தட்டு மக்கள் ஓரளவிற்கு மேல் கல்வியை மேற்க்கொண்டு தொடர முடியாத சிக்கல் எழுகிறது. கர்நாடகப் பல்கலைகளில் முதுநிலைப் படிப்பை அவர்களது தாய்மொழியில் எழுத முடியும். ஆகவே தான் முதுநிலைக்குச் செல்லும் அவர்களது மாணவ விழுக்காடு அதிகம் இருக்கிறது. (கன்னடக்காரர்களின் தாய்மொழி வழிக் கல்வித்தரம் குறித்த ஆய்வு அவசியம் தேவை. கல்வித் தரம் சரியில்லை எனில் அது சார்ந்த விழிப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது.)

தாய்மொழியில் பாடங்களைக் கறப்பது பலவகையிலும் நன்மை பயக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதே நேரத்தில் உலக வர்த்தகத்தில் வளரும் நாடாகிய இந்தியாவைப் போன்ற நாடுகள் வலிமையுடன் காலூன்ற உலகமொழிப் பரிட்சயம் மிக மிக அவசியம். ஆகவே உலகமொழியை இரண்டாம் பாடமாக சரியாகப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது. மாறாக வேலைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் ஆங்கில வழிக் கல்வி மேலும் மேலும் சிக்கலைத் தான் உண்டாக்கும். இந்தப் புரிதலுக்கான விவாதத்தை முன்னெடுக்கும் விதமாகத் தான் தமுஎகச-வின் இந்த மாநில அளவிலான சிறப்பு மாநாட்டை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து மதுரை, கோவை போன்ற இடங்களிலும் தொடர் மாநாடுகளை இவர்கள் நடத்த இருக்கிறார்கள். அந்தந்த நகரத்தில் வசிக்கும் கல்வி ஆர்வலர்கள் ஆதரவு கொடுத்தால் – இந்த மாநாடு மேலும் சிறப்படையும்.

Sunday, October 6, 2013

தங்கமீன்களும், மாலனின் தப்புக் கணக்கும்


அபிலாஷின் தங்கமீன்கள் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையின் ஆரம்ப விவரணைகள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. அந்த வரிகள் பின்வருமாறு:

/-- தமிழில் பல அற்புதமான படங்கள் வந்துள்ளன. கமல், மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா என நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு காரணம் இவர்கள் எல்லாம் கதைகூறலில் தேர்ந்தவர்கள் என்பது. சொந்தமாக ஒரு வாழ்க்கையை அறிந்து சொல்லும் மரபு நம் இலக்கியத்தில் உள்ளது; ஆனால் சினிமாவில் மிக அரிது. ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை என்பது.--/

படிக்க: http://thiruttusavi.blogspot.in/2013/10/blog-post.html

முதல் பத்தியின் கடைசி வரிகள் கொஞ்சம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

“ராமின் தங்கமீன்களின் ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை என்பது”

தங்கமீங்கள் திரைப்படத்தின் சிறப்பான விஷயங்களை மட்டுமே அபிலாஷ் தேடிப் பிடித்து வியந்தோதுகிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. கல்யாணி கேரக்டரைப் பற்றி மிக நுட்பமாக ஆராய்ந்து பேசும் அபிலாஷ், மேலதிகமாக மலையாள படங்களில் சிலதை எடுத்துக்கொண்டு கல்யாணியின் பாத்திர வார்ப்பு பற்றி ஓர் ஆராய்ச்சியே செய்துவிடுகிறார். அபிலாஷ் மட்டுமல்ல, பல விமர்சகர்களும் கல்யாணியை சிலாகித்து தான் எழுதுகிறார்கள். ஆனால், கல்யாணி கேரக்டருக்கு இணையான முக்கியக் கதாப்பாத்திரமான குழந்தைப் பாத்திரத்தின் பலவீனமான பாத்திர வார்ப்பைப் பற்றிப் பேசாமலேயே எல்லோரும் கடந்து விடுகிறார்கள். இந்தப் படத்தில் “தந்தை – மகள்” ஆகிய பாத்திரங்கள் தண்டவாளம் போல ஒன்றுக்கொன்று அச்சு பிசகாமல் திரைக்கதையின் மீதமர்ந்து பயணிக்க வேண்டிய கதாப்பாத்திரங்கள்.

கல்யாணியின் மகள் துருதுருவென கன்று போலச் சுற்றி வருகிறாள். இந்த அதிவேகச் செயல்பாடு “சிறுமியின் கவனத்தை சிதறச் செய்கிறதோ?” என்று யோசித்துக் கொண்டு வருகையில், “M”, “W” போன்ற ஒரே மாதிரி வடிவில் அமைந்த எழுத்துக்களை – ஆசிரியையின் சொற்படி கரும்பலகையில் எழுத முடியாமல் சிறுமி தவிக்கிறாள். ஓரிடத்தில் “M” என்ற எழுத்துக்குப் பதில் “W” என எழுதுகிறாள். அதிலிருந்து அந்தச் சிறுமியை சக மாணவர்கள் “W” என அழைக்கத் துவங்குகின்றனர். மூன்றாவது படிக்க வேண்டிய சிறுமிக்கு 7 வயது இருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது படிக்கிறாள். இரண்டாவது படிக்கும் குழந்தைக்கு எழுத்து சார்ந்த அடையாளச் சிக்கல் இருப்பது கொஞ்சம் கவனிக்கக வேண்டிய விஷயம். பிறகு கல்யாணி கதாப்பாத்திரத்தில் நடித்த “ராம்” கூட, தங்கமீன்கள் நீந்திக் கொண்டிருக்கும் குளத்தங்கரையில் “M”, “W” எழுத்துரு சார்ந்த பிரத்தியேக வகுப்பையே அந்தச் சிறுமிக்கு எடுக்கிறார். இதைக் கொண்டு ஒப்பு நோக்குகையில் அந்தச் சிறுமி “டிஸ்லக்ஷியா போன்று ஏதேனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தையா?” என்ற ஐயம் எழுகிறது. (“தாரே சமன் பார்” – அமீர்கான் தயாரித்து இயக்கிய டெஸ்லெக்ஷியா பற்றிய பிளாக் பஸ்டர் திரைப்படம் என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.)

“அதிவேகச் செயல்பாட்டல் படிப்பில் கவனக் குறைவுடன் தத்தளிக்கும் குழந்தையா?” அல்லது “(டிஸ்லக்ஷியாவால் பாதிக்கப்பட்ட) சிறப்புக் குழந்தையா?” என்ற சந்தேகத்தை, அவளுடைய கேள்வி கேட்கும் குணமும், கேள்விக்கு ஏடாகூடமாக பதில் சொல்லும் குணமும் வேறு மாதிரியாக யோசிக்க வைக்கிறது.

அபிலாஷ் சொல்கிறார்: /-- நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன.--/

தங்கமீன்கள் பார்த்தபோது பாலுமகேந்திராவின் குறும்படம் ஒன்று தான் ஞாபகத்திற்கு வந்தது. பத்திரிகையாளர் மாலன் நாராயணன் எழுதி தாய் இதழில் வெளியான “தப்புக் கணக்கு” சிறுகதையை சன் டிவியில் ஒளிபரப்பான பாலுவின் கதை நேரத்திற்காக குறும்படமாக எடுத்திருக்கிறார்.

சிறுகதையில் ஒரு சிறுமி (ஜனனி) தாத்தாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். ஏனெனில் அந்த பள்ளிச் சிறுமிக்குத் தாத்தாவிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. சிறுமியைப் பற்றி மாலன் பின்வருமாறு சொல்கிறார்: “ஜனனியின் கேள்விகளுக்கு பதில் சொல்வது தேன் கூட்டில் கல் வீசுவது போல. ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் அத்தோடு ஓயாது. சரம்சரமாய் கேள்விகள் கிளம்பும்”. (கல்யாணியின் மகளும் நிறைய கேள்வி கேட்பவள்.)

தாத்தா மட்டுமே ஜனனியின் கேள்விக்குப் பொறுமையாக பதில் சொல்வது மட்டுமல்லாது, தொடர்ந்து கேள்விகள் கேட்கும் பழக்கத்தைத் தட்டிக் கொடுப்பார். வீட்டிலுள்ள மற்றவர்கள் “கொஞ்சம் சும்மாயிரேன்மா... இப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா...” என்கிறார்கள்.

பரீட்சை பேப்பரில் “7 X 2= 14” என்று எழுதியிருப்பதற்கு - கணக்கின் குறுக்கே தவறு என சிகப்பு மையினால் கோடு போட்டு, மார்ஜின் பக்கத்தில் பூஜ்யம் மதிப்பெண்கள் போட்டிருக்கிறாள் பள்ளி ஆசிரியை.

“7 X 2= 14 தவறான விடையா?” என்பதுதான் ஜனனியின் கேள்வி. அடுத்த நாள் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு தாத்தா பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் முறையிடுகிறார்.

“இதிலே என்ன தப்பு மேடம்?”

“ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அப்படியானால் இரு வாரத்திற்கு ” 2 X7=14” என்கிறாள் ஆசிரியை.

“சரி 7 X 2= 14 என குழந்தை எழுதினால் அது தப்பா?” என்கிறார் தாத்தா.

“தப்பு தான். வகுப்பில் எப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறோமோ அப்படித்தான் எழுதணும். 2 X 7= 14 என்று சொல்லிக் கொடுத்திருக்கிற போது, 7 X 2= 14 என்று எழுதினால் தவறுதான்” என்கிறாள் ஆசிரியை.

“டீச்சர் இது அநியாயம்!” என பிரின்சிபால், கல்வித்துறை அதிகாரி என பிரச்சனை சார்ந்து புகார் கொடுக்கிறார் தாத்தா. கல்வித் துறை மந்திரியிடமும் புகார் செய்வதற்கு முன்பு ஜனனியின் பெற்றோர்களிடம் பேசிவிடலாம் என்று பேசிப் பார்க்கிறார்.

“டீச்சர் சொல்றது தப்பாயிருக்கலாம்பா, ஆனா அவங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே பரீட்சையில எழுதறதுக்கு இவளுக்கு என்ன கேடு?” என்கிறார் ஜனனியின் அப்பா.

“சரி, எழுத்தல்ல, அது தப்பா?” என்கிறார் ஜனனியின் தாத்தா.

“ஏன் அவ எழுத்தல்ல?” என்கிறாள் ஜனனியின் அம்மா.

“அவளையே கூப்பிட்டு கேளு” என்கிறார் தாத்தா.

“ஒரு வாரத்திற்கு ஏழு நாள். இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள்?” என்று பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்வியைக் கேட்கிறார்கள்.

“ஏழு இன்ட்டு ரெண்டு இஸ் ஈக்குவல்டு பதினாலு” என்கிறாள்.

“ஏழு இன்ட்டு ரெண்டு எப்படி? ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அப்போ ரெண்டு இன்ட்டு ஏழு தானே?” என்று கேட்கிறார்கள்.

“இல்லே தாத்தா. ஒரு வாரத்துல ஒரு சண்டே, ஒரு மண்டே, ஒரு டியூஸ்டே இப்படி ஏழு நாள்... ரெண்டு வாரத்துல ரெண்டு சண்டே, ரெண்டு மண்டே, ரெண்டு டியூஸ்டே...” என்று விரல் விட்டு எண்ணுகிறாள் ஜனனி. “ஸோ... ஏழு நாள். ஒவ்வொன்னும் ரெண்டு தடவை. அதான் ஏழு இன்டு ரெண்டு...” என்கிறாள் புத்திசாலித்தனமாக ஜனனி.

“கிரேட்...” என்கிறார் தாத்தா. “இது வித்யாசமான சிந்தனை. மொத்த கிளாசும் டீச்சர் சொல்லிக் கொடுத்த மாதிரி குதிரைக்குப் பட்டைக் கட்டின மாதிரி போறச்சே, மூளைய உபயோகிச்சு நீ கணக்கு போட்டிருக்க பாரு, இது கிரியேட்டிவிட்டி! இது புத்திசாலித்தனம்!” என்று உற்சாகத்தில் பூரிக்கிறார் தாத்தா.

“சந்தோஷப் படாதிங்கப்பா... இது கவலைப் பட வேண்டிய விஷயம்” என்கிறார் ஜனனியின் அப்பா.

“என்னடா சொல்றே?” என்கிறார் தாத்தா.

“இது பெண் குழந்தை. ஞாபகம் வச்சிக்கோ. சொல்லிக் கொடுத்த மாதிரியில்லாம வேறு மாதிரி யோசிக்கிற குழந்தை, பின்னால பெரியவளானா நிறைய கேள்வி கேப்பா. இதுநாள் வரைக்கும் நடைமுறையில் இருக்கிற சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் இதையெல்லாம் கேள்வி கேட்பார்கள். வித்யாசமா சிந்திக்கறதனாலையே காயப்படுவா. ஊரோட, உலகத்தோட, ஒத்து வாழாம இருந்தா அவளுக்கும் அவஸ்தை. மற்றவர்களுக்கும் இம்சை”

“அதனால..” என்கிறார் தாத்தா.

கடைசியில் “டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்களோ அப்படியே கணக்குப் போடு. அதிகப் பிரசங்கித் தனம் எல்லாம் வேண்டாம்” என்று அழுத்தமாகச் சொல்லியவாறு புறப்படுகிறார் அப்பா. கண்களில் ஈரம் சொட்ட அந்தச் சிறுமியை தாத்தா பார்க்கிறார் என்பதாக கதை முடியும்.

குழந்தைகளின் துறுதுறு தன்மையையும், கற்பனைச் சிறகுகளை முறிக்கும் கல்வி முறையையும் கொண்ட இந்தியக் கல்வி பாடத் திட்டங்களை பற்றிய போதாமையையும் நுட்பமாக பதிவு செய்திருப்பார் மாலன். சிக்கலுக்கான தீர்வு எதையும் சொல்லாமல், சிறுமிக்கு உறுதுணையாக நிற்கும் தாத்தாவை ஒரு கையறு நிலையில் சிறுகதையின் முடிவில் நிருத்தியிருப்பார். பாலு மகேந்திராவின் கதை நேரத்திற்காக இந்தச் சிறுகதையை இயக்குனர் பாலு மகேந்திரா குறும்படமாக எடுக்கும் பொழுது இன்னும் மெனக்கெட்டு சிறப்பாகச் செய்கிறார். (பாலு மகேந்திரா கதை நேரத்தில் எடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களின் திரைக்கதை வடிவத்தை புத்தகமாக வம்சி பதிப்பகம் வெளியிட்டிருகிறார்கள். குறும்படத்தின் குறுந்தகடுகளும் புத்தக இணைப்பாகக் கிடைக்கிறது. அதில் தப்புக் கணக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.)

குறும்படமானது “தாத்தா – பேத்தி” என்று விரிகிறது. தங்கமீன்கள் “அப்பா – மகள்” என்று விரிகின்றது. ஆக, “ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை” என அபிலாஷ் சொல்வது கொஞ்சம் அதிகம் தான். குறும்படத்திலேயே இந்த முயற்சி நடந்திருக்கிறது. அதனை ராம் தனது மானசீக குருவாகக் கருதும் பாலுமகேந்திரா இயக்கி இருக்கிறார். அதன் திரைக்கதை மற்றும் குறுந்தகட்டினை ராமின் ஆதர்ஷ நண்பர்களில் ஒருவரான வம்சி பதிப்பகத்தின் உரிமையாளர் பவா செல்லத்துரை வெளியிட்டிருக்கிறார்.

குறும்படத்தில் தீர்வு எதுவும் இருக்காது. தங்கமீங்களில் தீர்வு இருக்கிறது. தனியார் பள்ளியில் மக்கு போல சுற்றித் திரியும் சிறுமி, அரசாங்கப் பள்ளியில் சேர்கப்பட்டவுடன் சோபிக்கத் துவங்குகிறாள். எழுத்துரு அடையாளச் சிக்கலில் தவிக்கும் சிறுமி – கட்டுரை எழுதி முதற்பரிசு வாங்குகிறாள். பள்ளியின் ஆண்டு விழாவில் அந்தக் கட்டுரையை மேடையில் நின்றுகொண்டு வாசிக்கத் துவங்குகிறாள் என்பதுடன் படம் நிறைவு பெறுகிறது. இங்கு தான் யதார்த்தச் சிக்கல்களிலிருந்து “தங்கமீன்கள்” வழுவி நிற்கிறது.

“தங்கமீன்கள்” உணர்வு பூர்வமான கதை என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் திரைப்படமானது சிறுமியை மையமாக வைத்துச் சுழல்கிறது. அப்படியிருக்க சிறுமியின் பாத்திர வார்ப்பை மிக நுட்பமாக ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த விஷயத்தில் ராம் கொஞ்சம் போல சறுக்கி இருக்கிறார். “ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை” என்பதெல்லாம் அதிகபட்ச ஒப்புமையாகத் தான் இருக்கிறது. வேறென்ன சொல்ல...!

மாலனின் தப்புக் கணக்கு சிறுகதையை வாசிக்க: தப்புக் கணக்கு